வெள்ளி, பிப்ரவரி 29, 2008

வாழும் நெறி

தனியொரு மனிதன் திருந்தி விட்டால்
சிறைச்சாலைகள் தேவையில்லை

இருப்பதை எல்லாம் பொதுவில் வைத்தால்
எடுப்பவர் யாருமில்லை

=== ஒரு பழைய தமிழ்த் திரைப்படப் பாடல்

வியாழன், பிப்ரவரி 28, 2008

சுஜாதா

தமிழ் அறிந்த ஒரு தலைமுறையையே புரட்டிப் போட்ட, அறிவியல் தமிழை பட்டி தொட்டிகளுக்கும் பரப்பிய
கலைஞன் சுஜாதாவுக்கு அஞ்சலிகள்.

புதன், பிப்ரவரி 27, 2008

ஒரு நாள் ஒரு கனவு

1. உணவுப் பொருட்களின் தரம்.
நம்ம ஊரிலும் தண்ணீர்க் குழாயைத் திறந்தால் குடிக்கும் தரத்திலான தூய்மையான தண்ணீர் கிடைக்க வேண்டும். இங்கிலாந்து போயிருந்த போது குடிக்கத் தண்ணீர் வேண்டுமானால் குளியலறையில் குழாயைத் திறந்து பிடித்துக் கொள்ளுமாறு சொன்னார்கள். அது போன்று தூய்மையான தண்ணீர் எல்லோரின் அடிப்படை உரிமையாக இருக்க வேண்டும்

2. பள்ளிக் கல்வி ஒவ்வொரு குழந்தைக்கும் தவறாமல் கிடைக்க வேண்டும். ஒரே மாதிரியான தரமான கல்வி சமூக அமைப்புகள், அரசு நிறுவனங்களால் நடத்தப் பட வேண்டும். ஒவ்வொரு குழந்தையும் பத்து ஆண்டுகளுக்குக் குறையாத கல்வி கற்க வாய்ப்பு இருக்க வேண்டும்.

3. விவசாயிகளுக்கு விலை
வயலில் வேலை பார்க்கும் விவசாயிகளுக்கு சரியான விலை கிடைக்க வேண்டும். பொருளாதாரத்தின் மற்ற பகுதிகளின் வளர்ச்சிக்கேற்ப விவசாய விளைபொருட்களின் விலையும் ஏற வேண்டும். மிக நலிந்த பிரிவினருக்கும் மட்டும் சலுகை விலையில் உணவுப் பொருட்கள் வழங்கப்பட வேண்டும். மாதம் 50000 ரூபாய் சம்பாதிப்பவருக்கு அரிசி விலை கிலோ 200 ரூபாய்கள் இருந்தால் என்ன குறைந்து விடும்?

4. குப்பை
நகரங்களிலும் கிராமங்களிலும் குப்பைகளை சரிவரத் திரட்டி கையாளும் முறைகள் இருக்க வேண்டும். குப்பைகளை போட உயரமான தடுப்புகளுடன் கூடிய குப்பைத் தொட்டிகளும், அவற்றிலிருந்து எடுத்துச் செல்லப்படும் குப்பைகளை மக்க வைக்க பெரிய மதில் சூழ்ந்த மைதானங்களும் இருக்க வேண்டும். மக்காத குப்பைகளை தனியாகப் பிரித்து எடுத்து கழுவி மறு சுழற்சிக்குப் பயன்படுத்தும் முறைகள் இருக்க வேண்டும்.

5. சுகாதாரம்
பொது இடங்களில் துப்புவது, குப்பை போடுவது போன்றவே முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்

6. பெண்கள் ஆண்களுக்கு இணையாக எல்லா துறைகளிலும் பணி புரியும் வாய்ப்பும் முறைகளும் இருக்க வேண்டும். பேருந்து ஓட்டுதலிருந்து, கட்சிப் பதவிகள், அரசுப் பணிகளிலும், அமைச்சகத்திலும் பெண் ஒருவர் பதவியிலிருப்பது புருவத்தை உயர்த்துவதாக இல்லாமல் இயல்பாகிப் போய் விட வேண்டும்.

7. போக்குவரத்து
பொதுப் போக்குவரத்து வசதிகள் நகரங்களில் நிறைய இருக்க வேண்டும். நியாயமான கட்டணத்தில் வசதியான பயணத்துக்கு வண்டிகள் இயக்கப் பட வேண்டும். காற்று மண்டலத்தை அசுத்தப்படுத்தும் வாகனங்கள் பயன்படுத்தக் கூடாது.

8. அரசியல்
அரசியலுக்கு வருவதைப் பெருமையாகக் கருதி எல்லாத் தரப்பினரும் அரசியலில் பணி புரிய வர வேண்டும்.

9. பாதுகாப்பு,
எந்த வீட்டுக்கும் பூட்டு போட வேண்டிய தேவையே இல்லை என்னும் நிலை இருக்க வேண்டும். அவரவர்க்குத் தேவையான பொருட்களை மட்டும் வீட்டுக்குள் வைத்திருந்தால் யார் வந்து திருடிச் செல்வார்கள்?

10. அறிவியல்
கல்விச் சாலைகளிலும் வணிக நிறுவனங்களிலும் புதிய கண்டுபிடிப்புகள் அறிவு வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும். பல மொழிகளைக் கொண்டு இயங்கும் நாட்டில் எந்த மொழியிலிருந்தும் எந்த மொழிக்கும் மொழிபெயர்க்கும் வசதிகளும் தகவல் தொழில் நுட்ப வசதிகளும் பெருக வேண்டும்.

11. மதம்
மதம் மனிதர்களின் வீட்டுக்குள் இருக்க வேண்டும். பக்கத்து வீட்டுக் காரரை மாற்று மதத்தினர் அல்லது தன் மதத்தினர் என்று யாரும் அடையாளம் காண விளையக்கூடாது. கூட்டம் சேர்த்து பொது இடங்களில் இடைஞ்சல் விளைவிக்கக் கூடாது.

12. சாதி
சாதி அமைப்பினால் ஒடுக்கப்பட்ட பிரிவினரைத் தவிர மற்ற அனைவரும் தமது சாதி குறித்த அடையாளங்களை பதிவுகளை ஒதுக்கி விட வேண்டும் அடுத்த தலைமுறை தமது சாதி என்ன என்று தெரியாமலேயே வளர்க்கப்பட வேண்டும்.

ஞாயிறு, பிப்ரவரி 24, 2008

சீனா மனிதர்கள் மூலம் - கல்லூரி மாணவி

சீன மொழி தெரியாமல் சீனாவில் எதுவும் செய்ய முடியாது. நான் போய்ச் சேர்ந்த போது அலுவலகத்தில் ஒரு சீனர் ஏற்கனவே இருந்தார். ஆனால், நாங்கள் இரண்டு பேரும் தனித்தனியாக செயல்பட்டு வணிகத்தைப் பெருக்க வேண்டும் என்று நிறுவனத்தின் திட்டம். அவருடனே நான் சுற்றிக் கொண்டிருந்தால் அந்தத் திட்டம் என்ன ஆவது!

சரி, சீன மொழி பேசத் தெரியா விட்டால், யாராவது ஒரு மொழிபெயர்ப்பாளரை வேலைக்கு வைத்துக் கொள்ளலாமே! அந்த வழியில் இறங்கினேன். ஒரு நாள் தரையடி ரயிலில் அலுவலகத்துக்கு வந்து கொண்டிருக்கும் போது அன்னிய முகத்தைப் பார்த்த ஒரு சீன இளைஞர் என்னை அணுகி ஆங்கிலத்தில் பேசினார். ஆங்கிலத்தில் பேச முடியும் சீனர்கள் மிகச் சிலரே இருந்தார்கள். அது பணக்காரர்கள் ஆவதற்கான கடவுச் சீட்டு போன்ற திறமை.

ராய் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட அவர், தனது பெயர் அட்டையைக் கொடுத்து ஏதாவது தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளும்படி சொன்னார். அவரிடம் உதவி கேட்கலாம் என்று தொலைபேசினேன். அடுத்த வார இறுதியில் வீட்டுக்கே வந்து விட்டார். தான் இப்போது நல்ல வேலையில் இருப்பதாகவும் அதனால் வேறு ஒருவரை அறிமுகப்படுத்தி வைப்பதாகவும் சொன்னார்.

கல்லூரி மாணவர் யாராவது பகுதி நேரத்தில் எனக்கு மொழிபெயர்ப்பு வேலை செய்தால் போதும் என்று முடிவு செய்தோம். அவரது மாநிலத்தில் இருந்த போது அவர் ஆங்கில ஆசிரியராக ஒரு பள்ளியில் பணியாற்றினாராம். அப்போது அவரிடம் மாணவர்களாக இருந்தவர்கள் பலர் சாங்காயில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் மார்கரெட் என்ற பெண் மிகத்திறமையானவள். அவளைப் பார்க்க அழைத்துப் போகிறேன் என்று சொன்னார்.

ஒரு நாள் சாங்காய் ஜியாவ்தோங் பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதிக்கு அழைத்துப் போனார். சந்திக்க வேண்டிய பெண் அறையில் இல்லை. அவரது அறைத் தோழியர் நான்கைந்து பேர் வரவேற்று உட்கார வைத்தார்கள். இந்தப் பெண் சிறிது நேரம் கழித்து வந்தார். பல்கலையில் முதுநிலை மேலாண்மை பட்டம் பயின்று கொண்டிருந்தார். இது கடைசி பருவம் ஆதலால், நிறைய ஓய்வு நேரம் கிடைக்கும். பகுதி நேர மொழிபெயர்ப்பாளர் பணி செய்ய முடியும் என்று ஒத்துக் கொண்டார். வாரத்துக்கு 400 யுவான் என்று மாதம் 1600 யுவான்கள் சம்பளம்.

ஆங்கிலப் பெயரை பயன்படுத்தப் போவதில்லை என்று மார்கரெட்டை கை விட்டு விட்டேன். என்னுடைய உதவியாளர் போல ஆகி விட்டார் நிங். நான் வாங்கிய கணினிக்கு இணைய இணைப்பு சீன தகவல் தொடர்பு துறையிடம் விண்ணப்பித்து வாங்கிக் கொடுத்ததில் ஆரம்பித்து, நிறுவனத்தைப் பற்றிய குறிப்பை சீன மொழியில் மொழி பெயர்த்து, விற்பனைக்கு எந்த ஊருக்குப் போகலாம் என்று துப்புத் துலக்கி சரியான சந்தையையும் பிடித்து விட்டார்.

'நான் கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர், தெரியுமா' என்று ஒரு நாள் கேட்டார். 'அப்படியா' என்று பரபரப்பில்லாமல் கேட்டுக் கொண்டேன். 'அது என்ன இவ்வளவு சாதாரணமாக கேட்டுக் கொள்கிறீர்கள், எல்லோரும் கட்சியில் சேர்ந்து விட முடியாது தெரியுமா, எங்க வகுப்பிலேயே விரல் விட்டு எண்ணும் எண்ணிக்கையினர்தான் கட்சி உறுப்பினர்கள். பல ஆண்டுகள் முயற்சித்து, பல பணிகளை முடித்து, கட்சி நம்பிக்கையைப் பெற்றால்தான் உள்ளேயே விடுவாங்க. நானும் அதை சாதிச்சவ'

அப்பவும் எனக்கு அது பெரிய சாதனையாக படவில்லை.

நிங்கின் வகுப்புத் தோழன் ஷூகாங் என்பவர். அவரையும் எங்கள் நிறுவனத்தில் சேர வைத்து விட வேண்டும் என்று எனக்கு எண்ணம். அவரை விருந்துக்கு அழைக்குமாறு நிங்கை தொந்தரவு செய்து ஒரு நாள் மூன்று பேரும் சாங்காயின் விலை உயர்ந்த இந்திய உணவகத்திற்குப் போனோம். எனது கனவுகள் எல்லாம், ஆங்காங்கில் டாடா நிறுவன அலுவலகத்தைப் போல நான் சாங்காயில் உருவாக்கிக் காட்ட வேண்டும் என்பதுதான்.

வெள்ளி, பிப்ரவரி 22, 2008

சென்னை வலைப்பதிவர்கள் சந்திப்பு - கொஞ்சம் பழசு

ஓசை செல்லா தொலைபேசி சென்னையில் இருப்பதாகவும் மாலையில் மெரீனா கடற்கரையில் சந்திக்கலாம் என்றும் காலையில் சொல்லியிருந்தார். அது குறித்து லக்கிலுக்கின் அஞ்சலும் வந்திருந்தது.

அலுவலகத்திலிருந்து 6.20க்கு, வினையூக்கியின் வீட்டில் ஆறரைக்கு, ஆற்காடு சாலையில் நகர்ந்து நகர்ந்து ஜெமினி வட்டம். அதன் பிறகு அகலமான சாலை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் சென்னை சிட்டி சென்டர் என்று ஆரம்பித்திருக்கும் தலைவலியால் அந்தப் பகுதியில் எப்போதும் போக்குவரத்து நெரிசல்தான். அதற்கு யார் என்ன அடிப்படையில் அனுமதி கொடுத்தார்கள், அத்தனை கார்களை எப்படி நெருக்கடி கொடுக்க விடுகிறார்கள் என்று இன்னும் புரியவில்லை.

'காந்தி சிலையின் பின்னால் ஒரு குளம் மாதிரி இருக்கும், தண்ணீ இருக்காது' என்று லக்கிலுக்கின் தொலைபேசி வழிகாட்டலைப் பின்பற்றி போய்ச் சேர்ந்து விட்டோம்.

என்னுடைய கைபேசியில் யாரையாவது அழைத்தால் 'அன்பார்ந்த வாடிக்கையாளரே, உங்கள் பில் கட்டணம் செலுத்தும் நாள் கடந்து விட்டது. தடை இல்லாத சேவையைப் பெற உடனடியாக பணம் செலுத்த ஏற்பாடு செய்யுங்கள்' என்று ஒரு இயந்திரக் குரல், தொடர்ந்து என்ன நடக்கிறது என்று பார்க்காமலேயே நிறுத்தி விட்டேன். (அதைத் தொடர்ந்து ஆங்கிலத்திலும் பேசி விட்டு அதன் பிறகு இணைக்கிறார்கள் என்பது அடுத்த நாள் காலையில் தெரிந்தது. 'பில் கட்டியாச்சா' என்று கூப்பிட்டுக் கேட்ட இளைஞரிடம் குமுறியதில் அந்த குரலை உடனே நீக்கித் தந்து விட்டார். அது அடுத்த நாள் காலையில்). தொலைபேசியில் யாரையும் அழைக்க முடியாது என்று நினைத்துக் கொண்டேன்.

செல்லாவும் சிவஞானம்ஜியும் உட்கார்ந்திருக்க, லக்கியும் அதியமானும் பாலபாரதியையும் ஆழியூரானையும் அழைத்து வரப் போயிருக்கிறார்களாம். ஆழியூரானின் வண்டி பாதியில் நின்று விட்டிருக்கிறது. நான்கு பேரும் வந்து சேரும் இடைவெளியில் அவித்த கடலைப் பொட்டலங்கள் வாங்கிக் கொண்டோம். செல்லா பஜ்ஜி வாங்கி வந்திருந்தார்.

அதியமான் 'என்ன மொட்டை எல்லாம் போட்டிருக்கீங்க, உங்களுக்குத்தான் இதிலெல்லாம் நம்பிக்கை கிடையாதே' என்று ஆரம்பித்து, 'மோடி ஜெயித்து விட்டாரே' என்று தொடர்ந்து தனக்குப் பிடித்த விவாதங்களைக் கிளறி விட்டுக் கொண்டிருந்தார். 'அதியமான் இருக்கும் இடத்தில் சூட்டுக்குக் குறைவே கிடையாது'

இடையில் ஆழியூரானின் தமிழ் எழுத்து சீர்திருத்தம் குறித்த விவாதத்தில் மட்டும் அதியமானுக்கு சரக்கு இருக்கவில்லை. மற்ற எல்லாவற்றிலும் உற்சாகமாக விளையாடிக் கொண்டிருந்தார். முறுக்கு, போளி என்று அடுத்த சுற்று ஆரம்பமானது. ஒன்பது மணி ரயிலைப் பிடிக்க சந்திப்பின் காரணகர்த்தா செல்லா கிளம்பி விட மற்றவர்கள் தொடர்ந்து கொண்டிருந்தோம். செல்லா தொலைபேசி 'உருப்படியாக புராஜக்ட் தமிழ் ரெடி பற்றிக் கொஞ்சம் பேசுங்க' என்று நினைவூட்டினார்.

ஒன்பது மணிக்கு பாலபாரதி கூட்டத்தை முடித்து வைத்தார், சுறுசுறுப்பாக வண்டியை எடுத்தால், 'பின்பக்கம் காத்து குறைவா இருக்கு' என்று எச்சரித்தார்கள். சில அடிகள் போகும் போதே உள்டியூபில் ஓட்டை என்று தெரிந்து விட்டது. அங்கேயே நிறுத்தச் சொல்லி விட்டு லக்கி தனது வண்டியில் பஞ்சர் பார்ப்பவரை அழைத்து வருவதாகக் கிளம்பினார். ஆழியூரான் தனது வண்டிக்கு வழி செய்யக் கூடவே போனார்.

லக்கியின் உதவியைப் பிடித்துக் கொண்டு நான் பாலபாரதி, வினையூக்கி, அதியமான் சேர்ந்த அரட்டையில் கலந்து கொண்டேன். சிரித்துச் சிரித்து வயிறு வலிக்கும் படி லக்கி கலக்கிக் கொண்டிருந்தார். டியூப் வேலைக்காகாது என்று புதுசு போட்டு விட்டார்கள், 160 ரூபாயாம், அவ்வளவுக்குக் கையில் காசு இருக்கவில்லை. அதியமானிடம் நிதி திரட்டிப் பணம் கொடுத்து விட்டுக் கிளம்பினோம்.

அதியமானும், வினையூக்கியும், ஆழியூரானும், நானும் எங்காவது சாப்பிட்டு விட்டுத் தொடர முடிவு செய்தோம். கடற்கரைச் சாலையைத் தாண்டி வெளியே வரும் போதே வண்டி இன்னும் ஆடுவது போலப் பட்டது. பார்த்தால் முன் சக்கரத்திலும் ஓட்டை விழுந்திருக்கிறது. யாராவது வேண்டுமென்றே கிழித்திருப்பார்களோ என்று சந்தேகப் புத்திக்கு, 'ஒரு ஆணி முன்னால் குத்தி, அப்புறம் பின் சக்கரத்தையும் பதம் பார்த்திருக்கும்' என்று ஆழியூரான் சொன்னார்.

பத்தரை மணிக்கு மேல் பஞ்சர் கடையைத் தேடி, நண்பர்களின் உதவியோடு, அண்ணா சாலை பள்ளிவாசலின் அருகில் போய்ச் சேர்ந்தோம். இந்த டியூபும் வேலைக்காகது. அடுத்த 160 ரூபாய்கள். முன்பக்க டயரும் வழுக்கையாகி விட்டது என்று எச்சரித்தார்.

எதிரில் இருந்த புகாரி ஓட்டலின் முன்பு வண்டியை நிறுத்தியிருந்ததால் அங்குதான் சாப்பிடப் போகிறோமோ என்று நினைத்தால், அதன் அருகிலேயே அருந்த வசந்தபவன் வரவேற்றது. இட்லி, இன்னும் ஒரு பிளேட் இட்லி, இன்னும் ஒரு இட்லி என்று சாப்பிட்டு விட்டு வண்டியை எடுத்துக் கொண்டு முன்பனிக் குளிரில் நடுங்கிக் கொண்டே வீடு வந்து சேரும் போது நள்ளிரவு பன்னிரண்டு தாண்டி விட்டிருந்தது.

புதன், பிப்ரவரி 06, 2008

பொதுவுடமை உருவாகும் பாதை

'இந்தியாவில் இயங்கும் கம்யூனிச இயக்கங்கள் செய்யும் பெரிய தவறு வர்க்கங்களுக்கிடையேயான முரண்பாட்டை விட மிதமிஞ்சி நிற்கும் சாதிகளுக்கிடையேயான முரண்பாட்டை கையில் எடுக்காமல் வர்க்கப் போராட்டத்தையே பேசுவதுதான்' என்று நண்பர் செல்லாவுடன் பேசும் போது ஒரு முறை சொன்னார்.

சீனப் புரட்சியாளர் சேர்மன் மாவோவின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளைப் படித்துக் கொண்டிருந்தேன். அதே கருத்தைத்தான் சொல்கிறார்.

'உலகமே முரண்பாடுகளில் குவியல்தான். ஒரு சமூகத்தில் ஒரே நேரத்தில் பல முரண்பாடுகள் இருக்கலாம். அவற்றில் ஏதாவது ஒன்று மற்ற எல்லாவற்றையும் விட ஓங்கி நிற்கும். அதைத் தீர்த்த பிறகுதான் அடுத்த கட்டத்துக்கு நகர முடியும்' என்கிறார்.

ஜப்பானிய ஆதிக்கவாதிகளுக்கும், சீன மக்களுக்குமான முரண்பாடுகள் முனைப்பானதும், அது வரை தாம் எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்த குவமின்தாங் என்ற தேசியக் கட்சியுடன் நட்பு ஒப்பந்தம் செய்து கொண்டு, குவமின்தாங்-கம்யூனிச இயக்கத்துக்கிடையேயான முரண்பாடுகளை தற்காலிகமாக மறந்து ஜப்பானியர்களை சேர்ந்து எதிர்க்கும் பணியில் இறங்கச் சொல்கிறார்.

'வெளிப்புறக் காரணிகளே போராட்டத்தைத் தீர்மானிக்கின்றன' என்று தோழர்கள் வாதாடுவதற்கு நேர்மாறாக, 'அப்படி வெளிப்புறக் காரணிகளை காரணமாகக் காட்டுவது மெடாபிசிக்ஸ் எனப்படும் கருத்து முதல் வாதம், ஒரு சமூகத்தின் மாற்றங்கள், போராட்டங்கள் உள்ளே ஏற்படும் மாறுதல்களினாலேயே வர வேண்டும்' என்று விளக்குகிறார் மாவோ.

எனக்குப் புரிந்த வரை கார்ல் மார்க்ஸ் தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையே இருக்கும் பொருளாதார இழுபறியைக் குறித்து ஆராய்ந்திருக்கிறார். 'தனித்தனியாக உறவாடும் போது முதலாளியின் கைதான் எப்போதும் ஓங்கியிருக்கும். தொழிலாளர்கள் ஒன்று பட்டு முதலாளிகளை எதிர் கொள்வதால் இழப்பதற்கு எதுவுமில்லை. ஆதாயம் அதிகமாவது நிச்சயம் நடக்கும்'

கார்ல் மார்க்சு சொன்ன பரிணாம வளர்ச்சியைப் பின்பற்றாமல், விவாசாயப் பொருளாதார நிலையிலிருந்து முதலாளித்துவ நிலையைத் தாண்டிக் குதித்து நேரடியாக பொதுவுடமை சமூகத்தை அடைந்து விடும் சூழல் சீனாவில் இருப்பதாக கருதுகிறார் மாவோ. அடுத்து எழுபது ஆண்டுகளில் நடந்து நிகழ்ச்சிகளைக் கொண்டு பார்க்கையில் அது தவறு என்று புரிகிறது. செயற்கையாக ஆயுதம் கொண்டு 'தாம் பொதுவுடமை சமூகம் என்று கருதும் அமைப்பை' ஏற்படுத்த சீனக் கம்யூனிஸ்டு கட்சி முயன்றாலும், 1980களிலிருந்து அந்தத் தளையிலிருந்து விடுபட்டு இயற்கையான பொருளாதார பரிணாம மாற்றத்தில்தான் சீன சமூகமும் சேர்ந்து கொண்டுள்ளது.

அது முற்றி பொதுவுடமை மலரும். அதற்கு முன்பு அமெரிக்காவில் பொதுவுடமை சமூகம் முதலில் உருவாகும்.

மார்க்கெட் குறித்து செல்லாவின் ஆழமான அலசல் 1
மார்க்கெட் குறித்து செல்லாவின் ஆழமான அலசல் 2
(மார்க்சு கம்யூனிசம் பேசவில்லை, முதலாளித்துவத்தைத்தான் ஆராய்ந்தார்!)
மார்க்கெட் குறித்து செல்லாவின் ஆழமான அலசல் 3
(சந்தைப் பொருளாதார முறையின் வீணாக்கல்கள். இப்போதைய நிலையைத் தாண்ட வேண்டும், முடியும்)
மார்க்கெட் குறித்து செல்லாவின் ஆழமான அலசல் 4
(சந்தைப் பொருளாதாரம்் பல இடங்களில் சொதப்புகிறது)

ஞாயிறு, பிப்ரவரி 03, 2008

விழித்தெழும் புதிய தமிழகம்!

"அடிப்படையில், ஒரு விவசாயக் கூலி தொழிலாளி குடும்பத்தை சேர்ந்த நாங்கள், பல்வேறு காரணங்களுக்காக அருகில் இருக்கும் நகரம் (தேனி) இடம் பெயர்ந்தோம். எங்கள் தாத்தாவிற்குச் சொந்தமான ஒரு சிறு வயலில், விவசாயம் பார்த்த பொழுது, பெரும்பாலும் வரும் வருமானம் வாய்க்கும், வயித்துகுமே போதுமானதாக இருந்தது. அதனை மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில், நான் இந்த வலைப்பதிவை ஆரம்பித்தேன்."

http://vellamai.blogspot.com/

"நான் கடந்த 2ம் தேதி ஜனவரி மாதம் பதிவேற்றம் செய்த http://youtube.com/watch?v=SccxJ-Q07lI - எண்ணம் மற்றும் திட்டத்தை பார்க்க வேண்டுகிறேன். இன்னும் ஒரு மாத காலத்திற்கு, தகவல் சேகரிப்பில் ஈடுபட உள்ளேன்."
-- செல்லம்மாள்

" தேடிச் சோறு நிதம் தின்று - பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிக் கிழப்பருவம் யெய்தி
கொடுங் கூற்றுக்கிரை எனப் பின்
மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல
நானும் இங்கு வீழ்வேன் என்று நினைத்தாயோ!"

- மகாகவி சுப்பிரமணிய பாரதி