ஞாயிறு, அக்டோபர் 29, 2006

தாண்டவராயனுக்குத் தண்டம்

"நீர் பொருளாதாரம் பற்றி எழுத ஆரம்பித்து அவனவன் துண்டைக் காணோம், துணியக் காணோம்னு ஓடுறான். எழுதுவதை நிறுத்து!"

சூடான ஒரு விவாதத்துக்கு மத்தியில் பெயரிலியாக வந்து, அப்புறம் ஆப்கானிஸ்தானில் வசிக்கும் தாண்டவராயன் என்று முகவரி கொடுத்த நண்பர் சொன்னது அது.

பொதுவாக அடுத்தவர்களைப் பற்றியக் குறைகளை நாம் வெளிப்படையாகச் சொல்வது இல்லை, 'எதற்கு வீணாக ஒருவரை நோகடிக்க வேண்டும்' என்று சமாதானம். இது போல் விவாதங்களின் போது வரும் கருத்துக்கள்தான் நமக்குக் கிடைக்கும் விமரிசனம்.

பொருளாதாரம் பற்றி எழுத ஆரம்பித்தது 'ஒவ்வொருவரின் வாழ்க்கையைத் தொட்டுப் போகும் பிரச்சனைகளைப் புரிந்து கொண்டு செயல்பட உதவ வேண்டும், எல்லோரும் படிக்க வேண்டும்' என்ற நோக்கில்தான்.

'நான் எழுதுகிற போக்கில் எழுதுகிறேன், படித்தாலும் சரி, இல்லா விட்டாலும் சரி' என்று எழுதும் இன்னொரு பதிவைப் போன்றது இல்லை இது.

இந்த நோக்கத்தில் முற்றிலும் வெற்றியடையவில்லை என்றுதான் எனக்கும் தோன்றியது, அதைச் சுட்டிக் காட்டிய தாண்டவராயனுக்கும் நன்றி.

தனி மனிதர்கள், குடும்பங்கள், நிறுவனங்கள் இவற்றின் செயல்பாடுகளைப் பற்றிப் பேசும் microeconomics என்ற பிரிவு முடிந்து, அரசுகளும் நிதிநிலை அறிக்கைகளும், பணமும் வங்கிச் சேவைகளும், நாட்டின் வளர்ச்சியும் செல்வங்களும் போன்றவற்றை அலசும் macroeconomics பற்றி ஆரம்பிக்க வேண்டும்.

இதை எழுதி வைத்து இடைவெளி விட்டு வெளியிடலாம் என்று எண்ணம். அடுத்த ஒரு மாதத்தில் முப்பது பகுதிகளாக macroeconomics பற்றி எழுதி வைத்து விட்டு, டிசம்பரில் மீள்பார்வை பார்த்து சீர்படுத்தி வெளியிட்டால் இன்னும் சிறப்பாக அமையும், தாண்டவராயன் போன்றவர்களும் பயனடைய உதவியாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.

கூடவே நவம்பரில் பதிவுகளுக்கு விடுமுறை கொடுத்து எழுதி முடிக்கத் திட்டமிட்டிருப்பவை:

1. என்னைப் பாதித்த புத்தகங்களைப் பற்றிய தொகுப்பு ஒன்றையும் ஆரம்பித்ததை முடித்து விட வேண்டும். இது வரை போட்ட பட்டியலில் இருபத்தைந்துக்கும் அதிகமான புத்தகங்கள் வந்து விட்டன.

2. வலைப்பதிவுகளுடன் என்னுடைய அனுபவங்களைப் பற்றிய ஒரு தொகுப்பை எழுதத் தேவை இருக்கிறது.

3. நேரம் கிடைக்கும் போது எழுத்து பதிவில் கலவையாக எழுதிப் பதிந்துள்ள நாட்குறிப்புகளைப் பிரித்து வகை செய்து வோர்ட்பிரஸ்ஸில் ஆரம்பித்துள்ள புதிய வலைப்பூவில் தொகுக்கும் வேலையை செய்ய வேண்டும்.

4. இவற்றைத் தவிர இரண்டு சமூகப் பிரச்சனைகளைப் பற்றியும் எழுதவும், நடவடிக்கை எடுக்கவும் திட்டமிட்டுள்ளோம்.

இந்த வேலைகளுக்கு நவம்பரை ஒதுக்கி விட்டு, டிசம்பரில் மீண்டும் சந்திக்கலாம். எழுத்து பதிவில் நாட்குறிப்புகளாக எழுதுபவை உடனுக்குடன் வெளிவரும்.

வியாழன், அக்டோபர் 26, 2006

WTO (economics 36)

வரிகள், வர்த்தகம் பற்றிய பொது உடன்பாடு (GATT) என்ற தலைப்பின் கீழ் பல ஆண்டுகளாக பல சுற்றுகளாக நடந்த பேச்சு வார்த்தைகள் 1995ல் உலக வர்த்தக நிறுவனமாக மாறுவதற்கு டுங்கல் என்பவர் உருவாக்கிய உடன்பாட்டு வரைவு உதவியது. இன்றைக்கு 135க்கும் மேலான உலக நாடுகள் இந்த அமைப்பில் பங்கேற்கின்றன. உலக வர்த்தகத்தில் 90%க்கு மேல் WTO உறுப்பு நாடுகளுக்கிடையே நடைபெறுகின்றன.

இந்த உடன்படிக்கைகளின் அடிப்படை விதிகள்:

1. நாடுகள் ஏற்றுமதி இறக்குமதிக்கான வரிகளைக் குறைக்க, வரி சாராதத் தடைகளை குறைக்க முன் வர வேண்டும். இந்தியா கடந்த பதினைந்து ஆண்டுகளில் இறக்குமதி வரியின் அதிகபட்ச சதவீதத்தை குறைத்துள்ளது. வர்த்தகமே தடை செய்யப்பட்ட எதிர்மறைப் பட்டியல்கள் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளன.

2. ஏதாவது ஒரு நாட்டுக்குக் குறிப்பிட்ட சலுகையை அளித்தால் அதே சலுகை மற்ற உறுப்பு நாடுகளுக்கும் கொடுக்க வேண்டும். ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவுடன் முட்டி மோதி அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் வாழைப்பழங்கள் மீதான வரியைக் குறைத்துக் கொண்டால், அதே வரிதான் இந்திய ஏற்றுமதிகளுக்கும் விதிக்கப்படும். ஒரு உறுப்பினரின் பேரம் பேசும் முயற்சி எல்லோருக்கும் பலன் அளிக்கும்.

மேலே சொன்ன பிராந்திய ஒப்பந்தங்களின் அடிப்படையில் கொடுக்கப்படும் சலுகைகள் இதில் வராது.

3. ஏதாவது கருத்துவேறுபாடுகள், வர்த்தகப் பூசல்கள் ஏற்பட்டால் அவற்றைப் பேச்சு வார்த்தை மூலம், ஏற்றுக் கொள்ளப்பட்ட முறைகளின் மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும்.

மேலும் மேலும் பேச்சு வார்த்தைகளின் மூலம் இன்னும் வர்த்தகத் தடைகளை தளர்த்தி எல்லோருக்கும் பலன் அளிக்கும் வகையில் உலக வர்த்தகம் நடக்க வழிகள் உருவாக்கப்படுகின்றன. போன இரண்டு சுற்றுகளில் முரசொலி மாறன், கமல்நாத் என்ற இந்திய அமைச்சர்களின் தலைமையில் வளரும் நாடுகள் வளர்ந்த நாடுகளின் சுயநலத் திட்டங்களை வெற்றிகரமாகத் தடுத்தி நிறுத்தியதும் பரவலாக விவாதிக்கப்பட்டது.

இந்த அமைப்பில் புதிதாக ஒரு நாடு சேர வேண்டும் என்றால் ஏற்கனவே உறுப்பினராக இருக்கும் ஒவ்வொரு நாடும் அதற்கு ஒப்புதல் தெரிவிக்க வேண்டும். 2005ல் சீனா இதில் சேருவதற்கு முன்பு ஒவ்வொரு உறுப்பு நாட்டுடனும் பேச்சு வார்த்தை நடத்தி உடன்பாடு காண வேண்டியிருந்தது. அமெரிக்காவுடனான பேச்சு வார்த்தை பல ஆண்டுகளாக நீடித்தது. அதன் பிறகு ஒரே ஆண்டில் மீதி உறுப்பினர்கள் தத்தமக்குத் தேவையான விஷயங்களில் சீனாவுடன் உடன்பாடு செய்து கொண்டனர்.

இந்தியா இந்த அமைப்பின் உருவாக்கிய உறுப்பினர். இதை விட்டு வெளியே வந்து விட வேண்டும் என்று உரத்த குரல்கள் அவ்வப்போது கேட்கின்றன.
  • உள்ளே இருப்பதால் கிடைக்கும் பலன்கள் ஏராளம்.
  • ஒரு முறை வெளியே வந்து விட்டால், பிறகு திரும்பச் சேர நினைத்தால் ஒவ்வொரு உறுப்பு நாடும் சம்மதிக்க வேண்டியிருக்கும்.
  • வெளியே இருக்கும் போது நூற்றி முப்பது நாடுகளுடனும் தனித்தனியே வர்த்தக வழிகளை வகுக்க வேண்டியிருக்கும்.
  • உலகில் தனிமைப்படுத்தப்பட்ட நாடாகப் போய் விடுவொம்.

புதன், அக்டோபர் 25, 2006

எல்லைகளை உடைக்கும் வர்த்தகம் (economics 35)

ஒரு இந்தியாவுக்குள்ளேயே பொருளாதார ஒருங்கிணைப்பை சரிவரச் செய்ய முடியவில்லை. விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்? எல்லா பகுதியினரும் பயன்பெறும் வண்ணம் பொருளாதார வளர்ச்சியைக் கையாள்வது குதிரைக் கொம்பாக உள்ளது.
  • சிவகாசியில் பட்டாசுத் தொழில் வளர ராஜஸ்தானத்தில் தொழில் நலிந்து போவதுதான் சந்தைப் பொருளாதாரத்தின்படி சரியான நிகழ்வு.
    ராஜஸ்தானத்தில் வேறு தொழில் தளைத்து அவர்களும் பல பெற்று விடுவார்கள்.
    ஆனால், ராஜஸ்தானத்தில் இருக்கும் பட்டாசுத் தொழிலாளருக்கு பிழைப்பு என்ன ஆகும்?
    இந்தத் தொழிலில் தேர்ந்தவராக வாழ்ந்து விட்டு வேறு துறையில் கூலி வேலைக்குப் போக முடியுமா? இல்லை என்றால் சிவகாசிக்கு மூட்டைக் கட்டிக் கொண்டு போகலாம்,
    அதனால் ஏற்படும் உளைச்சல்களுக்கு யார் பொறுப்பு?
இதுதான் உலகமயமாக்கலின் கேள்விகள். நீண்ட கால நோக்கில் பெரும்பாலான மக்களுக்கு நன்மை கிடைக்கும் என்றாலும், உடனடிக் காலத்தில் ஒவ்வொரு குழுவாக பலர் பாதிக்கப்படுகிறார்கள்.
  • என்ன நடக்கிறது என்று புரிந்து கொள்ளும் முன்னரே பிழைப்பு மறைந்து போய் குடும்பம் கடனில் மூழ்கி விடுகிறது.
  • வேலை கிடைக்கும் இடத்துக்கு தடையின்றி போய்க் குடியேறவும் வழிகள் கிடையாது.
  • பொருட்கள் எல்லை தாண்டி பாய வழிமுறைகள், மூலதனம் நாடு விட்டு நாடு போக தனி விதிகள், மக்கள் குடி பெயர இன்னொரு முறை என்று சமச்சீரின்றி இருப்பது, உலகளாவிய மாற்றங்களை புரிந்து கொள்ளும்படி தகவல் கிடைக்காமல் இருப்பது இரண்டும் சேர்ந்து மாபெரும் துயரங்களை உருவாக்கிச் சென்று விடுகின்றன.
இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு வர்த்தகத்தின் பலன்களை காண முயலும் முயற்சிகள் பல நிலைகளில் நடக்கின்றன.

இரண்டு நாடுகள் தமக்கிடையே செய்து கொள்ளும் bilateral ஒப்பந்தங்கள், இந்திய - ரஷ்ய வர்த்தக ஒப்பந்தம், இந்திய - தென்னாப்பிரிக்க உறவுகள், அமெரிக்க - ஜப்பான் உறவு என்று இயல்பாக நடக்கின்றன.

இதையே கொஞ்சம் விரிவாக்கி பிராந்தியக் கூட்டமைப்புகள் வெவ்வேறு ஆழத்தில் உருவாகியுள்ளன.

தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பு (SAARC)
தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு (ASEAN)
ஐரோப்பிய பொருளாதார ஒன்றியம் (EU)
வட அமெரிக்க வர்த்தக வட்டாரம் (NAFTA)

என்று நாடுகள் ஒன்று சேர்ந்து தமக்குள் சாதகமான வர்த்தக நெறிமுறைகளை ஏற்படுத்திக் கொள்கின்றன.

ஒரே நிலப்பரப்பில் இருக்கும் நாடுகள் பிரிந்திருந்தாலும் இயல்பான பொருளாதார இணைப்பு ஏற்புடையது என்று உருவானவை இந்த அமைப்புகள்.

ஐரோப்பிய ஒன்றியம் போல எல்லைகளைத் தளர்த்தி, ஒரே பணம் ஏற்றுக் கொண்டு பொருட்களும், மக்களும் பணமும் தடையின்றி பாயும் இறுக்கமான உறவுகளிலிருந்து, SAARC போல இந்தியாவும் பாகிஸ்தானும் எல்லோரையும் சண்டைக்குள் வைத்திருக்கும் குழப்படிகள் வரை பல நிலைகளில் இத்தகைய அமைப்புகள்.

எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிடும் வண்ணம் உருவாகி வருவதுதான் உலக வர்த்தக நிறுவனம் எனப்படும் WTO.

பரிசு பெறும் பின்னூட்டங்கள்


  1. அக்டோபர் 4 முதல் அக்டோபர் 10 வரையிலான பொருளாதாரம் தொடர்பான பதிவுகளில் பின்னூட்டங்களுக்கான பரிசைப் பெறுபவர் பத்மா அரவிந்த். இரண்டு வாரம் முன்பே, அக்டோபர் 11 அன்று நடுவர்கள் சிவஞானம்ஜி அவர்களும் துளசி கோபால் அவர்களும் முடிவை அறிவித்து விட்டாலும் இந்த அறிவிப்பை வெளியிடுவதில் ஏற்பட்ட தாமதத்துக்கு மன்னிக்கவும்.

    பத்மா அரவிந்துக்கு அவர் தேர்ந்தெடுக்கும் புத்தகம் பரிசாக அனுப்பப்படும். பின்னூட்டங்களின் தொகுப்பு அட்டவணை இங்கே .

  2. அக்டோபர் 11 முதல் அக்டோபர் 17 வரையிலான பொருளாதாரம் தொடர்பான பதிவுகளில் இடப்பட்ட பின்னூட்டங்களுக்கான பரிசைப் பெறுபவர் வவ்வால்.

    250 ரூபாய் மதிப்பிலான புத்தகம் வாங்கிக் கொள்ள பரிசுக் கூப்பன் அனுப்பி வைக்கப்படும். பின்னூட்டங்களின் தொகுப்பு அட்டவணை இங்கே .

  3. போன வாரத்தில் வெளியான இரண்டு பதிவுகள் மற்றும் இந்த வாரம் வெளியாகப் போகும் நான்கு பதிவுகளில் இடப்படும் பின்னூட்டங்களில் சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்படும் பின்னூட்டத்துக்கு ரூபாய் 250 மதிப்பிலான புத்தகக் கூப்பன்கள் பரிசாக வழங்கப்படும்.

வியாழன், அக்டோபர் 19, 2006

சுதேசியா விதேசியா? (economics 34)

அடிப்படையில் பார்த்தால் தனிமனிதர்களோ, குடும்பங்களோ, கிராமங்களோ, மாநிலங்களோ தமக்கு நன்கு தெரிந்த வேலையை மட்டும் பார்த்து, மற்றவருக்கு விற்பது மூலம் வரும் வருமானத்தைப் பயன்படுத்தி தேவைகளை வாங்கிக் கொள்வது போலத்தான் நாடுகளுக்கிடையான வர்த்தகமும். நடைமுறையில் பல வேறுபாடுகள்:
  1. நாட்டு அரசுகள் வருமானத்துக்காக இறக்குமதி ஏற்றுமதியின் மீது சுங்க வரி விதிப்பதால் எல்லைகளைக் கடந்து பொருட்கள் போகும் போது கட்டுப்பாடுகள் போடப் படுகின்றன.

  2. ஒவ்வொரு நாட்டிலும் புழக்கத்தில் இருக்கும் பணம் வெவ்வேறாக இருப்பதால் வர்த்தகத்தில் பணப் பரிமாற்றம் என்ற கூடுதல் சிக்கலும் வருகிறது.

  3. பொருட்கள் எல்லைகளைத் தாண்டி பாய்ந்தாலும், மக்களும், மூலதனமும் அதே சுதந்திரத்தோடு தமக்கு ஏற்ற நாட்டுக்குப் போவதில் கூடுதல் கட்டுப்பாடுகள் இருப்பதால் பொருளாதார நடவடிக்கை பாதிக்கப்படுகிறது.
இத்துடன் தேசிய நலன், பாதுகாப்புக் காரணிகள் என்று காரணம் சொல்லியும் பன்னாட்டு வர்த்தகம் கட்டுப்படுத்தப்படுகிறது.
  • 'பஞ்சாபில் விளையும் கோதுமையை நம்பி இருந்தால் நம்ம ஊர் பாதுகாப்பு என்னாவது?' என்று தமிழ்நாட்டில் கோதுமை பயிரிட முயற்சி செய்வதில்லை.

  • சிவகாசியில் தீப்பெட்டி, மத்தாப்பு தொழில் வளரும் போது இந்தியாவின் பல பகுதிகளிலும் இருக்கும் அத்தகைய தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டிருக்கும். அதற்கெதிராக யாரும் போர்க்கொடி பிடிக்கவில்லை.
    மத்தாப்பு தொழிலில் வல்லமை பெற்ற தொழிலாளர்கள், ஒரு முடிவு எடுத்து விட்டால் அடுத்த ரயிலைப் பிடித்து சிவகாசி வந்து வேலை தேடிக் கொண்டிருப்பார்கள்.
    அவ்வளவு மாற்றங்களை விரும்பாத தொழிலாளர்கள் அந்த ஊரில் தளைக்கும் தொழிலுக்கு மாறியிருப்பார்கள்.
    தொழில் நடத்தும் முதலாளிகளும் தமது மூலதனத்தைக் கையில் பிடித்துக் கொண்டு சிவகாசியில் தொழில் தொடங்க தடைகள் குறைவு. இப்படியே மொத்த துறையும் மிகச் சிறப்பான வழியில் தன்னை அமைத்துக் கொண்டிருக்கிறது.

  • இந்தியாவின் தோல் துறையின் பாதிக்கும் மேல் உற்பத்தி தமிழ்நாட்டில் நடைபெறுகிறது. நாடெங்கிலுமிருந்து தோல்கள் தமிழ்நாட்டுக்கு வருகின்றன.
    தோல் தொழில்நுட்பம் படித்த வல்லுனர்கள் சென்னைக்கு வந்து வேலை பார்க்கிறார்கள். பொருளாதார அடிப்படையில் வெவ்வேறு ஊர்களில் தொழிற்சாலை தொடங்க முயற்சிகள் நடப்பதைத் தவிர எந்த அரசும் தடைகளை விதித்துப் பொருளையும், மக்களையும் சுதந்திரமாக தமக்கு ஏற்ற இடத்துக்குப் போவதைத் தடுப்பதில்லை.
இப்படிப் பொருளாதாரக் கணக்கு மட்டும் போடும் போது, இத்தகைய மாறுதல்களால் தனி நபர்கள் வாழ்வில் ஏற்படும் மாறுதல்கள் புறக்கணிக்கப்பட்டு விடுகின்றன. தன்னுடைய பிறந்த மண்ணை விட்டு, குடும்பத்தோடு குடி பெயர்வது, அல்லது குடும்பத்தை ஊரில் விட்டு வந்து தனியே பணம் ஈட்ட வருவது என்று பல சிரமங்களை மாற்றங்களுக்கு ஆளாகும் தொழிலாளர்கள் சந்திக்க வேண்டியிருக்கும்.

ஆனால், ஒட்டு மொத்தக் கணக்கில் போன பதிவின் சர்ஜனைப் போல எல்லோருக்குமே நன்மைதான் அதிகமாகும்.

வரலாற்றுக் காரணங்களால் மக்கள் பல நாடுகளாகப் பிரிக்கப்பட்டு எல்லைகள், வேறு வேறு பணங்கள், அரசுக் கெடுபிடிகள் என்று பிளவுபட்டிருக்கிறார்கள். இதனால் பன்னாட்டு வர்த்தகம் என்பது பல் பிடுங்குவது போல பலவித தயாரிப்புகளோடு, வலியோடுதான் நடைபெற வேண்டியிருக்கிறது.
  • தமிழ் நாட்டிலிருந்து ஆயிரக் கணக்கான கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் நகரங்களுடன் வர்த்தகத்துக்குத் தடை இல்லை. நாற்பது கிலோமீட்டரில் இருக்கும் தமிழீழம் வேறு நாடு, வர்த்தகம் கிடையாது.
  • பஞ்சாபிலிருந்து கேரளாவுக்கு சரக்கும், மக்களும் போவதில் தடையில்லை, ஆனால் கூப்பிடு தூரத்தில் இருக்கும் பாகிஸ்தானின் மேற்கு பஞ்சாப் வேறு நாடாம்.
  • கல்கத்தாவிலிருந்து குஜராத்துக்கு வர்த்தகம் இயல்பாக நடைபெறலாம். மிக அருகில் இருக்கும் வங்காளதேசத்துக்கு தடைகள் ஏராளம்.
நாட்டு எல்லைகளை மங்கச் செய்து பன்னாட்டு வர்த்தகத்தைப் பெருக்கச் செய்யும் முயற்சிகள் ஏதாவது நடக்கின்றனவா?

புதன், அக்டோபர் 18, 2006

சீனப் பொம்மை் இந்திய மென்பொருள்் (economics 33)

ஒரு ஊரில் இருதய அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் வசிக்கிறார். மாற்றுப் பாதை அறுவை சிகிச்சை செய்வதில் மிகக் கைராசியும் அனுபவமும் வாய்ந்தவர்.

பத்தாம் வகுப்பு பள்ளி விடுமுறையின் போது தட்டச்சுக் கற்றுக் கொண்டு நிமிடத்துக்கு எண்பது சொற்கள் தட்டச்சும் திறனும் பெற்றிருக்கிறார். அதாவது தட்டச்சு செய்வதிலும் அவரை மிஞ்ச யாரும் இல்லை.

அவருக்கு அடுத்த நிலையில் இருக்கும் தட்டச்சு வல்லுனர் நிமிடத்துக்கு அறுபது சொற்கள் அடிக்கக் கூடியவர். தனது ஆவணங்களைத் தயாரிக்க அந்த உதவியாளரை வேலைக்கு வைத்துக் கொள்வாரா அல்லது தானே செய்து கொள்வாரா?

பொழுது போக்கு, சொந்த வேலைகள், மனவளக் கலைகள் சார்ந்த பணிகள் போக தினமும் தொழிலுக்கு செலவிடக் கிடைக்கும் நேரம் ஐந்து மணி நேரம் என்று வைத்துக் கொள்வோம். தன்னுடைய ஆவணங்களையும் தானே தட்டச்சு செய்து கொண்டால் அவர் நான்கு மணி நேரம் அறுவை சிகிச்சைகளும் ஒரு மணி நேரம் தட்டச்சு வேலையும் செய்ய வேண்டியிருக்கும்.

நான்கு மணி நேர அறுவை சிகிச்சைப் பணிகளுக்குக் கிடைக்கும் மதிப்பு = ரூபாய் 4 லட்சம்.

ஒரு மணி நேர தட்டச்சு வேலையைச் செய்ய உதவியாளர் ஒருவரை வைத்துக் கொண்டால் அவர் இரண்டு மணி நேரத்தில் முடிக்கிறார். கொடுக்க வேண்டிய சம்பளம், நாளுக்கு ஆயிரம் ரூபாய்.

ஐந்து மணி நேர அறுவை சிகிச்சைப் பணிகளுக்குக் கிடைக்கும் மதிப்பு = ரூபாய் 5 லட்சம்
ஒரு மணிநேர தட்டச்சு வேலைக்குச் செலவிடுவது = ரூபாய் ஆயிரம

தானே எல்லா வேலையும் செய்து கொண்டால் கிடைக்கும் மதிப்பு நான்கு லட்சம். இரண்டு வேலையிலுமே தான் வல்லவராக இருந்தும் வர்த்தகத்தில் ஈடுபட்டால் கிடைக்கும் மதிப்பு நான்கு லட்சத்து தொண்ணூற்று ஒன்பதாயிரம் ரூபாய்.

இரண்டு வேலையிலுமே அவரே மற்ற எல்லோரையும் விட கைதேர்ந்தவராக இருந்தாலும், எந்த வேலையில் அவரது ஒப்பீட்டுத் திறன் அதிகமாக இருக்கிறதோ அந்த வேலையை மட்டும் செய்து விட்டு இரண்டாவதை தனக்கு அடுத்த நிலையில் இருப்பவரிடம் விட்டு விடுவதுதான் புத்திசாலித்தனம்.

