திங்கள், நவம்பர் 17, 2008

பட்டினியும் பங்குச் சந்தை குறியீட்டு எண்ணும்

(அக்டோபர் 26, 2007)
நண்பர் ஒருவரை நீண்ட நாட்களுக்குப் பிறகு பார்த்தேன். இன்றைக்கு சென்செக்ஸ் குறியீடு 500 புள்ளிகள் ஏறி விட்டதாமே என்று காரணமில்லாமல் சந்தோஷப்பட்டுக் கொண்டார். ஒரு வேளை கொஞ்ச பணம் பங்குச் சந்தையில் முதலீடு செய்திருக்கலாம்.

இந்திய பங்குச் சந்தை உலக சாதனைகளை முறியடித்துக் கொண்டிருக்கும் போது, அதற்கு சின்ன இருமல் வந்தால் கூட அவசர அவசரமாக நிவாரணத்தில் இறங்கும் நிதி அமைச்சர் இருக்கும் போது இன்னும் பல இடங்களிலும் இந்தியாவின் சாதனை வெளியே தெரிய வருகிறதாம்.

இன்றைக்கு இந்து நாளிதழில் வெளியாகி இருக்கும் பி சாய்நாத்தின் கட்டுரையில் பட்டினிக் கொடுமையை ஒழிப்பதற்கான தரவரிசையில் நமது திருநாடு எத்தியோப்பியாவுக்கு ஒரு இடம் பின்னால் இருக்கிறதாம். 118 நாடுகளை மதிப்பிட்டதில் இந்தியாவின் தரவரிசை 94. எத்தியோப்பியா 93ல்.

'இந்தியாதான் உலகைக் கலக்குகிறது. இனி எல்லாம் சுகமே' என்று எழுதி முடித்து விட்ட இளைய மேல் நோக்கி பறக்கும் சமூகம் இருக்கும் இந்தியாவில்தான் இந்த நிலைமையும்.

இப்படி ஒரு தரவரிசை வந்து விட்டதே என்று எந்த தொலைக்காட்சி அரங்கத்திலும் விவாதங்கள் தூள் பறக்கவில்லையாம். நிதி அமைச்சர் மற்ற வேலைகளை விட்டு விட்டு அவசர நடவடிக்கைகளை அறிவிக்கவில்லை. பத்திரிகைகளின் உள்பக்கங்களில் வேறு செய்திகள் கிடைக்காமல் இருந்தால், ஒரு சிறு இடத்தில் இதற்கு இடம் கொடுத்திருப்பார்கள். முதல் பக்கத்தில் 19000க்குப் பறக்கும் சென்சஸுக்குத்தான் இடம்.

கருத்துகள் இல்லை: