திங்கள், ஆகஸ்ட் 13, 2007

புதன், ஆகஸ்ட் 08, 2007

பட்டறை - விவாதம்

பதிவர் பட்டறையில் மாலன் பேசியதைக் குறித்து விவாதங்கள் நடந்து வருகின்றன. அந்த சமயத்தில் அரங்கை ஒருங்கிணைத்தவன் என்று முறையில் சின்ன குறிப்பு:

உண்மையில் கருத்துக்களைத் தணிக்கை செய்ய வேண்டும் என்று எதுவும் செய்யவில்லை. எடுத்துக் கொண்ட பொருளுக்கு மாற்றுத் திசையில் விவாதம் திரும்பாமலும் நேரம் அதிகமாக ஆகி விடாமலும்தான் கவனம் செலுத்தினேன். அதனால்தான் நன்னடத்தை தொடர்பான உரையைத் தொடர்ந்து விவாதம் நீளாமல் நிறுத்த நேரிட்டது.

பொறுப்புள்ள மூத்த பத்திரிகையாளராக, பதிவராக காலையில் ஒரு விவாதத்தின் போது 'அரசியல் கொள்கை விவாதங்களுக்கு இந்த பட்டறை இடமில்லை' என்று அழகாக விளக்கினார் மாலன்.

வலை நன்னடத்தை என்ற தலைப்பில் பேச வேண்டிய முத்துகுமரன் வர முடியாமல் போகவே கடைசி நேரத்தில் பொறுப்பை ஏற்றுக் கொண்டு அந்தத் தலைப்பில் பேசினார் மாலன். அந்த உரையின் இறுதியில் பெயரிலியுடனான அவரது விவாதங்கள், ஒரு ஆங்கில நாளிதழ் ஆசிரியரைக் குறித்த குறிப்புகள், அதை ஒட்டி ஈழத்தமிழர்களைக் குறிப்பிட்டுப் பேசியது அனைத்தும் பட்டறையின் நோக்கத்துக்கும் உணர்வுக்கும் பொருந்தாதவை என்றே நம்புகிறேன்.

இனிமேல் பட்டறைகள் நடத்தும் போது இது போன்ற கருத்து அரங்குகள் தேவை இல்லை என்று தோன்றுகிறது. அவற்றைத்தான் நாள்தோறும் பதிவுகளில் செய்கிறோம். அவ்வப்போது சந்திப்புகளில் பேசிக் கொள்கிறோம். பட்டறைகளில் கற்றுக் கொடுப்பதும் கற்றுக் கொள்வதும் மட்டும் நடந்தால் போதும்.

திங்கள், ஆகஸ்ட் 06, 2007

பட்டறை - நிறைவுற்றது

உணவு இடைவேளைக்குப் பிறகு வலைப்பதிவுகள் மூலம் சம்பாதிப்பது குறித்து கிருபா சங்கர் பேசினார். ஆங்கிலத்தின் பிரபலமான பதிவர் என்று அவரை அறிமுகப்படித்த அது இவர் இல்லையாம். கூகுள் விளம்பரங்கள் மூலம் பணம் ஈட்டுவது அதிக நேரத்தைப் பிடித்துக் கொண்டது. அதைத் தொடர்ந்த செய்து தொழிலுக்குத் தேவையான தொடர்புகள், வெளிச்சத்துக்காக பதிவுகளைப் பயன்படுவது குறித்தும் சிறிது பேசிக் கொண்டோம்.

ரஜினி ராம்கி சமூக அக்கறை குறித்துப் பேசினார். சுனாமி நிவாரணத்துக்காக அவர் ஒருங்கிணைத்து வலைப்பதிவு நடவடிக்கைகளை விளக்கினார். இந்த அமர்வுக்கிடையே வலை நண்பர்களுக்காக படம் பிடித்த நண்பருக்காக பட்டறையின் போக்கைக் குறித்துப் பேசிக் கொண்டேன். இப்படி ஒரு பட்டறை பற்றி கனவு கண்டு அதை இடை விடாது சொல்லிச் சொல்லி ஆட்களை ஒன்று சேர்த்து சாதித்த பாலபாரதியின் பணியிலிருந்து பங்கேற்ற பலரின் விபரங்களைப் பகிர்ந்து கொண்டேன்.

ரஜினி ராம்கியைத் தொடர்ந்து அடுத்த இடைவேளை. இடைவேளைக்குப் பிறகு அருள் செல்வன் இணையத்தின் இன்றைய நுட்பமும் நாளைய தொழிலும் என்பது குறித்துப் பேசினார். கடைசியாக வலைப்பதிவுகளில் மாறுபட்ட முயற்சிகள் குறித்து பொன்ஸ் தொகுத்தளிக்க அதில் ஈடுபடும் நண்பர்கள் தத்தமது முயற்சிகள் குறித்துப் பேசினார்கள்.