இதே கோட்பாட்டின்படி உலகின் பல்வேறு நாடுகளும், நாடுகளின் பல்வேறு பகுதிகளும் தமது ஒப்பீட்டுத் திறன் எதில் சிறப்பாக இருக்கிறதோ அந்த வேலையைச் செய்து பிற பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்து தமக்குத் தேவையான பொருட்களைப் பிற பகுதிகளிலிருந்து இறக்குமதி செய்து கொள்ள வேண்டும்
  • அமெரிக்காவில் விமானம் செய்யும் தொழில் நுட்பமும் அதி நவீனமானது, கோதுமை பயிரிடுதலும் உலகிலேயே மிகக் குறைந்த செலவில் நடத்தலாம் என்று இருந்தாலும், அமெரிக்கா விமானங்கள் செய்வதில் மட்டும் ஈடுபட்டு எல்லா நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து அதில் கிடைக்கும் வருமானத்தில் தனக்குத் தேவையான கோதுமையைப் பிற நாடுகளிலிருந்து வாங்கிக் கொள்ள வேண்டும்.

  • இதே வாதத்தின்படி சீனா விளையாட்டுப் பொம்மைகளை உற்பத்தி செய்து உலகெங்கும் விற்கிறது.

  • இந்தியாவின் மென்பொருள் உருவாக்குனர்கள் உலகின் பல பகுதிகளின் தேவைகளுக்கு வேலை செய்கிறார்கள்.

  • உலகில் எந்த நாடுமே பயணிகள் விமானம் வாங்க அமெரிக்காவின் போயிங், அல்லது ஐரோப்பாவின் ஏர்பஸ்ஸை நாடுகின்றன.
இது ஏட்டுச் சுரைக்காய். இதன்படி உலகமயமாக்கம் எல்லோருக்கும் நல்லதைச் செய்யும் ஒரு மந்திரக் கோல். நடைமுறையில் உலகமயமாக்கலுக்கு ஏன் இவ்வளவு எதிர்ப்புகள்?

சனி, அக்டோபர் 14, 2006

நிலஉரிமை நியாயமா? (economics 32)

ஒருவருக்கு வருமானம் வரும் வழியில் முக்கியமானது அவருக்குச் சொந்தமான நிலத்துக்குக் கிடைக்கும் குத்தகை அல்லது நிலத்தை விற்கும் போது கிடைக்கும் ஆதாயம்.
  • அமெரிக்காவில் ஐரோப்பியர் இறங்கிய முதல் நூறு ஆண்டுகளுக்கு மேற்கு எல்லை என்று முன்னேறிச் சென்று பூர்வகுடிகளை ஒழித்துக் கட்டி இடங்களைப் பிடித்துக் கொண்டார்கள். யார் முதலில் போய் இடத்தைப் பிடித்தார்களோ அவருக்கு நிலம் சொந்தம். தானே பயன்படுத்தியோ குத்தகைக்கு விட்டோ, நிலத்தைப் பயன்படுத்தி வரும் வருமானத்தை அவர் தன்னுடைய முதல் முயற்சிகளுக்கு ஆதாயமாக பெறுகிறார்.

  • ஒருவர் பொட்டல் காட்டில் கரடுமுரடான, பாறை நிரம்பிய நிலத்தை வாங்கி அதில் உழைத்துப் பணம் போட்டு நிலத்தைப் பண்படுத்தி மேம்படுத்துகிறார். இன்னொருவர் நிலத்தை வாங்கி கட்டிடம் கட்டுகிறார். இதற்கும் செய்த முதலீட்டுக்கான ஆதாயம் வாடகையாக கூடிய விற்பனை விலையாக வருகிறது.
ஆனால் 'நிலம் என்பது ஒருவரது உரிமை இல்லை, அதன் பலன்கள் சமூகத்துக்கு உரிமையாக இருக்க வேண்டும்' என்று ஆரம்பம் முதலே குரல்கள் எழுந்து கொண்டிருக்கின்றன. நிலத்தின் மதிப்புக்கு வரி விதிப்பு (Land Value Taxation ), நிலம் விற்கும் போது ஆதாயத்துக்கு உயர் வரி வீதம் (Stamp Duty) என்று அரசுகள் நிலத்தில் வரும் ஆதாயங்களை எடுக்க முயற்சி செய்து கொண்டே இருக்கின்றன.
  • 'நிலத்தின் மதிப்பு உயர்வது நில உரிமையாளரின் உழைப்பினால் இல்லை. சுற்றிலும் நடக்கும் முன்னேற்றங்கள், புதிய அரசு திட்டங்கள் எல்லாம் நிலத்தின் விலையை ஏற்றி விடுகின்றன. எனவே, நிலத்தின் சந்தை மதிப்பில் ஒரு பகுதியை வரியாக செலுத்த வேண்டும் என்று சொல்வது LVT. எல்லோருக்கும் உரிமையாக இருக்க வேண்டிய நிலத்துக்கு வாடகையாகத்தான் இந்த வரி என்றும் சொல்லலாம்.

  • ஆனால் நிலத்தின் மீதான இந்த வரி மிகச் சில நாடுகளிலேயே விதிக்கப்படுகிறது. தாய்வான், சிங்கப்பூர், ஆங்காங் போன்ற சிறிய நாடுகளில் இந்த வரி விதிப்பு நடைமுறையில் உள்ளது. இந்த நாடுகளில் எல்லாமே நிலம் பற்றாக்குறையில் இருப்பது கவனிக்கத்தக்கது.
பெரிய நாடுகளிலும் எல்லா மக்களும் நிலத்துக்கு உரிமை கொண்டாடும் வகையில் நிலச் சீர்திருத்தங்களுக்கு முன்னோடியாகவோ, இணையாகவோ இத்தகைய வரி விதிக்கப்படலாம். இதனால் கிடைக்கும் பலன்கள்:
  1. நிலத்தின் மீதான வரி வருமான வரி, ஆதாய வரி போல உழைப்பையோ தொழில் முனைவையோ குறைக்காது என்பதால் இதன் மீதான வரி அரசுக்கு வருமானம் தரும் அதே நேரம், பொருளாதார வளர்ச்சியையும் தடுக்காது.

  2. நகர மையத்தில் இருக்கும் நிலத்திற்கு வரி அதிகமாகவும் பொட்டல் காட்டு நிலத்தின் மீது வரி குறைவாகவும் இருப்பதால் புதிய திட்டங்கள் பொருளாதார நடவடிக்கைகள் பரவலாக நடைபெற இந்த வரி உதவி செய்யும்.

  3. சும்மா வைத்திருந்தாலும் வரி கட்ட வேண்டும் என்று இருப்பதால் நில உரிமையாளர்கள் நிலத்தை பயன்படுத்த முயற்சி எடுப்பார்கள். வாங்கி வைத்திருந்து விலை ஏறியதும் விற்று விடலாம் என்ற சூதாட்டம் குறைந்து விடும்.

  4. நிலத்தை பதுக்கி வைத்து வரி ஏய்ப்பது என்பது சாத்தியமில்லாததால் இதை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் குறைவு.

ஆண்களுக்கு மட்டும் - 3 (எதிர்வினைகள்)

அப்பா, எவ்வளவு குற்றச்சாட்டுகள். அதுதான் அவசர அவசரமாக பாலாவின் பின்னூட்டத்துக்கு நேற்றே பதில் போட்டேன். ஒவ்வொருவரும் தனதளவில் சோதனை செய்து பார்த்து முடிவு செய்து கொள்ள வேண்டும் என்று, பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்துக்கு மறு பக்கத்தை எழுதுவதுதான் என்னுடைய நோக்கம்.

இனிமேல் பின்னூட்டங்களுக்கு பதில்:

1. போஸ்டன் பாலா

//---ஒரு சச்சின் டெண்டுல்கரோ, விஸ்வநாதன் ஆனந்தோ தமது நேரத்தை இப்படிச் செலவிட்டிருப்பார்களா?---How can we be so sure?//

எனக்கு நிச்சயமாகத் தெரியாது. உங்களுக்கும் தெரியாது.

//---விந்து வெளியேற்றுவது ஒரு பெண்ணுடன் இணைந்து குழந்தை பெறுவதற்காக இயற்கை வகுத்த வழி. ---Then, are you against GLBT too (Gays, Lesbians, bi-sexual, transgender)?//

இல்லை பாலா, அது இன்னொரு விவாதத்துக்கான பொருள். Straight எனப்படும் ஆண்களுக்கு சுயஇன்பத்தில் நேரம் செலவளிப்பது அவசியமா என்பதுதான் இங்கு கேள்வி!

//If a management guru (similar to the temple visit) consults for one hour he/she may get 200 dollars. The same rate is not given for a construction worker (movie experience in the above metaphor). Apples & oranges... :D//

அந்த மேலாண்மை வல்லுனர் அந்த ஒரு மணி நேரத்தில் கட்டிட வேலை பார்த்தால் 10 டாலர் கிடைக்கும் என்று வேலை பார்ப்பது என்பதுதான் சரியான ஒப்புமையாக இருக்கும். அதை செய்ய விரும்புவது அவரது தேர்வு, செய்யாமல் இருப்பதும் அவரே முடிவு செய்து கொள்வது.

2. சிறில் அலெக்ஸ்

சரியாக இந்தப் பதிவின் நோக்கத்தைப் புரிந்து கொண்டதற்கு நன்றி. ஒவ்வொருவரும் தன்னளவில் அலசிப் பார்த்து சரியெனப்படும் பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். சின்ன வயதிலிருந்தே பல்வேறு ஊடகங்களில் 'சுய இன்பம் காண்பதே இயற்கை, அதை செய்யாமல் இருப்பது செயற்கை' என்று மூளைச் சலவை செய்யப்பட்டிருக்கும் நமக்கு மாற்றுக் கருத்தை நினைத்துப் பார்க்க ஒரு வாய்ப்பு வேண்டுமல்லாவா?

3. தெக்கிட்டான்

//என்ன அவ்ளோ ஆணித்தரமாக ஒரு முடிவாக அந்த "சாதித்தவர்களைப்" பற்றியான கணிப்பில் கூறியிருக்கிறீர்கள்.//

நான் கேள்விதான் எழுப்பியிருக்கிறேன் தெக்கிட்டான். ஆணித்தரமாக எதுவும் சொல்லவில்லை. அவர்களும் மனிதர்கள்தாம் என்றாலும் அவர்கள் சாதித்ததை நாம் எல்லோரும் செய்து விடவில்லையே. ஏன்? நேரத் திட்டமிடலும் பயன்பாடும் ஒரு முக்கிய காரணம் என்று எனக்குப் படுகிறது.

//மற்றபடி தாங்களின் எண்ணவோட்டங்களை மற்றவர்களிடமும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது.//

கண்டிப்பாக, ஒவ்வொருவரும் எல்லா கருத்துக்களையும் உள்வாங்கி தமக்கு சரியெனப்படுவதை செய்து விட்டுப் போய்க் கொண்டே இருக்க வேண்டியதுதான்.

4. Babble

வாங்க Babble.

//குற்ற உணர்ச்சியா? இது என்ன புது கதையா இருக்கு?//
//மனுசன் வெறும் முன்னேற்றத்துக்கான செயல்ல மட்டுமே நேரம் செலவழிச்சா இயந்திரம் ஆயிடுவான் ஐயா//

ஏன் அப்படி சொல்கிறீர்கள். ஏழு ஆண்டு உழைத்து நாவல் எழுதிய கிரண் தேசாய் இயந்திரமா ஆகி விட்டார். அதற்காக அவர் முன்னேற்றத்துக்கான செயல் மட்டும் செய்தார் என்று அனுமானிக்க முடியாது என்றாலும் உழைத்தால்தான் உயர்வு என்பது தெளிவுதானே.

//மனசு/உணர்வுகளுக்கு எத்தனையோ பரிமாணம் இருக்கு, அதை நீங்க சில பரிமாணத்துக்குள்ள அடைக்க நினைக்கிறது வியப்பா இருக்கு.//
மனசின் பரிமாணங்களைப் புரிந்து கொண்டு எந்த பரிமாணங்களில் வளரலாம் என்று புரிய முனைவதுதான் நம் வாழ்க்கை இல்லையா? எல்லோருமே ஒரே கருத்துதான் சரி என்று ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்ல முடியாதே.

//இது ஏன் ஆண்களுக்கு மட்டும்? பெண்கள் இதுல ஈடுபடுறது இல்லையா? அப்படியே ஈடுபடலைனாலும் இந்த பதிவ படிக்கக்கூடாதா?//
நான் ஒரு பெண்ணாக இல்லாததால், மருத்துவராக இல்லாததால் பெண்களின் உடற்கூறுகளைப் பற்றி பழக்கங்களைப் பற்றி விவாதிக்க எனக்கு தகுதியில்லை. அதனால்தான் அப்படி தலைப்பு கொடுத்தது.

