திங்கள், நவம்பர் 17, 2008

NHM உள்ளீட்டுச் செயலி

http://kaniporul.blogspot.com/2010/08/nhm.html

பட்டினியும் பங்குச் சந்தை குறியீட்டு எண்ணும்

(அக்டோபர் 26, 2007)
நண்பர் ஒருவரை நீண்ட நாட்களுக்குப் பிறகு பார்த்தேன். இன்றைக்கு சென்செக்ஸ் குறியீடு 500 புள்ளிகள் ஏறி விட்டதாமே என்று காரணமில்லாமல் சந்தோஷப்பட்டுக் கொண்டார். ஒரு வேளை கொஞ்ச பணம் பங்குச் சந்தையில் முதலீடு செய்திருக்கலாம்.

இந்திய பங்குச் சந்தை உலக சாதனைகளை முறியடித்துக் கொண்டிருக்கும் போது, அதற்கு சின்ன இருமல் வந்தால் கூட அவசர அவசரமாக நிவாரணத்தில் இறங்கும் நிதி அமைச்சர் இருக்கும் போது இன்னும் பல இடங்களிலும் இந்தியாவின் சாதனை வெளியே தெரிய வருகிறதாம்.

இன்றைக்கு இந்து நாளிதழில் வெளியாகி இருக்கும் பி சாய்நாத்தின் கட்டுரையில் பட்டினிக் கொடுமையை ஒழிப்பதற்கான தரவரிசையில் நமது திருநாடு எத்தியோப்பியாவுக்கு ஒரு இடம் பின்னால் இருக்கிறதாம். 118 நாடுகளை மதிப்பிட்டதில் இந்தியாவின் தரவரிசை 94. எத்தியோப்பியா 93ல்.

'இந்தியாதான் உலகைக் கலக்குகிறது. இனி எல்லாம் சுகமே' என்று எழுதி முடித்து விட்ட இளைய மேல் நோக்கி பறக்கும் சமூகம் இருக்கும் இந்தியாவில்தான் இந்த நிலைமையும்.

இப்படி ஒரு தரவரிசை வந்து விட்டதே என்று எந்த தொலைக்காட்சி அரங்கத்திலும் விவாதங்கள் தூள் பறக்கவில்லையாம். நிதி அமைச்சர் மற்ற வேலைகளை விட்டு விட்டு அவசர நடவடிக்கைகளை அறிவிக்கவில்லை. பத்திரிகைகளின் உள்பக்கங்களில் வேறு செய்திகள் கிடைக்காமல் இருந்தால், ஒரு சிறு இடத்தில் இதற்கு இடம் கொடுத்திருப்பார்கள். முதல் பக்கத்தில் 19000க்குப் பறக்கும் சென்சஸுக்குத்தான் இடம்.

ஞாயிறு, நவம்பர் 16, 2008

ஆதம் சுமித்தின் வரலாற்றுப் பிழை

கடந்த முன்னூறு ஆண்டுகளாக கோலோச்சி வரும் முதலாளித்துவ சந்தைப் பொருளாதார சமூக அமைப்புக்கு அடித்தளம் அமைத்தவர் ஆதம் சுமித். தனி மனிதர்கள் தத்தமது சுயநலத்தை மட்டும் கருத்தில் கொண்டு செயலாற்றும் போது சமூகத்துக்குத் தேவையான பணிகள் நடந்து விடுகின்றன. அப்படி நடப்பதுதான் குறைந்த செலவில், சரியான வழியில் நடப்பதற்கான ஒரே முறை என்று கோட்பாட்டு முறையில் நிறுவிக் காட்டியவர் ஆதம் சுமித்து.

ஆதம் சுமித்து வாழ்ந்தது 18ம் நூற்றாண்டில். அவர் எழுதிய நூல் - வெல்த் ஆஃப் நேசன்சு.

அந்த முறையில் இருக்கும் ஓட்டையை முழுமையாக அலசி ஆராய்ந்து மாற்று பொருளாதாரச் சமூக அமைப்பை உருவாக்க அறைகூவல் விடுத்தவர் 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த கார்ல் மார்க்சு. இவரது தஃச் கேபிடல் என்ற நூலும், கம்யூனிச பிரகடனமும் 20ம் நூற்றாண்டின் உலக அரசியலின் இழுபறிகளுக்கு அடிப்படையாக அமைந்தன.

