வியாழன், ஜூன் 28, 2007

விவசாயி - என்னதான் தீர்வு (தொடர்ச்சி)

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்.

விவசாயம் செய்யும் நண்பர் ஒருவரின் குமுறல்.

"ஒரு வருட கால அவகாசம் உள்ள ஒரு விவசாய விளைபொருள் நாட்டில் எவ்வளவு பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது? சராசரி எதிர்பார்க்கும் உற்பத்தி எவ்வளவு?நாட்டில் உள்ள சர்க்கரை ஆலைகளின் அறவைத்திறன் எவ்வளவு?விவசாயிக்கு நட்டம் வராத வகையில் அறவை நடக்க என்ன செய்யலாம்? (என்ன செய்தது அரசு?)

இன்றைய கணினி யுகத்தில் மேற்கண்ட கேள்விகளுக்கு பதிலை திரட்டி தக்க நடவடிக்கை எடுக்கமுடியாதா?முடியாதெனில் நாடு கணினி மயமாவதில் பயன் தான் என்ன? விவசாயி மீது யாருக்கும் அக்கறை இல்லையென்பதை தவிர வேறென்ன சொல்ல?"

முழுப்பதிவும் இங்கே . இதைப் படித்த பிறகுதான் இந்தப் பதிவை எழுதினேன். அதில் வந்த பின்னூட்டங்களிலிருந்து:

  1. "விவசாயிகளுக்கு ஒரே வழி கூட்டுறவை ஏற்படுத்தி பெரிய நிறுவனமாவதே (அமுல் - பால் உற்பத்தியாளர்கள்). அதன்பின் மொத்தமாக விற்பனை செய்வது அல்லது நேரடி விற்பனை என்பதை அவர்கள் யோசிக்கலாம்." - பத்ரி

  2. "விவசாயத்தில் கூட்டுறவு முயற்சி தேவை. கிராமங்களில் எக்கச்சக்கமான கூட்டுறவு பால் பண்ணைகளைப் பார்த்து இருப்பீர்கள். பாலும் உடனேயே விற்கவேண்டிய பொருள்.இருந்தாலும் அது நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது." - கல்வெட்டு

  3. "விவசாய விளைப் பொருட்களை விற்பனை செய்ய முறையான ஒரு அமைப்போ அல்லது முறைமையோ இல்லாததுதான் இன்றைய விவசாய விளைபொருட்களின் விலை உயர்வுக்கு முக்கியக் காரணம்." - உண்மைத் தமிழன்.

  4. "நுகர்வோர்க்கும் விவசாயிக்கும் இடைப்பட்டு இருக்கிற அந்த தரகு வியாபரத்துல ஒரு ஒழுங்கு கொண்டு வந்தா இது சாத்தியமாகலாமே ஒழிய கண்டிப்பா விவசாயி நேரடியா நுகர்வோர் கிட்ட போறதுங்கிறது, போகாத ஊருக்கு வழிதான்." - கொங்கு ராசா

  5. "திடீர் என ஒரே பயிரை அதிக அளவில் அனைவரும் பயிரிட்டு அதிகமாக உற்பத்தி செய்து விலை வீழ்ச்சி ஏற்படாமல் தடுப்பது மிக முக்கியம். அதற்கு மேல் நாடுகளில் உள்ளது போல் பயிர் பதிவு முறை மற்றும் பயிரிடும் பரப்பளவினை முன் கூட்டி தீர்மனிக்கும் முறை வேண்டும்." - வவ்வால்
மென்பொருள் துறையில் உலகுக்கே சேவை செய்யும் நம் நாட்டில் 'ஒரு வருட கால அவகாசம் உள்ள ஒரு விவசாய விளைபொருள் நாட்டில் எவ்வளவு பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது? சராசரி எதிர்பார்க்கும் உற்பத்தி எவ்வளவு?' என்று தகவல் திரட்டும் ஒரு பயன்பாடு உருவாக்கி நடைமுறைப் பழக்கத்துக்கு கொண்டு வர முடியாதா?

ஞாயிறு, ஜூன் 24, 2007

விவசாயி - என்னதான் தீர்வு?

விவசாய விளைபொருட்களை யாரோ வியாபாரி திரட்டி, அதை லாரிக் காரரின் கைக்கு ஒப்படைத்து, கோயம்பேடு வந்திறங்கி, மொத்த வியாபாரி வாங்கி கடையில் வைத்திருப்பதை, கீரைக்கார அம்மா/மூலைக்கடை உரிமையாளர் வாங்கி வந்து விற்பதில் பல குறைபாடுகள் இருக்கின்றன,
  1. வெளிப்படையாகத் தெரிவது ஒவ்வொரு கை மாறும் போதும் ஏறும் செலவுகள்.
  2. ஒவ்வொரு கை மாறலிலும் சிதைந்து போகும் ஒரு பகுதி காய் கனிகள்.
  3. ஒவ்வொரு கை மாறலிலும் இழக்கும் தகவல் பரிமாற்றம்.
மூன்றாவதான தகவல் பரிமாற்றத்தின் இழப்புகளால்
  • விவசாயிக்கு, எந்தச் சந்தையில் என்ன பொருள் தேவைப்படுகிறது என்ற விபரம் புரியாமல் போய் விடுகிறது. விளையா விட்டால் பேரிழப்பு, நிறைய விளைந்தாலும் எல்லோருக்கும் விளைச்சல் ஏற்பட விலை சரிந்து கைக்காசு இழப்பு என்று வாழ்க்கையே நிச்சயமற்றதாகப் போய் விடுகிறது.

  • தனது விளைபொருளை வாங்கிச் சாப்பிடப் போகும் மனிதர்களிடம் நேரடித் தொடர்பு இல்லாததால் விவசாயிகள் என்ன முறையிலாவது விளைச்சலைப் பெருக்க ஆரம்பிக்கிறார்கள்.

    சாப்பிடுபவர்கள் உடலைப் பாதிக்கும் அளவுக்கு பூச்சிக் கொல்லி பயன்படுத்துதல், மாம்பழங்களைப் பழுக்க வைக்க சுண்ணாம்புக்கல்லை பயன்படுத்துதல் என்று தீங்கு விளைவிக்கும் செயல்கள் வாங்கப் போகும் வியாபாரியின் கண்ணைக் கட்டுவது என்ற நோக்கத்துடன் செய்யப் படுகின்றன.

    இதே தோட்டக்காரர், மாம்பழம் வாங்கப் போவது தெருவின் கடைசி வீட்டில் வசிக்கும் பத்து வயது சிறுமி என்றால் நிச்சயமாக ஆரோக்கியமான முறையில்தான் விளைச்சலை பெருக்க முயற்சிப்பார்.
இந்த வகையில், மேற்சொன்ன நான்கு கை மாறும் முறை மாறி, விவசாயியிடமிருந்து சில்லறை விற்பனையில் இறங்கும் பெரு நிறுவனம் வாங்கி வர, அந்தக் கடைகளில் சாப்பிடுபவர்கள் வாங்கிக் கொள்வது பெருமளவு முன்னேற்றம்தான்.

இடையில் லாரிக் காரர்களுக்கு, வியாபாரிகளுக்கு, சிறு கடை நடத்துபவர்களுக்கு இழப்பு ஏற்படும் என்ற வாதம், 'கணினி மயமானால் வங்கி ஊழியர்கள் எல்லாம் வேலை இழப்பார்கள்' என்று போராடிய அதே சரியில்லாத வாதம்தான்.

சந்தைப் பொருளாதாரத்தில் பரிணாம வளர்ச்சி என்ற ஆழிப் பேரலையை தடுத்து நிறுத்தி விட முடியாது. எண்பதுகளில் எதிர்த்த கணினி மயமாக்கம் இன்று எல்லா வங்கிகளிலும் நடைமுறையில் வந்திருக்கிறது. (அந்த ப் போராட்டங்களினால் கால தாமதமானது ஒரு தீங்காக இருந்தாலும், நிர்வாகம் வேலை செய்பவர்களின் நலனையும் கருத்தில் கொண்டு செயல்பட வைத்தது, அதன் நன்மை).

விவசாய விளை பொருள் சில்லறை வணிகத்தில் பெரு நிறுவனங்கள் ஈடுபடுவதை விட சிறந்தது, பயிரிடும் விவசாயிகள் நுகர்வோரை நேரடியாகத் தொடர்பு கொண்டு விளை பொருட்களை விற்பது.
  • நுகர்வோருக்கு சரியான விலையில் தீங்கற்ற கலப்பற்ற பொருட்கள் கிடைக்கும்.
  • விவசாயிகளுக்கு விளை பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும்
  • விவசாயிகளுக்கு வாடிக்கையாளர்களுடன் அண்மை ஏற்பட்டு விவசாயம் செய்வதில் உறுதியான நிலை உருவாகும்.
(தொடரும்)

பதிவர் சந்திப்பு - இது பழசு

ஏப்ரல் மாத ஒரு ஞாயிற்றுக் கிழமை

மாலை நண்பர்கள் இருவர் அலுவலகத்துக்கு வந்திருந்து ஏழரை மணிக்குக் கிளம்பிய பிறகு செல்லாவைக் கூப்பிட்டேன். தாமதமாகி விட்டதுதான். மாலையிலிருந்தே எதிர்பார்த்திருந்திருப்பார். ஒரு வருத்தம் கூடத் தெரிவிக்கவில்லை நான். அவர் திரும்ப அழைப்பதாகச் சொன்னார்.

எட்டு மணிக்கு வீட்டுக்கு வந்து கை கால் எல்லாம் கழுவி, உடை மாற்றி ஹிட்ச்ஹைக்கர்ஸ் கைட் படிக்க உட்கார்ந்த சிறிது நேரத்தில் அவர் அழைப்பு. அவரது நண்பர் வந்து விட்டாராம், அப்படியே பாண்டிபஜார் நாயுடுஹால் எதிரில் இருக்கும் கேரளா ஜுவெல்லர்ஸ் பின்னால் இருக்கும் கிருஷ்ணா ஸ்வீட்சு அருகில் வரச் சொன்னார்.

தூக்க உணர்வு வந்து விட்டிருந்ததைக் களைந்து விட்டு, பேன்டு சட்டை போட்டு வண்டியில் கிளம்பினேன். நெசப்பாக்கம், கே கேநகர், அசோக் நகர், மேற்கு மாம்பலம் வழியாக திநகர் சுரங்க வழியை அடையும் போது இரண்டே இரண்டு சாலை நிறுத்தங்களைத்தான் சந்தித்திருந்தேன். நகருக்குள் வருவதற்கு இதுதான் சிறந்த வழி என்று தோன்றியது. வாகன நெரிசல் குறைவான ஊருள்ளான வழி.

பாண்டிபஜார் சாலையில் திரும்பி ஒரு இடத்தில் குத்து மதிப்பாக நிறுத்திப் பேசினேன். சரியாக அதே இடத்தில் நாயுடு ஹால், இடது பக்கம் கேரளா ஜுவெல்லர்ஸ், அந்த கட்டிடத்துக்குப் பின்னால் ஸ்ரீகிருஷ்ணா இனிப்புக் கடை உள்ளது என்று அவர் நண்பர் வழி சொல்ல வண்டியை நிறுத்தி விட்டு நடந்து போனேன்.

அந்தக் கடையின் எதிரில் வெற்றாகக் கிடக்கும் ஒரு மனை. நிறைய மக்கள் கூடியிருந்தார்கள். வீடு இல்லாமல் அங்கேயே தூங்கக் கூடியவர்கள் என்று பட்டது. கடைக்கு வெளியே பூக்கட்டி விற்கும் ஒரு அம்மா, அவரிடம் வம்பளந்து கொண்டிருந்த ஒரு இளைஞர், சிறிது நேரத்துக்குப் பிறகு அந்த அம்மாவிடம் வம்பு செய்ய வந்த ஒரு ஆட்டோ ஓட்டுநர், அவரை கல்லை எடுத்துக் கொண்டு துரத்தும் இந்த அம்மா என்று சுவாரசியங்களுக்குக் குறைவில்லை.

பை நிறைய மாதிரிகளுடன், உடலில் உருட்டி வலியை, சலிப்பைக் குறைக்கும் கருவி ஒன்றை விற்கும் இரண்டு பேர். கிருஷ்ணா இனிப்பகம் உள்ளே போகிறவர்களையும், வெளியே வருபவர்களையும் நிறுத்தி விற்க முயன்று கொண்டிருந்தார்கள். காதில் செல்பேசியை ஒட்டிக் கொண்டே, அல்லது செல் பேசியை ஒரு அடித் தள்ளிப் பிடித்துக் கொண்டே பெண்களும், ஆண்களும்.

கடையின் முன், தமிழ்ப் புலவர்கள் குறித்து நிகழ்ச்சி விபரங்கள், தமிழிசை இசை நிகழ்ச்சி விபரங்கள் என்று வைத்திருந்தார்கள். 'வாயில் கரையும் ஒரே மைசூர் பாகு' என்று ஒரு தட்டி.

அந்த இடத்தில் ஏதோ சுவர்க்கம் போல விளக்குகளுடன் மின்னும் கடை. வெளியிலேயே காத்திருந்தேன்.

இரண்டு மூன்று நிமிடங்களில் வந்து விடுவோம் என்று சொல்லியிருந்தவர்கள், பத்துநிமிடங்களில் வந்து சேர்ந்தார்கள்.

ரிலையன்ஸ் வெப் வோர்ல்டில் இருந்தார்களாம். நண்பரின் வீடு அருகில்தான் இருக்கிறது. வீட்டுக்குள் நுழைந்து, முன்னறையில் குளிரூட்டியைப் போட்டார். ஒரு முன்னறை, அடைத்து வைக்கப்பட்டிருந்த உள்ளறை, கீழிறங்கிப் போகும்படி சமையலறை. கைக்கடக்கமான வீடு. அறை குளிரூட்டும் கருவியைத் தவிர ஒரு குளிர்சாதனப் பெட்டி, ஒரு பெரிய தொலைக்காட்சி பெட்டி இடத்தைப் பிடித்திருந்தன.

அவரது தகவல் செறிந்த புத்திசாலித்தனமாக வாதங்களைக் கேட்க ஆரம்பித்தோம். தமிழ் நாடு அரசியல், கருணாநிதி, ஜெயலலிதா, அதிமுக/திமுக, கேரளா, துபாயில் அவர் வேலை பார்த்தது, அவர் உதவியவர்கள் பற்றிய கதைகள், இப்போதைய அவரது பணி என்று ஒரு மணி நேரத்துக்கு மேல் பேசியிருப்பார்.

பேசிப் பேசி களைத்ததாலோ என்னவோ, எனக்குக் குடிக்கத் தோன்றுகிறது என்று குப்பிகளையும், காய்கனிகளையும் வெளியே எடுத்து வைத்தார். எனக்கும் கடுமையான பசி.

பழங்கள் வெளியே வர ஒரு ஆப்பிளைக் கைப்பற்றிக் கொண்டேன். ரம்மில் 7 அப் ஊற்றுக் கொண்டார்கள். செல்லா காய்களை சிறிது சிறிதாக வெட்ட ஆரம்பித்தார். அவருக்கு அதைக் கற்றுக் கொடுத்த முஸ்லீம் பெரியவர் ஒருவரைப் பற்றிச் சொன்னார். அவர் செய்த பிரியாணியில் மயங்கி 25,000 ரூபாய் சம்பளத்தில் வேலை கொடுத்தார்களாம்.

அவரது நண்பர் ஒரு ஆங்கிலோ இந்தியரைக் குறித்துச் சொன்னார். சிறிது நேரத்தில் அவருக்குத் தொலைபேசியும் செய்தார். பத்து மணிக்குக் கிளம்பலாம் என்பது நீண்டு பத்தரைக்குப் புறப்பட்டேன். வண்டி நிறுத்தி வைத்திருந்த இடத்தில் தனியாக நின்றது. ஓனிக்ஸ் நிறுவன ஊழியர் சாலையோரத்தை தூய்மை செய்து கொண்டிருந்தார்.

இப்போது பனகல் பூங்கா வழியாக, போத்தீஸ் எதிரில் இருகக்கும் சாலையில் திரும்பி, சுரங்கப் பாதையில் நுழைந்து மேற்கு மாம்பலம் பிடித்து, அசோக் நகர், அசோகா தூண் வழியாக கேகே நகர் அடைந்தேன். இந்த நேரத்தில் சாலை நிறுத்தங்களில் நிற்பது யாருக்குமே தேவை என்று படுவதில்லை.

மனவளமும் பணவளமும்

நமது வாழ்வில் மூன்று அடுக்குகள் இருப்பதாகச் சொல்லலாம். ஒன்று பொருளாதாரம், இரண்டு அறிவு, மூன்றாவது மனம்/மனிதம்.
  • இருபது வயதில் 10,000 சம்பளம், 30 வயதில் 30,000 வாங்க வேண்டும், நாற்பதில் கோடீஸ்வரனாகி விட வேண்டும், ஐம்பதில் இன்னும் சொத்து சேர்த்திருக்க வேண்டும், அறுபது வயதில் ஓய்வு பெற்று வாழ பணம் இருக்க வேண்டும் என்று திட்டமிடுகிறோம்.

  • பன்னிரண்டு வகுப்பு வரை பள்ளி, அப்புறம் பொறியியல் பட்டம், வேலை பார்க்கும் போது கூட தொலைதூரக் கல்வி, வாரத்துக்கு ஒரு புத்தகம் படிக்க வேண்டும் என்று அறிவைப் பெருக்கிக் கொள்ளவும் பெரும்பாலானோர் தொடர்ந்து முயல்கிறோம்.

  • நமது மனதை/மனிதத்தை வளர்க்க முயற்சியாக எடுப்பதில்லை. பணம் ஈட்டும் போது, அறிவை ஈட்டும் போது மனம் என்னக் கற்றுக் கொள்கிறதோ எப்படி முதிர்ச்சி அடைகிறதோ அதே போக்கில் விட்டு விடுகிறோம். அந்த முயற்சிகளில் எதிர் வினையாக மனச் சோர்வு, உடல் நிலை பாதிப்பு வரும் போது தியானம், மனவளக்கலை பயிற்சிகள் என்று நிவாரணம் தேடுகிறோம்.
வரும் முன் காப்போம் என்று அல்லது இன்னும் ஒரு படி மேல் திட்டமிட்டு ஒவ்வொரு வயதிலும் 'எனது மனவளம் இந்த அளவில் இருக்க வேண்டும்' என்று வகுத்துச் செயல்படுவது நன்மை தரும் என்று நினைக்கிறேன்.

உண்மையில் பார்க்கப் போனால் பணம் ஈட்டவும், அறிவைப் பெருக்கவும் அடித்தளமாக அமைவது மனவளம்தான். சின்ன வயதில் பெற்றோர் தந்த அடித்தளமும், பள்ளியிலும், கல்லூரியிலும் கற்றுக் கொண்ட (மறைமுகமாக) முறைகளும் மனதை வளமாக வைத்திருக்க உதவுகின்றன. அதன் மேல்தான் அறிவு வளர்ச்சியும் பொருளாதார முன்னேற்றமும் அமைய முடியும். ஆனால் இந்த மனவளத்துக்கு நாம் முனைப்பாக பெரிதாக செய்து விடுவதில்லை.

'முக்கியமான தேர்வு இன்று. தேர்வுக்கு முந்தைய நாள் மட்டும் படித்தால் போதும் என்று இருக்கக் கூடாது, ஆண்டு முழுவதும் படிக்க வேண்டும்' என்பது எல்லோருக்கும் அறிவளவில் தெரியும். ஆனால் எத்தனை பேர் அதை முழுமையாகக் கடைப்பிடிக்கிறோம்.

அதே போல இன்றைக்கு இரண்டு மணிக்கு ஒரு முக்கியமான தொழில் முறை சந்திப்பு. அதற்கு திட்டமிட ஓரிரு நாட்கள், குளித்து உடை உடுத்துத் தயாராக ஓரிருமணி நேரம் என்று செலவளிக்கிறோம். சந்திப்பு எப்படிப் போகும் என்று முழுமையாகத் திட்டமிட்டிருக்க முடியாது. சந்திப்பின் போக்கைப் பொறுத்து சரியான முடிவுகள், சரியான பதில்களை உருவாக்க உதவுவது எது?

மகாபாரதத்தில் ஒரு கதை.
பரசுராமருக்கு அரசகுலத்தவரைக் கண்டால் ஆகாது. பிராமணர்களுக்கு மட்டும்தான் தனது வித்தையைக் கற்றுக் கொடுப்பார். அர்ச்சுனனுடன் போட்டிப் போட வேண்டிய கர்ணன் அவரிடம் தான் ஒரு பிராமணன் என்று பொய் சொல்லி மாணவனாகச் சேர்கிறான். எல்லா வித்தைகளையும் கற்றுக் கொள்கிறான். ஒரு நாள், ஆசிரியர் மாணவனின் தொடையில் தலை வைத்துத் தூங்குகிறார்.

வண்டு ஒன்று வந்து தொடையில் அமர்கிறது. ஆசிரியருக்கு தொந்தரவு வரக்கூடாதே என்று அசையாமல் உட்கார்ந்திருக்கிறான் கர்ணன். வண்டு தொடையைத் துளைத்து ரத்தம் பெருக்கெடுத்து குருவை எழுப்பி விடுகிறது.

'ஒரு பிராமணனால் இவ்வளவு வலி தாங்க முடியாது, நீ அரச குலத்தைச் சேர்ந்தவன்' என்று உண்மையைக் கேட்கிறார். அவன் தனது பொய்யை ஒப்புக் கொண்டு விட, 'தேவையான நேரத்தில் என்னிடம் கற்று ஆயுத வித்தைகள் மறந்து போகும்' என்று சாபம் கொடுத்து விடுகிறார்.

அர்ச்சுனனுடன் இறுதிப் போர் புரியும் போது, உண்மையிலேயே மறந்து விடுகிறது. அறிவு இருக்கிறது, மனம் ஒத்துழைக்க மறுத்து விடுகிறது.

கணினியிலும் இதே கதைதான்
கணினியில் எல்லா நிரல்களும் மென்பொருள்களும் வன்தகட்டில் நிறுவப்பட்டிருக்கின்றன. ஆனால் கணினியின் இயக்கி (processor) விபரங்களை எடுத்து வெளியே கொடுக்கா விட்டால் என்ன பலன்?

கணினியின் வன்பொருள் நமது சொத்துக்கள் என்றால், அதில் அடங்கியிருக்கும் மென்பொருட்கள் நமது அறிவுச் செல்வம், எல்லாவற்றையும் ஒருங்கிணைத்துச் செயலில் கொண்டு வருவது நமது மனவளம்.

மனவளத்தைப் பெருக்கிக் கொள்ள மனதுக்குச் சரியான தீனி போட வேண்டும். சின்னச் சின்ன சாதனைகளில் மனதை நிறைத்துக் கொள்ளாமல் செயற்கரிய செய்ய முயல வேண்டும்.

காந்தி - சில கேள்விகள்

காந்தியின் கொள்கைகளை, சமூகக் கருத்துகளை, மத நம்பிக்கைகளைத் தீவிரமாக எதிர்த்தவர்களும் அவரை புறக்கணிக்க முடியவில்லை.
  1. மேற்கத்திய கல்வி கற்று சோவியத் புரட்சியால் கவரப்பட்டிருந்த நேருவுக்கு காந்தியின் பல கருத்துக்கள் முட்டாள்தனமாகப் பட்டாலும் அவரை தனது தலைவராக ஏற்றுக் கொண்டிருந்தார்.

    ஏன்?

  2. 'இவர் வருணாசிரம தருமத்தைத் தாங்கிப் பிடிக்கத்தான் முயல்கிறார், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இவர் அநியாயம் செய்கிறார்' என்று தனித்தலைமை உருவாக்கிய அம்பேத்கார் காந்தியின் மீது பெரு மதிப்பும், அவரது உடல் நலனில் அக்கறையும் வைத்திருந்தார்.

    'கிழவன் செத்தால் சாகிறான்' என்று விட்டு விட்டுப் போக முடியவில்லை.

    ஏன்?

  3. 'இந்திய இளைஞர்களின் துடிப்பைச் சரியாகப் பயன்படுத்தாமல் ஆங்கிலேயர்களின் அடிவருடியாக இருக்கிறார்' என்று கருதிய நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், காந்தி விரும்பவில்லை என்றதும் காங்கிரஸ் தலைமைப் பதவியைத் தூக்கி எறிந்து விட்டுப் போய் விடுகிறார். காந்தியின் மனதைப் புண்படுத்த விரும்பவில்லை.

    இளைஞர்களின் பெருவாரியான ஆதரவு இருந்தாலும் நேதாஜியின் முடிவு காந்திக்கு வழி விடுவதாகவே இருக்கிறது.

    ஏன்?

  4. 'முதலில் கோயிலுக்குள் வரணும் என்பாங்கள், அப்புறம் நம்ம வீட்டுக்கே வந்து விடுவார்கள்' என்று இறுக்கத்துடன் இருந்த வர்ணாசிரமவாதிகள் காந்தியின் உயிருக்குப் பயந்து கத்தியின்றி ரத்தமின்றி இந்துக்கள் அனைவருக்கும் கோயில்களைத் திறந்து விடச் சம்மதிக்கிறார்கள்.

    ஏன்?

  5. 'இந்தியாவில் முஸ்லீம்கள் மதிப்புடனும் சுயமரியாதையுடனும் வாழ முடியாது' என்ற பாகிஸ்தான் உருவாக்கத்துக்குப் பிறகும் பல கோடி முஸ்லீம் மக்கள் தமது பிறந்த மண்ணில் இருந்து விடத் தீர்மானித்து மதச் சார்பற்ற இந்தியக் குடியரசை உருவாக்குவதில் பங்கேற்கின்றனர்.

    ஏன்?

சனி, ஜூன் 23, 2007

காந்தி - சில புரிதல்கள்

காந்தியின் தொகுக்கப்பட்ட படைப்புகள் இணையத்தில் பிடிஃஎப் வடிவில் கிடைக்கின்றன. அவரது வாழ்வின் கடைசி மாதங்களில் நடந்து உரைகள், கடிதங்கள், கட்டுரைகள் என்று முதலில் இறக்கி வைத்திருக்கிறேன்.

அவரது சத்தியத் தெளிவயும், நடைமுறைக் கொள்கைகளும், வாய்மை, நேர்மை, மனித குல நன்மை, சேவை உணர்வு என்று இணைத்துப் பார்த்தால் மிக இயல்பாக தெரிகின்றன. புரியாமல் சேற்றை வாரி இறைப்பவர்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள்.

'பிரிவினை என் பிணத்தின் மீதுதான் நடக்கும் என்று எப்போது சொன்னார்' என்று தெரியவில்லை. தில்லியில் அதிகாரம் குவிந்த இந்தியா என்ற நாடு அவருக்கு உடன்பாடு கிடையாது. ஒவ்வொரு சிறு பகுதியும் தமது பொது வேலைகளைக் கவனித்துக் கொண்டால் பிரிவினை என்று முஸ்லீம் லீக் கேட்பதற்கு தேவையே இல்லாமல் போயிருக்கும்.

நேருவுக்கும் ஜின்னாவுக்கும் இங்கிலாந்தைப் போல, சோவியத் யூனியனைப் போல, அமெரிக்காவைப் போல நவீன தேசிய அரசை உருவாக்கி தாம் அதை ஆள வேண்டும் என்று ஆசை. காந்தியின் கனவு சற்றே காலத்துக்கு முற்பட்டது. திறந்த மனதுடன் அவரிடமிருந்து கற்றுக் கொள்ள முன்வந்திருந்தால் கிழக்கு மேற்குக்கு இன்று கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கலாம்.

காந்தியின் கொள்கைகளைச் சரிவரப் புரிந்து கொண்டவர்கள் இருப்பதாகத் தெரியவில்லை. ஒவ்வொருவரும் அவரது ஒரு பக்கத்தைப் பிடித்துக் கொண்டு தொங்குகிறார்கள். இந்துத்துவாவாதியான அரவிந்தன் கூட காந்தீயப் பொருளாதாரம் என்று தமக்கு சாதகமான ஒன்றை மேற்கோள் காட்டுகிறார். அந்தப் பொருளாதாரக் கொள்கைகளுக்கான அடிப்படையை ஆராய்ந்து பார்த்தால் அவர் காத தூரம் ஓடி விடுவார், அல்லது இந்துத்துவா இயக்கங்களிலிருந்து தன்னை முற்றிலுமாக விலக்கிக் கொள்வார்.

கதர் உடுத்துவது, தொப்பி வைப்பது, நூல் நூற்பது என்று அடையாளங்களுக்கு மதிப்பு கொடுத்து தனது கருத்துக்களை நீர்க்கச் செய்து விட்டார் என்று தோன்றுகிறது. கதர் என்பது அடுத்த மனிதனை/ நமது வாழ்வை சீரளிக்காமல் உருவாக்கும் பொருளைப் பாவிக்க வேண்டும் என்பதற்கான அடையாளம். கதரை மட்டும் பிடித்துக் கொண்டு அதன் அடிப்படையான கொள்கையை விட்டு விட்டார்கள்.

இதே போலத்தான் இந்துஸ்தானி பொது மொழியாக வேண்டும் என்பது. இந்தியாவில் ஆங்கிலம் பொது மொழியாக இருப்பது அவமானம். இந்திய மொழிகளில் ஒன்றைப் பொது மொழியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பது நியாயமான கருத்து. ஆனால் அந்த நிலை வரும் முன்னால் எல்லா இந்திய மொழிகளுக்கும் மதிப்பும், சம மரியாதையும் கொடுக்கும் பண்பு மக்களிடையே வளர்ந்திருக்க வேண்டும்.

குஜராத்தில் பிறந்து வளர்ந்ததால் தென்னிந்திய அல்லது வடகிழக்கு மாநில மக்களின் உணர்வுத் தீவிரம் புரியாமல் போயிருக்கலாம். அதை உள்வாங்கிய நேருதான் சரிவர செயல்படுத்தினார். அந்த வகையில் நேரு காந்தியின் முதன்மையான சீடர் என்பதில் ஐயமில்லை. காந்தியின் கொள்கைகளைப் புரிந்து கொண்டு அதைத் தனது கருத்துக்களுடன் இணைத்து செயல்படுத்த முடிந்த தலைவர் அவர்.

படேலுடனான கடிதப் போக்குவரத்து, படேல் குறித்த கருத்துக்களும் தொகுக்கப்பட்ட காந்தியின் படைப்புகளில் விரவிக் கிடக்கின்றன. படேல், சுபாஷ் சந்திர போஸ், போன்றோரிடம் பெரு மதிப்பும் அன்பும் வைத்திருந்திருக்கிறார். ஆனால் தனது கொள்கைகளைப் பிசகாமல் கடைப்பிடிப்பவர் நேரு மட்டும்தான் என்று கண்டு கொண்டிருக்கிறார்.

தனது குருவை வெளிப்படையாக விமரிசிக்கவும் நேரு தயங்கியதில்லை. தனக்கு சரி எனப் பட்டதை ஆதரித்து காந்தியுடன் சண்டை போடுவதும் பல முறை நடந்திருக்கிறது. மற்றவர்கள் போல காந்தியின் மக்கள் செல்வாக்குக்குப் பணிந்து நடக்காமல், எது சரியென்று பட்டதோ அதை மட்டும் ஏற்று நடந்த நேருவின் மீது காந்திக்கு நம்பிக்கை ஏற்பட்டது புரிந்து கொள்ளக் கூடியதுதான்.

ஞாயிறு, ஜூன் 17, 2007

தோல் துறை பட்டதாரிகள் சந்திப்பு

அண்ணா பல்கலை, அழகப்பா கல்லூரி தாண்டி சாலை நிறுத்தத்தில் நிற்கும் போது தோல் கழகம் நோக்கி மாணவர்கள் நடந்து கொண்டிருந்தார்கள். இங்கும் வெளி வாசலில் வரவேற்று உள்ளே அனுப்பி வைத்தார்கள்.

பதினைந்து நிமிடங்கள் முன்னதாக வந்து விட்டிருந்தேன். அரங்கினுள் நுழையும் போது அதிகக் கூட்டம் இல்லை. மேடையில் அருகில் பார்த்துக் கையை ஆட்டினால், பதிலுக்கு புன்னகைத்தார். நேராகப் போய் மூன்றாவது வரிசையில் உட்கார்ந்து கொண்டேன்.

சிறப்புரை ஆற்ற வந்திருந்த முனைவர் பீமா விஜயேந்திரன், அவரது வருகையை வழிநடத்தும் திரு ராம்குமார் என்பவர் வந்து அறிமுகம் செய்து கொண்டனர். நம்ம ஊரில் நாலணா தொழில் செய்பவர்கள் கூட பேச்சைக் கேட்க வருபவர்களிடம் பழகி விடுவதை தவிர்த்து விடுவார்கள்.

சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம். முனைவர் விஜயேந்திரன் பின்வரிசையில் இருந்த மாணவர்களையும் கைகுலுக்கி அளவளாவினார். அமெரிக்க நாகரீகத்தின் இந்த இயல்பு மிகப் பாராட்டுக்குரியது. யாரும் வானத்தில் இருந்து இறங்கியதாக நினைப்பதில்லை அவர்கள். எல்லோரையும் மதித்துப் பழகும் போக்கு இயல்பாகவே வருகிறது.

சிறிது சிறிதாக அரங்கம் நிரம்பி முனைவர் டி ராமசாமி வரும் போது பத்து நிமிட தாமதம். அவர் இப்போது மத்திய அரசின் அறிவியல்-தொழில்நுட்பத் துறையில் செயலராகவும், மத்திய ஆராய்ச்சி நிலையங்களின் தலைவராகவும் தில்லியில் பணியாற்றி வருகிறார். நமது தோல் துறை மாணவர்களின் கூட்டமைப்பை வளர்த்து ஆளாக்கிய பெருமை அவருக்கே. இப்போதும் அதை சரியாக வழிநடத்திப் போக வேண்டும் என்று ஆர்வத்தோடு தனது வேலைகளுக்கிடையில் இது போன்ற கூட்டங்களுக்கு வந்து கலந்து கொள்கிறார்.

முதலில் முனைவர் விஜயேந்திரனுக்கு பாராட்டு, அவரது சிறப்புரை, இந்த ஆண்டு ஆல்பா சிறப்புரை விருது வழங்கல், அதன் பிறகு ஆல்பா ஆண்டு பொதுக் கூட்டம், கடைசியில் சாப்பாடு.

ஜகன்னாதன் வரவேற்புரை, அதன் பிறகு முனைவர் ராமசாமியின் வழக்கமான நடையில் பேச்சாளரை அறிமுகம் செய்தல். முனைவர் விஜயேந்திரன் படிப்பில் தலைசிறந்தவராக இருந்ததாகவும் முதுகலைப்பட்டம் தோல் நுட்பத்தில் பெற்ற பிறகு விர்ஜினியா பல்கலையில் ஆராய்ச்சியில் இறங்கி, பாலிமர் துறையில் பெயர் பெற்றவர். இப்போது தாவரங்களிலிருந்து பெட்ரோல் பொருட்களுக்கு மாற்று உருவாக்குதல், வேதி வினை மூலம் ஆற்றலை உருவாக்குதல், நேனோ தொழில்நுட்பம் எனப்படும் மீச்சிறு பொருட்களைப் பற்றி ஆராய்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டுள்லாராம். ஓஹையோ பல்கலையில் பணி புரிகிறார்.

முனைவர் விஜயேந்திரன் பேச ஆரம்பிக்கும் போது ஆரம்பத்தின் தன் அம்மாவைக் குறிப்பிட்டதும் உணர்ச்சிவசப்பட்டு பேச முடியாமல் குரல் உடைந்தது. ஓரிரு நிமிடங்களுக்குப் பிறகு அதே நடுங்கும் குரலில் தொடர்ந்தார். தாம் படித்த கல்லூரியில் சிறப்பு செய்யப் பட்டு உரை ஆற்ற வரும் போது தனது படிப்புக்காக பெற்றோர் செய்து தியாகங்களை நினைத்திருப்பார்.

ஆண்டு பொதுக்குழு நடவடிக்கைகள், தீர்மானங்கள் முடிந்து சாப்பாட்டுக்குக் கிளம்பினோம். கீரை சூப் ஒன்று., வறுத்த சோற்றை எடுக்காமல் வெள்ளை சோறு, ரசம், கடலை, உருளைக்கிழங்கு எடுத்துக் கொண்டேன், தயிர் சாதம், பூரி, பொரித்த வெண்டைக்காய்,, கோழிக்கறி தேவையில்லை. என் உடம்பையும் முகத்தையும் குறித்து மூன்று பேரும் கேட்டு விட்டனர்.

'உடல் ஒல்லியாக இருப்பது நல்லதுதான், ஏன் முகம் வாடிக் கிடக்கிறது. வயிற்றையே காணவில்லை. நன்றாக சாப்பிடு' என்று அறிவுரைகள். 'மாலையில் சாப்பிடாத பசி வாட்டம்' என்று சொன்னேன். 'உங்களுக்குப் பொறாமை' என்று கிண்டலடித்துத் தப்பித்தேன்.

புதிய ஆல்ஃபா தலைவர் ஐஸ்கிரீமுக்கு இழுத்துப் போய் விட்டார். அவர் கடுமையான உணவுக் கட்டுப்பாட்டில் இருப்பவர். நேற்றிலிருந்து ஆல்பா தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார். அவருக்குத் தொலைபேசி கொஞ்சம் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். ஒரு இணைய சமூகத்தை உருவாக்க முயற்சிக்கலாம்.

இறுதியாண்டு மாணவர்கள் நான்கு பேர், சிஎல்ஆர்ஐ ல் நான்கு கணினிகள், இணைய இணைப்பு கொடுத்தால் மூன்று மாதங்களில் எல்லா ஆல்பா உறுப்பினர்களின் தகவல்களையும் தொகுத்து உலகின் எந்த மூலையிலிருந்தும் தொடர்பு வளர்க்கும்படி செய்து விடலாம்.

யார் யாரை தாங்குவது!!!

பேருந்தில் ஒரு கண் தெரியாத முதியவர். சின்ன உருவம். நான் உட்கார்ந்த இருக்கையில் ஏற்கனவே இருந்தார்.

முதலில் கண் தெரியாதவர் என்று கவனிக்கவில்லை. உட்கார்ந்த சிறிது நேரத்தில் கையால் என்னைத் தொட முயன்றதைக் கண்டு கொள்ளவில்லை. சிறிது நேரத்தில் பேச்சு கொடுத்தார்.

பேருந்து நிலையத்தில் இறங்கியதும் கையைப் பிடித்து கடுக்கரை போகும் பேருந்து நிற்கும் இடத்துக்கு அருகில், தேநீர்க் கடை அருகில் விட்டு விடச் சொன்னார். அந்தத் தேநீர்க் கடைக்காரர் பேருந்து ஏற்றி விட்டு விடுவாராம்.

'ராணித் தோட்டத்தில் வேலை பார்க்கிறேன். அடுத்த வருஷம் ரிட்டயர் ஆகிறேன். டிரைவர் சீட்டுக்கு வயர் பின்னும் வேலை. அது இல்லாத போது போல்ட்டுகளை அடுக்கிக் கொடுக்கும் வேலை. என்னை போல இன்னும் இரண்டு பேர் வேலை பார்க்கிறார்கள். ஒருவர் என்னை விட 4 வயது சின்னவர், இன்னொருவர் சின்ன வயது - இப்பதான் திருமணம் ஆகியிருக்கிறது'

57 வயது மதிக்க முடியாத தோற்றம். கண் தெரியாத வாழ்க்கையில் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக இந்த வேலை செய்து வருகிறாராம்.

'ஓய்வு பெற்ற பிறகு எப்படி நேரம் போகும்' என்று கேட்டேன்.

'வெளியே எங்கேயும் போக முடியாது. வேலைக்குப் போவதைத் தவிர வேறு எங்கும் தனியாக அனுப்ப மாட்டார்கள். குடும்பக் கவலை வேறு அதிகம். மூன்று பெண்களைக் கட்டிக் கொடுத்த கடன்கள் அடைக்க வேண்டும். மாதம் மூவாயிரம் ரூபாய் வட்டிக்கே கொடுக்கிறேன். பையன்களுக்குப் பொறுப்பு இல்லை. மூத்த இரண்டு பேரும் வளர்ந்து கல்யாணம் ஆகி பிள்ளைகளும் உண்டு. இன்னும் என் சம்பாத்தியத்தை நம்பித்தான் இருக்கிறான்கள். சின்னவன் எஞ்சினீயரிங் படிக்கிறான்.'

'எல்லாம் நான் ரிட்டயர் ஆவதை நோக்கிக் காத்திருக்கிறான்கள். எனக்கு பத்தாயிரம், இருபதாயிரம் என்று வரப் போகும் பணத்துக்கு இப்பவே திட்டம் போட்டுக்கிட்டிருக்கான்க. பன்னிரண்டாயிரம் ரூபாய் சம்பளம், பென்ஷன் மூவாயிரம் வரும். கண் தெரியாமல் எவ்வளவுதான் செய்ய முடியும். எல்லாம் என்னை நம்பித்தான் இருக்கிறாங்க. பொண்ணுகளும் அதே கதைதான்'

அதிர்ச்சியாக இருந்தது. 'பசங்களை வளர்த்து விட்டாச்சு. இனிமேல் வீட்டை விட்டு அனுப்பி விடுங்கள். இல்லை என்றால் நீங்களும் வீட்டுக் காரியும் வேறு வீடு பார்த்துக் கொள்ளுங்கள். இனிமேல் அவங்க வேலை அவங்க பொறுப்புதான். எவ்வளவு நாள்தான் நீங்க தாங்க முடியும்.' என்று என்னுடைய வேண்டாத அறிவுரை கூறினேன்.

'இப்படித்தான் யாராவது பக்கத்தில் இருப்பவர்களிடம் கையைப் பிடித்து விட்டு விடச் சொல்லுவேன். அந்த டீக்கடைக்காரர் அப்புறம் ஏத்தி விட்டு விடுவார்.' பேருந்து நின்ற பிறகு அவர் பேருந்து ஏற வேண்டிய இடமும் நாங்கள் போகும் இடமும் ஒன்றுதான். கடைக்கருகில் விட்டு விட்டேன்.

விவசாயி - வெட்கம்

மாமாவுக்கு 87 வயது. வண்டி இடித்துக் கீழே விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இப்போது நடமாட முடியாமல் இருக்கிறார். போன தடவை வந்த போது போய்ப் பார்க்க முடியவில்லை.

யார் என்று கேட்டு அடையாளம் தெரிந்து கொண்டார். காது நன்கு கேட்டது. என்னைப் பற்றிய விபரங்கள் நன்கு நினைவு இருந்தன. கீழே விழுந்த, அறுவைச் சிகிச்சை செய்த அனுபவங்களை எல்லாம் சொன்னார். யோகீஸ்வரர் சாமிக்கு நிறைய சொத்து, அதை எல்லாம் வித்து இரண்டு கோடி ரூபாய் வங்கியில் போட்டு சமூகப் பணிகளைச் செய்து வருகிறார்களாம்.

'தோசையைச் சுடு, காபியைப் போடு' என்று அத்தையை விரட்டிக் கொண்டிருந்தார் மாமா. கடைசியில் சீனி போடாமல் பால், முறுக்கு என்று கையில் திணித்து விட்டுத்தான் ஓய்ந்தாள் அத்தை, அப்பாவின் அக்கா. 'வெளியே போக முடியாமல் எப்படிப் பொழுது போகிறது' என்று கேட்டேன். தொலைக்காட்சி எல்லாம் ஈடுபாடு இல்லை, அப்படியே சும்மா படுத்துக் கிடப்பேன் என்றார் மாமா.

விவசாயம் செய்து வந்தவர் அவர். சின்ன வயதில் நான் அங்கு போன போதெல்லாம் அதிகமாகப் பேச மாட்டார். ஆனால் தலைப்பாகைக் கட்டோடு, கரிய உடலோடு, புகையிலை அடக்கிய வாயோடு சாப்பிட வரும் போது கொஞ்சம் பயமாக இருக்கும். நல்ல உழைப்பாளி என்று நினைவு இருக்கும். இப்போது எண்பத்தியேழு வயதிலும் உடல் உறுதியாக, எலும்பு முறிவைத் தாங்கி தேறும் வளைவுத் தன்மையுடன் இருந்தது.

'எப்படியெல்லாம் பாடுபடுவோம் நாங்க. மழை வெயில் பார்க்க மாட்டோம். விவசாயம் செய்யணும்னா உழைப்புத்தான். எவ்வளவு உழைக்கிறோமோ அவ்வளவுதான் நிக்கும். வருஷம் பூராவும் உழைப்புத்தான்' என்றார். ஒரு பையன், நான்கு பெண்கள். பையன் நான் சின்ன வயதாக இருக்கும் போதே திருச்சியில் விபத்தில் இறந்து போனான். அதன் பிறகு நான்கு பெண்களையும் வளர்த்து ஆளாக்கிய பிறகு மாமாவும் அத்தையும் தனியாக இருக்கிறார்கள்.

'வேறு வருமானம் ஒன்றும் கிடையாது. மக்கமாருகள் கொடுக்கும் பணத்தில்தான் செலவுகள். ஆப்பரேஷனுக்கு இருபதாயிரத்துக்கு மேல் ஆகி விட்டது. நானும் சித்தப்பாவும் ஆளுக்கு ஐயாயிரம் கொடுத்தோம். இன்னைக்கு நீ ஒரு நூறு ரூபாய் மாமா கையில் கொடு' என்று முன்பே சொல்லியிருந்தார்கள் அப்பா.

'என்கிட்ட இருக்கு, ஐநூறு வேணும்னாலும் கொடுக்கேன்' என்றேன். கொஞ்சம் யோசித்து விட்டு, இருநூறு ரூபாய் கொடுக்கச் சொன்னார்கள் அப்பா. தயாராக பணப்பையிலிருந்து உருவி வைத்துக் கொண்டேன்.

பேச்செல்லாம் முடிந்து கிளம்பும் போது மாமாவின் கையில் நோட்டுக்களைக் கொடுத்தேன். எப்படி எந்த நேரத்தில் கொடுப்பது என்றெல்லாம் சமூக நடவடிக்கை தெரியாத அப்பாவி நான். சரியாகத்தான் கொடுத்தேன் என்று பட்டது. அப்படியே கண்களில் ஒத்திக் கொண்டார் மாமா.

மனம் கடுத்துப் போனது. வாழ்நாள் முழுவதும் மண்ணில் பாடுபட்ட இந்த மனிதரை அடுத்தவரை அண்டி இருக்க வைத்து விட்ட நம் அமைப்பின் மீது வருத்தமாக இருந்தது. சொந்தக் காரர்கள் உதவியில்தான் இருந்தாலும், மைத்துனர்கள், மகள்களிடமிருந்து பணம் வாங்கும் போது அந்தப் பெருமையான மனிதருக்கு மனம் என்ன பாடுபடும்? தனது உழைப்புக்கு அங்கீகாரமாக ஏதாவது மாதாமாதம் வரும் படி நாட்டின் விவசாயிகள், உடல் உழைப்பாளிகள் அனைவருக்கும் ஏற்பாடு இருக்க வேண்டும்.

அரசாங்க உதவிகள் பெறக் கிட்டத்தட்ட பிச்சைக்காரராக ஆகி விட வேண்டியிருக்கும். எப்படியோ இந்தச் சமூக அமைப்பு அவரை தாங்குகிறது.

கோயில் கொடை

புத்தேரியில் கொடை.

யோகீஸ்வரர் சாமிக்குக் கொடை. யோகீஸ்வரர் என்பது பதினைந்து இருபது அடி உயரத்துக்கு மேல் திறந்த வெளியில் இருக்கும் செங்கலால் எழுப்பப்பட்ட அமைப்பு. மாமா சொன்ன கதைப்படி, முற்காலத்தில் காடாக இருந்த இடத்தில் மேய வந்த மாடு ஒன்று உரச புற்றிலிருந்து ரத்தம் வந்ததாம். சாமியாடி பிரசன்னம் கேட்டதில் அந்த இடத்தில் கோவில் கட்டி வழிபட்டால் ஊர் மேம்படும் என்று சொல்ல, புற்றைச் சுற்றி செங்கல் அடுக்கினார்களாம்.

அடுத்த ஆண்டில் பார்த்தால் இன்னும் ஒரு முழம் வளர்ந்திருந்ததாம். அந்த உயரத்துக்கு செங்கல் அடுக்கியிருக்கிறார்கள். இப்படியே வருடா வருடம் உயர்ந்து கொண்டே போய் இன்றைய உயரத்துக்கு வளர்ந்திருக்கிறதாம். 87 வயதாகும் மாமாவுக்கு நினைவு தெரிவதற்கு முன்பே இருக்கிறதாம். இத்தனை ஆண்டுகளில் ஒரு செங்கல் கூட பெயர்ந்து விழுந்தது கிடையாது என்கிறார்.

கொடைத் திருவிழாவின் போது செங்கல் அமைப்பைச் சுற்றி மண் பூசி, ஏணியில் ஏறி பூசைகள் செய்கிறார்கள். மாலையில் நாங்கள் போனது சாமிக்குக் கண் திறப்பு என்று மண் பூசப்பட்ட உருவத்தில் முகப் பகுதியில் கண்களைப் பொருத்தி வழிபாடு செய்யும் நிகழ்ச்சி. காலையில் ஆறரைக்கு வீடு வந்து சேர்ந்து, சாப்பிட்டு விட்டு, காலையில் நகரத்துக்குள் போய் வந்து, மதியச் சாப்பாட்டுக்குப் பின் கண்ணயர்ந்து எழுந்து புத்தேரிக்கு வந்திருந்தோம்.

நாங்கள் வந்து சேரும் போது ஐந்தரை ஆகியிருந்தது. கூட்டம் கூட்டமாக ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் குவிந்து கொண்டிருந்தார்கள். அங்கேயே எண்ணெய் சட்டி வைத்து ஜிலேபி சுட்டுக் கொண்டிருந்தார்கள் இரண்டு பேர். விளையாட்டுப் பொருட்கள் விற்கும் கடைகளும் முளைத்திருந்தன. ஆயிரக் கணக்கான மக்கள் கூட்டம் அந்த சின்னத் தெருவில் கூடியிருந்தது.

உறவினர் வீடு அதே தெருவின் மறுபக்கத்தில். அங்கு போய் உட்கார்ந்திருந்தோம். அந்த மாமா, அருகிலேயே வீடு இருக்கும் சித்தப்பா, தூத்துக்குடியிலிருந்து வந்திருந்த அண்ணன் எல்லோரும் ஏற்கனவே போய் விட்டார்களாம். சுக்கு காப்பி குடித்து விட்டு நாங்களும் கிளம்பினோம். வந்து சாப்பிட்டு விட்டுப் போக வேண்டும் என்றும் சொன்னார்கள்.

கூட்டத்துக்குள் புகுந்து வலது புறமாக இருந்து மேடையின் ஏறிக் கொண்டோம். சாமி உயரமானதாக வெளியில் இருந்ததால் எல்லோரும் தடையின்றி பார்க்க முடிந்தது. எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இவ்வளவு பேர் ஒன்று கூடி நூறாண்டு கால பழக்கத்தை மதித்து விழா நடத்துவது இன்றைய ஸ்பென்சர்ஸ் பாணி வாழ்க்கை நிலவும் இதே மண்ணில் நடக்கிறதே என்று.

மேலே இருந்தபடி பார்த்தால் கூட்டத்தில் சித்தப்பா முதலியோரையும் பார்த்து விட்டேன். அடுத்த சுற்றில் மாமா பார்த்து கையசைத்தார்கள். நாங்கள் நின்ற இடத்திலிருந்து மரக்கிளைகள் மறைத்ததால் சாமியின் முகம், கண் திறப்பதைப் பார்க்க முடியவில்லை. ஏதோ ஜைன முனிவர் தவம் இருந்த இடம் என்று அப்பா சொல்லியிருந்தார்கள். இந்தச் சாமி, நாகர்கோவிலின் நாகராஜா கோவில் இன்னும் சில கோயில்கள் ஜைன வழிபாட்டுத் தலங்களாக இருந்திருக்கலாம் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

சரியாக ஆறு மணிக்கெல்லாம் பூசை முடிந்து விட்டது. கூட்டத்துக்குள் நீந்தியபடி ஒருவர் திருநீறு வழங்கியபடியே வந்தார். எல்லோருக்கும் பூசக் கிடைத்து விட்டது. கூட்டம் சிறிது சிறிதாகக் கலைய ஆரம்பிக்க கீழே இறங்கி சித்தப்பாவின் அருகில் வந்தோம். காவடி பார்த்து விட்டு சாமியை சுற்றி விட்டுப் போகலாம் என்று சித்தப்பா சொன்னாலும், மற்றவர்கள் வீடு திரும்ப விரும்ப, திரும்பி விட்டோம்.

கடையிலிருந்து ஜிலேபி வாங்கிக் கொண்டு வந்து விட்டார்கள். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு அப்படியே சித்தப்பா வீட்டுக்கும், மாமா வீட்டுக்கும் போய் விட்டு வருவதாகக் கிளம்பினோம். சாப்பிடத் திரும்பி வந்து விடுவதாகப் பேச்சு.

அந்தத் தெருவில் முனை திரும்பி அடுத்த தெருவிலேயே இருந்தது சித்தப்பாவின் வீடு. வீடு நன்றாக இருந்தது. சித்தப்பா இப்போது தனியாகத்தான் இருக்கிறார்கள். இரண்டு வீடாகக் கட்டியிருக்கிறார்களாம். சிறிது நேரம் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது அத்தையும் மைனியும் வந்தார்கள். மைனியுடன் அவள் மகளும். மகள் பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதியிருக்கிறாளாம்.

அவர்கள் மூவரும் கைநிறைய வாங்கி வந்த பஞ்சாமிர்தத்தில் பங்கு கிடைத்தது. மைனியும் அவள் மகளும் கிளம்பி விட உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம். பக்கத்தில் குலசாமிக்கு பூசை செய்ய அழைத்தார்கள். ஊரில் இருந்த மூன்று கன்னியரை இங்கு பதிந்திருக்கிறார் சித்தப்பா. அத்தோடு மாமா வீட்டுக்குக் கிளம்பினோம்.

வெள்ளி, ஜூன் 15, 2007

பசியும் மருந்தும்

சும்மா சாப்பிட்டுக் கொண்டு தூங்கிக் கொண்டு வாழ யாரும் விரும்புவதில்லை. உருப்படியான வேலைகளைச் செய்து தமது முத்திரையை விட்டுச் செல்ல வேண்டும் என்பது மனிதனின் தேவையாக இருக்கிறது.

ஒவ்வொரு நாளும் மனநிறைவுகள் தேவையாக இருக்கின்றன. மன நிறைவுகள் எங்கிருந்தெல்லாம் கிடைக்கும்:
  1. நல்ல சுவையான சாப்பாட்டைச் சாப்பிட்டால் மனம் நிறைந்து விடலாம்.
  2. மூன்று மணி நேரம் திரைப்படம் ஒன்றைப் பார்ப்பது மனத்துக்கு நிறைவு அளிக்கலாம்.
  3. கிரிக்கெட் போட்டிகள் பற்றிய கட்டுரை ஒன்றைப் படிப்பது நிறைவு அளிக்கலாம்.
  4. சிறுகதை ஒன்றை எழுதி முடித்தால், அல்லது பதிவு ஒன்றை போட்டு விட்டால் திருப்தி ஏற்படும்.
  5. பதிவுகளுக்குப் பின்னூட்டமோ, அல்லது வேறு நண்பர்களிடமிருந்து மின்னஞ்சலோ வந்திருந்தால் ஒரு இனம் புரியாத நிறைவு தெரிகிறது.
  6. புத்திசாலித்தனமாக அலசி ஒரு பிரச்சனைக்கு மென்பொருள் நிரலில் தீர்வு எழுதினால் வருவதும் மனநிறைவு.
  7. ஏழைச் சிறுவன் ஒருவனுக்கு சாப்பாடு போட்டால் வருகிறது மன நிறைவு.
இப்படிப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். ஒரு நாளைக்குப் போதுமான அளவு மனம் நிறையவில்லை என்றால் சோர்வு வந்து விடும். இது எல்லா மனிதருக்கும் பொருந்தும்.

தியாகராய நகருக்குப் போய் சரவணா ஸ்டோர்சில் புடவை வாங்கி விட்டு, முருகன் இட்லிக் கடையில் சாப்பிட்டு விட்டு வந்து விடுவது ஒரு குடும்பத்தலைவிக்கு அந்த நாளுக்கான மன நிறைவைத் தந்து விடலாம்.

அல்லது

தனது மகனின் பள்ளிக்குப் போய் ஆசிரியையைச் சந்தித்து எப்படி குழந்தை படிக்கிறான் என்று பேசி விட்டு வாரா வாரம் ஒரு மணி நேரம் வந்து வேறு ஒரு வகுப்பில் தனக்குப் பழக்கமான இணைய உலகம் பற்றிச் சொல்லிக் கொடுக்க முன்வருவதாக பள்ளித் தலைமையாசியையிடம் ஏற்பாடு செய்து கொண்டு விடுவது நிறைவைத் தரலாம்.

இந்த இரண்டில் எது சிறந்தது?

நேற்று இரவு இரண்டு மணி வரை பார்த்த பங்களாதேசம் - தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் பந்தயம் குறித்து நண்பர்களுடன் இன்று காலை விலாவாரியாக விவாதிக்க முடிந்தது ஒரு மாணவனுக்கு மன நிறைவு தந்து விடலாம்.

அல்லது,

இயற்பியல் பாடத்தில் படித்த மாதிரி ஒன்றை அட்டைப் பெட்டிகளைப் பயன்படுத்தி உருவாக்க இரவு பன்னிரண்டு மணி வரை பிடித்தது. இன்றைக்கு கூடப் படிக்கும் மாணவ மாணவியரை அழைத்துக் காட்டி மகிழ்வது மன நிறைவைக் கொடுக்கலாம்.

எது சிறந்தது?

வார இறுதியைக் கொண்டாட நண்பர்களுடன் கிளப்பில் சீட்டாடி விட்டு சின்னதாக மது அருந்தி விட்டு காலையில் பத்து மணி வரை தூங்கி விட்டு தொலைக்காட்சியில் ஞாயிற்றுக் கிழமை காலை நிகழ்ச்சிகளில் மூழ்கி யிருப்பது ஒருவருக்கு நிறைவைத் தரலாம்.

அல்லது

அவரே அதிகாலையில் எழுந்து தனது அனுபவங்களை எழுதி முடித்து பத்து மணிக்கு அருகிலிருக்கும் இளைஞர் மன்றத்தில் போய் இளைஞர்களுடன் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதில் நிறைவைக் காணலாம்.

எது சிறந்தது?

எதில் நாம் இன்பம், நிறைவு காண்கிறோம் என்பதை கவனிக்க வேண்டும். சின்னச் சின்ன அற்ப விஷயங்களில் மகிழ்ச்சி அடைந்து விட்டால் நிலவை அடைய ஆசை வராது.

சின்னச் சின்ன நிறைவுகளில் தமது மனதை செலுத்திக் கொள்கிறார்கள். நல்ல ஒரு சமையல் செய்து குழந்தைகள், கணவன் அதை பாராட்டி விடுவது, புதிதாக வாங்கிய சேலையை தோழி பார்த்து பாராட்டியது என்று மனத்தை நிறைத்துக் கொண்டால் பசி எங்கே இருக்கும்?

சாப்பிடப் போகும் நேரத்தில் கண்டதை சாப்பிட்டு வயிற்றை நிரப்பிக் கொள்ளாதே என்பார்கள் வீட்டில். 'சாப்பாட்டில் சரியான விகிதத்தில் ஊட்டச் சத்துக்கள் இருக்கும், நீ சாப்பிடப் போகும் நொறுக்குத் தீனி அந்தச் சாப்பாட்டுக்கு இடம் இல்லாமல் செய்து விடும், ஆனால் அதற்கு ஈடான சத்து கிடைக்காது. அதனால் வயிற்றை நிரப்பச் சரியான, தரமான உயர்வான உணவை நாடு' என்பது அதன் பொருள்.

அதே போலத்தான் மனதை நிரப்ப முயலும் மேல் சொன்ன பழக்கங்கள். நொறுக்குத் தீனிகளால் மனதை நிரப்பிக் கொண்டு விட்டால், சாப்பாட்டுக்கு இடம் இருக்காது, சாப்பாட்டுக்கு இடம் இல்லாமல், சரியாகச் சாப்பிடாமல் இருந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்காது.

செவ்வாய், ஜூன் 12, 2007

திருடனாய்ப் பார்த்து திருந்தா விட்டால்.....

ஒரு நாள் காலை:

காவலாளியின் குழந்தை ராகம் இழுத்து அழுதுக் கொண்டே இருந்தது. அந்த பெரிய பையன் சமாதானப் படுத்த முயன்று கொண்டிருந்தான். வடியும் மூக்கைத் துடைக்கிறான். டெக்கான் குரோனிக்கிளும், இந்துவும் வாங்கிக் கொண்டு பக்கத்துக் கடையில் காய்கறி. பாகற்காய், தக்காளி, வாழைப்பழம் வாங்கினேன். கற்பூர வாழை நன்கு பழுத்து சில பழங்கள் அழுகும் நிலைக்குப் போயிருந்தன.

திரும்பவும் வீட்டு வளாகத்துக்குள் நுழையும் போது அந்தப் பெரிய பையன் கையில் பால் கவருடன் வந்து கொண்டிருந்தான். குழந்தையின் ராகம் இழுப்பு இன்னும் நின்றிருக்கவில்லை. பையன் குழந்தையை கைகாட்டி அழைக்க ஓடி வந்தது, பால் பொதியைக் கொடுத்த வுடன் ஆவலுடன் கையை நீட்டி விட்டு, அது சாப்பிடக் கூடியது என்றதும் உடனேயே கோபத்துடன் தட்டி விட்டது. மூக்கு மீண்டும் ஒழுகிக் கொண்டிருந்தது.

'ஏம்மா பசிக்குதா, வாழைப்பழம் சாப்பிடுறியா' என்று கேட்க, 'போய் வாங்கிக்க' என்று சொல்ல, வந்து இரண்டு கையிலும், இரண்டு பழங்களை வாங்கிக் கொண்டது. அவ்வளவு நேரமும் பசியில்தான் அழுதுக் கொண்டிருந்திருக்கிறது. அப்புறம் சத்தமே இல்லை. மீண்டும் ஒரு பெரிய பாரமும் உறுதியும் மனதில் ஏறி உட்கார்ந்து கொண்டது. என்ன அவலம் இது!

டெக்கான் குரோனிக்கிளில் எம் ஜே அக்பர், மன்மோகனாமிக்சைத் தாக்கி கிண்டலடித்திருந்தார. (The 2.5% rate of Growth) 'பெரிய பணக்காரர்களை இன்னும் பணக்காரர்கள் ஆக்குவோம். அவர்களது செல்வத்தில் ஒரு பகுதி ஒழுகி வழிந்து ஏழைகளின் வாழ்வை மேம்படுத்தும்' என்ற மன்மோகன்/சிதம்பரம் பொருளாதாரக் கொள்கைகள், பிஜேபியின் கொள்கைகளை விட எந்த விதத்திலும் உயர்ந்தது இல்லை. ஏதோ கத்துகிறார்களே என்று வேண்டா வெறுப்பாக தேசிய வேலை வாய்ப்புத் திட்டம் போன்றவற்றில் செலவளிப்பதோடு சரி. அரசின் முழுக் கவனமும் வேறு எங்கோதான் இருக்கிறது' என்று சாடியிருந்தார்.

மதியம் வலைப்பூக்களை மேயும் போது ராமச்சந்திரன் உஷாவின் பதிவு மூலம், கல்வெட்டின் பதிவில் இருந்து செய்தித் தகவல். மாதம் நான்கு நாட்களுக்குப் பயன்படுத்த சுகாதாரமான துணிகள் கூட இல்லாமல் இருக்கும் மக்களிடம் பேசிக் கொண்டிருந்த கட்டுரையாசிரியர் தாம் அணிந்திருந்த ஆடைகளைக் குறித்து வெட்கம் அடைந்ததாக எழுதியிருந்தார்.

'என் பணம், என் உழைப்பு, நான் என்ன வேண்டும் என்றாலும் செய்து கொள்வேன், ஏழைகளாக இருப்பது அவர்களது தலைவிதி, சோம்பேறித்தனத்தின் விளைவு, நான் இரண்டு பாசந்தி சாப்பிட்டால் அவனுக்கு என்ன கேடு' என்று உல்லாச வாழ்க்கை வாழும் நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். நாம் பெட்டியில் வைத்துப் பூட்டும் ஒவ்வொரு தேவையில்லாத புடவையும், சட்டையும் பீகாரிலும், தமிழகக் கிராமங்களிலும் வசிக்கும் ஏழைப் பெண்களின் மாதவிடாய்க்குப் பயன்படுத்தப் போகக் கூடிய துணிகளைத் தட்டிப் பறிப்பது போன்றது.

வயிறு நிறையச் சாப்பிட்ட பிறகு, வெறும் நாக்குச் சுவைக்காக இனிப்புகளைச் சாப்பிடுவது, கட்டிடத் தொழிலாளியின் குழந்தைகளுக்கு வயிற்றைக் காயப்போடும் திருட்டுக்கு ஒப்பானது. நமது தேவைக்கு அதிகமான நுகர்வுகளைக் கட்டுப்படுத்துவதுதான் கடவுளுக்கு செய்யும் முதல் வழிபாடு.

ஆடம்பரம் என்ற ஆள்கொல்லி - இந்து நாளிதழில் சாயிராமின் கட்டுரை