//போன தலைமுறை ஆள் மாதிரி பேசிக்கிட்டு இருக்கீங்க. அவங்க கூட தெளிவா இருந்திருப்பாங்களோன்னு தோணுது.//

போன தலைமுறையில் சுய இன்பம் காண்பது இல்லை என்றா சொல்கிறீர்கள்? இதில் தலைமுறையோ, இசங்களோ உதவாது, நம் மனமே நமக்கு ஆசான் என்று கற்றுக் கொள்ள வேண்டியதுதான்.

5. ஓகை
//குற்ற உணர்வு இல்லாதவர்கள் சிலரை குற்ற உணர்வு கொள்ளவைப்பதும், இலேசாக இருப்பவர்களை பலமாக திசை திருப்புவதும், குற்ற உண்ர்வுடன் செய்து கொண்டிருப்பவர்களை பீதி கொள்ளச் செய்வதும் இப்பதிவின் பலன்களாக இருக்கும்.//

//இதை எதிர்த்துச் சொல்பவர் சிலர். தவறில்லை என்று சொல்பவர் மிகப் பலர். இதில் மருத்துவர்களும் மற்றவர்களும் ஏராளமாக உண்டு.//

எனக்குத் தெரிந்து எதைப் படித்தாலும் இது தவறில்லை என்று சொல்லப்படுவதுதான் கிடைக்கிறது. எதிர்க் கருத்தை வெளிப்படுத்தும் முயற்சிதான் இது.

//ஒரு வாதத்துக்காக எல்லா ஆண்களும் இதைச் செய்வதை இன்று நிறுத்திவிடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். கொஞ்ச நாளில் உலகம் நாசமாய்ப் போய்விடும்.//

எப்படி?

//மிருகக் காட்சி சாலைகளில் சில மிருகங்களுக்கு இது செய்துவிடப் படுவதுண்டு.//

எப்படி?

6. பிரேமலதா
//Fundamentally wrong you are.//
எப்படி?

//எப்பெல்லாம் விந்து வெளிடறாரோ அப்பெல்லாம் குழந்தையா ஆக்கிட்டுத்தான் விடுவேன்னு அடம்புடிச்சாருன்னு வைங்கோ, பாப்புலேசன் பிரச்சினை என்னத்துக்காகிறது. அப்புறம், ஒருதடவையே மில்லியன் வருதே, அத்தனையும் குழந்தையாக்கிட்டுத்தான் விடுவாரமா? இவரப் படைச்ச கடவுளேல்ல வேண்டாம்னு முடிவெடுத்து ஒரு மில்லியன்ல ஒண்ணுதான் பிழைச்சாலும் பிழைக்கும்னெல்லாம் அவரேல்ல முடிச்சுட்டாரு.//

பிரேமலதா இது விதண்டாவாதம் :-) ஒரு மில்லியன் வருவதற்கு காரணம், ஒன்றாவது சினைமுட்டையுடன் சேர்ந்து கருவுறுவதற்கான நிகழ்தகவை உயர்த்துவதற்குத்தான்.

திரும்பவும், இது ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் தீர்மானித்துக் கொள்ள வேண்டிய ஒன்று. மாறுபட்டக் கருத்தை வைத்ததுதான் என்னுடைய பொறுப்பு.

7. பாலபாரதி
//நாள் ஒன்றுக்கு ஒன்பது முறை என்ற அளவில் இருப்பவர்களை குறைத்துக்கொள்ளச் சொல்லலாம். நிறுத்தச்சொல்ல முடியாது.//

நம் கருத்தாக சொல்லலாம், ஏற்றுக் கொள்வது தனி விருப்பம்தான் இல்லையா!

//இன்று பெரிய அளவில் சாதிக்கும் பலரும் பாலியல் வடிகாலுக்கு வழி இருப்பவர்கள் தான் என்பதையும் உணர வேண்டும்.//

இதில் என்ன சந்தேகம்.

8. மதன்

//what do you advocate as an alternative? Repression of feelings? Isn't it more harmful psychologically than your concept of guilt?//

இணையத்தில் பொம்மை பார்க்கச் செலவளிக்கும் நேரத்தை எழுத்திலோ, கவிதையிலோ, ஓவியத்திலோ, உறவுகளுக்கோ செலவளிப்பது எப்படி உணர்வுகளை அடக்குவதாகும்? இயற்கையாக வரும் உணர்வுகள் வேறு, நாமாக வலிந்து போய் தூண்டிக் கொள்வது வேறு, இல்லையா?

//do you advocate free sex, prostitution and rape? After all what are women for? Only to receive our semen, the seed of life?//

இதுவும் விதண்டாவாதம் மதன். நான் மேலே சொன்னது போல புதியது காணும் முயற்சிகளில் நேரத்தைச் செலவளிப்பதுதான் மாற்று வழி.

வெள்ளி, அக்டோபர் 13, 2006

ஆண்களுக்கு மட்டும் - 3

சுய இன்பம் பெறுவதால் உடலுக்கு எந்தக் கெடுதலும் இல்லை. மனதில் ஏற்படும் குற்ற உணர்ச்சியைத் தவிர்த்து விட்டால் எந்த பின்விளைவுகளும் கிடையாது என்பது பெட்டிக் கடைகளில் விற்கும் திரைச்சித்ரா. பருவகாலம் முதல், Marriage Manual என்று கையேடுகளிலும், இணையத்தில் சக்கை போடு போடும் எல்லா விதமான பாலுணர்வைத் தூண்டும் தளங்களும் தரும் உறுதி மொழி.

சோதிடம் பார்க்க வருபவர்களிடம் 'உங்களுக்கு ஒரு பெரிய கவலை மனதில் இருக்கிறது' என்று ஆரம்பிப்பது பாதுகாப்பானது. கவலை இல்லா விட்டால் சோதிடம் பார்க்க ஏன் வருகிறார்கள். திரைச் சித்ராவின் வாசகர்களுக்கு எது ஆறுதலைத் தருமோ எது அவர்களது விற்பனையைப் பாதிக்காதோ அதை சொல்வதுதானே நியாயம்?

பாதிப்பே இல்லையா, என்ன?

எஸ்கே ஐயா சொல்வது போல "ஒரு சொட்டு விந்துக்கு பல சொட்டு ரத்தம் இழப்பாகும்" என்ற பயமுறுத்தல்களை விட்டு விடுவோம்.

உண்மையை நம்மளவில் ஆராய்ந்து பார்ப்போம். சுயஇன்பத்துக்குப் பிறகு ஏற்படும் குற்றஉணர்ச்சி தவிர்க்கவே முடியாது. எவ்வளவு பெரிய மேதாவியாக இருந்தாலும் துடைத்துப் போட்டு விட்டுப் போய்க் கொண்டிருக்க முடியாது. மனித மனதையும் உடலையும் எண்ணிப் பார்த்தால் இதன் பின்னணி விளங்கும்.

உணர்வுகளைத் தூண்டி, உடலைத் தயார் செய்து, விந்து வெளியேற்றுவது ஒரு பெண்ணுடன் இணைந்து குழந்தை பெறுவதற்காக இயற்கை வகுத்த வழி. அதை விடுத்து செயற்கையாக உணர்வுகள் மூலம் உடலை செலுத்தி வெறுமையில் முடிவது உடலளவிலும் மனதளவிலும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது.

பதினைந்து நிமிடம் கோவிலுக்குப் போனால் ஏற்படும் நிம்மதி அடுத்த பல மணி நேரங்களுக்கு தொடர்கிறது என்றால் ஒரு மணி நேரம் படம் பார்ப்பதில் செலவிட்டால் அதன் விளைவுகள் எத்தனை மணி நேரம் நீடிக்கும்?

தேவை இல்லை
வாரத்துக்கு அல்லது மாதத்துக்கு எத்தனை மணி நேரம் இந்த பலனற்ற செயலில் செலவளிக்கிறோம்? இது இல்லாமல் முடியாது என்ற விவாதத்துக்கு இதை எண்ணிப் பாருங்கள். ஒரு சச்சின் டெண்டுல்கரோ, விஸ்வநாதன் ஆனந்தோ தமது நேரத்தை இப்படிச் செலவிட்டிருப்பார்களா? சாதிக்க வேண்டும் என்று இருப்பவர்கள், ஒரு மணி நேரம் விதைத்தால் எத்தனை மணி நேர பலன் கிடைக்கும் என்று திட்டமிட்டு செயல்படுவார்கள் அல்லவா?

எல்லோரும் செய்வதால் நாமும் செய்ய வேண்டியதில்லை
இது நம்ம ஊரில் மட்டும் இல்லை, உலகளவில் இணையத்தில் கொடி கட்டிப் பறக்கும் ஒரு தொழில் பாலுணர்வு தொழில்தான். அமெரிக்க விவாதத் தளங்களிலும் இது பற்றிய கிண்டல்கள் இயல்பாக வெளிப்படுகின்றன. ஆனால், ஒவ்வொருவரும் இந்த மணி நேரங்களையும் தொடரும் பாதிக்கப்பட்ட நேரங்களையும் புதியன படைக்கும் முயற்சிகளில் செயல்பட்டால் ஒரு சமூகம் எவ்வளவு சாதிக்கலாம்?

நம்முடைய படைப்பாற்றலுக்கு வடிவம் கொடுக்க வேண்டும்
சுய இன்பம் காண்பது நம்முடைய உருவாக்கும் உந்துதலுக்கு அரைகுறை நிறைவு அளித்து விடுகிறது. அதை விடுத்து உணர்வுகளைக் கவிதைகளாகவோ, ஓவியமாகவோ, கதையாகவோ வடிக்க ஆரம்பிக்கலாமே, புதியது படைத்த முழு நிறைவும் கிடைத்து விடும்.

ரஜினிக்கு ஏன் கோடிகள்? (economics 31)

  1. அதீத ஆதாயம் ஈட்டும் நிறுவனங்கள் (profix maximizing enterprises)
    'தொழிலாளர்களையும், சிறு வியாபாரிகளையும் சுரண்டி அந்த நிறுவனம் கொழிக்கிறது' என்று எதிர்ப்பவர்க்ள் ஒரு புறமிருக்க, 'அப்படி முழு சுதந்திரத்துடன் நிறுவனம் செயல்பட்டால்தான் சந்தைப் பொருளாதாரம் சரிவர செயல்படும்' என்று நியாயப்படுத்துபவர்களும் இருக்கிறார்கள்.

    ஒரு தொழிலாளி வேலைக்கு வரும் போது வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக எதை வேண்டுமானாலும் ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பார். அந்த நிலையை பயன்படுத்திக் கொண்டு, அவரால் நிறுவனத்துக்குக் கிடைக்கும் ஆதாயத்தை அவருக்கு சம்பளமாகக் கொடுக்காமல், குறைந்த தொகையில் வேலை வாங்கிக் கொண்டு அதிகப்படியை தனது ஆதாயமாக பெருக்குவது முதலாளித்துவம்.

    இதைத் தடுக்கத்தான் தொழிற்சங்க அமைப்புகள் தோன்றி கூட்டாக சம்பள பேரம் பேசும் முறை வழக்கில் உள்ளது.

  2. செல்வந்தர்களுக்கு வரி விதித்து ஏழைகளுக்கு சலுகை வழங்கும் அரசுகள் (welfare states)

    'அரசாங்கம் எளியவர்களையும், தம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியாதவர்களையும் பராமாரிக்கும் வண்ணம், உதவித் தொகைகள், மானியங்கள், இலவசத் திட்டங்கள் அளிக்க வேண்டும்' என்று ஒரு புறத்தார் சொல்ல, 'வெற்றிகரமாக உழைப்பவர்களிடமிருந்து எடுத்து சோம்பேறிகளுக்குக் கொடுத்தால் நாடு எப்படி உருப்படும்' என்று அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் எதிர் கருத்தினர்.

    சத்துணவு போடுவதை விட தொழிற்சாலைகள் கட்டினால் அப்பாமார்களுக்கு வேலை கிடைத்து குழந்தைகள் வீட்டிலேயே சாப்பிட வசதி ஏற்படுமே என்று சத்துணவு திட்டத்தை எதிர்த்தார்கள்.

    அரசாங்கள் சந்தை என்ற காட்டில் யார் வலிமை உள்ளவரோ அவர் பிழைத்துக் கொள்ளட்டும் என்று விட்டு விட வேண்டும், நலிந்தவர்கள் உதிர்ந்து போவது இயற்கையின் தேர்வு என்ற வாதங்களும் முன்வைக்கப்படுகின்றன.

  3. விலை விளையாட்டில் ஈடுபடும் வியாபாரிகள் (speculators)

    சந்தைப் பொருட்களை வியாபாரி பதுக்கி வைத்து விலையை ஏற்றி அப்புறம் விற்பதை வியாபாரத் திறன் என்று புகழ்பவர்களும், அது சமூகத்துக்குச் செய்யும் கொடுமை என கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்று இகழ்பவர்களும் இருக்கிறார்கள்.

    இப்போது பருப்பு முதலான தானியங்களின் விலை தாறுமாறாக ஏறியிருப்பது மூலப்பொருள் வர்த்தகத்தை (commodity trading) அரசு அனுமதித்ததால்தான் என்கிறார்கள். (நன்றி : இந்த வார குமுதம் பத்திரிகை).

    குறைந்த விலைக்குக் கிடைக்கும் பொருட்களை மொத்தமாக வாங்கிப் பதுக்கி வைத்துக் கொண்டு விலை ஏறிய பிறகு விற்பது பதுக்கல் வியாபாரம் என்கிறோம்.

    இன்றைக்கு துவரம் பருப்பு விலை கிலோ முப்பது ரூபாயாக இருக்கும் போது இரண்டு மாதத்துக்குப் பிறகு அது கிலோ அறுபது ரூபாயாக ஏறி விடும் என்று அனுமானித்து இரண்டு மாதத்துக்குப் பிறகு ஐம்பத்தைந்து ரூபாய்க்கு நான் ஆயிரம் கிலோ வாங்கிக் கொள்கிறேன் என்று பந்தயம் கட்டலாம். அதற்கு முன்பணமாக 5% மதிப்பைக் கட்டி விட வேண்டும். (2500 ரூபாய்).

    இரண்டு மாதத்தில் விலை அறுபது ரூபாயாக ஏறியிருந்தால் ஆதாயமான 5000 ரூபாயையும் என்னுடைய முன்பணத்தையும் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். விலை முப்பத்தைந்திலேயே நின்று விட்டிருந்தால் 20000 ரூபாய் நான் இழப்பேன்.

    'சந்தையை ஒழுங்கு படுத்துவதில் இந்த அனுமான வியாபாரங்கள் பெரிதும் உதவுகின்றன' என்பது இதை ஆதரிப்பவர்களின் வாதம். 'நம்மைப் போன்ற முதிர்ச்சியடையாத, நெறிப்படுத்தப்படாத சந்தைகளில் இதைச் சூதாட்டமாகப் பயன்படுத்தி ஒருவருக்கொருவர் போட்டி போட்டு விலைகளை ஏற்றி விடுவதுதான் மிஞ்சும்' என்பது எதிர்ப்பவர்களின் கட்சி. கடைசியில் விலை உயர்வு சாதாரண மக்களின் தலையில்தானே விடியும்.

    சிபியும், பொன்ஸும் சொன்னது போல பங்கு வர்த்தகத்திலும் இது போல அனுமான விளையாட்டுக்கள் உண்டு. இந்த செயல்பாடுகள் SEBI போன்ற மட்டுறுத்தும் நிறுவனங்களால் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இதில் விலை ஏறுவதும் இறங்குவதும் இதில் பங்கு பெறாத பொது மக்களை நேரடியாகப் பாதிப்பதில்லை.

  4. சொத்து வாரிசுகளுக்குப் போதல் (Inheritance taxes)

    'அப்பா உழைத்தார், சொத்து சேர்ந்தது, அது மகனுக்கும் போய்ச் சேருவது என்ன நீதி, ஒருவர் தனது சொத்துக்களுக்கு உயில் எழுதி வைத்துப் போய்ச் சேர்ந்தால் சொத்துக்களின் மதிப்பில் பெரும்பகுதி வரியாகக (inheritance tax) கட்டப்பட வேண்டும்' என்று அமெரிக்கா போன்ற நாடுகளில் சட்டங்கள் உள்ளன. 'தந்தையும் சொத்து குழந்தைகளுக்குப் போய்ச் சேருவதில் என்ன இடையூறு' என்று இருக்கும் சமூகங்கள் நம்ம ஊர் சமூகங்கள்.

    'உழைக்காமல் வசதிகள் வந்தால் அதை வீணாக்கி தவறான வழியில் போவதுதான் நடக்கும். வாரிசுகளுக்கு சொத்து கொடுப்பதில் கட்டுப்பாடுகள் இருப்பது சமூகத்துக்கு நல்லது' என்று சமூகவியல் வாதிகள் சொல்ல, 'அப்படி நடந்தால் யார்தான் சிரமப்பட்டு உழைப்பார்கள். செத்த பிறகு எவனோ கொண்டு போவதற்கு நான் ஏன் உழைக்க வேண்டும் என்று இருந்து விட மாட்டார்களா' என்று முதலாளிகளைச சார்ந்தவர்கள் வாதிடுவார்கள்.

  5. சிறப்பு வருமானங்கள்

    "கலைத்துறை, விளம்பரத்துறைமற்றும் விளையாட்டுத்துறையில் உள்ளவர்களுக்கு தரும் ஊதியத்தை, அவர்களது திறமையை மட்டும் அல்லாமல் அவர்கள் மக்களிடையே கொண்ட செல்வாக்கும் சேர்த்து நிர்ணயிக்கிறது. இங்கே ஊதியமும் அவர்களது திறமையும் மட்டும் அல்லாமல் இன்னபிறவும் அவர்களது வருமானத்தை நிர்ணயிக்கின்றன." == பத்மா அரவிந்த்

    டெண்டூல்கருக்குக் கிடைக்கும் கோடிக்கணக்கான வருமானம் அவரது போன்ற கிடைத்தற்கரிய திறமைக்கும் அந்தத் திறமைக்கு மக்களிடையே இருக்கும் வரவேற்புக்கும் உள்ள அங்கீகாரம்தான். அதே போலத்தான் ரஜினியின் நடிப்புத் திறனும் மக்கள் மத்தியில் அவருக்கிருக்கும் செல்வாக்கும்.

    இங்கும் வழங்கலுக்கும், தேவைக்கும் இடையான இழுபறிதான் வருமானத்தைத் தீர்மானிக்கிறது.

    செஸ்ஸில் அரிய திறமை படைத்த ஆனந்துக்கு டெண்டூல்கர் அளவு வருமானம் கிடைகாதது செஸ் விளையாட்டை கண்டு களிக்க மக்களின் தேவை குறைவாக இருப்பதுதான்.

இன்னொரு வருமான வழி நிலத்தின் மதிப்பு கூடுவதால் கிடைக்கும் ஆதாயம். அது தனிநபருக்கு சொந்தமா அல்லது வரி விதிப்பின் மூலம் அரசே எடுத்துக் கொள்ள வேண்டுமா?

வியாழன், அக்டோபர் 12, 2006

ஆண்களுக்கு மட்டும்தான் உதவும்

யூதர்களும், முஸ்லீம்களும் பின்பற்றும் ஒரு பழக்கம் ஆண் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே ஆண்குறியின் நுனித்தோலை வெட்டி விடுவது . என்னுடைய முஸ்லீம் நண்பர்கள் சிறுநீர் கழித்த பிறகு ஆண்குறியை நீரால் கழுவுவதையும் வழக்கமாக வைத்திருப்பதையும் சொல்லியிருக்கிறார்கள்.

ஆண்குறியின் முனையை மூடியிருக்கும் தோலின் பின்பக்கம் அழுக்கு சேர்வது இயல்பாக நடக்கிறது. தோலின் மடிப்புகளுக்குப் பின்னால், சுரப்புகளின் காய்ந்த துகள்கள் சேர்ந்து விடுகின்றன. ஆங்கிலத்தில் smegma எனப்படும் இந்தப் படிவுகள் துர்நாற்றத்தை உருவாக்குவதுடன், உணர்ச்சி பூர்வமான இந்தப் பகுதியில் மேல் தோலுடன் உராய்ந்து சிரமத்தைக் கொடுக்கின்றன. சில நேரம் பாக்டீரியாக்கள் சேர்ந்து எரிச்சலையும் உருவாக்கலாம்.(balantis)

குளிக்கும் போது நுனித் தோலை முற்றிலும் பின் தள்ளி தோல் குறியுடன் இணையும் இடத்தில் படிந்திருக்கும் அழுக்குகளை நீக்குவது இதை நீக்குவதற்கான வழி. சோப்புகள் எதையும் பயன்படுத்தாமல், தூய்மையான குளிர்ந்த நீர் அல்லது வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்தி சுத்தப்படுத்தலை செய்யலாம். மிகக் கவனமாக தோலையோ, உறுப்பையோ காயப்படுத்தி விடாத வணணம் தினமும் சுத்தம் செய்வது நலனைத் தரும்.

துணிந்தவருக்கு துக்கமில்லை் (economics 30)

பொருளாதார வாழ்க்கையில் நிச்சயமற்ற நிலை ஒவ்வொரு துறையிலும் இருக்கிறது.

  • இன்றைக்கு விதை விதைத்தால் நமது சாப்பாட்டுக்குப் போக மீதமிருக்கும் நெல்லை விற்று மீதித் தேவைகளைப் பார்த்துக் கொள்ளலாம் என்று விவசாயி கணக்குப் போடுகிறார். ஆறு மாதத்துக்குப் பிறகு நெல் அறுவடையாகி சந்தைக்குப் போகும் போது விலை குவின்டாலுக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்ற துணிச்சலில் செலவுகள் செய்கிறார். அறுவடை காலத்தில் விலை குவின்டாலுக்கு ஐநூறு ரூபாய் என்று சரிந்து விட்டால் என்ன கதி?

  • தொழிற்சாலை கட்டி இயந்திரங்கள் வாங்கி வேலைக்கு ஆள் வைத்து பொருளை உற்பத்தி செய்து சந்தைக்குக் கொண்டு வந்தால் இன்ன விலைக்கு விற்கலாம் என்று துணிந்து தொழில் நடத்தும் தொழில் முனைவோருக்கும் கணிப்புகள் பொய்த்துப் போகும் வாய்ப்புகள் இருக்கின்றன. மருந்து, உயர் மின்னணுப் பொருள் இவற்றின் உற்பத்தியில் கோடிக்கணக்கான ரூபாய் ஆராய்ச்சி செலவுகளுக்கும் போகின்றன.

  • தேர்தலில் நிற்பதற்கு ஓரிரு கோடி செலவளிக்கிறோம், வெற்றி பெற்று விட்டால் ஒன்றுக்கு மூன்றாகப் பார்த்து விடலாம் என்ற துணிச்சலில் தேர்தலில் நிற்பதும் ஒரு வகையில் வாய்ப்பை முயன்று பார்ப்பதுதான்.
இப்படி தன் சேமிப்பை முடக்கிப் பணத்தைப் போட்டு நாள் பிடிக்கும் வழிகளில் பொருட்களையும் சேவைகளையும் உருவாக்கத் துணிச்சல் காட்டும் தொழில் முனைவோருக்கு வெற்றி பெற்றால் பரிசாக ஆதாயம் கிடைக்கிறது. அது இல்லா விட்டால் எந்த விதமான முயற்சிகளும் புதிதாக மேற்கொள்ளப்படாமல் பொருளாதார நடவடிக்கை முடங்கிப் போய் விடும்.

ஒருவர் வேலை செய்து மாதக் கடைசியில், வார இறுதியில், நாள் தோறும் வாங்கும் ஊதியத்தைத் தவிர்த்து இன்னொரு வருமானம் வரும் வழி மேலே சொன்ன துணிச்சலுக்குக் கிடைக்கும் ஆதாயம். இந்த ஆதாயத்தின் மறுபக்கம், தோல்வியடைந்தால் துண்டைப் போட்டுக் கொண்டு போக வேண்டிய இழப்பு. எங்கு அதிக நிச்சயமின்மை நிலவுகிறதோ அந்தத் துறைகளில் ஆதாயமும் அதிகமாக இருக்கும்,

பில் கேட்ஸ் எண்பதுகளில் தனது உழைப்பின் மூலமும், திட்டமிடல் மூலமும் தொண்ணூறுகளில் பெரும்பலன் அளித்த மென்பொருள் உருவாக்கத்துக்கு வித்திட்ட முனைப்புக்கு பரிசுதான் இன்று அவருக்கு வரும் பெரு ஆதாயங்கள்.

உழைத்தால் காசு, அப்போ துணிந்து இறங்கியதற்கு இன்றைக்கு ஆதாயம் என்ற இரண்டிலுமே யாருக்கும் எந்த மனத் தாங்கலும் இருக்க முடியாது. அடுத்தவர்களிடமிருந்து திருடுவது, ஏமாற்றிப் பணம் ஈட்டுவது என்பது சரியில்லை என்பதும் எல்லோரும் ஏற்றுக் கொண்ட உண்மை.

சர்ச்சைக்குள்ளாகும் வழிகள் இன்னும் சில இருக்கின்றன. ஒரு தரப்பார் முழு மூச்சாக எதிப்பதும், மற்றொரு தரப்பில் முழு ஆதரவு தருவதுமாக சூடு பறக்கும் விவாதத்துக்குள்ளாகும் அவை என்ன?

புதன், அக்டோபர் 11, 2006

ஆண்களுக்கு மட்டும்

இன்றைய இந்து சென்னைப் பதிப்பு மெட்ரோ பிளஸ் பகுதியில் தனிசுகாதாரம் பற்றி ஒரு கட்டுரை. உடல் துர்நாற்றம், வாய் நாற்றம், கசங்கிய அழுக்கான ஆடை உடுத்துவது, காலுறை பிரச்சனைகள் என்று பட்டியல் போட்டு விட்டு் முதல் இரண்டுக்கும் வழி எதுவுமே சொல்லாமல் முடித்து விட்டார்கள்.

நல்ல வேர்த்து விறு விறுத்து குளிரூட்டப்பட்ட ஒரு அறைக்குள் நுழைந்தால் நம்முடைய உடலின் வாடை நமக்கே எட்டி விடும். மின்சாரம் நின்று போய், 40 டிகிரி வெயில் அடிக்கும் போது வேர்வையாக ஊற்றும் போது உடலில் நறுமணம் கமழ்கிறதா?

உடல் அழுக்கைப் போக்க சோப்பு தேய்த்து குளிக்கிறோம். பல்லில் படியும் அழுக்கைப் போக்க பல் துலக்குகிறோம். எவ்வளவுதான் கவனமாக காலையில் இந்த இரண்டையும் செய்து, சோப்புகளை மாற்றி மாற்றி முயன்றாலும் மாலை வரை துர்நாற்றத்தை தூர வைப்பது சிரமமாகப் போய் விடுகிறது.

வழக்கமாக பல்லுக்கும் தோலுக்கும் செய்யும் சேவைகளுடன் கூடவே இன்னொன்றையும் கவனிக்க வேண்டும்.

வயிற்றில் என்ன இருக்கிறதோ அவையும் இந்த இரண்டையும் பாதிக்கின்றன. ஆங்கிலத்தில் வாய் துர்நாற்றத்தை bad breath (மோசமான சுவாசம்) என்று குறிப்பிடுகிறார்கள். வயிற்றில் கழிவுகள் மக்கிப் போயிருந்தால் அதைத் தொட்டு காற்று வாய் வழியாக வரும்போது அந்த நாற்றத்தையும் எடுத்து வருகிறது.

உடலெங்கும் சுற்றி வரும் ரத்தத்தில் கழிவுகள் கலந்தால் வேர்வையில் துர்நாற்றம் புகுந்து மேல்தோலுக்கு வந்து விடுகிறது.

  1. காலையில் வெறும் வயிற்றில் இரண்டு மூன்று தம்ளர் இளஞ்சூடான நீர் குடிப்பதன் மூலம் வேலைக்குக் கிளம்பும் முன் வயிற்றுக் கழிவுகளை ஓரிரு முறைகளில் முற்றிலும் வெளியேற்றி விடலாம்.
    காலையில் எழுவதற்கும் வேலைக்கு கிளம்புவதற்கும் இரண்டு மூன்று மணி நேரமாவது இருந்தால்தான் இது சாத்தியம். இல்லையென்றால் திண்டாட்டம்தான்.
    முடிந்தால் நன்றாக வியர்க்கும் வரை உடற்பயிற்சி செய்வதும் நல்லது.

  2. அழுக்கான சட்டை, பேன்ட் போட்டாலும் உள்ளாடைகள், காலுறைகளை இரண்டாவது நாள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக காலுறைகளை ஒரு நாள் அணிந்த பிறகு துவைத்து விட வேண்டும்.

  3. தினமும் ஷூஸ் அணியும் வழக்கம் இருந்தால், குறைந்தது இரண்டு சோடி காலணிகளை பயன்படுத்த வேண்டும். ஒரே காலணியை ஆறு நாளும் தொடர்ந்து அணிந்தால், காலணி உறிந்து கொள்ளும் வியர்வை முற்றிலும் வெளியேற இடைவெளி இல்லாமல் துர்நாற்றம் உருவாக ஆரம்பிப்பதோடு காலணியும் சீக்கிரம் கெட்டுப் போய் விடும்.

  4. சாப்பிட்ட பிறகு நன்றாகக் கொப்பளித்து விடும் நமது நல்ல பழக்கம் பல் ஆரோக்கியத்துக்கு பெரிதும் உதவுகிறது. சாப்பாட்டு வேளையைத் தள்ளிப் போட்டு வெறும் வயிற்றோடு இருப்பதைத் தவிர்க்க வேண்டும். மதியம் சாப்பிடவில்லை என்றால் நான்கு மணிக்கெல்லாம் வயிற்றின் உள்வாசனைகள் எல்லாம் வாய் வழியே வெளிவர ஆரம்பித்து விடுகின்றன.

பில்கேட்சும் பிச்சைக்காரனும் (economics 29)

  • 'கேகே நகர் அருகில் நடைபாதையில் ஒரு மூலையில் அடுப்பு, சில பாத்திரங்கள். கணவனும் மனைவியும் கூலி வேலைக்குப் போய் காசு கொண்டு வந்தால் மாலையில் உலை கொதித்துக் குழந்தைகளுக்குச் சாப்பாடு. ஒரு நாள் உடம்பு சரியில்லை என்றால், வயிற்றுக்கு ஈரத்துணிதான்' என்று அன்றாடம் கஞ்சி காய்ச்சும் கோடிக் கணக்கானவர்கள் ஒரு பக்கம்.

  • மகன்களின் திருமணத்துக்காக ஊரையே அலங்கரித்து ஐநூறு கோடி ரூபாய் செலவளித்து இந்தித் திரைப்பட உலகையும், அரசியல் அரங்கையும் வரவழைத்துக் 11,000 விருந்தினர்களுடன் கொண்டாடிய சகாரா குழும தலைவர் சுப்ரதா ராய் இன்னொரு பக்கம் .

ஏன் இவ்வளவு வேறுபாடுகள்? வாழ்க்கைத் தரங்கள் எப்படி மாறுபடுகிறன? ஏன் சிலருக்கு நாள் வருமானம் நூறு ரூபாய்க்குள் இருக்கிறது, சிலருக்கு சில கோடிகளாக இருக்கிறது?

கடற்கரையில் கடலை விற்றால் பத்து ரூபாய் ஆதாயமும், ரிலையன்ஸ் பெட்ரோல் விற்றால் ஆயிரக்கணக்கான் ஆதாயமும் கிடைப்பது ஏன்?

சென்னை நுங்கம்பாக்கத்தில் நிலத்தின் விலையும் திருநெல்வேலி தாண்டி பொட்டல் காட்டில் நிலத்தின் விலையும் ஏன் வேறுபடுகின்றன?

சம்பள வேறுபாடுகளைத் தீர்மானிப்பவை

  • இருதய அறுவைச் சிகிச்சை செய்யும் மருத்துவர்கள் இருபது ஆண்டுகளுக்கு மேலாகப் படித்து, பல ஆண்டுகள் அனுபவம் ஈட்டி வருவதால் தேவை அதிகமாக அதிகமாக புதிதாக நிபுணர்கள் எளிதில் உருவாகி விட முடியாது.
    நவீன வாழ்க்கை முறை, மருத்துவ முன்னேற்றங்களினால் இருதய சிகிச்சை நிபுணர்களின் தேவையும் அதிகரித்துக் கொண்டே போக அவர்களுக்குக் கிடைக்கும் சம்பளம் அதிமாக இருக்கிறது. - தேவை உயர்ந்து கொண்டே போக, வழங்கல் அதிகமாக முடியாத துறை.

  • கடற்கரையில் கடலை சாப்பிடுபவர்களின் எண்ணிக்கைக்கேற்ப அரைக் கால் சட்டை போட்ட கடலை விற்கும் பையன்கள் எத்தனை வேண்டுமெனறாலும் கூடிக் கொள்ளலாம். பல ஆண்டுகள் படிப்பில் முதலீடு தேவையில்லாத வேலையில் உழைப்புக்கான ஊதியமும் குறைவு. - தேவைக்கேற்ப வழங்கல் அதிகமாகிக் கொள்ளும் வேலை.

  • இணைய வசதி வந்த பிறகு மொழிபெயர்ப்பு சேவையின் சந்தை அளவு விரிந்து விட்டது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஜெர்மனும் ஆங்கிலமும் தெரிந்த தமிழருக்கு சென்னையில் மொழிபெயர்ப்பு வாய்ப்புகள் கிடைப்பது மாக்ஸ்முல்லர் பவன் மூலம் மட்டுமே இருந்திருக்க வேண்டும்.

    இன்றைக்கு இணையத்தின் மூலம் உலகின் எந்த மூலையிலிருந்தும் தேவைக்குச் சேவை அளிக்கும் வாய்ப்புக் கிடைக்க சென்னையில் இருக்கும் மொழிபெயர்ப்பாளருக்கு வருமானம் அதிகரிக்கிறது.
செயற்கையான சம்பள மாற்றங்கள்

  1. இப்படி ஒவ்வொரு துறையிலும் தமது சம்பள வீதத்தை அதிகரித்துக் கொள்ள முனைகிறார்கள் தொழிலாளர்கள். தொழிற்சங்கங்கள் அமைப்பதன் மூலம், சங்க உறுப்பினர் மட்டும்தான் வேலைக்கு வைத்துக் கொள்ள அனுமதிப்போம் என்று வழங்கலை மட்டுப் படுத்தி தொழிற்சாலையில் கிடைக்கும் ஊதியத்தை உயர்த்திக் கொள்கிறார்கள்.

  2. சில ஆண்டுகள் பணி செய்யும் CA ஒருவரிடம் வேலை பார்த்து, CA தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால்தான் தணிக்கையாளர் ஆகலாம் என்று விதி அமைத்து Chartered Accountant பணிக்கு வருபவர்களின் எண்ணிக்கையை கட்டுப்பாட்டுக்குள் வைக்கிறார்கள்.

  3. மறுபுறம் வேலை கொடுப்பவர்கள் எதிர்மறையான வேலைகளில் இறங்குகிறார்கள். அமெரிக்காவில் தகவல் தொழில் நுட்ப துறையில் சம்பளங்கள் மிக அதிகமாக ஏறிக்கொண்டிருப்பதைத் தடுக்க H1 விசா என்ற பிரிவில் இந்தியாவிலிருந்து ஆயிரக்கணக்கான பேரை அமெரிக்காவுக்கு வர அனுமதி பெற்று அமெரிக்க நிறுவனங்கள் தமது சம்பளச் செலவுகளைக் குறைக்க முயற்சி செய்தன.

அரசின் கொள்கைகளும் சம்பள அளவைத் தீர்மானிக்கின்றன.
  • எல்லாக் குழந்தைகளுக்கும் பதினைந்து வயது வரைக் கட்டாயக் கல்வி என்று முன்னேறும் பார்வை கொண்ட சமூகங்கள் தீர்மானித்துள்ளன. பத்து ஆண்டுகளாவது கல்வியில் முதலீடு செய்து மக்களின் திறமையை வளர்த்து விட்டால் திறன் குறைந்த வேலையில் குறைந்த சம்பளத்தில் வறியவர்களாக வாழும் நிலையைத் தவிர்க்கலாம்.

  • குறைந்த பட்ச ஊதியம் என்று ஒரு தொகையை சட்டம் மூலம் கட்டாயம் ஆக்குவதன் மூலம் முதலாளிகள் வேறு வழியில்லாத தொழிலாளர்களை ஏய்ப்பதை தடுத்து ஊதிய அளவை உயர்த்துகின்றன அரசுகள்.

  • குழந்தைகளை குறைவான கூலிக்கு வேலைக்கு அமர்த்துவதன் மூலம் சம்பளச் செலவைக் குறைக்க முயற்சி செய்வதும் சட்ட விரோதம்.

  • ஒரே வேலை செய்யும் பெண்களுக்கும் ஆண்களுக்கும் வேறு வேறு ஊதியம் கொடுப்பது போன்ற தட்டிக் கேட்க முடியாதவர்களை ஏய்க்கும் போக்கை ஒரே வேலைக்கு ஒரே ஊதியம் என்று சட்டங்கள் இயற்றுகின்றன.
சரி, பில் கேட்சுக்கு ஏன் இவ்வளவு வருமானம்?

செவ்வாய், அக்டோபர் 10, 2006

மாற்றுவழிப் பாதை - ஓப்பன் ஆபிஸ்

http://kaniporul.blogspot.com/2010/08/blog-post_4973.html

பின்னூட்ட பரிசு அறிவிப்பு

பொருளாதாரம் பற்றிய தொடரில் இடப்பட்ட பின்னூட்டங்களின் ஐந்தாவது வாரத் தொகுப்பு.

பொருளாதாரம் பற்றிய தொடருக்கான சிறந்த பின்னூட்டத்துக்கு பொருளாதாரம் தொடர்பான புத்தகங்கள், அல்லது விரும்பிய புத்தகங்களை புத்தகக் கடையில் வாங்கிக் கொள்ளுமாறு பரிசுக் கூப்பன் அளிப்பது நல்லது என்ற கருத்தை ஏற்று இந்த வாரம் முதல் (அக்டோபர் 11 முதல் தொடங்கும்) சிறந்த பின்னூட்டத்துக்கு 250 ரூ மதிப்புள்ள பரிசு கூப்பன் அளிக்கப்படும்.

சனி, அக்டோபர் 07, 2006

போட்டி நிலைகள் (economics 28)

இரண்டு அல்லது ஒரு சில நிறுவனங்களே போட்டி போடும் துறைகளில் விலைப்போட்டிகள் சூழ்நிலையைப் பொறுத்து வெவ்வேறு உருவெடுக்கலாம்.

1. எதிராளி என்ன செய்தாலும் நான் இதைச் செய்தால் போதும் என்று தெளிவான தேர்வு இருக்கும் நிலை (dominant strategy). வகுப்பில் முதல் மாணவனாக இருக்க வேண்டும் என்று திட்டமிட்டால், அடுத்தவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்க ஒரே வழி நூற்றுக்கு நூறு வாங்கி விடுவதுதான். ஒரு மதிப்பெண் குறைந்தாலும், நம்மை விட யாருக்கு அதிகம் என்று பார்க்க வேண்டியிருக்கும்.

தன்னுடைய பொருளையும், சேவைகளையும் தனிப்படுத்திக் காட்டி தனக்கு ஏற்ற விலையை நிர்ணயித்துக் கொள்ள எல்லா நிறுவனங்களும் முயற்சி செய்கின்றன. பத்மா சொல்வது போல தரத்தை உயர்த்துதல், சிறப்பு அம்சங்களை சேர்த்தல், நடிகர்கள், விளையாட்டு வீரர்களை விட்டு விளம்பரம் செய்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன. சுருக்கமாக தனக்கென ஒரு சிறிய மோனோபொலி சந்தையை உருவாக்க முனைகின்றன. அந்த நிலையில் போட்டியாளரைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை.

2. என்னதான் செய்தாலும் விலையைப் பொறுத்து வாடிக்கையாளர்கள் போட்டியாளர்களின் பொருட்களையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்ற நிலை இருக்கும் போது ஒருவருக்கொருவர் போட்டி (price war) போட்டுக் கொண்டு விலையைக் குறைத்து இழப்பை சந்திக்கலாம். போட்டி போடும் போது எதிராளி இழப்பைத் தாங்க முடியாமல் நிறுவனம் கவிழ்ந்து விட்டால், அப்புறம் நாம் விலையை விருப்பம் போல ஏற்றிக் கொள்ளலாம் என்ற கணக்கு இருக்கலாம்.

தனக்குப் போட்டியாக இருந்த நெட்ஸ்கேப் நிறுவனத்தை தனது வலையுலாவி இன்டர்நெட் எக்ஸ்புளோரரை இலவசமாகக் கொடுக்க ஆரம்பித்ததன் மூலம் ஒழித்துக் கட்டிய மைக்ரோசாஃப்டின் திட்டம் விலைப் போட்டியில் வெற்றி பெற்ற ஒரு கதை.

பொதுவாக போட்டியில் ஈடுபடும் எல்லா நிறுவனங்களும் சூடுபட்டு ஒதுங்கத்தான் நேரும்.

3. எழுதப்படாத ஒப்பந்தமாக ஒரு நிறுவனம் விலை ஏற்றத்தை அறிவித்த உடனேயே மற்ற நிறுவனங்களும் அதற்கு ஒத்த விலையேற்றத்தை அறிவிப்பதை சில துறைகளில் பார்க்கலாம். இதுதான் நீண்ட கால நோக்கில் எல்லோருக்கும் நல்லது என்ற புரிதலுடன் எல்லோரும் ஆட்ட விதியைக் கடை பிடிப்பார்கள். (price leadership).

ஸ்டீல் துறையில் டாடா விலை ஏற்றத்தை அறிவித்த ஓரிரு நாட்களில் பிற நிறுவனங்களும் அதே அளவுக்கு விலையை ஏற்றிக் கொள்வார்கள். முன்பெல்லாம் விகடன், கல்கி, குங்குமம் என்று எல்லா தமிழ்ப் பத்திரிகைகளும் ஒரே விலையில் விற்கும். குமுதம் மட்டும் விலை கொஞ்சம் குறைவாக இருக்கும். ஒரு நிறுவனம் விலை உயர்வை அறிவித்த அடுத்த இரண்டு வாரங்களுக்குள் ஒவ்வொன்றாக எல்லாப் பத்திரிகைகலும் விலை ஏற்றம் அறிவித்து விடுவது வழக்கம்.

4. குறுகிய காலத்தின் விற்பனையைப் பெருக்க வேண்டும், விலையைக் குறைத்தால் எதிராளியை உசுப்பி விட்டு விலைப் போட்டி வந்து விடக்கூடாது என்ற நிலைமைகளில், அதே பேக்கில் அதிக அளவு, சோப்பு வாங்கினால் பல் பொடி இலவசம், பரிசுப் போட்டிகள் என்று விலை சாராத ஆதாயங்களை அளித்து வாடிக்கையாளர்களைக் கவர முயற்சிப்பார்கள்.

வெள்ளி, அக்டோபர் 06, 2006

விலைப் போட்டிகள் (economics 27)

ஸ்டீபனுக்கு மனக் கணக்கு இப்படிப் போகும். 'நான் குற்றத்தை ஏற்றுக் கொண்டு கோபாலனைக் காட்டிக் கொடுத்தால், குறைந்தது ஆறு மாதங்கள் அதிக பட்சம் பத்து ஆண்டு ஜெயில் கிடைக்கும். நான் குற்றத்தை ஏற்றுக் கொள்ளா விட்டால் ரெண்டு வருஷம் ஒரு பக்கம், ஆனால் இன்னொரு பக்கம் நான் இருபது வருஷம் ஜெயிலில் களி தின்ன அந்தப் பயல் ஆறு மாசத்தில் வெளியே போய் விடுவான்.'

இரண்டு பேருக்குமே அடுத்தவர் என்ன செய்யப் போகிறான் என்பதைத் தெரிந்து கொள்ள வழி இருந்தால் இரண்டு பேருமே குற்றத்தை மறுத்து, இரண்டு ஆண்டுகளில் இருவரும் வெளியே போய் விடலாம்.

அப்படித் தெரிய வழி இல்லாத நிலையில் ஒவ்வொருவரும் தனக்கு எந்தத் தேர்வில் தீங்கு மிகக் குறைவோ அதில் இருந்து விடுவார்கள். ஒப்புக் கொள்ளா விட்டால், அதிக பட்ச தீங்கு இருபது ஆண்டு சிறை, ஒப்புக் கொண்டால் மிஞ்சிப் போனால் பத்து ஆண்டுகள். அடுத்தவன் என்ன செய்தாலும் நான் குற்றத்தை ஏற்றுக் கொண்டால் பத்து ஆண்டுகள் சிறையோடு போய் விடும்.

பொன்ஸ் பின்னூட்டத்தில் சொன்னது போல:
Quote:
1. ஸ்டிபனுக்கும் அவனது கூட்டாளிக்கும் இடையிலான நட்பு பல நாள் நட்பாக இருந்தால், நம்பகத் தன்மை இருப்பின், ஸ்டீபன் குற்றத்தை ஒப்புக் கொள்ள மாட்டான்.

2. சக நம்பிக்கை இல்லாத போதும், ஸ்டீபனுக்கு அந்தக் கூட்டாளியிடம் பேச்சு வார்த்தை நடப்பது தெரியும். அதே போல் அந்தக் கூட்டாளிக்கும் இவ்விதமான பேச்சுவார்த்தை ஸ்டீபனுடன் நடப்பது தெரியவருமா என்பது ஸ்டிபனுக்குத் தெரிய வேண்டும். அவ்வாறு அவனுக்கும் தெரிந்திருக்கும் என்று தெரிந்தாலும் ஸ்டீபன் குற்றத்தை ஒப்புக் கொள்ளமாட்டான்.

3. கூட்டாளியின் மீது நம்பிக்கை இல்லாத பட்சத்தில், அத்துடன் கூட்டாளிக்கு ஸ்டீபனுடனான பேச்சுவார்த்தை தெரிய வாய்ப்பில்லை என்று ஸ்டீபன் நம்பும் போதில், குற்றத்தை ஒப்புக் கொண்டுவிடுவான்.
UnQuote

இதே போல வணிக நிறுவனங்களும் போட்டியாளருடன் கூட்டுச் சதி செய்ய முடியாத நிலைமையில், விலையை ஏற்றவோ, இறக்கவோ முடியாது. இதே விலையில் விற்போம், எதிராளி ஏதாவது மாற்றினால் நாம் அதற்கு ஏற்ப பார்த்துக் கொள்ளலாம் என்று இரண்டு பேரும் அடுத்தவரின் முதல் நகர்த்தலுக்குக் காத்திருப்பார்கள்.

நாம் விலையைக் குறைத்து விற்பனையைப் பெருக்கப் போய் எதிராளியும் விலை குறைக்க அதற்குப் போட்டியாக நாம் இன்னும் விலை குறைக்க ஒரு விலைப் போர் மூண்டு இரண்டு நிறுவனங்களுமே பெரும் இழப்பைச் சந்திக்க நேரிடலாம்.

செல்லிடத் தொலைபேசிச் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டு , நான்காவது உரிமம் பெற்ற நிறுவனம் சந்தையில் நுழைந்த போது, இது போல விலைப் போர்கள் நடந்தன. 2002ல் சென்னையில் ஹட்ச் அறிமுகமான பிறகு ஏர்டெல்லும், RPGயும் புதிய நிறுவனத்துடன் போட்டி போட்டு குறைந்த விலைகளை அறிவித்தன.

பிஎஸ்என்எல் சேவை தொடங்கிய பிறகு விலை அடிப்படையில் போட்டி போடுவது கட்டுப்படியாகாமல் போனது. ஒரு நிலையில் இந்த விலைப்போட்டியிலிருந்து விலகிக் கொண்டு தனது சேவை மூலம் சம்பாதிக்க முடிவு செய்தது ஹட்ச் என்பது வெளியிலிருந்து பார்த்த எனக்குப் புரிந்தது.

இப்போது குறைந்த செலவு விமானச் சேவை வழங்கும் நிறுவனங்கள் விலைப் போட்டியில் இறங்கி பெரும் இழப்பைச் சந்திக்கும் சூழலில் உள்ளன. இந்த ஆண்டு மட்டும் 1200 கோடி ரூபாய் ஒட்டு மொத்த இழப்பு ஏற்படும் என்று சொல்கிறார்கள்.

உற்பத்திச் செலவுகள், மூலப் பொருள் விலைகள் ஏறி விட்ட நிலையில், ஒரு நிறுவனம் விலையை ஏற்றினால் போட்டி நிறுவனம் 'குறுகிய இழப்பைச் சகித்துக் கொள்வோம், விலை உயர்வால் எல்லா வாடிக்கையளர்களும் நம் பக்கம் வந்து விடட்டும், அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்.' என்று தன்னுடைய விலையை ஏற்றா விட்டால் விலை ஏற்றிய நிறுவனத்துக்கு இழப்பு ஏற்படும்.

இப்படியே போனால் இரண்டு பக்கமுமே அடுத்தவர் முதல் அடி எடுத்து வைக்கட்டும் என்று காத்திருக்க விலை எப்போதுமே மாறாது. ஆனால் இழப்பில் தொழில் நடத்த முடியாது. இதற்கு என்ன செய்யலாம்?

வியாழன், அக்டோபர் 05, 2006

பின்னூட்டத்துக்கு பரிசு பெறுபவர்

சென்ற வாரம் பின்னூட்டத்துக்கான பரிசு பெறுபவர் பொன்ஸ். அவருக்கு லூயி பிஷரின் Mahatma Gandhi (Biography) பரிசாக அனுப்பி வைக்கப்படும். வாழ்த்துக்கள்

பின்னூட்டங்களை மதிப்பிட்டு சிறந்த பின்னூட்டத்தை தேர்ந்தெடுத்த சிவஞானம்ஜி ஐயாவுக்கும், துளசி கோபால் அக்காவுக்கும் நன்றிகள்.

பின்னூட்டங்களின் அட்டவணை இங்கே.

கைதிகளின் குழப்பம் (economics 26)

முழுமையான போட்டி நிலவும் சந்தையில் தனிப்பட்ட விற்பனையாளர் விலையை மாற்ற முடியாது. போட்டியே இல்லாத ஏகபோக சந்தையில் ஒரே நிறுவனம் தனக்குச் சாதகமான விலையை அமைத்துக் கொள்ளும். தன் நிறுவனக் கணக்குகளை மட்டும் பார்த்து முடிவு செய்து கொள்ளலாம்.

ஒரு சந்தையில் இரண்டே இரண்டு நிறுவனங்கள் இருந்தால் என்ன நடக்கும்?

டாட்டா ஸ்டீலின் எஃகுப் பொருட்களின் விலை டன்னுக்கு இரண்டாயிரம் ரூபாய் என்று வைத்துக் கொள்வோம். போட்டியாளர், விசாக் ஸ்டீலும் அதே விலைக்கு விற்கிறது. இரண்டு பொருட்களின் தரம், பண்புகளில் பெரிய வேறுபாடுகள் இல்லை.

டாட்டா ஸ்டீலுக்கு விலையை மாற்ற வாய்ப்பு இருக்கிறதா? டாட்டா ஸ்டீல் விலையை 1200 ரூ ஆக ஏற்றி விட்டால், விசாக் ஸ்டீல் விலையை ஏற்றாமல் அதே 1000 ரூ விலையை வைத்துக் கொள்ளலாம். எல்லோரும் விலை அதிகமான டாட்டா ஸ்டீலை விட்டு விட்டு விசாக் பக்கம் வந்து விடுவார்கள். டாடாவுக்கு பெரும் இழப்பு ஏற்படும்.

டாட்டா விலையை 900 ரூ ஆகக் குறைத்தால் தன்னுடைய வாடிக்கையாளர்களை இழக்க மனமில்லாமல் விசாகும் விலையைக் குறைத்து விடும். இரண்டு பேரும் குறைந்த விலையில் விற்று ஆதாயம் குறைவதுதான் மிச்சம்.

இந்த நிலையில் என்ன நடக்கும்?

இரண்டு பேர் சேர்ந்து ஒரு கொள்ளை அடித்து விடுகிறார்கள். காவலர்கள் இரண்டு பேரையும் பிடித்து தனித்தனியாக அடைத்து விடுகிறார்கள்.

ஆய்வாளர் முதலாமவர் ஸ்டீபனிடம் வருகிறார். "நீ மட்டும் குற்றத்தை ஒப்புக் கொண்டால் உன்னை அரசுத் தரப்பு சாட்சியாக ஏற்றுக் கொண்டு ஆறு மாத ஜெயிலோடு விட்டு விடுவோம். உன்னுடைய கூட்டாளி கோபாலனுக்கு இருபது ஆண்டுக்கு குறையாமல் கிடைக்கும்.

நீ ஒப்புக் கொள்ளாமல் அவன் ஒப்புக் கொண்டால் அவனுக்கு ஆறு மாதங்கள், உனக்கு இருபது ஆண்டுகள்."

"சரி, இரண்டு பேருமே ஒப்புக் கொள்ளவில்லை என்றால்? ..."

"ஆளுக்கு இரண்டு ஆண்டுகள் கிடைக்கும். ஆனால் நல்லா பார்த்துக்கோ, நீ வாயை மூடி இருந்து உன் கூட்டாளி உன்னைப் போட்டுக் கொடுத்து விட்டால், உனக்கு இருபது ஆண்டுகளுக்கு ஜெயில் களிதான், அவன் ஆறு மாதங்களில் ஓடி விடுவான்."

"அந்தப் பயல நம்ப முடியாதுதான், சரி, நான் ஒப்புக் கொண்டு அவனும் ஒப்புக் கொண்டால் என்ன ஆகும்"

"இரண்டு பேருக்குமே ஆளுக்கு ஐந்து வருஷம் கிடைக்கும்."

கோபாலனிடமும் இதே மாதிரி இன்னொரு ஆய்வாளர் பேசிக் கொண்டிருக்கிறார் என்றம் ஸ்டீபனுக்குத் தெரிகிறது.

இப்போது ஸ்டீபன் என்ன முடிவெடுப்பான்?

புதன், அக்டோபர் 04, 2006

சந்தை மட்டுறுத்தல் (economics 25)

சந்தையில் தனது ஆக்கிரமிப்பு சக்தியால் உயர் விலையில் குறைந்த அளவு பொருட்களை விற்கும் போக்கைத் தடுக்க அரசுகள் பல முறைகளைக் கையாளலாம்.

1. சில நிறுவனங்கள் மட்டுமே செயல்படும் சந்தையில், அவை கூட்டுச் சேர்ந்து விலையைத் தீர்மானிப்பதை சட்டவிரோதமாக்கல், நிறுவனங்கள் இணைந்து ஏகபோகம் உருவாவதைத் தடுப்பது போன்ற ஏகபோக எதிர்ப்புக் கொள்கைகள் மூலம் சந்தையில் போட்டி விலை நிலவச் செய்யலாம்.

இதற்கான Anti Trust சட்டங்கள் அமெரிக்காவில் மிகப் பிரபலமானவை. அவற்றின் அடிப்படையில் Bell என்று நாடெங்கும் கோலோச்சி வந்த தொலைதொடர்பு நிறுவனத்தை பல நிறுவனங்களாகப் பிரித்த வழக்கு மிகப் பிரபலமானது. AT&T என்ற நிறுவனம் அப்படி உருவான குழந்தை பெல்களின் வழி வந்ததுதான்.

இதே சட்டங்களின் கீழ்தான் மைக்ரோசாஃப்டும், நீதி மன்றத்தில் குற்றவாளி என்று தீர்ப்பு பெற்றது. அதன் பிறகு தண்டனையிலிருந்து தப்பி விட்டது வேறு விஷயம்.

இந்தியாவில் Monopolies and Restrictive Trade Practices (MRTP) Act என்று ஒரு சட்டம் இருந்தது. அதன் கீழ் அமைக்கப்பட்ட ஒரு கண்காணிப்பு ஆணையம் ஏதாவது துறையில் சந்தை ஆதிக்கம் ஒரே நிறுவனத்திடம் குவிவதற்கான நடவடிக்கைகளை மட்டுப்படுத்துவதற்கான அதிகாரத்துடன் செயல்பட வேண்டும். சமீப காலங்களில் இதன் சுவடே காணவில்லை.

சுமங்கலி கேபிள் நிறுவனத்தின், சன் டிவியின் ஆதிக்கச் செயல்களுக்கு MRTP சட்டம் சரியான மருந்தாக இருந்திருக்கும்.

2. சிறிய நிறுவனங்கள் சந்தையில் நுழைவதை ஊக்கப்படுத்துதல், வெளிநாட்டுப் பொருட்களை உள்ளே அனுமதித்து போட்டியை கூட்டுதல், இவற்றின் மூலமும் சந்தையில் சில நிறுவனங்கள் அதிக ஆதிக்கம் செலுத்தவதைக் குறைக்கலா.

இந்தியாவில் செல் தொலைபேசிச் சேவைகளை அனுமதிக்கும் போது, ஒவ்வொரு வட்டத்திலும் குறைந்த பட்சம் இத்தனை நிறுவனங்கள் செயல்பட வேண்டும் என்று திட்டமிட்டு பல நிறுவனங்களைப் போட்டியிட அனுமதித்தது இதற்கு ஒரு எடுத்துக் காட்டு.

தனியார் நிறுவனங்களின் போட்டியை ஊக்குவித்தல், அரசு நிறுவனம் ஒன்றையும் போட்டியில் இறக்குதல், தன்னிச்சையான கண்காணிப்பு மூலம் சந்தைய நெறிப்படுத்துதல் இவற்றுக்கான மிகச் சிறந்த, வெற்றிகரமான கொள்கையாக இது அமைந்தது. இதன் பலனாக இன்றைக்கு செல் தொலைபேசி சேவைகள் பரவலாகவும் மலிவாகவும் கிடைக்கின்றன.

3. TRAI (Telecom Regulatory Authority of India) தொலை தொடர்பு நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவது போல ஒவ்வொரு துறையிலும் அரசை முற்றிலும் சாராத தன்னிச்சையான மட்டுறுத்தல் அமைப்பு ஒன்றை உருவாக்கி விலை, தரம் மற்றும் போட்டி நடவடிக்கைகளை கண்காணிப்பது இன்னொரு வழி.

இப்போது தொலைக்காட்சி ஓடைகளுக்கு அதிக பட்ச விலை மாதத்துக்கு 5 ரூ என்று கட்டுப்படுத்தியது மட்டுமில்லாமல் கடந்த சில ஆண்டுகளில் தொலை பேசிக் கட்டணங்களையும், தொழில்நுட்ப சிக்கல்களையும் ஒழுங்குபடுத்தி நேர்மையான, நியாயமான சந்தையாக செயல்பட வைத்தது TRAIயின் பணி.

4. ஏகபோக அதிகாரத்தைத் தவிர்க்க முடியாத துறைகளில் அரசே அதை ஏற்று நடத்துவது குடிநீர் வினியோகம், காவல் பணிகள் போன்றவற்றில் நடக்கிறது. முடிந்த வரை அரசு ஈடுபாட்டைத் தவிர்த்து ஒழுங்குபடுத்தும் வழியைக் கடைபிடிப்பது கடந்த இருபது ஆண்டுகளில் நடைமுறையாக உள்ளது.

தனியார் மயமாக்கம், அரசு நிறுவனங்ளில் தனியார் ஈடுபாட்டை வரவேற்பது போன்றவை எண்பதுகளில் தாட்சர் தலைமையிலான இங்கிலாந்தில் புது வேகம் பெற்றன. அதே அலை இந்தியாவுக்குள்ளும் வீசி, வலது சாரி பாஜக ஆட்சியின் கீழ் தனியார் மயமாக்கலுக்கு ஒரு அமைச்சகத்தையே அமைத்திருந்தார்கள்.

கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர் ஒருவர் "முதலீட்டைக் குறைக்கும் குழுமம் நாசமாப் போகட்டும்" என்று 2004 தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தொலைக் காட்சியில் சொன்னது மிகப் பிரபலமானது.

5. ஏகபோக அதிகாரத்தினால் விளையும் ஆதாயத்தை வரி விதிப்பின் மூலம் அரசே எடுத்துக் கொள்ளும் அணுகு முறையில் அநியாய ஆதாயம் எடுத்துக் கொள்ளப்பட்டு விட்டாலும், நுகர்வோருக்கு அதிக விலையும், குறைவான அளவும் கிடைப்பதன் விளைவுகளை தவிர்க்க முடியாதுதான்.

இது கிட்டத்தட்ட சமோசா சாப்பிட்டு விட்டு அதன் பிறகு ஜெலூசில் போட்டுக் கொள்வது போல பிரச்சனையைத் தீர்க்காமல் அதன் விளைவுகளை மட்டும் சரி செய்ய முயல்வது போலாகி விடும்.

6. கடைசியாக, ஏகபோக சந்தையில் விற்கும் விலையை அரசே கட்டுப்படுத்துவது இன்னொரு வழி. சந்தை விலையை எந்த அரசும் துல்லியமாகக் கணக்கிட்டு விலைக் கட்டுப்பாடு செய்ய முடியாது. அப்படிச் செய்ய முயலும் போது தேவையற்ற வரிசைகளும், தட்டுப்பாடுகளும், அடிதடிகளும்தான் மிஞ்சும்.

சோவியத் ரஷ்யாவில் நடைமுறையில் இருந்த விலைக் கட்டுப்பாடுகள் சந்தி சிரித்த கதை எல்லோருக்கும் தெரிந்ததே. நம்ம ஊரிலும் நியாய விலைக் கடைகளில் நிற்கும் நீண்ட வரிசைகள், கிடைக்கும் தரக் குறைவான பண்டங்கள், நடக்கும் ஊழல்கள் எல்லாம் தவறாகப் போன விலைக் கட்டுப்பாடுகளின் விளைவுகள்தான்.

செவ்வாய், அக்டோபர் 03, 2006

பரிசுப் பின்னூட்டங்கள் - 4

போன வாரம் economics என்ற தலைப்பிலான பதிவுகளுக்கு வந்த பின்னூட்டங்களின் அட்டவணை இந்தச் சுட்டியில் காணலாம். அட்டவணை

சிவஞானம்ஜி ஐயாவும் துளசி அக்காவும் மதிப்பீடு செய்து பரிசுக்குரிய பின்னூட்டம் தேர்ந்தெடுக்கப்படும்.

இது வரை வெளியான எல்லா பதிவுகளின் தொகுப்பு கீழே:

  1. Economics - 1
  2. விடை தேடும் கேள்விகள்?
  3. விடை தேடும் முறைகள்
  4. வேலைகளைப் பிரித்துக் கொள்ளுதல்
  5. விடை கொடுக்கும் மந்திரக்கோல்
  6. பன்னாட்டு வர்த்தகம்
  7. அரசாங்கம் தேவையா?
  8. கொடுத்தலும் வாங்கலும்
  9. என்ன விலை கொடுப்பது?
  10. என்ன விலைக்கு விற்பது?
  11. நடைமுறைக்கு உதவுமா?
  12. விவசாயக் கொடுமைகள்
  13. வரிகளும் சாவும்
  14. கடைசி அலகு
  15. கொசுறு மதிப்பு

  16. யாருக்காக?

  17. உற்பத்திச் சங்கிலிகள்

  18. தொழில் நிறுவனங்கள்

  19. போட்டிச் சந்தை

  20. அரைகுறைப் போட்டி

  21. போட்டியில்லா விட்டா

  22. நடைமுறையில் போட்டி

  23. சந்தை வலிமையின் விளைவுகள்