அதியன் எழுத்துரு மாற்றி குறித்து கோபியின் விளக்க அமர்வு கூட்டத்தைக் கட்டிப் போட்டது. விக்கிபீடியா குறித்து ஆமாச்சு, தேடு வேலை குறித்து செந்தழல் ரவி, விக்கி பசங்க குறித்து பினாத்தல் சுரேஷ், உபுண்டு குறித்து மீண்டும் ஆமாச்சு, மொபைல் புத்தகங்கள் குறித்து ஒரு நண்பர் பேசினார்கள். இவை தவிர மாற்று, சற்றுமுன், வலைப்பதிவர் உதவிக் குழு, பூங்கா, மகளிர் சக்தி, லிவிங் ஸ்மைல் வித்யா, எயிட்ஸ் விழிப்புணர்வு முயற்சிகள் என்று பொன்ஸ் சுருக்கமாக விளக்கினார்.

உச்சகட்டமாக ஓசை செல்லா ஒலி ஒளிப் பதிவுகள் குறித்து விளக்கி, அதன் மாதிரிகளையும் காட்டினார். அதற்குள் ஐந்தரை நெருங்கியிருந்தது். முடித்து வைக்கும் உரையை ஆரம்பித்து வாழ்த்துக் கவிதை படிக்க ஒருவரை அழைக்க, ஆதரவாளர்களுக்கு விக்கி நன்றி சொல்ல, பாலபாரதி தன்னார்வலர்களில் சிலருக்கு வெளிச்சம் போடும் விதமாக ஒவ்வொருவராக முன்னுக்கு அழைத்து கூட்டாக நிற்க பட்டறை முடிவடைந்தது.

பட்டறை - களை கட்டியது

உபுண்டு குழுவினர் ஆமாச்சு ஒருங்கிணைப்பில் ஒரு மேசை போட்டு லினக்ஸ் பற்றிய விபரங்களை வழங்க ஆரம்பித்தனர். லினஸ் அகாடமியிலிருந்து இன்னொரு பக்கம் திறவூற்று மென்பொருள் பயிற்சிகள் குறித்த விபரங்களை வழங்கிக் கொண்டிருந்தனர். தேன்கூடு நிறுவனத்தின் சார்பில் வந்திருந்த டி சட்டைகளை மாணவர்களுக்கு வினியோகித்துக் கொள்ள ஏற்பாடு செய்திருந்தார்கள்.

CNN IBN தொலைக்காட்சியினர் பயிற்சி வகுப்புகளில் படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். எல்லா பத்திரிகைகளுக்கும், தொலைக் காட்சி நிறுவனங்களுக்கும் முந்தைய வாரமே தகவல் சேர்த்து நிகழ்வன்றும் ஒருங்கிணைத்துக் கொண்டிருந்த உண்மைத் தமிழன் அந்தத் துறையின் தனது நண்பர்கள் மூலம் பட்டறைக்கு ஆகக் கூடுதல் வெளிச்சம் கொடுத்துக் கொண்டிருந்தார்.

நூறு கைகள் சின்ன சின்ன வேலைகளை செய்து கொண்டிருக்க பட்டறை கலகலப்பாகப் போய்க் கொண்டிருந்தது.

இடைவேளைக்குப் பிறகு முகுந்த், பேச்சை உரையாக மாற்றும் நுட்பம், உரையைப் படித்துக் காட்டும் வசதிகள், எழுத்துப் பிழை திருத்தும் செயலிகள் என்று தமிழில் வர வேண்டிய நுட்பங்களைப் பட்டியலிட்டார். காசி தமிழ் வலைப்பதிவுகள் ஒரு அறிமுகம் என்று வலைப்பதிவுகளை கவனத்துக்குக் கொண்டு வந்தார். அதில் நடக்கும் அரசியல்கள் கூட வெளிச்சத்துக்கு வந்தன.

அதைத் தொடர்ந்த மாலன் இணைய நன்னடத்தை என்று தனது அமர்வை ஆரம்பித்தார். இந்த அமர்வில் தான் வாயே திறக்கப் போவதில்லை என்று பல்லைக் கடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்து ஓசை செல்லாவையும் விவாதத்தில் இறங்க வைத்து சுறுசுறுப்பாகப் போனது.

'தனியாக வீட்டில் இருக்கும் போது நிர்வாணமாக இருக்கும் சுதந்திரம் இன்னொருவர் சேரும்போது மட்டுப்படுகிறது. தெருவில் இறங்கும் போது இன்னும் சில விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும். இதைப் போன்ற பட்டறைக்கு வந்தால் இன்னும் அதிகமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட வேண்டியிருக்கும்.'

'ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் சேர்ந்து வாழும் போது, செயல் போடும் போது கட்டற்ற தன்னிச்சை என்பது சாத்தியமில்லை. உரிமைகள் அதிகமாக இருப்பவர்களுக்கு பொறுப்பும் அதிகம். இணையத்திலும் அத்தகைய நடத்தை ஒழுங்குகள் யாரும் புகுத்தாமலேயே தானாகவே உருவாகிக் கொள்கின்றன' என்று கட்டம் போட்டுக் காட்டினார் மாலன்.

'திரைப்படங்களுக்கு தணிக்கை தேவையா? இணையத்தைத் தணிக்கை செய்ய முடியுமா' என்று செல்லா எடுத்துக் கொடுக்க முடிவே இல்லாத இந்த விவாதத்தை அத்துடன் நிறுத்தி விட்டு, வலையில் பாதுகாப்பு குறித்து லக்கிலுக் பேச ஆரம்பித்தார்

மொக்கை பதிவு என்றால் என்ன, கும்மி பதிவர் என்றால் யார் என்று வரையறைகளோடு ஆரம்பித்த அவரது அமர்வின் இடையில் வெளியே போய் ஆனந்த விகடன் குழுவினர் பிடித்து மணலில் உட்கார வைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். விக்கி, லக்கிலுக், பொன்ஸ் என்று குழுப் படம்

நாகூரிலிருந்து வந்திருந்த இஸ்மாயில் பாதுகாப்பு அமர்வில் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்க கூடுதல் நுட்பமான கேள்விகளை தனி மடலில் விவாதித்துக் கொள்ளலாம் என்று முடித்தோம். அதற்குள் தாமதமாக மதிய உணவு வந்து சேர்ந்து விட ஒன்றே முக்காலுக்கு உணவு இடைவேளை. நல்ல பசி வந்து விட்டதால் அமிர்தமாக ருசித்ததாம் உணவு.

ஜெயா தொலைக்காட்சியினர் காலியாக இருந்த பயிற்சி அறையில் நான்கு பேரை உட்கார வைத்து படம் எடுக்க உதவுமாறு கேட்க, காலையில் அவ்வளவு சுறுசுறுப்பாக நடந்த நடவடிக்கைகளை எடுக்காமல் இப்போது செயற்கையாக எடுக்காதீர்கள், இன்னும் ஒரு மணி நேரம் காத்திருந்து மதிய அமர்வுகளைப் படம் பிடியுங்கள் என்று கேட்டால் அடுத்த பணிக்குப் போகும் அவசரம்.

கடைசியில் கருத்து அரங்கில் பட்டறை பெயர் பின்னணியில் இருக்கப் பேசச் சொன்னார்கள். மூச்சு விடாமல் போட்ட போட்டில் படம் பிடிக்க வந்திருந்த இளைஞர் கடைசியில் தமிழில் தட்டச்ச வலைப்பதிய விபரங்கள் கேட்டு விட்டுத்தான் கிளம்பினார். 'அந்தத் தொலைக்காட்சி மூலம் ஆயிரக்கணக்கானோருக்குத் தமிழ்க் கணிமை விபரங்கள் போய்ச் சேர வேண்டும், தமிழகத்தின் ஒவ்வொரு கிராமத்துக்கும், இந்த தகவல்களைக் கொண்டு சேர்க்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டேன்.

பட்டறை - இணையமும், தமிழ் இணையமும்

கலந்து கொள்ள வந்தவர்களில் சிலர் தமது எதிர்பார்ப்புகளையும் கருத்துகளையும் சொன்னார்கள். பத்ரி, சிவஞானம்ஜி, ராமகி, மாலன், காசி, முகுந்த் என்று ஆரம்பித்து அந்த அரங்கில் நிரம்பியவர்களின் பட்டியலில் மைசூர், காரைக்கால், பாண்டிச்சேரி, கோவை, மதுரை, நாகூர், நாகர் கோவில், விழுப்புரம், கடலூர் என்று பல ஊர்களிலிருந்து பட்டறைக்காகவே வந்திருந்தவர்களும் இருந்தார்கள். பெங்களூருலிருந்து, சென்னைக்கு அடுத்த அளவில் பதிவர்கள் கலந்து கொண்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

விக்கி unconference என்றால் என்ன என்று விளக்கினார். பட்டறையின் மூன்று அறைகள், அதில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகள், எல்லோரும் பங்கேற்க வேண்டியதன் அவசியம், பட்டறை ஏற்பாடு செய்ததின் பின்னணி என்று கலகலப்பாக ஆரம்பித்து வைத்த உணர்வு நாள் முழுவதும் தொடர்ந்தது.

மேல் அறைகளில் பொன்ஸ், வினையூக்கி ஒருங்கிணைப்பில் நடந்த தொழில் நுட்ப அமர்வுகளைப் பற்றிப் பிற்பாடு நிறையக் கேட்க முடிந்தது. இடையில் செந்தழல் ரவி நடத்திய வகுப்பில் பெருந்திரளான மக்கள் தேன் கூட்டை மொய்க்கும் தேனீக்களைப் போலக் கூடி இருந்ததையும், பினாத்தல் சுரேஷ் மதியத்துக்கு மேல் நடத்திய பிளாஷ் வகுப்பு மிக அதிக ஆர்வம் காட்டப்பட்ட அமர்வாகவும் இருந்ததைப் பார்க்க முடிந்தது.

வினையூக்கி மட்டும் 30 பேருக்கு மேல் பயிற்சி அளித்ததாகச் சொன்னார். சில கல்லூரி மாணவர்கள் பிளாக்கர் கணக்கு ஆரம்பித்துத் தமிழில் பதிவு போட ஆரம்பித்து விட்டிருந்தார்கள். பயிற்சி அறைகளில் நிலவிய சூழல் மனம் நிறைப்பதாக இருந்தது.

என்னுடைய நேரம் பெரும்பாலும் கருத்தரங்கில் கழிந்தது. பத்தரை மணிக்கு பத்ரி இணையம் குறித்த தனது குறிப்புகளை வழங்கினார். அமர்வுகளை ஒலிப்பதிவு செய்ய தனது கையடக்க கருவியை அமைத்திருந்தார். நாள் முழுவதும் புரஜெக்டரில் குறிப்புகளைப் போடுவது, ஒலி அமைப்புகளில் உதவுவது என்று முன் வரிசையில் அவரும் நந்தாவும் அமர்வுகளுக்கு உறுதுணையாக இருந்தார்கள்.

சரியாக பத்தரைக்கு ஆரம்பித்த பத்ரி இணையத்தில் என்னென்ன சாத்தியம் என்று பட்டியலிட்டு விட்டு,
  • அதையெல்லாம் தமிழில் செய்ய முடியுமா? - ஆம்
  • செய்கிறோமா? - இல்லை,
  • ஏன்?
என்று கொளுத்திப் போட்டார். அரசாங்கம், கல்வி நிறுவனங்கள் முனைப்பெடுத்துச் செயல்பட வேண்டும். தேவையான சட்டங்களை இயற்ற வேண்டும், இது வரை தமிழ்க் கணிமையின் வளர்ச்சி தனிநபர் சார்ந்ததாகவே இருந்து வருகிறது என்று தனது கருத்தைச் சொன்னார்.

தமிழ் நாட்டில் விற்கப்படும் கணினிகளில் தமிழ் அமைப்புகள் கட்டாயமாக இருக்க வேண்டும். தமிழ் ஆதரவு இருக்கும் செல் பேசிகள் மட்டுமே விற்கப் பட வேண்டும் என்று சட்டம் போடுவது மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டதாகவே இருக்கும் என்றார்.

'இது போன்ற கருத்தரங்குகளில் அரசாங்கம் என்ன செய்ய வேண்டும் என்று பேசுவதால் என்ன பயன்? இங்கு வந்திருப்பவர்களால் முடிகிள பணியை பேசுவது பொருத்தமாக இருக்கும்' என்று மாற்றுக் கருத்து வர, 'நாம் பேசினால்தான் கருத்துத் திரட்டல் நடந்து மாற்றங்கள் ஆரம்பிக்கும்' என்று வித்யா சொன்னார்.

'இது போன்ற கொள்கை குறித்த விவாதங்கள் நடக்க வேண்டுமா' என்று கேள்வி எழுப்பி, வேண்டும் என்று தனது கருத்தையும் சொல்லி விட்டு, இணையத்தில் பத்திரிகைகளும் அரசுத் தளங்களும் ஒருங்குறியையே பயன்படுத்த வேண்டும் என்று அமெரிக்கை நாராயணன் பேசினார்.

'இந்தப் பட்டறையின் நோக்கம், தமிழ்க் கணிமை, வலைப்பதிதல், இணைய நுட்பங்களைப் பரவலாக்குதல், புதியவர்களுக்கு அறிமுகம் செய்தல். கொள்கைகள் குறித்து விவாதிப்பதால் அந்த நோக்கத்துக்கு மாறாக நேரம் செலவழியும்' என்று மாலன் பேசி அந்த திசையை அடைத்து விட்டார்

அமெரிக்கை நாராயணன் தனது நன்கொடையாக அரங்கிலேயே 5000 ரூபாய்கள் கொடுத்தார்.

அதைத் தொடர்ந்து முகுந்தராஜ் - மில்லியன் தட்டச்சுகளை உருவாக்கிய eகலப்பையின் படைப்பாளி- தமிழ் இணைய மைல் கற்கள் என்று பேசினார். தமிழ் டாட் நெட், முரசு அஞ்சல், மதுரைத் திட்டம், திஸ்கி, டேப், டேம், eகலப்பை, ஒருங்குறி, தமிழ் லினக்ஸ், வலைப்பதிவுகள், விக்கிபீடியா என்று பட்டியலை முடித்ததும் இணையத் தமிழ் மாநாடுகள் அவற்றில் விடுபட்டதாக மாலன் சேர்த்தார்.

இன்னும் செய்ய வேண்டிய பணிகளாக தொடர விரும்பிய முகுந்த் காபி இடைவேளைக்குப் பிறகு செய்யலாம் என்று ஏற்றுக் கொள்ள ஒரு சின்ன இடைவேளை.

பட்டறையை நோக்கி...

நானும் சக பயணி வினையூக்கியும் வளசரவாக்கம் வந்து சேர்ந்தோம். அதற்குள் வீடு போய் விட்டிருந்த ஜெயா பதிவு மேசைக்குத் தேவையான விபரங்களைத் தொகுத்து அனுப்பி விடுவதாகவும், அச்செடுத்துக் கொண்டு வந்து விடுமாறும் தொலைபேசினார். நாகர்கோவிலிலிருந்து வந்த எட்வினும் அவரது நண்பரும் தொலைபேச ராமாபுரத்துக்கு வர ரயிலில் கிண்டி வந்து ஆட்டோ பிடித்துக் கொள்ளச் சொன்னேன். வீட்டுக்கு வந்து தூங்கப் போகும் முன் அவர்களும் வந்து சேர்ந்து விட, அதிகாலையிலேயே நான் கிளம்பி விடுவேன், நீங்கள் பேருந்து பிடித்து வந்து விடுங்கள் என்று சொல்லி விட்டு அவர்களுக்கு தூங்க ஏற்பாடுகளையும் காட்டி விட்டுத் தூங்கி விட்டேன்.

அப்படி பின்னிரவில் வந்து சேர்ந்து அடுத்த நாள் முழுவதும் பட்டறையில் பங்கேற்று விட்டு ஞாயிறன்று மாலையே நாகர்கோவிலுக்குப் பேருந்து பிடித்துப் போய் விட்டார் அவர்.

காலையில் நாலரைக்கு எழுந்து மிக அவசியமான வேலைகளை மட்டும் முடித்து விட்டு அலுவலகம் போய்ச் சேர்ந்தேன். ஜெயா அனுப்பியிருந்த கோப்புகளை சரிபார்த்து அச்சிட்டுக் கொண்டேன். வருபவர்களில் தமிழ்த்துறை மாணவர்கள், இணையத் தளத்தில் பதிவு செய்தவர்கள், பதிவு செய்யாமல் வருபவர்கள் என்று மூன்று வகையான பட்டியல்கள், அந்தந்த மேசைகளுக்கான பெயர், அறைகளுக்கு வினையூக்கி சூட்டிய திருவள்ளுவர், பரிமேலழகர், நக்கீரர் என்ற பெயர் எல்லாம் அச்செடுத்துக் கொண்டேன்.

சாகரன் நினைவு மலர் பிரதிகளையும் வினியோகிக்க எடுத்து வைத்துக் கொண்டேன். அதிகாலை எழுப்பி விடும் சேவை கேட்டிருந்த நண்பர்களுக்குத் தொலைபேசி மணி அடித்துக் கொண்டே இன்னும் ஓரிரு பொருட்களை எடுத்துக் கொண்டு வினையூக்கியின் வீட்டுக்கு ஓரிரு நிமிடங்கள் மட்டும் தாமதமாக போய்ச் சேர்ந்தேன்.

மேக மூட்டமான வானிலை. தூறல்கள் கூட ஆரம்பித்திருந்தன. 25 நிமிடங்களில் ஆற்காடு சாலையின் நீளத்தை அளந்து ராதாகிருஷ்ணன் சாலையை முழுவதும் கடந்து காமராசர் சாலையில் இருக்கும் பட்டறை வளாகத்துக்கு வந்து சேர்ந்தோம். ஏழு மணிக்கு வருவதாகச் சொல்லி இருந்த வளாக பாதுகாப்புப் படையினரிடம் அரங்குகளைத் திறக்கும் படிக் கேட்டோம். ஜெயகுமார் பொறுப்பாக தாளில் கையெழுத்து போட்டு பூட்டுகளில் ஒட்டிப் போயிருந்தார்.

உண்மைத்தமிழன், நந்தா, ஜேகே, அதியமான் என்று வந்து கையை மடித்து விட்டுக் கொண்டு களத்தில் இறங்கினோம். அருள், ஜெய் சீக்கிரம் வந்து விட்டார்கள். ஜெயா தனது பொறுப்புக்குத் தேவையான பொருட்களுடன் வந்தார். குப்பையாகக் கிடந்த அரங்குகளை பாதுகாப்புப் பணியிலிருந்த முதியவரே பெருக்கிச் சரி செய்தார். ஞாயிற்றுக் கிழமை ஆதலால் வேலை செய்யும் பெண்மணிகள் வர மாட்டார்களாம்.

வினையூக்கி முதலானோர் கணினிகளை இயக்கி முதல் மாடியில் ஏற்பாடுகளை ஆரம்பித்தார்கள். நந்தாவுடன் போய் திருவல்லிக்கேணி சங்கீதாவில் சாப்பிட்டு விட்டு 4 பொட்டலங்களில் பொங்கல்/வடை வாங்கி வந்தோம். அதில் எண்ணெய் அதிகம் என்ற புகாருடன் சிலருக்குப் பயன்பட்டது.

சிபி நிறுவனத்தினர், ஐசிஎன் கணிப் பொறியாளர்கள், லைனஸ் அகாடமியிலிருந்து சரவணன், என்று ஒவ்வொருவராகக் கூடக் கூட்டம் களை கட்ட ஆரம்பித்தது. கட்ட வேண்டியவை, நிறுத்த வேண்டியவை, சோதிக்க வேண்டியவை எல்லாம் கச்சிதமாக நடந்து முடிந்தன.

கருத்து அரங்கில் ஆரம்ப அமர்வில் விக்கி பேசச் சொல்லியிருந்ததற்காக அரை மணி நேரம் உட்கார்ந்து குறிப்புகளைத் தயாரித்துக் கொண்டேன். ஒன்பது மணியிலிருந்தே பங்கேற்பாளர்கள் வர ஆரம்பித்து ஒன்பதரை மணிக்கெல்லாம் அரங்கம் ஓரளவு நிரம்பி விட்டது. இன்னும் பத்து நிமிடங்கள் பார்க்கலாம் என்று சிலர் சொல்ல, சரியான நேரத்துக்கு வந்தவர்களை காக்க வைப்பது சரியில்லை என்று எனது கட்சிக்கு ஐகாரஸ் பிரகாஷ் உறுதியான ஆதரவு தெரிவிக்க ஒன்பதரை மணிக்கு விக்கி அறிமுக அமர்வை ஆரம்பித்து விட்டார்.

பட்டறைக்கு முதல் நாளில்.....

சனிக் கிழமை காலையில் அலுவலக வேலைகளை முடித்து விட்டு 11.30க்கு வினையூக்கியை கூட்டிக் கொண்டு பன்னிரண்டு மணி வாக்கில் அரங்கத்துக்குப் போகலாம் என்று திட்டம். வேலைகள் முடிந்து கிளம்பும் போதே தாமதமாகி விட்டது. வினையூக்கி வீட்டுக்குப் போய் அவரையும் ஏற்றிக் கொண்டு வித்லோகா புத்தகக் கடைக்குப் போனோம். நந்தா அங்கே காத்திருப்பதாக பாலா தொலைபேசியில் சொல்லியிருந்தார்.

வெள்ளி மாலையே சிபி நிறுவனத்தார் இணைய இணைப்பு நிறுவி விட்டதாகத் தகவல் வந்திருந்தது. சனிக்கிழமை மதியம் வாடகைக்கு ஏற்பாடு செய்திருந்த கணினிகள் வந்து சேரும். அவற்றை வாங்கி வைப்பதிலிருந்து அரங்கத்தில் ஏற்பாடுகள் ஆரம்பிக்க வேண்டும்.

வித்லோகாவில் கணிச்சுவடி புத்தகத்தையும் குறுந்தகட்டின் இறுதி வடிவத்தையும் பார்த்து விட்டு அரங்கிற்கு கிளம்பி விட முடிவு செய்தோம். சனி அன்றும் வேறு ஏதோ நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்க நாங்கள் போய்ச் சேர்ந்த நேரம் மதிய உணவு வினியோகித்துக் கொண்டிருந்தார்கள். மேலே வகுப்பறைகளில் வரிசை வரிசையாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். காலியாக இருந்த கடைசி அறையில் முகாமைப் போட்டு விட்டுக் காத்திருத்தலை ஆரம்பித்தோம்.

மூன்று பேருமாக அமர்ந்து நிகழ்வன்று மூன்று பகுதிகளிலும் எப்படி ஏற்பாடுகள் இருக்க வேண்டும் என்று பேச ஆரம்பித்தோம். பயிற்சி அறைக்கு முழுப் பொறுப்பேற்றுக் கொள்வதாக வினையூக்கி ஒத்துக் கொண்டார். ஏழெட்டு கணினிகளை அமைத்து புதிதாக வருபவர்களுக்கு தனித்தனியாக தன்னார்வலர்கள் கற்றுக் கொடுக்கும் அறை அந்த பயிற்சி அறை. இந்த அறையும் தொழில் நுட்ப வகுப்புகள் நடக்கும் அறையும் முதல் மாடியில் இரண்டு வகுப்பறைகளில் ஏற்பாடு.

தொழில் நுட்ப வகுப்புகளில் 12-13 கணினிகள் அமைத்து பல்வேறு பொருட்களில் தொழில் நுட்ப நுணுக்கங்கள் 20-30 பேருக்கு ஒரே நேரத்தில் விளக்குவதாக அமையும். இந்த இரண்டு அறைகளுக்கும் ஒருங்கிணைப்பாளராக பொன்ஸ் இருப்பார் என்று ஏற்கனவே பேசியிருந்தோம்.

தரைத் தளத்தில் கருத்து அரங்கு. 150 இருக்கைகளுடன், குளிர் சாதன வசதியுடனான அரங்கம். பொதுவான விவாதங்கள் கருத்துப் பரிமாற்றங்கள் இங்கு நடக்கும். இதன் அமர்வுகளை விக்கியும் நானும் ஒருங்கிணைப்பதாக ஏற்பாடு.

சிபியிலிருந்து ஒரு பொறியாளர் வந்து வேலையைத் தொடர ஆரம்பித்தார். கணினி நிறுவனத்திலிருந்து கிளம்பும் போது தகவல் சொல்லி விடுவதாகத் தொலைபேசி. சுந்தர், அதைத் தொடர்ந்து ஜெயா வளாகத்துக்கு வர வழி கேட்டு தொலைபேசினார்கள். வளாகம் எங்கு இருக்கிறது என்பதில் பலருக்குக் குழப்பம் ஏற்பட்டது. சென்னைப் பல்கலைக் கழகம் என்றால் சேப்பாக்கம் வளாகத்துக்குப் போய்ச் சேர்ந்து விட்டுத் தொலைபேசியவர்களை அதிகம்.

அடுத்ததாக யோசிப்பவர் மகேசன் வந்து சேர்ந்தார். தமிழ்த் துறையினரைத் தொடர்பு கொண்டு புரொஜக்டர், ஒலி அமைப்புகளை சரி பார்க்க ஜெயாவும் யோசிப்பவரும் போய் விட்டார்கள். ஜே கே என்ற ஜெயகுமார் அடுத்து வந்தார்.

இருபது கணினிகள் எல்சிடி திரைகளுடம் வந்து இறங்கி விட இடம் களை கட்ட ஆரம்பித்தது. வினையூக்கியின் திட்டப்படி வகுப்பறைகளில் இருக்கைகளை மாற்றி அமைத்துக் கொண்டார்கள். அரங்கத்தில் பொருட்களைக் கொண்டு வைக்க ஆரம்பித்தோம்.

லக்கிலுக்கும் லெனின் என்ற அவர் நண்பரும் வினைலில் அச்சடித்த பேனர்கள், அடையாள அட்டைகள் போன்றவற்றைக் கொண்டு வந்தார்கள். காலையிலேயே கோவையிலிருந்து வந்திருந்த செல்லா ஓய்வெடுத்துக் கொண்டு கிளம்பும் முன். 'மேக்அப் எல்லாம் போட்டுக் கொண்டு தயாராக இருங்கள், ஒளிபரப்பு ஆரம்பமாகப் போகிறது' என்று குறுஞ்செய்தி அனுப்பி விட்டு வந்தார். அவர் சனிக்கிழமையும், நிகழ்வன்றும் நிகழ்த்திய தொடர் புகைப்படப் பதிவுகள் பட்டறையின் போக்கை அழகாகப் படம் பிடித்துக் காட்டிக் கொண்டிருந்தன. உடனுக்குடன் இணையத்துக்குத் புகைப்படங்கள் போய்ச் சேர்ந்தன.

விக்கி, ஜெயாவுடன் ஒருங்கிணைப்புகளைப் பற்றிப் பேசும் போது, வரவேற்பு, பதிவு செய்யும் மேசை, தகவல் உதவி, உணவு/தேநீர் வழங்குதல், என்று மேலாண்மை பணிகளுக்குத் தான் பொறுப்பேற்றுக் கொள்வதாக ஜெயா முன்வந்தார். அதற்கான குறிப்புகளையும் ஏற்பாடுகளையும் சுறுசுறுப்பாக ஆரம்பித்து விட்டார். நுழைவாயிலில் கட்டுவதற்கான பேனரைத் தனக்குத் தெரிந்த அச்சிடுபவரைப் பிடித்து தொலைபேசியிலேயே விபரங்கள் சொல்லி இரவு ஒன்பது மணிக்கு முன்பு தயாராகும் படி ஏற்பாடு செய்து விட்டார்.

அருள்குமார் அலுவலகத்திலிருந்து காபி இயந்திரம் வந்து சேர்ந்தது. மாணவர்கள் தம் பிடித்து முதல் மாடியில் ஏற்றி வைத்து விட்டார்கள். அருள், ஜெய் சங்கர், உண்மைத்தமிழன் என்று மாலையிலும் நிகழ்வன்றும் தூண்களாகச் செயல்பட்ட தன்னார்வலர்கள் எல்லோரும் கூடி விட்டோம். வினியோகிக்க வேண்டிய பொருட்களை பைகளில் போட்டு வைத்து விடலாம் என்று ஆரம்பித்தோம். குறுந்தகடும், கருத்து கேட்கும் படிவமும் வந்து சேர்ந்திருக்கவில்லை. கணிச்சுவடி பொட்டலம் எங்கிருக்கிறது என்று தெரியவில்லை.

பாலபாரதி பார்த்து பார்த்து அட்டகாசமாக செய்திருந்த காகிதப் பைகளினுள், அருள் குமார் ஏற்பாடு செய்திருந்த குறிப்பேடு, பேனா, ஹலோ பண்பலையினர் கொடுத்திருந்த சாவி வளையம், பட்டறை தொடர்பாக வினியோகிக்க அடித்திருந்த அறிவிப்பு ஒன்று போட ஆரம்பித்தோம். வட்டமாக உட்கார்ந்து கொண்டு கோல் தொடரில் பேசப்பட்ட வேலை முடங்கும் புள்ளிகளைப் பற்றிய சிரிப்புகளோடு 250 பைகளையும் நிரப்பிக் கொண்டிருந்தோம்.

பொன்ஸ், கருத்து திரட்டும் படிவங்களை அச்சடித்துக் கொண்டு வந்தார். பாலபாரதி குறுந்தகடுகளைக் கொண்டு சேர்த்தார். செந்தழல் ரவி தனது அனானி நண்பருடன் கிழக்கு ஆசியா பார்த்த பொலிவுடன் வந்தார். அவரது அனானி நண்பரையும் பை நிரப்பும் வட்டத்தில் சேர்த்துக் கொண்டோம். கடைசி வரை என்ன பெயரில் எழுதுகிறேன் என்பதே வெளிப்படுத்தவே இல்லை அந்த அனானி நண்பர்.

கண்ணில் படும் எல்லா வேலைகளையும் முடித்து விட்டுக் கிளம்பினால்தான் காலையில் வரும் போது பரபரப்பில்லாமல் நிகழ்வை ஆரம்பிக்கலாம் என்று பேசிக் கொண்டாம். மேலறைகளில் கணினி அமைப்புகளை ஐசிஎம் நிறுவனத்தார் செய்து முடித்தார்கள். அதற்குத் தேவையான மின்னிணைப்பு பெட்டிகளை சைதாப்பேட்டை வரை போய் எடுத்து வந்து விட்டார் நந்தா.

விக்கி ஒரு வெள்ளப் பலகையில் நிகழ்ச்சி நிரலை எழுதிக் கொண்டிருக்கும் போது, மேலறைகளில் ஜெயகுமார் கணினிகளின் மும்முரமாக இருக்கும் போது இரண்டு பேரிடமும் கதவுகளைப் பூட்டி விட்டுக் கிளம்பும் பொறுப்புகளை ஒப்படைத்து விட்டு மற்றவர்கள் புறப்பட்டோம். காலையில் தன்னார்வலர்கள் 7 மணிக்கு வர வேண்டும் என்று சொன்ன விக்கியிடம் வாயை விட்டு காலையில் கதவைத் திறக்க வேண்டிய பொறுப்பை வாங்கிக் கொண்டேன்.

பட்டறை - வினை முடித்த இனிமை

மனம் நிறைந்து விட்டால் உடல் வலிகள் படுத்துவதில்லை. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஏலகிரி மலைக்குச் சுற்றுலா போனோம். இறங்கும் போது கால்நடையாக, ஒற்றை அடிப் பாதை வழியாக இறங்கலாம் என்று முடிவு செய்து முட்புதர்களையும், தலையில் விறகு சுமந்து இறங்கும் உள்ளூர் வாசிகளையும் கடந்து நான்கைந்து பேராக வந்தோம். கால்கள் வலி உச்சக்கட்டத்தில். மலையை விட்டு இறங்கிய பிறகான ஓரிரு கிலோமீட்டர்களை கடக்க முடியவில்லை. இன்னும் நான்கு நாட்களுக்கு எழுந்திருக்கவே முடியாத சோர்வு இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் அடுத்த நாள் புத்துணர்ச்சியுடன் சுறுசுறுப்பாக எழுந்து விட முடிந்தது.

அதே புத்துணர்ச்சி இப்போதும். மலை ஏறி இறங்கிய உழைப்பும் களைப்பும் மனதில் ஏற்பட்ட நிறைவினால் ஈடு கட்டப்பட்டிருக்கின்றன. பதிவர் பட்டறை முடிந்ததும் இந்த உணர்வு.