வியாழன், ஜூன் 20, 2019

மார்க்ஸ் : காம்ரேட் நம்பர் 1 - வீடியோ

"வாசகர் சாலை" அமைப்பு 15-06-2019 அன்று எழும்பூர் இக்சா மையத்தில் நடத்திய நிகழ்ச்சியில் "காரல் மார்க்ஸ் - காம்ரேட் நம்பர் 1" என்ற தலைப்பில் பேசியது.


 ஒரு தோழர் எப்படி இருக்க வேண்டும்? ஒரு சிறந்த தோழர் எப்படி இருக்கிறார்? மார்க்ஸ் தோழர் எண் 1 என்றால் என்ன பொருள்?

ஒரு தோழர் ஒட்டு மொத்த மனிதகுல முன்னேற்றத்துக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டவராகவும் சிறந்த ஆசிரியராகவும் பணிவான மாணவராகவும், நல்ல நண்பராகவும், இருக்கிறார்.

காரல் மார்க்ஸ் இந்த மூன்று அளவீடுகளிலுமே ஒரு தலைசிறந்த தோழராக, தோழர் எண் 1 ஆக இருக்கிறார்.

மார்க்ஸ் ஜெர்மனியில் பிறந்தவர், பள்ளிப் பருவத்திலேயே மனித குலத்துக்கான வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொள்வதுதான் மிகச்சிறந்த வாழ்க்கைப் பணியின் தேர்வு என்று முடிவு செய்கிறார். தத்துவத் துறையில் முனைவர் பட்டம் பெற்றாலும் அப்போது ஜெர்மனியின் பல்கலைக் கழகங்களில் நிலவிய பிற்போக்கு அடக்குமுறை சூழலைக் கண்டு பேராசிரியர் பதவியை நாடாமல் பத்திரிகையாளராகவும், அரசியல் செயல்பாட்டாளராகவும் வாழ்கிறார். 1840-களின் கொந்தளிப்பான போராட்டங்களின் இறுதியில் கண்டத்து ஐரோப்பாவிலிருந்து நாடு கடத்தப்பட்டு அடுத்த 35 ஆண்டு வாழ்க்கையை இங்கிலாந்தில் கழிக்கிறார்.

1850 முதல் 1860 வரையிலான கட்டம் அகதியாக, ஏதிலியாக லண்டனுக்கு குடும்பத்துடன் புலம்பெயர்ந்த அவரது வாழ்க்கை மிகவும் நெருக்கடியான ஒன்றாக இருந்தது.



"பல சமயங்களில் வீட்டில் பத்திரிகை இல்லாமல் எழுதுவதற்குக் காகிதம் கூட இல்லாமல், தபால் தலைகள் இல்லாமல், மருந்து இல்லாமல், டாக்டர்கள் இல்லாமல் வாழ வேண்டியிருந்தது. சில சமயங்களில் மார்க்சினுடைய கோட்டும் டிரவுசர்களும் வட்டிக்கடையி்ல அடகுக்கு இருந்ததால் அவர் வீட்டை விட்டு வெளியே போக முடியவில்லை.

 - 4-வது குழந்தை ஹின்ரிச் குய்டோ 1849 நவம்பர் 5-ம் தேதி பிறந்தான்.

மார்க்ஸ் நோய் வாய்ப்பட்டார். கண் எரிச்சல், உடல்வலி அவரைப் பீடித்தது. 1853-ம் வருடம் அவருக்கு நுரையீரலில் நோய் கண்டது. அவருடைய மனைவியும் குழந்தைகளும் அடிக்கடி நோயுற்றார்கள்.

ஜென்னி - "எங்களிடம் கொஞ்சம் கூடப் பணம் இல்லாத காரணத்தால்.. இரண்டு அமினாக்கள் வீட்டிற்குள் வந்த வீட்டில் இருந்த கொஞ்ச நஞ்சம் சாமான்களையும் படுக்கைகள், போர்வைகள், துணிமணிகள் ஆகிய அனைத்தையும் இன்னும் என்னுடைய ஏழைக் குழந்தையும் தொட்டிலையும், என்னுடைய மகளின் பொம்மைகளையும் கூட ஜப்தி செய்து விட்டார்கள். குழந்தைகள் அழுது கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தனர்.

