வெள்ளி, ஆகஸ்ட் 30, 2019

சாதிய பிரச்சனை, வினவின் பிரச்சனை

1. கடந்த காலத்தில் ம.க.இ.க, வி.வி.மு தோழர்கள் களத்தில் நடத்திய வீரியமான போராட்டங்களை யாரும் மறக்க முடியாது, மறுக்கவும் முடியாது. நீங்களும் கார்த்திகேயனும் கொடுத்த பட்டியலுடன் ம.க.இ.க மையக் கலைக்குழுவின் பாடல்களை, குறிப்பாக 11 இசைப் பேழைகளை சேர்த்துக் கொள்ளுங்கள். மேலும், புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம், பின்னர் வினவு மூலம் தி.மு.க/தி.க நீர்த்துப் போக வைத்து விட்ட பெரியாரின் பார்ப்பனீய எதிர்ப்பு அரசியலை தமிழகத்தில் தொடர்ந்து உயிர்த்திருக்கச் செய்த பணியை, குறிப்பாக 2014 தேர்தலுக்கு முன்பு தமிழ்நாட்டில் மோடி எதிர்ப்பு அரசியலை செயலூக்கத்துடன் எடுத்துச் சென்றதை சேர்த்துக் கொள்ளுங்கள். இவ்வாறு இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

2. இங்கு அது இல்லை விவாதம். வினவு ரஞ்சித் பற்றிய தனது பதிலில் சொல்லியிருப்பது, “தலித் மக்கள் தொடர்பான பிரச்சினை பல்வேறு அரசியல் சமூக பொருளாதார விசயங்களோடு தொடர்புடையது. அவற்றோடு களத்தில் இருக்கும் சமூக அரசியல் இயக்கங்களின் பார்வை நடைமுறையோடு தொடர்புடையது. இவற்றை கற்பது, கற்று ஆய்வது என்பது ஒரு தனிநபராக செய்வது வெகு சிரமம்.”

அதாவது ‘இந்தியாவின் சாதிய பிரச்சனை பற்றி கற்பது, கற்று ஆய்வு என்பது ஒரு தனிநபராக செய்வது வெகு சிரமம்’ என்கிறது வினவு. ஆனால், வினவின் அமைப்பு ரீதியான சாதி பற்றிய ஆய்வும் கோட்பாடும் மிகவும் மேலோட்டமானது; மூலதனம் நூலை எழுதுவதற்காக மார்க்ஸ் எழுதிய Grundrisse என்ற முதல் பிரதியின் (first draft) குறிப்புகளை பிரதானமாக பயன்படுத்தி செய்யப்பட்டது. (பார்க்கவும் – இந்தியாவின் சமுதாயப் பொருளாதாரப் படிவம்).

அந்த நூலில் மார்க்ஸ் எழுதிய குறிப்புகள் முதலாளித்துவ கூலி உழைப்பாளிக்கும் அதற்கு முந்தைய சமூகங்களில் உழைப்பாளர்களுக்கும் இடையேயான வேறுபாட்டை காட்டுவதற்கானவை. ஆனால், அதன் ஊடாக மார்க்ஸ் முதலாளித்துவத்துக்கு முந்தைய சொத்துடைமையில் ரோமானிய, ஜெர்மானிய, இந்திய வடிவங்களுக்கு இடையேயான வேறுபாட்டை பல இடங்களில் சுட்டிக் காட்டியிருக்கிறார். அதில் இந்திய வடிவத்தின் தனிச்சிறப்புகளைச் சொல்லியிருக்கிறார். அதிலிருந்து ஆரம்பித்து இந்தியாவில் சாதி பற்றிய பருண்மையான ஆய்வை செய்திருக்க முடியும்.

