வியாழன், டிசம்பர் 02, 2010

குடும்பப் பாசம் கட்சியையும், மாநிலத்தையும் சீரழித்தது

திமுகவின் சார்பில் நீரா ராடியா பேரம் பேசும் ஏற்பாடு எப்படி ஏற்பட்டிருக்கக் கூடும்?

1. திரு மாறன் தேசிய ஜனநாயக கூட்டணி அரசில்  மத்திய அமைச்சராக இருந்த போது, திமுகவின், தமிழ்நாட்டின் நலன்களை பார்த்துக் கொள்ள முடிந்தது. அவரது அனுபவமும், பிற கட்சித் தலைவர்களுடன் இருந்த தொடர்புகளும் பேச்சுவார்த்தைகளை சாத்தியமாக்கியிருக்கும்.

இப்போது திரும்பிப் பார்த்தால், ஈழத்தில் தமிழர் நலனுக்கும் சரியான கவனம் அப்போது இருந்ததை உணர முடிகிறது.

2. மாறனின் மறைவுக்குப் பிறகு, திமுக தேசிய ஜனநாயக கூட்டணி அரசிலிருந்து விலகுவதற்குக் காரணமாகச் சொல்லப்பட்ட ஒரு முக்கிய காரணம், 'அனுபவமே இல்லாத ஒரு இளைஞருக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்க' பாஜக மறுத்து விட்டதாகச் சொல்லப்பட்டது.

இந்தத் திட்டம் காங்கிரசுடனான பேரங்களில் சரிவர நடந்து 2004 தேர்தலில் வெற்றி பெற்று ஐக்கிய ஜனநாயக கூட்டணி அரசில் தயாநிதி மாறன் அமைச்சரானார்.  டி ஆர் பாலு திமுகவின் தில்லி முகமாக செயல்பட ஆரம்பித்தார்.

3. 2009ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு டி ஆர் பாலுவும் கழற்றி விடப்பட்டு கனிமொழி, மாறன், ராசா கைகளில் பேச்சு வார்த்தை விடப்பட்டது. அவர்கள் யாரிடம் பேசுவது, எப்படிப் பேசுவது என்று தெரியாமல் விழிக்க, நீரா ராடியாவின் கையில் திமுகவின் (அவர்களைத் தேர்ந்தெடுத்த தமிழ்நாட்டின்) மானம் அடகு வைக்கப்பட்டிருக்கிறது.

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.

என்று திருக்குறள் படித்த திரு கருணாநிதி,  குடும்பப் பாசம் கண்ணை மறைக்க, அறிஞர் அண்ணா முதல் வைகோ தொடர்ந்து, மாறன் வரை தில்லியில் முன் நிறுத்திய திராவிடக் கட்சிகளின் மதிப்பை அதல பாதாளத்துக்குக் கொண்டு வந்திருக்கிறார்.

(Due to continuous spam, disabled comments - 2-1-2011)

ஈழப் போர்க் குற்றவாளிகள்!

"போர்க் குற்றங்களுக்கு காரணமான மகிந்த ராஜபக்சே, அவரது சகோதரர்கள் ஆட்சியிலும், ஃபொனெஸ்கோ எதிர்க்கட்சியிலும் இருப்பதால், அவை தொடர்பான விசாரணைகளும் மேல் நடவடிக்கைகளும் சாத்தியமில்லை."

"தமிழ் மக்களும் (அப்படி வலியுறுத்துபவர்கள் பழிவாங்கப்படலாம் என்பதால்) இப்போதைக்கு போர்க்குற்ற விசாரணையை பெரிதாக வலியுறுத்தவில்லை."

இலங்கைக்கான அமெரிக்க தூதரின் ஜனவரி 15, 2010 தேதியிட்ட செய்தி

புதன், டிசம்பர் 01, 2010

அரசியலும் தொழில் வணிகமும் - புதிய உலகம்

அரசியல், பன்னாட்டு உறவுகள், வணிக நிறுவனங்களுக்கிடையேயான பரிமாற்றங்கள் அனைத்திலும் மூடிமறைப்பிலேயே பணிகள் நடந்து வந்திருக்கின்றன.

'மக்கள் எல்லாம் ஒன்றும் தெரியாத அப்பாவிகள், நாம் திரைமறைவில் பேச்சு வார்த்தை நடத்தி, பேரம் பேசி முடிவுகள் எடுத்து அறிவிப்போம். அதை மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.'

இந்தியாவில் நீரா ராடியா தொலைபேசி பதிவுகள், அமெரிக்க வெளியுறவுத் துறையின் தகவல் பரிமாற்றங்கள் விக்கிலீக்சால் வெளியிடப்பட்டது இவை தகவல் தொழில் நுட்பப் புரட்சிக்குப் பிறகான புதிய உலகின் நிதர்சனங்கள்.

இதற்கான எதிர்வினையாக, அதிகார வட்டங்களும், வணிக நிறுவனங்களும் தமது தகவல் பரிமாற்றங்களை இன்னமும் ரகசியமாக பூட்டி வைக்க முயற்சிப்பார்கள். இணையத்தின் வெளிப்படையான செயல்பாட்டை முடக்கிப் போடும் சட்டங்களும் ஒப்பந்தங்களும் வர ஆரம்பிக்கலாம். இவை வெற்றி பெற்று விட்டால் ஆர்வெலின் 1984 / மாட்ரிக்ஸ் திரைப்படம் போன்று ஆட்டி வைக்கும் சில சூத்திரதாரிகளுக்கு நாம் ஆடிக் கொண்டிருக்கும் நிலைமை தொடரும்.

இந்தத் தகவல் விடுதலையை (information wants to be free) தடுக்க முடியாவிட்டால், அரசியல்வாதிகளும், அதிகாரிகளும், தொழில் முனைவர்களும் நடந்து கொள்ளும் அடிப்படை முற்றிலும் மாற வேண்டியிருக்கும். நான்கு சுவர்களுக்குள் ஒன்றும், வெளியுலகுக்கு ஒன்றுமாக இரட்டை வேடங்கள் வைத்திருக்க முடியாமல் போய் விடும்.

சிக்கலான பேச்சு வார்த்தைகள், அதீத ஆதாயம் தரும் தொழில் உத்திகளை ரகசியமாக வைத்திருக்க முடியாது என்ற நிதர்சனத்தை ஏற்றுக் கொண்டு அனைவரும் செயல்பட வேண்டியிருக்கும்.

பர்கா தத் - பத்திரிகையாளர்

நீரா ராடியா தொலைபேசி பதிவுகளில் ஊடகத் துறையைச் சேர்ந்தவர்கள் பலர் (ndtvயின் பர்கா தத், இந்தியா டுடேயின் பிரபு சாவ்லா, வீர் சங்க்வி முதலானோர்) தமது எல்லைகளைத் தாண்டியதாக வெளி வந்தது.

1. செய்தி சேகரிக்கிறோம் என்ற ஆர்வத்தில் அதிகார தரகர்களாக இவர்கள் செயல்படுவது தெரியவந்தது.

2. ஒன்றரை ஆண்டுகள் முன்பு நடந்த இந்த உரையாடல்கள் செய்திகளாக வெளியிடாமல் வைத்திருந்தார்கள் - நீரா ராடியா என்ற தொழில் முனைவர் அரசியல் தரகராக செயல்படுவதைக் குறித்து இவர்கள் தமது பத்திரிகை / தொலைக்காட்சியில் விவாதிக்கவில்லை.

3. தொலைபேசி உரையாடல் பதிவுகள் வெளியான பிறகும் அவை பற்றிய விபரங்களை தத்தமது பத்திரிகை / தொலைக்காட்சியில் இருட்டடிப்பு செய்தார்கள்.

வேறு வகையில் ஊழல் அல்லது தவறு செய்யாமல் இருந்தாலும், இந்த அடிப்படை பத்திரிகை தர்மத்தில் அவர்கள் தவறியிருக்கிறார்கள். இதில் அதிகமாக தாக்கப்பட்டவர் பர்கா தத். பர்காகேட் என்று தலைப்பிட்டு இணையத்தில் பரவலான விவாதங்கள் நடந்தன.

ஒரு வழியாக பர்கா தத், சக பத்திரிகை ஆசிரியர்களின் கேள்விகளை சந்தித்து, அந்த நிகழ்ச்சியை சுருக்காமல் அப்படியே ஒளி பரப்பு செய்திருக்கிறார்கள் ndtvயில்.

http://www.ndtv.com/video/player/ndtv-special-ndtv-24x7/barkha-dutt-other-editors-on-radia-tapes-controversy/178964?hp

தவறு செய்வது மனித இயற்கை. செய்த தவறை உணர்ந்து அதிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொண்டு எதிர் காலத்தில் அத்தகைய தவறுகளை தவிர்ப்பதாக உறுதி சொல்வது, சிறந்த மனிதர்களின் அடையாளம்.

பர்கா தத்தும், NDTVயும் தாமதமானாலும் தமது சிறப்பைக் காட்டியிருக்கிறார்கள் and she is pretty :-)

செவ்வாய், நவம்பர் 30, 2010

ரத்தன் டாடாவின் privacy

பட்டப் படிப்பு முடித்த பிறகு வேலையில் சேர்ந்தது டாடா குழுமத்தைச் சேர்ந்த டாடா எக்ஸ்போர்ட்ஸ் (இப்போது டாடா இன்டர்நேஷனல்) நிறுவனத்தின் தோல் பிரிவில். நான்கு ஆண்டுகள் மத்திய பிரதேசத்திலும், 2 ஆண்டுகள் சாங்காயிலும் பணி புரிந்தேன்.

'எதைச் செய்தாலும் விதிமுறைகளுக்கு உட்பட்டு செய்ய வேண்டும்' என்பது அங்கு இயல்பாக பின்பற்றப்பட்டது. சட்ட விரோதமாக, விதிகளை வளைத்து செயல்படுவதும் வணிக நிறுவனங்களில் நடக்கிறது என்பது மற்ற நிறுவனங்களைப் பற்றிப் படித்த போது, மற்ற நிறுவனங்களுடன் உறவாடிய பிறகுதான் தெரிய வந்தது.

டாடா என்றால் நேர்மை என்ற உருவகம் பலரது மனதில் இருக்கலாம். அது பெருமளவுக்கு உண்மையும் கூட. தனிப்பட்ட அலுவர்கள் நேர்மை அற்ற செயல்களை செய்தாலும், நிறுவனத்தின் கொள்கையாக நேர்மையற்ற செயல்களை அவர்கள் அனுமதிப்பதில்லை.

டாடா நிறுவனத்தின் பொருள்களையும் சேவைகளையும் வாங்குவதை நான் பெருமையாகவே நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

=========================

டாடா குழுமத்தின் தலைவர் திரு ரத்தன் டாடா, 'திருமதி நீரா ராடியாவுடனான அவரது தொலைபேசி உரையாடல் பதிவுகளை வெளியிடுவது அவரது அந்தரங்க உரிமைகளுக்கு எதிரானது' என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறாராம்.

========================

அந்தரங்க உரிமை என்பது தனிமனிதர்களுக்கானது. ஒரு வணிக நிறுவனத்துக்கு அந்தரங்கம் எதுவும் இருக்க முடியாது. (தொழில் ரகசியங்கள் - பொருட்களின் விலை நிர்ணயித்தல், தொழில் நுட்ப அறிவு -போன்றவை) இருக்கலாம்.

டாடா போன்ற பெரு நிறுவனங்களின் செயல்பாடுகள் அதில் பணி புரியும் ஊழியர்களுக்கு முழுவதுமாகவும், வாடிக்கையாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் - வணிக நலனுக்குத் தேவையான மறைவைத் தவிர்த்து - பெருமளவும் வெளிப்படையாக இருக்க வேண்டும்.

திருமதி நீரா ராடியாவின் மீது வருமான வரித் துறையின் கண்காணிப்பு இருக்கிறது. அவருடன் திரு ரத்தன் டாடா பேசிய தொலைபேசி உரையாடல்கள் வெளியாவதில் அவருக்கு என்ன மறுப்பு இருக்க முடியும்?

தேவையில்லாத பேச்சுக்களை பொதுவில் வைத்து கிசுகிசு பாணியில் விவாதங்கள் நடப்பதை திரு ரத்தன் டாடா விரும்பாமல் இருக்கலாம். ஆனால். ஊழல் கண்காணிப்பில் இருப்பவர் ஒருவருடனான அவரது உறவாடல்களை ஏன் பொதுவில் விவாதிக்க முடியாமல் போய் விட்டது?

புதன், நவம்பர் 24, 2010

ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா...

இணையத்தில் தமிழில் எழுத இருந்த சிரமங்களை உடைக்க இகலப்பை 1999/2000ம் ஆண்டில் வெளியிடப்பட்டது.

மாறிவரும் தொழில்நுட்பங்களுக்கு ஈடு கொடுக்கும் வண்ணம் முழுவதும் புதிதாக எழுதி வெளியிடப்பட்டுள்ளது இகலப்பை. முகுந்தின் வழிகாட்டலில் தன்னார்வலர்களால் உருவாக்கப்படும் இந்த மென்பொருள் திறவூற்று (open source) மென்பொருளாக வெளியிடப்படுகிறது.

இணையத் தமிழர்கள் அனைவரும் பயன்படுத்திப் பலனடையலாம். உங்கள் கருத்துக்களையும் குறைகளையும் உருவாக்கக் குழுவுக்குத் தெரிவிக்கலாம்.

e-கலப்பை

செவ்வாய், ஆகஸ்ட் 31, 2010

மகஇகவும் இணையமும்

http://www.vinavu.com/2010/08/31/jyovram-pala/

http://www.google.com/buzz/115511813610845200164/bHuJAeb5mQf/வ-னவ-ம-ம-க-இ-க-த-ழர

மகஇகவை மற்ற கட்சிகளோடு ஒப்பிடக் கூடாது என்று எனக்குத் தோன்றுகிறது.

திமுக, அதிமுக, பாமக முதலான கட்சிகள் இந்திய அரசியலமைப்புக்குள், தேர்தலில் போட்டியிடுவது, பத்திரிகைகளில் 'கொள்கை' பரப்புவது, மக்களுக்குப் பிடித்தபடி (அன்றைய தேதியில்) நடந்து கொண்டு பிரபலமடைவது என்று செயல்படுகிறார்கள்.

மகஇகவைப் பொறுத்த வரை, இன்றைய ஆட்சியமைப்பையே முழுமையாக நிராகரிக்கிறார்கள் (என்பது எனக்குப் புரிந்தது). இந்த முதலாளித்துவ சந்தைப் பொருளாதார அமைப்பைத் தூக்கி எறிந்து புதிய சமூகம் உருவாக்குவது அவர்களது நீண்ட கால நோக்கம்.

அதற்கான வேலைகளை மட்டும் செய்து கொண்டே இருக்கும் கர்மவீரர்கள் அவர்கள். இடையில் கிடைக்கும் பதவி, பணம், அங்கீகாரம் எல்லாம் ஒரு பொருட்டே இல்லை. ஜெயிலுக்குப் போவது ஒரு கௌரவம் என்பது கூட ஒத்துக் கொள்ளப்பட மாட்டாது.

அடுத்த 10 ஆண்டுகளில் இல்லா விட்டாலும், 100 ஆண்டுகளிலாவது தாம் நம்பும் சமூகத்தை உருவாக்கி விடலாம் என்ற உறுதியான நம்பிக்கையில், அதற்காக இன்றைய என்ன செய்ய முடியுமோ அதை செய்து கொள்கிறார்கள்

1. மக்கள் பிரச்சனைகளைக் கையில் எடுத்து போராடுவது மூலம் பொது மக்கள் மத்தியில் பணி செய்வது ஒரு பக்கம்.

2. இன்னொரு பக்கம், நீண்ட கால நோக்கில் அறிவுஜீவிகளின் மத்தியில்  கருத்தாக்கம் செய்வது  முக்கியமான பணி.

இரண்டாவது நோக்கத்தின் ஒரு பிரிவுதான் இணையத்தில் செயல்படுவது. மகஇக உறுப்பினர்கள் தாமாகவே இணையத்தில் செயல்பட ஆரம்பித்திருந்தாலும், பின்னர் அவர்களுக்குள் விவாதித்து ஒருங்கிணைந்து செயல்படுகிறார்கள் என்றே நினைக்கிறேன்.

ஞாயிறு, ஆகஸ்ட் 15, 2010

சுதந்திரம்!!!

"நிலம் வாங்கணும் என்றால் என்னிடம் கேட்டிருந்தால் அறிவுரை சொல்லியிருப்பேனே எந்த நிலத்தை வாங்கலாம், எதை வாங்கக் கூடாது என்று. இது போல அரசு நிறுவனத்தின் நிலத்தில் கை வைத்து மாட்டிக் கொண்டாயே" என்று ஊழல் செய்ததாக வழக்கில் சிக்கிய அப்போதைய முன்னாள் முதல்வருக்கு  (செல்வி ஜெயலலிதா) அப்போதைய  முதல்வர் (திரு கருணாநிதி) கருத்து சொன்னார்.

எதைச் செய்தால் மாட்ட முடியாது என்று அலசி ஆராய்ந்து புத்தி கூர்மையுடன் ஊழல் செய்யும் திரு கருணாநிதியின் சாமர்த்தியத்தின் உச்சக்கட்டம் இந்த ஆட்சிக் காலம்.
  • குழந்தையின் கையில் கிலுகிலுப்பை வாங்கித் தருவதாகச் சொல்லி கழுத்தில் போட்டிருக்கும் நகையை அபகரித்துக் கொண்டு போய் விடுகிறார்கள். கிலுகிலுப்பையையும் பறித்துக் கொள்கிறார்கள்.
  • ஓரிரண்டு ஆண்டுகள் கழித்து, நகையை மட்டும் திரும்பக் கொண்டு கொடுத்து விடுகிறார்கள்.
  • குழந்தைக்கும் அதன் பெற்றோருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு நகையின் பயன்பாடும் இல்லை. கிலுகிலுப்பையின் பலனும் இல்லை. 
குழந்தை - எல்நெட் கார்பொரேஷன்
கிலுகிலுப்பை - ஈடிஎல் இன்ஃப்ராஸ்டிரக்சர்
நகை - எல்நெட் கார்பொரேஷனின் சொத்துக்கள்
திருடர்கள் - எல்நெட் மற்றும் ஈடிஎல்லின் நிர்வாகிகள்

பெற்றோர்கள் - எல்காட், தமிழக அரசு, எல்காட்டின் சிறுபான்மை பங்குதாரர்கள்
  1. ஈடிஎல் இன்ஃப்ராஸ்டிரக்சர் என்ற நிறுவனத்திற்கு எல்நெட் கார்போரேஷனின் சொத்துக்களை பயன்படுத்தி விட்டு ஈடிஎல்லின் உரிமை, ஆதாயத்தில் பங்கு எல்லாவற்றையும் தனியார் அடித்துக் கொள்ளும் புத்திசாலித்தனமான ஊழல் வெளியில் வந்திருக்கிறது.
  2. இந்த விபரங்களின் ஒரு நுனியைப் பிடித்துக் கொண்டு விசாரிக்க முனைந்த எல்காட் நிறுவன மேலாண்மை இயக்குநர்கள் சுறுசுறுப்பாக பணி மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
  3. கிரிமினல் மூளைகளின் ஊழல் வேலை ஏதோ துப்பறியும் நாவல் படிப்பது போல இருக்கிறது.  இந்தச் சில கோடிகளுக்கு இவ்வளவு 'உழைத்திருக்கிறார்கள்' என்றால் பத்தாயிரக் கணக்கான கோடிகள் அடித்த விவகாரங்களில் என்னென்னவெல்லாம் நடந்திருக்கும்!
ஒரு ரூபாய் கூட அரசுப் பணத்தை களவாடிய ஒவ்வொருவரையும் அம்பலப்படுத்தி தகுந்த தண்டனை கிடைக்க வைப்பது அவசியம். அது தானாக, ஒரே நாளில் நடந்து விடப் போவதில்லை. திரு உமாசங்கர் போல பொறுமையாக, விடா முயற்சியுடன் வழக்கை எழுப்பி உண்மையை நிலை நாட்ட வேண்டியிருக்கும்.
  • இந்தக் கட்டத்தில் ஊழல் பேர்வழிகளுக்கு தண்டனை கிடைக்காவிட்டால், ஏற்படப் போகும் பொருளாதாரப் பேரழிவில் மக்கள் சிக்கி, பெரும் இன்னலுக்கு வழிவகுக்கும்.
  • 100 கோடி ரூபாய் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது, 60,000 கோடி ரூபாய் ஊழல் என்று சொல்லும் போது அது வெறும் எண்களாகப் போய் நமது மனதை மரக்க வைத்து விட்டது. இந்தப் பணத்தில் ஒவ்வொரு ரூபாயும், சமூகத்தின் மிகவும் நலிந்த பிரிவினரை வாட்டும் வகையில் போய் முடியும்.
  • 60,000 ரூபாய் அடித்ததில் 6,000 கோடி ரூபாய் தேர்தல் லஞ்சமாக வாக்காளர்களுக்குக் கொடுத்து காசு வாங்கியவர்களை மகிழ்வித்து விட்டாலும், மீதி 54,000 கோடி ரூபாய்கள் நாட்டுப் பொருளாதாரத்தில் பாய்ந்து, பொருட்களின், குடியிருப்பின், கல்வியின், மருத்துவ சேவையின் விலை உயர்வாக மக்களை வாட்ட ஆரம்பிக்கும். 
பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காக்க, பொறுப்புள்ள ஒவ்வொருவரும் தமது குரலை உரக்க ஒலிப்பது இன்றைய தேவை.

வியாழன், ஆகஸ்ட் 12, 2010

கம்யூனிஸ்ட் தொழிலாளர் செயல்பாட்டுப் பொதுமேடை

நேற்று ஒரு பொதுக்கூட்டத்திற்குப் போயிருந்த போது வினியோகிக்கப்பட்ட பிரசுரத்தில் எழுதியிருந்தது. Communist Workers Platform (CWP) என்ற பெயரில் வெளியாகியிருக்கும் இந்தப் பிரசுரத்தில் "படியுங்கள் மாற்றுக் கருத்து" என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இணையத்தில் தேடினால் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு வலைப்பதிவும் கிடைத்தது.
http://sattavizhippunarvu.blogspot.com/2010/07/cwp.html

==========

நமது நாட்டின் சமூக அமைப்பு முதலாளித்துவம் ஆகும். இங்கு நிலவுவது முதலாளித்துவ லாப நோக்கப் பொருளாதாரம். லாப நோக்கம் உழைப்பவரையும் நாட்டின் வளங்களையும் சுரண்டி தனியார் கொழுக்க வழிவகுத்துக் கொடுக்கிறது. அதிக எண்ணிக்கையில் நமது நாட்டில் உழைப்பாளர் இருப்பது மிகக் குறைந்த கூலி கொடுத்து சுரண்ட முதலாளிகளுக்கு வாய்ப்பு வசதியை ஏற்படுத்தித் தருகிறது, சுரண்டலின் விளைவாக சமூகத்தின் மிகப் பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் வாங்கும் சக்தி சூறையாடப்படுகிறது. அது முதலாளித்துவ பொருளாதாரத்தில் உற்பத்தித் தேக்க நெருக்கடியினை தோற்றுவிக்கிறது.

நமது நாட்டின் அரசு இந்த முதலாளித்துவத்தின் நலன்களுக்காக அடிப்படையில் இருக்கக்கூடிய அரசு. அது உருவாக்கும் திட்டங்கள், கொள்கைகள் அனைத்தும் முதலாளித்துவத்தின் வளர்ச்சிக்கும், பராமரிப்புக்கும் உதவுபவையே. மக்களின் வாங்கும் சக்தி சூறையாடப்படுவதால் உற்பத்திப் பொருள் விற்பனை குறைந்து ஏற்கனவே இருக்கும் தொழிற்சாலைகளே உற்பத்தியை முழுவீச்சில் தொடரமுடியாமல் திணறுகின்றன, இந்நிலையில் குன்றி வரும் முதலீட்டு வாய்ப்புகளை எப்படியாவது முதலாளிகளுக்கு ஏற்படுத்தி தருவதும் அரசின் பணியாக உள்ளது. நெருக்கடியின் சுமை முழுவதையும் உழைக்கும் மக்கள் மீது முதலாளித்துவம் சுமத்துகிறது. அதனை எதிர்த்து கிளம்பும் உழைக்கும் மக்கள் இயக்கங்களை நசுக்குவதும் திசை திருப்புவதும் முதலாளித்துவ அரசின் முக்கிய பணிகளாக உள்ளன.

முதலீட்டு வாய்ப்பை ஏற்படுத்துவதற்காக பொதுநல அரசு என்ற பாவனையில் அரசு அதன் கைவசம் வைத்திருந்த பொது சுகாதாரம், கல்வி போன்றவற்றையும் கூட தனியார் முதலாளிகளுக்கு தாரை வார்த்து கொடுக்கிறது. உழைக்கும் மக்களை கசக்கிப் பிழிந்து பெரும் வரிப்பணத்தை முதலாளிகளுக்கு மானியமாக வழங்குகிறது . அதைக் கொண்டே உழைக்கும் வர்க்க இயக்கத்தை நசுக்கப் பயன்படும் அடக்குமுறை கருவிகளை மென்மேலும் வலிமைப்படுத்துகிறது.

முதலாளித்துவ நெருக்கடி முற்றிவரும் இன்றைய நிலையில் மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஜனநாயக உரிமைகள் பலவும் பறிபோய்க் கொண்டுள்ளன. அமைப்பு வெகு வேகமாக பாசிசத்தை நோக்கிச் சென்று கொண்டுள்ளது.

இவ்வாறு மக்கள் சந்தித்து கொண்டுள்ள பிரச்னைகள் அனைத்தின் ஊற்றுக்கண்ணாக இருக்கக் கூடிய முதலாளித்துவத்தை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்றி உழைக்கும் மக்களின் நலன் பேணும் சோசலிச அமைப்பை நிறுவுவது உணர்வு பெற்ற உழைக்கும் மக்கள் இன்றைய நிலையில் ஆற்ற வேண்டிய வரலாற்றுக் கடமையாகும். அந்த முதலாளித்துவ எதிர்ப்பு சோசலிச சமூக மாற்றத்தை அடிப்படை அரசியல் வழியாகக் கொண்டு உண்மையான சமூக மாற்ற சக்திகள் அனைத்தையும் ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைத்து சமூக மாற்றத் திசைவழியில் செயல்படுவதற்காக உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருவதே கம்யூனிஸ்ட் தொழிலாளர் செயல்பாட்டுப் பொது மேடை (CWP) அமைப்பாகும்.
==========

கல்லால் அடித்துக் கொல்லப்பட வேண்டும் - கற்கால மனிதர்களின் சட்டம்

இரானில் திருமணத்துக்கு வெளியில் பாலுறவு வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்ணை கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும் என்று விதித்த தண்டனைக்கு எதிராகக் குரலெழுப்புவோம்.

http://english.aljazeera.net/news/middleeast/2010/08/2010812141953137551.html

திங்கள், ஆகஸ்ட் 02, 2010

கீழ்சேவூர் காந்தி - அங்காடித் தெரு - The City of Joy

கீழ்சேவூர் காந்தி

கதவைத் திறந்து வெளியில் வரும் போது குடியிருப்பில் காவல் வேலை பார்ப்பவர் உரக்க பாடிக் கொண்டிருந்தார். வீட்டுக் கதவுக்கு நேரெதிரே எதிர் வீட்டின் முன்பு நாற்காலியைப் போட்டு உட்கார்ந்திருந்தார்.

காலையில் தினகரன் வாங்கிப் படித்துக் கொண்டிருப்பார். 'புத்தகம் ஏதாவது இருக்கிறதா' என்று என்னிடம் கேட்டு வாங்கிக் கொள்வார். வழுக்கைத் தலை, இருந்த முடிகளில் முழுநரை, சிரித்த முகம், மென்மையான பேச்சு.

'உங்க பேரு என்ன, ஊரு என்ன, எப்படி இங்க வந்தீங்க' என்று பேசியது இல்லை. நமக்குள்ளேயே ஆழ்ந்து நமது வேலையிலேயே ஓடிக் கொண்டிருந்து விட்டு மனிதர்களை அணுகத் தெரியாமலே போய் விட்டது.

"நல்லா பாடுறீங்க!" என்றேன். அவருக்கு சரியாகக் கேட்கவில்லை. திரும்ப உரக்கச் சொன்னேன்.
எழுந்து வந்து விட்டார்.

'நான் வே ஷம் எல்லாம் கட்டுவேங்கய்யா! ராமர் வே ஷம், விஷ்ணு வே ஷம் எது தேவையோ அதைக் கட்டுவேன்'

திரைப்படங்களில் பார்த்த விஷ்ணு போன்ற முகவெட்டு இருக்கிறது அவருக்கு. என்ன, முகத்தில் சதைப்பற்று கொஞ்சம் குறைவு அவ்வளவுதான்.

காய்ந்து விட்ட துணிகளை எடுத்து வீட்டில் போட்டு விட்டு வெளியில் புறப்படும் எண்ணத்தில் வந்திருந்தேன்.

'பக்த பிரகலாதாவில் மகாவிஷ்ணுவா வருவேன்'

'அப்போ சிங்க முகம் வைச்சு நடுக்கணும் இல்லையா?'

'அது இல்லையா, அது பெரிய கதை. இரணியன், இரணியாக்கதன்னு இரண்டு பேரு. ஒரு முனிவர் உண்டே, எதுக்கெடுத்தாலும் கோபம் வரும்? துர்வாசர்! ஒரு தடவை விஷ்ணுவப் பார்க்க வரும் போது துவாரகபாலர்கள், விஷ்ணு தூங்கிக் கொண்டிருப்பதால் பார்க்க முடியாது என்று தடுத்து நிறுத்தினார்கள்."

என்று ஆரம்பித்து காட்சிகளை ஒவ்வொன்றாக கோர்வையாகச் சொல்ல ஆரம்பித்தார். பிரகலாதன் கதை தெரிந்திருந்தாலும், இவர் சொன்ன விபரங்கள் புதுப்பித்தலாகத்தான் இருந்தன. சாபம் வாங்கிய துவாரபாலர்கள் - ராவணன்/கும்பகர்ணன், சிசுபாலன்/(இன்னொரு பெயர்) , இரணியன் /இரணியாக்கதன் என்று பிறந்து விஷ்ணுவின் கையாலேயே கொல்லப்பட்டு திரும்ப வைகுண்டம் போனார்களாம். அதில் இரணியனுக்குப் பிறந்தது பிரகலாதன்.

பிரகலாதனுக்கு விஷ்ணு பக்தி தாயின் வயிற்றிலேயே ஊட்டப்பட்டது, பள்ளிப் படிப்பு, அப்பாவை எதிர்த்து நின்றது என்று வேகமாகச் சொல்லி முடித்தார்.

கையில் துணிகளுடன் நின்று கொண்டிருந்த என்னுடைய அவசரம் உணராமல் இருந்தால் இன்னும் நீளமாகக் கூடப் பேசியிருப்பார்.

'எங்க ஊர் விழுப்புரம் பக்கம், கீழ் சேவூர்'

கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கு மேலாக தினமும் பார்ப்பவரிடம் இப்போதுதான் கேட்டுத் தெரிந்து கொண்டேன். அவர் பெயர் காந்தி.

அங்காடித் தெரு
சிறந்த படைப்புகளில் கவனித்த ஒன்று எந்த மனிதர்களுமே செயற்கையான வில்லன்களாக இருக்க மாட்டார்கள்.
  • கடை முதலாளிக்கு குறைந்த செலவில் நிறைய விற்க வேண்டும், லாபம் சம்பாதிக்க வேண்டும்.
  • மேலாளருக்கு வேலைக்கு நிற்கும் இளைஞர்கள் கட்டுக்குள் இருக்க வேண்டும், முதலாளிக்கு விசுவாசமாக உழைக்க வேண்டும். அவ்வப்போது தனது வக்கிரத்தையுமசொரிந்து கொள்ள வேண்டும்.
  • காதலியை மறுக்கும் இளைஞனுக்கு கிராமத்தில் மணிஆர்டருக்குக் காத்திருக்கும் குடும்பம் முக்கியம்.
  • 'வேணாம்னா போ', 'வெளியூருக்குப் போறோம்னு அதிக சம்பளம் எல்லாம் கொடுக்க முடியாது' என்ற அம்மாவுக்குக் கொஞ்சம் இடம் கொடுத்தால் தலைக்கு மேல் ஏறி விடும் இந்த வேலைக்காரர்கள் என்ற கவனம்.
இப்படித் தத்தமது கட்டாயங்களுக்கு, தத்தமது நலனுக்காக மட்டும் இயங்கும் மக்கள் நிரம்பிய நகரத்தில், கிராமங்களிலிருந்து தமது வாழ்க்கையையும் அடையாளங்களையும் தொலைத்து விட்டு வந்து சேரும் இளைஞர்கள் நகர வாழ்க்கையின் மனசாட்சிக்கு வெளியிலேயே வைக்கப்பட்டு விடுகிறார்கள்.

காலையில் நாளிதழ் வீசிப் போகும் பையன், துரித தபால் கொண்டு வந்து கொடுத்து கையெழுத்து வாங்கிப் போகும் இளைஞன், தொலைபேசியில் அழைத்து பில் கட்டச் சொல்லும் பெண் என்று பலர் ஒரு இயந்திரமாகவே பங்கு பெறுகிறார்கள்.

'என் வீடு, என் உறவுகள், என் நண்பர்கள் என்று பட்டியலை கவனிக்கவே மனம் நிறைந்து விடுகிறது. ஆயிரக் கணக்கான வெளி வட்டங்களுக்கு எங்கிருந்து இடம் கிடைக்கும்?' ஒரு மனிதர் 150 உறவுகளைத்தான் பேண முடியும் என்று ஆராய்ச்சி செய்தார்களாம். அதற்கு மேல் உள் வாங்காமாலேயே இருந்து விடுவது பைத்தியம் பிடித்து விடாமல் இருக்க ஒரு தற்காப்புதானாம்.

அப்படியே உறுத்தி கேள்வி எழுந்தால் 'அவன் சின்ன வயதில் சரியா படிக்கலை, அதான் இப்படி கஷ்டப்படுகிறான்' என்று ஒரு விளக்கம் சொல்லி நகர்ந்து விடுகிறோம்.

தந்தை விபத்தில் இறந்ததால், குடும்பத்தின் கடன் சுமையால் 'கெட்டும்' பட்டணம் சேரும் சோகங்கள் உறுத்த இடம் கொடுப்பதே இல்லை.

The City of Joy

அத்தகைய சோகங்களை எல்லாம் பிழிந்தெடுத்து அத்தியாயம் அடுத்து அத்தியாயமாக சகதியிலும், சாக்கடையிலும், அழுகும் சதை நாற்றத்திலும், குப்பையில் பொறுக்கிய உணவுப் பொருட்களிலும், உறிஞ்சப்படும் ரத்தத்திலும் நம்மை மூழ்கடிக்கிறார் டொமினிக் லேப்பியர்.

'இந்தியாவின் வறுமையை வெளிச்சம் போட்டுக் காட்டி விட்டார்' என்று "தேசபக்தர்"களால் பழிக்கப்படக் காரணமாக இருந்த புத்தகம். சைதாப்பேட்டையில் பழைய புத்தகங்கள் விற்கும் நடைபாதை விரிப்பில் கிடைத்தது. ஏதோ தனியார் சங்கத்துக்காக அழகாக பைண்டு பண்ணி வைத்திருந்த பதிப்பு. புத்தகத்துக்குள் 50 ரூபாய் என்று ஒரிஜினல் விலை பொறித்திருந்தார்கள், விற்றவர் 60 ரூபாய் வாங்கிக் கொண்டார்.

பிச்சை எடுக்கும் குழந்தைகள், நடைபாதையில் தூங்கும் மக்கள், கொத்து வேலைக்கு வரும் வேற்று மொழி பேசுபவர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருபவர்கள், மருத்துவமனைக்கு வெளியே சாப்பாடு விற்பவர்கள் என்று நகரத்தில் சந்திக்கும் ஒவ்வொரு மனிதருக்கும் பின் ஒரு வரலாறு.

அவர்கள் எல்லோருமே 'சின்ன வயதில் சரியாகப் படிக்காமல்' பட்டணத்து அவல வாழ்வில் வந்து சேர்ந்து விடவில்லை.
  • கைக்கும் வாய்க்குமாக வானம் பார்த்த விவசாயம் செய்த குடும்ப மூத்த மகன், ஒரு பருவம் மழை பொய்த்ததும் குடும்ப நலனுக்காக மனைவி குழந்தைகளுடன் நகரம் வருகிறார்.

    பட்டினி, குழந்தைகள் குப்பையில் பொறுகிக் கொண்டு வரும் உணவு, ரத்தம் கொடுத்து சம்பாதிக்கும் பணம், கடைசியில் கை ரிக் ஷா இழுக்க ஆரம்பித்தல், நடைபாதையிலிருந்து ஒரு சேரி, அங்கிருந்து துரத்தப்பட்டு இன்னொரு சேரி, மகளுக்கு கல்யாணம் செய்து வைத்ததோடு உயிரை விடுகிறார். கல்யாணச் செலவுக்காக இறந்த பின் தன் எலும்புகளை முன் கூட்டியே விற்று விடுகிறார்.

  • மண்பானை செய்யும் பரம்பரையினர் பிளாஸ்டிக் குடங்கள் படை எடுத்ததும் வாழ்வாதாரம் இழந்து பட்டணம் வருகிறார்கள்.

  • காட்டில் வாழும் பழங்குடி மக்கள், நகர நாகரீகத்தின் நில ஆதிக்கத்தில் உதைக்கப்பட்டு நகரத்தில் வந்து விழுகிறார்கள்.

  • மூன்றாவது பாலினர், கலப்பு பாலினர் சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்படாமல் நகரத்துக்குள் தஞ்சம் புகுகிறார்கள்.
எல்லோருமே கனவுகளும், சுய மதிப்பும், பெருமையும் நிறைந்த மனிதர்கள்.
  • அறைக்குள் தூங்கும் போது எலிகள் சுற்றி விளையாடுகின்றன
  • கரப்பான் பூச்சிகள் ஓட்டப் பந்தயம் நடத்துகின்றன.
  • கைகால் நகர்த்த முடியாமல் இருப்பவரின் கால் கைகளை எலிக்கள் கரம்பித் தின்று விடுகின்றன.
  • துப்புரவுத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தால், மழை நீரும் மல நீரும் கலந்து வீட்டுக்குள் நிரம்பி நிற்கிறது.
இப்படி மூச்சு முட்ட முட்ட வாசகரை முக்கி எடுக்கிறார் ஆசிரியர். அமெரிக்காவிலிருந்து சேவை செய்ய வரும் மருத்துவ இளைஞர், இந்தச் சூழலிலிருந்து வெளி வந்து மூச்சு இழுக்க டாக்சியில் ஏறி ஐந்து நட்சத்திர விடுதிக்குப் போகிறார். இந்தச் சூழலிலேயே மூழ்கி விட வேண்டும் என்று போலந்து பாதிரியார் வந்து தங்கி விடுகிறார்.

இந்தப் புத்தகத்தை இன்னொரு முறை படிக்க முடியுமா? தெரியவில்லை. சில வாரங்கள் கழித்து, ஏதாவது நிகழ்வை மறுபடியும் வாசிக்க தோன்றலாம். அதில் ஆரம்பித்து புத்தகத்தை முழுவதும் படித்து விடலாம்.

பாதுகாத்து வைத்துக் கொள்ள வேண்டிய புத்தகம்.

வெள்ளி, ஜூலை 30, 2010

கேள்விக்குப் பதில் கிடைக்குமா? - 5

திருமதி ராஜாத்தி அம்மாள் தமிழக அரசு நிர்வாகத்தில் எந்தப் பதவி வகிக்கிறார்? எந்த அதிகாரத்தின் கீழ் அவர் அரசுப்பணியாளர்களை அழைத்து பேசுகிறார்?

திரு உமாசங்கர் எல்காட்டின் நிர்வாக இயக்குனராக பணியாற்றும் போது திருமதி ராஜாத்தி அம்மாள் ஆழ்வார்பேட்டையில் இருக்கும் அவரது அலுவலகத்துக்கு திரு உமாசங்கரை இரண்டு முறை அழைத்தார்.

மீனவர்களுக்கான 45,000 வயர்லெஸ் கருவிகள் வாங்குவதற்கான ஒப்பந்தத்தை தனது ஆட்களுக்குக் கொடுக்கும்படி திரு உமாசங்கரிடம் வலியுறுத்தினார்.

திருமதி ராஜாத்தி அம்மாள் தமிழக அரசு நிர்வாகத்தில் எந்தப் பதவி வகிக்கிறார்? எந்த அதிகாரத்தின் கீழ் அவர் அரசுப்பணியாளர்களை அழைத்து பேசுகிறார்?

வியாழன், ஜூலை 29, 2010

கேள்விக்குப் பதில் கிடைக்குமா? - 4

1996ல் திரு உமாசங்கர் உயர் மட்ட ஊழல்களைப் பற்றி விசாரிக்க கூட்டுக் கண்காணிப்பு ஆணையராக நியமிக்கப்பட்டார்.

1. சௌத் இந்தியா ஷிப்பிங் கார்பொரே ஷன் பங்கு வினியோக ஊழல் - ரூபாய் 200 கோடிகள் இழப்பு

2. கிரானைட் குவாரி குத்தகை ஊழல் - ரூபாய் 1000 கோடிகள் இழப்பு

3. தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வீட்டு மனை மற்றும் வீடுகள் போலி பெயர்களில் வழங்கப்பட்டது. (இழப்பு மதிப்பிடப்படவில்லை)

4. விதிமுறைகளுக்கு மாறாக தேவையை கணக்கிடாமல் 45000 தொலைக்காட்சி ஆன்டெனா மற்றும் பூஸ்டர்கள் வாங்கியது

5. கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரியின் 20 ஏக்கர் நிலத்தை மகளிர் மற்றும் குழந்தைகள் நலம் என்ற பெயரில் நட்சத்திர விடுதி போன்றவற்றுக்கு குத்தகைக்கு விட்டது

6. மதுரை / தேனி மாவட்டங்களில் உள்ள மேகமலை காட்டுப் பகுதியில் 7106 ஏக்கர் நிலத்துக்கான பட்டா ஒரே குடும்பத்துக்கு வழங்கப்பட்டது.

போன்ற முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டு உயர் அதிகாரிகள், முன்னாள் அமைச்சர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. எந்த அதிகாரி மீதும் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

கண்காணிப்பு ஆணையரின் இந்த அறிக்கைகளின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?

கேள்விக்குப் பதில் கிடைக்குமா - 3

1995ல் மதுரை மாவட்டத்தில் ஜவஹர் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களுக்கு சுடுகாடு கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட நிதி தவறாக பயன்படுத்தப்பட்டது.

ஒரு தனியார் குத்தகைதாரருக்கு வேலையை கொடுக்கும்படி மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த ஆணையை பின்பற்ற மறுத்து அப்போதைய கூடுதல் ஆணையர் (DRDA), திரு உமாசங்கர் நீதி மன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.

சென்னை உயர்நீதி மன்றம், வழக்கில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையை ஏற்று, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது (WP No 15929/1995). இந்த ஊழலில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த வழக்கின் சிபிஐ விசாரணை எந்த நிலையில் உள்ளது?

=========================

சமீபத்தில் தற்காலிக பதவி நீக்கம் செய்யப்பட்டு, தமிழக அரசால் பழி வாங்கும் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படும் இந்திய ஆட்சிப் பணி அலுவலர் திரு உமாசங்கர் சந்தித்த அரசியல் நெருக்கடிகள், ஊழல்கள் குறித்த தகவல்களின் அடிப்படையில்.

கேள்விக்குப் பதில் கிடைக்குமா? - 2

சுமங்கலி கேபிள் விஷன் என்ற நிறுவனம் தனது ஏகபோக ஆதிக்கத்தை நிலைநிறுத்த அரசு நிறுவனத்தின் சொத்துக்களை சட்ட விரோதமாக அழித்தது.

சுமங்கலி கேபிள் டிவி நிறுவனம், அரசு கேபிள் நிறுவனத்தின் (2008ம் ஆண்டில்) ஃபைபர் ஆப்டிக் கம்பி கட்டமைப்பை அழிக்கும் வேலையை பரவலாக செய்து வந்தது. சுமங்கலி கேபிள் விஷன், தமிழ் நாட்டில் கேபிள் தொலைக்காட்சி வினியோகத்தில் தனது ஏகபோக உரிமையை தொடர்ந்து நிலைநாட்ட எல்லா முயற்சிகளையும் எடுத்து வருகிறது.

சுமங்கலி கேபிள் விஷனின் கிரிமினல் செயல்களும் அரசுச் சொத்தை அழிக்கும் சுமங்கலி கேபிள் நிறுவனத்துக்கு ஆதரவு அளித்து வந்த ஒரு மாநில அமைச்சரின் பங்கும் தமிழக அரசின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டன.

சுமங்கலி கேபிள் நிறுவனத்தின் உரிமையாளர்களை கிரிமினல் சட்டங்களின் கீழ் கைது செய்யும்படி பரிந்துரையும் அரசு கேபிள் நிறுவனத்திலிருந்து அனுப்பப்பட்டது.

'கண்கள் பனித்து இதயம் இனித்த' பிறகு இப்போது அரசு கேபிள் நிறுவனம் கிட்டத்தட்ட உயிரை விட்டு விட்டது. சுமங்கலி கேபிள் விஷனின் கிரிமினல் செயல்களும் அதனால் அழிக்கப்பட்ட அரசு சொத்துக்களும் கேட்பாரற்றுப் போய் விட்டன.

அரசு கேபிள் நிறுவனம் என்ன நிலைமையில் இருக்கிறது? அதில் எவ்வளவு மக்களின் வரிப்பணம் செலவழிக்கப்பட்டது? சுமங்கலி கேபிள் விஷனுக்கு எதிராக அரசு அதிகாரிகள் பரிந்துரைத்த நடவடிக்கைகள் எந்த நிலையில் இருக்கின்றன?

==========================
சமீபத்தில் தற்காலிக பதவி நீக்கம் செய்யப்பட்டு, தமிழக அரசால் பழி வாங்கும் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படும் இந்திய ஆட்சிப் பணி அலுவலர் திரு உமாசங்கர் சந்தித்த அரசியல் நெருக்கடிகள், ஊழல்கள் குறித்த தகவல்களின் அடிப்படையில்.

கேள்விக்குப் பதில் கிடைக்குமா? - 1

அரசுக்கும் மக்களுக்கும் சொந்தமான கோடிக்கணக்கான மதிப்பிலான நிலமும் கட்டிடமும் ஏப்பம் விடப்பட்டுள்ளன.

தமிழக அரசு நிறுவனமான எல்காட் நிறுவனமும் நியூ எரா டெக்னாலஜிஸ் என்ற தனியார் நிறுவனமும் இணைந்து எல்நெட் (ELNET) டெக்னாலஜிஸ் லிமிடெட் என்று நிறுவனத்தை உருவாக்கின. எல்காட் 26% பங்குகளும், நியூ எரா 24% பங்குகளும் வைத்திருந்தன, மீதி 50% பங்குகள் பொது மக்களுக்கு விற்கப்பட்டன.

சென்னையை அடுத்த பள்ளிக்கரணையில் தகவல் தொழில் நுட்ப பூங்கா மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கும் நோக்கத்துடன் மேலே சொன்ன எல்நெட், ஈடிஎல் (ETL Infrastructure) என்ற நிறுவனத்தை தொடங்கியது. எல்நெட் நிறுவனத்தை அடகு வைத்து வாங்கிய 81 கோடி ரூபாய் கடன் ஈடிஎல்லுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசால் சிறப்பு பொருளாதார மண்டல அந்தஸ்து கொடுக்கப்பட்ட 26 ஏக்கர் நிலம் ஈடிஎல்லிடம் இருக்கிறது. 18 லட்சம் சதுர அடி தகவல் தொழில் நுட்ப கட்டிடம் ஒன்றை இந்த சிறப்பு பொருளாதார மண்டலத்தில் ஈடிஎல் கட்டி வருகிறது.

இந்த நிறுவனம் திடீரென்று மர்மமான முறையில் எல்நெட் (அதன் மூலம் எல்காட்) கட்டுப்பாட்டிலிருந்து மறைந்து போனது.

இது எப்படி நடந்தது என்று கண்டு பிடிக்கவும், முறைகேடுகளை தடுக்கவும், எல்நெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரை பதவி நீக்கம் செய்ய ஒரு சிறப்பு தீர்மானம் எல்காட் நிர்வாக இயக்குனரால் முன்மொழியப் பட்டது.

நிறுவனத்தின் ஆண்டு பங்குதாரர் கூட்டம் ஜூலை 30, 2008ல் நடைபெற இருந்தது. இந்த சூழலில், 2008ம் ஆண்டு ஜூலை 28ம் தேதியே எல்காட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பதவி மாற்றம் செய்யப்பட்டார்.

அரசுக்கும் மக்களுக்கும் சொந்தமான பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான நிலமும் கட்டிடமும் யாருக்கு போய்ச் சேர்ந்தன? அரசு நிறுவனம் ஏற்பாடு செய்த கடன் என்ன ஆனது?
==========================
சமீபத்தில் தற்காலிக பதவி நீக்கம் செய்யப்பட்டு, தமிழக அரசால் பழி வாங்கும் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படும் இந்திய ஆட்சிப் பணி அலுவலர் திரு உமாசங்கர் சந்தித்த அரசியல் நெருக்கடிகள், ஊழல்கள் குறித்த தகவல்களின் அடிப்படையில்.

திங்கள், ஜூலை 26, 2010

நியாயமான விலை

வீட்டில் சமையல் வாயு தீர்ந்து விட்டது.

தொலைபேசி சொன்னால் மாலையில் ஆறு மணிக்கு மேல் ஒரு இளைஞர் இரு சக்கர வண்டியில் கொண்டு வந்து சேர்த்தார். 800 ரூபாயைக் கொடுத்தால்

"ஒரு அஞ்சு ரூபாய் இருந்தா கொடுங்க சார்!'

"அஞ்சு ரூபாய் எதுக்கு....."

"மொத்தம் 755 ரூபாய், 50 ரூபாய் திருப்பித் தருகிறேன்"

"ஏம்பா, 725 ரூபாய் விலை, 25 ரூபாய் சேர்த்து, 750 என்று எடுத்துக்க வேண்டியதுதானே!"*

"இல்ல சார், என்னோட சேவைக் கட்டணம், 30 ரூபாய், 755 ஆகுது"

நியாயம்தானே, அவரது கட்டணத்தை எப்படிக் குறைத்துக் கொள்ள முடியும்.

"சார் அடுப்புக்கு வாயு போகும் குழாய் பழசாகி வெடித்துப் போயிருக்கு, மாத்திடுங்க, 200 ரூபாய்க்கு புதுசு வருகிறது"

"சரிப்பா, நாளைக்கு இந்த பக்கம் வந்தா ஒண்ணு கொண்டு வந்து மாட்டி விடு"

"நீங்க இருக்கீங்களான்னு ஃபோன் பண்ணிட்டு வரேன்."

அடுத்த நாள் தொலைபேசி விட்டு வந்து புது குழாயைப் பொருத்தி விட்டார். 200 ரூபாய் கொடுத்தால்,

"இன்னும் 15 ரூபாய் கொடுங்க சார், என்னோட கட்டணம்"

கணக்கு கறாராக இருக்கிறது.

வெளியில் போகும் போது,
"உங்க கிட்ட ஏதாவது பழைய நோக்கியா சார்ஜர் இருக்குமா சார், தேவைப்படுகிறது"

இரண்டு நாட்கள் முன்புதான் கெட்டுப் போன தொலைபேசிக்கு மாற்றாக புதிது வாங்கியிருக்க பழசின் மின்னேற்றி இருந்தது. சரியாக எப்படி தெரிந்தது?

"அதுக்கு என்ன விலை தருவே? கடையில் என்ன விலைக்கு விற்கிறதோ அதில் பாதி கொடுத்து விடு"

ஒரு நிமிடம் திகைப்பு.
"சரிதானே சார், நான் என் கட்டணத்தைக் கறாராக வாங்குவது போல பொருளையும் விலை கொடுத்துதானே வாங்கணும். டூப்ளிகேட் சார்ஜர் 60 ரூபாய்க்குக் கிடைக்கிறது. 25 ரூபாய் தருகிறேன்"

25 ரூபாய் வாங்கிக் கொண்டு கொடுத்து விட்டேன்.

*caltex என்ற பெயரில் கிடைக்கும் தனியார் சேவையைத்தான் பயன்படுத்துகிறேன். 12 கிலோ வாயு உருளையின் விலை ரூபாய் 725/-
குறைந்த வருமானத்தில் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் ஏழை மக்களுக்காக அரசு கொடுக்கும் சலுகை விலை சமையல் வாயு சேவையை பயன்படுத்துவதில்லை - அங்கு 14 கிலோ உருளையின் விலை ரூபாய் 355/-

வெள்ளி, ஜூலை 23, 2010

கண்டனங்கள்!

அரசியல் அடக்குமுறைகள்

திரு உமாசங்கரின் மீதான பழி வாங்கும் நடவடிக்கைக்குக் கண்டனங்கள்.
பதிவர் சவுக்கு மீதான காவல் துறை நடவடிக்கைக்குக் கண்டனங்கள்

சுமங்கலி கேபிள் நிறுவனத்தை அரசு நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர வேண்டும்.

ஞாயிறு, ஜூலை 18, 2010

தமிழக அரசியல் அசிங்கம்!

உமாசங்கர் ஐ.ஏ.எஸ்: கருணாநிதி குடும்ப ஆட்சிக்குப் பலிகடா!

1. திருவாரூர் மாவட்ட ஆட்சியாளராக இருக்கும் போது மாவட்ட நிர்வாகப் பணிகளில் கணினி மயமாக்கம் ஆரம்பித்து இந்தியாவிலேயே (ஏன், உலகிலேயே) அரசுப் பணிகளில் கணினி பயன்படுத்தலுக்கு முன்னோடியாக திருவாரூர் மாவட்டத்தை மாற்றினார்.

இது நடந்தது முந்தைய 1990களின் இறுதியில் முந்தைய திமுக ஆட்சியின் போது.

2. ஆட்சி மாறி அதிமுக பதவிக்கு வந்த போது இலாகா இல்லாத அதிகாரியாக மாற்றப்பட்டு ஒதுக்கி வைக்கப்பட்டார்.

3. மீண்டும் ஆட்சி மாறிய பிறகு, எல்காட் நிறுவனத்தின் செயலராக இருந்த போது பள்ளிகளுக்கு கணினிகளை திறவூற்று மென்பொருட்களுடன் வினியோகித்தார். தமிழ்நாட்டில் திறவூற்று மென்பொருட்களை பரவலாக்க பல முயற்சிகளை எடுத்தார்.

குறைந்த விலையில் மடிக்கணினிகளை மாணவர்களுக்குக் கிடைக்கச் செய்யும் திட்டத்தை செயல்படுத்தினார்.

4. ஏதோ அரசியலினால் அந்தப் பதவியிலிருந்து மாற்றப்பட்டு அரசு கேபிள் திட்டத்துக்கு நியமிக்கப்பட்டார்.

அந்தத் திட்டத்தையும் சிறப்பாக செய்து முடித்திருப்பார், இந்த குடும்ப அரசியல் காய் நகர்த்தல்களில் மாட்டிக் கொண்டு மீண்டும் ஒரு திறமையான அதிகாரி, செய்து காட்டும் முனைப்புடைய அதிகாரி, சமூக பொறுப்புணர்வு கொண்ட அதிகாரி பணி முடக்கப்பட்டிருக்கிறார்.

தமிழ்நாட்டின் சாபக் கேடு இது.

வெள்ளி, ஜூலை 16, 2010

A call for justice to humanity - 1 (to Indian citizens from other states)

Mr. K Muthukumar sacrificed himself at the prime of his life to highlight the plight of Tamils suffering in SriLanka. At the height of war between LTTE and SriLankan government in 2009, he immolated himself protesting against the commissions and omissions of Tamil Nadu government and Indian central government.

He wrote a 4 page statement before his death addressing Tamil citizens of India, citizens of other states in India and the international community.

This is a translation of the message in English. As Muthukumar states Tamils are "a community with a great sense of justice to humanity".

Please read the dyeing declaration of an ordinary Indian citizen. Look at how he is trying to be just and fair even after deciding to take his own life for the sake of a suffering people.

Brothers from other states of India living in Tamil Nadu!,

You would have experienced that Tamil Nadu is a state where you can live with peace and security which may not be available even in your own state

Today, we are in a critical situation. Our brothers in Eelam (Sri Lankan Tamil areas) are being killed in our name as Indians by our government.

Indian government seeks to isolate us in this struggle. We do not want that to happen.

Hence, please let the central government know that our brothers who are fighting have your support also. Take up with those of your nationality who are part of governments.

Such an act of historical significance on your part would not only strengthen our hands but also prevent the danger of a Navnirman Seva or Sriram Seva emerging in Tamil Nadu in future.

முத்துக்குமாரின் இறுதி வேண்டுகோள் - 8 - பதினான்கு அம்ச கோரிக்கைகள்

காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியை விடக் கொடுமையானது

- எனது பதினான்கு அம்ச கோரிக்கைகள் -
  1. இந்தியா உடனடியாக தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் துருப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடார் போன்ற உதவிகளைச் செய்யக்கூடாதென்று சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். இலங்கையோடு இந்தியா அரசு நடந்தும் முக்கியத்துவமற்ற பேச்சுப்பரிமாற்றங்கள்கூட சர்வதேச சமூகம் மூலமாகவே நடக்க வேண்டும். தமிழக மக்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழத்தாரிடமும் இந்தியா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.

  2. ஐ.நா. பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படக்கூடாது.

  3. இலங்கை அரசு எந்தெந்த நாடுகளிடமெல்லாம் கோரப்பட்டு புலிகள் மீது தடை விதிக்கப்பட்டதோ அந்தந்த நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றத்திற்காக சிறையிலிருக்கும் அதன் உறுப்பினர்கள் எதுவித நிபந்தனையுமற்று உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

  4. புலிகளின் உறுப்பினர்கள் மீதான பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

  5. புலிகளோடு தொடர்புடையது என்னும் குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட தொழில் நிறுவனங்களின் உரிமம் மீண்டும் அளிக்கப்படுவதோடு, தக்க நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும்.

  6. ராஜீவ் காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் இனம் காணப்பட வேண்டும்.

  7. பிரணாப் முகர்ஜி, கோத்தபாய ராஜபக் ஷே, சந்திரிகா, உதயணகார, கேகலிய ரம்புக்வெல, பசில்ராஜப்க்ஷ, மகிந்த, பொன்சேகா போன்றோர் நார்கோ அனிலிசிஸ் சோதனைக்குப்பட வேண்டும்.

  8. அமைக்கப்படபோகிற தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டுகே சர்வதேசம் மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமையவேண்டும என்பதை தமிழீன மக்கள் தான் முடிவுசெய்வார்கள்.

  9. புலிகள் கை பலவீனமான நேரத்தில், மலையக மக்கள் மீது நடந்து வந்த தாக்குதல், எதிர்காலத்தில் அப்பகுதிகளில் மீண்டும் ஒரு பாரிய இன அழிவு ஏற்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், மலையக மக்கள் தமிழீழத்தோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலம் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும் இந்த விசயத்தில் மலையக மக்களின் முடிவே இறுதியானது.

  10. சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் தண்டணைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்கும் இலங்கைக்குத் தப்பிச்சென்று விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக போலிசார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

  11. பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.

  12. தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

  13. தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத் தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.

  14. சுட்டுக்கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதாரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.

முத்துக்குமாரின் இறுதி வேண்டுகோள் - 7 - சர்வதேச சமூகத்துக்கு

அன்பிற்குரிய சர்வதேச சமூகமே, நம்பிக்கைக்குரிய ஒபாமாவே,

உங்கள் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது.

ஆனால், இறையான்மை கொண்ட ஒரு குடியரசு தம் குடிமகனை இன ஒதுக்கல் மூலமாக கொடுமைப்படுத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.

வசதிக்காக அமெரிக்காவின் கடந்த காலத்தையே எடுத்துக்காட்டாக சொல்லலாம். உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை மாவீரன் முகமதலி சொன்னானே, என் சருமத்திலிருக்கும் கொஞ்சம் வெண்மையும் கற்பழிப்பின் மூலமாகவே வந்திருக்குமென்று...

நீங்கள் அமைதியாக இருக்கும் வரை இந்தியா வாயே திறக்காது. ஒட்டுமொத்த தமிழர்களும் அழிக்கப்பட்ட பிறகு வேண்டுமானால் அது நடக்கும். அதுவரை, இந்தியாவின் வாயைப் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா?

வன்னியில், விடுதலைப் புலிகளூக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்கள் என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை செய்தார்கள்? இது ஒன்று போதுமே, தமிழ்மக்கள் விடுதலைப் புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு.

இது இனப்படுகொலை இல்லையா? இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும், ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக இந்தியா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொல்கின்றனரென்றால், நீங்கள் உங்கள் மெளனத்தின் மூலமாகவும், பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை ஏன் உணரவில்லை?

ஆயுதம் தாங்கி போராடுவதால் மட்டுமே யாரும் தீவிரவாதியாகிட மாட்டார்கள்.

அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை

என்று பாடியுள்ளான் எங்கள் திருவள்ளுவர்.

புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிறார் ஜெயலலிதா - என்னவோ பிரச்சினையே புலிகள் ஆயுதம் எடுத்ததால்தான் வந்தது என்பதைப் போல.. உணமையில், புலிகள் தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்களே தவிர, காரணகர்த்தாக்கள் அல்லர் (They are not the reason; just an outcome)

இந்திய அரசு இந்தப் பிரச்சினையில் ஈடுபட்டிருப்பது வெளிப்படையாகாத வரை, இலங்கைப் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை. அதில் தலையிட முடியாது என்றது. சீனா, பாகிஸ்தான் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையில் ஆதிக்கம் பெறுவதைத் தடுப்பதற்காக செய்வதாகச் சொன்னது.

நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்தியது, மும்பை தொடர் வெடிகுண்டுகள், பிறகு அண்மையில் நடந்த தாக்குதல் எனப் பலவாறாக இந்திய மக்களைக்கொன்று குவித்த பாகிஸ்தானோடு இணைந்து கொண்டு தமிழர்களைக் கொன்று குவிக்கிறது.

அப்படியானால், பாகிஸ்தானின் இந்தியா மீதான பயங்கரவாதமென்பது இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு அதிகார வர்க்கங்களும் தங்கள் மக்களைச் சுரண்ட பரஸ்பர புரிதலுடன் உருவாக்கிக் கொண்ட ஒன்று என்ற எம் சந்தேகம் ஒருபக்கம் இருக்க, இப்போது, விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள் அதனால்தான் சண்டை என்கிறது.

ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்கிறது. ராஜீவ் காந்தி ஒரு கவுன்சிலரோ, மாவட்டச் செயலாளரோ அல்ல. அவரை ஏற்கனவே ஒருமுறை கொலை செய்யும் முயற்சி இலங்கையில் நடைபெற்றிருந்த போதும் அந்தக் கொலைகாரன் விசாரிக்கப்படவில்லை. ராஜீவ் காந்தியின் கொலை மறுபடியும், இன்டர்போல் மூலமாக, அந்தக் கொலையின் மூலமாக பலனடைந்தவர்களையும், இலங்கை உளவுத் துறை, ராஜீவ் காந்தியைக் கொல்ல முயன்ற அந்த சிங்கள வீரன் ஆகியோரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இணைத்துக்கொண்டு மறுபடியும் விசாரிக்கப்பட வேண்டும் என்பது என் கோரிக்கைகளில் ஒன்று.

ராஜீவ் மீது புலிகளுக்கு வருத்தம் இருந்திருக்கலாமே தவிர, கோபம் இருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், ராஜீவ் இந்திராவின் புதல்வர். இந்திரா, தமிழீழத்தின் சிறு தெய்வங்களில் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்திலிருப்பவர்.

இந்தியா சொல்லும் காரணங்கள் அடிக்கடி மாறுவதிலிருந்தே இந்தியா நியாயத்திற்குப் புறம்பாகத்தான் இந்தப்போரில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் நீங்கள் ஏன் நேரடியாகத் தலையிடக்கூடாது?

புலிகள் போர் நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஆயுதம் குவிக்கிறார்கள் என்றது இலங்கை. சந்திரிகாவோ, ரணிலோ, மகிந்தாவோ கடந்த காலங்களில் ஒரு கடவுளாக அல்ல, மனிதர்களாகக்கூட நடந்துகொண்டதில்லை. இவர்கள் ஒரு நிர்ப்பந்தத்தின் பெயரில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுவிட்டார்கள் என்பதால் மட்டுமே போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட வேண்டும். புனரமைப்புப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று எதிர்பார்ப்பது என்னவகை நியாயம்? தாங்கள் நேர்மையாக நடந்துகொள்வோம் என்ற நம்பிக்கையை உண்டாக்குவது மூலமாக மட்டுமே போராளிகளைல-ஆயுதத்தைக் கீழே வைக்கச்செய்ய முடியும். கடந்த கால அரசுகள் எவையும் அப்படி செயல்படவில்லை. உதாரணம் ரணில்-கருணா.

ஆனால், புலிகள் போர் நிறுத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு செய்தது ஆயுதம் வாங்கியது மட்டுமல்ல, அது காலாகாலமாக நடப்பதுதானே- ஓர் அரசு நிர்வாகத்தையே உருவாக்கியுருக்கிறார்கள். சர்வதேசத்தின் கண்களில் இது தீவிரவாதமா?

அப்பாவித் தமிழர்களைக் காப்பதற்காகத்தான் போரிடுவதாக பசப்புகிறது இந்தியா. ஆயுத தளபாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம்.

இந்த லட்சணத்தில், தமிழீழ மக்களுக்கான வசதிகளை இலங்கை அரசு செய்யுமாம். அதற்கு இந்தியா உதவுமாம்... வேலிக்கு ஓணான் சாட்சி!

இப்போது சர்வதேச செஞ்சுலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ்களைத் தாக்கினார்களே, அவர்களும் விடுதலைப் புலிகளா?

பிரான்சின் 17 மனித உரிமையாளர்களைக் கொலை செய்தார்களே, அவர்களும் விடுதலைப் புலிகளா?

சீனாவின் டாங்கிகள், இந்தியாவின் உளவு விமானங்கள், பாகிஸ்தானின் ஆர்டிலரிகள் மட்டுமல்ல... இப்போது எம்மக்களைக் கொலைசெய்து வருவது சர்வதேச சமூகத்தின் மெளனமும்தான் என்பதை எப்போது உணர்வீர்கள் -

நியாயத்தின்பால் பெருவிருப்பு கொண்ட ஒரு மக்கள் சமூகம் பூமியிலிருந்து முற்றாகத் துடைத்தழிக்கப்பட்ட பிறகா?

அபாரிஜின்கள், மாயா, இன்கா வரிசையில் நாங்களும் சேர்க்கப்படுவது உங்கள் நோக்கமென்றால், எங்கள் பழங்கதைகள் ஒன்றின்படி ஒவ்வொருநாளும் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து உங்கள் முன்னால் தற்கொலை செய்து கொள்கிறோம்...எங்கள் சகோதரிகளையும், குழந்தைகளையும் விட்டுவிடச் சொல்லுங்கள்.

தாங்க முடியவில்லை. அவர்களெல்லாம் மனமார சிரிப்பதை ஒருநாள் பார்ப்போம் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் போராடிக் கொண்டிருப்பதே.

ஒரு பேச்சுக்கு ஒத்துக்கொள்வதென்றாலும்கூட, விடுதலைப் புலிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றாலும் அப்படி ஒரு தண்டனையை வழங்கும் யோக்கியதை இந்தியாவுக்கோ, இலங்கைக்கோ கிடையாது.

முத்துக்குமாரின் இறுதி வேண்டுகோள் - 6 - தமிழீழ மக்களுக்கு

களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதைலைப் புலிகளே...

அனைத்துக்கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த் தமிழகம் உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது - உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே...

ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலங்கள்தான், கைவிடப்பட்ட நிலைமைக் காலங்கள்தான் சிறந்த மக்கள் தலைவர்களைக் கண்டுபிடித்திருக்கின்றன. தமிழகத்திலிருந்தும் அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம்.

அதுவரை, புலிகளின் கரங்களை பலப்படுத்துங்கள். 1965 இல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரை சில சுயநலமிகளின் கையில் ஒப்படைத்ததால்தான் தமிழக வரலாறு கற்காலத்திற்கு இழுபட்டுள்ளது. அந்தத் தவறை நீங்கள் செய்து விடாதீர்கள்.

முத்துக்குமாரின் இறுதி வேண்டுகோள் - 5 - காவல்துறையினருக்கு

தமிழ்நாடு காவல்துறையிலிருக்கும் இளைஞர்களே...

உங்கள் மீது எனக்கு இருக்கும் மதிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல, காரணம், தமிழுக்காக மற்றவர்கள் என்ன செய்தார்களோ, அலுவலர்களை ஐயா என அழைப்பது போன்ற நடைமுறை ரீதியில் தமிழை வாழ வைத்துக்கொண்டிருப்பவர்கள் நீங்கள்தான்.

மக்களுக்காகப் பாடுபடவேண்டும், சமூக விரோதிகளை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதுபோன்ற உன்னத நோக்கங்களுக்காகத்தான் நீங்கள் காவல்துறையில் இணைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனால், அதை செய்ய விடுகிறதா ஆளும் வர்க்கம்?

உங்களை சிறுசிறு தவறுகள் செய்ய விடுவதன் மூலம் தன்னுடைய பெருந்தவறுகளை மறைத்துக்கொள்ளும் அதிகார வர்க்கம், உங்களை, எந்த மக்களுக்காகப் பாடுபட நீங்கள் விரும்பினீர்களோ, எந்த மக்களுக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று தீர்மானித்தீர்களோ, அந்த மக்களுக்கெதிராகவே, பயிற்றுவிக்கப்பட்ட அடியாள்களாக மாற்றுகிறது.

டெல்லி திகார் ஜெயிலைப் பாதுகாப்பது தமிழக பொலீஸ்தான். இந்தியாவில் பழமையான காவல்துறையான தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வரும் காவல்துறைகளில் ஒன்று. ஆனால் அந்த மதிப்பை உங்களுக்குக் கொடுக்கிறதா இந்திய அரசாங்கம்!

மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமிழகம் வந்து திரும்பிப்போகையில், சென்னை விமான நிலையத்தில், அவருக்கான பாதுகாப்பை வழங்க அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள் மத்திய காவல் அதிகாரிகள். ஏனென்று கேட்டதற்கு, ராஜீவ் காந்தியை நீங்கள் பாதுகாத்த லட்சணம் தான் தெரியுமே என்று கிண்டல் செய்திருக்கிறார்கள்.

ராஜீவ் காந்தியைத் தமிழக காவல்துறையால் காப்பாற்ற முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை, ராஜீவோடு இறந்தவர்களில் பலர் அப்பாவி பொலிஸ்காரர்கள் என்பது. உங்கள் அர்ப்பணிப்புணர்வு கேள்விக்கப்பாற்பட்டது.

ஆனால் மேற்படி வெண்ணெய் வெட்டி வீரரர்கள் - அதுதான், இந்திய உளவுத்துறை ராஜீவின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்ற தகவலை அறிந்தபோதும் மெத்தனமாக இருந்தது என்பது பின்னர் அம்பலமானதல்லவா... இதுவரை காலமும் நீங்கள் அப்பாவி மக்களுக்கெதிராக இருந்தாலும் தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றாகத்தான் இருக்கிறீர்கள்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தஇந்த தருணத்தில், நீங்கள் மக்கள் பக்கம் இருந்தால் மட்டுமே மக்களிடம் இழந்திருக்கிற பெருமையை மீட்டெடுக்க முடியும். ஒருமுறை சக தமிழர்களுக்காக அர்ப்பணித்துப் பாருங்கள். மக்கள் உங்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவார்கள்.

தமிழனின் நன்றி உணர்ச்சி அளவிடற்கரியது. தன்னுடைய சொந்தக்காசை வைத்து அணை கட்டிக்கொடுத்தான் என்பதற்காகவே அவனுக்குக் கோயில் கட்டி, தன் பிள்ளைகளுக்கு அவன் பெயரை வத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறான் முல்லையாற்றின் மதுரை மாவட்டத் தமிழன்.

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கொந்தளிக்கப் போகும் தமிழகத்தில், மத்திய அரசு அதிகாரிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது, ரா, சி.பி.ஐ போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களை உள்ளூர் மக்களுக்கு அடையாளம் காட்டுவதும்தான். இதை மட்டுமாவது செய்யுங்கள். மற்றதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.

முத்துக்குமாரின் இறுதி வேண்டுகோள் - 4 - வெளிமாநிலத்தவருக்கு

தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதர்களே...

உங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடும், பாதுகாப்போடும் வாழக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான் என்பது உங்களுக்கு அனுபவத்தால் தெரிந்திருக்கும்.

நாங்கள் இன்று பெரும் இக்கட்டை எதிர்நோக்கியிருக்கிறோம். ஈழத்திலிருந்தும் எங்கள் சகோதரர்கள் இந்தியர் என்னும் நம் பெயரைப் பயன்படுத்தித்தான் நம் அரசால் கொலை செய்யப்படுகிறார்கள்.

இந்தப் போராட்டத்தில் நாங்கள் தனித்துவிடப்படுவதை இந்திய அரசு விரும்புகிறது. அப்படி ஆகக்கூடாதென நாங்கள் விரும்புகிறோம்.

ஆகவே, போராடிக்கொண்டிருக்கும் எங்கள் சகோதரர்களுக்கு உங்கள் ஆதரவும் உள்ளதென மத்திய அரசுக்குத் தெரியப்படுத்துங்கள். அரசுகளில் அங்கம் வகிக்கக்கூடிய உங்கள் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களை வற்புறுத்துங்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கப் போகும் உங்களுடைய அந்த நடவடிக்கை எம் கரத்தை பலப்படுத்துவதோடு, எதிர்காலத்தில் ஒரு நவநிர்மாண் சேனாவோ, ஸ்ரீராம் சேனாவோ தமிழ்நாட்டில் உருவாகவிருக்கும் ஆபத்தைத் தவிர்க்கும் என்பது என் கருத்து.

முத்துக்குமாரின் இறுதி வேண்டுகோள் - 3 - மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு

எனக்கு சிகிச்சையோ, போஸ்ட்மார்டமோ செய்யப்போகும் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்களே..

உங்கள் கையால் அறுபட நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். காரணம், அகில இந்திய அளவில், மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர்சாதி மாணவர்கள் போராடிக்கொண்டிருக்க, தன்னந்தனியாக நின்று, மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராடியர்களல்லவா நீங்கள்?

எனக்கு செய்வதெல்லாம் இருக்கட்டும். நம் சகோதரர்களான ஈழத் தமிழர்களுக்கு உங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?

தமிழீழம் என்பது தமீழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட. காரணம் ராமேஸ்வரம் மீனவர்கள்.

உலகில் ஆடு, மாடுகளைப் பாதுகாப்பதற்குக் கூட சட்டமும், அமைப்புகளும் இருக்கின்றன. இராமேஸ்வரம் தமிழனும், ஈழத் தமிழனும் மாட்டைவிட, ஆட்டைவிடக் கேவலமானவர்களா? எல்லை தாண்டி போகும் மீனவர்கள், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டு வருவதாக இந்திய மீடியா திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இவர்களெல்லாம் செய்தித்தாளே படிப்பதில்லையா?

சென்னையின் கடற்கரைகளில் அடிக்கடி தைவான் நாட்டை சேர்ந்த மீனவர்கள் வழிதெரியாமல் வந்தவர்கள் என்று கைது செய்யப்படுகிறார்கள். பல ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் தூரத்திலிருக்கும் தைவான் மீனவன் வழிதவற முடியுனென்றால், வெறும் பன்னிரெண்டு மைல் தூரத்திற்குள் இராமேஸ்வரம் தமிழன் வழி தவறுவது நம்புவது மாதிரியில்லையாமா?

முத்துக்குமாரின் இறுதி வேண்டுகோள் - 2 - சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு

பட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே...

உங்கள் போராட்டம் வெற்றிபெற சக தமிழனாக நின்று வாழ்த்துகிறேன். உங்களோடு களம் இறங்க முடியாமைக்கும் வருந்துகிறேன்.

ஈழத் தமிழர் பிரச்சினை என்றில்லை, காவிரியில் தண்ணீர் விடச்சொல்லும் போராட்டமென்றாலும் சரி, தமிழ்நாட்டிற்கு ஆதவரான போராட்டம் எதுவாக இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்களும், வழக்கறிஞர்களும்தான். இந்த முறையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே களத்தில் இறங்கியவர்கள் இந்த இரண்டு தரப்பும்தான்.

உங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு வழி வகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம்.

உலகம் முழுக்க மக்களுக்கான புரட்சிகரப் போராட்டங்களில் முன்னிலை வகித்தது மாணவர்கள் என்கிற ஜாதிதான். அதேபோல், தமிழ்நாட்டிலும் உங்களுக்கு முந்திய தலைமுறையொன்று இதுபோன்ற ஒரு சூழலில், இதுபோல் குடியரசு தினத்திற்கு முன்பு களம் கண்டுதான் காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடித்தது.

ஆக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணம் உங்கள் கைகளுக்கு மறுபடியும் வந்து சேர்ந்திருக்கிறது. பொதுவாக உலக சரித்திரத்தில் இப்படியெல்லாம் நடப்பதில்லை.

கடந்த முறை நடந்ததுபோல், உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டுவிடாதீர்கள். போராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம் போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது. அந்த மரபை அடித்து உடையுங்கள்.

மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம். உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள்.

உண்மையில், இலங்கையில் இந்திய இராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கெதிரானது மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது. சிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல் நுணுக்கங்களைத்தானே அவர்கள் அசாமில் அப்பாவிப் பெண்களிடம் பரிசோதித்துப் பார்த்தார்கள்! விடுதலைப் புலிகளை ஒடுக்குவதற்கான சிங்கள வன்முறை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வடகிழக்கு மாநிலப் போராளிகளிடம் பயன்படுத்திக் கூர் பார்த்தார்கள்!

போதாதற்கு, ஹைட்டியில் சமாதானப் பணிக்காக அனுப்பப்பட்ட ஐ.நா.வின் இராணுவத்திலிருந்து இந்திய மற்றும் இலங்கை இராணுவம் அவரவர்களுடைய பாலியல் நடவடிக்கைகளுக்காக அடித்துத் துரத்தப்பட்டிருப்பதிலிருந்து என்ன தெரிகிறது - இந்தக் கூட்டணி கொள்கைக்கூட்டணியல்ல, பாலியல் கூட்டணி என்றல்லவா!

ஆக இந்திய இலங்கை இராணுவக் கூட்டு என்பது இந்தியர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கும் கூட எதிரானதாக இருப்பதால், அகில இந்திய அளவில் மாணவர்கள், ஜனநாயக அமைப்புகளையும் உங்கள் பின்னால் திரட்டுங்கள்.

இதையெல்லாம் மக்களே செய்ய முடியும். ஆனால், அவர்கள் சரியான தலைமை இல்லாமல் இருக்கிறார்கள். உங்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்குகள். உங்கள் போராட்டத்தை சட்டக்கல்லூரி மாணவர்கள் என்ற இடத்திலிருந்து அனைத்து மாணவர்கள் என்று மாற்றுங்கள்.

உங்களிடமிருக்கும் வேகமும், மக்களிடமிருக்கும் கோபமும் இணைந்து தமிழக வரலாற்றை அடியோடு மாற்றட்டும். ஆள்பலம், பணபலம், அதிகார வெறியை உடைத்து எறியுங்கள். உங்களால் மட்டுமே இது முடியும்.

‘நாங்கள் தமிழ் மாணவர்கள், தமிழ்நாட்டின் உயிரானவர்கள், இங்கு தமிழினம் அமைதி கொண்டிருந்தால் ஏடுகள் தூக்கி படிப்போம். எங்கள் தமிழர்க்கின்னல் விளைந்தால் எரிமலையாகி வெடிப்போம்’ என்ற காசி அனந்தனின் பாடலை ஓர் அறிவாயுதமாக ஏந்துங்கள்.

என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள்.

வியாழன், ஜூலை 15, 2010

முத்துக்குமாரின் இறுதி வேண்டுகோள் - 1 - உழைக்கும் தமிழ் மக்களுக்கு

போராளி முத்துக்குமாரின் மரண அறிக்கை ஒவ்வொரு பிரிவினராக அழைத்துப் பேசுகிறது. நான்கு பக்க அறிக்கையாக இருந்தால் சில பேர் படிக்காமல் இருந்து விடலாம். ஒவ்வொரு பிரிவாக எடுத்து, பத்தி பிரித்து, உரை வடிவமைத்து பதிவு செய்கிறேன்.

அடுத்தது முத்துக்குமாரின் இறுதி வேண்டுகோள் - 2 - சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு

அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே...

வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை.

என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன்.

உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்துப் பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன்.

வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த இரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம்.

இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்?

ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்ற சொத்தை வாதத்தை வைத்துக்கொண்டு, சில தனிநபர்களின் பழிவாங்கல் சுயநல நோக்கங்களுக்காக ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கிறது இந்திய அதிகார வர்க்கம்.

ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப் புலிகள் மட்டும் குற்றம் சாட்டப்படவில்லை. தமிழக மக்களையும் குற்றவாளிகள் என்று குற்றம் சாட்டியது ஜெயின் கமிஷன் அறிக்கை. அப்படியானால் நீங்களும் ராஜீவ் காந்தியைக் கொலை செய்த கொலைகாரர்கள்தானா?
  • ஜாலியன் வாலாபாக்கில் வெள்ளையன் கொன்றான் என்றார்களே, இவர்கள் முல்லைத்தீவிலும் வன்னியிலும் செய்வதென்ன?
  • அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா?
  • கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள்.உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ, அக்காவோ இல்லையா?
ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை,கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்துகொள்ளும் மிகப்பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன் பங்கெடுக்க போகவில்லை என்பது போன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன.

மக்களே யோசியுங்கள். இவர்கள்தான் உங்கள் தலைவர்களா? பணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? அப்படி பாய்ந்தால் யார் நம் பக்கம் இருக்கிறார்கள்?

கலைஞரா?

நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அப்பொழுதும் அவர் அறிவிப்பார். பிறகு, மத்திய அரசைப் புரிந்துகொள்வார்(?!).
பிறகு மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார் . இந்த மாசம், இந்த வாரம், இதுவரைக்கும் என்ன எவனும் தொட்டதில்ல என்கிற வின்னர் பட வடிவேல் காமெடியைப் போல.

காகிதம் எதையும் சாதிக்காது மக்களே!

இப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார்.

தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்ததென்ன?

ஒருமுறை அவரே சொன்னார், ''தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பா"னென்று. இவருடைய பம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால் ரொம்பவே நக்கியிருப்பார் போலிருக்கிறேதே....

அடுத்தது முத்துக்குமாரின் இறுதி வேண்டுகோள் - 2 - சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு
முழு அறிக்கை விதியே விதியே என்செய நினைத்திட்டாய் என் தமிழ் சாதி...

புதன், ஜூலை 14, 2010

விதியே விதியே என்செய நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை

தமிழ்நாட்டு மக்களின் (நம்) மீது முத்துக் குமாருக்கு இருந்த நம்பிக்கை கண்கலங்க வைக்கிறது.

தன் உடலை துருப்புச் சீட்டாக்குமாறு திட்டம் சொல்லி உடல் நீத்த முத்துக்குமாரின் நம்பிக்கைக்கு நாம் என்ன செய்து விட்டோம்?!

அவரது மரண அறிக்கையை நகல் எடுத்து எல்லோருக்கும் வினியோகிக்க வேண்டும் என்ற அவரது விருப்பம் கூட நிறைவேறவில்லை.

பிற மொழிகளிலும் மொழி பெயர்த்து உலகெங்கும் இந்த நியாயத்துக்கான குரலைக் கொண்டு சேர்ப்போம்.


விதியே விதியே என்செய நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை...
-- முத்துக்குமார்

அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே...

வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன். உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்துப் பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன். வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த இரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம். இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்?

ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்ற சொத்தை வாதத்தை வைத்துக்கொண்டு, சில தனிநபர்களின் பழிவாங்கல் சுயநல நோக்கங்களுக்காக ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கிறது இந்திய அதிகார வர்க்கம். ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப் புலிகள் மட்டும் குற்றம் சாட்டப்படவில்லை. தமிழக மக்களையும் குற்றவாளிகள் என்று குற்றம் சாட்டியது ஜெயின் கமிஷன் அறிக்கை. அப்படியானால் நீங்களும் ராஜீவ் காந்தியைக் கொலை செய்த கொலைகாரர்கள்தானா?

ஜாலியன் வாலாபாக்கில் வெள்ளையன் கொன்றான் என்றார்களே, இவர்கள் முல்லைத்தீவிலும் வன்னியிலும் செய்வதென்ன? அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா? கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள்.உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ, அக்காவோ இல்லையா? ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை, கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்துகொள்ளும் மிகப்பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன் பங்கெடுக்க போகவில்லை என்பது போன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன. மக்களே யோசியுங்கள். இவர்கள்தான் உங்கள் தலைவர்களா? பணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? அப்படி பாய்ந்தால் யார் நம் பக்கம் இருக்கிறார்கள்?

கலைஞரா? நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அப்பொழுதும் அவர் அறிவிப்பார். பிறகு, மத்திய அரசைப் புரிந்துகொள்வார்(?!). பிறகு மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார் . இந்த மாசம், இந்த வாரம், இதுவரைக்கும் என்ன எவனும் தொட்டதில்ல என்கிற வின்னர் பட வடிவேல் காமெடியைப் போல. காகிதம் எதையும் சாதிக்காது மக்களே! இப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார். தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்ததென்ன? ஒருமுறை அவரே சொன்னார், ''தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பா"னென்று. இவருடைய பம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால் ரொம்பவே நக்கியிருப்பார் போலிருக்கிறேதே....

பட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே...உங்கள் போராட்டம் வெற்றிபெற சக தமிழனாக நின்று வாழ்த்துகிறேன். உங்களோடு களம் இறங்க முடியாமைக்கும் வருந்துகிறேன். ஈழத் தமிழர் பிரச்சினை என்றில்லை, காவிரியில் தண்ணீர் விடச்சொல்லும் போராட்டமென்றாலும் சரி, தமிழ்நாட்டிற்கு ஆதவரான போராட்டம் எதுவாக இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்களும், வழக்கறிஞர்களும்தான். இந்த முறையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே களத்தில் இறங்கியவர்கள் இந்த இரண்டு தரப்பும்தான். உங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு வழி வகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம். உலகம் முழுக்க மக்களுக்கான புரட்சிகரப் போராட்டங்களில் முன்னிலை வகித்தது மாணவர்கள் என்கிற ஜாதிதான். அதேபோல், தமிழ்நாட்டிலும் உங்களுக்கு முந்திய தலைமுறையொன்று இதுபோன்ற ஒரு சூழலில், இதுபோல் குடியரசு தினத்திற்கு முன்பு களம் கண்டுதான் காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடித்தது.

ஆக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணம் உங்கள் கைகளுக்கு மறுபடியும் வந்து சேர்ந்திருக்கிறது. பொதுவாக உலக சரித்திரத்தில் இப்படியெல்லாம் நடப்பதில்லை. கடந்த முறை நடந்ததுபோல், உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டுவிடாதீர்கள். போராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம் போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது. அந்த மரபை அடித்து உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம். உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள். உண்மையில், இலங்கையில் இந்திய இராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கெதிரானது மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது. சிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல் நுணுக்கங்களைத்தானே அவர்கள் அசாமில் அப்பாவிப் பெண்களிடம் பரிசோதித்துப் பார்த்தார்கள்! விடுதலைப் புலிகளை ஒடுக்குவதற்கான சிங்கள வன்முறை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வடகிழக்கு மாநிலப் போராளிகளிடம் பயன்படுத்திக் கூர் பார்த்தார்கள்! போதாதற்கு, ஹைட்டியில் சமாதானப் பணிக்காக அனுப்பப்பட்ட ஐ.நா.வின் இராணுவத்திலிருந்து இந்திய மற்றும் இலங்கை இராணுவம் அவரவர்களுடைய பாலியல் நடவடிக்கைகளுக்காக அடித்துத் துரத்தப்பட்டிருப்பதிலிருந்து என்ன தெரிகிறது - இந்தக் கூட்டணி கொள்கைக்கூட்டணியல்ல, பாலியல் கூட்டணி என்றல்லவா!, ஆக இந்திய இலங்கை இராணுவக் கூட்டு என்பது இந்தியர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கும் கூட எதிரானதாக இருப்பதால், அகில இந்திய அளவில் மாணவர்கள், ஜனநாயக அமைப்புகளையும் உங்கள் பின்னால் திரட்டுங்கள்.

இதையெல்லாம் மக்களே செய்ய முடியும். ஆனால், அவர்கள் சரியான தலைமை இல்லாமல் இருக்கிறார்கள். உங்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்குகள். உங்கள் போராட்டத்தை சட்டக்கல்லூரி மாணவர்கள் என்ற இடத்திலிருந்து அனைத்து மாணவர்கள் என்று மாற்றுங்கள். உங்களிடமிருக்கும் வேகமும், மக்களிடமிருக்கும் கோபமும் இணைந்து தமிழக வரலாற்றை அடியோடு மாற்றட்டும். ஆள்பலம், பணபலம், அதிகார வெறியை உடைத்து எறியுங்கள். உங்களால் மட்டுமே இது முடியும். ‘நாங்கள் தமிழ் மாணவர்கள், தமிழ்நாட்டின் உயிரானவர்கள், இங்கு தமிழினம் அமைதி கொண்டிருந்தால் ஏடுகள் தூக்கி படிப்போம். எங்கள் தமிழர்க்கின்னல் விளைந்தால் எரிமலையாகி வெடிப்போம்’ என்ற காசி அனந்தனின் பாடலை ஓர் அறிவாயுதமாக ஏந்துங்கள். என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள். எனக்கு சிகிச்சையோ, போஸ்ட்மார்டமோ செய்யப்போகும் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்களே..உங்கள் கையால் அறுபட நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். காரணம், அகில இந்திய அளவில், மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர்சாதி மாணவர்கள் போராடிக்கொண்டிருக்க, தன்னந்தனியாக நின்று, மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராடியர்களல்லவா நீங்கள்? எனக்கு செய்வதெல்லாம் இருக்கட்டும். நம் சகோதரர்களான ஈழத் தமிழர்களுக்கு உங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?

