செவ்வாய், ஜூன் 09, 2026

இஸ்ரேல், ஈரான் - ஓர் உரையாடல்

 A forwarded message in a whatsapp group by VA

 ஈரான் - இஸ்ரேல் பகை: மக்களின் வாழ்வைப் பலிகொடுக்கும் அதிகாரப் போதை!

 ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே சுமார் 1,000 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் உள்ளது. நேரடி எல்லைகளோ அல்லது நிலப்பரப்புச் சிக்கல்களோ இல்லாத நிலையில், ஈரான் அரசு இஸ்ரேல் மீது கொண்டிருக்கும் இந்தப் பகை முழுக்க முழுக்க தேவையற்றது மற்றும் அந்த நாட்டு மக்களின் எதிர்காலத்தைச் சீரழிப்பதாகும்.

பாதிக்கப்படும் மக்களின் கண்ணோட்டத்தில் சில கசப்பான உண்மைகள்:

 1. வறுமையில் மக்கள் - ஏவுகணையில் வரிப்பணம்:

ஈரானிய மக்கள் இன்று கடுமையான பொருளாதாரத் தடைகளால் ஒரு வேளை உணவிற்கே திண்டாடும் நிலையில் உள்ளனர். பணவீக்கம் விண்ணைத் தொடுகிறது. ஆனால், மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டிய அரசு, பல ஆயிரம் கோடிகளை இஸ்ரேலைத் தாக்குவதற்கான ஏவுகணைகளுக்கும், ட்ரோன்களுக்கும், பிற ஆயுதக் குழுக்களுக்கும் வாரி இறைக்கிறது.

2. திசைதிருப்பப்படும் அடிப்படை உரிமைகள்:

நாட்டிற்குள் மக்கள் சுதந்திரம் கோரியோ அல்லது வேலையில்லாத் திண்டாட்டத்தை எதிர்த்தோ போராடும்போது, "இஸ்ரேல் அச்சுறுத்தல்" என்ற பொய்யான பயத்தை உண்டாக்கி அந்தப் போராட்டங்களை ஈரான் அரசு நசுக்குகிறது. மக்களின் உண்மையான அழுகுரலை 'போர் முழக்கம்' கொண்டு அந்த அரசு மறைக்கிறது.

3. தேவையற்ற 'மதவாத' மேலாதிக்கம்:

இந்த 1,000 கி.மீ தூரப் பகை என்பது ஈரானிய மக்களுக்கானது அல்ல; அது அங்கிருக்கும் மதகுருமார்களின் 'ஈகோ' சார்ந்தது. தங்களை இஸ்லாமிய உலகின் தலைவர்களாகக் காட்டிக்கொள்ள வேண்டும் என்ற மதவாதப் போதையில், ஒரு செழிப்பான தேசத்தை உலக நாடுகளிடமிருந்து தனிமைப்படுத்தி, இருண்ட காலத்திற்குத் தள்ளியிருக்கிறார்கள்.

4. இளைய தலைமுறையின் கனவுகள் சிதைப்பு:

ஒரு காலத்தில் நவீனமான சிந்தனைகளுடன் இருந்த ஈரான், இன்று மதவாதச் சிறையாக மாற்றப்பட்டுள்ளது. உலகத்தோடு போட்டி போட வேண்டிய ஈரானிய இளைஞர்கள், இன்று தேவையற்ற போர் அச்சத்திலும், மதக் கட்டுப்பாடுகளிலும் தங்கள் வாழ்வை இழந்து நிற்கிறார்கள்.

 

5. போலித்தனமான அறம்:

தன் சொந்த நாட்டுப் பெண்களின் உரிமைகளைப் பறித்து, மாற்றுக்கருத்து பேசுபவர்களைச் சிறையிலடைக்கும் ஈரான் அரசு, பாலஸ்தீன மக்களின் உரிமைகளுக்காகப் பேசுவதாகச் சொல்வது மிகப்பெரிய நகைமுரண். இது அப்பட்டமான அரசியல் பித்தலாட்டம்.

 முடிவு:

சொந்த நாட்டு மக்கள் நிம்மதியாகவும், பசியின்றியும் வாழ வழி செய்யாத ஒரு அரசு, 1,000 கி.மீ தள்ளி இருக்கும் எதிரியைப் பற்றிப் பேசுவது கேலிக்கூத்தானது. மதவாதம் என்ற போதையை ஊட்டி, மக்களின் வயிற்றை அடித்து நடத்தும் இந்த அதிகாரப் போட்டி நிறுத்தப்பட வேண்டும். ஈரானிய மக்களுக்குத் தேவை ஏவுகணைகள் அல்ல; சுதந்திரமும், கண்ணியமான வாழ்வுமே!