ஆனால், 1980-களில் எழுதப்பட்ட அந்த ஆவணம் அத்தகைய ஆய்வு எதையும் செய்யவில்லை. 1940-களுக்கு முன்பே அம்பேத்கர் செய்து முடித்து விட்ட சாதி பற்றிய ஆய்வுகளை பொருட்டாகக் கூட எடுத்துக் கொள்ளவில்லை. மாறாக, இந்தியாவின் முதலாளித்துவத்துக்கு முந்தைய சமூகம் சாராம்சத்தில் ரோமானிய, ஜெர்மானிய சமூகங்களில் இருந்து வேறுபட்டது இல்லை (இயற்கை சார் உற்பத்தி, எளிய மறுஉற்பத்தி, உழைப்பாளி நிலத்தோடு பிணைக்கப்பட்டிருப்பது போன்றவை), இந்திய சமூகம் காலனிய ஆட்சிக்குப் பிறகு அரை நிலப்பிரபுத்துவமாக மாறி விட்டது என்று முடித்துக் கொண்டது. சாதியக் கட்டமைப்பு பற்றிய பருண்மையான வரலாற்று அடிப்படையிலான ஆய்வைச் செய்யவில்லை.

அதற்குப் பிந்தைய 30 ஆண்டுகளில் வெளியான சாதி பற்றிய பல ஆய்வுகளை “பின்நவீனத்துவம்” “அடையாள அரசியல்” என்று முத்திரை குத்தி புறக்கணித்து தான் எடுத்த “அரை நிலப்பிரபுத்துவம்” என்ற கோட்பாட்டிலேயே இன்று வரை நிற்கிறது வினவு/புதிய ஜனநாயகம்/புதிய கலாச்சாரம். இவ்வாறாக 35 ஆண்டுகளாக அமைப்பாகச் செயல்பட்ட வினவு சாதி பற்றிய ஒரு புரட்சிகர கோட்பாட்டை உருவாக்கத் தவறியிருக்கிறது. [இதைப் பற்றி இன்னும் விரிவாக வேறொரு சந்தர்ப்பத்தில் பேசலாம்]

3. எனவே, 1-ல் சொன்ன ம.க.இ.க-வின் பார்ப்பனீய எதிர்ப்பு என்பது திராவிட அரசியல் எல்லையைத் தாண்டி புரட்சிகர பரிமாணத்தை பெற முடியவில்லை. எனவே, சாதி ஒழிப்புக்கான பாதையை உருவாக்கவோ, சாதியப் பிரச்சனைகளுக்கு முகம் கொடுப்பதற்கான சக்தியாக உருவெடுக்கவோ முடியவில்லை.

இன்றைய (2019) நிலையில் கூகை, casteless collective போல ஒரு ஜனநாயக வெளியை ஏற்படுத்தும் போராட்டத்திலோ, நீலம் பண்பாட்டு மையம் போல சாதி எதிர்ப்புப் போராட்டத்திலோ வினவோ, ம.க.இ.கவோ இல்லை என்பது யதார்த்தம். அதற்குக் காரணம் மேலே சொன்ன கோட்பாட்டு ஓட்டாண்டித்தனம்.

4. சாதி ஆணவம் என்பது தன்னை அறியாமல் கூட ஒருவருக்கு வரலாம். அதுவும் இந்தியாவில் பிறந்த ஒவ்வொருவருக்கும் சாதி என்ற மலம் உள்ளே ஒட்டிக் கொண்டே இருக்கிறது. சாதியை கோட்பாட்டு ரீதியாக புரிந்து கொண்டு (அம்பேத்கரை படித்து, பரியேறும் பெருமாள் போன்ற படைப்புகளை பார்த்து) தொடர்ந்து சுயவிமர்சனம் செய்து கொள்வதன் மூலம்தான் அதன் துர்நாற்றத்தை துரத்த முடியும். வினவு அதில் தவறியிருக்கிறது என்று சொல்கிறேன்.

5. மற்றபடி, என்னுடைய பின்னூட்டத்திலிருந்து தனியாகப் பிரித்து நீங்கள் பட்டியல் இட்டிருக்கும் சொற்களை வாக்கியங்களோடு சேர்த்தே படித்துப் புரிந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.

(இது ரஞ்சித் பற்றிய வினவின் கேள்வி-பதில் பதிவில் போட்ட மறுமொழி)

வியாழன், ஆகஸ்ட் 29, 2019

வினவின் குறுங்குழுவாத சிந்தனைகள்

இயக்குனர், சமூக செயல்பாட்டாளர் ரஞ்சித் பற்றிய வினவின் இந்தக் கேள்வி-பதிலில் (சுட்டி கீழே) சாதி ஆணவமும், வன்மமும், திமிரும், நயவஞ்சகமும் சொட்டுகிறது. அது பற்றிய 4-வது மற்றும் கடைசி பதிவு.

4. வினவின் குறுங்குழுவாத சிந்தனைகள்

//அவரது முயற்சிகளில் பங்கேற்கும் பொதுவானவர்களில் பெரும்பாலானோர் அவரது திரைப்பட பிம்பத்தை மையமாக வைத்து திரையுலகில் தனக்கொரு இடம் கிடைக்காதா என்று வருகின்றனர். இது ரஞ்சித்துக்கும் தெரியாமல் இருக்காது.//

ரஞ்சித்துடன் இருப்பவர்கள் மீது முத்திரை குத்தும் குள்ளநரித்தனம், இது.

//இருப்பினும் யாராக இருப்பினும் தனிநபராக சமூகப் பிரச்சினைக்கு தீர்வு காண முயலும்போது முதல் சுற்றில் பெரும் நம்பிக்கையும், உத்வேகமும் இருக்கும். அடுத்த சுற்றுகளில் அந்த நம்பிக்கை சமூக யதார்த்தத்தால் கொஞ்சமோ நிறையவோ விரக்தியடையும். பிறகு ஊரோடு ஒத்து வாழ் என்று ‘முதிர்ச்சி’ அடையும்.//

கூட்டாக சேர்ந்து தீர்வு காண முயற்சித்த வினவு “ஊரோடு ஒத்து வாழ் என்று 'முதிர்ச்சி'” அடைந்திருக்கிறது; பொதுவானவர்களிடம் நன்கொடை பெற்றுக்கொண்டுதான் இயங்குகிறது. மேலும், புரட்சிகர உள்ளடக்கத்தை மட்டுமின்றி வடிவத்தையும் அத்தகைய பாசாங்கையும் கூட கைவிட்டு ஒரு செய்திப் பெட்டகமாக காலம் தள்ளிக் கொண்டிருக்கிறது.


//இந்தச் சரணடைவு ஏதோ திரைப்பட பிரபலம் மற்றும் தலித் அரசியல் பேசுவோருக்கு மட்டும் நடப்பதல்ல. மார்க்சியத்தை தனிநபராக ‘தூக்கிச் சுமக்கும்’ தனிநபர்களும் கூட இப்படித்தான் வீழ்கிறார்கள். மற்றவர்களை விட மார்க்சிய தனிநபர்வாதிகளிடம் பேச்சும் எழுத்தும் கொஞ்சம் அதிகமிருக்கலாம். என்ன இருந்தாலும் ஏதோ கொஞ்சம் ‘தத்துவம்’ படித்தவர்கள் அல்லவா?//

கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டத்தில் கோவிந்தா போடும் கோஷ்டிகளாக மாறி விடுவது இது போன்ற அபத்தக் களஞ்சியங்களால்தான்.

முதன்மையான கேள்வி தனிநபரா, அமைப்பா என்பது இல்லை. சரியானதா, தவறானதா, புரட்சிகரமானதா, தேங்க வைப்பதா என்பதுதான் முதன்மையானது. அந்தக் கேள்விக்கு சரியான பதிலை வகுத்துக் கொண்டு நடைமுறையில் செயல்படும் அமைப்புதான் புரட்சிகர அமைப்பாக இருக்க முடியும். அந்த வகையில் தனிநபராக இருந்தாலும் ரஞ்சித் சரியான பிரச்சனையைப் பற்றி பேசுகிறார், சமூகத்தில் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்கு போராடுகிறார். வினவு அமைப்பாக இருந்தாலும் தவறாக பேசுகிறது, தேக்கத்தை நோக்கிச் செலுத்துகிறது.

"உன் கண்ணுல ஒரு பதட்டம் இருக்கு. காலு தரையில நிக்கல. மொத்தத்துல நீ நீயா இல்ல. முதல்ல நில்லு.அப்புறமா வந்து நீ சொல்ல வேண்டியத சொல்லு" என்று ஒரு படத்தில் சூர்யாவிடம் அவரது காதலி சொல்வது போல வினவு நிதானத்தில் இல்லை என்று மட்டும் நன்றாகத் தெரிகிறது.

சுட்டி

வினவின் அமைப்புரீதியான கையாலாகத்தனமும் ரஞ்சித்தின் 'தனிநபர்'வாத செயல்பாடுகளும்

இயக்குனர், சமூக செயல்பாட்டாளர் ரஞ்சித் பற்றிய வினவின் இந்தக் கேள்வி-பதிலில் (சுட்டி கீழே) சாதி ஆணவமும், வன்மமும், திமிரும், நயவஞ்சகமும் சொட்டுகிறது. அது பற்றிய 3-வது பதிவு.

 3.
சாதிய பிரச்சனையில் வினவின் அமைப்புரீதியான கையாலாகத்தனமும் ரஞ்சித்தின் 'தனிநபர்'வாத செயல்பாடுகளும்

//ரஞ்சித் அப்படிப் பேசுவதற்கு காரணம் பிரச்சினையை அவர் தனிநபர் கண்ணோட்டத்தோடு பார்ப்பதுதான். அதுதான் உடனடியான கோபங்களையும், உடனடியான தீர்வுகளையும், மற்றவர்கள் அதாவது இயக்கங்கள் அனைத்தும் சரியில்லை என்ற எண்ணத்தையும் தோற்றுவிக்கிறது. அவரது பிரபலம், இந்தத் தன்மைக்கு இன்னும் வலு சேர்க்கிறது.//

சாதியப் பிரச்சனையைப் பொறுத்தவரையில், எனவே இந்திய சமூக மாற்றத்துக்கான போராட்டத்தைப் பொறுத்தவரையில் கம்யூனிச “இயக்கங்கள் அனைத்தும் சரியில்லை" என்பது உண்மை. அந்த உண்மை அப்படிப்பட்ட எண்ணத்தைத் தோற்றுவிக்கிறதே தவிர, இந்த எண்ணம் ஒரு தனிநபரின் கற்பனையில் தோன்றிய ஒன்று இல்லை.

//சமூகப் பிரச்சினைகளுக்கு தீர்வென காஸ்ட்லெஸ் கலெக்டிவ் கலை விழாக்கள், கூகை முயற்சிகள் என்று தனது வருமானத்தை போட்டு செய்கிறார். பயிற்சி பட்டறைகள் நடத்துகிறார். இதன் மூலம் ஒரு மாற்றை உருவாக்க முடியும் என்று கூட அவர் யோசிக்கலாம்.//

ரஞ்சித்தின் கூகை உருவாக்கியிருப்பது ஒரு ஜனநாயக வெளி. நீலம் பண்பாட்டு மையத்தின் செயல்பாடுகளும், ரஞ்சித்துடன் நேரடி தலையீடுகளும் இன்றைய நமது சமூகத்தில் ஜனநாயகத்தை உருவாக்குவதற்கான முக்கியமான போராட்டமாக உள்ளன.
கச்சநத்தத்திற்கு ரஞ்சித் போனதன் பின்னர்தான் மீடியா வெளிச்சம் வந்தது. சமீபத்தில் கூட ஒரு தலித் சிறுவன் தூக்கிலிடப்பட்ட போது மீடியா வெளிச்சம் கூட கிடைக்கவில்லை. அந்தக் குடும்பத்திற்கு நீலம் பண்பாட்டு மையம் சார்பாக இழப்பீடு வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். ஒரு கிராமத்தில் SC குடியிருப்பு தீக்கிரையாக்கப்பட்ட போதும், நீலம் பண்பாட்டு மையம் இழப்பீடு வாங்கி கொடுத்திருக்கிறது.


35 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் மக்கள் கலை இலக்கியக் கழகம் போன்ற கலாச்சார அமைப்புகள் கூகை போன்ற ஒரு ஜனநாயக வெளியையோ, நீலம் பண்பாட்டு மையம் போன்ற சாதிக் கொடுமைகளுக்கு எதிரான செயல்பாட்டு அமைப்பையே உருவாக்க முடியவில்லை என்பது கசப்பான உண்மை. அதைப் பற்றிய சுயவிமர்சனத்துக்குப் பதிலாக வினவு ரஞ்சித் மீது தனது பொச்சரிப்பை வாரிக் கொட்டுகிறது.

இந்தியா போன்ற ஒரு நாட்டில் ஜனநாயகத்துக்கான போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் அனைத்து பிரிவினரையும் இணைத்துக் கொண்டு செயல்பட வேண்டிய கம்யூனிஸ்டு கட்சி, வரலாறு முழுவதும் இப்படித்தான் வறட்டுவாதம் பேசிக் கொண்டிருந்தது. ரஞ்சித் அம்பேத்கர், பெரியார் அளவிலான செயல்பாட்டாளரா சிந்தனையாளரா என்பதைப் பற்றி கேள்வி கேட்கவும், விமர்சிக்கவும் சமூக அக்கறை கொண்ட யாருக்கும் உரிமை உள்ளது. ஆனால் விமர்சனம் என்ற பெயரில் அவரை அணுகும் வினவு பின்பற்றும் முறை சுத்தமான அக்மார்க் இந்திய 'கம்யூனிஸ்டு' முறை. இத்தகைய கண்ணோட்டம் சிபிஐ/எம்களில் நிலவுவது பற்றி வினவு முன்பு பேசியது இப்போது அவர்களுக்கே பொருந்துவது வேறொரு உண்மையைச் சொல்கிறது.

சுட்டி

சாதிய பிரச்சனையில் வினவின் அரசியல் ஓட்டாண்டித்தனம்

இயக்குனர், சமூக செயல்பாட்டாளர் ரஞ்சித் பற்றிய வினவின் இந்தக் கேள்வி-பதிலில் (சுட்டி கீழே) சாதி ஆணவமும், வன்மமும், திமிரும், நயவஞ்சகமும் சொட்டுகிறது. அது பற்றிய 2-வது பதிவு.

2. சாதிய பிரச்சனையில் வினவின் அரசியல் ஓட்டாண்டித்தனம்

//சில திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். அவற்றில் இரண்டு ரஜினி படங்கள். அவர் பிரபலமாவதற்கு இது போதும். கூடவே ரஜினி பட இயக்குநர் என்ற அளவில் ஊதியமும் பெறுகிறார். இப்போது அவரிடம் கொஞ்சம் நிதியாதாரம் சேர்கிறது.//

ரஜினி படத்தை இயக்குவதற்கு முன்பே ரஞ்சித் தனக்கென ஒரு பாதையை உருவாக்கிக் கொண்டவர் (மெட்ராஸ்). அதனால், ரஞ்சித்துக்குக் கிடைத்த பிரபலம் அவருடைய சமூகப் பார்வைக்கும், திறமைக்கும், செயல் திறனுக்கும் கிடைத்த பரிசுதானே தவிர, ரஜினியின் பிரபலத்திலிருந்து ஒட்டிக் கொண்ட ஜிகினா இல்லை.

//இரண்டும் சேர்ந்து அவருக்கென ஒரு தனிநபர்வாதப் பார்வையை உருவாக்குகிறது. பிறகு மேடைகளில் பேசுகிறார்.//
ரஞ்சித், தனது படங்களிலும், பேச்சுக்களிலும் ஒவ்வொரு இடத்திலும் மிகத் தெளிவாக தன்னுடைய அரசியல் அம்பேத்கர் முன் வைத்த சாதி ஒழிப்பு அரசியல் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார், அதில் என்ன தனிநபர்வாதப் பார்வையைக் கண்டது, வினவு?

//வாய்ப்பு வரும்போது தலித் மக்கள் தொடர்பான பிரச்சினைகளில் யாரும் எதுவும் செய்யவில்லை எனத் துவங்கி தலித் அடையாள அரசியலை முன்வைக்கிறார். சில சமயம் அவருக்கு வரும் எதிர்வினைகள் கடுமையாக இருக்கிறது. அதனால் அடுத்தமுறை பேசும்போது இன்னும் கொஞ்சம் முதிர்ச்சியாக பேசுகிறார்.//

"தலித் மக்கள் தொடர்பான பிரச்சினைகளில் யாரும் எதுவும் செய்யவில்லை" என்பதை மறுக்கும் வகையில் வினவு சார்ந்திருக்கும் அரசியல் கட்சி செய்தவற்றை பட்டியலிட்டால், ரஞ்சித்தின் செயல்பாடுகளோடு அவற்றை ஒப்பிட்டு பரிசீலித்திருந்தால் நேர்மையானதாக இருந்திருக்கும்.

//தலித் மக்கள் தொடர்பான பிரச்சினை பல்வேறு அரசியல் சமூக பொருளாதார விசயங்களோடு தொடர்புடையது. அவற்றோடு களத்தில் இருக்கும் சமூக அரசியல் இயக்கங்களின் பார்வை நடைமுறையோடு தொடர்புடையது.//

அதாவது அரசியல், சமூக, பொருளாதார விஷயங்கள் எல்லோருக்கும் புரியாதாம். வினவு அரசியல், சமூக, பொருளாதார விஷயங்களை புரிந்து கொண்டு நடைமுறையோடு தொடர்புடைய பார்வை வைத்திருக்கிறார்களாம். அது என்ன புண்ணாக்கு பார்வை என்று சொல்வதற்குக் கூட தெம்பு இல்லை.

//இவற்றை கற்பது, கற்று ஆய்வது என்பது ஒரு தனிநபராக செய்வது வெகு சிரமம்.//
இந்தியாவில் சாதி பற்றி பல்வேறு கட்சிகள் கூட்டாகச் சேர்ந்து கும்மி அடித்ததை விட அண்ணல் அம்பேத்கர் தனிநபராக பல மடங்கு அதிகமாகவும், சிறப்பாகவும் கற்று ஆய்வு செய்திருக்கிறார். அம்பேத்கரின் "இந்தியாவில் சாதிகள்”, "சாதி ஒழிப்பு" இவற்றின் மீதான ஆய்வு முறையிலான விமர்சனக் கட்டுரை ஒன்றையாவது வினவு காட்ட முடியுமா? அல்லது இந்த அறிவு சாதனைகளுக்கு இணையாக சாதி பற்றி கம்யூனிஸ்ட் கட்சி ஒன்று எழுதிய ஆய்வுக் கட்டுரையை (குறிப்பாக அம்பேத்கரின் சமகாலத்தில்) சொல்ல முடியுமா? [இதைப் பற்றி தனியாக விரிவாக விவாதிக்க வேண்டியிருக்கிறது]

சுட்டி
கேள்வி பதில் : பா. ரஞ்சித் – தமிழ் அமைப்புகள் – வலது, இடது கம்யூனிஸ்ட்டுகள் !

வினவின் சாதி-ஆணவம்

இயக்குனர், சமூக செயல்பாட்டாளர் ரஞ்சித் பற்றிய வினவின் இந்தக் கேள்வி-பதிலில் (சுட்டி கீழே) சாதி ஆணவமும், வன்மமும், திமிரும், நயவஞ்சகமும் சொட்டுகிறது. அவற்றை 4 பகுதிகளாக பார்க்கலாம்.

1. வினவின் சாதி-ஆணவம்

//இயக்குநர் ரஞ்சித் எப்போதும் சீற்றம் கொள்வதில்லை, தலித் மக்கள் தொடர்பான பிரச்சினைகள் என பொதுவெளியில் பிரபலமாகும் சிலவற்றில் மட்டும் சீற்றம் கொள்கிறார். அது சரியா என பார்ப்பதும் அவர் ஏன் அப்படி சீற்றம் கொள்கிறார் என்று பார்ப்பதும் வேறு வேறு இல்லை. சரி, ஏன் சீற்றம் கொள்கிறார்?//

எழுத்தாளர் டோனி மாரிசன் / இயக்குனர் ரஞ்சித்
சாதி தலித் மக்கள் தொடர்பான பிரச்சனை அல்ல. அது இந்திய சமுகத்தின் மொத்தத்தையும் காவு வாங்கி வரும் பிரச்சனை. மொத்த சமுகத்தையும் பின் தங்க வைத்திருக்கும் பிரச்சனை.
சாதியப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வக்கற்று இருப்பவர்களுக்கிடையில் அதற்கு முகம் கொடுத்து எதிர்வினையாற்றும் ரஞ்சித்தை தலித் மக்கள் தொடர்பான பிரச்சினைகளில், அதுவும் பிரபலமாகும் பிரச்சினைகளில் மட்டும் தலையிடுகிறார் என்று கூறுகிறது, வினவு. அதாவது 'ரஞ்சித்துக்கு சாதியை தவிர வேறு எதுவும் தெரியாதுங்க, எப்ப பார்த்தாலும் அதையே தான் பேசிட்ருப்பாரு' என்கிற சாதி வெறியர்களின் கருத்தைதான் இவர்களும் வேறு வடிவத்தில் வேறு வார்த்தைகளில் சொல்கிறார்கள்.

இது தொடர்பாக சமீபத்தில் கருப்பின மக்களின் வாழ்க்கை பற்றிய இலக்கியங்களை படைத்த அமெரிக்க எழுத்தாளர் டோனி மாரிசனின் பேட்டி ஒன்றை பாருங்கள். (சுட்டி கீழே)
"எப்போது வெள்ளையின மக்களைப் பற்றிய இலக்கியத்தை எழுதப் போகிறீர்கள்" என்று டோனி மாரிசனிடம் கேட்கிறார், பத்திரிகையாளர். அதற்கு டோனி மாரிசனின் பதில்? “இது எவ்வளவு மோசமான இனவாதம் நிரம்பிய கேள்வி என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா?"

"ரஞ்சித் தலித் மக்கள் தொடர்பான பிரச்சனைகள் பற்றி மட்டும் சீற்றம் கொள்கிறார்" என்பது "எவ்வளவு மோசமான சாதிஆணவம் நிரம்பிய கருத்து என்பதை" வினவு உணர முடியாததற்குக் காரணம் உள்ளது.

“நான் ஏற்கனவே மையமான சமூகப் பிரச்சனைகளைத்தான் எழுதிக் கொண்டிருக்கிறேன" என்கிறார், டோனி மாரிசன். அது போல சாதி பிரச்சனைகளுக்கு ஜனநாயக ரீதியான எதிர்வினை ஆற்றுவதன் மூலம் ரஞ்சித் ஏற்கனவே சமூகத்தின் மையமான பிரச்சனைகளுக்காகத்தான் சீற்றம் கொள்கிறார். அதைப் புரிந்து கொள்ள முடியாத வினவுக்கு அது "தலித் மக்கள் தொடர்பான பிரச்சனைகள் மட்டும்" என்று தெரிகிறது. இதற்கு அடிப்படையாக இருப்பது சாதிப் பிரச்சனைக்கு “அரை நிலப்பிரபுத்துவம்" என்று வினவு பூசிக் கொண்டிருக்கும் ஐரோப்பிய புனுகு.

சுட்டி