ஒரு வயது நிரம்பிய ஹின்ரிச் குய்டோ நிம்மோனியா காய்ச்சலால் 1850 நவம்பர் 19-ம் தேதி இறந்தாள். பிரான்சிஸ்கா 1851 மார்ச் 28-ம் தேதி பிறந்தது, இரண்டு ஆண்டுகளுக்குள்ளாக 1852 ஏப்ரல் 14-ம் தேதி இறந்தது. 1857 ஜூலை மாதம் ஜென்னிக்கு மற்றொரு குழந்தை பிறந்தது. அக்குழந்தை பிறந்தவுடனேயே இறந்து விட்டது.
அவருடைய எட்டு வயது மகன் எட்கார் 1855 ஏப்ரல் 6-ம் தேதி மரணமடைந்தான். எல்லோருடனும் நட்புணர்வுடன் பழகுவான். எப்போதும் துரு துரு என்று எதையும் கேட்டு விசாரித்துக் கொண்டிருப்பான், கேள்விகள் கேட்பான். குடும்பத்தில் செல்லப் பிள்ளை.

 "புரட்சிகரமான போராட்டங்களுக்காக என்னிடமிருந்த அனைத்தையும் நான் தியாகம் செய்து விட்டேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். இதைச் செய்ததற்கான நான் வருத்தப்படவில்லை. நான் மறுபடியும் மற்றொரு வாழ்க்கையைத் தொடங்கினாலும் இதே வேலையைத்தான் செய்வேன். அப்போது நான் திருமணம் மட்டும் செய்து கொள்ள மாட்டேன்". (பக்கம் 463)

இத்தகைய தாங்க முடியாத இழைப்புகளுக்கு மத்தியில்தான் இந்த சமூக முன்னேற்றத்துக்கும் அதன் ஆதார சக்தியாக இருக்கும் தொழிலாளி வர்க்கத்துக்கும் தனது விசுவாசத்தை அணுவளவும் விட்டுக் கொடுக்கவில்லை மார்க்ஸ். அவரது கல்வித் தகுதிக்கும், சிந்தனைத் திறனுக்கும், எழுத்தாற்றலுக்கும் அவர் சிறிதளவு வளைந்து கொடுப்பதாக பிற்போக்கு வர்க்கங்களிடம் சென்றிருந்தால் அவரை தங்கத்தால் குளிப்பாட்டியிருப்பார்கள். மனித குல முன்னேற்றத்துக்காக தான் ஏற்றுக் கொண்ட பாதையை இடைவிடாமல் பிடித்து உறுதியாக நின்றார் மார்க்ஸ்.

அத்தகைய கடும் உழைப்பிலும், வாழ்க்கை போராட்டத்திலும் மத்தியில் செதுக்கப்பட்ட சிற்பங்கள்தான் மார்க்சின் படைப்புகள். அவை அரசியல் கட்டுரைகள் ஆகட்டும், மூலதனம் நூல் ஆகட்டும், விமர்சனங்களுக்கு பதில் சொல்வதாகட்டும். பாரிஸ் கம்யூனில் தொழிலாளர் வர்க்கத்தின் மீது பொழியப்பட்ட அவதூறுகளை எதிர்த்து சீறிப் பாய்ந்ததாகட்டும் தொழிலாளி வர்க்கத்தின் எனவே மனித குல எதிர்காலத்தின் தலைசிறந்த தோழராக விளங்கினார் மார்க்ஸ்.

