வியாழன், ஏப்ரல் 26, 2007

ஆர்எஸ்எஸ் என்ற அபாயம் - முடிவுரை (இப்போதைக்கு)

இந்து மதத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றால் இந்துத்துவா இயக்கங்கள் ஆக்க பூர்வமாக என்ன செய்யலாம்?

1. சாதி ஒழிப்பு: கலப்புத் திருமணம், இட ஒதுக்கீடு, சாதி முறை பழக்கங்கள் ஒழிப்பு என்று வெளிப்படையாக அறிவித்து தலைவர்களில் ஆரம்பித்து தொண்டர்கள் அனைவரும் இவற்றைப் பின்பற்ற உறுதிமொழி எடுக்கலாம்.

2. கோயில்களில் சாதி பாகுபாடு இல்லாமல் எந்த பக்தியுள்ள இந்துவும் பூசாரியாக உரிமை இருக்கிறது என்பதை ஏற்றுக் கொண்டு அதை நடைமுறைப்படுத்தத் தேவையான அரசியல், சமூக, சட்ட நடவடிக்கைகளை எடுக்கலாம்.

3. ஒவ்வொரு பகுதியிலும் அந்தப் பகுதியின் மொழியிலேயே வழிபாடுகள் நடத்தப் போராட வேண்டும். எல்லா மொழியும் இந்தியாவின் தேசிய மொழிகள்தான் என்று ஏற்றுக் கொண்டு 'தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும்' போன்ற அவமானங்களைத் துடைக்கப் பாடுபடலாம்.

4. மடங்களிலும், கோயில்களிலும் குவிந்து கிடக்கும் சொத்துக்களை, செல்வங்களை நலிந்தவர்களுக்குப் பயன்படும் வகையில் செலவழிக்க ஏற்பாடுகள் செய்யலாம். கடவுளின் இருப்பிடமும், அவரது பக்தர்களின் நடவடிக்கைகளும் எளிமையும், அன்பும் கலந்ததாக மாறி பல கோடி மக்களின் வறுமைக்கிடையே நடக்கும் ஆடம்பர வழிபாடுகளை, மட நடவடிக்கைகளை மாற்ற முயற்சிக்கலாம்.

இதை எல்லாம் செய்து முடித்து விட்டால், இந்து மதத்தின் உண்மையான செல்வங்கள் எல்லோரையும் போய்ச் சேரும். மிரட்டியும், உணர்வுகளைத் தூண்டி விட்டும், சூலாயுதம் ஏந்தியும் மதத்தைக் காக்க வேண்டிய தேவையே இல்லாமல் போய் விடும்.

புதன், ஏப்ரல் 25, 2007

ஆர்எஸ்எஸ் என்ற அபாயம் - 8

இவ்வளவு நடந்த பிறகும் விடவில்லை. சிறிது காலத்திலேயே 'மீண்டும் 2வது இந்து ஒற்றுமை எழுச்சி மாநாடு' என்று ஒரு நாள் நிகழ்ச்சி நடத்தினார்கள். இது முதல் தடவை போல பெருங்கூட்டமாக இல்லா விட்டாலும் கணிசமான மக்கள் கூடியிருந்தார்கள்.

இன்னும் நினைவுக்கு வரும் ஒரு நிகழ்ச்சி:

இந்தக் கலவரங்களுக்கு முன்னால் ஆர்எஸ்எஸ் சிறுவர் முகாம் நடக்கப் போவதாகச் சொல்லி எங்கள் சித்தப்பா அழைத்துச் சென்றார். பல்வேறு பகுதிகளிலிருந்தும் குழுக்களாக வந்திருந்தவர்களுடன் நாங்களும் சேர்ந்தோம். நல்ல வேளையாக எங்கள் பள்ளி அருகிலிருந்து வந்த குழுவில் எங்களுக்குத் தெரிந்த முகங்கள் இருந்ததால் தப்பித்தோம்.

வீட்டை விட்டு மூன்று நாட்கள் வந்திருக்கும் புதிய அனுபவத்தில் எல்லாம் வேகமாக ஓடி விட்டன. மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சி, எங்கள் பள்ளி ஆசிரியர் ஒருவர் எல்லாச் சிறுவர்களுக்கும் ஒரு ஆவணப் படம் காட்டியது.

முகலாயர் காலத்தில் இந்தியா எப்படி துன்பப்படுத்தப்பட்டது என்று விளக்கிக் கொண்டே வரும் போது அக்பரின் படத்தைப் போட்டு இந்துக்களிடம் நட்பு பூண்டு இந்து - முஸ்லீம் ஒற்றுமைக்கு வழி வகுத்தார் என்று அவர் குறிப்பிட்டார். முகலாயப் பேரரசர்களிலேயே அக்பர்தான் நல்லவர் என்று சொன்னார். அதுதான் நாங்கள் பாடத்தில் படித்ததும். அந்தக் கருத்து வெளி வந்ததும் முன்வரிசையில் இருந்து முகாமை நடத்தும் சங்க உறுப்பினர்களிடையே ஒரு இறுக்கம் வந்தது.

இந்த விளக்கம் முடிந்ததும் நான்கைந்து பேர் அவரைச் சூழ்ந்து கொண்டு விவாதிக்க ஆரம்பித்தார்கள் 'எல்லோரையும் விட அக்பர்தான் நமது மிகப் பெரிய எதிரி. நட்பாக இருந்த நம்மை மழுங்கச் செய்ய முயன்றவர்' என்று அவருக்கு உறுதிபடச் சொல்ல, அவரும் மன்னிப்புக் கேட்டு இனிமேல் சரியாகப் புரிந்து கொள்வதாக வாக்களித்தார்.

'ஒருவரை நல்லவர் என்று சொல்வது கூட அபாயமானது, எல்லா மாற்று மதத்தினரும் கொடியவர்கள் என்ற அவர்களது சித்தாந்தத்துக்கு மாற்றாக எதையும் பேசுவது கூடப் பாவம்' என்பதை உறுதிப்படுத்த முயலும் தீவிரக் கருத்துகள் அந்த வயதிலேயே உறுத்தின.
===
இந்துத்துவா இயக்கங்களுக்குத் தேவையான முதல் ஆதாயங்கள் கிடைத்து விட்டன. பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதியில் இந்து முன்னணி சார்பில் சுயேச்சையாக போட்டி போட்ட பாலச்சந்தர் என்பவர் சட்டமன்ற உறுப்பினரானார். நாகர்கோவில் தொகுதியில் இரண்டு முறை கடுமையான போட்டிக்குப் பிறகு இந்துத்துவா வேட்பாளர்கள் தோற்கடிக்கப்பட்டார்கள்.

இதற்குள் பல மாற்றங்கள், நீண்ட கால மக்கள் போராட்டத்துக்கான எல்லைகள் உருவாகியிருந்தன. இந்துக் கல்லூரியில் இந்துத்துவா இயக்கங்களுக்கு இடம் மறுக்க ஆரம்பித்தார்கள். "'இந்து' என்று பெயர் இருப்பதால் அவர்கள் உரிமை கொண்டாடினால் பெயரைக் கூட மாற்ற தயாராக இருப்பதாக' மூத்த பேராசிரியர் ஒருவர் சொன்னதாக அம்மா பேசிக் கொண்டிருந்தார்கள்.

தன் முயற்சியில் மனம் தளராத விக்கிரமாதித்தனின் காத்திருத்தல் இவர்களுக்கும் உண்டு. 'உலகத்திலேயே அதிகத் தாக்குதலுக்கு உள்ளாகும் இயக்கம் ஆர்எஸ்எஸ்' என்று நண்பர் ஒருவர் பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருந்தார். இப்படி எல்லோரும் நம்மை எதிர்க்கிறார்களே, நமது அடிப்படைகளை மறுபரீசிலனை செய்யலாமா என்று சிந்தித்தால் நன்றாக இருக்கும்.

குறிப்பு:

இந்து மதத்தை மேம்படுத்த என்ன பணிகள் செய்யலாம் என்ற எனது ஆக்க பூர்வமான கருத்துக்களோடு இந்தத் தொடரை இப்போதைக்கு முடித்துக் கொள்வேன்.

பல முறை யோசித்த பிறகுதான், எதிர்மறை விவாதங்களைத் தவிர்க்க வேண்டும் என்ற எனது நம்பிக்கையை மீறி இந்த இரண்டு வாரங்களில் இதை எழுத நேரிட்டது. உபி தேர்தலின் போது வெளியான குறுந்தகடு விபரங்களும், பதிவுலகில நடக்கும் சில மாற்றங்களும் எனக்குத் தெரிந்த இந்த விபரங்களை எழுத வேண்டும் என்று தூண்டின. எனக்குத் தெரிந்த வரை யாரையும் தனிப்பட்ட முறையில் விமரிசிக்கவில்லை என்று நம்புகிறேன்.

ஆர்எஸ்எஸ் என்ற அபாயம் - 7

எங்கள் வீடு இருப்பது சைமன் குடியிருப்பு என்ற பகுதி. முந்திரித் தோப்புகள் (கொல்லா தோப்பு என்பது எங்க ஊர் பெயர்) இருந்த மேலராமன் புதூர் பகுதியில் கூட்டுறவு வீடு கட்டும் சங்கம் மூலமாக நிலம் வாங்கி, மனை பிரித்து விற்றார்கள். பல்வேறு ஊர்களிலிருந்து வெள்ளை சட்டை வேலை பார்க்கும் குடும்பங்கள் வீடு கட்டிக் குடியேறின.

இத்தகைய வீடுகளைத் தவிர, தமது நிலங்களைத் தக்க வைத்திருந்த பல குடும்பங்களும் வசித்தன. பாதிக்குப் பாதி இரண்டு மதத்தினரும் இருந்தார்கள். மேல ராமன் புதூரிலும் பெருமளவில் இரண்டு மதத்தினரும் சேர்ந்து வசித்தார்கள்.

மேலே சொன்ன இரண்டாவது இந்து ஒற்றுமை எழுச்சி மாநாடு தடையை மீறி நடக்க முயற்சிக்க துப்பாக்கிச் சூடு நடைபெற்று நாகர்கோவில் கோட்டாறு பகுதியில் குமார் என்ற இளைஞர் கொல்லப்பட்டார். அன்று முழுவதும் ஒரே பரபரப்பாக இருந்ததாம். அம்மா யாரையும் வெளியே விடவில்லை. மாலை வாக்கில் அப்பா கோவிலுக்குப் போவதாகக் கிளம்பி விட்டார்கள்.

'என்ன கலவரம் நடந்தால் எனக்கென்ன, நான் நாகராஜா கோவிலில் போய் உட்கார்ந்து விட்டு வரப் போகிறேன்.' என்ன நடக்கிறது என்று நிலவரம் அறியும் ஆர்வமும் இருந்திருக்கலாம். நகரில் தடையுத்தரவும் காவல் துறை ஆட்சியும் நடைமுறையில் இருந்ததாகப் பின்னர் தெரிய வந்தது.

மதியமே போன அப்பாவை இருட்டிய பிறகும் காணவில்லை. அம்மா புலம்பிக் கொண்டே இருந்தார்கள். ஏதேதோ மோசமான சாத்தியங்கள் மனதில் ஓடின. அப்பாவைப் பார்த்துப் பேச வந்த சின்ன வயது நண்பர்கள் இருவரும் சேர்ந்து கொள்ள எல்லோரும் வெளியே தெருவில் நின்று கொண்டு வழி பார்த்துக் கொண்டிருந்தோம்.

'சும்மா நாகராஜா கோவில் வெளித் திண்ணையில் உட்கார்ந்து கொண்டிருந்தோம். எங்கிருந்தோ ஓடி வந்த சில குரங்கன்கள், மதில் மேல் ஏறி நின்று கொண்டு வெளியே இருந்து காவல் துறையினருக்கு பழிப்புக் காட்டிக் கொண்டிருந்தார்கள். அப்பவே சொன்னோம், சும்மா இருங்கடேன்னு. கேட்கலை. கொஞ்ச நேரத்தில போலிசும் உள்ளே வந்து விட்டது'

அப்பா போயிருந்த மிதிவண்டி அடிபட்டுக் தெப்பக் குளத்துள் மூழ்கடிக்கபட்டிருக்கிறது. அங்கு இருந்த எல்லோருக்கும் லத்தியால் அடி விழுந்திருக்கிறது. அப்பாவுக்கும் முதுகிலும், கால்களிலும் அடி. எல்லா களேபரமும் ஓய்ந்த பிறகு ஆள் வைத்து குளத்தின் உள் கிடந்து மிதிவண்டியை எடுக்கச் செய்து கடை ஒன்றில் விட்டு விட்டு நடந்து வந்து கொண்டிருக்கிறார்கள்.

இதெல்லாம் பின்னால் தெரிய வந்தது. இப்போது அந்த மங்கிய இருட்டில் அப்பா நடந்து வருவது தெரிந்தது. சைக்கிள் என்ன ஆச்சு என்று கேள்வியுடன், ஆளைப் பார்த்த நிம்மதி. எதிர் வீட்டுக்கு அருகில் இருந்த தெரு விளக்கில் வந்ததும், நாங்கள் எல்லோரும் வெளியில் நின்று கொண்டிருப்பதைப் பார்த்ததும் கிருத்துவ மதத் தலைவரை இழிக்கும் இந்துத்துவா முழக்கம் ஒன்றை உரக்கக் கத்தி விட்டார்கள் அப்பா.

எதிர் வீட்டுக் காரரும் அவர் வீட்டு வாசலில் நின்று கொண்டிருக்கிறார் போலிருக்கிறது. யாரும் கவனித்திருக்கவில்லை. அவர் வெளியே வந்து அப்பாவிடம் வாக்குவாதமும் கைகலப்பும் ஆரம்பித்தார். அப்பாவின் நண்பர்கள் இரண்டு பேரும் வேகமாகப் போய் விலக்கி அப்பாவை வீட்டுக்குக் கூட்டி வந்தார்கள்.

எதிர் வீட்டுக் காரர் தன் வீட்டுக்கு வெளியே நின்று கொண்டு உரக்கத் திட்ட ஆரம்பித்தார். 'நீங்க எல்லாம் எப்படி இங்க இருந்து விடுவீர்கள் என்று பார்க்கிறேன். நாளைக்கு மேலராமன் புதூரில் சொல்லி, எல்லாத்தையும் அடித்துப் போட ஏற்பாடு செய்கிறேன். நாளைக்குக் காலையில் நானே கம்போடு அங்கு உட்கார்ந்திருப்பேன்.'

இப்படி அரை மணி நேரத்துக்கும் மேல் கத்தி விட்டு அவர் வீட்டுக்குள் போய்க் கதவை மூடிக் கொண்டார். அதன் பிறகு பக்கத்து வீட்டுக் காரர் என்ன நடக்கிறது என்று பார்க்க வந்தார். "அந்த ஆள் கத்தி ஓய்ந்த பிறகு அவர் பார்வையில் படாமல் வர வேண்டும்' என்று சொன்னார்.

'ஒனக்கு எதுக்கு இந்த வேலையெல்லாம். டவுன்ல கலவரம் நடக்கும்னு தெரியும், ஏன் போகணும்' என்று மாமாவும்,

'சொன்னா கேக்கவா செய்கிறார்கள், ஏற்கனவே எல்லோரும் கருவிக் கொண்டிருப்பதாக சொல்லியிருக்காங்க,, இப்ப என்ன செய்வது' என்று அம்மாவும் புலம்பிக் கொண்டிருந்தார்கள். நாளைக்குக் காலையில் எப்படி பள்ளிக்கு வேலைக்குப் போவது, பெரிய அடிதடி நடக்கப் போகிறது என்று கலக்கம்.

எப்படி சமாதானப்படுத்துவது என்று யோசித்து, அப்பாவின் நண்பர் மாமாவின் வீட்டுக்கு அருகில் வசிக்கும் ஒரு கிருத்துவ நண்பரை காலையில் வந்து அவரை அணுகச் சொல்லலாம் என்று முடிவு செய்தார்கள்.

பயங்கரமாகத் தெரிந்த இரவு விடியலில் அவ்வளவு மோசமாகத் தெரியவில்லை. மாமாவும், அவரது பக்கத்து வீட்டுக் காரரும் வந்து விட்டார்கள். அவர் போய் எதிர் வீட்டுக் காரரைச் சந்தித்துப் பேசி விட்டு வந்தார். முகமெல்லாம் சிரிப்பு, நிம்மதி.

'நாம இங்க தனி வீடா இருக்கோம். எதிரில் இருக்கும் இந்துக்கள் எல்லாம் நம்மைத் தாக்க வந்து விட்டால் என்ன செய்வது என்றுதான் அப்படி சத்தம் போட்டு மிரட்டி வைத்தேன் என்கிறார். எதுவும் தொந்தரவு வராது' என்று சொன்னாராம். சமாதானம் சொல்லி விட்டுப் போனார்.

அப்புறம் பல காலம் இரண்டு வீடுகளுக்குமிடையே பேச்சு கிடையாது. ஆனால் எந்த விரோதமும் இருந்ததில்லை.

செவ்வாய், ஏப்ரல் 24, 2007

ஆர்எஸ்எஸ் என்ற அபாயம் - 6

முதலில் வந்தது 'இந்து ஒற்றுமை எழுச்சி மாநாடு'. நாகர்கோவில் இந்துக் கல்லூரியில் தொடங்கி நகரைச் சுற்றி ஊர்வலமாக வந்து நாகராஜா கோவில் திடலில் பொதுக் கூட்டம். அடுத்த மூன்று நாட்களுக்கு மாநாடு. இந்துக் கல்லூரி, நாகராஜா கோவில் எல்லாம் இதற்காகவே ஏற்படுத்தப்பட்டது போலத் தோன்றியது.

ஊர்வலத்தில் இடப்பட்ட முழக்கங்களை திருப்பி எழுதுவது கூடப் பாவம். நானும் அந்த ஊர்வலத்தில் நடந்தேன். சுற்றிலும் ஆட்டம் போட்டுக் கொண்டு கோஷம் போட்டுக் கொண்டு இளைஞர்கள் கூட்டம்.

பெரிய பெரிய ஆட்களெல்லாம் வந்து பெரிய பெரிய சொற்களில் பேச்சு. உணவுப் பொட்டலங்கள் தானமாக வழங்குபவர்கள், தண்ணீர்ப் பந்தல் வைத்து தண்ணீர் கொடுப்பவர்கள் என்றெல்லாம் அமர்க்களமாக இருந்தது. இந்துக்கள் எழுச்சி பெற்று விட்டார்கள் என்று ஒரே பரபரப்பு.

அடுத்த மாதங்களில் மாவட்டமெங்கும் கலவரம். சொல்லி வைத்தது போல பல ஊர்களில் கலவரத் தீ பல உயிர்களைக் குடித்தது. இது பற்றிய விபரங்கள் எனக்கு நினைவில்லை. ஆனால் எங்கள் பள்ளியிலும், வீட்டுப் பகுதியிலும் நிலவிய கலக்கச் சூழல் மன நிலை நினைவில் இருக்கிறது.

எங்க வீட்டிற்கு எதிரில் இருப்பது கிருத்துவ குடும்பம். கிறிஸ்துமசுக்கு அவர்கள் கேக் அனுப்புவார்கள், அச்சு முறுக்கு தருவார்கள், தீபாவளிக்கு நாங்கள் முறுக்கும் அதிரசமும் அவர்களுக்குக் கொடுத்திருக்கிறோம்.

எங்கள் பள்ளியில் அம்மாவுடன், கூட வேலை பார்ப்பவர்களில் பலர் கிருத்துவ மதத்தைச் சேர்ந்தவர்கள். இந்தப் புதிய சூழலில் எப்படிப் பழக வேண்டும்? தொடர்ந்து இயல்பாகவே பழகிக் கொண்டிருந்தோம். ஆனால் காதில் விழும் செய்திகள் கலக்கத்தைக் கொடுத்தன.

ராமன் புதூரில் இருக்கும் கார்மல் பள்ளியில்தான் படித்தார்கள் எனது நண்பர்களில் பலர். ஒரு சம்பவம் நினைவில் இருக்கிறது.

நானும் எனது விளையாட்டுத் தோழனும் புன்னைக்காட்டு விளை என்ற பகுதிக்குப் போனோம். திரும்பி வரும் போது, 'இந்த சர்ச்சு வழியாகப் புகுந்து பின் வாசலில் வெளியேறினால் குறுக்கு வழி. ஆனால் நீ நெற்றியில் இருக்கும் திருநீறை அழித்து விட வேண்டும், இல்லா விட்டால் யாராவது அடித்து விடுவார்கள்' என்று அவன் சொல்ல, நான் அவசர அவசரமாக அழித்து விட்டேன். உடனே அவன் சிரித்து விட்டு, 'ஏண்டா, இவ்வளவுதான் உன் வீரமா' என்று கிண்டலடித்தான்.

