ஞாயிறு, மார்ச் 16, 2008

மீண்டும் சந்திப்போம்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்து, வலைப்பதிவுகளில் ஓரளவு நிறைவாகவே செய்ய முடிந்திருக்கிறது.

இரண்டு ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான இடுகைகள் எழுதி பல விலைமதிக்க முடியாத நட்புகளை ஏற்படுத்திக் கொள்ள முடிந்தது. வாழ்க்கையும் அடுத்தக் கட்டத்துக்கு நகர்ந்திருக்கிறது.

இப்படி ஒரு தருணம் வரும் போது கொஞ்சம் நிதானித்து, செய்கைகளை ஆராய்ந்து இதற்கு அடுத்த நிலை என்று அலசிப் பார்க்க வேண்டும். வலைப்பதிவுகளுக்கு அடுத்த நிலைக்கு நான் எப்படி நகர முடியும்? ஒரு நேரத்தில் சரியாகப் பட்ட-பலனுள்ளதாக இருந்த பழக்கங்கள் எல்லா நேரத்திலும் தேவை என்று சொல்லி விட முடியாது.

நான் தமிழ் மணம் சமூகத்தில் பங்கேற்பதற்கு ஒரு இடைவெளி ஏற்படுத்திக் கொள்கிறேன்.

இதே பழக்கங்கள், தேடல்கள், கேள்விகள் தொடர்ந்து கொண்டே இருக்கும். அவை இன்னொரு தளத்தில் இன்னொரு வடிவத்தில் வெளிப்படலாம். இதன் மூலம் ஏற்படும் நேரத்தில் வேறு ஒரு தளத்தில் இன்னும் சிறப்பாக செயல்பட வாய்ப்பு கிடைக்கலாம்.

'பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல' என்ற விதிப்படி பழையவர்கள் திட்டமிட்டு புதியவர்களுக்கு வழி விட்டு நிற்பது உதவலாம். என்னுடைய இருப்பு சிலருக்கு மனத்தடையாக இருக்கலாம். அப்படி ஒருவர் இருந்தாலும் எனது விலகல் அவருக்கு இடம் ஏற்படுத்திக் கொடுக்கும்.

பொருள் சார்ந்த ஆக்க பூர்வமான பதிவுகள் அதிகமாக வேண்டும் என்று ஆர்வமுடைய நண்பர்கள், தாம் எழுத திட்டமிட்டிருப்பதை தள்ளிப் போடாமல், உடனேயே ஆரம்பித்து விடுமாறு என்று மட்டும் கேட்டுக் கொள்கிறேன். நான் எழுதியதால் தனிப்பட்ட முறையில் சிறிதளவாவது பலனடைந்ததாக உணரும் ஒவ்வொருவரும் தம் பங்குக்கு ஒரு சில இடுகைகளாவது எழுதி வெளியிடலாம்.

அடுத்த ஒரு ஆண்டுக்கு நான் வலைப்பதிவுகள் சமூகம் பக்கம் எட்டிப் பார்க்கவே போவதில்லை. ஒரு ஆண்டுக்குப் பிறகு ஈர்ப்பு பலமாக இருந்தால் திரும்பி பார்க்கலாம். அது வரை எல்லோருக்கும் வணக்கம். மீண்டும் சந்திப்போம்.

இன்னொரு தளத்தில், இன்னொரு உருவில் நாம் எல்லோரும் சந்தித்துக் கொண்டேதான் இருக்கப் போகிறோம். அப்படியொரு தளத்தில் மீண்டும் சந்திப்போம்.

புதன், மார்ச் 12, 2008

நல்லவர் வாழும் புதிய சமுதாயம்

கல்லைக் கனியாக மாற்றும் தொழிலாளி கவனம் ஒரு நாள் திரும்பும் அதில்
நல்லவர் வாழும் புதிய சமுதாயம் நிச்சயம் ஒரு நாள் அரும்பும்

- பழைய தமிழ்த் திரைப்படப் பாடல் வரிகள்

செவ்வாய், மார்ச் 11, 2008

கூடி வாழணும் பாப்பா

சின்ன வயதில் அம்புலிமாமாவில் படித்த ஒரு கதை:

ஒரு கிராமத்தில் மக்கள் எல்லோரும் ஒற்றமையாகவே இருப்பதில்லை. ஏதாவது முகாந்திரத்தில் ஒருவருக்கொருவர் சச்சரவு செய்து கொண்டு சரியாகப் பேசிப் பழகாமல் இருப்பார்கள்.

அந்தக் கிராமத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் வெளியூரில் படித்து முடித்துத் திரும்பியதும், அந்தக் கிராமத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறான். அந்த நேரத்தில் கிராமத்துக்கு வருகை தரும் அரசாங்கத்தின் முக்கிய அதிகாரியை கௌரவிக்க ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்கிறான். ஊரின் எல்லா குடும்பத்தினரையும் விருந்துக்கு வரவேற்கிறான்.

விருந்து ஆரம்பிக்கிறது. பந்தியில் இலை போட்டு எதிரெதிராக வரிசைகள். எல்லோரும் உட்கார்ந்து விட்டார்கள். சண்டைக்காரர்கள் ஒருவருடன் ஒருவர் பேசிக் கொள்ளாதவர்கள் எல்லாம் எதிரெதிராக உட்கார்ந்து விட்டார்கள்.

"தலைநகரிலிருந்து வந்திருக்கும் உயரதிகாரிக்கு நம்ம ஊர் மக்களின் புத்திசாலித்தனத்தைக் காட்ட நான் ஒரு பந்தயம் வைத்திருக்கிறேன். அதில் வெற்றி பெற்றுக் காட்டி நம்ம ஊர் மானத்தைக் காப்பாற்றும்படிக் கேட்டுக் கொள்கிறேன்". "நன்கு வயிறார சாப்பிடுங்கள். ஆனால், யாருடைய கையும் மூட்டு மடங்காமல் சாப்பிட வேண்டும்".

ஒரே குழப்பம், சாப்பாட்டு அறை முழுவதும் கசமுசா என்று விவாதங்கள்.

கொஞ்ச நேரம் போனது. இன்னும் கொஞ்ச நேரம்.

"மானப்பிரச்சனை, கொஞ்சம் நல்லா யோசியுங்க"

எதிரெதிராக இருந்த இரண்டு பேருக்கு ஒரு வழி தோன்றியது. கை மூட்டு மடங்காமல் சாப்பிட எதிரில் உள்ளவருக்கு ஊட்டி விட ஆரம்பித்தால் போதுமே!

----இதற்கு பதவுரை, பொழிப்புரை, தெளிவுரை எல்லாம் உண்டு----

சனி, மார்ச் 08, 2008

பொய் சொல்லக் கூடாது பாப்பா!!!

உச்சி மீது வானிடிந்து விழுகின்ற போதிலும் பொய் சொல்ல வேண்டியதில்லை. வானம் விழும் போது காயமில்லாமல் தப்பிப்பதற்கான கவசம் வாய்மைதான்.

உண்மை சொல்வதால் மிக மோசமான விளைவாக என்ன நடந்து விடும் என்று தயார்ப்படுத்திக் கொண்டால் போதும். உண்மையே சொல்வதால் கிடைக்கும் மனத்தெளிவும் திண்மையும் நம்மை நோக்கி வரும் பாறைகளையும் உடைத்துப் போடும் வலிமையைத் தந்து விடும்.

பொய் சொல்வதற்கு அதிகமான மன ஆற்றலை செலவழிக்க வேண்டியிருக்கும். உண்மை சொல்லும் மனம் எளிதாக, மென்மையாக மேலே மேலே உயர்வதற்கான எண்ணங்களை சிந்திக்க இடம் பெற்றிருக்கும்.

புரை தீர்ந்த நன்மை பயக்கும் எனில் பொய்யும் உண்மையாகும் என்கிறார்களே! யாருக்கு நன்மை பயக்கும்? எப்படி புரை தீர்ந்திருக்க வேண்டும்? ஒரு பாவமும் அறியாதது என்று உறுதியாக நம்பும் இன்னொரு உயிர் தண்டிக்கப்படுவதைத் தவிர்க்க மட்டும் பொய் உண்மையாகும்.

சொந்த நலத்துக்காக, செய்த தவறை மறைக்க விரும்பி சொல்லும் பொய்கள் எல்லாம் நம்மை அரித்து அரித்து கொன்று விடும் கரையான்களைப் போல மனதை கூடாக்கி விடும்.

பொய் சொல்லக் கூடாது பாப்பா.

என்ன நடந்து விடும் என்று பார்த்து விடலாம்.

பொய் சொல்லக் கூடாது பாப்பா.

அந்த வாய்மைதான் நமக்குத் துணை பாப்பா.

வியாழன், மார்ச் 06, 2008

அதிகம் தேவையில்லை ஜென்டில்மேன்....

மாற்றங்கள் என்பது புரட்டிப் போடும்படியான விளைவுகளை உருவாக்க பெரிய திருப்பங்கள் தேவையில்லை. ஒவ்வொரு கட்டத்திலும், ஒவ்வொரு நாளிலும் ஓரிரு டிகிரிகள் சரி செய்து கொண்டிருந்தால் போதும்.

சரி செய்தலே இல்லாமல் நேர்கோட்டில் போய்க் கொண்டிருந்தால் போய்ச் சேரும் இலக்கும், இது போன்று நுண் மாற்றங்கள் செய்து கொண்டே இருந்தால் அடையும் இலக்கும் பெரிதளவு மாறுபட்டிருக்கும்.

குறிப்பிட்ட இலக்கை அடைய வேண்டுமானால், இந்த சரிபார்த்தல் மிக முக்கியமானது. வாழ்க்கையும் நம்மைச் சூழ்ந்த உலகமும் கடலில் போகும் கப்பல் போன்றவை. கப்பல் ஆடிக் கொண்டே இருக்கும். போன நிமிடத்தில் இருந்த நிலைக்கும் இப்போதைய நிலைக்கும் மாறுதல்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். நான் ஒரு இலக்கைக் குறிவைத்துப் பயணம் செய்ய வேண்டுமானால், கப்பலின் நிலையை அவதானித்து அதன் திசையில் நுண்ணிய மாறுதல்களை செய்து கொண்டே இருக்க வேண்டும்.

ஆரம்பிக்கும் போதே இதுதான் என் முடிவுப் புள்ளி என்று நேர்கோட்டில் இயக்கத்தை அமைத்து விட்டு தூங்கி விட்டால், நேர்கோட்டில் நகரும் கப்பல் நாம் நினைத்த இடத்துக்குப் போகாமல் வேறு எங்கோ போய்ச் சேர்ந்திருக்கும். இடையில் நடுவில் இருந்த பாறை அல்லது குறுக்காக வந்த இன்னொரு கப்பலில் மோதி உடையாமல் தப்பிப் பிழைத்து விட்டால்.

மாற்றம் என்றாலே எல்லோருக்குமே ஒரு பயம் வருகிறது. இன்றைக்கு நாம் செய்வது நமக்குப் பழக்கமானது. இதை விட்டு விட்டு புதியதுக்கு மாறினால் கற்றுக் கொள்ள வேண்டும். அதற்கேற்ப தகவமைத்துக் கொள்ள வேண்டும். அது எல்லாம் கூடுதல் சுமை ஆகி விடும்.

மாற்றம் என்றால் 45 டிகிரியோ, 180 டிகிரியோ திரும்ப வேண்டாம். ஓரிரு டிகிரிகள் திரும்புவது பெருமளவு மாற்றத்தைத் தந்து விடும். ஓரிரு டிகிரிகள் திரும்பினால் நாம் செய்யும் வேலைகளில் பெரிதளவு கற்றுக் கொள்ள எதுவும் இருக்காது. சின்ன சீர்படுத்தல் மட்டுமே இருக்கும்.

ஆனால் விளைவுகளில் பெரிய மாறுதல் இருக்கும்.

செவ்வாய், மார்ச் 04, 2008

பரிதாபம்!!!

"எங்கள் இளைஞர்கள் தாங்கள் ஏற்றுக் கொண்ட அரசியல் தத்துவத்திற்காக உயிரை விடுகிறார்கள். தமிழ் நாட்டு இளைஞன் என்னவென்றால் உடல் மண்ணுக்கு உயிர் ரஜினிக்கு என்கிறான்.. விஜயகாந்துக்கு என்கிறார். என்ன அயோக்கியத்தனம் இது."

"எங்களுக்காகத் தமிழ்நாட்டில் அனுதாபப்படாதீர்கள். அதை எங்கள் இளைஞர்கள் பார்த்துக் கொள்வார்கள். இப்படி ஒரு இளைஞர் சமுதாயத்தை வளர்த்து வைத்திருப்பதற்காக நாங்கள்தான் தமிழ்நாட்டைப் பார்த்து அனுதாபப்பட வேண்டியிருக்கிறது."

ஈழத்து தமிழ் எழுத்தாளர் டொமினிக் ஜீவாவின் புதிய பார்வை இதழ் பேட்டியில்.

திங்கள், மார்ச் 03, 2008

!!!!!!

துன்பங்களையும் கடின உழைப்பையும் தாங்கிக் கொண்டு, ருக்மணி தனது வழியில் வந்து விடாமல் ஜானகியால் பார்த்துக் கொள்ள முடிந்தது.

அவள் ஒரு விடுதியுடன் இணைந்த பள்ளியில் படித்து முடித்து இன்றைக்குப் பட்டதாரியாக ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிகிறாள்.

ருக்மணிக்கு அவளது அம்மா ஒரு பாலியல் தொழிலாளி என்பது தெரியுமா?

"ஆமா, அவள் பத்தாம் வகுப்பு முடிச்சதும் நானே சொல்லிட்டேன். வேறு யாராவது கேட்டுத் தெரிந்து கொள்வதை விட நானே சொல்லி விடுவது நல்லதில்லையா. பல நாட்கள் அழுது கொண்டே இருந்தாள், என் கூட பேசவில்லை. கடைசியில் என்னை, என் நிலைமையை ஏற்றுக் கொண்டு விட்டாள்"

தாயும் மகளும் ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொண்டு விட்டார்கள். ஆனால் சமூகம் ஏற்றுக் கொள்ளவில்லை. "என்னுடைய பணியால் ருக்மணிக்கு கல்யாணம் பண்ணி வைப்பது கஷ்டமாக இருக்கப் போகிறது"

பேசிக் கொண்டிருக்கும் போது முதல் முறையாக ஜானகியின் முகத்தில் கடுமை கரைந்து குழந்தை பயம் தெரிகிறது. உடனேயே மீண்டும் அந்தக் கடுமை முகத்தைப் போர்த்திக் கொள்கிறது.


----இந்தியன் எக்ஸ்பிரஸ் ஞாயிறு மலரில் வெளி வந்த கட்டுரையிலிருந்து.