செவ்வாய், ஜூலை 31, 2007

சொல்லடி சிவசக்தி

தேடிச் சோறுநிதந் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிகவுழன்று
பிறர் வாடப் பலசெயல்கள்செய்து
நரை கூடிக் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போல
நான் வீழ்வே னென்று நினைத் தாயோ?

- பாரதி
(நினைவூட்டலுக்கு நன்றி - நந்தா)

ஞாயிறு, ஜூலை 22, 2007

இரும்பு குளிருது, மரம் குளிரலை. ஏன்?

குளிர் காலத்தில் சிமின்டு தரையில் படுத்தால் குளிரும். பாய் விரித்துப் படுத்தால் குளிருவதில்லை. உலோகப் பரப்பைத் தொட்டால் குளிர்கிறது, மரப்பரப்பு குளிருவதில்லை.

நம்ம உடம்பிலிருந்து சூட்டை கடத்தும் பரப்புகளைத் தொட்டால் நம் உடல் வெப்பத்தை இழப்பதால் குளிர்கிறது. வெப்பத்தைக் கடத்த முடியாத பரப்புகளைத் தொடும் போது குளிர்வதில்லை.

அதே போலக் வெளியில் போகும் போது கம்பளி ஆடை அணிவது உடல் வெப்பத்தை இழக்காமல் காத்துக் கொள்ள மட்டுமே. கம்பளி ஆடைக்கு என்று கதகதப்பாக்கும் இயல்பு கிடையாது.

விடையளித்த (முந்தைய பதிவில்) வவ்வாலுக்கும், பெயர் சொல்லாமல் ஆங்கிலத்தில் பின்னூட்டமிட்ட நண்பருக்கும் நன்றி.

அடுத்த கேள்வி:
தோசை சாப்பிட்டால் அதிகமா தண்ணீர் தவிப்பது ஏன்?

வெள்ளி, ஜூலை 20, 2007

சாப்பிட்டவுடன் தூக்கம் வருவது ஏன்?

விடை உதவி - வவ்வால்

"பொதுவாக நம் உடலின் ரத்த ஓட்டத்தில் 40 சதவீதம் மூளைக்கு , அதாவது தலைப்பகுதிக்கு போய்விடும், சாப்பிட்டவுடன், செறிமானம், மற்றும் உட்கிரகித்தலுக்காக அதிக ரத்த ஓட்டம் ... வயிற்றின் பக்கம் திருப்பப்படும் எனவே மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் குறையும் அதனால் ஒரு மந்தமான நிலை ஏற்படும் ,அதுவே தூக்கத்திற்கு அழைத்து செல்லவும் காரணம் "

இணையத்தில் தேடியதில் வேறு சில காரணங்களும் சொல்லப்பட்டாலும் பெரும்பாலான கட்டுரைகள் ரத்த ஓட்டம் செரிமானத்துக்கு அதிகமாகத் தேவைப் படுவதால், மூளைக்கு ரத்த ஓட்டம் குறைந்து மந்த நிலை ஏற்படுகின்றது என்றே சொல்கின்றன.

விழித்திருந்து படிக்க வேண்டும் என்றால் வயிறு நிறைய சாப்பிடாமல் எளிதில் செரிக்கக் கூடிய உணவுகளைச் சாப்பிட வேண்டும்.

மதியம் சாப்பிட்ட பிறகு அரை மணி நேரம் தலை சாய்த்தல் கேட்கிறது என்றால், கொஞ்சம் யோசியுங்க.

அடுத்த கேள்வி:

உலோகம் குளிர்ச்சியாகவும், மரக்கட்டை குளிராமலும் இருப்பது ஏன்?

தொலைக்காட்சி நிகழ்ச்சி அனுபவங்கள்

பன்னிரண்டு மணி நிகழ்ச்சிக்கு பத்தரைக்கு வரச் சொல்லியிருந்தார்கள். சிறிது நேரமாவது என்ன பேசப் போகிறோம் என்று திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். நான் ஆரம்பித்த திசையைப் பார்த்து நிகழ்ச்சி இயக்குநருக்கு உதறல் எடுத்து விட்டது. 'இது போலப் பேசினால் சி என் என் ஐபிஎன் பார்க்கிறவனுக்குத்தான் புரியும். நம்ம நிகழ்ச்சியில செங்கல் பட்டுக்கு அப்பால இருப்பவங்கதான் கேள்வி கேட்கப் போறாங்க. என் பையன் பிஎஸ்சி கெமிஸ்ட்ரி படிச்சிருக்கான், எப்படி வேலை கிடைக்கும், இப்படி நடைமுறைக் கேள்விகளாத்தான் இருக்கும்' என்று தரைக்கு இறக்கினார்.

இயக்குனர் கெட்டிக்காரத்தனமாக பொருளை அலசிக் கேள்விகளை தொகுப்பாளினிக்கு கோடி காட்டினார். தொகுப்பாளினி, ஆங்கிலத்தில் குறிப்புகள் எழுதி வைத்துக் கொண்டு, வாக்கியங்களை ஒத்திகை பார்த்த வண்ணம் இருந்தார். நேரடி ஒளிபரப்பானதால் எங்கும் தடுமாறி விடக் கூடாது என்று கவனம்.

பதினொன்றரைக்கெல்லாம் நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு அருகில் ஒப்பனை அறை. பான் கேக் என்று ஒன்றைத் தடவித் தடவி முகத்தை மினுமினுக்க முயன்றார் அந்த ஒப்பனையாளர். 'எல்லாம் அனுபவம்தான் சார், படிப்பெல்லாம் படிச்சி இந்த வேலை செய்ய முடியாது' என்று விளக்கம் கேட்டுக் கொண்டேன்.

தலையை அங்கும் இங்கும் நகர்த்த முடியாமல் ஒலிக் கருவி ஒரு காதில், சட்டை மேல் பொத்தானுக்கு அருகில் ஒலி வாங்கி. தொகுப்பாளினியைப் பார்த்து ஒரு படப் பெட்டி. நான் பார்க்க இன்னொரு திசையில் பெட்டி. ஒரு ஏழெட்டு பேர், மிகத் துல்லியமாக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய ஏற்பாடுகள். சலித்துப் போன முகத்தோடு எதிரில் ஒளிப் பதிவாளர். நிலையாக அமைக்கப்பட்ட கருவியை இயக்க வேண்டியிருக்கவில்லை. ஆனாலும் அதற்கான தயாரிப்புகள் திறன் தேவைப்படுவதாகத்தான் இருக்க வேண்டும்.

இன்னும் 10 நிமிடங்கள், எட்டு நிமிடங்கள், 40 விநாடிகள், இருபது விநாடிகள் என்று எண்ணிக் கொண்டே, ஆரம்ப வசனங்களை மனப்பாடம் செய்து கொண்டே இருந்தார் தொகுப்பாளினி. 'ஹலோ வியூவர்ஸ், வெல்கம் டு மெடுமிக்ஸ் ஹலோ ஜெயா டிவி. இந்த நிகழ்ச்சியில ஒவ்வொரு நாளும் பல்வேறு துறையைச் சேர்ந்தவங்க, அந்தத் துறை தொடர்பான உங்க கேள்விகளுக்கு விடை அளிக்கிறாங்க. அந்த வரிசையில இன்றைக்கு பிஎஸ்ஜி லெதர்லிங்க் நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டரான திரு சிவகுமார் மென்பொருள் துறையில் தொழில் மற்றும் வேலை வாய்ப்புகள் என்பதைக் குறித்து பேச இருக்கிறார், வாங்க சார்'

என்று அவர் கை கூப்ப நேரடி ஒளிபரப்பு ஆரம்பித்தது. அதற்கு முன்னரே தொலைபேசி அழைப்புகள் வர ஆரம்பித்திருந்தனவாம். ஒரு மணி நேரத்தில் தொகுப்பாளர் கேள்வி கேட்டு நான் பேச முடிந்தது சில நிமிடங்களே இருக்கும். வரிசையாக அழைப்புகள்.

'பிஎஸ்சி ஜூவாலஜி படிச்சிருக்கேன், எம்சிஏவும் படிச்சேன், அப்புறம் கல்யாணம் ஆகி, பேபியும் ஆனதாலே அஞ்சு வருஷம் கேப் விழுந்திருச்சி, என்ன செய்யலாம்'

'பிஎஸ்சி முடிச்ச பிறகு எம்பிஏ பண்ணலாமா, எம்சிஏ பண்ணலாமா, எதுக்கு வேல்யூ அதிகம்?'

'மெக்கானிக்கல் பிஈ முடிச்சிருக்கேன். ஆட்டோ கேட் கோர்ஸ் பண்ணியிருக்கேன். வேலை வாய்ப்புகள் எப்படி இருக்கும்?'

'எம் மக பிசிஏ படிச்சிட்டிருக்கா, அதுக்கப்புறம் எம்சிஏவும் படிக்கலாமா?'

'நான் பிஈ எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் முடிச்சிருக்கேன். அடுத்தது சி, சி++ கோர்ஸ் பண்ணலாமா?'

'பிளஸ் 2 முடிச்சிருக்கேன். பிஈ ஐடி நல்லதா, கம்பியூட்டர் சைன்ஸ் நல்லதா'

'கால் சென்டரில வேல பார்க்கிறேன். சாப்ட்வேரில மாறணும் அதுக்கு என்ன கோர்ஸ் படிக்கலாம்?'

'எம்பெடட்டட் கோர்ஸ் பண்ணலாம்னு பார்க்கிறேன். அதுக்கு மதிப்பு இருக்கா?'

என்று அடிப்படையான கேள்விகள். கப்பலில் ஏறி விட வழி என்ன என்று, உயிரியல் படித்தவர்களிலிருந்து. பொறியியல் படித்தவர்களிலிருந்து, ஐந்தாறு ஆண்டுகள் வேலை அனுபவம் இருப்பவர்கள் கூட தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள்.

தொழில் வாய்ப்பு என்றுதான் பேச ஆசை. இயக்குனர் சொன்னது போல வேலை வாய்ப்புளுக்குத்தான் கேள்விகள் அதிகம். தொழில் வாய்ப்பு என்று தலைப்புக் கொடுத்திருந்தால் தொழில் குறித்துக் கேட்பவர்களுக்கு இணைப்புக் கிடைத்திருக்கும்.

இடையில் இரண்டு வணிக இடைவேளைகள். ஒன்றரை நிமிடங்கள். தண்ணீர் குடித்து தொண்டையை நனைத்துக் கொள்ளத்தான் நேரம் சரியாக இருந்தது.

பேச மறந்தது நிறைய இருந்தது. நிறுவன வளம் திட்டமிடல் மென்பொருட்கள் குறித்து, திறவூற்று மென்பொருட்கள் குறித்து, நமது மென் பொருள் தேவைகளைக் குறித்து, தமிழ்க்கணிமை குறித்து என்று செல்லப் பொருட்களை ஆரம்பித்து வளர்க்க இடமே கிடைக்கவில்லை. காலையில் எழுதிப் பார்த்திருந்த கருத்துக்கள் ஏதோ ஒரு வடிவில் நுழைந்து கொண்டன. கேள்விகள் கேட்டு உடனேயே புரிந்த வரை பதில் சொல்லி விட்டு அது சரியா தவறா என்று மதிப்பெண் தெரியாமலேயே அடுத்த கேள்வி என்று நகர்ந்து கொண்டே இருந்தது.

கூடுமான வரை தமிழிலேயே பேசியது நன்றாக இருந்தது என்று அப்புறம் கருத்து சொன்ன இரண்டு நண்பர்கள் குறிப்பிட்டார்கள். பல இடங்களில் ஆங்கிலத்திலேயே நின்று விட்ட உணர்வு எனக்கு இருந்தது. இன்றைக்கு இருக்கும் நடப்பில் அந்த அளவு தமிழில் பேசுவதே குறிப்பிடும்படியாகப் போய் விட்டது.

அலுவலக நண்பர்களே மேல் வீட்டில் கூடி தொலைக்காட்சித் திரையிலிருந்து படக்கருவியால் பிடித்து வைத்திருந்தார்கள். நான்கைந்து கோப்புகளாக 2ஜிபி அளவுக்கு இருந்தது. படத்தில் திரையில் பட்டை பட்டையாக ஓடுகிறது. ஒலி நன்றாக பதிந்திருக்கிறது. அதைப்பார்த்து பேச்சை உரையாக மாற்றவும் முயற்சிக்கலாம்.

வியாழன், ஜூலை 19, 2007

சாப்பிடும் போது குளிர்ந்த நீர் குடிக்கலாமா?

வவ்வால் போன பதிவிலேயே விடையைச் சொல்லி விட்டார். 'குறைந்த வெப்பம் வேதிவினை திறனைக் குறைக்கும்' என்று.

வேதி வினைகள் குறித்த வெப்ப நிலையில் அதிக பட்ச வேகத்தில் நடக்கும். நமது உடலின் உயிர் வேதி வினைகள் அனைத்தும் உடல் வெப்ப நிலையிலேயே நடக்கும் படி தகவமைந்திருக்கும்.

சாப்பிட்டுட, குளிர்ந்த நீர் குடித்தால் வயிற்றின் உள் வெப்பநிலை குறைந்து உணவைச் செரிக்கும் வினைகள்
பாதிக்கப்படும் என்று அனுபவம்.

வெதுவெதுப்பான நீர்தான் வயிற்றுக்கு நல்லது.

அடுத்த கேள்வி:
சாப்பிட்ட உடன் தூக்கம் வருவது ஏன்?

மென் பொருள் துறையில் தொழில் மற்றும் வேலை வாய்ப்புகள் - சில எண்ளங்கள்

http://kaniporul.blogspot.com/2010/08/blog-post_509.html

புதன், ஜூலை 18, 2007

குழம்பில் புளி ஊற்றுவது எதுக்கு?

புளிப்பு சுவை என்ற வெளிப்படையான விடை ஒரு புறம் இருக்க, புளி சேர்ப்பதால் என்ன வேதியியல் மாற்றம் நடக்கிறது என்று பார்க்கலாம்.

தூய்மையான தண்ணீரில் அமிலத் தன்மையும் காரத்தன்மையும் சமநிலையில் இருக்கும். உயிரினங்கள் வாழ்ந்து தழைக்க இந்த சமச் சூழல் தேவை. புளியில் அமிலத் தன்மை இருக்கிறது. புளி சேர்த்தக் குழம்பில் அமிலக் காரச் சமநிலை மாறி, அமிலத் தன்மை மிஞ்சி விடும். இதனால் உணவுப் பொருளில் வளர்ந்து பெருகி குழம்பைக் கெட்டுப் போக வைக்கக் கூடிய நுண்ணுயிரிகளின் செயல்பாடு குறைந்து குழம்பு அதிகமான நேரம் கெட்டுப் போகாமல் இருக்கும்.

குளிர் சாதனப் பெட்டிகள் இல்லாத காலங்களில் செய்த உணவை முடிந்த வரை கெட்டுப் போகாமல் காத்துக் கொள்ள இந்த புளி சேர்ப்பது பயன்பட்டது. சமைத்த மீதத்தை ஆறியதும் குளிரப் பெட்டியில் வைத்துக் கொள்ளும் வசதி இருக்கும் போது இந்தக் காரணம் அடிபட்டுப் போகிறது.

அடுத்த கேள்வி:
சாப்பிடும் போது குளிர்ந்த நீர் குடிக்கலாமா?

மென் பொருள் துறையில் தொழில் மற்றும் வேலை வாய்ப்புகள்

ஜெயா தொலைக் காட்சியில் "மென் பொருள் துறையில் தொழில் மற்றும் வேலை வாய்ப்புகள்" என்ற பொருளில் நேரடி ஒளிபரப்பாக நாளை (ஜூலை 19, 2007) இந்திய நேரம் பகல் 12 முதல் 1 மணி வரை "ஹலோ ஜெயா டிவி" என்ற நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளேன்.
  • தொழில் வாய்ப்புகள் என்றுதான் நான் சொன்னாலும் வேலை வாய்ப்புகளுக்குத்தான் ஆர்வம் அதிகமாக இருக்கும் என்று மாற்றிக் கொண்டார்கள்
  • வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த நண்பருக்கு நன்றி

வெள்ளி, ஜூலை 13, 2007

தலைக்கவசம்

ஐந்து ஆண்டு முன்பு வண்டி வாங்கியதிலிருந்தே தலைக்கவசம் வாங்கும் எண்ணம் அவ்வப்போது வரும். ஓரிரு கடைகளில் போய்ப் பார்த்தாலும் நிறைவாகக் கிடைக்கவில்லை. அப்படி விடாப்பிடியாக வாங்கி விட வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை.

அப்புறம் படிப்படியாக, 'கவசம் போடாமல் ஓட்டுவதுதான் சிறந்தது' என்று கற்பித்துக் கொண்டேன். பணப்புழக்கங்கள் குறைந்த பிறகு வாங்கும் எண்ணமே தொலைந்து போனது. அதன் பிறகு நீதிமன்ற உத்தரவு, அரசு அறிவிப்பு என்ற வந்ததும் வீம்பு வந்து விட்டது. 'யார் நம்மை கட்டாயப்படுத்துவது' என்ற வாங்குவதை தள்ளிப் போட்டுக் கொண்டே போனேன். இன்னொரு பக்கம் இந்த அறிவிப்பால் கடைகளில் தேவை அதிகரித்த செயற்கையான சூழலில் மாட்டிக் கொள்ளவும் கடுப்பாக இருந்தது.

அலுவலகத்தில் எல்லோரும் சேர்ந்து வாங்கிய போதும் அதில் கலந்து கொள்ள முடியவில்லை. அப்படி சோம்பலாகவே ஓடி நாளும் வந்து விட்டிருந்தது. ஜூன் 1 அன்று ஊரில் இல்லை. அடுத்த நாள் வண்டியை வெளியில் எடுப்பதில்லை என்று முடிவு செய்திருந்தேன்.

ஜூன் 2 அன்று திருவான்மியூருக்குப் போக வண்டி தேவைப்பட்டது. வாங்க முடிவு செய்து பகிர்வூர்தியில் ஏறி பிக் பஜார் அருகில் இறங்கி சாலையைக் கடக்கப் போகும் போது நண்பரிடமிருந்து தொலைபேசி. 'தலைக்கவசம் கட்டாயம் இல்லை' என்று முதல்வர் அறிவித்து விட்டாராம். வாங்காமலேயே திரும்பி வண்டியை எடுத்துக் கொண்டு திருவான்மியூர். பின்னர்தான், 'பிடித்து அபராதம் விதிக்கா விட்டாலும், சட்டம் இருக்கத்தான் செய்கிறது' என்று புரிந்தது.

'தலைக்கவசம் தவறாமல் அணிவதன் மூலம் சட்டத்தை மதிக்கிறேன் என்ற பெருமை எனக்கு உண்டு' என்று ஒரு பெண் டெக்கான் குரோனிக்கிள் ஆசிரியர் கடிதம் பகுதியில் எழுதியிருந்தார்.

எல்லா சட்டங்களையும் கடைப்பிடிப்பது கடமை. ஏற்றுக் கொள்ளா விட்டால் சட்டத்தை மாற்ற முயற்சிக்க வேண்டும். அது இல்லை என்றால் சட்டத்தை மீறி விட்டு அதற்கான தண்டனையை ஏற்றுக் கொள்ள வேண்டும். சட்ட மீறலை வெளிப்படையாக ஒளிவு மறைவின்றி செய்ய வேண்டும். மாட்டிக் கொள்ளாதது வரை உத்தமன் என்பது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளுதல்.

'சில சட்டங்களைப் பின்பற்றுவேன், சிலவற்றை பின்பற்ற மாட்டேன்' என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது.

ஆனாலும் 15 நாட்களாக தலைக் கவசம் அணியாமலேயே சுற்றிக் கொண்டிருந்தேன். மாமா ஒருவர் தொலைபேசி, புதிதாக ஆரம்பித்திருந்த நிறுவனம் குறித்துப் பேசக் கூப்பிட்டார்கள். 'இன்னும் தலைக்கவசம் வாங்கவில்லையா' என்று கண்டிக்கக் கூடியவர். அதனாலேயே உடனேயே வாங்கி விடுவோம் என்று அதே பிக் பஜாருக்குப் போய் விட்டேன்.

காலையில் நாளிதழில் ' இரு சக்கர வண்டியிலேயே காரில் போகும் வசதியை உணர்கிறேன் ' என்ற கடிதம் ஒன்றும் கவர்ந்தது. தூசி, சத்தங்கள் தொல்லை இல்லாமல் வண்டி ஓட்டலாம்.

கட்டாயக் கெடுபிடிகள் இல்லாததால் விற்பனை நெருக்கடியும் குறைந்திருக்கும் என்று தோன்றியது. இந்தக் கடைக்கு முதன் முதலில் வருகிறேன். பெரிய மெகா மார்ட் பாணிதான். முன் பக்கத்திலேயே தலைக்கவசங்களைக் குவித்து வைத்திருந்தார்கள். அங்கு விசாரிக்க அடுத்த பகுதியில் கைக்கடிகாரம் விற்கும் பகுதிக்கு அனுப்பினார்கள். வெளிர் நிறமாக வாங்க வேண்டும் என்று பார்த்து கடும் நிறத்தில்தான் சரியான அளவு கிடைத்தது. வெளிர் நிற வெளிப்புறம் வெப்பத்தை எதிரொளித்து சூடாவதைக் குறைக்கும். கறுப்புப் பிடித்து வைத்துக் கொள்ளும் என்று காரணம்.

தலைக் கவசம் அணிந்திருப்பதால் பல வசதிகள். சில தொந்தரவுகள். தொலைபேசி அடித்தால் எடுத்துப் பேச முடியாது. யாரிடமாவது வழி கேட்க உரக்கப் பேச வேண்டியிருக்கிறது. நம் மூச்சுக் காற்றே நம் முகத்தைச் சுடும்.

வசதிகள், தூசித் தொல்லை பாதிக்காது. அரை மணி நேரம் சுற்றி விட்டு வந்து முகத்தைத் துடைத்தால் அப்பியிருக்கும் அழுக்கு இளிக்கும் காட்சியைத் தவிர்த்து விடலாம். வாகனங்களின் ஓசை பாதியாகக் குறைந்து விடுகிறது. வெகு தூரப் பயணங்களில் காற்று அறைந்து ஏற்படும் சோர்வும் குறைந்து விடுகிறது.

அடிப்படை உரிமைகள்

ஒரு பின்னிரவில் எழும்பூர் போவதற்காக பயணம். பத்து மணி வாக்கில் வளசரவாக்கத்தில் பேருந்து பிடித்து ஜெமினியில் இறங்கினேன். கடற்கரை நோக்கிப் போகும் அந்தப் பேருந்தில் அண்ணா சாலையில் வலது புறம் திரும்பி ராயப்பேட்டை போகும் சாலையில் இறக்கி விட்டார்கள். புதுக் கல்லூரிக்கு அருகில்.

அங்கிருந்து திரும்பி அண்ணா சாலைக்கு வந்து எழும்பூர் போகும் பேருந்து ஏதாவது பிடிக்கலாம் என்று எண்ணம். கல்லூரியில் படிக்கும் போது பெசன்ட் நகரிலிருந்து அயனாவரம் வரை போகும் 23C பழக்கமான பேருந்து. அது அண்ணா சாலை வழியாகத்தான் போகும். அந்த நினைவில் நடந்தேன்.

நடைபாதையில் மனிதர்கள் தூங்க ஆரம்பித்திருந்த நேரம். முதலில் இரண்டு வயதான பெண்கள் மூடிக் கொண்டு நடக்கும் வழியிலேயே. கடை ஒன்றின் பக்கவாட்டு வாசல் படியில் உயரத்தில் இன்னொரு அம்மா, அவருக்கு என்று பதிவான இடம் என்று நினைத்துக் கொண்டேன். ஓரிரு அடிகள் வந்ததும் தலை வரை மூடிய இளைஞன் ஒருவன் பக்கவாட்டில் படுத்து காலை எதன் மீதோ தூக்கித் போட்டிருந்தான். அடுத்த கணம் அந்த எதன் மீதோ என்று நினைத்தது என்ன என்று புரிந்தது.

கடந்து சென்ற சில கணங்களில் ஆண் அத்து மீற முயற்சிப்பதும் பெண் செல்லமாக முரண்டுவதும் புலப்பட்டது.

வழக்கமாகத் தூக்கத்தில் ஆழ்ந்திருக்கும் அந்த நேரத்தில் மனமும் ஏதோ கனவுலகில் இருப்பது போல ஓடியது. ஜெயகாந்தன் எழுதிய சிறுகதை ஒன்றில் நடைபாதை வாசிகள் நீண்ட நாட்கள் காதலித்து பெண்ணின் உறுதியால் தாலியும் கட்டிய பிறகு முதலிரவு கொண்டாட புதர் மறைவுக்குப் போகிறார்கள். இரவுக் காவலர் ஒருவர் வந்து அவர்கள் விபச்சாரம் செய்வதாக அழைத்துச் செல்கிறார்.

சென்னை நகரின் பரபரப்பான பகுதியில், சில அடிகள் தொலைவில் வாகனங்கள் போய்க் கொண்டிருக்கக் குடும்பம் நடத்தும் அவலம். உண்ண உணவு, உடுக்க உடை, தலைக்கு மேல் கூரை, ஆரம்பக் கல்வி இவை அடிப்படை உரிமைகளாக இருக்க வேண்டும். எத்தனை பெற்றுக் கொள்வது என்று சரியான முடிவெடுக்கச் சொல்லித் தரத் தவறும் சமூகம் ஒவ்வொரு குழந்தைக்கும் அடிப்படை உரிமைகள் உத்தரவாதம் வழங்க வேண்டும்.

சொத்துரிமை, தொழில் செய்யும் உரிமை இருப்பது போல, அந்த உரிமைகள் மீறப்படும் போது அரசாங்கத்தின் எல்லாக் கரங்களும் பதறிக் கொண்டுச் செயல்பட்டு விடுவது போல
தனி ஒருவனுக்கு உணவு இல்லா விட்டால் காவல் துறையும், நிர்வாகத் துறையும், நீதித் துறையும் உசுப்பப்பட வேண்டும். ஊடகங்களில் தலைப்புச் செய்தி வர வேண்டும்.

பின் நவீனத்துவம் - முனைவர் ரமணியின் பேச்சிலிருந்து குறிப்புகள்

கோவையில் நடந்த பதிவர் பட்டறையில் பின் நவீனத்துவம் பற்றி முனைவர் ரமணி:
  • பின்நவீனத்துவம் என்பது, நவீனத்துவம் என்று பின்பற்றப்பட்ட கட்டுகளை உடைத்து கலை, அறிவியல், தொழில், பொதுப் பண்பாடு என்று எல்லா துறைகளிலும் புதிய பாதைகளை உருவாக்கும் போக்கு.
    (சொல்வதைப் பார்த்தால் இன்றைக்கு நடக்கும் எந்த மாற்றத்தையும் பின் நவீனத்துவம் என்று அடையாளம் ஒட்டி வைத்துக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது).

  • பழைய புனித பிம்பங்களை உடைக்கும் இளையதலைமுறையினரின் போக்கு பின் நவீனத்துவம். இடம், பயனைப் பொறுத்து கட்டிடம் வடிவமைத்தல், இசைத் துறையில் வரையறைகளை மாற்றுதல், இலக்கியத் துறையில் எதிர்க் கலைத்துவப் படைப்புகளை உருவாக்குபவர் பின்நவீனத்துவ படைப்பாளி.

    (புதுக் கவிதை, அயன் ராண்டின் ஹோவார்டு ரோர்க், ஏ ஆர் ரஹ்மான்/இளையராஜாவின் இசை முறைகள் போன்றவை தனக்கென மரபுகளை உருவாக்கினார்கள். ஏற்றுக் கொள்ள முடியாத, புரிந்து கொள்ள முடியாத பாத்திரங்களைப் படைத்திருப்பார்கள். சல்மான் ரஷ்டியின் எழுத்துக்களில் பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட போக்குகள் இருக்கின்றன.)

  • பொருளாதாரம், தொழில்நுட்பம், அரசியல், ஊடகம் எல்லா துறைகளிலும் மையம் உடைந்து விட்டது. அசலுக்கும் நகலுக்கும் இடையே உள்ள வேறுபாடு மறைந்து விட்டது. இணையத்தில் யாரும் எழுதுவது அவருக்கு உரியது என்று சொல்ல முடியாது.

    ஊடக உள்ளடக்கங்களை வித்தியாசப்படுத்திக் காட்ட முயற்சிக்கும் DRM போன்றவை, அரசியல் ஆதிக்கப் போக்குகள் மறைந்து விடுகின்றன. எந்த நாடும் யார் மீதும் ஆதிக்கம் செலுத்த முடியாது.

  • உலகளாவிய சமூகமாக மாறுகிறது. எந்த குழுவும் இன்னொரு குழுவின் மீதும் மேலாதிக்கம் செலுத்தும் நிலைமை இருக்க முடியாது. மென்பொருள் ஆதிக்கத்தின் மூலமாக பிறர் மீது ஆதிக்கம் செலுத்த முடியுமா என்று சிந்திக்க வேண்டும்.

  • எப்படிப்பட்ட கலை இலக்கியம் இருக்க வேண்டும் என்று முதலாளித்துவ சக்திகள் தீர்மானித்தன. சந்தைப் பொருளாதாரத்தின் மூலமாக ஏற்பட்ட தொழில் நுட்ப மாற்றங்களின் வழியாக, யதார்த்தவியல் தொடர்ந்து இரண்டாவது உலகப் போரின் இறுதி வரை மோனோபொலி முதலாளித்துவத்தின் இரண்டாவது நிலை, நவீனத்துவம் நிலை நாட்டியிருந்தது.

  • இன்றைய கால கட்டம் முதலாளித்துவத்தின், பன்னாட்டு, நுகர்வோர் பொருளாதாரம் நடைமுறைக்கு வந்துள்ளது. இப்போது உற்பத்தியை விட நுகர்வு முதன்மை பெற்றுள்ளது. தொழில்நுட்பத்தின் மூலமாக எந்த உற்பத்திச் சிக்கலையும் தீர்த்து வைக்கலாம். அணுக்கரு, மின்னணு தொழில்நுட்பங்கள், சமூக, அரசியல், அறிவியல் மாறுதல்களின் திரட்சியாக வருகின்றன.

  • நவீனத்துவம் (modernism) ஒழுங்கை எதிர்பார்க்கிறது. பகுத்தறிவுக்கு முதலிடம் கிடைத்தது. எந்த அளவு ஒழுங்கு இருக்கிறதோ அந்த அளவு சமுதாயம் சீராக இயங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஒழுங்கு, ஒழுங்கீனம் என்ற நிலைமை பராமரிக்கப்பட்டது. ஒழுங்கு அடையாளம் காண ஒழுங்கீனமும் அங்கங்கு இருந்தே ஆக வேண்டும் என்று நிச்சயப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

  • வெள்ளையர் அல்லாதோர், ஆணாதிக்க எதிர்ப்பாளர்கள். மூட நம்பிக்கை என்று அடையாளங்கள் ஒட்டப்பட்டு ஒதுக்கப் பட்டனர். ஒழுங்கீனத்தை ஒதுக்கி வைக்க அழித்து விட முயற்சிகள் எடுக்கப்பட்டன. முத்திரை குத்துவதன் மூலம் சமுதாயத்தில் ஒழுங்கை நிலைநாட்டுவதாக முயற்சித்தார்கள்.

  • காரல் மார்க்சின் தஸ் கேபிடல் போன்ற கொள்கைகள் எப்படி தனது நம்பிக்கைகள், விழுமியங்கள் பற்றி செயல்பட வேண்டும் என்று சொல்வதுதான் இந்த கிரேன்ட் நரேடிவ்ஸ். 'முதலாளித்துவம் தானாக மறுகிப் போகும், அதன் பிறகு பொற்காலம் மலரும்' என்று சொல்வது மார்க்சிசம்.

  • நடைமுறையில் இருப்பதை மூடாமல் எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டு குறு கொள்கை விளக்கங்களைப் பற்றிப் பேசுகிறது பின்நவீனத்துவம். இது பரவலானது இல்லை என்று தெளிவாகக் காட்டுகிறது. தனிநபர் வாதம்தான் பின்நவீனத்துவத்தின் அடிப்படை.

  • கொள்கை கோட்பாடு போன்றவற்றுக்கு அவசியம் இல்லாத ஒன்றாகி விட்டது. 1950க்கு பிறகு பின் நவீனத்துவம் ஆரம்பித்தது. வரலாறு திரும்ப ஓடுவதில்லை, திரும்ப நடக்கிறது.

  • வசதி, அமைதி, செல்வம், பணி, வேலை வாய்ப்புகள் அரசியலைத் தீர்மானிக்கின்றன. இனியும் இந்துத்துவம், பிராமணீயம், சாதீத்துவம், உலக மயமாக்கல் போன்ற கொள்கை அடிப்படைகள் தகர்ந்து விடுகின்றன.

புதன், ஜூலை 04, 2007

விவசாயி - ஒரு சிறு முயற்சி

விவசாய பொருளாதாரம் பற்றிப் பல கருத்துக்கள் கல்வெட்டும், வவ்வாலும் நடத்தும் விவாதத்தில் கிடைத்துக் கொண்டிருக்கின்றன.

கல்வெட்டின் பின்னூட்டத்திலிருந்து;

===================================================================
ஒரு சின்ன திட்ட வடிவம்:

(இதில் குறைகள்/பிழைகள்/தவறான தகவல்கள் இருக்கலாம். இங்கே பொதுவில் பேசுவதே அனுபவம் உள்ளவர்களுடம் இருந்து சரியான தகவல்களைப் பெறுவதற்கே. எனது அனுமானங்கள் தவறு என்னும் பட்சத்தில் திருத்தவும்)
  1. தக்காளியின் விலை எல்லா காலத்திலும் சீராக இருப்பதில்லை. 5% ஏற்ற இறக்கங்களை ஒத்துக் கொள்ளலாம்.
  2. ஆனால் கிலோ 5 ரூபாயில் இருந்து 45 ரூபாயாக மாறுவது என்பதும் அதுவே தீடிரென்று 8 ரூபாயாகக் குறைவதும் விவசாயிக்கும் நுகர்வோருக்கும் பிரச்சனை.
  3. இப்போது நாம் பிரச்சனை என்ன என்று கண்டுபிடித்தாகி விட்டது.
  4. இதற்கான தீர்வுகள் என்ன?
அ. விவசாயத் திட்டமிடல்

ஆ. ஆண்டின் சராசரி நுகர்வு மற்றும் ஒரு ஆண்டின் சராசரி நுகர்வின் அதிகரிப்பு (உதாரணம்: ஒரு ஆண்டிற்கு 1000 கிலோ நுகர்வு மற்றும் ஒரு ஆண்டிற்கு 10 கிலோ நுகர்வின் அதிகரிப்பு என்று கொள்ளலாம்.)

இ. விளைவுத்திறன் (10 % இயற்கையின் பாதிப்பு என்று கொள்ளலாம்). இது 1000 + 10 % க்கு அதிகமாக இருந்தால் அதனை விளைவிக்க கட்டுப்பாடு அவசியம். குறைவாக இருந்தால் அதிகரிக்க ஆராய்ச்சிகள் தேவை. நாம் இப்போதைக்கு 1000 +10 % சரியாக விளைவிக்கபடுவதாகக் கொள்ளலாம்.

ஈ. இந்த விளைவுத் திறனை சமச்சீராக 360 நாட்களுக்குப் பிரித்தால் நாளுக்கு 3 கிலோ வருவதாக் கொள்வோம்.

** ஒரு நாளைக்கு 3 கிலோ உற்பத்தி மட்டுமே இருக்கும் பட்சத்தில் நம்மால் ஆண்டு முழுவதும் நுகர்வோரின் தேவையை ஒத்துக் கொள்ளப்பட்ட 5% ஏற்ற இறக்கங்களுடன் பூர்த்தி செய்ய இயலும்.
** உற்பத்தியை 3 கிலோக்குள் வைத்து இருக்க முடியவில்லை எப்போதும் 5 கிலோவையே தொடுகிறது என்றால் அதிகமுள்ள 2 கிலோக்கான மாற்றுச் சந்தையை கண்டறிய வேண்டும்.

உ. இந்த 3 கிலோ உற்பத்தியை மாவட்ட அளவின் தேவைகளுக்கு தகுந்தாற்போல் அந்த அந்த மாவட்டங்களில் உள்ள தக்காளி பயிர் செய்யத்தக்க விவாசாய நிலங்களில் பிரித்து பயிரிடலாம்.

ஊ. புதியதாக ஒருவர் தக்காளி பயிரிட நினைக்குப் போது அவர் நமது தகவல் நிலையத்தை அணுகுவார்.

தக்காளி அறுவடைக்கு வர 50 நாட்கள் ஆவதாகக் கொண்டால் அவர் அந்த 50 வது நாளில் 3 கிலோவுக்கு குறைவாக "விளைச்சல் Forecast" செய்யப்பட்டு இருந்தால் மட்டுமே அந்த குறையை சரி செய்ய பயிர் செய்ய வேண்டும்.

எ. "விளைச்சல் Forecast" அவரை தக்காளி பயிரிட அனுமதிக்காத பட்சத்தில் அவர் மற்ற பயிர்களின் (அவரது நிலத்தில் அந்தப் பருவத்தில் விளையக்கூடிய) விளைச்சல் Forecast ஐப் பார்த்து அதைப் பயிரிட வேண்டும்.

ஏ. துரதிர்ஷ்டவசமாக அவருக்கு ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ( 4 மாதங்கள் என்று கொள்வோம்) எந்த விவாசாயப் பொருட்களின் "விளைச்சல் Forecast" ம் சரியாக அமையவில்லை என்றால் அவர் விளைவிக்காமைக்கு மானியம் பெறத் தகுதியாகிறார். அத்துடன் அவர் "விளைச்சல் Forecast" ன் படி 4 வது மாத முடிவில் பயிரிடப் போகும் பயிரை உடனே முன் பதிவு செய்து கொள்ளவேண்டும்.

ஐ. இந்த மானியம் அரசின் உதவியால் மட்டுமே சாத்தியம் என்றாலும்,மானியத் தொகைக்காக இலாபத்தில் ஒரு பங்கை சேமிப்பாக நாம் வைத்துக் கொள்ளலாம்.இதனால் அரசை (மண் குதிரையை) நம்பி இந்த திட்டத்தில்( ஆற்றில்) இறங்கும் சாத்தியம் குறையும்.

* இது கடலை கடுகுக்குள் புகுத்த நினைக்கும் திட்டம் போல் தெரிந்தாலும் சாத்தியமே என்று தோன்றுகிறது.
=========================================================================

மென்பொருள் உருவாக்கத்துக்கான திட்டப் பக்கம் இங்கே

காந்தி - ஒரு கேள்வி

காந்தி, இந்திய விடுதலைக்காக காங்கிரசு பணியில் ஈடுபட்டது ஏன்?

சத்தியத்தில் உறுதியான நம்பிக்கை இருந்திருந்தால் தனி ஒரு மனிதராக கிராமங்களில் போய் தமது பணியை ஆரம்பித்திருக்கலாம். எதற்காக ஒரு இயக்கத்தில் சேர வேண்டும்.?

'ஒரே ஒரு சத்தியாக்கிரகி உள்ளத் தூய்மையுடன் உறுதியாக இருக்கும் வரை வெற்றி கிடைத்து விடும்' என்று தென்னாப்பிரிக்காவில் இருந்த நம்பிக்கை எங்கே போனது? காங்கிரசு என்று பூதத்தை வளர்த்து விட்டு நாட்டுக்கு தீங்கு விளைத்து விட்டாரா?

'இந்தியா கிராமங்களில் வாழ்கிறது, இந்தியாவில் ஒவ்வொரு கிராமமும் தம்மைத் தாமே நிர்வகித்துக் கொள்ள வேண்டும்' என்று நம்பிய அவர் ஏன் புது தில்லியில் வைஸ்ராயுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்?

ஒரு கிராமத்தில் குடியேறித் துறவியாக வாழ்ந்திருந்தாலே அவரது சத்தியம் நாடெங்கும் பரவி ஒவ்வொரு மனிதரையும் மேம்படுத்தி அனைவருக்கும் உறுதியும், வளமும், முன்னேற்றமும் பெற்றுத் தந்திருக்காதா?