தமிழீழம் என்பது தமீழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட. காரணம் ராமேஸ்வரம் மீனவர்கள். உலகில் ஆடு, மாடுகளைப் பாதுகாப்பதற்குக் கூட சட்டமும், அமைப்புகளும் இருக்கின்றன. இராமேஸ்வரம் தமிழனும், ஈழத் தமிழனும் மாட்டைவிட, ஆட்டைவிடக் கேவலமானவர்களா? எல்லை தாண்டி போகும் மீனவர்கள், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டு வருவதாக இந்திய மீடியா திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இவர்களெல்லாம் செய்தித்தாளே படிப்பதில்லையா? சென்னையின் கடற்கரைகளில் அடிக்கடி தைவான் நாட்டை சேர்ந்த மீனவர்கள் வழிதெரியாமல் வந்தவர்கள் என்று கைது செய்யப்படுகிறார்கள். பல ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் தூரத்திலிருக்கும் தைவான் மீனவன் வழிதவற முடியுனென்றால், வெறும் பன்னிரெண்டு மைல் தூரத்திற்குள் இராமேஸ்வரம் தமிழன் வழி தவறுவது நம்புவது மாதிரியில்லையாமா?

தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதர்களே...

உங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடும், பாதுகாப்போடும் வாழக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான் என்பது உங்களுக்கு அனுபவத்தால் தெரிந்திருக்கும். நாங்கள் இன்று பெரும் இக்கட்டை எதிர்நோக்கியிருக்கிறோம். ஈழத்திலிருந்தும் எங்கள் சகோதரர்கள் இந்தியர் என்னும் நம் பெயரைப் பயன்படுத்தித்தான் நம் அரசால் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தப் போராட்டத்தில் நாங்கள் தனித்துவிடப்படுவதை இந்திய அரசு விரும்புகிறது. அப்படி ஆகக்கூடாதென நாங்கள் விரும்புகிறோம். ஆகவே, போராடிக்கொண்டிருக்கும் எங்கள் சகோதரர்களுக்கு உங்கள் ஆதரவும் உள்ளதென மத்திய அரசுக்குத் தெரியப்படுத்துங்கள். அரசுகளில் அங்கம் வகிக்கக்கூடிய உங்கள் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களை வற்புறுத்துங்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கப் போகும் உங்களுடைய அந்த நடவடிக்கை எம் கரத்தை பலப்படுத்துவதோடு, எதிர்காலத்தில் ஒரு நவநிர்மாண் சேனாவோ, ஸ்ரீராம் சேனாவோ தமிழ்நாட்டில் உருவாகவிருக்கும் ஆபத்தைத் தவிர்க்கும் என்பது என் கருத்து.

தமிழ்நாடு காவல்துறையிலிருக்கும் இளைஞர்களே...
உங்கள் மீது எனக்கு இருக்கும் மதிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல, காரணம், தமிழுக்காக மற்றவர்கள் என்ன செய்தார்களோ, அலுவலர்களை ஐயா என அழைப்பது போன்ற நடைமுறை ரீதியில் தமிழை வாழ வைத்துக்கொண்டிருப்பவர்கள் நீங்கள்தான். மக்களுக்காகப் பாடுபடவேண்டும், சமூக விரோதிகளை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதுபோன்ற உன்னத நோக்கங்களுக்காகத்தான் நீங்கள் காவல்துறையில் இணைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனால், அதை செய்ய விடுகிறதா ஆளும் வர்க்கம்? உங்களை சிறுசிறு தவறுகள் செய்ய விடுவதன் மூலம் தன்னுடைய பெருந்தவறுகளை மறைத்துக்கொள்ளும் அதிகார வர்க்கம், உங்களை, எந்த மக்களுக்காகப் பாடுபட நீங்கள் விரும்பினீர்களோ, எந்த மக்களுக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று தீர்மானித்தீர்களோ, அந்த மக்களுக்கெதிராகவே, பயிற்றுவிக்கப்பட்ட அடியாள்களாக மாற்றுகிறது. டெல்லி திகார் ஜெயிலைப் பாதுகாப்பது தமிழக பொலீஸ்தான். இந்தியாவில் பழமையான காவல்துறையான தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வரும் காவல்துறைகளில் ஒன்று. ஆனால் அந்த மதிப்பை உங்களுக்குக் கொடுக்கிறதா இந்திய அரசாங்கம்! மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமிழகம் வந்து திரும்பிப்போகையில், சென்னை விமான நிலையத்தில், அவருக்கான பாதுகாப்பை வழங்க அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள் மத்திய காவல் அதிகாரிகள். ஏனென்று கேட்டதற்கு, ராஜீவ் காந்தியை நீங்கள் பாதுகாத்த லட்சணம் தான் தெரியுமே என்று கிண்டல் செய்திருக்கிறார்கள். ராஜீவ் காந்தியைத் தமிழக காவல்துறையால் காப்பாற்ற முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை, ராஜீவோடு இறந்தவர்களில் பலர் அப்பாவி பொலிஸ்காரர்கள் என்பது. உங்கள் அர்ப்பணிப்புணர்வு கேள்விக்கப்பாற்பட்டது. ஆனால் மேற்படி வெண்ணெய் வெட்டி வீரரர்கள் - அதுதான், இந்திய உளவுத்துறை ராஜீவின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்ற தகவலை அறிந்தபோதும் மெத்தனமாக இருந்தது என்பது பின்னர் அம்பலமானதல்லவா... இதுவரை காலமும் நீங்கள் அப்பாவி மக்களுக்கெதிராக இருந்தாலும் தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றாகத்தான் இருக்கிறீர்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தஇந்த தருணத்தில், நீங்கள் மக்கள் பக்கம் இருந்தால் மட்டுமே மக்களிடம் இழந்திருக்கிற பெருமையை மீட்டெடுக்க முடியும். ஒருமுறை சக தமிழர்களுக்காக அர்ப்பணித்துப் பாருங்கள். மக்கள் உங்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவார்கள். தமிழனின் நன்றி உணர்ச்சி அளவிடற்கரியது. தன்னுடைய சொந்தக்காசை வைத்து அணை கட்டிக்கொடுத்தான் என்பதற்காகவே அவனுக்குக் கோயில் கட்டி, தன் பிள்ளைகளுக்கு அவன் பெயரை வத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறான் முல்லையாற்றின் மதுரை மாவட்டத் தமிழன். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கொந்தளிக்கப் போகும் தமிழகத்தில், மத்திய அரசு அதிகாரிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது, ரா, சி.பி.ஐ போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களை உள்ளூர் மக்களுக்கு அடையாளம் காட்டுவதும்தான். இதை மட்டுமாவது செய்யுங்கள். மற்றதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.

களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதைலைப் புலிகளே...
அனைத்துக்கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த் தமிழகம் உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது - உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே... ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலங்கள்தான், கைவிடப்பட்ட நிலைமைக் காலங்கள்தான் சிறந்த மக்கள் தலைவர்களைக் கண்டுபிடித்திருக்கின்றன. தமிழகத்திலிருந்தும் அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம். அதுவரை, புலிகளின் கரங்களை பலப்படுத்துங்கள். 1965 இல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரை சில சுயநலமிகளின் கையில் ஒப்படைத்ததால்தான் தமிழக வரலாறு கற்காலத்திற்கு இழுபட்டுள்ளது. அந்தத் தவறை நீங்கள் செய்து விடாதீர்கள்.

அன்பிற்குரிய சர்வதேச சமூகமே, நம்பிக்கைக்குரிய ஒபாமாவே,
உங்கள் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இறையான்மை கொண்ட ஒரு குடியரசு தம் குடிமகனை இன ஒதுக்கல் மூலமாக கொடுமைப்படுத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. வசதிக்காக அமெரிக்காவின் கடந்த காலத்தையே எடுத்துக்காட்டாக சொல்லலாம். உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை மாவீரன் முகமதலி சொன்னானே, என் சருமத்திலிருக்கும் கொஞ்சம் வெண்மையும் கற்பழிப்பின் மூலமாகவே வந்திருக்குமென்று... நீங்கள் அமைதியாக இருக்கும் வரை இந்தியா வாயே திறக்காது. ஒட்டுமொத்த தமிழர்களும் அழிக்கப்பட்ட பிறகு வேண்டுமானால் அது நடக்கும். அதுவரை, இந்தியாவின் வாயைப் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா? வன்னியில், விடுதலைப் புலிகளூக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்கள் என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை செய்தார்கள்? இது ஒன்று போதுமே, தமிழ்மக்கள் விடுதலைப் புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு. இது இனப்படுகொலை இல்லையா? இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும், ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக இந்தியா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொல்கின்றனரென்றால், நீங்கள் உங்கள் மெளனத்தின் மூலமாகவும், பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை ஏன் உணரவில்லை? ஆயுதம் தாங்கி போராடுவதால் மட்டுமே யாரும் தீவிரவாதியாகிட மாட்டார்கள். அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார், மறத்திற்கும் அஃதே துணை என்று பாடியுள்ளான் எங்கள் திருவள்ளுவர்.

புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிறார் ஜெயலலிதா - என்னவோ பிரச்சினையே புலிகள் ஆயுதம் எடுத்ததால்தான் வந்தது என்பதைப் போல.. உணமையில், புலிகள் தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்களே தவிர, காரணகர்த்தாக்கள் அல்லர் (They are not the reason; just an outcome)

இந்திய அரசு இந்தப் பிரச்சினையில் ஈடுபட்டிருப்பது வெளிப்படையாகாத வரை, இலங்கைப் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை. அதில் தலையிட முடியாது என்றது. சீனா, பாகிஸ்தான் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையில் ஆதிக்கம் பெறுவதைத் தடுப்பதற்காக செய்வதாகச் சொன்னது. நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்தியது, மும்பை தொடர் வெடிகுண்டுகள், பிறகு அண்மையில் நடந்த தாக்குதல் எனப் பலவாறாக இந்திய மக்களைக்கொன்று குவித்த பாகிஸ்தானோடு இணைந்து கொண்டு தமிழர்களைக் கொன்று குவிக்கிறது. அப்படியானால், பாகிஸ்தானின் இந்தியா மீதான பயங்கரவாதமென்பது இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு அதிகார வர்க்கங்களும் தங்கள் மக்களைச் சுரண்ட பரஸ்பர புரிதலுடன் உருவாக்கிக் கொண்ட ஒன்று என்ற எம் சந்தேகம் ஒருபக்கம் இருக்க, இப்போது, விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள் அதனால்தான் சண்டை என்கிறது. ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்கிறது. ராஜீவ் காந்தி ஒரு கவுன்சிலரோ, மாவட்டச் செயலாளரோ அல்ல. அவரை ஏற்கனவே ஒருமுறை கொலை செய்யும் முயற்சி இலங்கையில் நடைபெற்றிருந்த போதும் அந்தக் கொலைகாரன் விசாரிக்கப்படவில்லை. ராஜீவ் காந்தியின் கொலை மறுபடியும், இன்டர்போல் மூலமாக, அந்தக் கொலையின் மூலமாக பலனடைந்தவர்களையும், இலங்கை உளவுத் துறை, ராஜீவ் காந்தியைக் கொல்ல முயன்ற அந்த சிங்கள வீரன் ஆகியோரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இணைத்துக்கொண்டு மறுபடியும் விசாரிக்கப்பட வேண்டும் என்பது என் கோரிக்கைகளில் ஒன்று. ராஜீவ் மீது புலிகளுக்கு வருத்தம் இருந்திருக்கலாமே தவிர, கோபம் இருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், ராஜீவ் இந்திராவின் புதல்வர். இந்திரா, தமிழீழத்தின் சிறு தெய்வங்களில் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்திலிருப்பவர்.

இந்தியா சொல்லும் காரணங்கள் அடிக்கடி மாறுவதிலிருந்தே இந்தியா நியாயத்திற்குப் புறம்பாகத்தான் இந்தப்போரில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் நீங்கள் ஏன் நேரடியாகத் தலையிடக்கூடாது? புலிகள் போர் நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஆயுதம் குவிக்கிறார்கள் என்றது இலங்கை. சந்திரிகாவோ, ரணிலோ, மகிந்தாவோ கடந்த காலங்களில் ஒரு கடவுளாக அல்ல, மனிதர்களாகக்கூட நடந்துகொண்டதில்லை. இவர்கள் ஒரு நிர்ப்பந்தத்தின் பெயரில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுவிட்டார்கள் என்பதால் மட்டுமே போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட வேண்டும். புனரமைப்புப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று எதிர்பார்ப்பது என்னவகை நியாயம்? தாங்கள் நேர்மையாக நடந்துகொள்வோம் என்ற நம்பிக்கையை உண்டாக்குவது மூலமாக மட்டுமே போராளிகளைல-ஆயுதத்தைக் கீழே வைக்கச்செய்ய முடியும். கடந்த கால அரசுகள் எவையும் அப்படி செயல்படவில்லை. உதாரணம் ரணில்-கருணா. ஆனால், புலிகள் போர் நிறுத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு செய்தது ஆயுதம் வாங்கியது மட்டுமல்ல, அது காலாகாலமாக நடப்பதுதானே- ஓர் அரசு நிர்வாகத்தையே உருவாக்கியுருக்கிறார்கள். சர்வதேசத்தின் கண்களில் இது தீவிரவாதமா? அப்பாவித் தமிழர்களைக் காப்பதற்காகத்தான் போரிடுவதாக பசப்புகிறது இந்தியா. ஆயுத தளபாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம்.இந்த லட்சணத்தில், தமிழீழ மக்களுக்கான வசதிகளை இலங்கை அரசு செய்யுமாம். அதற்கு இந்தியா உதவுமாம்... வேலிக்கு ஓணான் சாட்சி! இப்போது சர்வதேச செஞ்சுலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ்களைத் தாக்கினார்களே, அவர்களும் விடுதலைப் புலிகளா? பிரான்சின் 17 மனித உரிமையாளர்களைக் கொலை செய்தார்களே, அவர்களும் விடுதலைப் புலிகளா? சீனாவின் டாங்கிகள், இந்தியாவின் உளவு விமானங்கள், பாகிஸ்தானின் ஆர்டிலரிகள் மட்டுமல்ல... இப்போது எம்மக்களைக் கொலைசெய்து வருவது சர்வதேச சமூகத்தின் மெளனமும்தான் என்பதை எப்போது உணர்வீர்கள் - நியாயத்தின்பால் பெருவிருப்பு கொண்ட ஒரு மக்கள் சமூகம் பூமியிலிருந்து முற்றாகத் துடைத்தழிக்கப்பட்ட பிறகா? அபாரிஜின்கள், மாயா, இன்கா வரிசையில் நாங்களும் சேர்க்கப்படுவது உங்கள் நோக்கமென்றால், எங்கள் பழங்கதைகள் ஒன்றின்படி ஒவ்வொருநாளும் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து உங்கள் முன்னால் தற்கொலை செய்து கொள்கிறோம்...எங்கள் சகோதரிகளையும், குழந்தைகளையும் விட்டுவிடச் சொல்லுங்கள். தாங்க முடியவில்லை. அவர்களெல்லாம் மனமார சிரிப்பதை ஒருநாள் பார்ப்போம் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் போராடிக் கொண்டிருப்பதே. ஒரு பேச்சுக்கு ஒத்துக்கொள்வதென்றாலும்கூட, விடுதலைப் புலிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றாலும் அப்படி ஒரு தண்டனையை வழங்கும் யோக்கியதை இந்தியாவுக்கோ, இலங்கைக்கோ கிடையாது.

காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியை விடக் கொடுமையானது

- எனது பதினான்கு அம்ச கோரிக்கைகள் -
  1. இந்தியா உடனடியாக தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் துருப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடார் போன்ற உதவிகளைச் செய்யக்கூடாதென்று சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். இலங்கையோடு இந்தியா அரசு நடந்தும் முக்கியத்துவமற்ற பேச்சுப்பரிமாற்றங்கள்கூட சர்வதேச சமூகம் மூலமாகவே நடக்க வேண்டும். தமிழக மக்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழத்தாரிடமும் இந்தியா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.

  2. ஐ.நா. பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படக்கூடாது.

  3. இலங்கை அரசு எந்தெந்த நாடுகளிடமெல்லாம் கோரப்பட்டு புலிகள் மீது தடை விதிக்கப்பட்டதோ அந்தந்த நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றத்திற்காக சிறையிலிருக்கும் அதன் உறுப்பினர்கள் எதுவித நிபந்தனையுமற்று உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

  4. புலிகளின் உறுப்பினர்கள் மீதான பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

  5. புலிகளோடு தொடர்புடையது என்னும் குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட தொழில் நிறுவனங்களின் உரிமம் மீண்டும் அளிக்கப்படுவதோடு, தக்க நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும்.

  6. ராஜீவ் காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் இனம் காணப்பட வேண்டும்.

  7. பிரணாப் முகர்ஜி, கோத்தபாய ராஜபக் ஷே, சந்திரிகா, உதயணகார, கேகலிய ரம்புக்வெல, பசில்ராஜப்க்ஷ, மகிந்த, பொன்சேகா போன்றோர் நார்கோ அனிலிசிஸ் சோதனைக்குப்பட வேண்டும்.

  8. அமைக்கப்படபோகிற தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டுகே சர்வதேசம் மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமையவேண்டும என்பதை தமிழீன மக்கள் தான் முடிவுசெய்வார்கள்.

  9. புலிகள் கை பலவீனமான நேரத்தில், மலையக மக்கள் மீது நடந்து வந்த தாக்குதல், எதிர்காலத்தில் அப்பகுதிகளில் மீண்டும் ஒரு பாரிய இன அழிவு ஏற்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், மலையக மக்கள் தமிழீழத்தோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலம் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும் இந்த விசயத்தில் மலையக மக்களின் முடிவே இறுதியானது.

  10. சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் தண்டணைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்கும் இலங்கைக்குத் தப்பிச்சென்று விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக போலிசார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

  11. பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.

  12. தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

  13. தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத் தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.

  14. சுட்டுக்கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதாரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.

என்றும் அன்புடன்,
அநீதிகளுக்கெதிரான உங்கள் சகோதரன்,
கு.முத்துக்குமார், கொளத்தூர், சென்னை 99, 9380927441

வியாழன், ஜூலை 08, 2010

இலங்கை அரசுக்கு எதிரான பொருளாதாரத் தடைகள் - 2

முகிலனின் புறக்கணிப்பு

இலங்கைக்கு போனீங்க காலை வெட்டிப்புடுவன் என்ற இடுகைக்கு சில திருத்தங்கள்:

1. இலங்கையில் எடுக்கப்படும் தமிழ்த் திரைப்படங்கள் புறக்கணிக்கப்படும்.
2. இலங்கை அணி விளையாடும் கிரிக்கெட் ஆட்டங்கள் புறக்கணிக்கப்படும்.
3. இலங்கைக்குப் போய் விளையாடும் கிரிக்கெட் அணிகள் புறக்கணிக்கப்படும்.

4. இலங்கையின் 1950க்கு பிறகான வரலாற்றில் ஈழப் போராட்டம் விரிவாக வகுப்பறைகளில் சொல்லித் தரப்படும்.
5. இந்தியர்கள் இலங்கைக்கு சுற்றுலா அல்லது தொழில் தொடர்புகளை ஏற்படுத்தக் கூடாது.
6. இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு வரும் பொருட்களை புறக்கணிக்க வேண்டும்

7. இலங்கை அரசின் கொடியையும், சின்னங்களையும் புறக்கணிக்க வேண்டும்
8. இலங்கையின் விளைபொருட்களை வாங்கக் கூடாது.

செவ்வாய், ஜூலை 06, 2010

ஐரோப்பியர் மனிதர்கள், இந்தியர்கள் இருதயமற்றவர்கள்

வளர்ந்து வரும் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரிச் சலுகை அளிக்கும் திட்டத்திலிருந்திலிருந்து இலங்கையை ஐரோப்பிய யூனியன் நீக்கியுள்ளது.

மனித உரிமை நடைமுறைகளை அமல்படுத்துவதில் கண்டறியப்பட்ட குறைபாடுகள் காரணமாக கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்த வரிச்சலுகையை தற்காலிகமாக ரத்து செய்ய முடிவு எடுக்கப்பட்டாலும், பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு ஆறு மாதங்களுக்குள் உரிய நடவடிக்கைகளை எடுக்கு இலங்கை அரசுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

ஜூலை முதல் தேதிக்கு முன்பு இதற்கான பதில் கிடைக்காததால் இலங்கைக்கு ஜிஎஸ்பி ரத்தாகிறது - பிபிசி செய்தி.

பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஐரோப்பிய யூனியனுக்கு இலங்கை அரசின் அட்டூழியங்கள் கண்ணில் படுகின்றன. தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் கண்ணடைத்துப் போயிருக்கிறது.
  • தமிழர் பகுதிகளுக்கு தன்னாட்சி உரிமை வழங்கும் அரசியல் அமைப்பை செயல்படுத்தும் வரை இலங்கை அரசுக்கு எதிரான பொருளாதார / அரசியல் தடைகளை உலக நாடுகள் செயல்படுத்த வேண்டும்.

  • இதற்கான முன்முயற்சிகளை தமிழ்நாடும், இந்திய அரசும் செய்ய வேண்டும்.

  • தென் ஆப்பிரிக்காவில் நிறவெறி அரசுக்கு எதிரான தடைகளில் இந்தியா முன்னிலை வகித்தது போல இலங்கை அரசுக்கு எதிராகவும் செயல்பட வேண்டும்.
(தொடரும்)

புதன், ஜூன் 30, 2010

எரிபொருள் விலை உயர்வு

டெக்கான் குரோனிக்கிளில் ஜெயதி கோஷ் என்பவர் எழுதிய கட்டுரையிலிருந்து

1. எரிபொருள் விற்கும் நிறுவனங்களுக்கு இழப்பு என்று அரசு காரணம் சொன்னாலும், அந்த நிறுவனங்களின் நிதி நிலை அறிக்கைகளில் நல்ல ஆதாயம் ஈட்டியதாகத்தான் வருகிறது. ஆதாயம் குறைவதை இழப்பு என்று சொல்கிறார்கள்.

2. உலகச் சந்தையின் விலையுடன் உள்நாட்டு விலையை இணைப்பது தேவையில்லாமல் ஏற்ற இறக்கங்களுக்குத்தான் வழி வகுக்கும்.

3. இந்த விலை ஏற்றம் தனியார் எரிபொருள் நிறுவனங்களுக்கு அதிக ஆதாயம் கிடைப்பதற்காக செய்யப்பட்டிருக்கிறது.

4. எரிபொருள் நிறுவனங்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும், இல்லையென்றால் அரசு எரிபொருள் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இருக்க நேரிடும்.

காஷ்மீர்

பல மாதங்களாக காஷ்மீரிலிருந்து பெரிய வன்முறை சம்பவங்கள் குறித்த செய்திகள் படிக்கவில்லை. ஓமர் அப்துல்லா நல்ல வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று நினைத்திருந்தேன்.

கடந்து இரண்டு நாட்களாக மீண்டும் கலவரம். இரண்டு இளைஞர்கள், துணை ராணுவப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள்.

டெக்கான் குரோனிக்கிளில் ஓமர் அப்துல்லாவின் பேட்டியில் இதைப் பற்றியும் காஷ்மீர் போராட்டம் குறித்த மற்ற செய்திகளைப் பற்றியும் பேசியிருந்தார்.
  • 'காஷ்மீர் பிரிவினைவாதிகள் பாகிஸ்தானின் மேலாண்மையில்தான் செயல்படுகிறார்கள்.'
  • 'இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே அமைதி வந்து விடக் கூடாது என்று ஒரு கூட்டமே செயல்படுகிறது'
  • 'காஷ்மீரில் கலகத்தைத் தூண்டுவதற்கு, பிரிவினை வாதிகளும், எதிர்க்கட்சிகளும் தவிர இன்னும் சில கைகளும் செயல்படுகின்றன'
அவரது வழிகாட்டலில் ஒரு நல்ல தீர்வு ஏற்பட வேண்டும் என்று எதிர்பார்ப்போம்.

இன்றைய நாளிதழில் மேலும் துப்பாக்கி சூடு, மேலும் உயிரிழப்பு என்று செய்தி.

சனி, ஜூன் 26, 2010

"உலகத்" தமிழ் செம்மொழி மாநாடு புறக்கணிப்பு - 8

"உலகத்" தமிழ் செம்மொழி மாநாடு புறக்கணிப்பு - 7

தொலைபேசி எதிர்வினைகள்

1.
"சிவகுமார், எப்படி இருக்கீங்க!"
"நான் நல்லா இருக்கேன், நீங்க!"

"ஒங்க பிளாக்ஸ்பாட் பார்த்தேன், நல்லா எழுதியிருக்கீங்க!"
"எதப்பத்தி சொல்றீங்க?"

"அதான், தமிழ் மாநாடு புறக்கணிப்பு பத்தி எழுதியிருக்கீங்களே. நான் கூட இன்னைக்குக் கிளம்பி மாநாட்டுக்குப் போகலாம்னு நினைச்சிருந்தேன். அப்பதான் வலைப்பதிவுகளையும் பார்க்கலாம்னு பார்த்தேன். சரியா எழுதியிருக்கீங்க.

செல்லமுத்து குப்புசாமி கூட புறக்கணிப்பை ஆதரிச்சிருக்காரே! அவருடைய விடுதலைப் புலிகள் பற்றிய புத்தகம் படித்திருக்கிறேன்.

பெரிய ஆளுங்க எல்லாம் வாராங்களா, அல்லது இவனுங்களே கூடிக் கூத்தடிச்சிக்கிறானுங்களா?"

"சிவத்தம்பி என்று ஒரு பெரியவரின் பெயர் கேள்விப்பட்டேன். ஹார்ட் என்ற தமிழ் ஆய்வாளர் பேசியதும் செய்தித்தாளில் படித்தேன். மற்றபடி விபரங்களை கண்டு கொள்ளவில்லைதான். வ செ குழந்தைசாமி, அனந்தகிருஷ்ணன் போன்றவர்கள் இணையத் தமிழ்மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள்"

2. "லக்கிலுக்கின் இடுகையில், 'நாம் புழுக்களாக பதிவு செய்யப்பட்டாலும், சிறிதளவாவது துடித்தோம்' என்று எழுதியிருந்ததைப் படித்தேன். அதுதான் உங்களுக்குத் தொலைபேசத் தூண்டியது. நான் கூட வலைப்பதிவு வைத்திருக்கிறேன். முன்பு ஒரு தடவை என் இடுகையில் நீங்கள் பின்னூட்டம் கூட போட்டீர்கள்"

வெள்ளி, ஜூன் 25, 2010

"உலகத்" தமிழ் செம்மொழி மாநாடு புறக்கணிப்பு - 6

வலைப்பதிவர்களின் சமீபத்திய இடுகைகள்
இது தொடர்பான எனது முந்தைய இடுகைகள் (பிற இடுகைகளின் சுட்டிகளோடு)

புதன், ஜூன் 23, 2010

"உலகத்" தமிழ் செம்மொழி மாநாடு புறக்கணிப்பு - 5

சாந்தகுமார்

Shanthakumar: siva coimbatore yar poyirukardhu

me : http://masivakumar.blogspot.com/2010/06/4.html . I am boycotting it, Shantha!

Shanthakumar: mm nalla mudivu.

ennai poruthavarai, eezha punn innum aaravillai. pirabakaran maranathai nambinalum, meendu varuvar endru nambikkai vaithirundhalum, pallayirakkanakkana uyirgal sethu madivadhai pakkathu mannilirundhu paarthukkondu dhan irundhom..

matra vishangalilum ivargal aadum koothu, ketparillai. ------------removed--------------- aduthu varugiravanukku thalaiyai thattil vaithu koduthu viduvom

me : I will quote you in my blog and give your comments, it is okay?

Shanthakumar: perfectly ok..

தமிழ் எழுத்துக்களில்

சாந்தகுமார்: சிவா, கோயம்புத்தூர் யார் போயிருக்கிறது?

நான்: http://masivakumar.blogspot.com/2010/06/4.html . நான் மாநாட்டைப் புறக்கணிக்கிறேன், சாந்தா

சாந்தகுமார்: ம்ம், நல்ல முடிவு.

என்னைப் பொறுத்தவரை, ஈழப் புண் இன்னும் ஆறவில்லை. பிரபாகரன் மரணத்தை நம்பினாலும் மீண்டு வருவார் என்று நம்பிக்கை வைத்திருந்தாலும், பல்லாயிரக்கணக்கான உயிர்கள் செத்து மடிவதை பக்கத்து மண்ணிலிருந்து பார்த்துக் கொண்டுதான் இருந்தோம்.

மற்ற விஷயங்களிலும் இவர்கள் ஆடும் கூத்து, கேட்பாரில்லை. -----------நீக்கப்பட்டது ------------ அடுத்து வருகிறவனுக்கு தலையில் தட்டி வைத்து கொடுத்து விடுவோம்

நான்: உங்கள் பெயர் குறிப்பிட்டு என் வலைப்பதிவில் உங்கள் கருத்தை வெளியிட்டுக் கொள்ளலாமா?

சாந்தகுமார்: நிச்சயமாகச் செய்யுங்கள்.

தமிழ்ப் புழுக்கள்

தமிழ் நாட்டுத் தமிழருக்கு பொதுவாகவும், 'உலகத்' தமிழ் செம்மொழி மாநாடு காணும் கருணாநிதி கும்பலுக்கு குறிப்பாகவும் பொருந்தும் வரிகள்!
=================
மாதரைக் கற்பழித்து வன்கண்மை பிறர் செய்யப்
பேதைகள் போலு யிரைக் - கிளியே
பேணி யிருந்தா ரடீ!

அச்சமும் பேடி மையும் அடிமைச் சிறு மதியும்
உச்சத்திற் கொண்டா ரடீஸ்ரீ - கிளியே
ஊமைச் சனங்க ளடீ!

மானம் சிறிதென் றெண்ணி வாழ்வு பெரிதென் றெண்ணும்
ஈனர்க் குலகந் தனில் - கிளியே!
இருக்க நிலைமை யுண்டோ ?

நாட்டில் அவமதிப்பும் நாணின்றி இழி செல்வத்
தேட்டில் விருப்புங் கொண்டே! - கிளியே!
சிறுமை யடைவா ரடீ!

சொந்த சகோ தரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும்
சிந்தை இரங்கா ரடீ! - கிளியே!
செம்மை மறந்தா ரடீ!

பஞ்சத்தும் நோய்க ளிலும் பாரதர் புழுக்கள் போல்
துஞ்சத்தும் கண்ணாற் கண்டும் - கிளியே!
சோம்பிக் கிடப்பா ரடீ!
== பாரதியார்

"உலகத்" தமிழ் செம்மொழி மாநாடு புறக்கணிப்பு - 4

உங்களுக்கே தெரியும் இருந்தாலும்...
பரிதாபிகளே, மன்னியுங்கள்!

புதிய சேர்க்கைகள்:
முந்தைய பதிவுகள்
எனது பதிவுகள்