 VA comment in support of Israle

அவர்கள் யாரை அழித்தார்கள் எவர் குடியை கெடுத்தார்கள் என்று நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

 அந்த நிலப்பகுதி அவர்களுடையது. வரலாறு முழுவதும் அவர்கள் தமது இடத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டும் மீண்டும் அமர்த்தப்பட்டும் இருக்கிறார்கள். இதுவரை அவர்கள் கையறு நிலையில் வரலாறு இழுத்து செல்லும் போக்கில் சென்று இருக்கிறார்கள். பல காலங்களில் இன அழிப்பு செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஃபிலிஸ்தியர் அமலேக்கியர் எகிப்தியர் பாபிலோனியர் ரோமானியர் ஐரோப்பாவில் கிட்டத்தட்ட அனைத்து நாடுகள் கிறிஸ்தவ அரசுகள் ரஷ்யா நாஜி ஜெர்மனி சோவியத் ஒன்றியம் என்று அனைத்து தேசங்களாலும் நாடுகளாலும் மக்களாலும் ஒடுக்கப்பட்டு கொல்லப்பட்டு சொல்லொணா கொடுமைகளுக்கு ஆட்பட்டு வரலாறு நெடுக வாழ்ந்து இருக்கிறார்கள்.

 அவர்கள் அறிவாளிகள், resilient மக்கள்.

 இப்போதுதான் அவர்கள் ஆசுவாசமாக மூச்சு விட இடம் கிடைத்து இருக்கிறது. இனி வருங்காலங்களில் முன்னர் போல அவர்களை அழிக்க நினைத்து விட முடியாது.

 Response by SK

 இது வரலாற்றுப் பார்வையும் இல்லாமல், அரசியல் புரிதலும் இல்லாமல் அன்னா ஹசாரே போல அறம் பேசும் அற்பவாதிகளின் எழுத்து.

 இஸ்ரேல் என்ற நாடு எவ்வாறு உருவாக்கப்பட்டது? அது பாலஸ்தீனர்களின் நிலத்தை எவ்வாறு தொடர்ந்து ஆக்கிரமித்து வருகிறது என்பதைப் பற்றிப் பேசட்டும்.

 நீங்கள் வேறு மக்கள் வாழும் பகுதிக்கு வாழச் சென்றால் அவர்களை மதித்து, அவர்களை ஏற்க வைத்து வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். ஒண்ட வந்தப் பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்டியடிக்கும் கதைதான் ஜியோனிஸ்டுகளின் அடாவடி அரசியல்.

 அடுத்தபடியாக, ரிக் வேதத்தில் சொன்னதையும் மனு தருமத்தில் சொன்னதையும் இந்தியாவில் சட்டமாக்க வேண்டியதுதான் மிச்சம். பார்ப்பனர்களின் மேலாதிக்கமும் பழிவாங்கப்பட்டோம் என்ற புலம்பலும், யூதர்களின் மேலாதிக்கமும் பழிவாங்கப்பட்டோம் என்ற புலம்பலும் ஒரே இரகம்.

 பாபர் மசூதியை இடித்து இராமர் கோயில் கட்டியதற்கும் இதுதான் அடிப்படை. மதவாத, மேலாதிக்க சக்திகளான பார்ப்பனர்கள் யூத மேலாதிக்க வாதிகளை கொஞ்சிக் குலாவுகிறார்கள். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அவர்களது ஒடுக்குமுறையை எதிர்ப்பதும், அப்படி எதிர்ப்பவர்களை ஆதரிப்பதும்தான் சமூகநீதியுடன் கூடிய உலகை உருவாக்குவதற்கான வழி.

 பைபிள் கதைகளையும் இராமாயண கதைகளையும் கதைகளாக, தேவைப்பட்டால் அவை கூறும் பாடங்களைப் பின்பற்றும் வழிகாட்டிகளாக பயன்படுத்தலாம். அதற்குமேல் அவற்றுக்கு வரலாற்று அடிப்படை கொடுக்க நினைத்தால், இந்தியாவை பார்ப்பனர்கள்தான் ஆள வேண்டும்.

 அதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா? பார்ப்பனியமும் மனு தருமமும்தான் இந்தியாவின் அரசமைப்புச் சட்டமாக இருக்க வேண்டும் என்ற கொள்கை உங்களுக்கு உடன்பாடுதானா?

 மோசஸின் கதையை ஒரு inspiration ஆக எடுத்துக் கொண்டு அம்பேத்கர் பேசியதாகக் குறிப்பிடும் ஒரு பத்திரிகைச் செய்தியை வைத்துக் கொண்டு இஸ்ரேலின் அனைத்து அடாவடிகளையும் படுகொலைகளையும் ஆதரிக்கும் அரசியலுக்கு எந்த நியாய அடிப்படையும் இல்லை.

 சோவியத் ஒன்றியத்தில் யூதர்கள் எப்படி ஒடுக்கப்பட்டார்கள்? கொல்லப்பட்டார்கள்? சொல்லொணாக் கொடுமைகளுக்கு ஆட்பட்டார்கள்?

 போகிற போக்கில் அடித்து விடக் கூடாது. யூதர்கள் இஸ்ரேலுக்கு (அதாவது பாலஸ்தீன நாட்டுக்கு) புலம்பெயர்வதைத் தடுத்ததுதான் சோவியத் ஒன்றியத்தின் அரசியல். யூத மேலாதிக்க குடியேற்றத்தை சோவியத் ஒன்றியம் ஆதரிக்கவில்லை.

 அது, ஒடுக்குமுறை என்றால், இட ஒதுக்கீடு மூலம் பார்ப்பனர்களின் மேலாதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்ததையும் ஒடுக்குமுறை என்பீர்களா?

 நான் முன்பு சொன்னதைத் திருத்திக் கொள்கிறேன்.

 யூதர்கள் இந்த நிலத்தில் வாழ்ந்ததற்கான அகழ்வாராய்ச்சி ஆதாரங்களும் பண்டைய இலக்கிய ஆதாரங்களும் உள்ளன என்று தெரிகிறது. இவை அனைத்தும் குறைந்தது 1500 ஆண்டுகளுக்கு முன்பு யூதர்கள் அங்கு வாழ்ந்திருக்கலாம் என்று காட்டுகின்றன.

 1500 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்று ஒடுக்குமுறைக்கு (அப்படி நடந்திருந்தாலும்) இருபதாம் நூற்றாண்டில் அந்த அடிப்படையில் தீர்வு காண்பது தவறு. பதினாறாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பாபர் மசூதி பிறந்த இடத்தில்தான் இராமர் பிறந்தார் என்பது இந்துக்களின் நம்பிக்கை என்று 1992 இல் பாபர் மசூதியை இடித்து 28 ஆண்டுகளுக்குப் பின்னர் இராமர் கோயில் கட்டியதைப் போன்ற ஒரு நடவடிக்கை அது.

 பால்ஃபோர் டிக்ளரேஷன் பிரித்தானிய ஏகாதிபத்தியம் வெளியிட்டது. அதனை நாடுகளின் கழகத்தில் ஏற்க வைத்ததும் ஏகாதிபத்திய நாடுகளின் பணி.

 பாலஸ்தீனத்தில் வாழும் மக்களின் சுயநிர்ணய உரிமை எந்த வகையிலும் கணக்கிலெடுத்துக் கொள்ளப்படவில்லை.

 சரி, அப்படியே இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட இஸ்ரேல் என்ற நாட்டை ஏற்றுக் கொண்டாலும் (நடந்து முடிந்து விட்ட கதை என்பதால்), அங்கு பாலஸ்தீனர்களுக்கும் ஓர் அரசு வேண்டும் அல்லது ஒரே அரசின் கீழ் இரு தரப்பினருக்கும் சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும். அது யூதர்களின் தாயகமாக இருக்க முடியாது. பாலஸ்தீன நிலத்தில் குடியேறிய அவர்கள் அதைப் புரிந்து கொண்டு கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.

 நான் வைத்துதான் சட்டம் என்று சுற்றி உள்ள அனைத்து மக்களையும் பகைத்துக் கொண்டு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் "மூழ்கடிக்க முடியாத விமானம் தாங்கிக் கப்பலாக" செயல்படக் கூடாது.

 இது இன்றைய ஏகாதிபத்திய உலகில் சாத்தியமற்ற ஒன்றுதான். நியாயமான ஒரு சோசலிச உலகில் அதை வந்தடைய முடியும். அதுவரை அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும் இஸ்ரேலின் மேலாதிக்க அரசியலையும் எதிர்ப்பதுதான் சனநாயகத்தை நேசிக்கும் அனைத்து மக்களின் கடமை, இஸ்ரேலில் வாழும் யூதர்கள் உட்பட.

 1500 ஆண்டுகளுக்கு முன்பு, ரோமப் பேரரசின் காலத்தில் யூதர்கள் துரத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு, யூதர்கள் உலகின் பிற பகுதிகளில் ஒடுக்கப்பட்டிருக்கலாம் (ஹிட்லரின் ஜெர்மனியில்). அதற்குத் தீர்வு அவர்கள் பல நூற்றாண்டுகளாக வாழும் அந்தந்த நாடுகளிலேயே அவர்களது சனநாயக உரிமைகளை உறுதி செய்வதுதான்.

 கல் தோன்றி மண் தோன்றா காலத்து அதாவது பண்டைய வரலாற்றையெல்லாம் திருத்தி எழுதத் தொடங்கினால் உலகம் அந்தப் பண்டைக் காலத்திலேயே தேங்கியிருக்க வேண்டியது நேரும். போர்களும் இரத்தக் களறியும் படுகொலைகளும் நடக்கும். அதற்கு வாழும் எடுத்துக்காட்டுகள் பாலஸ்தீன நிலத்தில் இஸ்ரேல் உருவாக்கப்பட்டதும், அதை விடச் சிறிய அளவில் ஆனால் அதே அளவு கொடூரமாக பாபர் மசூதியை இடித்து இராமர் கோயில் கட்டப்பட்டதும். இரண்டின் விளைவாகவும் மதவெறி அரசியலும் மக்கள் மீதான அடக்குமுறையும் ஏற்பட்டிருக்கின்றன.

 சில கேள்விகள்

1. 1500 ஆண்டுகளுக்கு முன்னர் ஜெர்மனி என்ற நாடு கிடையாது

2. பிரித்தானியா தீவில் இன்றைய மக்கள் கிடையாது

3. இப்போதைய சீனா, இந்தியா, ஈரான், எகிப்து முதலிய நாடுகளும் ஆப்பிரிக்க பழங்குடிகளும்தான் அன்று இருந்து இன்றும் தொடரும் நாகரிகங்கள்

இஸ்ரேலுக்கான நியாயத்தை எடுத்துக் கொண்டால் அமெரிக்காவையும் ஆஸ்திரேலியாவையும் நியூசிலாந்தையும் ஐரோப்பியர்கள் காலி செய்ய வேண்டியிருக்கும். பழங்குடி மக்களிடம் அந்த நிலங்களை ஒப்படைக்க வேண்டியிருக்கும். இன்று யாரும் அதைக் கேட்கவில்லை. இந்த ஐரோப்பியக் குடியேறிகள், தங்களது வரலாற்றுத் தவற்றை உணர்ந்து அதற்கு மன்னிப்பு கேட்டு எஞ்சியிருக்கும் பழங்குடிகளை மதிக்க வேண்டும் என்ற குறைந்த அளவு கோரிக்கைதான் வைக்கப்படுகிறது. அதைக் கூட ஏகாதிபத்திய சக்திகள் இதுவரை ஏற்கவில்லை.

 யூதர்களை ஒடுக்கிய, துன்புறுத்திய ரோமப் பேரரசின் ஐரோப்பிய அரசுகளின் நாஜி ஜெர்மனியின் வாரிசுகளான மேற்கு ஐரோப்பாவும் அமெரிக்காவும் மன்னிப்பு கேட்டு மனம் வருந்தட்டும். அதற்காக பாலஸ்தீன மக்களை பலி கொடுப்பது என்ன நியாயம்? பாலஸ்தீன நிலம் பிரித்தானிய காலனிய ஆட்சியில் இருந்தது. அதை எடுத்து, அந்த மக்களை கேட்காமலேயே இஸ்ரேல் நாட்டை அமைத்தது பிரித்தானியா.

 இஸ்ரேலின் யூதர்கள் (நியாயமான யூதர்கள் அதைச் செய்வார்கள்) தங்களது நிலையை உணர்ந்து ஐரோப்பியர்களை மன்னிப்புக் கேட்கும்படி கோர வேண்டும். அரபு மக்களிடம் நட்புக் கரம் நீட்ட வேண்டும். பிரித்தானிய/அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் "மூழ்கடிக்க முடியாத விமானம் தாங்கிக் கப்பலாக" தங்களது நாட்டைப் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது.

 அப்போது யூதர்களுக்கு உலக மக்களின் ஆதரவு கிடைக்கும். உலகம் முழுவதையும் ஒடுக்கி வரும் வில்லன்களின் சட்டைப் பைக்குள் இருந்து கொண்டு, அடாவடி போர்களை நடத்திக் கொண்டு, 1500 ஆண்டுகளுக்கு முன்பு தமது மக்கள் எதிர்கொண்ட ஒடுக்குமுறையைப் பற்றி முறையிடுவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? அதுவும் தங்களை ஒடுக்கியவர்களின் பைகளுக்குள் இருந்து கொண்டு உலகை மிரட்டுகிறார்கள்.

 

1500 ஆண்டுகளுக்கு முன்பு ஒடுக்கப்பட்ட யூதர்களுக்கு நியாயம்வழங்கிய பிரித்தானியா, 500 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பியர்களால் இனப்படுகொலை செய்யப்பட்ட வட அமெரிக்கப் பழங்குடிகளுக்கு என்ன செய்தது? என்று கேட்டுப் பாருங்கள். இஸ்ரேல் ஏன் ஐரோப்பிய/அமெரிக்க ஏகாதிபத்தியங்களின் திட்டம் என்பது தெளிவாகும்.

கருத்துகள் இல்லை: