புதன், மே 17, 2006

இசுரேலுக்கு வயது 58

தன் வீட்டிலிருந்து துரத்தப்பட்டு வெளிநாட்டில் வாழும் ஒரு அகதியின் புலம்பல் இன்றைய இந்து நாளிதழில் வெளியாகி உள்ளது. இசுரேல் என்ற நாட்டுக்கு 15ம் தேதி 58 வயது. அதை இசுரேலியர்கள் கொண்டாடும் வேளையில் இந்த அகதியைப் போல பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் கசப்பான நினைவுகளுடன், தமது வாழ்வைத் தொலைத்த வலியுடன், சொந்த நாட்டில் அகதிகளாக வாழ்ந்து வருகிறார்கள்.

அவர்களது சோகத்தில் நாமும் பங்கு கொள்வோம்.

"மெரிட்"டும் இடஒதுக்கீடும்

இட ஒதுக்கீட்டை எதிர்த்து ஆங்கில செய்தி ஓடைகளில் நடைபெறும் விவாதங்களில் அடிக்கடி குறிப்பிடப்படும் ஒன்று இட ஒதுக்கீட்டால் தரம் குறைந்து விடும்' "மெரிட்" மாணவர்கள் "மெரிட்" இல்லாத மாணவர்களால் வஞ்சிக்கப்படுவார்கள் என்று மேல் தட்டு பையன்களும் பெண்களும் நாசூக்கான ஆங்கிலத்தில் பேசுகிறார்கள். இணைய விவாத மையங்களிலும், அஞ்சல் குழுக்களிலும் இதே வாதம் முன் வைக்கப்படுகிறது.

சரி, "மெரிட்" எனப்படும் தகுதி என்பது என்ன? அதை வரையறுத்தது யார்? பள்ளி இறுதி வகுப்பில் எடுக்கும் மதிப்பெண்களும், நுழைவுத் தேர்வில் எடுக்கும் மதிப்பெண்களும் மட்டும்தான் தகுதியைத் தீர்மானிக்கப் பயன்படுத்தப்பட வேண்டுமா?

மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில், ஒருவர் ஓரிரு ஆண்டுகள் பணி அனுபவத்துக்குப் பிறகு விண்ணப்பித்தால் அந்த விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள். யாரும் யாருக்கும் குறைந்தவர்கள் கிடையாது. இறுதித் தேர்விலும், நுழைவுத்தேர்விலும் மதிப்பெண் பெறும் திறமை ஒரு குழுவினரிடம் இருந்தால், மற்ற குழுவினரிடம் (பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர்) சமமான வேறு திறமைகள் இருக்கும். அந்தத் திறமைகளை கணக்கில் எடுத்துத் தகுதியைக் கணக்கிடலாமா?

எடுத்துக்காட்டாக, ஒரு விவசாயின் மகன் மண்வெட்டி பிடித்து வேலை செய்யும் திறமை பெற்றிருக்கலாம், அதுவே ஒரு கல்லூரிப் பேராசிரியரின் மகனுக்கு இல்லாமல் இருக்கலாம். ஆனால் இருவருமே "தகுதி"ப் போட்டியில் பேனா பிடித்து காகிதத்தில் எழுதும் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் போட்டியிட வேண்டி இருப்பது எப்படி நியாயம்? விவசாயின் மகனுக்கு மதிப்பெண் குறைந்து விட்டதால் அவருக்கு தகுதி இல்லை என்று எப்படி முடிவு செய்ய முடியும்?

ஆண்டாண்டு காலமாக அனுபவித்து வந்த வசதிகளை பகிர்ந்து கொள்ளும் நேரம் வரும்போது எழுப்பப்படும் வாதங்கள் மிகவும் செயற்கையாக தென்படுகின்றன.

ஆதாயம் தேடும் அவையினர்

அவமானம்!! வெட்கம் கெட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவை உறுப்பினர்கள் ஆதாயம் தரும் பதவிகளை வகிக்கலாம் என்று ஒரு மசோதாவை நிறைவேற்றி உள்ளனர். மக்கள் பிரச்சனைகளைத் தீர்க்க காட்டாத அவசரத்தையும், ஒற்றுமையையும் காட்டி தங்கள் சுயநலத்தை மீண்டும் காட்டி விட்டனர்.

அரசுப் பதவி வகிக்கும் யாரும் நாடாளுமன்ற/சட்ட மன்ற உறுப்பினராகக் கூடாது, உறுப்பினரான பிறகு அமைச்சர் பதவியைத் தவிர வேறு எந்த அரசுப் பதவியையும் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பது நமது அரசியலமைப்புச் சட்டம் தெளிவாக வரையறுத்த நெறி. சொல்லப்போனால் இதை இன்னும் தீவிரமாக்கி, அவை உறுப்பினராக இருக்கும் வரை வெளியில் வேறு எந்தப் பொறுப்பையுமே வகிக்கக் கூடாது என்று மாற்றி இருக்க வேண்டும்.

அவையில் மக்களாட்சிப் பணியாற்றும் போது, அரசிடம் உரையாடும்போது எந்த விதமான பயமோ (பதவி போய் விடுமோ, கிடைக்காதோ என்று), நன்றியோ (கொடுத்த பதவிக்கு) இல்லாமல் உறுப்பினர்கள் அரசைத் தட்டிக் கேட்கும் நிலையில் இருக்க வேண்டும் என்பதுதான் இந்த விதிமுறையின் நோக்கம். பல ஆண்டுகளாக மத்தியிலும், மாநிலங்களிலும் இதைக் கண்டு கொள்ளாமலே வாரியத் தலைவர்களாகவும், புதிய புதிய குழுக்களின் உறுப்பினர்/தலைவர்களாகவும், அவை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு வருவது நடந்து கொண்டு வருகிறது.

இங்கு அரசியலமைப்பு வரையறுத்த உறுப்பினர் பதவி ஏற்றுள்ள இவர்கள் தமது எல்லைகளை தெரியாமல் இருந்தார்கள் என்பதைக் கூட ஏற்றுக் கொள்ள முடியாது. அப்படியே தெரியாமல் இருந்தாலும், தெரியாமல் செய்தாலும் சட்டத்தை மீறினால் தண்டனை என்பது எல்லோருக்கும் பொருந்தும். தவறு நிகழ்ந்த பிறகு முன் தேதியிட்டு தவறு செய்த அனைவரையும் காப்பாற்ற முயல்கிறது இந்த மசோதா.

மூன்று கோரிக்கைகள்:
1. சட்டத்தை மீறிய அனைத்து நாடாளுமன்ற, சட்ட மன்ற உறுப்பினர்களையும் பதவி நீக்கம் செய்து மறு தேர்தல் நடத்த வேண்டும்.
2. அரசியல் சட்டத்தின் நோக்கத்துக்கு விரோதமான இந்த மசோதாவை பொதுமக்கள் அனைவரும் கடுமையாக எதிர்க்க வேண்டும்.
3. அவை உறுப்பினர்கள், அரசுப் பதவி மட்டும் இன்றி வேறு எந்த ஆதாயம் தரும் பொறுப்புகளையும் வகிக்கக் கூடாது என்று சட்டத்தைக் கடுமையாக்க வேண்டும்.

செவ்வாய், மே 16, 2006

ஆயிரம் ஆண்டுகளின் தன்னிகரில்லாத் தலைவன் - 10

காந்தியின் இறப்புக்கு இரங்கல் செய்தி அனுப்பாத ஒரே பெரிய நாடு சோவியத் யூனியனாம். தன்னுடைய வாழ்க்கைக்கு ரஷ்யாவின பெருமையான் கவுன்ட் டால்ஸ்டாயை ஆன்மீக வழிகாட்டியாகக் கொண்ட காந்தி, கடவுளை மறுக்கும் கம்யூனிஸத்தை ஏற்றுக் கொள்ள மறுத்ததே "தோழர்களின்" கோபத்துக்குக் காரணம்.

புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப்படும்

என்ற வள்ளுவர் வாக்குக்கிணங்க வாழ்ந்த காந்தி, மனதில் துர் எண்ணங்களை ஒழித்து நல்ல சிந்தனைகளை வளர்த்திட இறைபக்தியே ஒரே வழி என்று கண்டார். கடவுளை மறுக்கும் ஒரு கோட்பாடு உண்மையை எப்படி அறிந்திருக்க முடியும் என்ற வெறுப்புதான் கம்யூனிசத்தையும், கம்யூனிஸ்டுகளையும் வலுவாக எதிர்க்கவும் கண்டிக்கவும் தூண்டியது.

காந்தியை தமது எதிரிகளாகப் பார்த்தவர்களின் பட்டியல்:

1. கடவுள் இல்லை என்று சொல்லும் கம்யூனிஸ்டுகள்
2. கடவுள் பக்தி கொண்ட இந்து தீவிரவாதிகள்
3. முஸ்லீம்கள், அவர்களை எதிர்க்கும் இந்துக்கள்
4. தாழ்த்தப்பட்டோர்களின் பிரநிதிகள்

ஆனால், இதை எல்லாம் தாண்டி சக மனிதன் மீது தான் கொண்டிருந்த அளவற்ற அன்பினால் கோடிக்கணக்கான, தன் தேசக் குடிமக்களையும், தன்னைப் பார்த்தேயிராத வெளிநாட்டவரையும் கட்டிப்போட்டவர் அந்த மந்திரவாதி.

கத்தியின்றி ரத்தமின்றி ஆங்கில ஏகாதிபத்தியத்தை இந்தியாவின் ஆன்ம சக்திக்கு முன் மண்டியிட வைத்தவர் அந்தப் படைத் தளபதி.

செல்வி ஜெயலலிதாவுக்கு சில ஆலோசனைகள்.

அதிமுக பொதுச் செயலாளரும், ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களுக்கு எனது வணக்கங்கள். ஐந்து ஆண்டுகள் மாநில முதலமைச்சராக இருந்து ஒரு நாளைக்கு 20 மணி நேரத்துக்கு மேல் மக்களுக்காக உழைத்ததாகக் கூறினீர்கள். இப்போது உங்கள் கட்சி எதிர்க்கட்சியாகி விட்டது. ஆட்சி "பரம்பரை" எதிரி மு கருணாநிதியின் கையில் போய் விட்டது.

ஆனால், உங்கள் நாட்களில் அதே 24 மணி நேரங்கள் உள்ளன. அரசின் முழுப்பாரத்தையும் சுமந்த நீங்கள் (ஒப்புக்கு இருந்த அமைச்சர்களின் வேலையையும் நீங்களதான் பார்த்திருப்பீர்கள்!), இப்போது அந்த உழைப்பை பயன்படுத்த சில எண்ணங்கள்.

ஒரு அரசியல் தலைவராக, மக்கள் தொண்டராக, கட்சிப் பொதுச்செயலாளராக நீங்கள் என்னென்ன செய்ய வேண்டியிருக்கிறது? முதலில் ஒவ்வொரு பாத்திரத்துக்கும் குறிக்கோள்களைப் பார்போம்.

1. அரசியல் தலைவர் - இனி வரும் காலங்களில் செல்வாக்கைப் பெருக்கிக் கொண்டு உயர் பதவிகளை அடைய வேண்டும். மாநிலத்தை நாட்டிலேயே முதலாவதாகவும், ஏன், இந்தியாவை உலக அரங்கில் முதலிடம் பிடிக்கச் செய்யவும் உழைக்க வேண்டும்.

2. மக்கள் தொண்டர் - இன்றைய ஆட்சியில் மக்களுக்கு நல்லது கிடைக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் நாட்டு மக்களின் வாழ்வு வளம் பெற வேண்டும்.

3. கட்சிப் பொதுச்செயலாளர் - அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் கணிசமான தொகுதிகளில் கட்சி வெற்றி பெற வேண்டும், அடுத்த சட்ட மன்ற தேர்தலில் கட்சி ஆட்சியைப் பிடிக்க வேண்டும்.

கூட்டணிக் கட்சிகளின் தயவு, இலவசங்களை அறிவித்து மக்களை மகிழ்விக்க முனைவது இவற்றை எல்லாம் நம்பித்தான் போட்டியிட வேண்டும் என்ற நிலை இல்லாமல் அடுத்த தேர்தலை சந்திக்க என்ன செய்ய வேண்டும்? கடைசியில் வாக்கு அளிக்கப் போவது மக்கள்தான். கூட்டணிக்கு திட்டங்கள் தீட்டுவதை விட, மக்களை நேரடியாக அணுகுங்கள். கடைசி நேரத்தில் சூறாவளி சுற்றுப்பயணங்கள் மேற்கொள்ளாமல் அடுத்த ஆண்டுகளில் மாபெரும் மக்கள் தொடர்பு திட்டத்தை செயல்படுத்துங்கள்.

1. தவறாமல் சட்ட சபைக்குச் செல்லுங்கள். முதலமைச்சராக இருந்து எதிர்க் கட்சியினரின் வாய் அடைந்து போகும்படி, புள்ளி விபரங்களை விரல் நுனியில் வைத்திருந்து வாதம் புரிந்த அதே பாணியில் இப்போது, ஆளும் கட்சிக்குக் கிடுக்கிப் பிடி போடுங்கள். ஆளுங்கட்சியினர் நியாயமாக நடந்து கொள்ள மாட்டார்கள் என்று உங்களுக்குத் தோன்றினாலும், 60 உறுப்பினர்களின் துணையோடு நீங்கள் எதையும் சமாளிக்கலாம்.

2. சட்ட சபை கூடாத நாட்களில் மாதத்துக்கு ஒரு மாவட்டம் என்று ஒவ்வொரு மாவட்டமாக முகாமிடுங்கள். "ஓட்டுக் கேட்க மட்டும் வந்து விட்டு அப்புறம் மறந்தே போய் விடுவார்கள் இந்த அரசியல்வாதிகள்" என்ற மக்களின் விரக்தியை உடையுங்கள். உங்கள் கட்சிப் பிரதிநிதிகளுடனும், சட்ட மன்ற உறுப்பினர்களுடனும் கிராமம் கிராமமாகச் சென்று சாதாரண மக்களைச் சந்தியுங்கள். அவர்களின் குறை நிறைகளைக் காது கொடுத்துக் கேளுங்கள். சாதாரண தொண்டன் வீட்டில் ஒரு வேளை உணவு உண்ணுங்கள்.

3. உங்கள் கட்சி உறுப்பினர்களின் சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியையும், ஏன் உங்கள் சொந்தப் பணத்தையும் பயன்படுத்தி மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யுங்கள். விஜயகாந்த் நடிகராகச் செய்தது போல, மருத்துவ முகாம்கள், உதவிப் பொருட்கள் வழங்கும் விழாக்கள் நடத்துங்கள். ஐந்து ஆண்டுகள் முடிவில் உங்கள் சொத்துகள் கரைந்திருக்கலாம். ஆனால் மக்களின் ஆதரவு என்ற அழியா செல்வத்தை ஈட்டியிருப்பீர்கள்.

4. மக்கள் பிரச்சனைகளை சட்டமன்றத்துக்கு எடுத்துச் செல்லுங்கள். அங்கு சரியான தீர்வு கிடைக்கா விட்டால் மக்களாட்சி வழியில் போராட்டங்களை நடத்துங்கள். அறிக்கைகள் விடுங்கள்.

5. நேரம் கிடைத்தால் பிற மாநிலங்களுக்கும் பயணம் செய்யுங்கள். அங்குள்ள தலைவர்கள், பொது மக்களை சந்தித்து அவர்களைப் புரிந்து கொள்ளவும் அவர்களது நிலைமையை தெரிந்த்து கொள்ளவும் முயலுங்கள்.

6. தொழிலதிபர்கள், வர்த்தகர்கள், தொழிலாளர்கள், ஊழியர்கள் அமைப்புகளின் கூட்டங்களில் கலந்து கொண்டு உங்கள் திட்டங்களையும், எண்ணங்களையும் பறை சாற்றுங்கள்.

7. பத்திரிகை நிருபர்களை அடிக்கடிச் சந்தித்து பேட்டி கொடுங்கள். பத்திரிகைகளுக்கு கட்டுரைகள் எழுதுங்கள்.

இப்படி பல்வேறு தரப்பு மக்களின் மனதில் நீங்களும் உங்கள் கட்சியும் இடம் பிடித்து விட்டால் அடுத்த தேர்தலில் யாருடனும் கூட்டுச் சேராமல், தனித்து நின்றே 39 நாடாளுமன்றத் தொகுதிகளையும், பெரும்பான்மை சட்டமன்ற தொகுதிகளையும் அதிமுக கைப்பெற்றுவது சாத்தியமாகி விடும்.

1980ல் உங்கள் தலைவரின் வழிகாட்டுதலில், அதிமுக திமுக-காங்கிரசு கூட்டணியை மண்ணைக் கவ்வச் செய்து பெரும்பான்மை பெற்றது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

அப்படி அதிமுக வெற்றி பெறும்போது, தேசிய அரசியலில் பங்கு ஆற்றும் வண்ணம் இந்திய அளவிலான உங்கள் செல்வாக்கை வளர்த்துக் கொள்ளுங்கள். இன்னும் 25 ஆண்டுகளுக்கு முழு நேர அரசியலில் பணியாற்ற வயதும் ஆற்றலும் உள்ள நீங்கள் இந்தியாவின் பிரதமராக வருவது கூடச் சாத்தியம்தான்.

அதற்காக உங்கள் செயல்களை சிறிது மென்படுத்தி, மற்றவர்களுக்கு பெரிதும் மதிப்புக் கொடுத்து நடந்து கொள்ளுங்கள்.

உங்கள் நலம் விரும்பும் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களில் ஒருவன்

ஆயிரம் ஆண்டுகளின் தன்னிகரில்லாத் தலைவன் - 9

சமீபத்தில் நர்மதாவில் அணையின் உயரத்தை ஏற்றுவதை எதிர்த்த மேதா பாட்கரின் உண்ணாவிரதமும், அதற்கு எதிர்ப்பாட்டாக நரேந்திர மோடியின் உண்ணாவிரதமும் செய்திகளில் அடிபட்டது.

காந்தீய உண்ணாவிரதத்தின் விதிகள் என்ன?

எதிராளியை மிரட்ட/ பணிய வைக்க உண்ணாவிரதம் இருக்கக் கூடாது.
தன்னை தூய்மைப்படுத்திக் கொள்ள, தன்னைச் சேர்ந்தவர்களை மனம் மாற்ற உண்ணாவிரதம் இருக்கலாம்.
யாரை மாற்ற உண்ணாவிரதம் இருக்கிறோமே அவர் மீது பரிசுத்தமான அன்பு இருக்க வேண்டும்.

காந்தியின் உண்ணாவிரதங்கள் எல்லாமே தன் மனதையும், உடலையும் தூய்மைப்படுத்தவோ, இந்திய மக்களை மனம் திரும்ப வைக்கவோ மேற்கொள்ளப்பட்டவை.

நாடெங்கும் ஆலயங்கள் தாழ்த்தப்பட்டோருக்குத் திறக்கப்பட்டது காந்தியின் உண்ணாவிரதம் ஒன்றிற்கு நாட்டு மக்களின் அன்புப் பதிலாகத்தான். கல்கத்தாவின் மதக்கலவரத்தை நடத்தி வந்த முரடர்கள் ஆயுதங்கள் கீழே போட்டது தங்கள் அன்புக்குரிய மகாத்மா உயிரை விட்டுவிடக் கூடாதே என்பதற்காகத்தான். காந்தியின் கடைசி உண்ணா விரதம், தில்லியிலும், நாடெங்கிலும் இந்து-முஸ்லீம் ஒற்றுமைக்கு வழி வகுத்தது.

தான் நினைத்தது நடந்து விட வேண்டும், அடுத்தவன் அழிந்து போக வேண்டும் என்று மேற்கொள்ளப்படும் போராட்டங்கள் சத்தியப் போராட்டங்கள் ஆகாது. எதிரியின் மீது அன்பு கொண்டு, அவனது மனம் மாற வேண்டும் என்ற குறிக்கோளோடு நடத்துவதுதான் காந்தி வழியான சத்தியப் போராட்டம்.

அப்படிப் பார்த்தால் மேதா பாட்கரும் காந்தியைப் பின்பற்றவில்லை. மோடியோ வெகு தூரத்தில் உள்ளார்.

தமிழில் கையொப்பமிடுவோம்.

பத்தாம் வகுப்புச் சான்றிதழ் வாங்கும் போதே ஆங்கிலத்தில் கையெழுத்துப் போடும் வழக்கம் வந்து விட்டிருந்தது. அதற்கு முன் ஓரிரு ஆவணங்களில் தமிழில் கையெழுத்திட்டதாக ஞாபகம்.

தமிழில் கையெழுத்திடுவது சிறுபிள்ளைத்தனம், ஆங்கிலக் கையொப்பம்தான் நாம் வளர்ந்ததைக் காட்டுகிறது என்று ஆங்கிலத்தின் பெயரைக் கையொப்பமிட பழகிக் கொண்டேன். அதன் பிறகு அது அப்படியே ஒட்டிக் கொண்டு, இன்று வங்கிக் காசோலைகள், கடவுச் சீட்டு, அலுவலக ஆவணங்கள், பிற விண்ணப்பங்கள், ஓட்டுநர் உரிமம் என்று எல்லாவற்றிலும் ஆங்கிலத்தில்தான் கையொப்பம் உள்ளது.

கையொப்பம் குறிப்பிட்ட மொழியில்தான் இருக்க வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. உலகின் எந்த மூலையில் சென்றாலும், தமிழிலேய கையொப்பம் இடலாம். ஒரு முறை போடும் கையொப்பம் பிற கையொப்பங்களோடு ஒத்திருக்க வேன்டும் அவ்வளவுதான். படிப்பவருக்கு புரிய வேண்டும் என்ற தேவை கிடையாது.

இனிமேல் உருவாக்கும் ஆவணங்கள் எல்லாவற்றிலும் தமிழிலேயே கையொப்பமிடலாம். ஏற்கனவே சான்றுக் கையெழுத்தாகப் போட்டவற்றையும் படிப்படியாகத் தமிழுக்கு மாற்ற முயலாம்.

இதே போலத்தான் பெயரின் முதலெழுத்து. அது ஏன் ஆங்கிலத்தில் உள்ளது?

திங்கள், மே 15, 2006

ஐயோ பாவம் தமிழகம்

முதலமைச்சர் பணிக்கு தான் வாங்கும் எட்டாயிரத்துச் சொச்சம் ரூபாய் சம்பள உறையை திறந்து கூடப் பார்க்காமல் கட்சி அலுவலகத்தில் கொடுத்து விட்டு, முழு நேர கட்சிப் பணியாளராக கட்சி கொடுக்கும் 3200 ரூபாயை வாங்கிக் கொண்டு வீட்டுக்குப் போகிறார் மேற்கு வங்காளத்தின் முதல்வர் புத்ததேப்.

இவரது சொத்து விவரங்கள் (தேர்தல் ஆணையகத்திடம் சமர்ப்பித்தது)

வங்கிக் கணக்குகள், வைப்புத் தொகைகள், ரொக்கப்பணம், அஞ்சலக சேமிப்பு, ஆயுள் காப்பீடு, மோட்டார் வண்டிகள், நகைகள், நிலம், கட்டிடங்கள் எதுவுமே சொந்தம் கிடையாது.

ஒரே கெட்டப் பழக்கம் புகை பிடிப்பது, அதற்கு நண்பர்களிடமிருந்து சிகரெட்டுகளை அன்பளிப்பாகப் பெற்றுக் கொள்கிறார். மனைவி ஒரு தனியார் நிறுவனத்தில் நூலகராகப் பணி புரிகிறார். அவர் சம்பளமும் குடும்பத்திற்கு வருகிறது. அவர்கள் வாழ்வது ஒரு இரண்டு அறை ஒட்டுக் குடித்தனத்தில்.

நம்ம ஊர் மக்கள் தொண்டர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் மனத்தைப் பிசைகிறது. கோடிக் கணக்கில் அசையும், அசையாச் சொத்துகள், மிகச் சிலரே வாழ முடிகிற மேல் தட்டு வாழ்க்கை முறை. இவர்களில் ஒருவர் மாறி மாறி முதலமைச்சராக வருவதுதான் தமிழகத்தின் தலையெழுத்து.

ஐயோ பாவம்.

ஞாயிறு, மே 14, 2006

பார்த்தீனியத்தை அழிக்க ஒரு எளிய முறை

பார்த்தீனியம் என்ற செடியின் மகரந்தம் மூச்சிழைப்பு போன்ற நோய்களை ஏற்படுத்துகின்றது. பெங்களூரில் மட்டுமே இருந்த இந்த செடி சென்னையிலும் வளர ஆரம்பித்து விட்டது என்ற பீதி நாங்கள் கல்லூரியில் படிக்கும் போது பரவியது. எங்களுடைய என்எஸ்எஸ் ஒருங்கிணைப்பாளர், இது மாதிரியான சமூகப் பிரச்சனைகளில் கல்லூரி என்எஸ்எஸ் ஈடுபட வேண்டும் என்று கருதுபவர்.

ஒரு நாள் எல்லா தேசிய சேவைத் திட்ட உறுப்பினர்களையும், ஒரு வாளியும் இரண்டு கிலோ உப்பும் வாங்கிக் கொண்டு கல்லூரி முன்னால் கூடச் சொன்னார். எல்லோரையும் 23சி பேருந்தில் ஏற்றி, எழும்பூர் கூவம் நதிக் கரையில் இருந்த ஒரு அரசு அலுவலக வளாகத்திற்கு அழைத்துப் போனார். வாளியில் தண்ணீர் எடுத்து உப்பைக் கரைத்தோம். உப்பு அடர்கரைசலாகும் வரைக் கரைத்தோம். பிறகு, அந்த உப்புத் தண்ணியை பார்த்தீனியம் செடிகளின் மீது தெளித்தோம்.

அந்தச் செடிகள் ஓரிரு நாட்களில் பட்டுப் போய் விடும் என்று உறுதி அளித்தார். உண்மையிலேயே அவை பட்டுப் போயினவா என்று போய்ப் பார்க்கவில்லை.

சமீபத்தில் புதிதாகச் சென்ற வீட்டின் முன்பு சாலையின் இரண்டு பக்கங்களிலும் பார்த்தீனியம் செடிகள் வளர்ந்துக் கிடப்பதைக் கண்டு பழைய மருத்துவத்தைச் செய்து பார்த்தேன். அயோடின் சேர்க்கப்படாத கல் உப்பு இரண்டு கிலோ ஒரு வாளியில் கலக்கி ஊற்றியதும் இரண்டு நாட்களில் உண்மையிலேயே அத்தனை செடிகளும் பட்டுப் போய் விட்டன.

சமையல்வாயு விலை உயர வேண்டும்

சமையல் வாயு ஒரு சிலிண்டருக்கு அரசு 113 ரூபாய் மானியம் வழங்குகிறதாம். பணக்காரருக்கும், மத்திய தரத்தினருக்கும், ஏழைகளுக்கும் இதே மானியம்தான். மிக ஏழைகளுக்கு இந்த மானியம் கிடைப்பதே இல்லை, அவர்கள் பயன்படுத்துவது மண்ணெண்ணையும், விறகும்தான.

அப்படிப் பார்க்கும் போது, இந்த மானியம் நியாயப்படுத்தப்பட முடியாதது. இதை உடனடியாக ரத்து செய்து, சமையல் வாயு சிலிண்டர் விலையை அரசு ஏற்றி விட வேண்டும். சமையல் வாயு பயன்படுத்தும் குடும்பங்களில் மாதத்துக்கு 100 ரூபாய் கூடுதல் செலவு சுமையை அதிகரித்தாலும், அது தாங்கக் கூடியதாகவே இருக்கும்.

இப்படி மிச்சப்படும் பணத்தை தேசிய வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தை மேலும் விரிவு படுத்தப் பயன்படுத்தலாம்.

முதல்வரின் முத்தான கையெழுத்துகள்

  1. ஆட்சி பொறுப்பேற்றதும் முதல் வேலையாக, நியாய விலைக் கடைகளில் கிலோவுக்கு இரண்டு ரூபாய்க்கு அரிசி வழங்கும் உத்தரவில் கையெழுத்திட்ட முதலமைச்சர் கருணாநிதி அவர்களுக்கு நன்றிகள், வாழ்த்துகள்.

    முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவர்களும், நியாய விலைக்கடைகளில் அரிசி வழங்கப்படும் முறையை தனிப்பட்ட முறையில் கண்காணிக்க வேண்டும் என்று வேண்டுகிறேன். திரு கருணாநிதி, செல்வி ஜெயலலிதா, காங்கிரசு தலைவர்கள், மருத்துவர் ராமதாசு, கம்யூனிஸ்டு தலைவர்கள், வைகோ மற்றும் திருமாவளவன், நியாய விலைக் கடைகளுக்குச் சென்று தங்கள் சொந்த வீட்டில் பயன்படுத்த அரிசி வாங்கி வர வேண்டும். இதற்காக இவர்களுக்கு தமிழ் நாட்டில் எந்த நியாய விலைக் கடையிலும் அரிசி வாங்கும்படியான குடும்ப அட்டையை அரசு வழங்க வேண்டும். இப்படிச் செய்தால் கடையில் கிடைக்கும் அரிசியின் தரமும் அளவும் சீராக இருக்கும்படி அதிகாரிகள் பார்த்துக் கொள்வார்கள்.

  2. சத்துணவில் வாரத்துக்கு இரண்டு முட்டைகள் வழங்கும் உத்தரவில் கையெழுத்திட்ட முதல்வருக்கு பாராட்டுகள்.

    கலைஞர் அவர்கள் தனது பேர் சொல்லும்படியாக, எல்லாப் பள்ளிக் குழந்தைகளுக்கும் காலை உணவு வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்தக் கேட்டுக் கொள்கிறேன். மா கோ ராமசந்திரன் மதிய உணவுத் திட்டத்தில் தனது பெயரைப் பதித்தது போல, பல்லாயிரக்கணக்கான ஏழைக் குழந்தைகளின் எதிர் காலத்தில் தன் முத்திரையைப் பதிக்க கலைஞருக்கு ஒரு வாய்ப்பு. வேண்டும் என்றால், இலவச வண்ணத் தொலைக் காட்சிக்குப் பதிலாக இந்தத் திட்டம் என்று அறிவித்து விடுங்கள்.

  3. விவசாயிகளின் கூட்டுறவுக் கடன்களைத் தள்ளுபடி செய்த முதலமைச்சர் கருணாநிதி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

சனி, மே 13, 2006

ஆயிரம் ஆண்டுகளின் தன்னிகரில்லாத் தலைவன் - 8

தென் ஆப்பிரிக்காவில் இந்தியர்களின் உரிமைகளுக்காக கிளர்ச்சிகள் நடத்திய காந்தி, அந்த சமயத்தில் அங்கு வாழும் கறுப்பு இனத்தவருக்காக என்ன செய்தார்? தான் இந்தியன் என்பதால் இந்தியரின் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டு போய் விட்ட அவர், இந்தியரின் நிலைமையை விட பல மடங்கு மோசமாக இருந்த கறுப்பர்களுக்காக எதுவும் செய்யவில்லையா?

தம்முடைய கொள்கைகள் மனித இனத்துகே வழி காட்டும் என்று கூறி வந்த மகாத்மா, தன் கண் முன்னால் நடந்திருக்கக் கூடிய கறுப்பர்களின் மீதான அடக்குமுறைகளுக்காக எதுவுமே செய்யவில்லையா?

விடை தெரியவில்லை.

கலைஞர் அவர்களின் குறுமதி

தமிழகத்தில் அரசை தலைமை ஏற்றுள்ள் கருணாநிதியை தாக்கிக் குறை கூறி எழுதப்படும் பதிவு இது.

முதலில் சமீபத்திய நிகழ்வுகள்.

1. நாங்கள் ஏழைப் பெண்கள் திருமணத்துக்கு 15,000 ரூபாய் கொடுக்கிறோம். எதிர்க் கட்சியினர், அவர்கள் வாக்களித்த அரைப் பவுன் தங்கத்தைக் கொடுக்கட்டும் நாம் இணைந்து திருமணங்களை நடத்துவோம் என்று பேட்டியில் கூறி விட்டு, அதே பேட்டியில், எதிர்க் கட்சிகளை எப்படி நடத்துவோம் என்பது தெரிந்திருக்கும் என்று கூறியிருக்கிறார்.

வெற்றி பெற்று ஆட்சி அமைத்த இவர் 15,000 ரூபாய் கொடுப்பாராம், தோற்று எதிர்க்கட்சியில் அமையப்போகும் மாற்றுக் கட்சியினர் தங்கம் கொடுக்க வேண்டுமாம். அவ்வளவு நக்கல், கேட்டால் அவர்கள் கொள்ளையடித்த பணத்திலிருந்து கொடுக்கலாமே என்று கவிதை எழுதுவார்.

2. "சிறுத்தைகள் உலாவும்போது, சிங்கங்கள் உலாவக் கூடாதா! மிருக சாதிகள் அடித்துக் கொள்வது இயல்புதானே"

இது இயல்பாக இலக்கிய மனதிலிருந்து வந்த சொற்றொடர்கள்தான். இயல்பான சிந்தனைகளே இப்படி இருந்தால் இவர் முயன்று சிந்தித்து நடத்தும் திட்டங்கள் எப்படி இருக்கும்?

3. வைகோ திமுக கூட்டணியை விட்டு அதிமுக கூட்டணியில் சேர்ந்ததை யசோதரா காவியம் என்ற கதையுடன் ஒப்பிட்டு எழுதியது
இவ்வளவு வயதுக்கு அப்புறம், இத்தனை கோடி மக்கள் வழி நடக்கக் காத்திருக்கும் போது, எத்தகைய மன ஓட்டம் இது மாதிரியான ஒப்பீட்டைச் செய்யத் தூண்டியிருக்கும்.

ஆரம்பம் முதலே தனது சுயநல நோக்கங்களுக்காகத்தான் தமிழ், தமிழ் நாடு என்று கலைஞர் பேசி வந்திருக்கிறாரே தவிர, மக்களின் மீது அன்பு பொங்கி அவர் ஆட்சியிலிருக்கும் போதோ, எதிர்க் கட்சியிலிருக்கும் போதோ செய்த பணிகளை யாராவது பட்டியலிட்டால் உதவியாயிருக்கும். அவர் செய்த ஒவ்வொரு திட்டத்துக்கும், அவரது தனி வாழ்க்கை நலம் காரணமாக இருந்திருக்கும்.

4. இலவசத் தொலைக்காட்சித் திட்டம்

மக்களுக்கு இலவசமாக கொடுப்பதாக அறிவித்து தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று தோன்றிய தலைவர்களில் யாருக்கு என்ன திட்டம் தோன்றியது:
அ. மா கோ இராமசந்திரன் - பள்ளிக் குழந்தைகளுக்கு சத்துணவுத் திட்டம், முதியோர்களுக்கு வேட்டி சேலை, ஏழைப் பெண்களுக்கு திருமணத் திட்டம்.
ஜெ ஜெயலலிதா - பள்ளி மாணவர்களுக்கு மிதி வண்டி, இலவச அரிசி, பள்ளித் தேர்ச்சி பெற்றால் கணினி

ஆ. மு கருணாநிதி
இலவசமாக தொலைக்காட்சி

முதல் பிரிவு, பசிப்பிணி, வறுமைப்பிணி, அறியாமைப் பணி தீர்க்க வேண்டும் என்று கொடுக்கப்படுபவை. இரண்டாவது பார்ப்பவரை மந்தமாக்கும் முட்டாள்பெட்டி. அறுபது ஆண்டு காலம் அரசியல் பார்த்து விட்ட தலைவருக்கு தோன்றிய திட்டம் இது.

5. ஆடம்பர வீடு
திருக்குவளையில் ஏழைத் தந்தைக்கு மகனாகப் பிறந்து போராட்டங்களைச் சந்தித்து, எதிர் நீச்சல் போட்டு வாழ்க்கை நடத்திய தலைவரின் வீட்டை என்டிடிவியின் காட்டினார்கள். வீட்டை இல்லை, வீட்டின் வரவேற்பறையை. அவரது மகள் திருமதி கனிமொழி தொலைக்காட்சி நிருபருடன் பேசுகிறார். அவர்கள் அமர்ந்திருந்த மென் இருக்கைகள் மட்டுமே இலட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிருக்கும். அவர் போகும் ஊர்தி இலட்சக்கணக்கான மதிப்பிலிருக்கிறது.

அவமானமாக இல்லை! தன்னைத் தலைவராகக் கொண்டாடும் தொண்டர்கள் எங்கே, இவரின் வாழ்க்கைத் தரம் எங்கே?

ஏன்? ஓட்டு வீட்டில், கயிற்றுக் கட்டிலில் அமர்ந்து கொண்டு என்டிடிவி நிருபர் தமிழினத் தலைவரை பேட்டி காண்பதுதானே தமிழ் நாட்டின் இயல்புக்குப் பொருத்தம். காணி நிலம் வேண்டும், பத்துப் பன்னிரண்டு தென்னை மரம் வேண்டும் என்று கனவு கண்ட தமிழன் வாழ்ந்த அதே நூற்றாண்டில் வாழ்ந்த இவர்தான் தமிழினத் தலைவரா?

என்ன செய்து விட்டார் என்று தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுகிறோம்?

6. ஸ்டாலின் உயர்ந்த சாதி தகப்பனுக்கு மகனாகப் பிறக்காததுதான் ஒரே தவறாம். ஏன் ஐயா, ஸ்டாலினின் வயதில் இருக்கும் சராசரித் தமிழனின், கலைஞர் வயதில் இருக்கும் ஒர் சராசரி தகப்பனின் நிலைமையை விட என்ன குறைந்து விட்டது உங்களுக்கு. இன்னும் என்ன வேண்டும் உங்களுக்கு?

7. முரசொலி மாறனை இலாகா இல்லாத அமைச்சராக வெளி நாடெல்லாம் அனுப்பு மருத்துவம் பார்த்தாரே தமிழினத் தலைவர்? அவரது தொண்டர்களில் எத்தனை பேருக்கு அந்த வசதி கிட்டிடும்?

8. தொண்ணூற்றி சொச்சம் இருக்கைகளே இருந்தாலும் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள ஏன் மனமில்லை? இதையே ஜெயலலிதா செய்திருந்தால் இன்றெல்லாம் பதிவுகள் தூள் பறந்திருக்கும்? கவிதைகள் முரசொலியை நிறைத்திருக்கும். என்ன ஒரு ஆணவம் என்று நாடே குமுறியிருக்கும். செய்திருப்பவர் பெருந்தலைவராயிற்றே, எந்த முணுமுணுப்பும் இல்லை.

கலைஞர் மீது சுமத்தப்படும் புகழ் மொழிகளும், பட்டங்களும், தகுதிகளும் அவருக்கு உண்மையிலேயே பொருந்துமா? அவர் செய்பவையும், சொல்பவையும் படித்த வசதி படைத்த மக்களுக்கு ஏன் கண்ணில் தென்படுவதில்லை?

ஆள்பவரின் செங்கோலின் கீழ்தானே நாடு சிறக்க வேண்டும். இத்தகைய குறுமதியுடைய தலைவர் எப்படித்் திரும்ப திரும்ப ஆட்சியில் அமர்ந்து விடுகிறார்?

வெள்ளி, மே 12, 2006

குழந்தைகளின் பசி தீர்ப்போம்

1. ஐந்து வயதுக்குள் இறந்து விடும் ஐந்து லட்சம் இந்தியக் குழந்தைகள், சரியான உணவு எளிய ஆரோக்கிய உதவிகள் மூலம் காப்பாற்றப்பட முடியும்.
2. இந்தியாவில் நூற்றுக்கு 47 குழந்தைகள் சரியான சாப்பாடு கிடைக்காமல் வளர்கின்றன.

இந்து பத்திரிகையில் இரண்டாவது தலையங்கமாக மே10 அன்று வடிக்கப்பட்ட இந்த பிரச்சனை எத்தனை பேரை போய்ச் சேர்ந்திருக்கும்? உலகத்திலேயே எத்தியோப்பியாவும் இந்தியாவும்தான் இவ்வளவு மோசமாக உள்ளன. சீனாவில் 8% குழந்தைகள்தான் ஊட்டச் சத்து போதாமல் உள்ளன.

இந்தியா ஒளிர்கிறது. பங்குச்சந்தை குறியீடு பத்தாயிரத்தைத் தாண்டி விட்டது, தங்க விலை பத்து கிராமுக்கு பத்தாயிரமாகி விட்டது என்பதெல்லாம் முதல் பக்கத்தில் எட்டு பத்தி தலைப்புச் செய்திகளாக வெளி வரும் காலத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் இந்த அறிக்கை நமது செய்தி ஏடுகளுக்கு ஒரு மூலையில் போட்டு விட வேண்டிய செய்தி ஆகி விட்டது.

இந்தியர்களால், இந்தியர்களுக்காக நடைபெறும் ஆட்சி என்றால், மத்திய மாநில அரசுகள் இந்தச் செய்தியை பேரவமானமாக அறிவித்து, அடுத்த ஒரு ஆண்டுக்குள் சாப்பாடு போதாமல் வளரும்/இறக்கும் குழந்தைகளை இல்லை என்று செய்ய வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டாமா? தமிழகத்தின் மதிய உணவுத் திட்டம் போல, நாடெங்கும் பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சத்தான காலை உணவும், மதிய உணவும், மாலை உணவும் பள்ளிக் கூடங்களிலும், தாய் சேய் நல விடுதிகளிலும் வழங்க எத்தனைக் கோடி செலவாகி விடும்?

வண்ணத் தொலைக்காட்சி வழங்கி விட முடியும் என்று உறுதி அளிக்கும் மத்திய நிதியமைச்சர், அதை விட குறைந்த செலவில் குழந்தைகளுக்கு சாப்பாடு போடும் திட்டத்தை செயல்படுத்தி விட முடியுமா என்று கணக்கிடுவாரா?

குழந்தைகளை பிச்சைக்காரர்கள் ஆக்கி விடக் கூடாது, பெற்றோர்களை பொறுப்பற்றவர்களாக்கி விடக் கூடாது என்ற விவாதங்களை எல்லாம் அப்புறம் வைத்துக் கொள்வோம். இது மூன்று வேளை பசியாறும் ஒவ்வொரு இந்தியனுக்கும் அவமானமான செய்தி. இதை முதலில் துடைப்போம்.

இதற்கு தனி மனிதர்களாக நாம் ஏதாவது செய்ய முடியுமா? அல்லது அரசாங்கத்தின் மீது பழியைப் போட்டு விட்டு நமது தங்க நகைகள் வாங்கலிலும், வரி தவிர்த்தல்களிலும், மானியத்தில் விற்கப்படும் சமையல் வாயு வாங்கி பணம் சேமிப்பதிலும் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கலாம்.

நாம் என்ன செய்ய முடியும்?

1. தங்க நகைகள்
நாம் செலவளிக்கும் ஒவ்வொரு தொகையும் மூன்றாகப் பிரிகிறது. நிலத்துக்கான வாடகை, தொழிலாளியின் சம்பளம், முதலாளியின் முதலீட்டுக்கான லாபம். சந்தையில் கத்திரிக்காயின் விலை கிலோவுக்கு பத்து ரூபாய் என்றால் அதில் ஒரு பகுதி அது பயிரிடப்பட்ட நிலத்தின் சொந்தக்காரருக்கும், ஒரு பகுதி அதில் உழைத்த விவாயியின் கூலியாகவும், ஒரு பகுதி கன்று வாங்கல், நிலத்தை குத்தகைக்கு எடுத்தல், வேலைக்கு ஆள் வைத்தல் என்று தன் முதலை முடக்கிய விவசாயிக்கு லாபமாகவும் போய்ச் சேரும்.

நாம்் சேமிப்பைப் பயன்படுத்தி ஒரு தொழில் ஆரம்பிக்க உதவினால், அது அந்தத் தொழிலுக்குத் தேவையான முதல் ஆகி விடுகிறது. அந்த முதல் தொழிலாளிகளுக்கு சம்பளம் கொடுக்கவும், மூலப் பொருட்கள்/எந்திரங்கள் வாங்கவும் பயன்பட்டு, பயனுள்ள பொருட்களை உற்பத்தி செய்து, நமக்கு லாபத்தையும் ஈட்டித் தந்து விடும்.

நாம் தங்கம் வாங்கும் போது கொடுக்கும் பணம் எங்கே போகிறது? ஒரு சிறு பகுதி நகை வேலை செய்யும் தொழிலாளிக்குப் போகிறது, ஒரு சிறு பகுதி நகைக்கடை ஊழியர்களின் ஊதியமாக மாறுகிறது, இன்னும் ஒரு பகுதி தங்கத்தை இறக்குமதி செய்து நகையாக மாற்றி விற்கும் கடைக்காரருக்கு லாபமாகப் போகிறது. இது எல்லாம் நம் சமூகத்துக்குள்ளேயோ, வெளி நாடுகளிலோ ஆக்க பூர்வமான கைகளில்தான் போய்ச் சேருகின்றன. ஆனால், தங்கம் கிராமுக்கு 1000 ரூபாய் என்றால் அதில் பெரும்பகுதி (900 ரூபாய என்று வைத்துக் கொள்வோம்) தங்கச் சுரங்கத்தின் சொந்தக்காரர்களான தனி நபர்களுக்கோ நிறுவனங்களுக்கோ போய்ச் சேருகின்றன. அப்படி உழைக்காமல் கிடைக்கும் பணம் உருப்படியாகப் பயன்படாமல், ஆயுதங்கள் செய்யவும், போதை மருந்துகள் கடத்தவும், ஆடம்பர வாழ்க்கையிலுமே பயன்படுகின்றன.

நாம் வாங்கும் ஒவ்வொரு கிராம் தங்கமும், இந்திய குழந்தை ஒன்றின் வயிற்றுக்குப் போக வேண்டிய உணவுக்கான பணத்தை பண முதலைகளிடம் கொண்டு சேர்க்கின்றது. இதில் ஏதாவது ஐயம் இருந்தால், தெளிவு படுத்தத் தயாராக இருக்கிறேன். அதற்காக சேமிப்பை எல்லாம் தானமாக கொடுத்து விடச் சொல்லவில்லை. சேமிப்பை சரியான வழிகளில் முதலீடு செய்தால் போதும்.

2. வரி தவிர்த்தல்
வருமான வரியைத் தவிர்க்க சேமிப்புப் பத்திரங்கள், வேலை பார்க்கும் நிறுவனத்தின் துணையோடு வரவினங்களை பல்வேறு தலைப்புகளில் பிரித்துக் கொள்ளுதல் இவை அனைத்தும் அரசின் கைகளில் போய்ச் சேரும் பணத்தைத் தடுத்து நிறுத்தி, அரசு குழந்தைகள் நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதைத் தடுத்து விடுகின்றன.

3. மானிய விலை சமையல் வாயு
ஒவ்வொரு முறை அரசு நிறுவனங்களிலிருந்து சமையல் வாயு சிலிண்டர் வாங்கும் போதும் அரசு 100 ரூபாய்களுக்கு மேல் மானியம் அளிக்கிறது. நம்மால் இந்த நூறு ரூபாய் விலை உயர்வைத் தாங்கிக் கொள்ள முடியாதா? இந்த மானியத்தை ரத்து செய்தால் அரசின் கையில் ஏழைக்கு உணவிட பணம் மிஞ்சி விடாதா?

நாம் என்ன செய்யலாம்? என்னுடைய சொந்த வாழ்வில், இன்று முதல் எனக்கு வரும் வருமானத்தில் 10% குழந்தைகளின் பசி தீர்க்க ஒதுக்கப் போகிறேன். இதை எப்படிச் செலவளிப்பது என்று எனக்குப் புரியவில்லை. வரும் நாட்களில் கண்டிப்பாக ஒரு வழி தெரியும்.

ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் இப்படி ஒரு நிதியை உருவாக்கலாம்:

1. இனிமேல் தங்க நகை வாங்கும் சகோதரிகள் அதன் விலையில் 10% இந்த நிதியில் சேர்த்து விடுங்கள்்.
2. ஓவ்வொரு முறை கேஸ் சிலிண்டர் வாங்கும்போடும் 100 ரூபாய் இந்த நிதியில் சேர்த்து விடுங்கள்.
3. கையில் இருக்கும் தங்க நகைகளில் பத்தில் ஒரு பகுதியை இந்த நிதியில் சேர்த்து விடுங்கள்.
4. நிலம் வாங்கி விற்கும் போது பதிவுக் கட்டணத்தை குறைக்க பத்திரத்தில் விலையைக் குறைவாக குறிப்பிட்டால், அந்த லாபத்தை இந்த நிதியில் சேர்த்து விடுங்கள்.

அரசுகளை நம்ப முடியாது என்ற இந்த நாட்களில் இந்த நிதியை எப்படிப் பயன்படுத்தலாம் என்பதற்கு இறைவன் வழி காட்டுவான்.

இந்துத்துவா - ஒரு மறுமொழி

எந்த சமூகத்தில் சிறுபான்மையினரும், வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களும் தமது உரிமைகளை பாதுகாத்துக் கொண்டு வாழ முடிகிறதோ அந்த சமூகம்தான் தளைத்து வளரும்.

நம்முடன் சேர்ந்து உருவான பாகிஸ்தான் என்ற நாடு, சிறுபான்மையினரை நசுக்கி வைத்திருக்க இன்றைக்கு அவர்களது அரசியலும், பொருளாதரமும் தேங்கல் நிலைகளை அடைந்து விடவில்லையா?

அமெரிக்கா, அடிமை முறையை ஒழித்த பிறகுதான் உலகப் பேரரசாக இருபதாம் நூற்றாண்டில் வளர முடிந்தது.

ஒரு சிறுபான்மையினராக இருக்கும் நிலைமையை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். காலையில் அரசு வானொலியை திருகினால் பெரும்பான்மை மதத்தின் பக்திப் பாடல்கள், அரசுப் பள்ளியில் குழந்தையை படிக்க அனுப்பினால் தமிழ் புத்தகத்தில் இறை வணக்கப் பாடல் இந்துப் பாடல். இந்துத் திருவிழா ஒன்று வந்தால் ஊரெல்லாம் கோலாகலம், அதைக் கொண்டாடமல் இருக்கும் தன் வீட்டில் வெறுமை. தன் மத பண்டிகை வரும்போது, பெரும்பான்மையினர் தன் வேலைகளைப் பார்த்துக் கொண்டு செல்வார்கள். இங்கும் ஒரு வெறுமை மனதைச் சூழ்கிறது.

இதற்கு விடை என்ன? மூட்டை முடிச்சுகளைக் கட்டி கொண்டு உங்கள் ஆட்கள் இருக்கும் ஊர் போய் சேருங்கள் என்பதுதான் இந்துத்துவாவின் பதில். நீங்களும் இந்த மண்ணின் புதல்வர்கள்தான், உங்கள் நம்பிக்கைகளை பழக்கங்களை பின்பற்ற சில சிரமங்கள் இங்கு இருக்கத்தான் செய்யும். ஆனால் அதை நீக்குவதற்கான எல்லா ஆதரவுகளையும், நாங்கள் செய்வோம் என்பதுதான் காந்தீய/இந்திய வழி. அதுதான் நம் நாட்டின் ஆன்மா.

என்றைக்கு அந்த ஆன்மா இறக்கிறது, அன்றைக்கு இந்தியா என்ற நாடு இறந்து விடும். அதன்பிறகு மொழி வழி, மத வழி, ஏன் சாதி வழி நாடுகள் உருவாகி விடும் இந்தியாவின் இடத்தில்.

நுனிமரத்தில் இருந்து கொண்டு அடியை வெட்டும் கதைதான் இந்துத்துவாவாதிகளின் கதை.

ஆயிரம் ஆண்டுகளின் தன்னிகரில்லாத் தலைவன் - 7

ரூபாய் நோட்டில் உள்ள காந்தி படம் பார்த்துப் பார்த்து மனம் மரத்துப் போய், இப்போதெல்லாம் அது கண்ணில் படுவதே இல்லை. அக்டோபர் இரண்டாம் தேதி வரும் விடுமுறையில் தொலைக்காட்சியில் சிறப்புத் திரைப்படங்கள் பார்க்கிறோம். ஜனவரி 30 அன்று முற்பகலில் இரண்டு அஞ்சலி செலுத்துவது கூட ஏறத்தாழ நின்று விட்டது. இதனால் காந்தியை மறந்து விட்டொம் என்று பொருளா?

"காந்தியம் என்பது காலத்துக்கு ஒவ்வாதது, அந்தக் கிழவர் ஏதேதோ உளறி விட்டுப் போய் விட்டார். இப்போதைய வாழ்க்கைக்கு அதெல்லாம் ஒத்து வருமா?" என்று அலட்டிக் கொள்வதால் காந்தி நினைத்த, செய்த, சொன்ன கருத்துகள் நம்மை பாதிப்பதே இல்லை என்று பொருளா?

இந்தியா என்ற நாடு ஒரே நாடாக தேர்தலில் பங்கேற்பது, மத்தியில் ஒரு அரசு செயல்படுவது எல்லாமே காந்தியத்தின் அடித்தளத்தின் மீது உருவாக்கப்பட்டவை. இந்தியப் பெருநாட்டின் பெரும்பகுதிகள் நேபாளத்தைப் போல மன்னரால் ஆளப்படலாம். பிற பகுதிகள் வங்காள தேசம் போல ராணுவ அதிகாரத்தின் கீழ் உழன்று கொண்டிருக்கலாம். யூகோஸ்லேவியா போல நாடு சிதறியிருக்கலாம்.

இவை எல்லாம் நிகழாமல் இன்று நாம் அனுபவிக்கும் வாழ்க்கை காந்திய சிந்தனைகளிலிருந்து பிறந்தது. காந்தியின் படிப்பினைகளைப் புறக்கணித்து சாதியின் பெயரிலும், மதத்தின் பெயரிலும் ஒடுக்கப்பட்டவரகள் இன்னும் முன்னேற முடியாமல் இருப்பது நமது "ஒளிரும்" வாழ்க்கையைத் தகர்த்து விடக்கூடிய வெடி குண்டுகள். காந்தியின் பாடங்களை மறந்து, சிறுபான்மையினர் அளவுக்கதிகமாக சொத்து சேர்த்து, தேவைக்கதிகமாக செலவளித்து இல்லாதவர் வாழ்வைத் தகர்ப்பது நமது "மிளிரும்" வாழ்க்கையில் இருள் புகுத்தி விடக் கூடிய கார்மேகங்கள்.

நல்ல நிலையில் இருக்கும் குடும்பங்கள் வாங்கிப் பதுக்கும் நகைகள் ஒரு ஏழைக் குழந்தையின் தட்டிலிருந்து உணவைப் பறிக்கின்றன.
நிலத்தை வாங்கி விற்று பணத்தைப் பெருக்கும் நபர்கள் ஒரு சிறு குழந்தையின் கல்வி வாய்ப்பை மறுக்கிறார்கள்.

இதைத் தெரிந்து கொள்ள காந்தியம் படிக்க வேண்டாம். 300 ஆண்டுகளுக்கு முன்பு ஆதம் சுமித் எழுதிய முதல் பொருளாதார நூலைப் படித்தால் போதும். 150 ஆண்டுகளுக்கு முன் மார்க்சு எழுதிய பொருளாதார நூலைப் படித்தால் போதும். வரலாற்றில் வழிகாட்டிச் சென்ற பெரிய மனிதர்களின் கருத்துகளைத் தெரிந்து கொண்டால் போதும்.

செவ்வாய், மே 09, 2006

ஆதலினால் அன்பு செய்வீர்

ஆதலினால் அன்பு செய்வீர்

அன்பு என்பது தமிழில் உண்டு,
ஆதலினால் அன்பு செய்வீர்

இணையிடம் தோன்றும் காதலிலும்,
சுற்றத்திடம் தோன்றும் பாசத்திலும் உயர்ந்தது,
ஆதலினால் அன்பு செய்வீர்.

அன்பு உள்ளத்தை வெளுக்கும்,
அன்பு பார்வையை ஒளிக்கும்,
அன்பு உடலைத் துள்ளும்,
ஆதலினால் அன்பு செய்வீர்.

அன்பு இல்லையேல் வாய் கசக்கும்,
அன்பு இல்லாத வாழ்க்கை எரிக்கும்,
அன்பு இல்லாத உறவுகள் புளிக்கும்,
அன்பு இல்லாத செல்வங்கள் வாட்டும்,
ஆதலினால் அன்பு செய்வீர்.

பணங் காசு செலவில்லை,
உடலை வருத்ததத்் தேவையில்லை
திட்டங்கள் கேட்கவில்லை,
திறமைகள் குறைவதில்லை,
நேரங்கள் அழுத்தவில்லை,
ஆதலினால் அன்பு செய்வீர்.

அன்பை வளர்த்தோர் அறிவை வளர்ப்பார்,
அன்பை வளர்த்தோர் செல்வத்தை வளர்ப்பார்,
அன்பை வளர்த்தோர் அமைதியை வளர்ப்பார்,
அன்பை வளர்த்தோர் ஆன்மீகத்தை வளர்ப்பார்,
அன்பை வளர்த்தோர் பண்பை வளர்ப்பார்,
அன்பை வளர்த்தோர் நலத்தை வளர்ப்பார்
ஆதலினால் அன்பு செய்வீர்.

நோயற்ற வாழ்வு - மருந்துகள்

காய்ச்சல் வந்தால் ஒரு குரோசின் சாப்பிடு, தலைவலி வந்தால் அனாசின் சாப்பிடு, விருந்துக்குப் போகும் முன் ஜெலூசில் சாப்பிடு என்று மருந்துகள் நம் வாழ்க்கையில் இன்றியமையா இடத்தைப் பெற்று விட்டன.

"பிரியாணி சாப்பிட்டால் செமிக்காது, உருளைக்கிழங்கு வருவல் சாப்பிட்டால் வாயுத் தொல்லை வந்து விடும், பூரி சாப்பிட்டால் நெஞ்சைக் கரிக்கும்". அதனால் சாப்பிடும் முன்னால் ஒரு ஜெலூசில் சாப்பிட்டுக் கொள்வேன் என்று கூட மாத்திரைகள் உள்ளே தள்ளுகிறோம்.

நாம் உட்கொள்ளும் மருந்துகளில் பெரும்பான்மை, சோம்பேறித் தனத்தையும், ஒழுக்கமற்ற வாழ்க்கை முறையையும் சரிக்கட்டத்தான் பயன்படுகின்றன. பூரி சாப்பிட்டால் நெஞ்சைக் கரிக்கும் என்றால் பூரி சாப்பிடாமல் இருந்து விடுவது அல்லவா புத்திசாலித்தனம். பூரியுடன் வரும் எண்ணெயிலிருந்து உருவான வேதிப் பொருட்களைச் சரிக் கட்ட, இன்னும் சில வேதிப் பொருட்களை சாப்பிடுகிறோம். நம்முடைய உடம்பு ஒரு வேதிவினைக் குடுவை ஆகி விடுகிறது.

வேதியல் ஆராய்ச்சிக் கூடத்தில் பரிசோதனை செய்த எல்லோருக்கும் தெரியும். ஒவ்வொரு வேதி வினையிலும், பக்க விளைவுகளும் பக்க விளை பொருட்களும் உருவாகின்றன. நம்முடைய உடம்பில் ஏராளமான உயிர் வேதி மாற்றங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. உயில்வேதி வினைகளின் விளைவுகளைப் பயன்படுத்துவதற்கு நமது உறுப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. தேவை இல்ல்லாத வேதிப் பொருட்களை வயிற்றுக்குள் அனுப்புவது, நம் உடல் என்னும் கோயிலை பாழ்படுத்துவதற்கு சமமானது.

இன்னொரு வகை மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகள். மருந்துகளை தயாரித்து விற்கும் நிறுவனங்கள் உலகெங்கும் ஆயிரக்கணக்கான கோடி டாலர்கள் மதிப்பிலான மருந்துகளை விற்பனை செய்கின்றன. கொடிய நோய்களுக்கு எதிரான மிகச் சில மருந்துகளைத் தவிர பிற மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தாமல் கெடுக்கவே செய்கின்றன.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். அதற்கு சில எளிய வழிமுறைகள் உள்ளன.

1. காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சூடாக தேநீரையோ, காபியையோ குடிக்காமல், அறை வெப்பநிலையில் இருக்கும் நீரைக் குடிக்கவும

உடல் துர்நாற்றத்தை விரட்ட, வாயில் நறுமணம் கமழச் செய்ய மருந்து சோப்புகள், சிறப்பு பற்பசைகள் விளம்பரம் செய்யப்படுகின்றன. இரண்டு கட்டி சோப்பை போட்டுத் தேய்த்தாலும், உடலில் இருந்து வரும் வியர்வை அழுக்குடன் சேரும் போது நாற்றம் ஏற்படத்தான் செய்யும். அதை மறைக்க நறுமணத் திரவியங்கள் என்று இன்னொரு பொருள் வரிசையும் உள்ளது.

நல்ல நீரில் எண்ணெய்ப் பசையை நீக்கும் சோப்பு அல்லது மாற்றுப் பொருளைப் பயன்படுத்திக் குளித்தால் தோல் மீதான அழுக்குகள் நீங்கி விடும். ஆனால் உள் கழிவுகளையும் சுத்தம் செய்து விடுவது துர்நாற்றத்தை நீக்குவதற்கு இன்றியமையாததாகும்.

காலையில் எழுந்த உடன், ஒரு லிட்டர் அறை வெப்ப அல்லது வெது வெதுப்பான நீரை வெறும் வயிற்றில் குடித்தால், இரவு தூங்கப் போகும் முன் இரண்டு மணி நேரங்களுக்கு எந்த உணவும் உண்ணாமல் இருந்தால், காலையில் குளிக்கும் முன் வயிற்றை முற்றிலும் சுத்தம் செய்து கொண்டால், காலையிலோ மாலையிலோ வியர்வை வரும் வரை உடற்பயிற்சியோ, உடல் உழைப்போ செய்து வந்தால், நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம்.

சிறு குழந்தைகள் கூட, 8.30 பள்ளிக்குப் போக 8 மணிக்கு எழுந்த்து, பல் தேய்த்து, காலைக் கடன்களை சரிவர முடிக்க நேரம் இல்லாமலேயே அம்மாவின் வற்புறுத்தலால் வயிற்றுக்குத் திணித்துக் கொண்டு, சீருடையை மாட்டிக் கொண்டு ஓடுகின்றன. காலையில் துயில் எழுவதற்கும் வெளியே கிளம்புவதற்கும் இடையே குறைந்தது இரண்டு மணி நேரம் இடை வெளி இருக்க வேண்டும் என்று ஒரு விதியை வகுத்துக் கொண்டு, இந்த இரண்டு மணி நேரங்களில் சரியான நீர் உணவு, சத்தான காலை உணவு உண்டு, காலைக் கடன்களையும், உடல் உழைப்பையும் செய்வதாக வைத்துக் கொண்டால் நம்மைப் பீடிக்கும் நோய்களில் பெரும்பகுதி ஓடி விடும்.

அதே மாதிரி இரவு தூங்கப் போகும் முன்னர் இரண்டு மணி நேரங்கள் உடலைப் பேண செலவிடலாம். தேவையான அளவு தண்ணீர் குடித்தல், திட உணவு உண்பதைத் தவிர்த்தல், பல் துலக்குதல், கை கால்களைச் சுத்தம் செய்து கொள்ளுதல் என்று உடலுக்கு வளமளிக்கலாம். தொலைக்காட்சி மெகாத் தொடர் பார்த்ததும் தூங்கப் போவது தூங்கும் எட்டு மணி நேரத்தையும் அந்தத் தொடருக்கே தாரை வார்ப்பது போன்றதாகும். ்

ஆயிரம் ஆண்டுகளின் தன்னிகரில்லாத் தலைவன் - 6

காந்தி வங்காளத்தின் நவகாளி கிராமத்துக்குப் போகிறார். முஸ்லீம்கள் வலுக்கட்டாயமாக இந்துக்களை மதம் மாற்றவும், இந்துப் பெண்களை சூறையாடவும், இந்து வீடுகளையும் கோவில்களையும் எரிக்கவும் செய்த இடம் நவகாளி. காந்தி எதற்கு அங்கே போகிறார்?

"பெண்மையில் கூக்குரல் என்னை அழைக்கிறது. வன்முறையின் கடைசிப் பொறி வரை அணையும் வரை நான் வங்காளத்தை விட்டுப் போக மாட்டேன். அதற்கு பல வருடங்கள் ஆகலாம். நான் இங்கேயே இறந்து விட நேரலாம். ஆனால் நான் தோல்வியை ஏற்றுக் கொள்ள மாட்டேன். நான் இங்கு இருப்பதால் மக்களுக்கு நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் மட்டும் கொடுத்து, அதற்காக என்னால் எதையும் செய்ய முடியா விட்டால் நான் இறப்பதையே விரும்புவேன்."

ஆனால், பக்கத்து பீகார் மாநிலத்தில் இந்துக்கள் முஸ்லீம்களை பழி வாங்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்து விட்டார்கள்.

"பீகாரி இந்துக்களின் இந்த பாதகங்கள் காய்தே அசாம் ஜின்னா காங்கிரசை இந்துக் கட்சி என்று குற்றம் சாட்டுவதை உண்மை ஆக்கி விடலாம். காங்கிரசின் பெருமைகளை உயர்த்த பெரும் பணிகளைச் செய்துள்ள பீகார், அதன் கல்லறையை தோண்டுவதில் முதலாவதாக இருந்து விடக்கூடாது. "

புது தில்லியில் தன்னாட்சி கிடைத்ததற்கான கொண்டாட்டங்களில் பங்கு பெறவில்லை. "35 ஆண்டுகளாக எதற்காகப் பாடுபட்டேனோ அது அழிகிறதே" என்ற துக்கத்தோடு பிரிவினை செய்யப்படும் மாநிலங்களில் அமைதித் தூதுவராக செல்கிறார். ஒற்றை மனிதன் அமைதிப் படையாக அவர் சென்ற ஊர்களில் எல்லாம் மக்கள் வன்முறையைக் கைவிடுவதாக உறுதி அளிக்கிறார்கள். வங்காளத்தில் இனிமேல் அன்பு நிலவும் என்று உறுதி செய்து கொண்டு அவர் அங்கிருந்து கிளம்பிய பிறகு, எந்த விதமான கலவரமும் நடக்கவில்லை. யாராவது முதல் கல்லை எறிந்தால் அது காந்தியைக் கொலை செய்வதற்கு சமமாகும் என்று இந்துக்களுக்கும், இசுலாமியர்களுக்கும் தெரிந்திருந்தது. கலவரத்தைத் தூண்டக் கூடிய தலைவர்களும், கலவரம் செய்யக் கூடிய முரடர்களும் வெல்லப்பட்டனர். அமைதியை விரும்பும் பெரும்பான்மையினரின் கைகள் பலப்படுத்தப்பட்டன.

இனிமேல் பாஞ்சாலத்துக்குச் செல்லலாம் என்று அமைதித் தூதர் தில்லி வருகிறார். தில்லியிலோ நிலைமை மிக மோசமாக இருந்தது. பாகிஸ்தானில் இருந்து அகதிகளாக வந்த இந்துக்களின் கோபம் தில்லி இசுலாமியர்கள் மீது பாயத் துடித்துக் கொண்டிருந்தது. தீவிர வாத இந்துக் கட்சியினர் பாகிஸ்தானை பழி வாங்குவதற்கு திட்டங்கள் தீட்டிக் கொண்டிருந்தனர்.

ஒரு இந்தியன் பாதுகாப்பாகவும் நம்பிக்கையுடனும் தில்லியில் நடமாட முடியவில்லை என்றால் சுய ஆட்சி கிடைத்தும் நாம் அடிமைகளாகத்தான் இருக்கிறோம். சகோதரர்களான இந்துக்களும் இசுலாமியரும் அமைதியாக வாழ முடியாத நிலையை காந்தியால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

அவருடைய கடைசி உண்ணா நோன்பு, நாடெங்கும் தீவிரவாத உணர்வுகளை கிள்ளி எறிந்து குலையாத அமைதியை அமைத்துத் தந்தது. இந்தியா என்ற தேசத்தை உருவாக்கி, அதில் தீண்டாமை என்ற பழக்கத்தை அவமானமாக்கி, அதில் பல மதத்தினரும் சேர்ந்து வாழும் சூழலை உருவாக்கிச் சென்ற அந்த மகாத்மாவின் அன்புதான் இன்றும் நம் தேசத்தை வழி நடத்திச் செல்கின்றது.

அந்தக் கொள்கைகளை உடைத்து எறிய முயலும் இந்துத்துவா குழுக்களின் முயற்சிகள் மண்ணாகிப் போகட்டும்.

திங்கள், மே 08, 2006

எனது பேராசை - 2

தேர்தல் இறுதி முடிவுகள்

திமுக - 80
காங்கிரசு - 30
பாமக - 20
வ கம்யூனிஸ்டு - 7
இ கம்யூனிஸ்டு - 8

அதிமுக - 65
மதிமுக - 15
விடுதலைச் சிறுத்தைகள் - 5

பிறர் - 4

கருணாநிதி அறிக்கை:

கூட்டணி ஆட்சி அமைக்கத் தயார் என்ற எங்கள் கட்சியின் நிலையை ஏற்றுக் கொண்டு தமிழக மக்கள் தீர்ப்பு அளித்துள்ளனர். எங்கள் கட்சியில் எனக்கு உறுதுணையாக இருந்து பல ஆண்டுகள் உழைத்துள்ள திரு அன்பழகன் முதலமைச்சர் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் கட்சிக்கும் ஆட்சிக்கும் வழி நடத்துவேன்.

கூட்டணிக் கட்சியான காங்கிரசின் திரு சிதம்பரம் அவர்கள் துணை முதலமைச்சராக பொறுப்பேற்க முன் வந்தால் நாங்கள் மிக்க மகிழ்ச்சி அடைவோம். அவர் அதை விரும்பாவிட்டால், காங்கிரசு ஆட்சி சுட்டிக் காட்டும் ஒருவரை துணை முதலமைச்சராக ஏற்றுக் கொள்கிறோம்.

முந்தைய ஆட்சி கொண்டு வந்த கேபிள் டிவி மசோதாவை திருத்தி, கேபிள் டிவி வினியோகத்தில் எந்த நிறுவனமும் ஏகபோகம் செலுத்தாமல் இருக்க சட்டம் ஏற்படுத்துவோம். ஒவ்வொரு பகுதியிலும் அரசால் நடத்தப்படும் சேவை உட்பட குறைந்தது நான்கு வினியோகஸ்தர்கள் இருக்க வேண்டும் என்று சட்டம் இயற்றுவோம்.

முந்தைய அரசு கொண்டு வந்த நல்ல திட்டங்களைத் தொடர்ந்து அமல்படுத்துவோம். அதிமுக எங்கள் ஆட்சிக்கு ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படும் என்று நம்புகிறோம்.

செல்வி ஜெயலலிதா, திரு வைகோ, திரு திருமாவளவன் போன்ற தலைவர்கள் தவறாமல் சட்டசபைக்கு வந்து மக்களுக்கு சேவை செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம். தேவைப்பட்டால் அவர்களை சந்தித்து விவாதிக்கவும் தயாராக உள்ளோம்.

முதலமைச்சர் உட்பட உயர் அதிகாரிகளின் மீதான புகார்களை விசாரிக்க ஒரு மக்கள் நீதிமன்றம் ஏற்படுத்தப்படும்.

என்னுடைய சொந்த வாழ்வில், என்னுடைய சொத்துகளை எல்லாம் என்னை வாழ வைத்த தமிழக மக்களுக்கும் தமிழ் மொழிக்கும் பயன்படும் வகையில் செலவளிக்க ஒரு தர்ம நிறுவனம் ஏற்படுத்தி அதற்கு தானம் செய்து விடுகிறேன். எளிமையான வாழ்க்கை நடத்த உறுதி பூணுகிறேன்.

ஜெயலலிதா அறிக்கை

மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறோம்.

வெற்றி பெற்றுள்ள திமுக தலைமையிலான கூட்டணிக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தத் தோல்விக்கு என்ன காரணங்கள் என்று ஆராய்ந்து பார்த்து கீழ்க் கண்ட முடிவுகளை அறிவிக்கிறோம்:

1. கட்சியில் இளைய தலைமுறை தலைவர்கள் வளர்வது ஊக்கப்படுத்தப்படும்.
2. ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக சட்டசபையிலும் வெளியிலும் செயல்படுவோம்.
3. எனது சொத்துகளையெல்லாம் தர்ம காரியங்களுக்கு தானம் செய்து விட்டு, நானும் எனது உடன் பிறவா சகோதரியும் எனக்குக் கிடைக்கப் போகும் சட்டமன்ற உறுப்பினர் சம்பளத்தில் வாழ முடிவு செய்துள்ளோம்.
4. மாதத்துக்கு ஒரு முறை தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் செய்து மக்களின் பிரச்சனைகளைப் புரித்து கொண்டு அவற்றை தீர்த்து வைக்கப் போராடுவோம்.

எனது பேராசை

தமிழகத்தின் இறுதி நிலவரம்
அதிமுக - 100
மதிமுக - 25
விடுதலைச் சிறுத்தைகள் - 5

திமுக - 60
காங்கிரசு - 25
பாமக - 6
இடது கம்யூனிஸ்டு - 6
வலது கம்யூனிஸ்டு - 6

திமுதிகவின் விஜயகாந்த் - 1

ஜெயலலிதா அறிக்கை

மக்கள் எங்களுக்கு இன்னுமொரு வாய்ப்பை அளித்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். கூட்டணிக் கட்சிகளான, மதிமுக மற்றும் விடுதலைச் சிறுத்தைகளுடன் இணைந்து ஆட்சி அமைப்போம். திரு திருமாவளவன் துணை முதலமைச்சராக பணி புரிய வேண்டும் என்று விரும்புகிறோம். திரு வைகோ அவர்கள் அரசில் முக்கிய பொறுப்பு ஒன்றை ஏற்று மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்று விரும்புகிறோம்.

எம்முடைய முந்தைய ஆட்சியில் எதிர்க்கட்சிகள் சட்டசபையில் பொறுப்பாக செயல்பட அனுமதிக்கவில்லை என்ற குற்றச் சாட்டை ஆராய்ந்து, இந்த முறை எங்கள் தவறுகளைத் திருத்திக் கொள்வோம். எஙகள் அமைச்சரவை கூட்டு முயற்சியில் தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லும்.

மத்திய அரசில் தமிழகத்தின் நலன்களை எடுத்துச் செல்லும் வகையில், தமிழகத்தின் 13 மத்திய அமைச்சர்களுடன் இணைந்து செயல்பட ஒரு ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்படும். அதில் பங்கேற்க அனைத்துக் கட்சியினரையும் வரவேற்கிறோம்.

தமிழகத்தில் அரசியல் நாகரீகம் குலைந்து விட்டது என்று பலர் எங்களிடம் சுட்டிக் காட்டினர். இனிமேல் தனிநபர் மீதான் தாக்குதல்களை அறவே நிறுத்தி விட எங்கள் கட்சி முடிவு செய்துள்ளது. எதிர்க் கட்சி தலைவர்களான, கலைஞர் கருணாநிதி, டாக்டர் ராமதாஸ், திரு சிதம்பரம் போன்றவர்களை நான் சந்தித்து, புதிய அரசுக்கு அவர்களது ஆசியையும், ஆக்க பூர்வமான எதிர்ப்பையும் கோருவேன்.

1. அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தத்தை இரும்புக் கரம் கொண்டு அடக்கியது எங்கள் முந்தைய ஆட்சியின் குறையாகச் சொல்லப்பட்டது. இன்னொரு முறை, அரசு ஊழியர்கள் அப்படிச் செயல்பட்டால், அதே மாதிரியான உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். அரசு ஊழியம் என்பது, மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய இடம். தொழிற்சாலைகள் போல லாப நோக்கில் செயல்படாத அரசு நிர்வாகத்தில் வேலை நிறுத்தம் போன்ற நடவடிக்கைகளுக்கு இடமே இல்லை.

2. இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் தமிழகம் முழுவதும் மது விலக்கு அமல்படுத்தப்படும். எங்கள் நிர்வாகத்தின் வழக்கமான கடுமையுடன், கள்ளச்சாராயம் ஒழிக்கப்படும்.

3. தவறு செய்பவர்கள் எந்தப் பதவியில் இருந்தாலும், எவ்வளவு செல்வாக்குடையவராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்ற எங்கள் அரசின் கொள்கை தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும்.

4. முதலமைச்சர் உட்பட உயர் பதவிகளில் இருப்பவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க மக்கள் நீதிமன்றம் அமைக்கப்படும்.

5. தமிழகத்தில் தமிழ் ஒரு பாடமாகவாவது கட்டாயமாக படிக்கப்பட வேண்டும் என்ற கொள்கை அனைத்துப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் அமல் படுத்தப்படும்.

6. தமிழகத்தை இந்தியாவிலேயே முதல் மாநிலமாகவும், உலக பொருளாதார மண்டலங்களில் முதன்மைப்படுத்தவும் காலவரையறுக்கப்பட்ட திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும்.

கலைஞர் அறிக்கை

மக்கள் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம். பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயல்படுவோம். செல்வி ஜெயலலிதா அவர்களின் அறிக்கையை வரவேற்கிறோம். மாநில அரசுடன் கை கோர்த்து, மாநிலத்துக்கான நலப் பணிகளை செயல்படுத்தப் பாடுபடுவோம்.

அனைத்து உறுப்பினர்களும் சட்டமன்றக் கூட்டங்களுக்கு தவறாமல் சென்று, அரசின் குறைகளையும் செயல் தவறுகளையும் ஆக்க பூர்வமாக இடித்துரைப்போம்.

தமிழகத்தையும் தமிழ் மொழியையும் உலகப் புகழ் பெற வைக்க அயராது பாடுபடுவோம்.

வெள்ளி, மே 05, 2006

டாடாவில் ஆறு ஆண்டுகள் - 3

நான் கல்லூரியில் படிக்கும்போது, இரண்டாம் ஆண்டு கோடை விடுமுறையின் போது நடைமுறைப் பயிற்சி என்று பல்லாவரத்தில் உள்ள ஒரு தோல் தொழிற்சாலைக்குப் போனேன். அந்த தொழிற்கூடம் அவ்வளவு பெரியது இல்லை. அதன் முதன்மை மேலாளரான பாலசந்தர் என்னையும் சுந்தரையும் நடக்கும் எல்லா வேலைகளையும் கற்றுக் கொள்ளச் சொன்னார்.

நான் முதலில் போன இடம், தோல்களின் மீது சூடான உலோகப் பலகையை அழுத்துவதன் மூலம் மேற்பரப்பில் பல்வேறு கோலங்களை ஏற்படுத்தும் இயந்திரத்துக்கு அருகில். அந்த இயந்திரத்தை இயக்க மூன்று பேர். ஒருவர் கறுப்பாக பெரிய மீசையுடன் பயில்வான் போல இருந்தார். அவர்தான் இயந்திரத்தின் கட்டுப்பாடுகளை அமைத்து இயக்குகிறார்.

இன்னொருவர், நடுத்தர வயதில், பிரஷ் மீசையுடன் காலையில் பையில் சாப்பாட்டு அடுக்குடன் வருகிறார். வந்த உடன், அங்கேயே வைத்துள்ள லுங்கி ஒன்றை அணிந்து கொள்கிறார். அவருடைய முழுநேர வேலை, இயந்திரத்தின் தட்டின் மீது, தோலை எடுத்து வைப்பது. ஒரு தோலை எடுத்து மேலே வைத்து, சுருக்கங்களை நீக்குகிறார். "டொய்ங் டொய்ங்" இயந்திரத்தின் கைப்பிடியை அழுத்தி தோலின் மீது கோல வடிவங்கள் பதிக்கிறார் இயக்குநர். தோலை வெளியே எடுத்து, அடுத்தத் தோலை வைக்கிறார், "டொய்ங் டொய்ங்", வெளியே எடுக்கிறார். உள்ளே வை, "டொய்ங் டொய்ங்", வெளியே எடு.

இப்படியே நாளைக்கு எட்டு மணிநேரம் அந்த இயந்திரத்தின் பின்னால் நிற்கிறார் இந்த மனிதர். நான் பார்த்த 15 நாளும் அவரது வேலை மாறவேயில்லை.

அவரது வீட்டில் காலையில் சமைத்து பையில் வைத்துக் கொடுத்த சாப்பாட்டை மதிய வேளையில் சாப்பிடுகிறார். மீண்டும் "டொய்ங்". அவரைப் பார்க்கும் போது என்னால் தாங்கவே முடியவில்லை. எப்படி ஒரு மனிதர் நடுத்தர வயதை அடைந்த பிறகு இப்படி ஒரு எளிய, சுவையற்ற வேலையில் மாட்டிக் கொண்டுள்ளார் என்று ஒரே ஆச்சரியம்.

டாடாவில் வேலை செய்யா ஆரம்பித்த பிறகு, இதன் பரிமாணம் முற்றிலும் புரிய ஆரம்பித்தது. தொழிற்சாலையில் ஒவ்வொரு தொழிலாளியும், உற்பத்திப் பொருள் உருவாகத் தேவையாக ஒரு சிறிய பணியைத்தான் செய்கிறார். அந்த சிறிய பணியை மட்டும் பார்த்தால் போரடித்து செத்து விடும் வகையில் இருக்கும் அந்த வேலை.

தரமான பொருள் ஒன்று சந்தைக்கு வந்து சேர்வது, இப்படி போரடிக்கும் வேலையை எப்படி சுவையாகப் பார்ப்பது என்று தொழிலாளிகளுக்குக் கற்றுக் கொடுத்துவிட்ட நிறுவனங்களிலிருந்துதான்.

பலவிதமான பரபரப்பான மன நிலையுடன், டாடா நிறுவனத்தின் இந்தூர் காட்சி அறையில் காத்திருந்தோம். அங்கு சமையல் காரராக இருந்தவர் எங்களிடம் தமிழில் பேச்சுக் கொடுத்தார். பக்கத்து மாளிகையில் ஒரு ஊர்தி வந்து நின்றது. அதுதான், நம்ம டைரக்டர் என்றார் அவர். "நீங்கள் இங்கே காத்திருப்பதைப் பார்த்தால் நிர்வாகப் பிரிவில் இருப்பவன்களுக்கு நல்லா கிடைக்கும்" என்று கூறினார்.

சில மணித்துளிகல் ஒரு நேபாளி வியர்க்க வியர்க்க வெள்ளைச் சீருடையில் வந்து சேர்ந்தார். "ஆப் கேலியே காடி பேஜா தா" என்று சொல்லி விட்டு, எங்களை ஒரு ஆட்டோவில் ஏற்றிக் கூட்டி சென்றார். அவர் டாடா விருந்தினர் மாளிகையில் பணி புரியும் பகதூர். இந்த பகதூரும் பல ஆண்டுகள் என் வாழ்வைத் தொட்டுச் சென்றார்.

ஆட்டோ ஒரு பல் மாடி கட்டிடத்தின் முன் வந்தது. ஜோபட் அபார்ட்மென்ட்ஸ் என்ற அந்த அடுக்குமாடி கட்டிடம்தான் அடுத்த ஒரு வருடம் எங்களது உறைவிடமாக இருக்கப் போகிறது. மேலே, நான்காவது தளத்தில் இருந்த இரண்டு குடியிருப்புகளை நிறுவனம் வாடகைக்கு எடுத்து பொறியியல் பட்டதாரி பயிற்சியாளர்கள் () தங்கியிருக்க கொடுத்திருந்தது.

மேலே போனால், எங்களது ஒரு ஆண்டு மூத்த சீனியர்கள் மூன்று பேர் எங்களை வரவேற்றார்கள். "நீங்கள் வருவது எங்களுக்கு ஏற்கனவே தெரியும்" என்று சொன்னபடியே. அடப்பாவிகளா, ரயில் நிலையத்துக்கு ஒரு வண்டி அனுப்ப ஏற்பாடு செய்திருக்கக் கூடாதா என்று கேட்காமல் இடத்தில் குடி புக முயலலானோம்.

செவ்வாய், மே 02, 2006

ஆயிரம் ஆண்டுகளின் தன்னிகரில்லாத் தலைவன் - 5

காந்தியின சத்திய சோதனை போன்ற எண்ண நேர்மை நிறைந்த தன் வாழ்க்கைக் கதை ஒன்றைக் காண்பது மிக அரிது. தான் ஒவ்வொரு வயதிலும் செய்த செய்ய மறந்தவற்றை எந்த விதமான மறைப்புகளும் இன்றி உலகத்துக்கு முன் வெளிப்படுத்திய துணிச்சல் அந்த நூலெங்கும் விரவிக் கிடக்கிறது.

எதையாவது மறைத்திருந்தாலோ, திரித்திருந்தாலோ நமக்கு எப்படி தெரியும் என்ற வாதம் மனதில் தோன்றலாம். சத்திய சோதனையைப் படித்த யாருக்கும் அப்படி ஒரு எண்ணம் தோன்றாது என்பது உறுதி.

தான் கூறிய பொய்கள், திருட்டு தனது பலகீனங்கள், அவற்றைப் புரிந்து கொள்ள தான் நடத்திய சோதனைகள் என்று படிப்பவர் மனதைத் தொட்டு விடும் இந்தப் புத்தகம் மிக மலிவு விலையில் எல்லா மொழிகளிலும் கிடைக்கிறது. தமிழ்ப் பதிப்பு 30 ரூபாய்தான்.

தினமலர் == கட்டுரை மலர் - 2

இப்போது நடக்கும் தேர்தலைப் போன்ற பரபரப்பான ஒரு தேர்தல் 1989ல் நடந்தது.

திமுக, அதிமுக - ஜெ அணி, அதிமுக - ஜானகி அணி, காங்கிரசு என்று நான்கு முனைப் போட்டி. எம்ஜிஆர் இறந்த பிறகு நடந்த வாரிசுச் சண்டையில் ஜானகி அம்மையாரை முன்னிருத்தி ஆர் எம் வீரப்பன் (இரட்டைப் புறா சின்னம்) மற்றும் நெடுஞ்செழியன், திருநாவுக்கரசு, பண்ருட்டி ராமச்சந்திரன், கேகேஎஸ் எஸ் ஆர் ராமசந்திரன் என்ற இளம் தலைவர்களின் ஆதரவுடன் ஜெ அணியும் (சேவல் சின்னம்) மல்லுக் கட்டி நிற்க, காங்கிரசு, இருபது ஆண்டுகளுக்கு பிறகு நமக்கு தமிழ் நாட்டில் வாழ்வு வரப் போகிறது என்று யாருடனும் கூட்டுச் சேராமல் நின்றது.

தினமலரில் காங்கிரசை ஆதரித்தும் ஒரு பெரிய இயக்கமே நடந்தது. ராஜீவ் காந்தியின் வருகைகளால் தமிழகமே எழுச்சி அடைந்து விட்டதையும், ஜெ அணி கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி விட்டதையும், சித்தரிக்க பன்முனை தாக்குதல் நடத்தியது. "வாசகர்" கடிதங்கள், செய்தி "குறிப்புகள்", தொகுதி வாரியாக அலசல் என்று தினமலரில் அரசியல் அலசல் கொடி கட்டிப் பறந்தது.

தேர்தல் தினத்தன்று முதல் பக்கத்தில் 234 தொகுதிகளுக்குமான கணிப்பை வெளியிட்டு, காங்கிரசும், திமுகவும் ஏறக்குறைய சமமான இடங்களில் (ஆளுக்கு 90க்கு பக்கம் என்று நினைவு) வெற்றி பெறப்போவதாகவும், ஜானகி அணி ஜெயலலிதா அணியை பின் தள்ளி விட்டதாகவும் தொகுதிவாரியாக அலசி தொண்டு புரிந்தது.

கடைசியில் அத்தகைய அலசல்களை முற்றிலும் தவறாக்கி திமுக அறுதிப் பெரும்பான்மை பெற்றது. காங்கிரசும், ஜெயலலிதா அணியும் சமமான எண்ணிக்கையில் தொகுதிகளைக் கைப்பற்றின (30க்குப் பக்கத்தில்). ஜா அணியில் பி எச் பாண்டியனைச் தவிர ஜானகி உட்பட அனைவரும் மண்ணைக் கவ்வினர். அதிமுக அணிகள் விரைவாக ஒன்று சேர்ந்து இரட்டை இலை சின்னத்தை திரும்பப் பெற்றன.

கொஞ்சம் கூடக் கூச்சமே இல்லாமல் தினமலர் வெளியிடும் செய்தித் திரிப்புகளை அப்பட்டமாக வெளிப்படுத்திய ஒரு நிகழ்வு இது.

டாடாவில் ஆறு ஆண்டுகள் - 2

அந்த இடைப்பட்ட காலங்களில் டாடா பற்றி விபரங்களை எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கொஞ்சமே கொஞ்சம் முயற்சிகள் செய்திருந்தேன். பார்த்திபன் என்பவர் டாடாவில் வேலை பார்த்தவர், இப்போது பல்லாவரத்தில் பணி புரிகிறார் என்று கேள்விப்பட்டு அவரைப் பார்க்கப் போயிருந்தேன். நானும் ஒரு பேசா மடந்தை, அவரும் ஒன்று கேட்டால் பாதிப் பதில் சொல்பவர். "நல்ல இடம், போய் நாலஞ்சு வருஷம் நல்லா கத்துக்கிட்டு வாங்க, பெரிய ஃபேக்டரி" என்றெல்லாம் சொல்லி அனுப்பினார்.

எங்கள் படிப்பு நிறைவு விருந்தில், டாக்டர் கன்னா, தோல் ஆராய்ச்சி நிறுவனத்தின் துணை இயக்குநர், நாங்கள் டாடா போவதைக் கேட்டு "ஏன் தென் இந்தியர்கள் டாடாவில் நிலைத்து இருப்பதில்லை?" என்று கேட்க, சுந்தர் "அங்கே கௌல் என்று ஒருத்தர் இருக்கிறாராம். யாரையும் நிலைக்க விடுவதில்லையாம்" என்று போட்டு வைத்தான். அதற்கு டாக்டர் கன்னா "அதெல்லாம் நான்சென்ஸ், நீங்க நல்லா சாதிச்சா கண்டிப்பா பெரிய ஆளாக வரலாம்." என்றார்.

மூன்றாம் ஆண்டு படிக்கும்போது, ஐஎஸ்ஓ 9000 பற்றி தோல் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஒரு கருத்தரங்கில் டாடா நிறுவனத்தின் ஒரு இயக்குநர் வீரேன் மேஹ்ரோத்ரா கலந்து கொண்டார். தாடி செறிந்த முகத்துடன், கண்ணாடி வழியே தெரியும் முழிக் கண்ணுடன் ஒலிவாங்கியில் பேசிய அவர், டாடா தோல் பிரிவு ஐஎஸ்ஓ பெற என்ன என்ன முயற்சிகள் எடுத்து வருகின்றது என்று குறிப்பிட்டார்.

இந்த ஒகே கௌலும், வீரேன் மெஹ்ரோத்ராவும் அடுத்த ஆறு வருடங்களுக்கு என்னுடைய வாழ்வில் முக்கியப் பங்கு ஆற்றப் போகிறார்கள் என்று அவர்களை முதல் முதலில் சந்தித்த போது எனக்குத் தெரிந்திருக்கவில்லை.

இப்போது வடக்கு நோக்கிச் செல்லும் ரயில்களில் இரண்டாம் தர எக்ஸ்பிரசான கொச்சி - இந்தூர் ரயிலில் அமர்ந்து கொண்டு இதை எல்லாம் அசை போட்டுக் கொண்டேன். சென்னையிலிருந்து இந்தூர் போகும் இந்த ரயில் வாரத்துக்கு ஒரு முறைதான் ஓடியது. வழக்கமாக பயணிப்பவர்கள், போபால் வரை தில்லி வரை போகும் தமிழ்நாடு விரைவு வண்டியிலோ, ஜிடி விரைவு வண்டியிலோ பயணித்து, போபாலிலிருந்து இரவுப் பேருந்தில் இந்தூர் போய் விடுவார்கள். எங்களைப் போன்ற அப்பாவிகள்தான் நேரடி ரயில் என்று இந்த ரயிலில் ஏறியிருந்தோம். ரயிலில் சாப்பாட்டு வசதி கிடையாது. வழியில் சாப்பிடுவதற்காக நிலையங்களில் நின்று நின்று கூட்டிச் சென்றது ரயில். வியாழன் இரவு 11.30 மணிக்கு கிளம்பிய ரயில் அந்த இரவு, வெள்ளிக் கிழமை பகல், இரவும் கழிந்து இன்னும் ஓடிக் கொண்டிருந்தது. சனிக் கிழமை மதியம் மூன்று மணிக்குப் பிறகு வண்டி இந்தூர் வந்து சேர்ந்து விட்டது.

அதற்குள் நான்கு வீரர்களில் சுரத்து எல்லாம் வற்றி விட்டது. வழியில் கிடைத்ததைச் சாப்பிட்டு, ரயிலிலேயே தூங்கி எழுந்து, கழுவி கதை கந்தலாகி விட்டிருந்தது. நம்மை வரவேற்க யாராவது வந்திருப்பார்கள் என்று வெளியே போய்ப் பார்த்தால் அப்படி யாரும் தென்படவில்லை. பின்னால் உங்களை கூப்பிட்டு வர கார் அனுப்பியிருந்தது என்று நிர்வாகப் பிரிவு மேலாளர் சொன்னதை நம்பவே முடியவில்லை.

நம்மை ஞாபகம் வைத்திருப்பார்களா அல்லது வேலையும் இல்லை ஒன்றும் இல்லை என்று திருப்பி ரயிலேற்று அனுப்பி விடுவார்களா என்று நடுக்கம் கொடுக்க ஆரம்பித்து விட்டது. நிலையத்துக்கு வெளியே வந்து தொலைபேச முயன்றோம். ஒன்றும் சரிவராமல், ஒரு ஆட்டோ ரிக்சா பேசி டாடா அலுவலகத்துக்கு கொண்டு போகச் சொன்னோம். உடைந்த இந்தி. நான் பிரவேசிகா வரை முடித்த இந்தி பண்டிதனாக இருந்தும் சரியான நேரத்தில் தேவையான வாக்கியங்கள் வாயில் வந்துவிடவில்லை.

ஆனால் அந்த ஊர் ஆட்டோ டிரைவர்கள், இல்லை பொதுவாக மக்களே, தங்கமானவர்கள். கிட்டத்தட்ட ஒரு பெரிய்ய கிராமம் போன்ற இந்தூரில் கபடு சூது குறைவாகவே இருப்பதாக பின் அனுபவம் கற்றுத் தந்தது. இருந்தாலும், அன்றைக்கு அவநம்பிக்கையுடனேயே டாடா தோல் நிறுவனத்தின் காட்சி அறைக்கு ஆட்டோ அழைத்து வர வந்து சேர்ந்தோம்.

திங்கள், மே 01, 2006

இட ஒதுக்கீட்டுக்கு எதிரான கூத்துகள்

இந்த வார ஃபிரன்ட் லைன் இதழில், உயர் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு சம்பந்தமாக நடந்து வரும் விவாதங்களை, எதிர்த்து நடைபெறும் போராட்டங்களைப் பற்றிய கவர் ஸ்டோரி வெளியாகியுள்ளது.

1. இந்த எதிர்ப்புக் குரல்கள் உயர்க் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு செய்த முன் அனுபவம் இல்லாத வட மாநிலங்களில் மட்டுமே ஒலிக்கின்றன. தமிழ் நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரா மற்றும், மகாராஷ்டிரா, குஜராத் போன்ற 50% அல்லது அதற்கு மேல் இட ஒதுக்கீட்டை செயல்படுத்தி வரும் மாநிலங்களில் எந்த முணுமுணுப்பு இல்லை.

2. மேற்குறிப்பிட்ட மாநிலங்களின் உயர் கல்வி நிறுவங்களின் தரமும், பொருளாதார வளர்ச்சியும் எந்த வகையிலும் குறைந்து விடாமல், மிக உயர்ந்த்தே உள்ளன.

3. எல்லா அரசியல் கட்சிகளும் இட ஒதுக்கீட்டை ஆதரிக்கின்றன.

4. இந்திய அரசியலமைப்புச் சட்டமும், பின்னர் செய்யப்பட்ட திருத்தங்களும், இட ஒதுக்கீட்டின் மூலமாக சமூகத்தில் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட பிரிவினரை முன்னேற்ற உறுதியான சட்ட ஆதரவு தருகின்றன.

5. "அவர்க்ளையெல்லாம் கோயிலுக்குள் விட்டால் கோயில்களின் புனிதம் கெட்டு விடும்" என்பது போல "இட ஒதுக்கீடு அளித்தால், கல்வி நிறுவனங்களின் தரம் குன்றி விடும்" என்று தம் ஏகபோக உரிமை விட்டுக் கொடுக்க விரும்பாத சிறுபான்மை குழுவினர் வாதிடுகின்றனர்.

படித்துப் பாருங்கள்

நவீன பொருளாதார இயலின் சிற்பிகள்

ஸ்காட்லாந்தைச் சார்ந்த ஆதம் ஸ்மித் 1776ல் சந்தைப் பொருளாதரத்தின் அடிப்படைகளை அலசும் "தேசங்களின் வளங்களின் இயல்பும், காரணங்களும்" என்ற தனது நூலை வெளியிட்டார். நவீன பொருளாதாரவியலின் தந்தை எனப்படும் ஆதம் ஸ்மித்தின் இந்த நூல் இன்றும் நாம் கடையில் வாங்கும் கத்திரிக்காய் விலையிலிருந்து, தொழிற்சாலையில் தொழிலாளர்களின் கூலி நிர்ணயம் வரை எப்படி தீர்மனிக்கப்படுகின்றன என்ற சமூகப் பொருளாதாரக் காரணிகளை விளக்குகிறது.

இரண்டாவதாக, செருமானியரான கார்ல் மார்க்சு எழுதிய தஸ் காபிடல் (1867) என்ற உலகின் வரைபடங்களையே மாற்றி அமைக்கக் காரணமாயிருந்த நூல். சந்தைப் பொருளாதரத்தில் இயங்கும் பல்வேறு காரணிகள், அவற்றின் பரிணாம வளர்ச்சி என்று புலமையுடன் அலசி, உலக சமூகங்கள் எப்படிப்பட்ட மாற்றங்களை சந்திக்கும் என்று ஆழமான தொலைநோக்குடன் எழுதப்பட்ட நூல் இது. இவரின் தத்துவ அடிப்படையில் செய்யப்பட்ட பரிசோதனைகள் மனித குலத்தை மிகவும் துன்புறுத்தி விட்டாலும், அவரது சிந்தனைகள் இன்றைக்கும் பொருளாதார வல்லுநர்களுக்கு வழிகாட்டியாக உள்ளன.

மூன்றாவதாக ஜான் மேனார்ட் கீன்ஸ். இங்கிலாந்தைச் சேர்ந்த இவரின் கொள்கைகள் இன்றைய உலக நாடுகளின் அரசு பொருளாதரச் செயல்களுக்கு அடிப்படைகளாக உள்ளன. பொருளாதாரவியலின் படி அரசாங்கம் எதுவுமே செய்யாமல் சும்மா இருந்தாலே, நீண்ட காலத்தில் எல்லா குறைகளும் நிவர்த்தி செய்யப்பட்டு விடும் என்பதை மறுத்து எழுதப்பட்ட "வேலைவாய்ப்பு, வட்டிவீதம், பணம் பற்றிய் கோட்பாடுகள்" என்ற இவரது நூல் 1936ல் வெளியிடப்பட்டது. அரசாங்கம் தனது முனைப்பான செயல்களால் எப்படி நாட்டில் வேலை வாய்ப்புகளையும், பொருளாதார வளர்ச்சியையும் உருவாக்கலாம் என்ற இவரது அறிவுரைகளின் படி செயல்பட்துதான் அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட்டின் New Deal (1930s) எனப்படும் அமெரிக்க பொருளாதரத்தை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் சென்ற திட்டங்கள்.

இவர்களுடன், இரண்டாவது உலகப்போருக்குப் பின் வந்த மில்டன் ஃபிரீட்மானையும், ஜான் கென்னெத் கால்பிரைத்தையும் சேர்த்துக் கொண்டால நவீன பொருளாதாரச் சிந்தனைகளின் பெரும்பான்மையானவற்றின் அடிப்படைகளைப் புரிந்து கொள்ளலாம்.

முத்திரை பதித்த அமெரிக்கர்

இந்தியர்களால் நேசிக்கப்பட்ட மிகச் சில அமெரிக்கர்களில் ஜான் கென்னத் கால்ப்ரைத் ஒருவர் என்கிறது இந்துவில் வெளியாகியுள்ள இரங்கல் செய்தி.

சனிக்கிழமையன்று உயிர் நீத்த கால்பிரைத், அமெரிக்காவின் பிரபலமான பொருளாதார அறிஞர்களில் ஒருவர். 1960களில், கென்னடி ஆட்சியின் போது, இந்தியாவில் அமெரிக்கத் தூதராகப் பணி புரிந்த கால்பிரைத், 1956ல் இந்தியாவுக்கு வந்திருந்த போது, ஒரு சமூகத்தின் வளம் அதிகரிக்க ஆரம்பிக்கும் போது, வணிக நிறுவனங்கள் தேவையற்ற ஆடம்பரப் பொருட்களுக்கான தேவையை விளம்பரங்கள் மூலம் உருவாக்கி சமூகத்தின் வாய்ப்புக் குறைந்த பகுதியினரை புறக்கணிக்கின்றன என்று எண்ணத் தொடங்கினாராம்.

1958ல் வெளியான அவரது வளம் நிறைந்த சமூகம் (The Affluent Society) என்ற நூல் பொருளாதரத் துறையில் ஏற்படுத்திய தாக்கம் இன்றும் உணரப்படுகிறது.

தனியார் தொழில்களும், தனி மனிதர்களும் பணக்காரர்களாகி, தமக்கு வேண்டியவற்றை மட்டும் உற்பத்தி செய்து கொண்டிருக்க, பொதுத் தேவைகளான, கல்வி, மருத்துவ வசதி போன்ற சமூகக் கட்டமைப்புகள் புறக்கணிக்கப்படுகின்றன என்று இந்தப் புத்தகம் குற்றம் சாட்டியது. Conventional Wisdom என்ற ஆங்கிலச் சொற்றடரை உருவாக்கி இந்த நூலில் முதல் முதலில் பயன்படுத்தினார் கால்பிரைத்.

சமூக மற்றும் பொதுக் கட்டமைப்புகளைப் பெருக்க அரசுகள் முனைந்து செயல்பட வேண்டும். சந்தைப் பொருளாதரத்தில் நிறுவனங்களுக்கிடையேயான போட்டிகள் எல்லா தேவைகளையும் பார்த்துக் கொள்ளும் என்று இருக்கக் கூடாது என்ற முற்போக்கு பொருளாதாரக் கொள்கைகளை வலியுறுத்தினார் கால்பிரைத்.

அவர் மட்டும் கனடாவில் பிறந்திருக்காமல் இயற்கையான அமெரிக்கக் குடிமகனாக இருந்திருந்தால், அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஆவதற்கான தகுதிகளும், தாக்கமும் கொண்டிருந்தார் என்று சிலர் கருதுகின்றனர்.

தொழில் நிறுவனங்களின் தர்மச் செலவுகள்

பில் கேட்ஸ் எய்ட்சு நோயாளிகளின் நலனுக்காக இத்தனை பில்லியன் டாலர் கொடுத்தார். இன்ஃபோசிஸ் சார்ந்த ஒரு அமைப்பு, பள்ளிக்கூடங்களுக்கு, மருத்துவமனைகளுக்கு தானம் செய்கிறது. இவை எல்லாம் வர்த்தக நோக்கில் ஓடும் இந்த உலகில் நல்ல உள்ளங்களும் உள்ளன என்பதைக் காட்டும் சில செயல்கள்.

கொஞ்சம் பொறுங்கள். இவை உண்மையிலேயே சமூகத்துக்கு நல்ல பணிகள்தானா? இந்தப் பணம் வேறு எங்காவது இன்னும் நல்லவிதத்தில் பயன்படுமா?

ஒர் வணிக/தொழில் நிறுவனத்துக்கு லாபம் எங்கிருந்து வருகிறது? செலவுகள் எல்லாம் போக, விற்ற விலையின் மீதம் தான் லாபம். இந்த லாபத்தை எடுத்துதான், இப்படி செலவு செய்கிறார்கள், தர்மத்தை வளர்க்கிறார்கள்.

ஆனால், பொருளாதார விதிகளின் படி சரியாக இயங்கும் ஒரு சந்தைப் பொருளாதரத்தில் அதிகப்படியான லாபமே இருக்க முடியாது. அதாவது, பொருட்களை வாங்கும் போதும் விற்கும்போதும், சமமாகப் போட்டியை ஒரு நிறுவனம் சந்தித்தால் வரும் பணம் செலவுகள் எல்லாம் போக எதுவும் மிஞ்சாது.

பணம் வரும் வழி ஒரே வழி - வாடிக்கையாளர்கள் பொருட்களுக்கு கொடுக்கும் விலை.
பணம் போகும் வழிகள் - சம்பளம்/கூலி, மூலப் பொருட்களுக்கான விலை, தொழிற்கூட வாடகை, மின்சாரம், வங்கி அல்லது பிற கடன்களுக்கான வட்டி, முதலாளி முதலீடு செய்த பணத்துக்கான வருமானம் (இன்னும் சில).

இந்த இரண்டு வகைகளையும் கழித்தால் எதுவும் மிஞ்சக் கூடாது. ஒரு நிறுவனத்துக்கு தானம் தருமம் செய்யுமளவு பணம் மிஞ்சுகிறது என்றால் அந்தப் பணம் செலவுக் கணக்கில் சரியான விலை கொடுக்காததாலோ, வரவுக் கணக்கில் அதிகமான விலை பெற்றதாலோ வந்திருக்கலாம்.

ஒரு ஊழியரை வேலையில் வைப்பதால் நிறுவனத்தின் வருவாய் எவ்வளவு அதிகமாகிறதோ அவ்வளவையும் சம்பளமாகக் கொடுப்பது பொருளாதார விதி. வேலைக்கு எடுக்கும் போது, ஊழியர் எவ்வளவு காசுக்கு ஒத்துக் கொள்கிறாரோ அந்த சம்பளத்தைக் கொடுத்து மீதியை சேமித்துக் கொள்வது இன்றைய பொருளாதார நடப்பின் விதி. ஊழியர் ஏன் குறைந்த ஊதியத்தை ஒத்துக் கொள்ள வேண்டும் ? இல்லையென்றால் வீட்டில் அடுப்பெரியாது. வரிசையில் நிற்கும் அடுத்தவன் இந்த வேலையில் அமர்ந்து கொள்வான்.

இதே மாதிரி, மூலப் பொருள் வாங்கும் போது, விவசாயிக்கு காசு தேவை என்று புரிந்து கொண்டு, என்ன விலைக்கு வாங்க முடியுமோ அந்த விலையில் விளை பொருளை வாங்கிக் கொள்வது நிறுவனத்தின் "லாபம்" அதிகரிக்க இன்னொரு வழி.

சந்தையில் ஏகபோக ஆதிக்கத்தினால், நுகர்வோருக்கு கொடுக்க வேண்டிய விலையை விட ஏற்றி விற்பது இன்னும் ஒரு வழி.

இது எல்லாம் முடிந்து, அரசுக்கு வரி செலுத்தும் நேரம் வரும்போது கணக்குகளை மாற்றியமைத்து வரி அளவைக் குறைத்துக் கொள்வது இன்னும் ஒரு வழி.

இப்படி எல்லாம் சேர்ந்த லாபப் பணத்தைத்தான், மைக்ரோசாப்டுகளும், இன்ஃபோசிஸ்சுகளும், டாடாக்களும் பொதுநலத் தொண்டாக செலவளிக்கின்றன. அப்படிச் செலவளிப்பதைப் பாராட்ட வேண்டியதுதானே!

வணிக நிறுவனம் ஏற்படுத்தியதின் நோக்கம், தொழில் செய்வது. அதற்குத் திறமையுள்ளவர்கள் அங்கு வேலை செய்கிறார்கள். சமூகத்துக்கு என்ன தேவை என்று அவர்கள் எப்படி முடிவு செய்ய முடியும்?

அப்படி முடிவு செய்யத்தான் அரசாங்கமும், அரசியல் தலைவர்களும் உள்ளனர். நிறுவனத்தில் அதிகப்படியாக வரும் லாபத்துக்கு மூடி மறைக்காமல் முழுவதாக வரி செலுத்துவது, மிஞ்சி இருப்பதை பங்கு தாரர்களுக்கு பகிர்ந்தளித்து, அவர்களும் தம்முடைய வருமான வரியைச் சரியாகச் செலுத்துவதும்தான் இவர்கள் செய்யும் மிகப் பெரிய சமூகத் தொண்டாக இருக்கும்.

அப்படியும் வரும் லாபம் மிக அதிகம் என்று கருதினால், ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, வாடிக்கையாளருக்கு குறைந்த விலை அல்லது அதிகமான தரம் அல்லது மூலப் பொருள் தருபவர்களுக்கு கொஞ்சம் அதிக விலை என்று ஆரம்பிக்கலாம்.

ராகுல் காந்தி vs தயாநிதி மாறன், அன்புமணி ராமதாஸ்

(முந்தைய முயற்சிகளில் நீளமான தலைப்பால் இந்த பதிவு பிளாக்கரிலிருந்து மறைந்து விட்டது. சுட்டிக் காட்டிய மதிக்கு நன்றி. )

ராகுல் காந்தி என்ற இளைஞர் இந்திய அரசியலில் நுழைந்தார். போன தேர்தலில் அமேதி தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினரானார். ராகுல் காந்தி வந்து விட்டார், அவரை கட்சித் தலைவராக்கி விடுங்கள், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் ஆக்கி விடுங்கள் என்றெல்லாம் கூக்குரலிட்டனர், கட்சியின் ஜால்ராக் குழுக்கள். அவரும் அவரது அம்மாவும் நினைத்திருந்தால் மத்தியில் விரும்பிய அமைச்சரவைப் பதவியைக் கேட்டுப் பெற்றிருக்கலாம். பிரதம மந்திரி தலையாட்டும் ரப்பர் ஸ்டாம்பு மன்மோகன் சிங் தானே.

அப்படி ஒரு வாய்ப்பைப் பெற்றிருந்தும், நீண்ட கால அரசியல் வாழ்வைக் கருத்தில் கொண்டு உடனடியாக பதவிகள் எதையும் ஏற்றுக் கொள்ள வேண்டாம். கட்சியில் களத்தில் இறங்கி வேலை செய்வோம் என்று முடிவு செய்தது அவரது முதிர்ச்சி. அவரும் படித்தவர், வெற்றிகரமாக தொழில் செய்து வந்தவர், ஆனால் அரசியல் தலைமை என்று வந்தால் அதற்குத் தேவை மக்களுக்கிடைய பணி செய்வது என்று தெரிந்து காத்திருக்கிறார் அந்த இளைஞர். குடும்ப அரசியலை செவ்வனே நடத்தும் பாரம்பரியத்தில் கற்றுக் கொண்டதாயிருக்கும்.

நம்முடைய அவசரக் குடுக்கை, தயாநிதி மாறனும் அன்புமணி ராமதாஸும், அரசியலில் இறங்கி கால் கூட நனையவில்லை. உடனேயே மத்தியில் காபினட் அமைச்சர்களாகி விட்டார்கள். அவர்களுக்கு புத்திமதி சொல்ல அவர்கள் வீட்டு பெரியவர்களுக்கும் மதி இல்லை. பெரியவர்களின் பேராசை தானே இந்த இளைஞர்களை வழி நடத்தியது.

மருத்துவம் படித்ததால் சுகாதரத்துறை அமைச்சராம், தகவல் தொடர்பு துறை் நிறுவனத்தை நிர்வகித்ததால், அந்தத் துறையின் பொறுப்பாம். 'ஜனநாயக முறையில் நம்பிக்கை கொண்டவர்கள் நாங்கள், சர்வாதிகாரத்தை ஒழிப்போம்' என்று வாய் கிழியப் பேசும் இவர்களில் ஒருவர், தேர்தலையே சந்திக்க வைக்காமல் தன் மகனை அமைச்சராக்கவும், மற்றொருவர் பிரதமரின் அதிகாரத்தை அடி வெட்டி, மூன்றாம் மனிதரிடம் அமைச்சகப் பொறுப்புகளுக்கான் ஒப்பந்தம் போட்டுக் கொள்ளவும் கூசாமல் துணிந்தனர்.

சோனியா காந்தியிடமும், ராகுல் காந்தியுடமும் கட்டணம் செலுத்தி, பாடம் கேட்க வேண்டும் இவர்கள்.