மூலதனத்துக்காகத் தனக்குக் கிடைத்த சன்மானம் அதை எழுதிய காலத்தில் புகை பிடித்த புகையிலைச் செலவுக்குக் கூட பற்றாது என்று மார்க்சே ஒத்துக் கொண்டிருக்கிறார். முதலாளி வர்க்க, அற்பவாத நோக்கில் பார்க்கும் போது அவர் தன்னுடைய வாழ்க்கையை சிறிதும் லாபமில்லாத லட்சியத்துக்கு அர்ப்பணித்து விட்டார். ஆனால், அதுதான் மிகவும் கௌரவமான வாழ்க்கை என்று இப்போது நமக்குத் தெரிகிறது.

அவர் "கண்ணியமிக்க" அறிவாளி என்ற முறையில் சமூகத்தில் நடமாட வேண்டும். தன்னுடைய அறிவை பயன்படுத்தி முழுப்பலனையும் (அது "பொது நன்மைக்காகவே") அடைய வேண்டும் என்பது பெற்றோர்களின் இலட்சியம். ஆனால், அந்த இலட்சியம் மாணவப் பருவத்தில் இருந்தே மார்க்சுக்கு அருவருப்பாக, அந்நியமானதாக இருந்தது. அப்படி எத்தனை "அறிவாளிகளை" அவர் உரையரங்குகளிலும் வாழ்க்கையிலும் கவனித்திருக்கிறார்.

மூலதனத்தின் "பட்டம் பெற்ற கைக்கூலிகள்" எத்தனை பேரை அவர்களுடைய தகுதிகளுக்கேற்ப அவர் "சிறப்பித்திருக்கிறார்".

இரண்டாவதாக, தெரியாத, புரியாத விஷயங்களை கேட்டுத் தெரிந்து கொள்வதற்கு நாம் நமது தோழரை நாடுகிறோம். அப்படிப்பட்ட ஒரு தோழர் மார்க்ஸ்.
காரல் மார்க்சின் மாணவர்களின் மாணவர் எண் 1 என்று சொல்ல வேண்டுமானால் அவர் லெனின்தான். லெனினுக்கு மார்க்ஸ் எப்படி சிறந்த ஆசிரியராக இருந்தார் என்பதைப் பற்றி லெனினின் துணைவியார் க்ருப்ஸ்காயா எழுதியவற்றிலிருந்து தெரிந்து கொள்கிறோம்.

"எனக்கு மனச் சோர்வு, குழப்பங்கள் ஏற்படும் போதெல்லாம் எனது எழுதும் மேசைதான் புகலிடம். எழுத ஆரம்பிக்கும் போது இருந்த குழப்பம் எழுதி முடித்திருக்கும் போது விலகி தெளிவு ஏற்பட்டிருக்கும்" என்று கலைஞர் கருணாநிதி சொன்னதாக ஒரு இடத்தில் படித்தேன். கலைஞர் கருணாநிதிக்கு தனது சிந்தனைகளை தொண்டர்களோடு பகிர்ந்து கொள்வதன் மூலம் தெளிவு பிறக்கிறது.

லெனின் சிக்கலான அரசியல் நிலைமைகள் ஏற்படும் போது, அவற்றை எதிர்கொள்வதற்காக மார்க்சுடன் உரையாடுகிறார். மார்க்ஸ் எழுதிய நூல்களை அவர் வாசிக்கவில்லை. அவர் மார்க்சின் படைப்புகள் மூலமாக அவருடன் உரையாடுகிறார்.

லெனின் என்பவர் நமது புத்தகங்களை வைத்துக் கொண்டு நம்முடன் உரையாட முயற்சி செய்வார் என்ற நோக்கத்தில் மார்க்ஸ் தனது படைப்புகளை எழுதியிருக்க முடியாது என்பது உண்மைதான். ஏனென்றால், ஒரு கருத்தைப் படித்து விட்டு அதற்கு எதிர் கருத்தையோ, கூடுதலான கருத்துக்களையோ, உதாரணங்களையோ சிந்தித்து விட்டு நாம் தொடர்ந்து படிக்கும் போது மார்க்ஸ் அந்த கேள்விகளுக்கு விடை அளித்திருப்பதை பார்க்க முடியும். இது மார்க்சின் அதிசய சக்தியால் பிறந்தது இல்லை.

அது அவரது அசுர உழைப்பின் விளைபொருள். ஒரு விஷயத்தைப் பற்றி எழுதுவது என்றால், அது தொடர்பாக கிடைக்கும் அனைத்து கட்டுரைகளையும், விபரங்களையும், கருத்துக்களையும் படித்து விடுகிறார். அந்தக் காலத்தில் உலகின் அறிவுச் செல்வங்களுக்கு எல்லாம் களஞ்சியமாக இருந்த பிரிட்டிஷ் அருங்காட்சியத்தில் அதற்கு போதுமான ஆதாரங்கள் அவருக்குக் கிடைத்தன. அந்த விஷயம் பற்றி பல்வேறு சிந்தனையாளர்கள் சரியாகவும் தவறாகவும் சொன்ன கருத்துக்களை குறித்துக் கொள்கிறார்.

அதன் பிறகு ஒட்டு மொத்த விஷயத்தையும் தனது வலுவான தர்க்கவியல் சிந்தனையைப் பயன்படுத்தி ஒரு கோர்வையாக தொகுத்துக் கொள்கிறார். விஷயத்தில் என்ன சாராம்சம் என்று புரிந்து கொள்கிறார்.

அதன் பிறகுதான் எழுத ஆரம்பிக்கிறார் மார்க்ஸ். அது தொடர்பாக பிறர் சொன்ன கருத்துக்கள், புள்ளி விபரங்கள், உதாரணங்கள், சம்பவங்கள் இவற்றை தான் தொகுத்துக் கொண்ட சித்திரத்தில் இணைக்கிறார். இணைத்து முழுமையான ஒரு சித்திரத்தை வழங்குகிறார்.

உதாரணமாக, முதல் இந்திய சுதந்திரப் போர் பற்றியும், இங்கிலாந்துக்கும் ரசியாவுக்கும் இடையே நடந்த கிரீமியப் போர் பற்றியும் மார்க்ஸ் எழுதியவற்றைக் குறிப்பிடலாம். இதை எல்லாவற்றையும் விட முக்கியமாக 3 பாகங்கள் "மூலதனம்", 3 புத்தகங்கள் "உபரி மதிப்புக் கோட்பாடுகள்" அடங்கிய புத்தகத்துக்கு முன் தயாரிப்பாக 920 பக்கம் கொண்ட ஒரு சுருக்கக் குறிப்பை எழுதியிருக்கிறார். அதைத் தொடர்ந்து நூலின் முதல் வடிவத்தை அரசியல் பொருளாதாரத்தின் விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு என்ற தலைப்பில் எழுதி வெளியிடுகிறார்.

அந்த வடிவம் படிப்பதற்கு, குறிப்பாக தொழிலாளி வர்க்கம் படித்து பலன் பெறுவதற்கு ஏற்றதாக இல்லை என்பதை உணர்ந்து அந்தப் புத்தகத்தை அந்த வடிவத்தில் எழுதும் திட்டத்தைக் கைவிட்டு மேலே சொன்ன 6 பாகங்களால் ஆன புத்தகங்களாக தொகுக்கிறார். அவற்றில் முத்ல பாகத்தை மட்டும் இறுதி வடிவம் கொடுத்து, சமீபத்திய புள்ளிவிபரங்கள், தகவல்களை சேர்த்து செழுமைப்படுத்தி வெளியிடுகிறார்.

இது மார்க்ஸ் ஒரு மகத்தான ஆசிரியனாக இருப்பதற்கு எப்படிப்பட்ட மாணவராக இருந்திருக்கிறார் என்பதைக் காட்டுகிறது.

(குறிப்புகள் - வீடியோவில் பேசியவற்றை ஒட்டியது. அதன் நேரடி உரை வடிவம் இல்லை.

மேற்கோள்கள் மார்க்ஸ் வாழ்க்கை வரலாற்றில் இருந்து எடுக்கப்பட்டவை. என்.சி.பி.எச் வெளியிட்ட தேர்வு நூல்களின் தொகுதி 18-ல் உள்ளது)

கருத்துகள் இல்லை: