புதன், டிசம்பர் 19, 2007

நரேந்திர மோடியும் அத்வானியும் எப்படி குற்றவாளிகள் (என் பார்வையில்)

நரேந்திர மோடி குறித்த பதிவில் நடந்த விவாதங்களில் படிப்பதற்கு இடியாப்பச் சிக்கலாகிப் போய் விட்ட கருத்துக்களைத் தெளிவுபடுத்த இந்த இடுகை.

ஒரு சின்ன வேண்டுகோள்:

நாம் வலைப்பதிவுகளில் விவாதிப்பதால் நரேந்திர மோடியின் வெற்றி தோல்வியோ, அப்சல் குரு வழக்கின் முடிவோ தீர்மானிக்கப்பட்டு விடப் போவதில்லை. எனக்கு சரி எனப்படுவதை நான் எழுதுகிறேன். அதில் என்ன தவறு என்று உங்களுக்குப் படுகிறதோ அதை விளக்குங்கள். தேவையில்லாமல் என்னையோ, மற்றவர்களையோ திட்டுவதால் எதுவும் மாறி விடப் போவதில்லை. அப்படித் திட்டுவதால் எனக்குப் பெரிய வருத்தமும் இல்லை.

என்னுடைய பார்வையில் ஏன் அத்வானியும், நரேந்திர மோடியும் குற்றவாளிகள், தேசத் துரோகிகள்?

  • வல்லவன் வகுத்ததே நீதி என்று இருப்பது ஒரு முறை - பழைய மன்னராட்சி
  • கூட்டத்தில் அதிகமான பேர் என்ன நினைக்கிறார்களோ அதுதான் நீதி என்று இருப்பது இன்னொரு முறை - கும்பல் சார்ந்த அமைப்புகள் (தோல்வியடைந்த சீன, சோவியத் பரிசோதனைகள்)
அந்த முறைகளில் என்ன குறைபாடு என்றால் அமைதியும் திடத்தன்மையும் நீடிக்க முடியாமல், அடிக்கடி போர்களும் அழிவும் ஏற்படும். நீடித்த அமைதி இல்லாமல் முன்னேற்றமும், வளர்ச்சியும் குன்றி விடும். சாண் ஏறினால் முழம் சறுக்கும் என்று சமூகம் பின்தங்கியே இருக்க நேரிடும்.

அவற்றுக்கு மாற்றுதான் அரசியலமைப்பு ஒன்றை வகுத்து, ஒரு பகுதியின் எல்லா மக்களும் அதை வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டு இணைந்து செயல்படுவது. அரசியல் சட்டப்படி ஒவ்வொரு பணியையும் செய்ய தெளிவாக வரையறுக்கப்பட்ட முறைப்படி வெவ்வேறு பதவிகள், அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
  • சட்டம் இயற்ற சட்டசபை/நாடாளுமன்றம்,
  • நிர்வாகத்தை நடத்த அரசு அதிகாரிகள்,
  • வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்க நீதிமன்றம்,
  • இவை எல்லாவற்றையும் கண்காணிக்க ஊடகத் துறை,
  • நாட்டுக்கு பாதுகாப்புக்கு படைகள்
    என்று பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.
இந்த அமைப்பை ஏற்றுக் கொண்ட மக்கள் அனைவரும் வகுக்கப்பட்ட நெறிமுறைப்படி வேலைகள் நடக்கும் என்று நம்பி தமது தொழில், தனி வாழ்க்கையை கவலையின்றி பார்க்கலாம்.

பக்கத்து வீட்டுக்காரருடனோ, மாற்று குழுவினருடனோ கருத்து வேறுபாடு வந்தால், 'அவர் ஆள் திரட்டி தனக்கு வேண்டியதை சாதித்துக் கொள்வார்' என்ற அச்சமில்லாமல், இரண்டு பேரும் ஏற்கனவே நியமிக்கப்பட்ட நீதித் துறையை அணுகி பாரபட்சமற்ற தீர்ப்பைப் பெற முடியும் என்று நம்பிக்கையுடன் இருக்க முடியும்.
  1. 'நீதிமன்றமாவது ஒன்றாவது, மக்களின் நம்பிக்கைக்கு முன்பு வேறு எதுவும் நிற்கக் கூடாது. ஆளைத் திரட்டி நாங்கள் அவமானம் என்று கருதும் ஒரு கட்டிடத்தை இடித்துப் போடுவோம். எங்கள் கருத்தை ஏற்காத மக்களைப் பற்றி எங்களுக்குக் கவலை இல்லை' என்று செயல்பட்டவர்கள் (அத்வானி தலைமையிலான கூட்டம்) அரசியலமைப்பை அசைத்துப் பார்த்தார்கள்.

    அவர்கள் செய்ததை எப்படி நியாயப்படுத்துகிறீர்கள்?
    என் முடி அலங்காரம் பிடிக்கவில்லை என்று நான்கு தெருவில் இருக்கும் மக்கள் கூட்டமாக வந்து எனக்கு மொட்டை அடித்து விட்டால் அதுவும் நியாயமாகி விடும்.

  2. 'குறிப்பிட்ட நபர் தீவிரவாதி என்று நான் தீர்மானித்தேன். அவர் சட்ட விரோதமாக ஆயுதங்கள் பதுக்கி வைத்திருக்கிறார் என்று நான் தீர்மானித்தேன். அதனால் அவரைக் கொன்று விட்டோம். அது சரிதான் என்று கூட்டத்தினரை கூச்சலிட வைப்பேன்' என்று சொன்னவர் (நரேந்திர மோடி), தான் பாதுகாப்பதாக பிரமாணம் செய்து பதவி ஏற்ற அரசியல் சட்டத்தை உடைத்தார்.

  3. 'குறிப்பிட்ட நிகழ்ச்சி, குறிப்பிட்ட குழுவினரால் வேண்டுமென்றே செய்யப்பட்டது என்று நான் நினைத்தேன், அதனால் அந்தக் குழுவினரைச் சார்ந்த பெண்கள், குழந்தைகள், அப்பாவிகள் என்று எல்லோரையும் கொன்று குவிக்க கூட்டம் வெறி கொண்டு திரிந்த போது, அதிகாரத்தில் இருந்த நான் முகத்தைத் திருப்பிக் கொண்டேன். கொஞ்சம் ஆதரவும் கொடுத்தேன். அப்படி இருந்தால்தான் நாட்டில் அமைதி நிலவும்' என்று சொல்லும் முதலமைச்சர் (நரேந்திர மோடி) இந்திய இறையாண்மையை உடைத்துப் போட்ட பெருங்குற்றவாளி.
இந்த வாதங்களில் என்ன தவறு என்று பொறுமையாக விளக்கினால் நன்றியுடையவனாக இருப்பேன்.

தொடர்புடைய முந்தைய இடுகைகள்

திங்கள், டிசம்பர் 10, 2007

புதுச்சேரி வலைப்பதிவர் பட்டறை - சில குறிப்புகள்

விபரங்கள் வினையூக்கியின் இந்தப் பதிவில்

செல்லாவின் நச் கவரேஜ்
பாண்டி வலைப்பதிவர் பட்டறையில் கைதட்டல் வாங்கிய முத்துராஜின் கவிதை வாசிப்பு
புதுவை பட்டறை பற்றிய என் கருத்துக்கள்!
நிறைவோடு விடைபெறுகிறேன் பாண்டியிலிருந்து
புதுவை வலைப்பதிவர் பட்டறை நேர்முக புகைப்பட ஒளிபரப்பு !!

அதிகாலை சென்னையிலிருந்து புறப்பட்டு நந்தாவும், வினையூக்கியும் நானும் ஒன்பது மணி வாக்கில் (வாடகை) காரில் பாண்டிச்சேரி சற்குரு உணவகத்தை அடைந்தோம். சாப்பிடப் போகும் இடத்தில் முகுந்த், ஓசை செல்லா உட்கார்ந்திருந்த மேசையில் சேர்ந்து கொண்டோம்.

நல்ல திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரல், தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர்வமான பங்கேற்பாளர்கள்.

இரா சுகுமாரன் நிகழ்ச்சியைத் துவங்கி வைத்து உரை ஆற்ற, முகுந்த் தமிழ் எழுத்துருக்கள், e-கலப்பை குறித்து பேசினார். அதைத் தொடர்ந்து சுகுமாரன் குறள் மென்பொருளைக் குறித்து விளக்கினார்.

தொடர்ந்து தமிழ்99 முறையில் தட்டச்சிடுவது குறித்துப் பேச முனைவர் இளங்கோவன் வந்தார். அதில் என்னையும் சேர்ந்து கொள்ளச் சொன்னார். மிக நேர்த்தியாகத் திட்டமிட்டு ஆற்றொழுக்காகப் போயிருக்க வேண்டிய அந்த அறிமுகத்தில் என்னுடைய குறுக்கீடுகளும் சேர்ந்தன. வகுப்பறை போன்ற சூழல் உருவாகி விடக் கூடாது என்று முனைந்து கொஞ்சம் un-conference பாணியைக் கொண்டு வர முயன்றோம்.

இயங்கு தளங்களைக் குறித்த அமர்வின் முன்னுரையில் சூடான விவாதத்துக்கு ஒரு அடித்தளம் அமைந்து விட்டது. ஆமாச்சு என்று ஸ்ரீராமதாஸ் கலகலப்பாக பேசி கூட்டத்தில் சலசலப்பை உருவாக்கினார். உபுண்டு லினக்சு பற்றிய அவரது 10 நிமிட ஆரம்பத்திற்கு அப்புறம் சூழல் பரபரப்பாக மாறி விட்டது. முகுந்த் 'மாற்றுக் கருத்தையும் தெரிவிக்க வேண்டும்' என்று ஓரிரு நிமிடங்கள் மைக்ரோசாப்டு நிறுவனத்தின் பங்களிப்பையும் கவனிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். அதற்கு மேலும் அந்த அரசியல் தத்துவ விவாதத்தை வளர்க்க வேண்டாம் என்று உபுண்டுவில் தமிழ் இடைமுகம், பயன்பாடுகள் என்று ராமதாஸ் இறங்கினார்.

அந்த அரை மணி நேர அமர்வின் இறுதியில் 'உபுண்டு குறுவட்டு, நிறுவும் விளக்கக் கையேடு அடங்கிய பொதியை விருப்பமிருப்பவர்கள் எடுத்துக் கொள்ளலாம். முடிந்த அளவு காணிக்கை போடலாம்' என்று அறிவித்தார் ராமதாஸ். அடுத்த சில நிமிடங்களிலேயே 50 பொதிகளும் ஆர்வலர்களால் எடுத்துக் கொள்ளப்பட்டு விட்டன.

இணையத்தில் தமிழ் இதழ்கள், இணையத் தமிழ் இதழ்கள், தமிழ் வலைத்தளங்கள் என்று ஒரு தொகுப்பை முனைவர் இளங்கோவன் வழங்க அத்துடன் உணவு இடைவேளை வந்தது. இலை போட்டு வடை பாயாசம், இனிப்புடன் சாப்பிட்டு விட்டு மதிய அமர்வுகள்.

பேராசிரியர் இளங்கோ வலைப்பதிவு என்றால் என்ன, எப்படி பிளாக்கர் மூலம் ஒரு கணக்கு ஆரம்பித்து பதிய ஆரம்பிக்கலாம் என்று கச்சிதமாக விளக்கினார். அவரது அமர்வின் ஆரம்பத்தில் 'கூடவே கணினியில் செய்முறை பயிற்சியும் ஆரம்பித்து விடலாமா' என்று நாங்கள் கேட்டது கொஞ்சம் அதிகப்படியாகப் போய் அவர் சூடாக பதிலளித்தார். அவரது உரையைத் தொடர்ந்து மக்கள் கணினிகளைச் சூழ்ந்து கொண்டு ஜிமெயில், பிளாக்கர், பதிவுகள் என்று அலையில் கால் நனைத்தார்கள்.

தொழில் நுட்ப அமர்வுகளாக, திரட்டிகளில் இணைத்தல், ஒலி ஒளி இடுகைகள், செய்தியோடைகள், வோர்ட்பிரஸ் பயன்பாடு என்று பலனுள்ள அமர்வுகள் தொடர்ந்தன.

மொத்தத்தில் கலந்து கொண்டவர்கள் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய பட்டறை. கல்லூரி தமிழ்த் துறை மாணவிகள், பேராசிரியை, தமிழ் ஆர்வலர்கள் என்று பல பெண்கள் மிக ஆர்வத்துடன் மின்னஞ்சலையும், வலைப்பதிவையும் உருவாக்கி இணைய உலகிற்குள் அடி எடுத்து வைக்க வழி செய்து கொடுத்த நிகழ்ச்சி.

சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த புதுவை நண்பர்கள், அருமையான அமர்வுகளை வழங்கிய இளங்கோவன், இளங்கோ, செறிவூட்டிய ஓசை செல்லா, முகுந்த், வினையூக்கி, நந்தகுமார், உபுண்டு ஆமாச்சு, நான் என்று நிறைவான ஒரு நாள்.

பின்குறிப்பு
கோவை, சென்னை, புதுவை - மூன்று பட்டறை கண்டவர்கள் என்ற சிறப்புத் தகுதி பெற்றவர்கள் மா சிவகுமார், வினையூக்கி மற்றும் முகுந்த். கழகங்களின் மேடைப் பேச்சாளர், இலக்கிய உலகின் பட்டிமன்ற பேச்சாளர் என்று வரிசையில் 'பட்டறை பேச்சாளர்' என்று ஒன்றை உருவாக்கும் காலம் வந்து விட்டது என்று தோன்றுகிறது.

வியாழன், டிசம்பர் 06, 2007

நரேந்திர மோடி என்ற கிரிமினல்

Addressing an election meeting at Mangrol in South Gujarat yesterday, Modi questioned the crowd as to what should have been done to a man who dealt with illegal arms and ammunition, to which it shouted back "kill him".

குஜராத்தின் வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம், திறமையான நிர்வாகம் என்ற பசுத் தோல்களைப் போர்த்திக் கொண்டு வந்த ஓநாயின் காதுகள் வெளியே தெரிகின்றன.

சமூக சட்டங்களுக்கு மதிப்பளிக்காமல் கூட்ட நீதி (mob justice) கலாச்சாரத்தில் கொடுமைகள் நிகழ்த்தும் மோடியின் கொட்டம் அடங்க வேண்டும்.

மனித குலத்துக்கு எதிரான குற்றங்களை இழைத்தவர் என்று குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு உரிய தண்டனை வழங்கப்பட்டு சாகும் வரை சிறைச்சாலையில் வாட அல்லது நாடு கடத்தப்பட வேண்டியவர்கள் மோடி போன்ற அரசியல்வாதிகள்.