ஞாயிறு, டிசம்பர் 31, 2006

சாதி ஒழியத்தான் வேண்டுமா? -2

சாதி என்ற சின்ன வட்டத்துக்குள் திருமண உறவுகளைக் குறுக்கிக் கொள்வதால் என்ன நன்மைகள், என்ன தீமைகள்?

நன்மைகள்:
நம்மைப் போன்ற பழக்க வழக்கங்கள், உணவு முறைகள், சமயச் சடங்குகள் உடைய குடும்பத்தில் உறவு ஏற்படுத்துவது மூலம் திருமணத்துக்குப் பிறகான சேர்ந்து வாழ்தல் எளிதாக இருக்கும்.

தீமைகள்:
நெருங்கிய உறவுக்குள்ளே திருமண உறவு வைத்துக் கொள்வதால் மரபணுத் தேர்வுகள் குறைபாடுகளையே மிகைப்படுத்தி பிறக்கும் குழந்தைகளை குறைபாடுடையவர்களாகச் செய்து விடுகிறது என்பதை ஏற்றுக் கொண்டு படித்த குடும்பங்களில் அதைத் தவிர்த்து விடுகிறோம்.

அதையே சிறிதே பெரிய வட்டத்துக்குள் செய்வதுதான் சாதிக்குள்ளேயே திருமணம். மரபணுத் தேர்வுகளில் நன்மை தரும் பண்புகள் வருங்காலச் சந்ததியினருக்குப் போய்ச் சேர வேண்டுமானால், தாயும் தந்தையும் வேறுபட்ட மரபணுக் கூறுகளைக் கொண்டிருத்தல் தேவை.

பல நூறு ஆண்டுகளாக சிறிய வட்டத்துக்குள் குறுக்கி நமது வளர்ச்சிக்கு ஊறு விளைவித்துக் கொண்டிருக்கிறோம்.

தீர்வு:
திருமணப் பொருத்தம் பார்க்கும் போது, மனப் பொருத்தம், குடும்பப் பொருத்தம், ஏன் பணப் பொருத்தம் கூடப் பார்ப்பது தேவையாக இருக்கலாம். ஆரம்பத்திலேயே சாதி என்ற சின்ன வட்டத்துக்குள் தேர்வை ஒடுக்கிக் கொள்வது அறிவுடமையாகாது. சாதி என்ற கட்டுப்பாடு இல்லாமல் நமது உறவு வட்டங்களை பெரிதாக்கிக் கொள்வது சமூகத் தேவை.

சாதி ஒழிய வேண்டும் - 1
சாதி ஒழிய வேண்டும் - 2
சாதி ஒழியத்தான் வேண்டும் - 3

சனி, டிசம்பர் 30, 2006

சாதி ஒழியத்தான் வேண்டுமா?

சாதி என்பது நமது வாழ்வின் நெருங்கிய ஒன்றாகப் போய் விட்டது.
  • நமது வீட்டில் அம்மா செய்யும் சமையல்,
  • நமது உறவினர்கள்
  • வீட்டு நிகழ்ச்சிகளில் செய்யும் சடங்குகள்
  • சொந்த ஊர் பழக்கங்கள்
இவற்றை எல்லாம் சாதி அடையாளத்தோடு இணைத்துக் கொள்கிறோம்.
  • நம்ம வீட்டுச் சமையல் பரம்பரை பரம்பரையாக வந்தது. அதே போன்ற சமையல் பழக்கங்கள் ஒரே சாதிக்குள் இருப்பதைப் பார்த்து உணவுப் பழக்கத்துக்கும் சாதிக்கும் தொடர்பு நம் மனதுக்கு ஏற்பட்டு விடுகிறது.
  • வரையறையின்படி நமது உறவினர்கள் அனைவருமே ஒரே சாதியினராகப் போய் விடுகிறார்கள்.
  • ஒரே குழுவுக்குள் உறவுகளை மட்டுப்படுத்திக் கொண்டதால் எல்லோரும் பின்பற்றும் சடங்குகள் ஒரே மாதிரியாக அமைந்து அவற்றுக்கும் சாதி முத்திரை கிடைத்து விடுகிறது.
சாதியை ஒழிக்க வேண்டும் என்று நினைத்தவுடன் பிறப்புடனேயே வரும், வளர்ப்பில் பழகும், உறவுகள், உணவுப் பழக்கங்கள், வழிபாட்டு முறைகளும் போய் விடுமே என்று ஒரு அச்சம் வந்து விடுகிறது. அதனால்தான் பழக்கமான சாதி இருந்து விட்டுப் போகட்டுமே, அதன் ஏற்றத்தாழ்வுகளை மட்டும் ஒழித்து விடுவோம் என்று தோன்றுகிறது.

சாதி இருந்து விட்டுப் போகட்டுமே என்று தோன்றும் போது, உண்மையில் நாம் தக்க வைக்க விரும்புவது மேலே சொன்ன பரம்பரைச் சொத்துக்களைத்தான்.

சாதி ஒழிய வேண்டும் என்று சொல்வது
  1. குறிப்பிட்ட குடும்பத்தில் பிறந்ததால் அந்தக் குடும்பம் சார்ந்த குழுவுக்குள் மட்டுமே திருமண உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடு.
  2. குழு அடையாளத்தைப் பெற்று விட்டதால் சமூக நிலை, குழுவின் உயர்வு தாழ்ச்சிகள் தானாக அமைந்து விடுகின்றன என்ற அனுமானம்
என்ற பழக்கங்கள் மறைய வேண்டும் என்பதுதான்.

ஏற்றத் தாழ்வுகளை ஒழிக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மறு கருத்து இருக்க முடியாது. திருமண உறவுகள் மட்டும்தான் எஞ்சியிருக்கின்றன. அவற்றை ஒரே சாதிக்குள் மட்டும் என்று கட்டுப்படுத்துவதால் என்ன நன்மைகள், என்ன தீமைகள்?

சாதி ஒழிய வேண்டும் - 1
சாதி ஒழிய வேண்டும் - 2

ஞாயிறு, டிசம்பர் 24, 2006

ஏதாவது செய்ய மனமிருந்தால்.....

நண்பர் திருவின் முயற்சியில் இணையத்தில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தின் விண்ணப்பத்தைத் தமிழில் மொழி பெயர்த்து ஆங்கில மூலத்துடன் PDF கோப்பாக இணைத்துள்ளேன்.
  1. இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் விபரங்கள் இன்னும் பொருத்தமானவையா என்று தெரிந்தவர்கள் உறுதி செய்யவும்.
  2. விருப்பமுள்ளவர்கள் இதை அச்செடுத்து தங்கள் உறவினர், நண்பர்கள் வட்டத்துக்குள் மட்டுமாவது கையெழுத்து வாங்கவும்.

    (தமிழில் இரண்டு பக்கம் - ஒரே தாளின் இரு புறமும், ஆங்கிலத்தின் இரண்டு பக்கங்கள் - ஒரே தாளின் இரு புறமும், கையெழுத்துப் பக்கங்கள் தேவைக்கேற்ப - பக்கத்துக்கு பன்னிரண்டு கையெழுத்துக்கள் பெற்று, ஒவ்வொரு பக்கத்துக்கும் வரிசை எண் கொடுத்து விடுங்கள்)
  • இதன் மூலம் யாழ்ப்பாணம் பற்றிய விழிப்புணர்வு வளரும் என்பது உடனடி பலன்.
  • மேல் நடவடிக்கையாக சேகரித்த கையெழுத்துப் பக்கங்களை ஒன்று சேர்த்து திரு அவர்களுக்கு அனுப்பி ஐக்கிய நாடுகள் சபையில் சமர்ப்பிக்கலாம்.
விண்ணப்பத்தின் தமிழ்/ ஆங்கில வடிவங்கள் கீழே:

அன்புள்ள நண்பர்களே,

இந்த விண்ணப்பத்தில் உங்கள் கையெழுத்தைச் சேர்க்கவும். முழுவதும் படித்து இதன் விபரங்களைப் புரிந்து கொண்டு கோரிக்கையை ஏற்றுக் கொள்வதாக இருந்தால் கையொப்பமிடவும்:

இலங்கைத் தீவின் வடக்குப் பகுதியின் முக்கிய நகரம் யாழ்ப்பாணம். அங்கு சுமார் ஆறு லட்சம் தமிழ் மக்கள் வசிக்கிறார்கள். 50,000 இலங்கை அரசின் சிங்கள ராணுவ வீரர்கள் இங்கு நிறுத்தப்பட்டுள்ளார்கள்.

யாழ்ப்பாண தீபகற்பத்தை இலங்கைத் தீவின் மற்ற பகுதிகளோடு சேர்க்கும ஒரே சாலை A9 என்ற நெடுஞ்சாலை. இந்தச் சாலையின் வழியாகத்தான் எல்லாவிதமான சரக்குப் (உணவு, மருந்து, பிற பொருட்கள்) போக்குவரத்தும், மக்கள் போக்குவரத்தும் நடைபெற வேண்டும்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு இலங்கை அரசு இந்தச் சாலையில் போக்குவரத்தை நிறுத்தியதன் மூலம், யாழ்ப்பாண மக்களுக்கு வெளியுலகுடனான தொடர்பை முற்றிலும் துண்டித்து விட்டது. யாழ்ப்பாணத்தில் இயங்கும் எல்லா பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களையும் அரசு மூடி விட்டது.

ஆறு லட்சம் மக்களுக்கு அத்தியாவசிய உணவு, மருந்துப் பொருட்கள் கிடைக்க வழியில்லாமல் செய்து விட்டது அரசாங்கம். ஒரு லட்சத்துக்கும் அதிகமான பள்ளி மாணவர்கள் பள்ளிக்குப் போக முடியாமல் தடுக்கப்பட்டுள்ளனர். ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கல்லூரிகள் திறக்கக் காத்திருக்கின்றனர்.

வெளிநாட்டு அரசு சாரா நிறுவனங்களாலும், அரசுகளாலும் அனுப்பப்படும் உதவிப் பொருட்கள் அனைத்தும் ராணுவத்தின் மூலம் அனுப்பப்படுவதால், ராணுவத்தின் தேவைக்கே அவை பயன்படுத்தப்படுகின்றன. மீதியிருக்கும் பொருட்கள் உலகின் எங்கும் இல்லாத அளவு மிக உயர்ந்த விலையில் வெளிச் சந்தையில் விற்கப்படுகின்றன. சில பொருட்களின் விலைகள் வருமாறு:

தீப்பெட்டி - பெட்டி ரூ 30 (முந்தைய விலை ரூ 2)
அரிசி - கிலோ ரூ 180 (முந்தைய விலை ரூ 35)
சர்க்கரை - கிலோ ரூ 400 (முந்தைய விலை ரூ 60)
தேங்காய் - ஒன்று ரூ 90 (முந்தைய விலை ரூ 15)
தேங்காய் எண்ணெய் - லிட்டர் ரூ 450 (முந்தைய விலை ரூ 75)

மிளகாய் - கிலோ ரூ 480 (முந்தைய விலை ரூ 160)
புளி - கிலோ ரூ 150 (முந்தைய விலை ரூ 60)
தேயிலை - கிலோ ரூ 800 (முந்தைய விலை ரூ 300)
முட்டை - பெட்டி ரூ 55 (முந்தைய விலை ரூ 6)
பெட்ரோல் - லிட்டர் ரூ 650 (முந்தைய விலை ரூ 100)
டீசல் - லிட்டர் ரூ 150 (முந்தைய வலை ரூ 45)

நுண்ணுயிரிக் காய்ச்சல் வேகமாகப் பரவி, அதற்குத் தேவையான மருந்துகள் கூட கிடைக்காமல் இதுவரை பாதிக்கப்பட்ட 30,000க்கும் அதிகமான மக்கள் அவதியுறுகிறார்கள்.

A9 சாலை இயல்பான போக்குவரத்துக்குத் திறக்கப்பட்டால் இந்தத் துயரங்களில் பெரும் பகுதி நீக்கப்படலாம். இந்த விண்ணப்பத்தில் கையெழுத்திடுவது மூலம் யாழ்ப்பாண மக்களுக்கு உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

முடிந்தால் இதனை நகலெடுத்து உங்கள் நண்பர்கள், உறவினர்களிடமும் கையெழுத்து பெறும் வேலையை முடிந்தால் செய்யலாம். இதன் மூலம்,
6 லட்சம் மக்களுக்கு உணவு, மருந்து அடிப்படைத் தேவைகள் போய்ச் சேர,
1 லட்சம் மாணவர்கள் பள்ளிக் கல்வியைத் தொடர
6000 மாணவர்கள் கல்லூரிப் படிப்பைத் தொடர
நோயாளிகளுக்கு மருந்துகள் கிடைக்க

உங்கள் நடவடிக்கை உதவி புரியலாம்

இந்த விண்ணப்பத்தின் ஆங்கில வடிவம் இணையத்திலும் கையெழுத்துக்காக கிடைக்கிறது.
http://www.petitiononline.com/TAMEELAM/petition.html



Dear Friends,
Please sign the following petition. Please read till the end.

Jaffna is a place in the north of SriLanka, with a population of
approximately 6 lakh (all Tamils) and 50,000 soldiers of Srilankan
Army(all Sinhalese). A9 Road is the only road that connects Jaffna to
the mainland SriLanka. This is the road through which all kind of
transport (food, medicine, material, people)takes place. The Srilankan
government has closed this road a month back, depriving the Jaffna
people, access of anything outside Jaffna. The government has also
closed all the schools, colleges and government offices in Jaffna. 6
lakh people are deprived of food, medicine and other basic necessities.
More than 1 lakh school students are stopped from going to school. More
than 6000 college students await the reopening of the colleges. The
relief materials sent by all foreign NGOs and other countries are sent
only through the Srilankan Army and and distributed only by the
Srilankan and most of which is obviously consumed the Army itself. The
rest of the relief materials that comes out of the Army are sold out for
a very high price that wouldn't exist in any part of the world. A sample
of the cost of some essential goods:-

Match Box- Rs 30/box, (from Rs 2)
Rice:- Rs 180/Kg, (from Rs 35)
Sugar:- Rs 400/kg (from Rs.60)
Coconut:- Rs 90 (from Rs 15)
Coconut oil:- Rs 450/litre (from Rs 75)
Chilli :- Rs 480/kg(from Rs.160 )
Tamarind:- Rs 150/Kg (from Rs 60)
Tea:- Rs 800/Kg(from 300)
Egg:- Rs 55/unit from (Rs 6)
petrol:- Rs 650/litre (from Rs 100)
Diesel:- Rs 150/litre (from Rs 45)

Viral fever is rapidly spreading and so far 30,000 people have got
affected and they suffer without any medicine to even reduce their pain.

All these things to be brought to normalcy if the A9 road is opened for
the public. Please help the people of Jaffna by signing this petition.

http://www.petitiononline.com/TAMEELAM/petition.html

Also forward this email to all your friends,

If you forward, your wishes may or may not come true but you can
certainly help

6 lakh people to get food, medicine and other basic amenities
1 lakh students to continue school education
6000 students to continue their graduate studies
All the diseased to get medicine

சனி, டிசம்பர் 23, 2006

சாதி ஒழிய வேண்டும் - 2

சாதி ஒழிய வேண்டும்

Bad News India,
புரியலியே. இன்னும் தெளிவா எழுதி இருக்கலாமோ?

சாதி ஒழிய வேண்டும். பல நூறு ஆண்டுகள் ஒடுக்கப்பட்டவர்கள் தமது நிலைமையை முன்னேற்றிக் கொள்ள சாதி அடையாளத்தைத் தேடிக் கொள்வது தேவை என்றாலும், அப்படிச் செய்வது, இப்படி ஒரு கொடுமுறையை உருவாக்கிய சாத்திரங்களுக்கு வலுச் சேர்ப்பதாகவே அமையும் எனபதை உணர்ந்து செயல்பட வேண்டும் (necessary evil).

ஆதிக்கச் சாதியைச் சேர்ந்தவர்கள், இப்படி சாதியின் பெயரால் சலுகைகள் கொடுக்கப்படுவதால் தாம் தமது சாதி அடையாளங்களை தோளில் அணிந்து கொள்ளலாம் என்று இல்லாமல், தமக்கு இழைக்கப்பட்ட அநீதியைத் துடைக்க மட்டுமின்றி மற்ற எல்லா நேரங்களிலும் சாதியை அடையாளமாகக் காட்டுவது அவமானமாகக் கருதப்பட வேண்டும்.

லக்கிலுக்,
சாதி ஒழிய வேண்டும் என்பதில் இருவேறு கருத்து இல்லை. ஆனாலும் பல தலைமுறைகளாக சாதிமுறையால் ஒடுக்கப்பட்டவர்களுக்கு எந்த வகையான ஒரு நீதி உங்களிடம் இருக்கிறது எனப் புரியவில்லை.

இருட்டில் தொலைத்ததை அங்கேயே தேட வேண்டியது நியாயந்தான். ஆனால், இருட்டை உருவாக்கிய கூட்டம் இன்னும் விளக்கை மறைத்துக் கொண்டு இருக்க நாம் தேடிக் கொண்டே இருந்து விட வேண்டி வரும். சீக்கிரம் இழந்ததைப் பிடித்து விட்டு, அடக்கி ஆள நினைக்கும் சாத்திரங்களுக்கு அப்பாற்பட்ட வெளிச்சத்தில் நம்மை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்பதுதான் எனது கருத்து.

ஓகை,
சூதாட்ட விடுதியின் உதாரணத்த்தை எவ்வகையிலும் பொறுத்திப் பார்க்க முடியவில்லை

சாதி அமைப்பின் கீழேயே நியாயம் தேட முனைவது, சூதாட்ட விடுதியில் பணம் ஈட்ட முனைவது போலத்தான். இன்றைக்கு இந்து நாளிதழில் தலைமை நீதிபதி நியமனம் பற்றிய அறிவிப்பில் அவரது சாதி பற்றிக் குறிப்பிட வேண்டிய அவசியம் எனக்கு உண்மையிலேயே புரியவில்லை. அதுதான், இந்த மனுசாத்திரத்தின் கொடுமை. இது ஒழிய வேண்டுமானால், சாதிக்குக் கொடுத்துள்ள அங்கீகாரம் போக வேண்டும்.


ஹரிஹரன்,

சாதியற்ற சமூகம் என்பது இம்மாதிரி உழைப்பால் மேலேறி வந்தபடியே அனைவரும் கல்வி கற்கின்றபோது மட்டுமே சாத்தியமாகும்.

ஒவ்வொருவரும் சாதி அடையாளங்களை முற்றிலும் துறந்து விட முன் வந்தால் சாதி ஒழிந்து விடும். கல்வியினால் மட்டுமே அது ஒழிந்து விடாது. பெரும் படிப்பு படித்த பல சாதிகளில் சாதி உணர்வு அதிகமாவதுதானே நடந்து கொண்டிருக்கிறது. உடலில் சாதி அடையாளங்கள், திருமண உறவுகளில் சாதி பார்ப்பது, பிறரின் சாதியை அறிய முயன்று ஒரே சாதி என்று தெரிந்தால் குறித்த சாதித் தமிழில் பேசுவது இவை அனைத்துமே அவமானங்களாக கருதி ஒதுக்கப்பட்டால் சாதி ஒழிந்து விடும்.

தமிழன்,

ஓத்துக்கொள்ளாதவர்களைச் ச்ட்டம் தண்டிக்க வேண்டும்.
சட்டத்தை விட தனிமனித மன மாற்றம், சமூக கருத்தாக்கம் தேவை. மற்றபடி நீங்கள் சொன்ன கருத்துக்கள் உருப்படியானவை:
  1. இந்திய அரசியல் சட்டத்திலே தீண்டாமை ஒழிய வேண்டும் என்று இருப்பது போய் சாதி ஒழிய வேண்டும் என்று வரவேண்டும்.இதற்காகத்தான் பெரியார் அன்று சட்டத்தை எரித்தார்.அதைப் பண்டித நேரு அவர்களிடம் சரியாக எடுத்துச் சொல்லாமல் மாற்றி பெரியார் இந்தியாவுக்கு எதிரானவர் என்று தடம் மாற்றிவிட்டனர்,
  2. அனைவர்க்கும் பிறப்பில் இருந்து இறப்புவரை ஒரு எண் தரப்பட வேண்டும்.அது அவர்கள் செய்யும் தொழில் வேலை வருமானம் வங்கி கணக்கு என்பது அனைத்தையும் இணைக்கும்,ஏமற்ற முடியாது வரவைக் காண்பிக்கவேண்டிவந்து விடும் அதிலேயே சாதிகளையும் குறிக்கும் வண்ணம் ஏற்பாடு செய்து விட்டால் படிப்பு வேலை எதற்கும் சாதியே போடவேண்டியதில்லை.யார் எந்த சாதி என்பது ரகசியமாகவே இருக்கும்.அடுத்த தலைமுறைக்குச் சாதியே தெரியாது.
  3. ஆரம்பக்கல்வி முதலே ஆண்களும் பெண்பிள்ளைகளும் சேர்ந்தே உட்காரவேண்டும்.பேசிப் பழகி வளர்ந்து விட்டால்,காதல் மணங்கள் மலரும்,பல பிரச்சனைகள் ஒழியும்.
  4. அடுத்தத் தலைமுறையிலிருந்துக் கட்டாயமாகவும்,இந்த தலைமுறை விரும்புபவர்களும் சாதிப்பெயர்களை நீக்க வேண்டும்,சாதி அமைப்புகள் கலைக்கப்படவேண்டும்.
இதெல்லாம் நடக்குமா என்று கேட்காதீர்கள்,தென் ஆப்பிரிக்காவைப் பாருங்கள்.

இது போன்ற எண்ணங்கள் வளர வேண்டும், பரவ வேண்டும் என்று நம்புவோம்.

அனானி,
சாதிகளை எல்லாம் பேப்பரில் எழுதி எரித்து விட்டு சாதி ஒழிந்தது என்று சந்தோசபடுங்கள். சாதிகளாவது ஒழியிறதாவது.

தீண்டாமை என்பது சமூகத்தின் முன் அவமானமாகவும், சட்டத்தின் முன் குற்றமாகவும் மாறியது கடந்த நூறு ஆண்டுகளில் நடந்ததுதான். அதே போல் இன்று ஆரம்பித்தால் அடுத்த தலைமுறைக்குள் சாதி அடையாளம் அவமானமாக மாறி விடுவது நடக்கலாம்.

சாதி ஒழிய வேண்டும்

சூதாட்ட விடுதியில் யாரும் விடுதிக்கு எதிராக வெற்றி பெற்று விட முடியாது. விதிகளை அமைத்தவர்கள் அவர்கள். யார் என்ன செய்தாலும் தமக்கு ஒரு பங்கு வந்து விடுமாறுதான் விதிகளையே அமைத்திருக்கிறார்கள்.

ஆதிக்க சாதியினர் வகுத்த சாதி முறைக்குள்ளேயே அதன் பெயரைச் சொல்லிக் கொண்டே ஒடுக்கப்பட்ட சாதியினர் தமது நிலையை மேம்படுத்திக் கொள்ள முடியும் என்பது ஒரு அளவுக்குத்தான் சாத்தியம். எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையிலும் குறிப்பிட்ட பங்கு விதிகளை வகுத்த வகுப்பினருக்குப் போய்ச் சேரும் வண்ணம் ஆட்டம் நடந்து கொண்டிருக்கும் போது, எவ்வளவுக்கெவ்வளவு அடித்து ஆடுகிறீர்களோ, அவ்வளவுக்களவு நீங்கள் எதிர்க்க நினைக்கும் ஆதிக்க சாதியினர் வளர்ந்து வருவார்கள்.

குறிப்பிட்ட சாதியினர் உழைப்பால் முன்னேறியிருக்கிறார்கள், அதைப் போல மற்றவர்களும் செய்ய வேண்டியதுதானே என்று சொல்லும் ஹரிஹரன், பிரெஞ்சுப் புரட்சியின் போது, "ரொட்டி இல்லையென்றால், கேக் சாப்பிடட்டும்" என்ற அரசியின் கூற்றை நினைவுப் படுத்திக் கொள்ளுங்கள்.

இன்னும் விபரமாகப் புரிய வேண்டுமென்றால், Invisible Man என்று கறுப்பினத்தவர் ஒருவர் அமெரிக்காவின் இனப் பாகுபாடுகளைப் பற்றி எழுதிய நாவலைப் படித்துப் பாருங்கள். (நான் இதை முழுவதும் படிக்கவில்லை )

'விதிகளுக்குக் கட்டுப் பட்டு கடினமாக உழைக்கும் 'நிக்கர்'களுக்கு நாங்கள் போடும் பொறைகள் சாப்பிடக் கிடைக்கத்தானே செய்கின்றன' என்று இன்றைக்கும் நிற ஆதிக்க வாதிகள் விவாதித்து வருகிறார்கள். அதே வகையில் சேர்வதுதான் உங்கள் கட்டுரைகளும்.

சாதி, அதனால் ஏற்பட்ட, அனுபவித்த கொடுமைகளை ஒழிக்க - சாதி அடையாளம் நிரந்தரத் தீர்வு ஆகாது. ஒவ்வொரு முறை சாதியின் பெயரால் ஒருவர் செயலாற்றும் போதும், அவர் சாதி முறை,் உள்ளமைந்த ஏற்றத் தாழ்வு, ஆதிக்கக் கோட்பாடுகளுக்கு உரம் சேர்க்கிறார்.

வேறு என்னதான் வழி என்று எனக்கும் தெரியவில்லை. ஆனால், சாதி அடையாளத்துடன் தமது நிலையை உயர்த்திக் கொள்ள ஒடுக்கப்பட்டவர்கள் போராடுவது அவர்களை பயன்படுத்தி வந்த ஆதிக்க சாதியினரின் கைகளைப் பலப்படுத்துவதுதான்.

வியாழன், டிசம்பர் 21, 2006

பீட்டாவுடன் உறவாடலின் குறிப்புக்கள்

சோவியத் காலங்களில் ஒரு நாள் உளவுத் துறை அலுவலர்கள் வந்து சைபீரியாவுக்கு ஓலை கொண்டு வந்து காண்பிப்பார்களாம். அதை வாங்கிக் கொண்டு புறப்பட்டு விட்டால் பழைய வாழ்க்கையை முற்றிலும் மறந்து விட்டு இருக்கும் வரை புதிய அனுபவத்துக்குள் நுழைய வேண்டியதுதான்.

ஒரு நாள் இல்லையென்றால் ஒரு நாள் பிளாக்கர் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு சேவையில் உள் நுழைந்ததும், 'உங்கள் புதிய பிளாக்கர் தயாராக இருக்கிறது' என்ற கண்ணை நிறைக்கும், தவிர்க்க முடியாத, புறக்கணிக்க முடியாத தகவல் பட்டி தோன்றும். அந்த அழைப்பை ஏற்று திரும்பி வர முடியாத பிளாக்கர் பீட்டா எனப்படும் புதிய உலகுக்குள் நுழைந்து விட்டால் ஆனந்தங்களும், கடுப்புகளும் போட்டி போட்டுக் கொண்டு துரத்த ஆரம்பித்து விடும்.

தமிழ் பதிவர்களுக்கு முதல் இழப்பு, வார்ப்புருவில் தமிழில் செய்து வைத்திருந்த மாற்றங்கள் எல்லாம் பூச்சி பூச்சியாக மாறி விடுவது. என்னுடைய பதிவுகளில் பழைய பதிவுகள் எல்லாவற்றிலும் பின்னூட்டம் இட்டவர்களின் தமிழ்ப் பெயர்களுக்கும் அதே கதிதான். இதை யாரிடம் முறையிட வேண்டும் என்று பிளாக்கரில் விபரங்கள் தேடியும் கிடைக்கவில்லை. பீட்டா என்றால் பயன்படுத்துபவர்களின் குறை நிறைகளை வாங்குவதுதானே முதன்மை நோக்கம்!!

பழைய வார்ப்புருவை அப்படியே வைத்துக் கொள்ளலாம் என்று முயன்றால் புதிய பிளாக்கரின் பல வசதிகள் கிடைக்காமல் போய் விடும். முந்தைய பதிப்பில் வார்ப்புருவில் எந்த மாற்றமும் html எனப்படும் மீயுரை நிரலை மாற்றுவதன் மூலமே செய்ய முடியும். புதிய பதிப்பில் நிரல் எழுதத் தெரியாதவர்களும் அழகு படுத்தும் வண்ணம் பல பிரிவுகளாக மேம்படுத்தும் சிறு வசதிகளைச் செய்திருக்கிறார்கள்.

பீட்டாவுக்கு உங்கள் பதிவுகள் மாற்றப்பட்டு விட்டன என்ற தகவல் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேர்ந்ததும், உங்கள் கூகிள் கணக்கினைப் பயன்படுத்தி பீட்டா பிளாக்கருக்குள் நுழைந்து டேஷ் போர்டு எனப்படும் கருவிப் பலகைக்கு வந்து சேரலாம்.

  • கருவிப் பலகையில் Template என்ற சுட்டியை கிளிக்கி வரும் பக்கத்தில் Customize என்ற தனிப்பயனாக்கும் சுட்டியை அணுகினால், புதிய வார்ப்புருவுக்கு மாறினால்தான் புதிய வசதிகளை பயன்படுத்த முடியும் என்ற தகவல் பக்கம் வரும். (வலைப்பதிவின் வலது மேல் உச்சியில் இருக்கும் Customize என்ற தனிப்பயனாக்கும் சுட்டியை அணுகினாலும் இதே பக்கம் வந்து விடும்).

  • Upgrade Your Template என்று வார்ப்புரு தேர்வை புது பதிப்புக்கு மாற்றுவதை ஏற்றுக் கொண்டால், அடுத்த பக்கத்தில் பிடித்த வார்ப்புருவைத் தேர்ந்தெடுக்க அவற்றின் படங்களைக் காண்பிக்கிறார்கள். சில படங்களுக்குக் கீழே ஒன்றுக்கு மேற்பட்ட தேர்வுகள் கூட உண்டு. எதைத் தேர்ந்தெடுக்கிறீர்களோ அதன் முன்னோட்டம் உடனடியாகக் காணக் கிடைக்கும். பிடித்த வட்டத்தில் புள்ளி வைத்து Save Template என்று சொல்லி விட்டால் புதிய தனிப்பயனாக்கக் கருவிப் பக்கத்துக்கு வந்து விடுகிறீர்கள்.

  • இங்கு உங்கள் வலைப்பூவின் பல்வேறு பகுதிகள் படங்களாகத் தெரியும். அவற்றின் இடங்களை எலிக்குட்டியால் இழுத்து மாற்றிக் கொள்ளலாம். உள் விபரங்களை மாற்ற Edit என்ற சுட்டியைப் பாவிக்க வேண்டும். அதில் வரும் வெளிச் சாளரமும் எளிமையாக வடிவமைக்க வசதியாக இருக்கின்றது.

  • புதிதாக வார்ப்புருவில் ஏதாவது நிரலையோ, படத்தையோ, பட்டியலையோ, முழக்கங்களையோ சேர்க்க Add a Page Element என்ற சுட்டியைச் சொடுக்கினால், பல வகையான அலங்கரிப்புக் கூறுகளுக்கு படங்களாகத் தேர்வுகள். எடுத்துக் காட்டாக் statscounter நிரலைச் சேர்க்க HTML/JavaScript பகுதியை Add to Blog என்று சொடுக்கி வரும் பெட்டியில் தேவையான நிரலை ஒத்து ஒட்டிக் கொள்ளலாம்.
பிற்காலத்தில் வார்ப்புருவை மாற்றினாலும், இப்படிச் சேர்த்த பிற்சேர்க்கைகள் இழக்காமல் புதிய வார்ப்புருவிலும் சேர்க்கப்பட்டு விடுவதால், தினம் ஒரு வார்ப்புரு என்று கூட அலங்கரிப்பை மாற்றிக் கொள்ள வசதி கிடைத்து விடும்.

தமிழ் மணம் கருவிப் பட்டையை இணைக்க http://blog.thamizmanam.com/archives/51 என்ற பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் வழியைப் பின்பற்ற வேண்டும்.

புதன், டிசம்பர் 20, 2006

நிறவெறி பிடித்த தமிழர்கள்

'கறுப்பாக இருப்பது இழிந்தது. வெள்ளைத் தோல்தான் முன்னேற்றத்தின் அடையாளம்' என்பது இன்னொரு பிரச்சாரம். குழந்தை பிறந்ததிலிருந்து, ஒவ்வொரு நிலையிலும், 'அவன் கறுப்புதான், அவன் நல்ல நிறம்' என்று சமூக அடிமைத்தனத்தை பிரச்சாரம் செய்கிறோம்.

என்னதான் நுணுக்கமாக வேறுபட்டாலும் எல்லோருமை அரை நிறமான பழுப்பு நிறம்தான் என்பதை மறந்து விடுகிறோம். இதே பழக்கத்தில் ஊறிப் போய் இங்கு வெள்ளையானவர்கள் என்று கருதப்படுபவர்கள் கூட வெள்ளை தோல் படைத்த இனத்தவர் முன்பு தாழ்ந்து போய் விட்ட உணர்வு ஏற்படுகிறது. மிகக் கீழ்நிலையில் இருக்கும் வெள்ளை இனத்தவர் கூட முதல் பார்வையில் மதிப்பைப் பெற்று விடுகிறார்கள். இதற்கு முழுப் பொறுப்பும் நம்முடைய பழக்கங்களும், மனப்போக்கும்தான்.

மிக உயர்ந்த நிலையில் பணம் படைத்தவர்கள் கூட தமது முகத்தில் கெட்டியாக பவுடர் பூசிக் கொண்டு விமான நிலையத்துக்குள் வருவதைப் பார்க்கும் போது வேதனையாக இருக்கும். நம்முடைய தோல், நம்முடைய பழக்கங்கள், நம்முடைய உணவு முறை, நம்முடைய முக அமைப்பு இயற்கையில், பல்லாண்டு கால வாழ்க்கையில் விளைந்தவை. அவற்றை இழிந்ததாகக் கருதுவது நமது தாழ்நிலைக்கு அடிப்படைக் காரணம்,

இந்த இடைவெளியில்தான் பேர்அன்ட்லவ்லி என்று சக்கைப் போடு போட்ட சிகப்பழகு களிம்பு. இப்போது ஆண்களுக்கும் வந்து விட்டதாம். இந்த நிறவெறியை, நிறத் தாழ்வுணர்வை ஒழிக்க:

1. முகப்பவுடர்கள், சிகப்பழகு களிம்புகள் பயன்படுத்துவதை நிறுத்துவோம். நம்முடைய முகம் இயல்பாகவே அழகாக, கம்பீரமாக இருக்கிறது என்ற தன்னம்பிக்கையோடு வெளியே கிளம்புவோம்.

2. பல ஆண்டுகளாகப் பழகி விட்ட மனதை சரிப்படுத்த, நேரம் கிடைக்கும் போதெல்லாம், ஒரே முகத்தை வெவ்வேறு நிறங்களில் பொருத்திக் கற்பனை செய்து பார்க்கலாம். வெள்ளையாக ஒரு பெண்ணைப் பார்த்தால், இதே முகம் கறுப்பாக இருந்தால் எப்படி இருக்கும் என்று உருவகித்துப் பார்த்துக் கொள்ளலாம். கறுப்பு நிறத்தவரைப் பார்க்கும் போது வெள்ளை நிறத்தைப் பொருத்திப் பார்க்கலாம்.

இந்த முறையைப் பின்பற்றி ஒரு சில வாரங்களிலேயே (ஆறு வாரங்கள்!!), தோல் நிறத்தைச் சார்ந்த அழகுணர்ச்சியை மாற்றிக் கொள்ள முடிந்தது.

3. யாரிடமும் தோல்நிறத்தை உயர்த்தியோ தாழ்த்தியோ பேசுவதை எழுதுவதைத் தவிர்க்கலாம்.

நமது மண் தந்த, நமது பெற்றோர் தந்த தோல் நிறம் எதற்கும் குறைந்தது இல்லை, அதை மாற்ற எந்த முயற்சியும் எடுக்க வேண்டியதில்லை. அதைப் பெருமையாக ஏற்று தன்னம்பிக்கையோடு நடைபோடப் பழகுவோம்.

செவ்வாய், டிசம்பர் 19, 2006

ஈழத்து மனிதர்களுக்காக ஒரு கூட்டம்

'ஈழத்தமிழரின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள தீவிரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக இணையத்தில் கையெழுத்து இயக்கம் நடத்தி வரும் திரு, பெல்ஜியத்திலிருந்த வந்திருப்பதை முன்னிட்டு சென்னை வலைப்பதிவர்கள் சந்திக்கலாம்' என்று லக்கிலுக் அடக்கமாக எழுதியிருந்தார். ஞாயிறு அன்று மதியம், சிவஞானம்ஜி ஐயா தொலைபேசி 'நியூசியிலிருந்து துளசி அம்மா வந்திருக்காங்க, மாலையில் பதிவர் கூட்டத்தில் சந்திக்கலாம்' என்று சொல்லியிருந்தார்.

சளியும் காய்ச்சலும் நிழலடிப்பது போலப்பட்டாலும் விடாப்பிடியாக நான்கு நாள் தாடியோடுக் கிளம்பி பனகல் பூங்கா அருகில் வண்டி நிறுத்த இடம் தேடி, நிறுத்தக் கூடாத இடம் என்று பிறகு புரிந்த இடத்தில் நிறுத்தி விட்டு உள்ளே போக வரும் போது எதிரில் அருள் குமாரும், வீரமணியும் சந்திப்பு இடம் மாறிவிட்டதாக திரும்பிக் கொண்டிருந்தார்கள். நடேசன் பூங்கா என்பது கேபிஎன் அலுவலகம் இருக்கும் சாலையில் என்று மங்கலாக நினைவு இருந்தாலும், உறுதி செய்து கொள்வதற்காக ஒரு ஆட்டோ ஓட்டுனரைக் கேட்க அவர், ஜிஎன் சாலையில் போய் வலது புறம் சந்தில் திரும்பச் சொன்னார்.

அப்படியே தேடித் திரும்பிப் போகும் போது வண்டி மேலே போக மறுத்து நின்று விட்டது. தள்ளிக் கொண்டே போய் கண்ணதாசன் பதிப்பகத்துக்கு அருகிலிருக்கும் வாசல் வழியாக பூங்காவுக்குள் போனேன். தூரத்திலிருந்து பார்க்கும் போதே, என்னைப் போன்ற கிட்டப்பார்வையினருக்கும் தெளிவாகத் தெரியும் வண்ணம் வட்டம் அமைத்து அமர்ந்திருந்தார்கள் பதிவர்கள். பாசக்காரத் தலைவர் பாலபாரதி தனக்கு அருகிலேயே இடம் போட்டு என்னை அமர்த்திக் கொண்டார்.

கூட்டங்களின் உயிர்ச் சக்தி போன்ற பாலா அவ்வப்போது தம்மடிக்க தேநீர் குடிக்க போய் விட்ட நேரங்களைத் தவிர மற்ற நேரங்களில் உரையாடல் முன்திட்டமிடப்படாமல் இருந்தாலும் சுறுசுறுப்பாகவே போனது.

எல்லோராலும் சங்கம் வைத்துக் கலாய்க்கப்பட்டாலும், தானும் அதை சுணங்காமல் ஏற்றுக் கொண்டாலும், பாலபாரதியின் எண்ணத் தெளிவு பலமுறை என்னை வியக்க வைத்திருக்கிறது. லக்கிலுக்கிலிருந்து அறிமுகத்தை ஆரம்பித்து வைக்கும்படி பாலபாரதி கேட்டுக் கொண்ட பொழுது புரியாவிட்டாலும் அவருக்கு இடது புறம் அமர்ந்திருந்த திரு எனப்படும் திருவள்ளுவர் கடைசியாக எல்லோருக்கும் பிறகு பேசினால் முத்தாய்ப்பாக இருக்கும் என்று யோசித்து அதைச் சொல்லியிருப்பார் என்று படுகிறது.

யாழ்ப்பாணத்தில் அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்டு துயரமுறும் மக்களைப் பற்றி திரு பேசியதிலிருந்து திரும்பி, தமிழகத்தில் அகதிகளாக வந்திருக்கும் ஈழத்தமிழர்களைப் பற்றி பேச்சு மாறி விட்டதை சுட்டிக் காட்டி இதைப் போலத்தான் வலைப்பதிவுகளிலும் பதிவின் நோக்கத்திலிருந்து திசை திருப்புவது பலமுறை நடந்து விடுகிறது என்று பாலா உணர்த்தினார்.

முதல் முறை இதே நடேசன் பூங்காவில் சந்தித்து மாமல்லபுரம் போய் விட்டு வந்த பதிவுகளின் விளைவாகத் தொடங்கியது சென்னப்பட்டிணம் கூட்டுப் பதிவு. சென்ற மாதம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சந்திப்பின் விளைவாகத் தொடங்கியது வலைப்பதிவர் உதவிக் குழு என்ற கூட்டுப் பதிவு. 'ஏதாவது பிரச்சனைக்குத் தீர்வு கிடைக்கவில்லையென்றால் அதன் தலையில் கல்லைப் போடு அல்லது ஒரு கமிஷனைப் போடு' என்று அரசியல்வாதிகளைப் போல நாமும் பேசி விட்டுக் கலைந்து போக மனமில்லாமல் ஒரு கூட்டுப் பதிவு அல்லது குழு உருவாக்குவதோடு நின்று விடுகிறோமோ என்று தோன்றியது.

இலங்கையின் வடக்குக் கிழக்கில் தமிழர்கள் மீது நடத்தப்படும் தீவிரவாதம், தமிழ்நாட்டு மக்களை நம்பி அகதிகளாக வரும் மக்களுக்கு கிடைக்காத உரிமைகள் என்று பேசி விட்டு, அடுத்து என்ன செய்வது என்று தெரியாமலேயே கலைந்து விட்டோம்.
  • தெருக்களில் இறங்கி, அல்லது தத்தமது வட்டங்களில் கையெழுத்து இயக்கம் நடத்துவது
  • உண்மை அறியும் குழு ஒன்றை உருவாக்கி அகதி முகாம்களுக்குப் போய்ப் பார்ப்பது
  • ஊடகங்களில் பரவலாக எழுதி மக்களிடையே விழிப்புணர்வை உருவாக்குவது
என்று உருப்படியான சில கருத்துக்கள் வெளி வந்தன. எதுவுமே கடைசி உருவம் பெறாமலேயே இருந்து விட்டன. கையெழுத்து இயக்கம் நடத்துவதன் மூலம் பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். தமிழ் வலைப்பதிவர்களில் சிலர் ஆளுக்கு நூறு கையெழுத்து வாங்குவது என்று முடிவு செய்தாலும் சில ஆயிரம் கையெழுத்துக்களைத் திரட்டி விடலாம்.

திரு அவர்களின் கையெழுத்து இயக்கத்துக்கான அறிக்கையை ஒட்டி தமிழிலும், ஆங்கிலத்திலும் அச்சடித்து தன்னார்வலர்கள் அனைவரும் ஒரே மாதிரியான அறிக்கையில், தமது நண்பர்கள், உறவினர்களிடம் மட்டுமாவது கையெழுத்து வாங்கிக் கொடுக்கலாம். இதற்கு முன்வருபவர்கள் பின்னூட்த்திலோ, தனிமடலிலோ தமது ஆர்வத்தைத் தெரிவிக்கவும்.

ஞாயிறு, டிசம்பர் 17, 2006

காந்தி மீண்டும் வர வேண்டும் !!

வாழ்க நீ எம்மான், இந்த வையத்து நாட்டிலெல்லாம்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப்
பாழ்பட்டு நின்றதாமோர் பாரத தேசம் தன்னை
வாழ்விக்க வந்த காந்தி மகான் நீ வாழ்க வாழ்க!

சுப்பிரமணிய பாரதியார்

சனி, டிசம்பர் 16, 2006

நாட்குறிப்பு எழுதுங்கள்

நாட்குறிப்பு எழுதுவதால் பல பலன்கள் கிடைக்கின்றன.

1. Communication
கருத்துக்களை எடுத்துச் சொல்லும் திறன் அதிகரிக்கிறது. (communication). நம்முடைய எண்ணங்களை சரியாக அணி வகுத்து பிறருக்கு எடுத்துச் செல்வதற்கான பயிற்சி தினசரி எழுதும்போது கிடைக்கிறது. எழுதும் போது கிடைக்கும் இந்த அதிகரிப்பு, பேசும் போதும் உதவுகிறது. வீடு, வேலை, வெளியிடங்களில் நம்முடைய எண்ணங்களை திறமையாக வெளிப்படுத்துவதற்கு இது உதவும்.

2. மொழித் திறன் (language skills)
சித்திரமும் கைப்பழக்கம் என்பதன் படி நமது தாய் மொழியிலோ ஆங்கிலத்திலோ வளமையாக எழுத ஆரம்பிக்கும் போது மொழியறிவில் இருக்கும் பழுதுகள், சின்ன வயதில் கற்று மறந்து விட்ட இலக்கண விதிகள் கவனத்துக்கு வந்து மொழித் திறனை அதிகரிக்க உதவுகின்றன.

3. Introspection
நாளில் நடந்ததைத் திரும்பிப் பார்த்து தவறுகளை உணர்ந்து கொள்ள முடியும். நேரத்தை வீணாகக் கழித்ததைப் புரிந்து கொண்டு மனதளவில் திருத்திக் கொள்ளுதல் நாட்குறிப்பு எழுதுவதன் மூலம் கிடைக்கிறது.

4. விழிப்புணர்வு

நாளில் வேலைகளைச் செய்யும் போது இவற்றைப் பற்றி குறிப்புகள் எழுத வேண்டுமே என்ற நிதானிப்பு மனதில் ஓடிக் கொண்டேயிருக்க நம்முடைய செயல்களில் அமைதியும் தெளிவும் அதிகரிக்கிறது.

உணர்ச்சிகளில் மூழ்கி, நடப்பதற்கு எதிர்வினைகளை செய்து கொண்டே போனால், நம் வாழ்க்கை நம் கையில் இருக்காது. விழிப்புணர்வு நாள் முழுவதும் இருந்தால் எந்த ஒரு சூழலிலும் அந்த கணத்திலிருந்து விடுபட்டு, வாழ்க்கைக்கு நல்ல பலன் கிடைக்கும் வழியைத் தேர்ந்தெடுக்க முடியும்.

5. பிறர் கருத்துக்கள்

எழுதிய நாட்குறிப்புகளை பிறருடன் பகிர்ந்து கொண்டால், நம்முடைய செயல்களுக்கான ஒரு உரைகல் இருந்து கொண்டேயிருக்கும். படிப்பவர்களின் கருத்துக்கள் நமது குறைபாடுகளைச் சுட்டியும், நிறைகளைப் போற்றியும் நம்மை வழி நடத்தும்.

நம்மைப் பொறுத்த வரை நம்முடைய செயல்களுக்கு ஒரு மதிப்பீடு இருக்கும். சென்னையில் கிண்டியிலிருந்து மைலாப்பூர் போக நான் குறிப்பிட்ட வழியில் போகிறேன். அதுதான் சிறந்த வழி என்று எனக்குத் தோன்று பல ஆண்டுகளாக அதிலேயே ஓடிக் கொண்டிருக்கிறேன். இன்னொருவருக்கு அதை விடக் குறுகலான வழி தெரிந்திருக்கலாம். நமது வழியை அவரிடம் சொன்னால், அவர் நம்மை மேம்படுத்தலாம.

6. அனுபவப் பாடங்கள்.

பல விஷயங்கள் மிக இயல்பானதாக வெளிப்படையானதாக நமக்குத் தோன்றுவது இன்னொருவருக்கு இன்னும் புதுமையாக இருக்கலாம். நம்முடைய வளர்ப்பு, பின்புலம், அனுபவங்களில் நாம் ஈட்டிய பாடங்கள் இன்னொருவருக்குக் கிடைக்காமலே இருந்திருக்கலாம்.

பிறருடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் நமது அனுபவங்கள் அவர்களுக்கும் படிப்பினையாக இருக்க வாய்ப்புகள் ஏற்படுகின்றன. நம்முடைய வழி சிறந்ததாக இருந்தால் அவரும் அந்த வழியில் போக ஆரம்பித்து விடலாம்

படிச்சவன் பாட்டைக் கெடுக்கிறான்

இன்றைய கல்வி முறையின் அழுத்தங்கள் பல இடங்களை உடைத்து வருகின்றன.
  • தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்கள்
  • பள்ளியில் கண்மூடித்தனமான போட்டி,
  • மாணவர்களுக்கு ஓய்வே இல்லாத தயாரிப்புகள்,
  • குறுக்கு வழியில் மதிப்பெண்கள்,
  • கல்லூரி இடம் பிடிப்பு,
  • வியாபாரமாகி விட்ட கல்விக் கூடங்கள்
    என்று மேற்கத்திய சமூகங்களுக்கு சேவை செய்யும் இளைஞர்களைத்தான் தயாரித்துக் கொண்டிருக்கிறோம்.
மதிப்பீட்டு முறை
பன்னிரண்டு ஆண்டு பள்ளிப்படிப்பை
  • ஒரு ஆண்டு பள்ளியிறுதி வகுப்பில் உச்சகட்டமாக ஆக்கி,
  • மூன்று மணி நேரத் தேர்வுகளாக ஆறேழு தாள்களில் எழுதி
  • ஒவ்வொரு தாளையும் இருபது நிமிடத்தில் சுண்டிப் பார்க்கும்
வகுப்பில் பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியரின் மதிப்பீட்டைப் புறக்கணித்து மாணவன் முகத்தையே பார்த்திராத ஒருவர் மாணவனின் தேர்வுத்தாளை மதிப்பிட்டு கல்வித் தரத்தை தீர்மானிப்பது முட்டாள்தனமானது.

கல்வி ஊடுமொழி
குழந்தைகள் அன்னிய மொழியில் படிப்பதுதான் இயற்கை என்று ஏற்றுக் கொண்டிருக்கிறோம். சிறிய கிராமங்களில் கூட கூரை போட்டு மெட்ரிகுலேஷன் பள்ளி என்று ஆங்கிலத்தில் கதைத்துக் கொண்டிருக்கிறோம்.

என்னுடைய அனுபவத்தில் தாய்மொழியில் கல்வி பெறாதவர்கள் உலக வாழ்க்கையில் எவ்வளவு திறமையாக நடந்து கொண்டாலும், அவர்களுடைய சிந்தனை ஆழம் குறைவாக இருக்கிறது. எல்லா பொதுவான கருத்துக்களைப் போல இதற்கும் எதிர்மறையாக பல தனி உதாரணங்களைக் காட்டலாம் என்றாலும், பொதுவாக ஆங்கில வழிக் கல்வி சிந்தனைத் திறனை முடக்கி விடுகிறது என்றே சொல்வேன்.

கணினி பற்றிக் கற்கும் போது RAM என்பதை ரேம் என்று தமிழில் எழுதிக் கற்றுக் கொள்ளலாம். அல்லது நினைவகம் என்று தமிழ்ப் படுத்திக் கற்கலாம். ரேம் என்று படித்தால் வெளி உலகுடன் உறவாடும் போது திணறல் குறைவாக உடனேயே சமாளித்துக் கொண்டு விடலாம். ஆனால் புரிதல் முழுமையடையாது.

நினைவகம் என்று கற்றுக் கொண்டால் ஆங்கிலத்தில் உரையாடும் போது, எழுதும் போது அதற்கான ஆங்கிலச் சொல்லை நினைவுபடுத்த வேண்டியிருக்கும். இந்தத் தொல்லையை மட்டும் சமாளித்துக் கொண்டால் கிடைக்கும் பலன் அளவிட முடியாதது.

கல்வி என்பது விபரங்களை மனதில் திணித்துக் கொண்டு, பின்னர் வாந்தி எடுப்பது இல்லை. உணவை சாப்பிட்டு செரித்து, ஆற்றலாக வெளிப்படுவதுதான் கல்வி. அப்படி செரிக்க உதவுவது நினைவகம் என்ற சொல். நினைவகம் என்று படித்ததும், பல நிலையிலான புரிதல்கள் கிடைக்கின்றன.

அந்தப் புரிதல்களின் விளைவாக சிந்தனை கிளரப்பட்டு, பல திசைகளில் எண்ணங்கள் ஓட முடியும். பல்வேறு துறைகளில் கற்றுக் கொண்டவற்றை இந்த புரிதலுடன் இணைத்து புதிய கருத்துக்கள், கண்டு பிடிப்புகள் உருவாகலாம்.

நம்முடைய கல்வி இந்தத் திசையில் திரும்பினால்தான் நம் சமூகம் தன்னுடைய முழுமையான பங்களிப்பை மனித குலத்துக்கு வழங்க முடியும். மூன்றாயிரம் ஆண்டு வழி வந்த பண்பாடு வெளியிலிருந்து கிடைத்த அறிவுச் செல்வங்களை இணைத்து உலகுக்குத் திருப்பிக் கொடுக்க வேண்டியவை ஏராளம். நமக்குப் பொருந்தாததை நம் உடல் செரிக்க முடியாததை உள்ளே தள்ளி வந்தால் வயிற்று வலியும் வாந்தியும்தான் மிஞ்சும்.
  • பள்ளிக் கல்வி தாய் மொழியிலேயே இருக்க வேண்டும். பத்து ஆண்டு பள்ளிப் படிப்புக்குப் பிறகு மாணவர்கள் தமது பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

  • ஆசிரியர் மீது நம்பிக்கை வைக்கும் கல்வி முறை இருக்க வேண்டும்.உயர் கல்விக் கூடங்களில் இருப்பது போல் நூற்றுக்கு ஐம்பது மதிப்பெண்கள், தொடர்ச்சியான மதிப்பீடு மூலம் வழங்கப்பட வேண்டும்.

  • எழுத்துத் தேர்வை மட்டும் சார்ந்திராமல், பேச்சுத் திறன், கை வேலை, எழுதுதல், நுண்கலைகள் போன்றவற்றையும், மற்றவர்களுடன் பழகும் திறன், ஆசிரியரின் சொந்த மதிப்பீடு இவற்றையும் அடிப்படையாகக் கொண்டு இந்த உள்ளுறை மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும்.

  • ஆண்டு இறுதியில் பொதுத் தேர்விலும் எழுத்துத் தேர்வு, பேச்சு, ஆசிரியர்/பெற்றோர் கூட்டத்தில் செய்து காட்டுதல், புதிய படைப்புகள் என்று வெளிப்படையாக நடத்தி மதிப்பிட வேண்டும்.

வியாழன், டிசம்பர் 14, 2006

பத்ரியின் எண்ணங்கள்

பிளாக் என்பது முதலில் தெரிய வந்தது பத்ரியின் மூலம்தான். அப்போது ழ-கணினி வேலைகளில் மூழ்கி, மடற்குழுக்களில் அடித்துக் கொண்டிருந்த நேரம். எங்களை எல்லாம் அபாண்டமாகக் குற்றம் சாட்டுவதாகக் குறைப்பட்டுக் கொண்டு வாதாடிக் கொண்டிருந்தேன் நான். அப்போது ஏற்பாடு செய்திருந்த ழ-கணினி வெளியீட்டு விழாவுக்கு அவரும் வந்து அதைப் பற்றித் தன்னுடைய பிளாக்கில் எழுதுவதாக தமிழினிக்ஸ் குழுவில் மடல் எழுதியிருந்தார்.

அவராவது வந்து பார்த்து, 'நாங்கள் ஒன்றும் இது வரை பணி செய்த தன்னார்வலர்களை ஒதுக்கி விட்டுப் போக நினைக்கவில்லை என்று நடுநிலையாக எழுதட்டும்' என்று நினைத்துக் கொண்டேன். அன்றையக் கூட்டத்துக்கு அரைக் கால் சட்டையுடன், அமெரிக்க பாணி இயல்பான உடையில் வந்திருந்தவர்தான் பத்ரி என்று ஊகித்துக் கொண்டோம்.

அடுத்த நாளிலிருந்து மூன்று பகுதிகளாக கூட்டம் பற்றி எழுதி புகைப்படங்களையும் தன்னுடைய வலைப்பதிவில் வெளியிட்டிருந்தார். அன்றிலிருந்து thoughtsintamil.blogspot.com என்ற வலைமுகவரி தினசரி போய்ப் பார்க்கும் இடமாக மாறி விட்டிருந்தது. ஒவ்வொரு நாளும் புதிய புதிய இடுகைகள், நாட்டு நடப்புகளை அலசும் பார்வைகள் என்று வலைப்பதிவுகள் என்ற பரிமாணம் கொஞ்சம் கொஞ்சமாக புலப்பட ஆரம்பித்தது பத்ரியின் வலைப்பதிவின் மூலமாக.

இந்திய அளவில் நடந்த சிறந்த வலைப்பதிவுகளுக்கான போட்டிகளில் பரிசுகள் பெற்றது, ஆர்வம் குறையாமல் தொடர்ந்து எழுதிக் கொண்டு வந்தது என்று கவனத்தை இழுத்துப் பிடித்தே வைத்திருந்தது பத்ரியின் வலைப்பதிவு. அவரது பதிவில் இணைத்திருந்த வலது பக்கச் சுட்டிகளின் மூலம் மற்ற வலைப்பூக்களையும் போய்ப் பார்க்க ஆரம்பித்திருந்தேன். பல மாதங்களாக அவரது முகப்புப் பக்கம்தான் எனக்கு வலைப்பூக்களை மேய்வதற்கான நுழைவாயிலாக இருந்தது.

தமிழ் மணத்தில் ஏற்பட்ட சச்சரவுகள், மறு மொழி மட்டுறுத்தல் கட்டாயமாக்கப்பட்டது, சிலபதிவுகள் திரட்டுதல் நிறுத்தப்பட்டது போன்றவை நடக்கும் போது பத்ரியின் எழுத்துக்கள் மூலமாகத்தான் தெரிந்து கொண்டேன். அதன் பிறகு எப்போது அந்தத் தொட்டிலை விட்டு வளர்ந்து வெளியே வந்து வலைப்பூவுலகில் தன்னிச்சையாக உலாவவும், எனக்கென ஒரு அடையாளமும் உருவாக்கி வைத்துக் கொள்ளவும் ஆரம்பித்தேன் என்பது நினைவில்லா விட்டாலும், தாயின் மடியைப் போல வலைப்பூக்களின் அரிச்சுவடியை கற்றுக் கொள்ள உதவியது பத்ரியின் பதிவுதான். என்னைப் போலவே பலர் பத்ரியின் பதிவு மூலம் வலைப்பதிவுலகத்துக்குள் நுழைந்திருப்பார்கள் என்பது உறுதி.

திங்கள், டிசம்பர் 04, 2006

மாற்று வழி 3 - லினக்ஸ்

http://kaniporul.blogspot.com/2010/08/3_12.html

வலைமகுடம் - 2

உயரப் பறக்கும் பருந்து போல பார்வை பரத்தி எங்கு என்ன நடக்கிறது என்று உடனடி தீர்ப்பு சொல்லி அதையே ஒரு பதிவாகச் செய்து விட்டவர் போஸ்டன் பாலா. பலருக்கு ஊக்கமூட்டுபவராக இருக்கிறார். ஈதமிழ் என்ற தனது முதன்மைப் பதிவில் அவருக்கே உரித்த பாணியில் வலது பக்கம் நீளமான அலங்கரிப்புகள். விட்டேற்றியான நடையில் சுழன்றடிக்கும் சாட்டையாக வந்து விழும் சொற்களில் பல பொருட்களைப் பற்றி எழுதி விடுவார்.

பாபா என்று பலராலும் அன்பாக அழைக்கப்படும் போஸ்டன் பாலா தனது புகைப்படத்தை வரை கோடுகளாக வெளியிட்டிருப்பதிலிருந்து ஆரம்பித்து ஒவ்வொரு செயலிலும் தனி முத்திரை பதித்திருக்கிறார்.

ஜூன் 2006ல், ஒரு மாத இடைவெளி விட்டு அந்த நேரத்தில் எழுதி வைத்திருந்த இருபது, இருபத்தைந்து பதிவுகளை காலையில் ஒன்று மாலையில் ஒன்றாக வெளியிட்டுக் கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் தமிழ்மண நட்சத்திரமாக பாலா இருந்தார். திடீரென்று ஒரு பதிவில் இந்த வார உண்மையான நட்சத்திரம் மா சிவகுமார் என்று நான் வெளியிட்ட எல்லா பதிவுகளையும் தொகுத்து போட்டார். அன்று முதல் அவ்வப்போது snapjudgeல் இணைப்பதிலும், எப்பொழுதாவது எழுதும் பின்னூட்டங்களிலும் ஆழமான பாதிப்புகளை ஏற்படுத்தி விட்டார்.

முத்து தமிழினி ஒரு இடத்தில் சொன்னது போல snapjudgeல் ஒரு பதிவு இடம் பெறுவதை வைத்து அதன் தரத்தை எழுதியவர்கள் தெரிந்து கொள்ள முடியும்.

இவரது உள்ளேற்கும் திறன் வியக்கத்தக்கது. ஓவியக் கலை ரசிப்பிலிருந்து, புத்தக விவரிப்புகள், திரைப்பட விமரிசனங்கள், அரசியல் நிகழ்வுகள், சக வலைப்பதிவர்களைக் கலாய்த்தல் என்று எல்லாத் துறைகளிலும் கை வைத்து தனக்கே உரிய பாணியில் அவற்றின் பரிமாணங்களை வெளிப்படுத்தி விடுவார். இவரது ஈரப்பதம் இல்லாத நகைச்சுவைப் பதிவுகள் ஒரு நிமிடம் இழுத்துப் பிடித்து பல மணி நேரங்கள் மனதை உறுத்திக் கொண்டே இருக்கக் கூடியவை.

இது வரை நேரில் பார்த்திரா விட்டாலும், எண்ணங்களால் மிக நெருங்கிய உணர்வைத் தரும் பதிவர் பாலா. என் பார்வையில் பட்ட வரையிலேயே நான்கைந்து இடங்களில் எனது எழுத்து பதிவை பரிந்துரைத்து எழுதியிருந்தார். இந்த எழுத்து பதிவில் எப்போதாவது தடுமாற்றம் வந்து விடுமோ என்று படும் போது ஒரு பின்னூட்டம் பாலாவிடமிருந்து வந்திருக்கும்.

பாலாவின் அன்புக்கும் ஆதரவுக்கும் என்னுடைய வணக்கங்களும் நன்றிகளும்.