ஆதம் சுமித்தின் சுயநலமே சமூக நலம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் கடந்த 300 ஆண்டுகளின் தொழில்நுட்ப , பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றங்களைப் பார்த்து வருகிறோம். ஆனால் இந்த முன்னேற்றங்கள் கலப்படமற்ற நன்மைகள் மட்டுமா என்று கேட்டால், இல்லை.

தொழில் நுட்ப வளர்ச்சிகள் மனிதரை மனிதர் கொல்வதற்கும் அழிவு வேலைகளுக்கும் பயன்படுவது பெரிதும் அதிகரித்தது. பொருளாதார வளர்ச்சி பெரும்பாலான மக்களை துன்பத்திலும் வறுமையிலும் ஆழ்த்துவதிலேயே முடிந்தது. ஆதிக்கம் செலுத்த முடிந்த நாடு அல்லது சமூகங்கள் நலிந்த பிரிவினரை சுரண்டி தம்மை வளப்படுத்திக் கொள்வது நடந்து கொண்டிருக்கிறது.

ஆதம் சுமித்தின் கோட்பாடு மனிதனின் இயற்கை இயல்பை தூண்டி விடுவதை அடிப்படையாக கொண்டிருக்கிறது. விலங்குகளாக காட்டில் வாழும் போது இயற்கை போக்குகள் இப்படி இருந்திருக்கும்:

1. உணவுக்காக அல்லது போட்டியின் காரணமாக சக மனிதனையும் பிற விலங்குகளையும் கொல்வது இயற்கையாக இருந்திருக்கும்.
2. உடலின் தூண்டுதலின் பேரில் நினைத்த இடத்தில், நினைத்த நேரத்தில் சாப்பிடுவது, கழிவது, உறவு கொள்வது இயல்பாக இருந்திருக்கும்
3. தன்னைத் தாக்க வருபவர்களிடமிருந்து ஓடித் தப்பிப்பது இயல்பாக இருந்திருக்கும். கொஞ்சம் நம்பிக்கை இருந்தால் திரும்பத் தாக்குவதும் நடக்கும்.

ஒரு சிலர் இந்த இயல்புப் போக்குகளைக் கைவிட்டு, சக மனிதருடன் ஒத்து வாழும் முறையை வகுத்து கூடி வாழ ஆரம்பித்திருப்பார்கள். அப்படி இயற்கை போக்கை மட்டுறுத்தி குழுவாக வாழ ஆரம்பித்த சமூகங்கள், இயற்கையாக விலங்கு நெறியில் வாழ்ந்த மனிதர்களை விட சிறப்பாக தளைத்து பெருகியிருப்பார்கள். இப்படி பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளின் பரிணாம வளர்ச்சியில், நலம் பயக்கும் முறைகளை சேர்த்துக் கொண்டே போன சமூகங்கள்தான் இன்றைக்கும் தாக்குப் பிடித்து இருக்கின்றன.

தன்னுடைய நலத்தை மட்டும் பார்த்துக் கொள்வது என்று மனிதருக்குப் போதிக்கும் கோட்பாடு, மனிதரின் மனதுள் புதைந்து கிடக்கும் விலங்கு இயல்பை தூண்டி விடுவதாக அமைந்து விட்டது. அப்படித் தூண்டி விட்டாலும், முழுவதும் பல்லாயிரமாண்டு பரிணாம வளர்ச்சியை உதறி விட்டு விலங்கு வாழ்க்கைக்குத் திரும்பி விடவில்லை.

அலுவலகத்தில், பணியிடத்தில் சுயநலத்தின் அடிப்படையில் பணியாற்றி விட்டு வீட்டுக்கு வரும் ஒருவர் தனது குழந்தையிடம் விலங்காகப் பழகாமல், நன்னடத்தை கோட்பாட்டின்படிதான் பழகுவார். நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு நல்லது செய்யும் அதே நேரத்தில் தொழிற்சாலை இருக்கும் ஊரின் நீர்நிலைகளை நச்சுப்படுத்தத் தயக்கம் வருவதில்லை.

அந்த இரட்டை வாழ்க்கைதான் சந்தைப் பொருளாதார சமூகத்தின் சரிவுக்கான வித்து. ஆதம் சுமித்தைத் தாண்டி மார்க்சையும், மனித நெறிகளையும் சேர்த்து புதியதோர் வாழ்க்கை நெறி காண்பது 21ம் நூற்றாண்டில் நடக்கலாம்.