இதுதான் அப்போதைய நிலவரம். மக்கள் மனதில் பயமும், பக்கத்து வீட்டாரைக் குறித்த சந்தேகமும் விதைக்கப்பட்டன. இதற்குப் பலியாகாமல் உறுதியாக இருந்தவர்கள் பெருந்திரளான மக்கள். ஆனால், என்னைப் போன்று பல்லாயிரக்கணக்கானவர்கள் இரு பக்கமும் இருந்திருப்பார்கள். அதுதான் இந்துத்துவா தீவிரவாதிகளின் வெற்றி.

அந்தக் காலகட்டத்துக்குப் பிறகு எனது பதினேழாவது வயது வரை நான் அதே நாகர்கோவிலில்தான் படித்தேன். பள்ளியில் என்சிசி தேசிய ஒற்றுமை முகாமுக்காக மேற்கு வங்கம் போன போது எனது மூட்டையைத் தூக்கி நடக்க முடியாத நேரங்களில் எனது தோழன் ஜோசப்தான் எடுத்துக் கொண்டு வந்தான். அம்மாவின் கூட வேலை பார்க்கும் ஆசிரியையின் வீட்டுக்கு கிருஸ்துமஸ் விருந்துக்குப் போயிருக்கிறோம். எந்த ஒரு சூழலிலும் தனிப்பட்ட முறையில் மனிதர்களிடையே பயமாக உணர்ந்ததில்லை. ஆனால் திட்டமிட்டு பரப்பப்பட்ட வதந்தி/பிரச்சாரம் மனதைக் கலக்கியிருந்தது.

ஒரு ஆண்டு போனது. இரண்டாவது இந்து ஒற்றுமை எழுச்சி மாநாடு என்று மீண்டும் ஏற்பாடு செய்தார்கள். போன ஆண்டு நடந்த மாநாட்டுக்குப் பிறகு மாவட்டமே ரத்தக் களறியானது. உப்பு போட்டுத் தின்னும் எந்த மாவட்ட நிர்வாகமும் மாநாட்டை அனுமதித்திருக்கக் கூடாது. என்ன காரணம் என்று தெரியவில்லை. அனுமதி கொடுத்து விட்டார்கள். மாநாடு அறிவிக்கப்பட்டிருந்த நாளுக்கு சற்று முன்பு அனுமதியை ரத்து செய்து விட்டார்கள்.

எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல் ஆனது. அந்த நேரம் திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் நடக்கவிருந்தது. அதனால்தான் எம்ஜிஆர் அரசியல் செய்து விட்டார் என்று பேசிக் கொண்டோம்.

ஞாயிறு, ஏப்ரல் 22, 2007

ஆர்எஸ்எஸ் என்ற அபாயம் - 5

ராமகோபாலன் என்ற முதியவர் செயல்பட்டு வருகிறார். நாகர்கோவிலில் 'இந்து ஒற்றுமை எழுச்சி மாநாடு' நடந்த போது அவர் நடத்திய உரையின் சில பகுதிகள் இன்னும் நினைவில் இருக்கிறது. எல்லாமே இந்து மதத்தில் இருந்து வந்தவைதான் என்பார் அவர், பிற மதத்தினரின் வழிபாட்டு முறைகளை நம்பிக்கைகளை கிண்டல் செய்வதில் தெருமுனை பிரசங்கிகளைத் தோற்கடித்து விடுவார் இவர். அந்த வாதங்களை திருப்பிச் சொல்வதால் யாருக்கும் பலன் இல்லை. மிக மென்மையான ஒன்றை மட்டும் குறிப்பிடுகிறேன்.

'இந்துக்கள் இந்துக் கடைகளில்தான் பொருட்கள் வாங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றுகிறோம். அடுத்த தடவை இந்துக்கள் மற்ற மதத்தினர் கடைகளில் பொருட்கள் வாங்கக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டிய நிலை வராமல் பார்த்துக் கொள்வது மற்ற மதத்தினர் கையில்தான் இருக்கிறது.' இது ஆயிரக் கணக்கான மக்கள் கூடியிருந்த மாநாட்டு மேடையில் பேசிய உரையின் ஒரு பகுதி.

இந்த மாநாடு நடந்து முடிந்த அடுத்த மாதங்களில் மாவட்டம் எங்கும் கலவரங்கள் வெடித்தன. நான் நண்பரிடம் சொன்னது போல, 'என்னுடன் பழகும் நண்பர்கள், எனக்குத் தெரிந்த பிற மதத்தினர், இனிமையானவராக, நேர்மையானவராகவே இருந்தார்கள். ஆனால் காதில் விழும் கதைகள் எங்கோ மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் இருக்கும் பிற மதத்தினர் கொம்பு வைத்துக் கொண்டு ரத்தம் குடிக்கும் வெறியர்களாக இருப்பதாகச் சித்தரித்தன. எல்லோருக்கும் ஒரு வித பயம் உருவாக்கும் வதந்தி சார்ந்த பிரச்சாரம் நடந்தது'.

இன்றும் கூட 'பாகிஸ்தானில் இந்துக்களைத் திட்டமிட்டு கொடுமைப்படுத்துகிறார்கள், பங்களாதேசத்தில் இந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை' என்று கேட்கும் போது, நாடுகள் உருவாகி 60 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நாடுகளில் இன்னும் இந்துக்கள் இருக்கிறார்கள் என்பதே வியப்பாக இருக்கும். நான் கேட்டு வந்த பிரச்சாரத்தின் படி பார்த்தால் இந்துக்கள் அனைவரும் அடித்துத் துரத்தப்பட்டு விட்டார்கள், அல்லது மதம் மாற்றப்பட்டு விட்டார்கள். பாகிஸ்தானின் உச்சநீதிமன்ற நீதிபதியாக ஒரு இந்து வரும் அளவுக்கு அங்கு இந்துக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இந்தியாவை விட அங்கு மத உரிமை குறைவு என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், நான் சந்தித்த பாகிஸ்தானிய நண்பர்களில் யாரும் வெறுப்புடன் அலைவதாகப் படவில்லை. எனக்குத் தெரியாத உலகில் அப்படி நடப்பதாக நம்பி நான் இந்து தர்மத்தைக் காக்க சூலாயுதம் ஏந்தி ஊர்வலமாகப் போக வேண்டும். அதே போல சென்னையைச் சார்ந்த ஒருவர் கன்னியாகுமரியில் இந்துக்கள் ஒடுக்கப்படுவதாகக் கவலைப்பட வேண்டும்.

'நம் சகோதரர்கள் பங்களாதேசத்தில் ஒடுக்கப்படுவதை எதிர்த்துக் கேட்கா விட்டால் நமக்கு அவமானம்' இது நண்பர்.

'நம் சகோதர்கள் பங்களாதேசத்தில் இருக்கலாம். ஆனால் உங்கள் பக்கத்து வீட்டில் இருக்கும் குடும்பம் உங்களுக்கு இன்னும் நெருங்கியது. அவர்கள் மதத்தாலோ சாதியாலோ வேறுபட்டிருக்கலாம். அவர்களுடன் நட்பு பூண்டு நல்வாழ்வு வாழத் தெரியாத உங்களுக்கு பங்களாதேசம் பற்றிக் கவலைப்பட என்ன அருகதை இருக்கிறது?'

'ஆதிக்க சாதியினர் தமது உரிமைகளை, ஆதிக்கத்தைத் தொடர வகை செய்யும் பழைய வருணாசிரம தர்மத்தை விட்டுக் கொடுத்து விடக் கூடாது, அந்த தர்மத்தைத் தாங்கிப் பிடிக்க பிற சாதியினர் தமது முதுகைக் கொடுக்க வேண்டும். பாவம் பார்த்து தரிசனம் கொடுத்து தொண்டு செய்வதை ஏற்றுக் கொண்டு அடுத்த பிறவியில் விமோசனம் கிடைக்கும் என்று காத்திருக்க வேண்டும். எப்படி வேறு மதத்துக்கு மாறலாம்? அதற்கு என்ன உரிமை இருக்கிறது?' - இதுதான் இந்துத்துவாவின் அடிப்படை.

சனி, ஏப்ரல் 21, 2007

புதியதோர் உலகம் செய்வோம்

ஏப்ரல் 10ம் தேதியிட்ட இந்து நாளிதழில் ஒரு அரசியல் கட்டுரை. 2009ம் ஆண்டின் G5 உச்சிமாநாட்டில் அமெரிக்க அதிபர் ஹில்லாரி கிளின்டனும், பிரெஞ்சு அதிபர் ராயல்், ஜெர்மன் அதிபர் மெர்க்கலும் பங்கு பெறுகிறார்கள். பெண்களின் முன்னேற்றத்துக்காக சிறப்பு நடவடிக்கை எடுக்கிறார்கள்.

அதை நம்ம ஊருக்கு நீட்டிப் பார்ப்போம். 2010ம் ஆண்டு தெற்காசிய கூட்டு நாடுகளின் உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர் மாயாவதியும், பங்களாதேஷ் பிரதமர் கலீடா ஜியாவும், பாகிஸ்தானிய பிரதமர் பெனாசிர் புட்டோவும், நேபாள பிரதமர் சஹானா பிரதானும்் (இப்போது வெளியுறவுத்துறை அமைச்சராக இருக்கிறார்). சந்திக்கிறார்கள்.

நேபாள இடைக்கால அரசில் மாவோயிஸ்டுகளுக்கு ஒதுக்கப்பட்ட அமைச்சர் பதவிகளில் வெளியுறவுத் துறைக்கு பொறுப்பேற்றிருப்பவர் சஹானா பிரதான். சார்க் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியிடப்பட்டிருந்தது. அதில் அவர் ஒரு வகையாக ஒதுங்கித் தெரிந்தார்.

'மேற்கத்திய உடை உடுத்து, முள்ளுக் கரண்டியால் சாப்பிட்டு விட்டு ஒயின் உறிஞ்சும் கூட்டத்தினர் மட்டும்தான் வெளியுறவுத் துறை போன்ற அமைச்சகங்களை நிர்வகிக்க முடியும்' என்று இருக்கும் மூடம் உடைய வேண்டும்.

குடியரசுத் தலைவர் ஆனதும், கழுத்து வரை மூடிய பணக்கார உடையை அணிந்தால்தான் ஆச்சு என்று அடம் பிடித்து அப்துல் கலாமை உடை மாறச் செய்தார்களாம். தேவ கவுடா பிரதமரானதும், வேட்டி கட்டிய ஒருவர் பிரதமரா என்று பல தில்லி வாசிகளுக்கு வயிறு எரிந்ததாம்.

அரசியலில், அரசுக்குத் தலைமை வகிக்க வர வேண்டியது, வாய்ப்புகள் மறுக்கப்பட்ட சமூகங்களிலிருந்து வளர்ந்தவர்கள்.
  • குடிசையின் உட்புறத்தில் வாழ்ந்து தெரிந்தவர் உள்துறை அமைச்சராக வேண்டும்.
  • சேரியில் வாழ்க்கை நடத்திப் பழக்கப்பட்ட பெண்மணி ஒருவர் நிதியமைச்சர் ஆக வேண்டும்.
  • வெளியுறவுத் துறையும், பாதுகாப்புத் துறையும், பிரதமர் அலுவலகமும் பெண்களுக்கே ஒதுக்கப்பட்டு விட வேண்டும்.
  • நாட்டின் நல்லுறவுகளை வளர்க்க, பாதுகாப்புக்காக நாட்டுப் படைகளை போருக்கு அனுப்ப, இதை எல்லாம் மேய்க்க குழந்தை பெற்ற வலி தெரியாத ஆண்களுக்கு உரிமை கிடையாது.
ஹைதராபாத்தில் ஓய்வெடுத்து, தேர்தல் பிரச்சாரத்தில் கூட குளிரூட்டப்பட்ட வண்டியிலிருந்து கீழே இறங்க முடியாத ஜெயலலிதாக்களோ, அறுபது கால பொது வாழ்வில் திருக்குவளை ஏழையாகத் துவங்கி இன்று குடும்பம் முழுவதும் கோடீஸ்வரர்களால் நிரப்பிக் கொண்ட கருணாநிதிகளோ தேவையில்லை.

மாயாவதி என்னென்ன ஊழல் செய்தார், திருமாவளவன் எப்படி எப்படி சொதப்பினார் என்று பட்டியலிட ஆரம்பிக்கலாம். ஆனால் அவர்களின் ஆட்சி நாட்டின் பெரும்பான்மையான வயிற்றில் ஈரத்துணி போட்டுக் கொண்டு தூங்கும் கூட்டத்தினருக்கு வழி காட்டுவதாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. ஏனென்றால் அந்த பெரும்பான்மை மக்களின் வலி அவர்களுக்குப் புரியும்.

தன் வீட்டில் வரவுசெலவு திட்டமிடலே பல ஆண்டுகளாகத் தேவைப்படவில்லை என்று சொல்லும் ப சிதம்பரம் எவ்வளவுதான் அறிவாளியாக இருந்தாலும் ஏழைகளின் துன்பம் எப்படிப் புரியும்?

வெள்ளி, ஏப்ரல் 20, 2007

வலைமகுடம் - டிபிஆர் ஜோசப்

ஒரு ஞாயிற்றுக் கிழமை மதியம். நல்ல சாப்பாடு சாப்பிட்ட அசதி. வீடும் ஊரும் தொலைக்காட்சியிலும், தூக்கத்திலும் மூழ்கிக் கிடக்கிறது. நல்ல ஒரு புத்தகத்தை எடுத்துப் படிக்க எண்ணம் வரும். பொன்னியின் செல்வனின் ஓரிரு அத்தியாயங்களையோ, ஜெஃப்ரி ஆர்ச்சர் அல்லது ஆர்தர் ஹீலியின் கதைகளின் ஒரு பகுதியையோ படித்துப் பார்த்தால் எழுதிய ஆசிரியரின் உயர்குணங்களும் உழைப்பும் மனதை நிறைக்கும்.

அந்த வரிசையில் வலைப்பதிவுலகில் நமக்குக் கிடைத்திருப்பவர் திரு டி பி ஆர் ஜோசப் அவர்கள். திரும்பிப் பார்க்கிறேன் என்ற தலைப்பில் அவர் எழுதும் வாழ்க்கை அனுபவங்களும், சூரியன் என்ற வங்கி மேலிட அரசியல்கள் குறித்த தொடர்கதையும் தமிழில் எனக்குத் தெரிந்து முதல் முறையாக நடக்கும் இதுபோன்ற முயற்சி.

இந்த இரண்டு பதிவுகளையும் தொடர்ந்து படித்து வரும் வாசகர்களுக்கு வங்கிக் கிளைகளில் நடக்கும் பணிகள், எடுக்கப்படும் முடிவுகளின் பின்னணிகள், வங்கி நடைமுறைகள் போன்றவை புரியும் வண்னம் சுவையாக கதை சொல்கிறார் ஜோசப் சார்.

ஆங்கிலத்தில் ஆர்தர் ஹீலி ஒவ்வொரு துறையையும் பல ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து தகவல்கள் திரட்டி Airport என்று விமானச் சேவைகள் குறித்து, Money Changers என்று வங்கிகள் குறித்து, Wheels என்று கார் தொழிலைக் குறித்து, Hotel என்று நட்சத்திர விடுதிச் சேவையைக் குறித்து, Strong Medicine என்று மருந்துத் துறை குறித்து, In High Places என்று கனடிய அரசியல் குறித்து எழுதியிருக்கிறார். தமிழில் அவ்வளவு ஆழமாக, சில இடங்களில் அதையும் விடச் சிறப்பாக எழுதப்படும் நவீனம் சூரியன் என்று எனக்குப் படுகிறது.

இத்தகைய கதைகளில் நாம் செய்தித் தாளில் மட்டும் படிக்கும் மனிதர்கள் ரத்தமும் சதையும், மூக்குச் சளியுமாக நம் முன் உருவாகிறார்கள். ஆரம்ப அத்தியாயங்களில் ஒன்றில் வங்கியின் இயக்குனரான சிலுவை நாடார் விருந்து ஒன்றில், கைத்துவாலையில் மூக்கைச் சிந்தி சிப்பந்தி கையில் எறியும் ஒரு நிகழ்ச்சியின் மூலம் அவரது நவநாகரீக-பக்குவமில்லாத நடத்தை, அடிமட்டத்திலிருந்து உழைத்து முன்னேறிய வரலாறு, இன்றைக்கு பெரிய பெரிய கோட்டு போட்ட படிப்பாளிகளை ஆட்டி வைக்கக் கூடிய செல்வாக்கு எல்லாமே மனதில் நச்சென்று பதிந்து விடும்.

இப்படியே ஒவ்வொரு பாத்திரமும் தனது முத்திரையைப் பதிக்கும் படி சரியான சம்பவங்களை சுவையாக எழுதிச் செல்கிறார். ஜோசப் சாரின் இந்தப் படைப்புகள் ஆண்டுகள் தாண்டியும் நிலைத்து நிற்கும், வரும் சந்ததியனருக்கு வாசிப்பு மகிழ்ச்சியும் அறிவும் தரும் வேலையைச் செவ்வனே செய்து வரும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

அவரது என்னுலமும், என்கதையுலகமும் தமிழ் வலைப்பதிவுலகை செறிவூட்டுகின்றன. தொடர்கதைகளைப் படிக்கப் பொறுமை இல்லாதவர்கள் சேர்த்து வைத்து மாதாமாதம் படிக்கலாம். ஒரு நடை போய் திரும்பிப் பார்க்கிறேன், சூரியன் தொடர்களின் ஆரம்பப் பகுதிகளையும், சூரியனுக்கு முன் வந்த அப்பா ஒரு ஹிட்லர் என்ற குடும்பக் கதையை முழுமையாகவும் படித்துப் பார்த்து விடுங்கள். அவை படித்தவருக்கு நன்மையை மட்டுமே தரும் அரிதான ஆக்கங்கள்.

யார் மீதும் எதன் மீதும் காழ்ப்போ, போற்றுதலோ, தன் கருத்தையோ சுமத்தாமல், நிகழ்வுகளை நிகழ்ந்தது போலச் சொல்லிப் போகும் டிபிஆர் ஜோசப்பின் படைப்புகள் எனது ஓய்வு நாட்களின் பல பிற்பகல்களை செறிவாக்கியவை. யாரும் பதிப்பகத்தார் இன்னும் அவரது எழுத்துக்களைக் கண்டு கொள்ளாமல் இருப்பது வியப்பைத் தருகிறது. தொலைக்காட்சி தொடர், திரைப்படம் என்று எந்த வடிவிற்கும் மாற்றிக் கொள்ளக் கூடிய வடிவங்கள் அவரது தொடர்கள்.

வியாழன், ஏப்ரல் 19, 2007

பாதகம்

பாதகம் செய்பவரைக் கண்டால் பயங் கொள்ளலாகாது பாப்பா
மோதி மிதித்து விடு பாப்பா அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா

புதன், ஏப்ரல் 18, 2007

ஆர்எஸ்எஸ் என்ற அபாயம் - 4

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல நூறு ஆண்டுகளாக ஒடுக்கி வைக்கப்பட்டிருந்த சாதியினரிடையேயும், மீனவ சமூகத்தினரிடையேயும் கிருத்தவ மதம் வேகமாகப் பரவியது. முன்பே சொன்ன கிருத்துவ மதப் பரப்புபவர்களின் சேவைத் திட்டங்களுக்கு வருணாசிரம முறையில் அமைந்த இந்து சமூக அமைப்பு சரியான விளைநிலமாக இருந்தது.

நண்பர் ஒருவரிடம் பேசும் போது 'இந்து சமூகத்தின் தாழ்த்தப்பட்ட பிரிவு மக்கள் கிருத்துவ மதத்துக்கு மாறியது மூலம் தமது வாழ்க்கையில் பல புதிய வழிகளைத் திறந்து விட்டுக் கொள்ள முடிந்தது. மூச்சைத் திணற வைக்கும் இந்து சமூக அமைப்பில் நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களை மதம் மாறக் கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை' என்று சொன்னேன்.

'காந்தியே மத மாற்றத்தைத் தடை செய்யச் சொன்னார் தெரியுமா' என்று என் மீது குத்திக் கொண்ட காந்தீயவாதி முத்திரைக்கு தோதுவான வாதம் வந்தது.

'அதனால் என்ன? உங்களுக்கு மதம் மாற வேண்டாம் என்றால் மாறாதீர்கள். விரும்புபவர்கள் மாறுவது அவர்களது உரிமை. அதில் ஏன் தலையிடுகிறீர்கள்.'

'கிருத்துப் பிரசங்கிகள் எப்படி இந்து தெய்வங்களை இழிவு படுத்துகிறார்கள் தெரியுமா? எங்க ஊர் ராமன் புதூரை கார்மல் நகர் என்று பெயர் மாற்ற முயன்றார்கள். கன்னியாகுமரி மாவட்டம் என்று எழுதும் போது கன்னியாகுமேரி என்று மேரி பெயரைப் புகுத்துகிறார்கள். நாமெல்லாம் சும்மா இருந்து விட்டால் இன்னும் சில ஆண்டுகளில் நமது மதம் வாழ இடமே இல்லாமல் போய் விடும்'

எனக்கு மிகவும் பழகிப் போன வாதங்களில் இறங்கினார். மக்களின் பொருளாதார, சமூகப் பிரச்சனைகளுக்கு மாற்றாக இது போன்ற பயமுறுத்தல்களை வெளியிட்டு உணர்வு பூர்வமாக தூண்டி விடுதல் மிகச் சாதாரணம். 1990ல் அத்வானி ஆரம்பித்த ரத யாத்திரை, விபி சிங் மண்டல் கமிஷன் பரிந்துரைகளைச் செயல்படுத்தி பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு வாய்ப்புகள் வழங்க முனைவதை எதிர் கொள்ளத்தான்.

மக்களின் அவல வாழ்வுக்கு தீர்வுகளை முன் வைக்கும் போது, 'ராமர் கோவில், பங்களாதேசத்தில் இந்துக்கள் படுகொலை, நமது தெய்வங்களுக்கு இழிவு' என்று உணர்வுகளைத் தூண்டும் பிரச்சனைகளைக் கிளறி மக்களை வெறி கொள்ள வைப்பார்கள். அதன் மூலம் அடிப்படை பிரச்சனைகளை அப்படியே வைத்துக் கொண்டு தாம் அனுபவித்து வரும் சமூக உரிமைகளைத் தொடர வழி தேடுகிறார்கள்.

இது எல்லா மதத்திலும் நடக்கலாம். முஸ்லீம் நாடுகளில் இசுலாமிய தீவிரவாதிகள் இப்படிச் செயல்படலாம். அமெரிக்காவில் கிருத்துவ மத அடிப்படைவாதிகள் அரசியல் செய்வதும் இதே அடிப்படையில்தான். ஆனால் நமது நாட்டில் தீவிரமாக இருப்பது இந்து மத வெறிதான்.

இந்து தர்மத்தின் மீது உண்மையான நம்பிக்கையும் பற்றும் இருப்பவர்கள் வெளியில் இருந்து வரும் தாக்குதல்களுக்கு சூலாயுதம் ஏந்த அவசியமில்லை. இந்து சமூகத்தின் குறைகளைக் களைவதுதான் மதத்தைப் பாதுகாக்கும் ஒரே வழி. பெரும்பான்மை மக்களுக்கு கல்வி மறுத்து, வாய்ப்புகளை இல்லாமல் செய்து விட்டு அவர்கள் வேற்று அமைப்புகளைத் தேர்ந்தெடுக்கும் போது அடிப்படைக் காரணங்களை கவனிக்காமல், உணர்ச்சிகளைத் தூண்டி விட்டுக் குளிர் காய்வதுதான் ஆர் எஸ்எஸின வழிமுறை.

'பாப்ரி மஸ்ஜித் இடிக்கப் பட்ட அன்றுதான் இந்தியா இரண்டாகப் பிரிந்தததை நியாயப்படுத்தினார்கள் இந்துத்துவாவாதிகள். இந்துக்களும் முஸ்லீம்களும் ஒரே நாட்டில் வாழ முடியாது. இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் அமைப்பில் முஸ்லீம்களுக்கு சம வாழ்வுரிமை கிடைக்காது என்ற வாதத்தின் அடிப்படையில் உருவான பாகிஸ்தானுக்கு மாற்றாக செயல்படுவதுதான் காந்தி-நேரு உருவாக்கிய இந்திய மதச்சார்பற்ற அரசமைப்பு. அதை நம்பித்தான் பல கோடி முஸ்லீம்கள் இந்தியாவை தாய்நாடாக ஏற்றுக் கொண்டு நாட்டு முன்னேற்றத்துக்காக ஒன்றாக உழைத்து வருகிறார்கள். இந்துத்துவா அமைப்புகள் அதிகாரத்தைப் பிடித்து தமது கொள்கைகள் படி நடக்க ஆரம்பித்தால் இந்தியா இணைந்து இருப்பதற்கான காரணங்களை தகர்த்து விடுவார்கள். இந்தியாவின் ஒற்றுமைக்கு முதல் எதிரிகள் இந்துத்துவா வாதிகள்தாம்', என்ற நான் தொடர்ந்து

'சென்ற முறை பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான அரசு, தமது விருப்பப்படி செயல்படவில்லை என்றுதான் ஆர்எஸ்எஸ் தலைமைக்குக் கோபம். அடுத்த முறை வாய்ப்புக் கிடைத்தால் அப்படிச் செயல்பட ஆரம்பித்து விடுவார்கள் என்பதுதான் எங்களுக்கு கவலை' என்றேன்.

'ஆர்எஸ்எஸ் என்பது தொண்டு நிறுவனம். அவர்களுக்கு பதவியில், அதிகாரத்தில் ஆசை கிடையாது' என்றார் நண்பர்.

'ஆர்எஸ்எஸ், விஸ்வஇந்து பரிஷத், பாரதீய ஜனதா கட்சி, பஜ்ரங்தள், இந்து முன்னணி இவை எல்லாம் வெவ்வேறு பெயர்களில் வெவ்வேறு துறைகளில் இயங்கும் சங்க குடும்பத்தின் வெவ்வேறு அமைப்புகள். ஆர்எஸ்எஸ் உறுப்பினர் பதவியை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று 1979ல் ஜனதா அரசை விட்டு வெளியேறிய ஜனசங்க வாஜ்பேயி முதலான அமைச்சர்களிலிருந்து, இன்றைக்கு பாரதீய ஜனதா கட்சியில் தலைமைப் பொறுப்பில் இருக்கும் பலரும் ஆர்எஸ்எஸ் என்ற பாசறையில் உருவானவர்கள்தாம். நரேந்திர மோடி ஆர்எஸ்எஸ்சின் படைப்பு. அத்வானி ஆர்எஸ்எஸ்சின் உறுப்பினர்.'

'காங்கிரசு ஆட்சியில் விலை வாசி ஏறி விட்டது, சிறப்பு பொருளாதார மண்டலக் கொள்கையினால் விவசாயிகள் துன்புறுத்தப் படுகிறார்கள் என்றும் வாக்கு சேகரிக்க வருவார்கள். தேவைப்படும் இடங்களில் முஸ்லீம்களை இழிவாகப் பயங்கரமாக சித்தரிக்கும் குறுந்தகடுகளைப் பயன்படுத்துவார்கள். இன்னும் சில இடங்களில் கிருத்துவர்கள் இந்து மதத்தை அழிக்க வருவதாகப் பயம் காட்டுவார்கள்.

எப்படி வந்தாலும், எந்த உருவில் வந்தாலும் இந்தியாவை பேரினவாத நாடாக மாற்றும் நோக்கம்தான் இந்துத்துவா குடும்ப இயக்கங்களின் நோக்கம். அந்த இலக்கை அடைய இன்றைய அரசியல் அமைப்பில் தமக்கு என்று ஒரு இடத்தை உருவாக்கிக் கொண்டுளளார்கள். காங்கிரசுக்கு மாற்று பாஜக என்று (சோ போன்றவர்களின் கனவு) வருவது இந்தியா என்ற வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாட்டு அமைப்புக்கு பாதகமாகத்தான் முடியும்.

செவ்வாய், ஏப்ரல் 17, 2007

ஆர்எஸ்எஸ் என்ற அபாயம் - 3

ஊருக்குப் போயிருந்த போது நூறு ஆண்டுகளாக நடந்து வரும் திருவிழாவில் கட்டப்பட்டிருந்த துணிகளில் ஆர்எஸ்எஸ் சிவசேனையின் பெயர்கள். 'நாம் எல்லோரும் விழிப்பாக இல்லாவிட்டால், இந்தத் திருவிழாக்களைக் கூட நடத்த முடியாத நிலை உருவாகி விடும்' என்ற மிரட்டல்தான் அவர்கள் நடுநிலை மக்களுக்கு முன் வைக்கும் அடிப்படை வாதம்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கிருத்துவ மதம் வேகமாகப் பரவி பெருவாரியான மக்கள் அம்மதத்தைத் தழுவினார்கள். பள்ளிக் கூடங்கள், மருத்துவமனைகள், சமூக ஆதரவு அமைப்புகள் என்று ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவும், சேவையும் அளிப்பதன் மூலம் அவர்களது மனதை வென்று மதம் மாற்றும் முறையில்தான் இவை நடந்தன.

இந்து இயக்கங்களின் மொழியில் அது இப்படி உருவெடுத்தது. 'பால் பொடியைக் காட்டி மதம் மாற்றுகிறார்கள். பெண்ணைக் காட்டி மயக்கி மதம் மாறினால்தான் பெண் தருவேன் என்று மிரட்டி மதம் மாற்றுகிறார்கள்' என்று விஷத்தைத் தூவுவார்கள்.

'ஒரு ஊரில் ஒரு சிலர் மதம் மாறி விட்டால், அப்புறம் மாறாமல் இருப்பவர்களைத் துன்புறுத்த ஆரம்பிப்பார்கள். ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்த ஒரு சிறுவன் நடந்து போய்க் கொண்டிருக்கும் போது கல்லெறிந்தார்கள். அவன் கண் தெறித்து கீழே விழுந்தது. அதைப் பார்த்து சிரித்து மகிழ்ந்தார்கள்' என்று நான் படித்த ஒரு துண்டுப் பிரசுரத்தில் எழுதியிருந்தது.

இன்றைக்கு உத்தரப் பிரதேசத்தில் வெளியாகியிருக்கும் குறுந்தகட்டில் இருக்கும் பிரச்சாரங்களும் கிட்டத்தட்ட இதே போலத்தான். மக்களின் பயம், குழப்பம், நிச்சயமின்மையை தூண்டி விடும்படி ஏற்கனவே வேறு தளத்தில் இருக்கும் குறைகளை, சமூக வேறுபாடுகளை நிறம் பூசி மாற்றி பிரச்சாரத்துக்குப் பயன்படுத்துவார்கள்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெருகி வரும் கிருத்துவ மதத்துக்கு பதிலாக இவர்களும் போட்டி போட்டு மருத்துவமனைகள், பள்ளிகள் ஆரம்பித்து சமூக சேவை செய்திருந்தால் அது சமூகத்துக்கு நன்மையாக முடிந்திருக்கும். கோயில்கள், நிலத்தகராறு, பொது இடங்களைப் பயன்படுத்துவதில் ஏற்படும் கருத்து வேறுபாடுகள் என்று ஒவ்வொன்றுக்கும் காவி சாயம் பூசி, மக்களின் அடிப்படை பயங்களைத் தூண்டி விட்டுத் தமது நோக்கத்துக்குப் பயன்படுத்துவதுதான் இந்துத்துவா பயங்கரவாதம்.

மண்டைக்காடு என்று ஒரு ஊர் கன்னியாகுமரி மாவட்டத்தில். விடிவதற்குள் வா என்ற கதையில் இந்த மதக்கலவரம் எப்படி உருவானது என்று சுஜாதா அழகாக எழுதியிருப்பார். அந்தக் கதை வெளி வந்த போது எங்களுக்கெல்லாம் அதிர்ச்சி, சுஜாதா இந்துக்களைக் குறை சொல்லி எழுதி விட்டாராமே என்று பேசிக் கொண்டோம். ஆனால் அதில் அவர் சொன்னதுதான் உண்மை நிலவரம்.

ஒரு பெண் காணாமல் போய் விட அதை கலவரமாகத் தூண்டி விட்டு ஆதாயம் கண்டவர்கள் இந்து இயக்கங்கள். மண்டைக்காட்டில் பகவதி அம்மன் கோவில் இருக்கிறது. ஆண்டு தோறும் அங்கு திருவிழா நடைபெறும். அந்த ஊரின் மீனவ சமூகத்தினர் கிருத்துவ மதத்துக்கு மாறிய பிறகு பிரச்சனை ஆரம்பித்தது.

'கடலில் குளிக்கப் போன இந்துப் பெண்களை மானபங்கம் செய்தார்கள். மீன் தூண்டிலால் விரட்டி அடித்தார்கள்' என்று மாவட்டமெங்கும் பரபரப்பு. வதந்திக்குக் கால் முளைக்க கைவிரலில் எண்ணி விடக் கூடிய பயிற்சி அளிக்கப்பட்ட நபர்கள் அங்கங்கு இருந்தால் போதும். அமைதியாக உட்கார்ந்து யோசித்துப் பார்த்தால் முட்டாள்தனமாகப் பிடிபட்டு விடும் குற்றச்சாட்டுகள் அது மாதிரி பயம், குழப்பம் நிலவும் நேரங்களில் பெரும்பூதங்களாகத் தென்படும். மனிதனின் மூளை கலங்கியதும் எப்படி வேண்டுமானாலும் செலுத்திக் கொள்ளலாம்.

அடுத்தக் கட்டமாக இந்து ஒற்றுமை எழுச்சி மாநாடு என்று ஒரு அரசியல் அணிதிரட்டலில் இறங்கினார்கள். இந்துக் கோயில்கள் எல்லாம் இந்து இயக்கங்களுக்கு விளைநிலமாக மாறி விட்டன. யாரும் எதிர்த்துப் பேசினால் நாட்டுத் துரோகி என்று அடையாளம் கண்டு கொள்ளப்படுவார்கள்.

அரசியலும், மதமும் கலப்பதில் வெட்கமே இல்லாத இயக்கத்தினர் இவர்கள். நாகராஜா கோவிலில் கூடும் பெண்களையும், சிறுவர்களையும், ஆண் பக்தர்களையும் பயிற்றுவிக்க காவி உடை உடுத்த இந்து முன்னணி, விஷ்வ இந்த பரிஷத் தொண்டர்கள் எந்தத் தடையுமின்று ஒலிவாங்கிக்கு வர முடிந்திருந்தது.

மதம் என்பது வாழ்வோடு பின்னிப் பிணைந்தது நம் நாட்டில். அதற்கு ஆபத்து என்று தூண்டி விடப்பட்டால் எந்த நிலைக்கும் போகத் துணிந்து விடுவார்கள் மனிதர்கள். இந்த உணர்வுகளில் மிதந்து அதிகாரத்தைப் பிடித்து விட வேண்டும் என்பது இந்துத்துவா இயக்கங்களின் கனவு.

திங்கள், ஏப்ரல் 16, 2007

நாகர்கோவில் வலைப்பதிவர் சந்திப்பு

சிறில் காலையில் ஒன்பது மணி வாக்கில் தொலைபேசி, வந்து சேர்ந்து விட்ட தகவலை அறிவித்தார். 'மதியம் ஒன்று ஒன்றரை போல நாகர்கோவிலில் சந்திக்கலாம் என்று பேசி, மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு பார்க்கலாம்' என்று திட்டம் செய்து கொண்டோம்.

ஆசாரிபள்ளத்திலிருந்து எட்வின் என்ற நண்பர் அழைத்தார். காலையில் இடுகையில் பார்த்ததாகவும் அவரும் சந்திக்க விரும்புவதாகவும் சொன்னார். டிவிடி பள்ளியின் அருகில் இருக்கும் அலுவலகத்தில் குமரி மைந்தனை சந்தித்துப் பேசலாம் என்று சொன்னார். குமரி மைந்தன் என்ற பெயர் பழக்கப்பட்டதாகத் தெரிந்தது. சிறில் ஏற்கனவே உங்கள் நண்பன் சரவணன் மற்றும் அரவிந்தன் நீலகண்டனுக்கு தொலைபேசியில் பேசி விட்டிருந்தாராம்.

மதியம் சாப்பிட்டு முடிக்கும் போது வீட்டிலிருந்து புறப்பட்டு விட்டதாக சிறில். மழைக்கு இருட்டிக் கொண்டிருந்தது. பேருந்துக்கு போவதை விட நடந்தே போய் விடலாம் என்று சொன்ன அறிவுரையை ஏற்றுக் கொண்டேன். கூடவே ஒரு குடையும்.

மழை பெரிய பெரிய துளிகளாக விழுந்து கொண்டிருந்தது. சில நிமிடங்கள் அடித்து விட்டு மறைவதும், மீண்டும் வருவதுமாகக் கண்ணாமூச்சி. பழக்கமான சாலைகள் வழியாக நடந்து புதிய கட்டிடங்களைப் பார்த்துக் கொண்டே, புதிய பார்வையில் பழைய கட்டிடங்களை வருடிக் கொண்டே தாமரைப் பூப் போட்ட வீட்டின் முன் தெருவில் திரும்பி, நாகர்கோவில் விருந்தினர் மாளிகைக்கு எதிரில் சாலையில் இணைந்தேன். மாவட்ட சிறைச் சாலையாகப் பதவி உயர்வு பெற்றிருந்தது, முன்பு சப்ஜெயில் என்று இருந்த இடம். எதிரிலேயே ஒரு எரிபொருள் நிரப்பும் மையம்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வந்து சேர்ந்த போது இரண்டரைக்கு பத்து நிமிடங்கள் இருந்தன. சிறில் இருக்கும் வரை வலைமேயலாம் என்று எதிரிலேயே இருந்த இணைய மையத்துக்குள் போனேன். கணினியில் கணக்கை ஆரம்பித்துக் கொடுக்கவும் சிறிலின் அழைப்பு வரவும் சரியாக இருந்தது. 10 ரூபாய் கேட்டவரிடம் 5 ரூபாய்தான் சில்லறை இருப்பதாகக் கொடுத்து விட்டுக் கீழே இறங்கினேன்.

'டாடா சுமோவில் வந்து கொண்டிருக்கிறேன்' என்று சொல்லியிருந்தார் சிறில். ஓரிரு நிமிடங்களில் வண்டி வந்து விட்டார், சுமோ அடையாளம் இல்லாமல் சிறிலை கண்டு கொண்டிருக்க முடியாது. புகைப்படத்தில் இருந்த கண்ணாடி இல்லாமல் மிக இளமையாக கல்லூரி மாணவனின் தோற்றத்துடன் காரிலிருந்து இறங்கினார். இறங்கிய உடனேயே உங்கள் நண்பனுக்குத் தொலைபேசினார். அரவிந்தன் நீலகண்டனுக்கும் அறிவித்தார்.

உங்கள் நண்பன் ஓரிரு நிமிடங்களில் வந்து சேர்ந்து விட்டார். மூவரும் தேநீர்க் கடையில் தேநீர் சொல்லி விட்டு சிறில் ஒரு புகை பற்ற வைத்துக் கொண்டார். சிறிது நேரம் பொதுவாகப் பேசிக் கொண்டிருந்தோம். அரவிந்தன் வருவதற்கு கொஞ்ச நேரம் ஆகும். கவிமணி நகரில் இருந்து வருகிறாராம். பத்து இருபது நிமிடங்கள் பிடிக்கும். அவரும் வந்து அறிமுகங்கள் முடிந்தவுடன் குமரி மைந்தன் அலுவலகத்துக்குப் போகலாம் என்று முடிவு செய்தோம்.

சிறிலின் வண்டியில் நான் ஏறிக் கொள்ள அரவிந்தனும், உங்கள் நண்பன் சரவணனும் தத்தமது இரு சக்கர வண்டிகளின் முன்னால் போனார்கள். காரிலேயே எனது சமீபத்திய ஆர்எஸ்எஸ் எதிர்ப்பு பதிவு குறித்தப் பின்னணியை விளக்கி விட்டேன். அதற்குள் போக வேண்டிய இடம் வந்து விட்டது. எட்வின் சொன்ன அடையாளத்திலிருந்து சிரமம் இல்லாமல் குமரி மைந்தனின் அலுவலகத்தை அடைந்து விட்டோம்.

எட்வின் இளைஞர். குமரி மைந்தன் வாட்டசாட்டமாக பெரிய மீசையுடன், கறுப்பாக உட்கார்ந்திருந்தார். அவர் தகவல்களின் களஞ்சியமாகப் பேசினார். தான் ஆராய்ச்சி செய்த பண்டைத் தமிழ் மரபுகள், மனித வரலாறு குறித்து நிறைய எழுதியிருக்கிறார், பேசவும் செய்தார். அங்கு உட்கார்ந்திருக்கும் போது வெளியில் மழை பிடித்துக் கொண்டது. சோவென பெருமழையாக ஒரு மணி நேரத்துக்கு மேல் பெய்தது.

அதுவும் ஒரு காரணமாகச் சேர்ந்து விட குமரி மைந்தன் ஐயாவின் பேச்சு நீண்டு கொண்டே போனது. புராணங்கள் முதல், குமரிக் கண்டம் வரை, இந்திய அரசியல் முதல் உள்ளூர் சாதிக் கொடுமைகள் வரை, அவரது நில, சமூகப் பொருளாதார சீர்திருத்தத் திட்டங்கள் வரை நிறைய விவாதித்தோம். சிறிலும், உங்கள் நண்பனும் அதிகம் கலந்து கொள்ளவில்லை. நான் கொஞ்சம் பொறுமையின்றியும், அரவிந்தன் நிதானமாகவும் கலந்து கொண்டோம். சிறிலும் தனது பாணி கருத்துக்களை அவ்வப்போது போட்டு வைத்தார்.

குமரி மைந்தனின் படைப்புகளை கணினியில் உள்ளிட்டுப் பதியும்படி சொன்னேன். ஏற்கனவே ஒரு பதிவு இருக்கிறதாம். அசுரன், ராஜாவனஜ் போன்றவர்களின் பதிவுகளிலிருந்து சுட்டி இருக்கிறது என்று அரவிந்தன் பின்னால் சொன்னார். குமரி மைந்தனின் பேச்சுக்களை, எழுத்துக்களை முழுமையாக கணினி வடிவாக்க தொழில் நுட்ப சாத்தியங்களைக் குறித்து எட்வின் கேட்டார். 'மனித இடையூறு இன்றி பேச்சுப் பதிவுகளை, தமிழ் அச்சுப் பிரதிகளை கணினிக் கோப்புகளாக மாற்றிக் கொடுக்கும் தொழில் நுட்பங்கள் இன்றைக்கு முழுமையாக இல்லை' என்று சொல்லி, 'தன்னார்வலர் சிலரைப் பிடித்து உள்ளிடச் சொல்வது' சிறந்த தேர்வாக இருக்கும் என்று சொன்னேன்.

வெளி நாட்டிலிருந்து அழைப்பு. பெண் குரல். அமெரிக்காவிலிருந்து அழைப்பதாக அம்மா தனது பெயரையும் சொன்னார்கள். பெயர் சரியாகக் கேட்கவில்லை. 'இன்று தமிழ் வருடப்பிறப்பு, எல்லோருக்கும் வாழ்த்து சொல்லி தொலைபேசி கொண்டிருந்தேன். இன்று வலைப்பதிவர் சந்திப்பு என்ற அறிவிப்பு பதிவில் உங்க தொலைபேசி எண்ணைப் பார்த்தேன். அதான் பேசினேன். நீ என் பிள்ளை மாதிரி' என்றார்கள். வல்லிசிம்மன் அம்மா. மனம் நிரம்பி வழிந்தது. 'திடீரென்று கூப்பிட்டு அதிர்ச்சி கொடுத்து விட்டேனா' என்றார்கள். மிக்க மகிழ்ச்சியாக இருந்ததை வெளிப்படுத்தினேன்.

பேரக் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள அமெரிக்கா வந்திருப்பதாகவும் ஜூனில் இந்தியா திரும்புவதாகவும் சொன்னார்கள். வழியில்தான் துபாயில் இறங்குவதாகத் திட்டம் போலிருக்கிறது.

மழையும் ஓய்ந்திருக்க விடை பெற்றுக் கொண்டு கிளம்பும் போது வாதம் ஓயவில்லை. சிறில் இன்னொரு முறை பேசிக் கொள்ளுங்கள் என்று சொல்லி அழைத்து வெளியே வந்தார். எஸ்எல்பி பள்ளி மைதானத்துக்குப் போகலாம் என்று கிளம்பினோம். உங்கள் நண்பன் சரவணின் அலுவலகம் அருகிலேயே இருந்தது. சிறிலுக்கு நேரம் முடியப் போகிறது.

சேதுலட்சுமி பாய் பள்ளி என்ற எஸ்எல்பி பள்ளிக்குள் நுழைந்து பேசிக் கொண்டே பின்புற மைதானத்தை அடைந்தோம். அரவிந்தன் தனது எழுத்துக்களை விளக்கிக் கொண்டு வந்தார். 'மதம் என்பதே மனிதனின் கற்பனை, மன அனுபவம்தான்' என்று தான் நம்புவதாகச் சொன்னார். எந்த மதத்தையும் தாக்குவது தனது நோக்கம் இல்லை என்று திருத்தமாக உரைத்தார். சிறிலும் புத்திசாலிக் கேள்விகளைக் கேட்டு விபரங்களை வரவழைத்தார்.

அந்த நேரத்தில் அவருக்கு அழைப்பு வந்து விட சிறிலை வழியனுப்பி வைத்தோம். நாங்கள் மூன்று பேரும் மீண்டும் பள்ளியினுள் நுழைந்து முன் வாசல் படியில் உட்கார்ந்து கொண்டோம். சரவணனுக்கு முந்தைய இரண்டு மணி நேரப் பேச்சுக்கள் புரிந்து கொள்ள மிக அடர்த்தியாக இருந்ததாம். இப்போது அரவிந்தனின் பேச்சு என்னுடைய ஆர்எஸ்எஸ் எதிர்ப்பு குறித்துத் திரும்பியது.

சிறில் இருக்கும் போது இருந்த தொனி மாறி, நடைமுறை பற்றி பேச்சு. சரவணன் இடையில் வெப்பம் தாங்க முடியாமல் விலகிப் போனார். எனக்கு அரவிந்தன் சொன்னது போலத் தோல் தடித்திருந்தது. அவரது கேள்விகள்/கருத்துக்களை பல முறை கேட்டிருந்ததால் என்னை அதிகம் பாதிக்கவில்லை. நான் சரவணனிடம் பின்னர் சொன்னது போல 'ஒன்று இடத்தை விட்டு ஓடி விட வேண்டும். அல்லது என்னைப் போல தோல் தடித்திருக்க வேண்டும். நடுநிலையான சிறிதளவு மனம் சலித்திருக்கும் ஒருவருக்கு உணர்ச்சிகளைத் தூண்டி விடும் கருத்துக்கள்.' தேர்ந்த பயிற்சி பெற்ற ஊழியர் அவர்.

'அவர் சொன்னதற்கெல்லாம் சிரித்துக் கொண்டே பதில் சொன்னீர்களே' என்று சரவணன் பின்னர் சொன்னார். எப்படியாவது எனது கோபத்தைத் தூண்ட வேண்டும் என்று கடைசி வரை முயன்றார். காந்தியவாதியா என்று முதலிலேயே கேட்டிருந்தபடி காந்தி ஒரு தோல்வி என்று கூடச் சொல்லிப் பார்த்தார். நான் ஆர்எஸ்எஸ் ஒரு அபாயம் என்று என்ன எழுத வேண்டுமோ அதை அனைத்தையும் உறுதி செய்யும் படியான ஆர்எஸ்எஸ் பிரதிநிதி அவர்.

சரவணன் ஏதாவது திரைப்படம் போகலாமா என்று கேட்டார். அப்போதான் எனக்குப் பேச நேரம் கிடைக்கும் என்றார். அரவிந்தன் கிளம்பி விட்டார். நானும் சினிமாவை மறுத்து விட்டு எங்காவது உட்கார்ந்து பேசலாம் என்று முடிவு செய்து கொண்டோம். எங்க வீடு நோக்கி அவரது வண்டியில் வந்து கன்கார்டியா பள்ளிக்கு சற்று முன்பு ஒரு மூடியிருந்த கடையின் முன் வாசலில் உட்கார்ந்து பேச ஆரம்பித்தோம்.

தமது ஊர், தந்தையின் மிளகாய் விவசாயத் தொழில், படிப்பு, உழைப்பு, தமது எழுத்துக்கள், தனது தொழில் என்று சொல்லிக் கொண்டிருந்தார். இடையில் அந்த வழியாகப் போன காவலர்களின் சந்தேகத்துக்கும் ஆளானோம். அவரிடம் விளக்கி விட்டுக் கிளம்பினோம்.

சரவணன் நாகராஜா கோவிலுக்கு அழைத்துச் சென்றார். குளக்கரையில் உட்கார்ந்து எனது தத்துவங்களுடன் நேரம் போனது. நேரத்தை நீட்டிக் கொண்டே போய் எட்டேகால் ஆகி விட்டது. அம்மா மட்டும் வீட்டில் இருந்தார்கள். வெளியே எங்கும் போகவில்லையாம். சரவணன் என்னை விட்டு விட்டுச் செல்வதாக வந்தார்.

வீட்டுக்கு வந்து உள்ளே வரத் தயங்கினார். அம்மாவுக்கு அறிமுகப் படுத்து புத்தாண்டு பாயாசம் கொடுத்து, சிறிது நேரத்தில் சாப்பாட்டுக்கும் சம்மதிக்க வைத்தோம். தினமும் விடுதியில் சாப்பிடும் பழக்கத்துக்கு ஒரு நாளாவது வீட்டு சாப்பாடு நல்லது என்று வற்புறுத்தினேன்.

உங்கள் நண்பன் சரவணனின் இடுகை

ஆர்எஸ்எஸ் ஒரு அபாயம் - 2

'சங்கத்தின் வழியே ஒரே வழி, சங்கத்துக்கு பணி புரிவதே ஒரே நோக்கம், அதற்குத் தடையாக வருவதை எல்லாம் ஈவு இரக்கமின்றி தியாகம் செய்து விட வேண்டும்' என்று போதிக்கும் இயக்கம் ஆர் எஸ் எஸ்.

'ஒரு வீட்டின் நன்மைக்காக ஒரு தனி மனிதனையும், ஒரு கிராமத்தின் நன்மைக்காக ஒரு குடும்பத்தையும், ஒரு நாட்டின் நன்மைக்காக ஒரு கிராமத்தையும் பலி கொடுப்பது தவறில்லை' என்று நம்பும் இயக்கம் ஆர் எஸ் எஸ்.

'இந்தியா என்பது ஒரே நாடு, அதன் மொழி ஒரே மொழி, அதன் மக்கள் ஒரே இனத்தினர், அதன் பண்பாடு ஒரே பண்பாடு, அதன் மதம் ஒரே மதம்' என்று பேரின வாதத்தின் அடிப்படையில் இயங்குவது ஆர் எஸ் எஸ்.

'மனிதர்களை விட நாட்டில் எல்லைகள்தான் புனிதமானவை, தனி மனித உரிமைகளை விட சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வழிமுறைகள்தான் உயர்ந்தவை' என்று அதற்காகக் கண் மூடித்தனமாக போராடும் இயக்கம் ஆர் எஸ் எஸ்.

முன்பே சொன்னது போல ஆர் எஸ் எஸ் உறுப்பினர்கள் அனைவரும் அப்பழுக்கில்லாதவர்கள், மக்கள் சேவைக்குத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர்கள். குடும்ப வாழ்க்கையைக் கூட தியாகம் செய்து இயக்கப் பணிக்காக வாழ்வை கழிப்பவர்கள்.

ஆனால் அவர்களது இலக்கு பயங்கரமானது. அவர்கள் கனவு காணும் இந்தியா என்ற ஒரு தேசம் எந்த காலத்திலும் இருந்ததில்லை. இன்றைக்கு இருப்பது போலவே பல்வேறு இனத்தவரின், பலமொழிகள் பேசுபவர்களின், பல மதங்களைப் பின்பற்றுவர்களின் நிலப்பரப்பாகவே இருந்து வந்திருக்கிறது இந்தியா.

சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளை இனத்தவரும், கறுப்பு இனத்தவரும், மஞ்சள் இனத்தவரும் இந்தியா முழுவதும் பரவியிருந்திருப்பார்கள் என்பது நமது தோல் நிறத்தைப் பார்த்தாலே தெரிய வரும். ஒரே குடும்பத்தில் கறுப்பும், வெளுப்பும், பழுப்பும், மஞ்சளும் கூடத் தென்படுகின்றன (குமரி மைந்தன் மாற்று கருத்தைக் கூறினார்). இந்தியா முழுவதும் ஒரே இனம், ஒரெ மொழி ஒரே ஆட்சி நடந்தது என்பது 56 தேசங்களைத் தன் குடைக்கீழ் ஆட்சி புரிந்தான் என்பது, கிண்டி, தாம்பரம், குரோம்பேட்டை என்று கணக்கிட்டு 56ஆக வருவதாகத்தான் இருந்திருக்கும்.

இந்தியாவின் நிலப்பரப்புக்கு ஏற்ற ஆட்சி முறை, மக்களாட்சி முறை. தனிநபர் உரிமைகள். ஒவ்வொரு சமூகமும் தமது சிறப்பு குணங்களைப் போற்றி மற்றவர்களின் குணங்களை மதித்து வாழும் வாழ்க்கை முறைதான் நமக்குப் பொருந்தும்.

இங்கு இசுலாமியர்கள் தமது நம்பிக்கையைப் பின்பற்றி, தமக்கு என்று தனி சட்டத்துடன் வாழவும், இந்துக்கள் தமக்குரிய சட்டத்துடன் வாழவும், தமிழர்கள் தமது மொழியைப் போற்றி தமிழில் பொதுப் பணிகளை நடத்தவும் இடம் இருக்கிறது. 'ஒரே தேசிய மதம், ஒரே தேசிய மொழி, ஒரே தேசிய இனம்தான் இந்தியா மற்றவர்கள் வாழலாம், இரண்டாந்தரக் குடிமக்களாக தேசிய கொள்கைகளுக்கு அடிபணிந்து இருக்கும் வரை' என்ற இந்துத்துவா வழிமுறை கனவில் மட்டும்தான் சாத்தியமாகும்.

ஆனால் அந்தக் கனவை அடைய எந்தக் கொடுமைக்கும் தயாராக இருப்பவர்கள் இந்துத்துவா வாதிகள். அவர்களைப் பொறுத்த வரை இலக்கை அடைவதற்காக கொடுக்கப்படும் விலையாக எந்தப் பலியையும் கொடுக்கத் தயங்க மாட்டார்கள்.

1980களிலும், 90களிலும் ஏதாவது மாவட்டத்தில் மதக் கலவரங்கள் நடந்தால் அடுத்த தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெற்று விடும் என்பதை செய்திகளில் அவதானித்திருக்கிறேன். அப்போதெல்லாம் அனுதாபம் காங்கிரசுக்கு மாற்றான பாஜகவிடம் இருந்தது. மதக்கலவரங்களை எப்படித் திட்டமிட்டுத் தூண்டி விடுவார்கள், மக்களின் உணர்ச்சிகளை தூண்டி வன்முறைக்கு எப்படி வித்திடுவார்கள் என்பதை நாகர்கோவிலில் நேரடியாகப் பார்த்தவன் நான்.

என்னதான் பசு வேசம் போட்டாலும் ஓநாயின் பற்களும் நகங்களும் தேவையான இடத்தில் வெளிப்பட்டு விடும். தமது நோக்கத்தை அடைய சாம பேத தான தண்டம் என்று எந்த வழியையும் பின்பற்றத் தயங்காத சுத்த வீரர்கள் ஆர் எஸ் எஸ் ஊழியர்கள்.

வியாழன், ஏப்ரல் 12, 2007

ஆர் எஸ் எஸ் என்ற அபாயம்

போன நாடாளுமன்ற தேர்தலின் போது நான் ஏபிஎன் அம்ரோ வங்கியின் சென்னை அலுவலகத்தில் சிலருக்கு சீன மொழிக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தேன். அந்த ஞாயிற்றுக்கிழமை வகுப்புக்குச் சென்று போது பல கட்டங்களாக நடந்து கொண்டிருந்த தேர்தல் பற்றியும், அன்று சென்னையில் நடக்கப் போகின்ற வாக்கெடுப்பு பற்றியும் பேச்சு வந்தது. அந்தக் குழுவின் மேலாளர் கர்நாடகாவைச் சேர்ந்தவர்.

'யாராயிருந்தாலும், தேசிய முன்னேற்றக் கூட்டணி ஆட்சிக்கு வர உதவுபவர்களாகப் பார்த்து வாக்களியுங்கள்' என்று சொன்னார்.

அதிகமாகப் பேசாத நான், பொதுவாக இது போன்ற சூழல்களில் மட்டுறுத்தியே கருத்து சொல்லும் நான்

'இந்த தேர்தலில் மீண்டும் பாரதீய ஜனதா கட்சி ஆட்சியைப் பிடித்தால், இது போன்ற தேர்தலில் வாக்களிக்கும் வாய்ப்பு இது கடைசி முறையாகப் போய் விடலாம். அவர்கள் இன்னும் ஐந்து ஆண்டுகள் ஆட்சியில் உட்கார்ந்து விட்டால், இந்திய அரசியலமைப்பையே சீர்குலைத்து தமது நோக்கத்துக்கேற்ப மாற்றி விடும் சாத்தியங்கள் இருக்கின்றன' என்று வேகமாகச் சொன்னேன்.

இன்றைக்கு குஜராத் இந்துத்துவா சக்திகளுக்கு சோதனைக்களமாக இருப்பது போல கன்னியாகுமாரி மாவட்டம் 1980களில் சோதனைக் களமாக திகழ்ந்தது. அன்று விதைத்த விதைகளின் பலன்களை இன்றும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் இந்துத்துவா இயக்கத்தினர். மாவட்டத்தின் உழைக்கும், வியாபார வர்க்கத்தினரின் (சாதியினரின்) மத பாகுபாடுகளைக் கடந்து ஒன்று பட்ட நிலைப்பாட்டினால் இந்து நடுத்தர வர்க்க படித்த கூட்டத்தால் (சாதியினரால்) தூக்கி நிறுத்தப்பட்ட ஆர் எஸ் எஸ் முன்னணி இயக்கங்களின் திட்டங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

பள்ளி மாணவனாக நான் பிந்தைய வகையில் இருந்தேன். நான் படித்த பள்ளி இந்துப் பள்ளி, அதை நடத்தும் சமுதாயத்தின் வெளிப்படையான ஆதரவில் இந்து இயக்கங்கள் தமது நடவடிக்கைகளை நடத்தி வந்த இடம். வகுப்பறையில் தேசபக்த பாடல்கள் என்று ஆர்எஸ்எஸ் இயக்கக் கொள்கைகளைக் கற்றுத் தந்த ஆசிரியரும் உண்டு.

எங்கள் வீட்டில் விஜயபாரதம் என்ற இதழ் ஆர்எஸ்எஸ்ஸின் கொள்கை விளக்கங்களை தாங்கி வரும். ஒரு விடுமுறைக் காலத்தில் ஆர்எஸ்எஸ்ஸால் நடத்தப்பட்ட 4 நாட்கள் முகாமில் பங்கு கொள்ள என் சித்தப்பா அழைத்துப் போனார். நாகராஜா கோயிலில் இந்து முன்னணி நடத்தும் பிரார்த்தனைக் கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறேன்.

இந்து ஒற்றுமை எழுச்சி மாநாடு என்று நடந்த மாநாட்டில் குடும்பத்தோடு கட்டுச் சாதம் கட்டிக் கொண்டு போய்க் கலந்து கொண்டிருக்கிறோம். ஆர்எஸ்எஸின் தேச பக்த நடவடிக்கைகளைப் போற்றும் துக்ளக் சோவின் ரசிகனாக இருந்திருக்கிறேன்.

எப்படியோ, எனக்குப் புரிந்த வரையில் ஆர்எஸ்எஸ், அதன் கொள்கைகள், அதனைச் சேர்ந்த இயக்கங்கள் பயங்கரமானவை.

'நமக்கு வேறு யாரும் எதிரியில்லை. அந்த ஆழ்வார்க்கடியான்தான் முதல் எதிரி. தேள், நட்டுவாக்கல்லி, பாம்பைப் பார்த்தால் எப்படி அடித்துக் கொல்வோமோ, அப்படி அடித்துக் கொன்று விடுங்கள்.' என்று ரவிதாசன் பாண்டிய நாட்டு ஆபத்துதவி கூட்டத்தில் முதல் மந்திரி அநிருத்தரின் சீடனான திருமலை என்ற ஆழ்வார்க்கடியானைக் குறித்து சொல்லுவான்.

அப்படி இரக்கம் இல்லாமல் ஒதுக்கப்பட வேண்டிய இயக்கம் ஆர்எஸ்எஸ். வெளிப்படையாகத் தெரியும் அபாயங்களை விடப் பலமடங்கு கொடியது அவர்களது வழிமுறை. ரஷ்யாவின் ஸ்டாலினிசத்தையும், இத்தாலியின் ஃபாசிசத்தையும், சீனாவின் மாவோயிசத்தையும் மிஞ்சி விடக் கூடிய கொடுமைகளுக்கு வழி வகுத்து விடக் கூடியவை ஆர்எஸ்ஸின் கொள்கைகளும், நடவடிக்கைகளும்.

ஆர்எஸ்எஸின் முதல் அபாயம், அதன் ஊழியர்களின் அப்பழுக்கற்ற தனி வாழ்க்கை. என்னுடைய நான்காம் வகுப்பு ஆசிரியரிலிருந்து, குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி வரை, எல் கே அத்வானியிலிருந்து, எல் கணேசன் வரை மிகத் தூய்மையான ஒழுக்கமான மனிதர்கள் ஆர்எஸ்எஸ் செயல் உறுப்பினர்கள்.