செவ்வாய், ஜனவரி 27, 2009

பொருளாதார மேம்பாட்டு சாத்தியங்கள்

1. பராக் ஒபாமாவின் நிர்வாகத்தில் பெரு வணிக நிறுவனங்களுக்குச் சாதகமான கொள்கைகள் பின்பற்றப்படாது. பரவலான பொது மக்களுக்கு, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பலனளிக்கும் நடவடிக்கைகளைத்தான் எதிர்பார்க்கலாம். அதனால் இந்தியாவிலும், வியாபாரிகள், பெரு நிறுவனங்கள் சார்ந்த பொருளாதாரத்துக்கு நிவாரணம் சீக்கிரம் கிடைத்து விடாது.

2. அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு கலவையாக ஒரு கிச்சடி அரசு அமைவது வணிகர்கள் சார்ந்த கட்சிகளான பாசக அல்லது காங்கிரசு தலைமையில் அரசு அமைவதை விட நல்லதாகவே இருக்கும். மும்பை பங்குச் சந்தைக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும், எகனாமிக் டைம்சு படிப்பவர்களுக்கும் சாதகமான பொருளாதார நடவடிக்கைகள் எடுக்கப்படாமல், கிராமத்து மக்களுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் சாதகமான நிர்வாகம் அமையலாம்.

3. Wealth at the bottom of pyramid என்று சி கே பிரகலாத் சொன்ன மந்திரத்தைப் பிடித்துக் கொண்டு ஒரு ரூபாய் சாம்பூ பொதி, 2 ரூபாய் துணி துவைக்கும் பொடி பொதி என்று பன்னாட்டு நிறுவனங்கள் கிராமத்து நுகர்வோரை நோக்கி சந்தைப்படுத்தலை திருப்பின.

அதைப் போல, வணிக நிறுவனங்களுக்குச் சாதகமான கொள்கைகள் மட்டும்தான் பொருளாதாரத்துக்கு நல்லது என்ற கடந்த 30 ஆண்டு கால உலகப் பொதுப்புத்தியை விடுத்து, ஏழைகள், பொருளாதார ஏணியில் கீழ்ப்படிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான கொள்கைகள் சமூகத்தை உறுதி பெறச் செய்யும் என்ற எம் ஜி ஆர் பாணி அரசியல், அமெரிக்காவில் 1930களில் அதிபராக இருந்த பிராங்கிளின் ரூஸ்வெல்ட் பாணி பொருளாதார அரசியல் இந்த நூற்றாண்டின் இரண்டாவது பத்தாண்டில் தேவையான நடவடிக்கைகள்.

அமெரிக்காவில் முந்தைய சனநாயகக் கட்சி நிர்வாகமாக பில் கிளின்டன் ஆட்சி செய்த போதும், பிரிட்டனில் தொழிற் கட்சி ஆட்சியின் தலைவராக டோனி பிளேர் இருந்த போதும். அந்தக் கட்சிகளின் பாரம்பரிய பொருளாதாரக் கொள்கைகளை கிடப்பில் போட்டு விட்டு வணிகர்களின் நல ஆட்சியே நடத்தினார்கள். அது மாறி உண்மையான சனநாயகக் கட்சி, தொழிற்கட்சி ஆட்சி வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.

அமெரிக்காவில் பராக் ஒபாமாவும், பிரிட்டனில் கார்டன் பிரௌனும், இந்தியாவில் மாயாவதி/பொதுவுடமை கட்சிகள்/சமூகவாதக் கட்சிகள் கூட்டணியும் இத்தகைய கொள்கைகளை கடைப்பிடிப்பதற்கு பொருத்தமானவர்கள்.

இந்தியாவிலும், தமிழகத்திலும் அதே போல மாற்றங்கள் ஏற்பட வேண்டும்.

திமுகவை விட்டால் மாற்று அதிமுக என்று ஆயாசம் அடைய வேண்டாம். நாமெல்லாம் மனதளவில் தயாராகும் போது அதற்கான தேர்வு மிக வேகமாக வந்து விடும். பராக் ஒபாமா இரண்டு ஆண்டுகளுக்குள் அரசியல் மேடையில் வெளிச்சம் பெற்று அமெரிக்க அதிபராகி விட்டது போல, மக்கள் கருத்து திருப்பம் பெற்றதும் திமுக/அதிமுக, காங்கிரசு/பாசக அரசியலுக்கான மாற்று கிடைத்து விடும்.

சோவியத் புரட்சிக்குப் பிறகு இரண்டு மாதங்களுக்குள் லெனின் அதன் தலைமைப் பொறுப்பை ஏற்று அடுத்த ஆறு மாதங்களுக்குள் ஆட்சிப் பொறுப்பை சோவியத் ஏற்க வைத்தாராம். மாற்றங்களுக்கு சமூகம் தயாராகும் போது அதற்கான தேர்வுகளும் உருவாகி விடுகின்றன.

ஞாயிறு, ஜனவரி 25, 2009

கண்டனத்துக்குரிய டோண்டு ராகவன்

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்த வலைப்பதிவை ஆரம்பித்ததும் ஆரம்ப இடுகைகளில் ஒன்று, டோண்டு ராகவனின் சாதி அமைப்பைத் தூக்கிப்பிடிக்கும் போக்கைக் கண்டிப்பதாக இருந்தது.

இப்போது மீண்டும் ஆரம்பித்து விட்ட அவரது கருத்தாக்கங்களை வன்மையாகக் கண்டிக்கிறேன். டூண்டு என்ற பெயரில் அவரைத் தாக்கி அடக்கி வைத்திருந்தவரின் முறைகள்தான் சரியோ என்று தோன்றுகிறது.

குமுதம் என்ற வருணாசிரம ஆதரவுப் பத்திரிகையில் வெளியிடப்படும் கட்டுரைகளைத் தமக்கு தூண்டுதலாக அவர் சொல்வதில் இருக்கும் அவலம் நமது சமூகத்தில் புரையோடிக் கிடக்கும் நோய்களின் முதல்.

டோண்டுவின் கருத்துக்களை தேவையில்லாமல் இணைத்து விளம்பரம் கொடுப்பதாக இருந்தாலும், கசப்புடனேயே இந்த இடுகையை வெளியிடுகிறேன்.

புதன், ஜனவரி 21, 2009

ஆணும் பெண்ணும்

'எதற்காக இவ்வளவு ஓட்டங்கள்'. வெறும் உடலியல் இயற்கையை மட்டும் வைத்துப் பார்த்தால் உலகில் பெண்களுக்கு ஆண் விகிதம் குறைவாகவே போதுமானது. எதிர்மறையாக ஒரு ஆணுக்கு ஒரு பெண் என்ற விகிதாச்சாரத்தை விட பெண்களின் எண்ணிக்கைக் குறைந்தே காணப்படுகிறது.

அடிப்படை உணர்வுகள் என்னென்ன?

ஒரு ஆணுக்குப் பெண்ணைக் கண்டதும் ஏற்படும் இச்சை
பெண்ணுக்கு ஆணைக் கண்டதும் ஏற்படும் ஆசை
வயிற்றுப் பசி
குழந்தைகள் மீது ஏற்படும் பாசம்
சக மனிதன் துன்புறும் போது ஏற்படும் துடிப்பு
பிற உயிர்கள் மீது ஏற்படும் அன்பு
மேலும் மேலும் மேம்பட வேண்டும் என்ற ஓட்டம்
இறவா வரம் வேண்டும் என்ற உள்ளுணர்வு

இவை எல்லாம் மனிதர்களை வரையறுக்கின்றன. தாய் குழந்தையைப் பெறுவதற்கு என்ன உந்துதல். நாய் குட்டி போடுவதற்கு இருக்கும் உந்துதலுக்கும் அதற்கும் அடிப்படையில் என்ன வேறுபாடு? வயது அதிகமாகும் போது தோல் சுருங்கி, நினைவு தடுமாறி இறந்து போகும் போது நமது எச்சங்களை பெருமைப்படுத்துவதற்கு என்று சந்ததியினர் இருக்கிறார்கள் என்ற நிறைவுக்கு மட்டும்தானா அது?

உயிர்ப்பொருட்களை உருவாக்கிக் கொள்வதுதான் நமது அடிப்படை உந்துதல். சூரியனின் ஆற்றலைப் பிடித்து சர்க்கரைப் பொருளாக மாற்றி வைத்துக் கொள்கின்றன தாவரங்கள். ஆற்றல் உயிர்ப்பொருளாக மாறியிருக்கிறது. அந்த சர்க்கரைப் பொருளை சாப்பிட்டு தனது உடலை வளர்த்துக் கொள்கின்றன மற்ற விலங்குகள். அதில் சர்க்கரையை விட சிக்கலான மூலக்கூறுகளுடன் எலும்பும், தசையும், நரம்பும் வளர்கின்றன. மிக எளிதான உயிரினங்களிலிருந்து மிகவும் சிக்கலான உயிர்ப்பொருட்கள் உருவாகும் பரிணாம வளர்ச்சிதான் அடிப்படை உந்துதல்.

சிக்கலான உயிரினங்கள் உருவாவதன் தேவை என்ன? ஆற்றலை உயிர்ப்பொருளாக மாற்றிக் கொண்டு விட்டால் அப்படி உருவாக்கப்பட்ட சிக்கலான உயிரினங்கள் செய்ய முடியும் சாதனைகளின் சாத்தியங்கள் அதிகமாகிக் கொண்டே போகும். மேட்ரிக்சு படத்தில் மிகவும் உயர் நிலையில் இருக்கும் உயிரினங்கள் மனிதர்களின் வாழ்க்கையில் வெளிப்படும் ஆற்றலை தமது தேவைக்காக எடுத்துக் கொள்கின்றார்கள். அதற்காக மனித உலகை இயக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று காண்பிப்பார்கள். அது போலத்தானே நாமும் தாவரங்களையும் பிற விலங்குகளையும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்!

உயிர் நிலையை பெருகச் செய்யும் எல்லாவற்றையும் ஊக்குவிக்க வேண்டும். குழந்தைகளுக்கு நிறைய சாப்பாடு போட்டு கொழுகொழுவென்று வளர்த்தால் மட்டும் போதாது, அந்த வளர்ப்பை இன்னும் சிறப்பாகச் செய்ய புற உலகின் வளங்களை இன்னும் சிறப்பாக எப்படிப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சிந்தித்து அதை மாற்றிக் கொடுப்பதற்கான பங்களிப்பும் தேவை. குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு பெண்களிடம் இயல்பாக அமைவது போல புற உலக மேம்பாட்டுகளுக்கான உடல் அமைப்புகள், மூளைத் தூண்டுதல்கள், உள்ளப்போக்குகள் ஆண்களுக்கு அதிகமாக வளர்ந்திருக்கிறது

'இது ஆணுக்கும் பெண்ணுக்கும் எந்நாளும் உள்ள கதை' என்று பாடலில் வரும். ஆணும் பெண்ணும் இணைய வேண்டும், சேர்ந்து வாழ வேண்டும் என்ற உந்துதல் அடிப்படை உண்மை. அதில் இருக்கும் ஆதாயங்கள் ஆணுக்கும் புரிகிறது, பெண்ணுக்கும் புரிகிறது.

பெண்கள் உடலுழைப்பு செய்ய முடியாது என்று ஒரு இடத்தில் எழுதிய போது, 'பெண் பலவீனமாவள், அதனால் உழைக்க முடியாது என்றல்லவா சொல்கிறார்' என்று ஒரு சகோதரி பதில் எழுதியிருந்தார். உடலுழைப்பு என்பது பலம் என்று வைத்துக் கொண்டால் எருமை மாடும் கழுதைகளும்தான் உலகிலேயே பலசாலிகள். அதனால் நாமெல்லாம் பலவீனமானவர்கள் என்று நினைத்து வருந்த வேண்டுமா!

விக்கிபீடியா பயிற்சி வகுப்பு

தொலைபேசியில் ரவிசங்கர் அழைத்து விருகம்பாக்கத்தில் கிருபாசங்கரின் வீட்டில் நடக்கும் விக்கி பட்டறைக்கு வந்திருப்பதாகவும் விசைப்பலகை தமிழ் 99 ஒட்டிகளை எடுத்துக் கொண்டு வர முடியுமா என்றும் கேட்டார். 3 மணிக்கு பட்டறை ஆரம்பிக்கிறதாம்.' 5 மணி வரை நடக்குமாம். 3 மணிக்கே வருவது நடக்காது, முடியும் முன்னர் எப்படியும் வந்து விடுகிறேன்'

ரேமண்ட்சு காட்சிக் கடைக்கு அருகில் காமராசர் சாலைக்கு வரச் சொல்லியிருந்தார். ஆவிச்சி பள்ளி பேருந்து நிறுத்தத்தில் இறங்கிக் கொண்டேன். அருகில் இருந்த ஒரு அங்காடியில் அப்பி ஆப்பிள் சாறு வாங்கி வறண்டு போயிருந்த தொண்டையை நனைத்துக் கொண்டேன்.

போக வேண்டிய அடுக்கு மாடிக் கட்டிடத்தின் பெயரை மறந்து போயிருந்தேன். தொலைபேசி அடித்தால் எடுக்கவில்லை. நிகழ்ச்சி ஆரம்பித்து ஓசை எழும்பாமல் அமைத்துக் கொண்டிருப்பார் என்று ஊகித்தேன். காமராசர் சாலைக்குள் நுழைந்து வலது புறம் முதலில் இருந்த கட்டிடத்தில் கேட்டால் அங்கு இல்லை. தொடர்ந்து நடந்து சாலிக்ராமம் நோக்கிப் போக ஆரம்பித்தேன். தெருவின் பெயரும் மாற ஆரம்பித்தது. அந்த நேரம் ரவிசங்கர் திரும்பி அழைத்திருக்கிறார். ஓசை கேட்டிருக்கவில்லை. நான் அழைத்துப் பேசினால் கட்டிடத்தின் பெயரைச் சொல்லி விட்டார். கிருபாசங்கர் கீழே வந்து காத்திருப்பதாகச் சொன்னார். 'கறுப்பு டிசட்டையும், நீல நிற ஜீன்சும் போட்டிருப்பேன்'

தெரு முனை திரும்பிப் பார்க்கும் போது கட்டிடத்தின் வாசலிலேயே குறிப்பிட்ட நிற உடை அணிந்து நின்றிருந்தவரைப் பார்த்து விட்டேன். என்னைத்தான் அவர் ஊகித்திருக்க முடியாது. அவருக்கு வணக்கம் சொல்லி விட்டு, அறிமுகம் செய்து கொள்ள ஆரம்பித்தவரை, 'உங்களைத் தெரியாதவர்கள் வலைப்பதிவு உலகில் உண்டா' என்று சொல்லி தொடர்ந்தேன். கீழே கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் அவரையும் அழைத்தன.

மாடியில் வீட்டுக்குள் இரண்டு கணினிகளில் ரவிசங்கரும் இன்னொரு நண்பரும் கூடியிருந்த ஆர்வலர்களுக்கு விக்கிபீடியா குறித்து விளக்கிக் கொண்டிருந்தார்கள். ஐகாரஸ் பிரகாஷ் நீண்ட நாட்களுக்குப் பார்க்க முடிந்தது. நானும் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டேன். அறிமுக நிலை விளக்கங்கள் மட்டும்தான் சாத்தியமாகும் கூட்டம். இணையம், கூகிள் என்று தொடர்பில்லாத திசைகளிலும் பேச்சு நீண்டது.

பட்டறை முடிந்ததும் வந்திருந்த எல்லோரையும் தனித்தனியாக வைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டார் கிருபா. இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தி பல முறை அனுபவம் இருந்ததால் எதை எப்படிச் செய்வது என்று தெரிந்து வைத்திருக்கிறார். கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருக்கலாம் என்று மொட்டை மாடிக்குப் போனோம். கூட பிசுகட்டுகள், தண்ணீர் பாட்டில்.

ரவி, சிவகுமார், ஐகாரஸ் பிரகாஷ் என்று 'பிரபல வலைப்பதிவர்கள்' ஒரு பக்கமும், கிருபா மற்றும் இரண்டு நண்பர்கள் இன்னொரு புறமும் என்று ஆறு பேர். விக்கிபீடியா, வலைப்பதிவுகள், டிவிட்டர் என்று பேசிக் கொண்டிருந்தோம். வில்லு படம் குறித்து டிவிட்டரில் தனது பிரபலமான விமரிசனத்தை பிரகாஷ் குறிப்பிட்டு சிரிப்பலைகளைத் தவழ விட்டார். பதிவர் பட்டறை போல விக்கிபீடியா பட்டறை ஏற்பாடு செய்யலாம் என்று பேச்சு வந்ததும், மார்ச்சு 15 என்று கிருபா நாள் குறித்து சொல்லி விட்டார். 'இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு 2 மாத இடைவெளி சரியாக இருக்கும்.'

'ஆங்கில விக்கிபீடியாவில் தீவிரமாக எழுதிக் கொண்டிருப்பவர்கள் 20 முதல் 25 வயதுக்குள் இருப்பவர்கள்தாம்' என்று ரவிசங்கர் உறுதியாகச் சொன்னார். 'தமிழிலும் அந்த வயதுக் கல்லூரி மாணவர்களை இலக்கு வைத்து பட்டறை, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தலாம்' என்று பேச்சு வந்தது.

விக்கியில் எழுதுவதற்கு விக்கி மீஉரை தெரிந்திருக்க வேண்டிய தடை குறித்தும் பேசினோம். 'பார்ப்பது போல கிடைக்கும்' உரைத் தொகுப்பி உருவாக்குவதற்கு பணம் ஒதுக்கியிருக்கிறார்கள். அது வந்து விட்டால் இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைத்து விடும்'

ஊடகங்களில் வெளிச்சம் போட பாலபாரதி போன்றவர்களை அணுகலாம். கலைஞர் தொலைக்காட்சியில் பணி புரியும் நண்பர் எண்ணையும் ரவிசங்கரிடம் கொடுத்தேன். 1000 நாட்களில் 100000 கட்டுரைகள் என்று முயற்சி ஆரம்பித்த செந்தில்நாதன் தொடர்பையும் வாங்கிக் கொண்டார். எல்லோரையும் சேர்த்து முயற்சி ஆரம்பிக்கலாம்.

ஆறு மணிக்கெல்லாம் விடைபெற்றுக் கிளம்பினோம். கீழே கிரிக்கெட் விளையாட்டு முடிந்து வேறு ஓட்டங்கள் ஆரம்பித்திருந்தன. வெளியில் வந்து ரவி, பிரகாஷிடம் விடை பெற்றுக் கொண்டு ஆவிச்சி எதிரில் பேருந்து நிறுத்தத்துக்கு வந்து பேருந்து பிடித்து அலுவலகத்துக்கே வந்து விட்டேன்.

ஞாயிறு, ஜனவரி 18, 2009

அமெரிக்க பொருளாதார நெருக்கடி - ஒரு உரையாடல்

'மூன்று மாதங்களுக்கு முன்பு நினைத்ததை விட சிறப்பாகவே சீராகி வருகிறது. தனது வீட்டை விற்று விட்டு காரிலேயே வாழ்க்கை நடத்த ஆரம்பித்திருக்கும் ஒருவரதுப் படித்தேன். அவ்வளவு மோசமான வறுமை.'

'சாப்பாட்டுக்கு குறையில்லை, தங்குவதற்கு கார் இருக்கிறது அது வறுமை என்றால் இங்கு நாம் பார்ப்பது என்ன'

'அப்படி ஒப்பிடக் கூடாது, அவர்களது வாழ்க்கை முறைக்கு அது வறுமைதான்'.

'நிச்சயமாக ஒப்பிட வேண்டும். தேவையான வசதிகள், கூடுதல் வசதிகள் எல்லாவற்றையும் அனுபவிப்பது தமது பிறப்புரிமை என்று ஆடிக் கொண்டிருக்கும் அமெரிக்கர்கள் உண்மையை உணர வேண்டும். அவர்கள் வசிக்கும் அதே உலகத்தில் வசிக்கும், அவர்கள் எடுத்துக் கொள்ளும் அதே வளங்களைப் பகிர்ந்து கொள்ளும் இந்தியர்களையோ சோமாலியர்களையோ அவர்கள் பொருட்படுத்துவது கூட இல்லை. உலகமனைத்தையும் சுரண்டி தமக்கு வேண்டியதை சாதித்துக் கொள்வது என்றிருப்பவர்களுக்காக ஏன் பரிதாபப்பட வேண்டும்'

'சத்தியம் நிறுவனத்தில் அடுத்த மாதம் சம்பளம் கொடுக்கப் பணம் இல்லை என்று அரசாங்கத்திலும் ஊடகத்திலும் மும்முரமாக விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். முதலாளித்துவ சந்தைப் பொருளாதாரத்தின் செழிப்பை அனுபவித்தவர்கள் நிறுவனம் சறுக்கும் போது அதன் வலிகளையும் தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும்'

'அது நிறுவனத்தின் தலைவர் செய்த தவறு. அதற்கு அதன் ஊழியர்களை ஏன் தண்டிக்க வேண்டும். படித்து முடித்த நல்ல வேலைக்குச் சேர்ந்தான். கடன் இருக்கிறது. திடீரென்று வேலை போய் விட்டால் என்ன செய்வார்கள்?'

'அந்த வாழ்க்கை முறை வசதிகளை அனுபவிக்கும் போது மற்றவர்களைப் பற்றி நினைத்துப் பார்த்தார்களா? நமது பெற்றோர்களோ அவர்களது பெற்றோர்களோ இப்படி ஒரு வாழ்க்கை முறை வேண்டும் என்று நமக்குச் சொல்லிக் கொடுத்தார்களா? அமெரிக்க பொருளாதார கலாச்சார ஆதிக்கத்தின் கீழ் கற்றுக் கொண்டு விட்ட நாம் அந்த வாழ்க்கை முறைக்கு அரசாங்க ஆதரவு வேண்டும் என்பது அடாவடித்தனம்'

சனி, ஜனவரி 17, 2009

இவர்களைக் கற்றுக் கொள்ள வேண்டும்!

இப்படி வாழ வேண்டும் என்று 25 பேர் பட்டியலிட்டிருந்ததை கல்வெட்டு கடுமையாகத் தாக்கி பின்னூட்டம் இட்டிருந்தார். அதை எழுதிய பின்னணியையும் மனதில் வைத்திருந்த காரணிகளையும் விளக்கினாலும் அவரது கண்டனத்துக்கான காரணங்கள் மாறி விடப் போவதில்லை.

எனது வயதில் சம காலத்தில் சம பொருளாதார சூழலில் வாழ்பவர்களாக எடுத்துக் கொண்டேன். 'அந்தக் காலத்தில் அவரால் அப்படி முடிந்தது. இப்போ எல்லாம் அது வேலைக்காகாது' என்ற சாக்கை தவிர்த்துக் கொள்ள விரும்பினேன். ஊடகங்கள் மூலமாகவோ, தனிப்பட்ட முறையிலோ நமக்குக் கண்ணுக்குத் தெரியும் நிலையில் இருப்பவர்கள் என்று வைத்துக் கொண்டேன்.

ஒவ்வொரு தேர்வையும் ஆழமாக அலசி ஆராயவில்லை. மனதில் வந்த பெயரை சேர்க்க வேண்டுமா வேண்டாமா என்று மட்டும் யோசித்து விட்டு ஏன் சேர்க்க வேண்டும் என்ற காரணத்தையும் எழுதிக் கொண்டேன். எழுதிய வரிசையையோ, காரணங்களையோ மாற்றவில்லை. ஒரே ஒருவருக்கு மட்டும் காரணத்தில் சின்ன மாற்றமும், சில பேருக்கு பெயர்களை நீக்குவதையும் செய்தேன்.

நான் பின்னூட்டத்தில் பதில் சொன்னது போல, இது எனது பார்வையை மட்டும் சார்ந்திருக்கிறது. ஏன் ஐஸ்வர்யா ராய் என்று கேட்டால், அழகாக, திறமையாக தனக்குக் கிடைத்த புகழில் மயங்கிப் போய் வாழ்க்கையை நாசமாக்கிக் கொள்ளாமல் தரை மீது கால் வைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார். அபிஷேக் பச்சனுடன் இரண்டு பேரும் தத்தமது பணி வாழ்க்கையையும் குடும்ப வாழ்க்கையையும் சமன் செய்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

தமிழ் திரைப்பட நடிகர்கள் விஜய், அஜீத், சிம்பு, தனுஷ் போன்றவர்களிடம் இருக்கும் உழைப்பு என்னை கவர்ந்தது. கனிமொழியின் அமைதியும், தனது குறிக்கோளை நோக்கி அதிகம் ஓசை செய்யாமல் நகர்ந்து சாதித்துக் காட்டும் வலிமையும் ஆச்சரியப்பட வைக்கிறது. டேவிட் பெக்கம், கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் என்று தமது திறமையை ஆற்றுப்படுத்தி சாதித்துக் காட்டியிருக்கிறார்கள். இளவரசர் வில்லியமின் சோகம் ததும்பும் வாழ்க்கையை சமாளிப்பதும் முட்டாள்தனமான அரச குடும்ப அமைப்புக்குள் வாழ்க்கையை திறமையாக ஓட்டிச் செல்வதும் பிடித்திருக்கிறது.

வயது பார்க்காமல், சம கால நோக்கில் இல்லாமல் பட்டியல் போட வேண்டுமானால்
  1. காந்தியடிகள்
  2. புத்தர்
  3. இயேசு பிரான்
  4. நேரு
  5. பெஞ்சமின் பிராங்கிளின்
  6. அறிஞர் அண்ணா
  7. எம் ஜி ஆர்
  8. ஓஷோ
  9. புரூஸ் லீ
  10. ஜாக்கி சான்
  11. இளைய ராஜா
  12. ஸ்ரீதேவி
  13. ரஜினி காந்த்
  14. லதா ரஜினிகாந்த்
  15. இந்திரா காந்தி
  16. லியோ டால்ஸ்டாய்
  17. கல்கி
  18. தி ஜானகிராமன்
  19. டாடா நிறுவன இயக்குனர் ஒருவர்
  20. டாடா நிறுவன தலைவர் ஒருவர்
  21. அப்பா
  22. அம்மா
  23. பால் சாமுவேல்சன்
  24. கார்ல் மார்க்சு
  25. காமராசர்
  26. ராஜீவ் காந்தி
  27. பிரபாகரன்
  28. மார்க் ட்வெயின்
  29. ஆப்ரஹாம் லிங்கன்
  30. ஐன்ஸ்டைன்
  31. நெல்சன் மாண்டேலா
  32. அன்னை தெரேசா
இப்படி ஒரு பட்டியல் போகும். எனது வாசிப்பு, எனது அனுபவங்களில் நான் கற்றதை வைத்து மட்டும்தானே எழுத முடியும்.

புதன், ஜனவரி 14, 2009

இப்படி வாழ வேண்டும்!

நான் மதிக்கும் நபர்களின் பட்டியல் (மனதில் வந்த வரிசையில்)
  1. ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் இந்தித் திரைப்படத் துறையில் கொடிகட்டிப் பறக்கிறார்கள்
  2. ஓமர் அப்துல்லா காஷ்மீரில் தலைவராகியிருக்கிறார்
  3. சச்சின் டெண்டூல்க, டிராவிட், கும்ப்ளே, கங்கூலி போன்றவர்கள் கிரிக்கெட்டில் தமது முத்திரையைப் பதித்திருக்கிறார்கள்.
  4. ராகுல் காந்தி தனது குடும்ப ஆதரவில் காங்கிரசு கட்சியில் உயர்ந்திருக்கிறார்.
  5. பராக் ஒபாமா அமெரிக்க அதிபராகியிருக்கிறார்
  6. வாடிக்கையாளர் ஒருவர் பெரிய தோல் நிறுவனத்தை தலைமை ஏற்று நடத்துகிறார்.
  7. இன்னொருவர் தோல் தொழிலை புதிய முறையில் வரையறுக்கிறார்.
  8. இன்னொருவர் குடும்பத் தொழிலில் ஒரு தொழிற்சாலையை எடுத்து கலக்கிக் கொண்டிருக்கிறார்.
  9. விஜய், அஜீத், சூர்யா, சிம்பு, தனுஷ் போன்றவர்கள் தமிழ்த் திரையுலகில் தமக்கென இடம் பிடித்திருக்கிறார்கள்.
  10. திருமாவளவன் ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தலைவராக தலையெடுத்திருக்கிறார்
  11. மாயாவதி உத்திரபிரதேச மாநில முதல்வராகியிருக்கிறார்
  12. கனிமொழி தந்தையின் அரசியல் பணியை அடித்தளமாக்கி மாநிலங்களவை உறுப்பினராகவும், சென்னை சங்கமம் ஏற்பாடு செய்பவராகவும் இருக்கிறார்
  13. பத்ரி கிரிக் இன்போ உருவாக்கி மனதுக்குப் பிடித்த புத்தகப் பதிப்புத் தொழிலில் புதிய அணுகுமுறைகளைக் கொண்டு வந்திருக்கிறார்.
  14. டேவிட் பெக்கம் கால்பந்தாட்டத்தில் பிரபலமாகியிருக்கிறார்
  15. இளவரசர் வில்லியம் அரச குடும்பத்திலிருந்து மக்களின் அன்பைப் பெற்றிருக்கிறார்.
  16. வாடிக்கையாளர் ஒருவர் தந்தை காட்டிய வழியில் ஒரு தொழிற்சாலையை வழிநடத்திக் கொண்டிருக்கிறார்.
  17. இன்னொருவர் தந்தையையும் விஞ்சும் துடிப்போடு ஓடிக் கொண்டிருக்கிறார்.
  18. நண்பன் இன்போசிசில் உயர் பொறுப்பில் பணியாற்றிக் கொண்டிருக்கிறான்.
  19. இன்னொரு நண்பன் ஐஐடியில் விரிவுரையாளராக சேர்ந்து ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருக்கிறான்.
  20. மூன்றாவது நண்பன் அப்பா வழியில் மூன்று தொழிற்சாலைகளை உருவாக்கி வளர்த்துக் கொண்டிருக்கிறான்.
  21. தனிவழி அமைத்து தனது அறிவுக் கூர்மையால் பலருக்கு வழி காட்டிக் கொண்டிருக்கிறார்.
  22. ஆனந்த் சதுரங்க விளையாட்டில் உலக முதலிடத்தைப் பிடித்திருக்கிறார்.
  23. மிர்ச்சி சுசி, யுவன் சங்கர் ராஜா என்று தமது பெயரை நிலைநாட்டியிருக்கிறார்கள்
  24. பாலபாரதி நண்பர்கள் மத்தியில் தனது பெயரை பொறித்திருக்கிறார்.
  25. லினஸ் டோர்வால்ட்ஸ் லினக்சு இயங்குதளத்தை உருவாக்கி சாதனை புரிந்திருக்கிறார்.

பிரச்சனைகளுக்குத் தீர்வு ? - 2

தமிழ் சமூகத்தில் சாதி உணர்வுகள்
சாதி அமைப்பை ஒழிப்பதற்கு அதைத் தாக்குதவதான அணுகுமுறை தந்தை பெரியாருடையது. அதிலேயே பங்கேற்று ஒழித்துக் கட்டுவது என்பது இட ஒதுக்கீடு போன்ற வழியில் பிற்படுத்தப்பட்ட தாழ்த்ப்பட்டவர்களை முன்னேற்ற முயற்சிப்பவர்கள். இரண்டிலுமே முழு வெற்றி கிடைக்காது. உள்ளே இருந்து கொண்டே அதை தாக்க முயற்சிப்பது தாக்குபவர்களை அதிகமாக பலவீனப்படுத்தி விடும். இரண்டு அணுகுமுறைகளுமே சாதீயக் கட்டமைப்பு வகுத்த விதிகளின் படி போராடுவதுதான்.

சாதிக் கட்டமைப்பின் தாங்கிப் பிடிப்புகளை எப்படி கழன்று போகச் செய்யலாம். கலப்பு மணம், கிராமங்களை விட்டு நகர்ப் புறத்துக்கு குடியேறுதல் என்று அணுகுமுறைகள் சரியாகப் படுகின்றன. பொறுத்த வரை யாரும் சாதிப் பெயர் கேட்டு விட முடியாது. அப்போதும் கூட யாராவது ஒரு பெற்றோரின் சாதியைக் குறிப்பிட வேண்டி வந்து விடுகிறது.

பேராசை சார்ந்த ஊழல் பொருளாதாரம்.
புரையோடிக் கிடக்கும் இந்த ஊழல் வளர்க்கும் வாழ்க்கை நெறிக்கு அடிப்படை, அதிக பணம் வைத்திருப்பது பெரிய வீடு கட்டுவது புதிய வண்டி வாங்குவது, நிறைய நகை போட்டுக் கொள்வதுதான் மாண்பு என்ற சமூக மனப் போக்கு. அது மாற வேண்டும். தகுதி இல்லாமல் ஈட்டிய செல்வம் நாயின் மேலிட்ட தவிசு போல வெற்று ஓசை எழுப்புவதுதான் என்று நிறுவ வேண்டும்.

இந்திய அரசியலில் இந்துத்துவா, மற்றும் பிரிவினையைத் தூண்டும் சக்திகளின் ஆதிக்கம்
மனுவாத, சாதிக் கட்டமைப்பு ஒழிந்தாலே இந்துத்துவா அரசியிலின் அடிப்படை ஆட்டம் கண்டு விடும். அன்பும் சேவை மனப்பான்மையும் சார்ந்த சமூக தத்துவம் நிலை பெறும் போது வெறுப்பை அடிப்படையாகக் கொண்ட அரசியல் ஆட்டம் கண்டு விடும்.

அமெரிக்க ஆங்கிலேயே மனிதனின் பேராசையை அடிப்படை இயல்புகளை தூண்டும் வாழ்க்கை நெறிக்கு மாற்றாக பிற மனிதர்களுக்கு சேவை செய்வதையும், அன்பையும் அடிப்படையாகக் கொண்டு வாழ்க்கை மூலம் பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைத்து விடும்.

பிரச்சனைகளுக்குத் தீர்வு

காந்தி ஏன் ஒத்துழையாமை இயக்கத்தை தேர்ந்தெடுத்தார் என்று நேரு தனது அலசலைச் சொல்கிறார். அதைக் குறித்து எழுதுவதற்கு காந்திதான் பொருத்தமானவர் என்று குறிப்பிடுகிறார்.

நேரு சொல்லிப் போகும் பறவைப்பார்வையில் காந்தி அதை அணுகவேவில்லை. நேருவைப் பொறுத்த வரை, ஏகாதிபத்தியத்துக்கு எதிராக போராடும் மாற்று வழிகள் எல்லாம் பலன் தரும் நிலையில் இல்லாததால் ஒத்துழையாமை கவர்ச்சியாக தெரிகிறது. காந்திக்கு மாற்று வழிகள் பலன் தருவதாக இருந்தாலும் ஒத்துழையாமையும் அகிம்சையும், சத்தியாக்கிரகமும்தான் ஒரே வழி.

பிரச்சனைக்குத் தீர்வு பிரச்சனைக்குள்தான் இருக்கிறது. ஆனால் அந்த தீர்வைப் பார்க்க பிரச்சனையிலிருந்து வெளியில் வந்து பார்க்கும் வித்தை தெரிய வேண்டும். பிரச்சனைக்குத் தீர்வு என்று குறுகிய கண்ணோட்டத்தில் இல்லாமல் பிரச்சனையின் அடித்தளத்தையே அசைத்துப் போடும் நடவடிக்கைகளை எடுக்கிறார். கூடாரத்தைத் தகர்க்க வேண்டுமானால், பளபளக்கும் ஆயுதங்களுடன் வந்து கூடாரத்தை தாக்கலாம், அல்லது கூடாரத்தைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் தோள்களை நகர்த்திக் கொள்ள வேண்டும்.

ஆங்கிலேயே ஆதிக்கத்தை முறியடிக்க அவர்களுடன் மோதுவதன் மூலம் பலன் கிடைக்கலாம். அதில் பெருமளவு உயிரிழப்பும் அழிவும் ஏற்படும். ஆதிக்க சக்தியிடம் இருக்கும் ஆயுதங்களும், சக்திகளும் அதனுடன் மோதுபவர்களைத்தான் அதிக இழப்புகளுக்கு உள்ளாக்கும். கடைசியில் ஆதிக்கம் உடைந்தாலும் மோதலில் செலவான ஆற்றல்கள் நம்மைப் பொறுத்த வரை வீண்தான்.

ஆங்கிலேயரின் ஆதிக்கம் அதை நாம் ஏற்றுக் கொள்வது வரைதான் இருக்கும். படையெடுத்து வந்த நெப்போலியனின் அதிகாரத்தை ஏற்றுக் கொள்ள விரும்பாமல் மாஸ்கோ நகரத்தை விட்டுச் சென்று விட்ட மக்கள் கூட்டத்தைப் போல இந்தியர்கள் அனைவரும் ஆட்சியைத் தாங்கிப் பிடிக்கும் அதிகார, வணிக, பொருளாதார அமைப்புகளை கைவிட்டுவிட்டால் எதன் மீது அவர்கள் அதிகாரம் செலுத்த முடியும். அத்தகைய போராட்டத்தின் வெற்றி தோல்வி ஆங்கிலேயர் கையில் இருக்காது. இந்தியர்களின் கையில் மாறியிருக்கும்.

எதிரி வரையறுத்த விதிகளின்படி போராட ஆரம்பித்த உடனேயே எதிரிக்கு பாதி வெற்றி கிடைத்து விடுகிறது. போராட்டத்தின் களத்தை நாம் வரையறுத்துக் கொண்டு இறங்கினால் எதிரி என்னதான் செய்தாலும் அவனது தோல்விப் பயணம் ஆரம்பித்து விடுகிறது.

'இது எல்லா சூழலுக்கும் பொருந்தாது. எதிராளியின் நேர்மையையும் பெரியமனிதத்தன்மையையும் பொறுத்தது' என்று ஒரு வாதம் வைக்கப்படுகிறது. கொடூரக் குணமும் வஞ்சகமும் சிங்கள அரசுக்கோ இசுரேலிய ஆதிக்கவாதிகளுக்கோ எந்த விதத்திலும் குறைந்ததில்லை. காந்தியின் தலைமையில் நடந்த விடுதலைப் போராட்டத்தால் இந்தியத் தரப்பு மட்டுமில்லாமல், ஆங்கிலேயர்களும் உயர்வு பெற்றார்கள். அறவழியில் நடக்கும் போராட்டம் இரு தரப்பையும் மேம்படுத்தி விடுகிறது.

மனிதனின் உயர் குணங்களின் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்கள் காந்தி காட்டிய வழியைப் பின்பற்றலாம். காந்தி காட்டிய வழி என்றால் உப்பு சத்தியாக்கிரகமும், ஒத்துழையாமை இயக்கமும், சட்ட மறுப்பு இயக்கமும் இல்லை. அவை அவரது தத்துவத்தை வெளிப்படுத்தும் வழிமுறைகள் மட்டுமே. போராட்டத்தில் வாழும் ஒருவர் காந்தீய தத்துவத்தை முழுமையாகப் புரிந்து கொண்டால் ஆதிக்கம் தேவைக்கு மேல் ஒரு நாள் கூட நிலைக்காமல் விரட்டி அடிக்கும் வழிமுறையைக் கண்டு கொள்ளலாம்.

அது என்ன தேவைக்கு மேல்? எது வரை ஆதிக்கம் தேவை? அறவழிப் போராட்டத்தில், காந்தியின் சத்தியாக்கிரகத்தில், சத்தியாக்கிரஹி தேடல் விளக்கை தன் மீதே திருப்பிக் கொள்கிறான். தம்முள் இருக்கும் குறைகளைக் கழைந்து இறுக்கிப் பிடித்த கை போல குத்து விடும் போது ஆதிக்கம் உதிர்ந்து தீர்வு மலரும்.

திங்கள், ஜனவரி 12, 2009

சத்தியம்

'உங்களில் பாவமே செய்யாதவர் முதல் கல்லை எறியுங்கள்' என்று சொன்னாராம் இயேசுபெருமான்.

சத்தியம் நிறுவனத்தை உருவாக்கி வளர்த்த ராமலிங்க ராஜூவை வில்லனாக்குவதில் ஆளுக்கு ஆள் போட்டி போடுகிறார்கள். இன்ஃபோசிசின் நாராயண மூர்த்தியில் ஆரம்பித்து, தணிக்கை அலுவலர்கள், அரசு அதிகாரிகள், பல நிறுவனங்களின் உரிமையாளர்கள், நிறுவன மேலாளர்கள் 'ராமலிங்க ராஜூதான் தப்பு, அவரை சிறையில் அடைத்து தண்டனை கொடுத்து விட்டால் வணிக உலகம் சரியாகி விடும்' என்று எழுதிக் குவித்து, பேசித் தாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் முன்னணி குழுமம் ஒன்றின் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன். உள்தணிக்கைக் குழு என்று வைத்திருப்பார்கள். நிர்வாக இயக்குனருக்கு நேரடி கண்காணிப்பில் வேலை செய்யும் ஒரு குழுவினர் பல்வேறு அலுவலகங்களின் நடைமுறைகளை தணிக்கை செய்து அறிக்கை கொடுப்பார்கள். ஏதாவது நெறிதவறி நடப்பதை கண்டு பிடித்து சரி செய்து கொள்ளும் முறை.

நான் ஏற்றுமதி விற்பனைப் பிரிவில் உதவியாளராக இருந்தேன். எனக்கு பயிற்சிக்காகவோ, அல்லது வேறு ஏதோ காரணத்துக்காக ஒரு உள்தணிக்கை நடவடிக்கையை என்னை எதிர்கொள்ளச் சொன்னார் எனது மேலாளர். அவர் அதில் தலையிடவே இல்லை.

'நம்ம தொழிற்சாலையிலிருந்து மாதா மாதம் நிறைய அளவில் பொருட்கள் மாதிரி என்று துரித அஞ்சலில் அனுப்புகிறோம். அது பற்றி சில கேள்விகள் கேட்க வேண்டும்'

'கேளுங்களேன்'.

அப்படி நிறைய அளவில் அனுப்புவது குழுமத்தின் வெளிநாட்டு நிறுவனத்துக்குத்தான் பெருமளவில் போய்க் கொண்டிருந்தது. கிட்டத்தட்ட தினமும் சில நூறு டாலர்கள் மதிப்பு வரை மாதிரிப் பொருட்கள் போய்க் கொண்டிருக்கும். கணக்கெடுத்துப் பார்த்தால் மாதா மாதம் ஆயிரக் கணக்கான டாலர்கள் மதிப்பு இருக்கும். அதனால் இந்த தணிக்கை நடவடிக்கை.

பல நேரங்களில் வழக்கமான விமான சேவையில் அனுப்பினால் தாமதமாகி விடும் என்று பெரிய அளவிலும் மாதிரி என்று பெயரில் அனுப்பி வைப்போம்.

துரித அஞ்சலில் (தனியார் சேவை) அனுப்பும் போது மாதிரிகளுக்கு 'வணிக மதிப்பு எதுவும் இல்லை. இலவசமாகத்தான் அனுப்புகிறோம்' என்று ஒரு உறுதிப் பத்திரமும் சேர்த்து அனுப்ப வேண்டியிருக்கும். அப்படி இருந்தால்தான் சுங்கக் கட்டுப்பாடுகளைத் தாண்டி பொருள் நேரத்துக்குப் போய்ச் சேரும்.

இதை விளக்கினேன்.

'இப்படி ஆயிரக் கணக்கான மதிப்பிலான பொருட்களை இலவசமாக அனுப்பி வைத்து விட்டால், நமது நிறுவனத்துக்கு இழப்புதானே! அதற்கு என்ன செய்கிறீர்கள்' என்று அவர் ஒரு கேள்வியைப் போட்டார்.

அது தெரியாமலா இருக்கிறது. 'மாதிரிப் பொருட்கள் எவ்வளவு அனுப்பியிருக்கிறோம் என்று குறித்து வைத்துக் கொண்டு, அடுத்த முறை வழக்கமான வணிக விற்பனை ஆவணம் அனுப்பும் போது இந்த மதிப்பையும் சேர்த்து விடுவோம்' அது மறுதரப்புக்கும் தெரியும். அவர்கள் பணத்தைக் கொடுத்து விடுவார்கள்.

'வெறும் மதிப்பை மட்டும் எப்படி சேர்ப்பீர்கள். விலையை அதிகரித்துக் காட்டுவீர்களா என்ன?'

'இல்லை இல்லை. 100 பொருட்கள் வணிகஆவணமாக அனுப்பும் போது, முன்கூட்டியே மாதிரி என்ற பெயரில் அனுப்பப்பட்ட 10 பொருட்களையும் சேர்த்து 110 பொருட்கள் என்று காட்டி, மதிப்பு அதிகரிப்போம்' அப்படித்தான் செய்து கொண்டிருந்தோம்.

'ஓஓஓஓஓஓஓஓஓ! அப்படி 100 பொருட்கள் அனுப்பும் போது 110 பொருட்கள் என்று வணிக ஆவணம் தயாரித்து அனுப்பினால், சுங்கத்துறையினர் அதைப் பிரித்து சரிபார்க்கும் போது, கண்டுபிடித்து விட்டால், நிறுவனத்திற்கு பெரிய இழப்பு ஏற்பட்டு விடுமே! சுங்கத்துறையிலுருந்தும், அன்னியச் செலாவணி கட்டுப்பாட்டுத் துறையிடமிருந்தும் கேள்விகள் எழுப்பப்பட்டு தண்டங்களை சந்திப்போமே'

இப்படி ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டு விட்டு போய் விட்டார். அவரது அறிக்கையையும் அப்படியே கொடுத்திருப்பார் என்று நினைக்கிறேன். எனக்கு கதி கலங்கி விட்டது. எனது மேலாளரும் நிறுவன இயக்குனரும் எப்படியோ சிரமப்பட்டு சமாளித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

இப்படி செயல்பாட்டு வசதிக்காக செய்யும் குறுக்குவழியை சரியாக கிடுக்குப்பிடி போட்டு பிடித்து விட்டார் தணிக்கையாளர். அதன் பிறகும் நடைமுறை அப்படியே தொடர்ந்து கொண்டுதான் இருந்தது.

கதை இது இல்லை. இதற்கு மேல் நடந்ததுதான் முக்கியம்.

நிறுவனத்தில் இன்னொரு பழக்கம், வாடிக்கையாளர்களிடமிருந்து தரம் குறித்து புகார் வந்து அதை நாமும் ஏற்றுக் கொள்ள வேண்டி வந்தால் அவர்களுக்கு பணத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டும். அப்போது இருந்த அன்னியச் செலாவணி கெடுபிடி நிலையில், யாரும் இது போல தரக் குறைவுக்காக பணத்தைத் திருப்பி அனுப்பிகிறேன் என்று சொன்னால், ஆயிரம் கேள்விகளுக்குப் பதில் சொல்லி, திருட்டுத்தனமாக டாலர்களை வெளிநாட்டுக்கு அனுப்பவில்லை என்று நிறுவ வேண்டியிருக்கும்.

அந்தச் சிக்கல்களைத் தவிர்க்க, எந்த வாடிக்கையாளருக்குப் பணம் கொடுக்க வேண்டுமோ அவருக்கு எதிர்கால விற்பனைகளின் போது, பொருளின் விலையைக் குறைத்து ஆவணம் அனுப்பி விடுவோம்.

ஆனால் இது அன்னியச் செலாவணி கட்டுப்பாட்டு விதிகளின்படி பெருங்குற்றம். பொருளின் விலையைக் குறைத்துக் காட்டி பணத்தை வெளியில் விட்டுக் கொடுப்பது தண்டனைக்குரிய செயல். கிட்டத்தட்ட எல்லா வாடிக்கையாளருக்குமே இது போல விலைப் குறைப்பு நடந்து கொண்டிருக்கும்.

அடுத்த தணிக்கை நடவடிக்கை வாடிக்கையாளர்களிடமிருந்து வரும் தரக் குறைவு புகார் மற்றும் அதற்கான நிவாரணம் அளிப்பது குறித்து. என்னை அந்த பக்கமே நெருங்க விடாமல் பார்த்துக் கொண்டு என் மேலாளர் தனியாக எதிர் கொண்டார்.

ஆண்டுக்கு நூற்றுக்கு மேல் வரும் அத்தகைய புகார் மற்றும் நிவாரணத் தொகை அளிப்பை அப்படியே மறைத்து விட்டார். அதற்கு முந்தைய ஆண்டில் ஒரு வாடிக்கையாளர் தரக் குறைவுக்காக நிவாரணத் தொகையை ஏற்றுக் கொள்ளாமல், பொருட்களை திருப்பி அனுப்பி விட்டார். அதற்கு தேவையான நடைமுறைகளை பின்பற்றி அரசின் விதிகளுக்குட்பட்டு பொருட்களைத் திருப்பிப் பெற்று பணத்தை அந்த பெயரில் வாடிக்கையாளருக்கு அனுப்பியிருந்தோம்.

இந்த ஒரே ஒரு நிகழ்வை மட்டும் எடுத்துக் கொண்டு அது தொடர்பான ஆவணங்களை குவித்து தணிக்கையாளரை அங்குமிங்கும் நகர விடாமல் பார்த்துக் கொண்டார். கிட்டத்தட்ட இரண்டு மூன்று நாட்கள் அவர் பல கோணங்களில் கேள்வி கேட்டும் வேறு எந்த விபரமும் பெற முடியவில்லை. 'இந்த நிறுவனத்தில் வாடிக்கையாளர் குறைபாடுகள், அதற்கு பணம் திருப்புவது குறித்த நடைமுறைகள் சரியாக இருக்கின்றன' என்று அறிக்கை கொடுத்து விட்டார்.

நடைமுறை : சிறிதளவு அனுபவமும் கெட்டிக்காரத் தனமும் இருக்கும் மேலாளர் ஒருவர் நினைத்தால் தணிக்கை செய்பவர் எவ்வளவு பெரிய கொம்பனாக இருந்தாலும் உண்மையை வெளியில் கொண்டு வர முடியாது.

வணிக நிறுவனங்களில் விதிமுறைகளை மீறுவது என்பது தினசரி வாடிக்கையாக இருந்து வருகிறது. இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.

நடைமுறைக்கு ஒத்து வராத சட்டங்கள், விதிமுறைகள் ஒரு புறம் இருக்க, 'சட்டத்தை மீறுவது சரிதான். எல்லாவற்றையும் சட்டத்துக்குட்பட்டு செய்து கொண்டிருந்தால் பிழைக்கத் தெரியாதவன் என்ற பேர்தான் வரும். கொடுப்பதை கொடுத்து உடைப்பதை உடைத்து நம்ம வேலையை பார்த்துக்கிட்டுப் போவதுதான் புத்திசாலித்தனம்' என்ற நமது போக்குதான் அடிப்படை காரணம்.

'அவசரமாக ஒரு அச்சு வேலை வருகிறது. அதைச் செய்வதற்கு 50 ரூபாய்தான் செலவாகும் என்று உங்களுக்குத் தெரியும். அதை செய்து தருமாறு வந்திருப்பவருக்கு இருக்கும் அவசரத்தில் 500 ரூபாய் கூட செலவழிக்கத் தயாராக இருக்கிறார் என்று உங்களுக்குப் புரிந்து விடுகிறது. எவ்வளவு ரூபாய் விலை வைப்பீர்கள்?'

'வாகன ஓட்டுனர் உரிமம் வாங்க வேண்டும். போக்குவரத்துத் துறை அலுவலகத்தில் கையூட்டு கொடுத்தால்தான் வேலை நடக்கும். உங்களுக்கு ஏற்கனவே வண்டி நன்றாக ஓட்டத் தெரியும். ஏதாவது ஓட்டுனர் பயிற்சி பள்ளியில் சேர்ந்து விட்டால் அவர்கள் கொடுப்பதை கொடுத்து வேலையை முடித்து விடுவார்கள் என்று சேருவீர்களா? நீங்களே போய் விண்ணப்பித்து உரிமம் பெற முயற்சிப்பீர்களா?'

'அப்படி நீங்கள் மட்டும் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என்று இருந்தால் மற்றவர்கள் எல்லாம் உங்களை முந்திப் போய் விடுவார்கள், நீங்கள் மட்டுமின்றி உங்களைச் சார்ந்தவர்களும் துன்பப்படுவதுதான் மிஞ்சும்!'

ராமலிங்க ராஜூ தனது தகிடுதத்தங்களை செய்வதற்கு இப்படி ஒரு நியாயப்படுத்தல் இருந்திருக்கும். 'அவங்க எல்லாம் எப்படி இவ்வளவு ஆதாய வளர்ச்சி காட்டுகிறார்கள். நம்ம ஊழியர்கள், நம்ம நிறுவனத்துக்கும் அதே மாதிரி வளர்ச்சி காட்ட வேண்டாமா!' எதையும் செய்து நமது வேலையை சாதித்துக் கொள்ள வேண்டும் என்று இருக்கும் போது நிலைமை இப்படித்தான் போய் நிற்கும்.

'ஏதாவது ஒரு நிறுவனம் 20%, 30% ஆதாயம் என்று செயல்பட்டுக் கொண்டிருந்தால், அவர்கள் நிச்சயமாக பல விதிகளை மீறிக் கொண்டிருக்கிறார்கள். பல வியாபார தருமங்களை உடைத்துக் கொண்டிருக்கிறார்கள்.'

பல விதிமீறல்களை செய்வதால்தான் அவ்வளவு ஆதாயம் ஈட்ட முடிகிறது. இன்றைக்கு சத்தியம் நிறுவனத்தின் கணக்குகளை எப்படி பூதக் கண்ணாடி வைத்து ஆராய்கிறார்களோ அதே போல மற்ற நிறுவனங்களின் கணக்குகளையும் தணிக்கை செய்து பார்க்கட்டும். எவ்வளவு எலும்புக் கூடுகள் மறைத்து வைக்கப்பட்டிருக்கின்றன என்று தெரிய வரும்.

மனிதரின் பேராசையை உந்துகோலாக வைத்து செயல்பட்டு வரும் முதலாளித்துவ பொருளாதார முறையில் விதிமுறை சட்டம் என்பவை உடைப்பதற்காக ஏற்பட்டவை. சேவை மனப்பான்மையில் அல்லது ஆண்டவனுக்குப் பயந்து மட்டும்தான் விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அப்படி 100% விதிமுறைகளுக்குட்பட்டு நடக்கும் எந்த நிறுவனத்திலும், செலவுகள் போக வரி செலுத்திய பிறகு, முதலீட்டாளர்களுக்கு நியாயமான ஆதாயம் வழங்கும் அளவுக்கு மட்டுமே ஆதாயம் எஞ்சியிருக்கும். விற்பனையில் 40% ஆதாயம் என்பது எல்லாமே அரசாங்க சட்டங்கள் அல்லது வியாபார தர்மங்களை உடைத்து மட்டுமே பெற முடிவது.

இப்போது வரிந்து வரிந்து எழுதிக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் வெளிச்சத்தை தம் மீதே திருப்பிப் பார்த்துக் கொள்ளட்டும். அரசாங்கமும் சத்தியத்துக்கு செய்து கொண்டிருக்கும் கிரியைகளை எல்லா பெரிய நிறுவனங்களுக்கும் செய்து பார்க்கட்டும். அதன் பிறகு பேசலாம்.

செவ்வாய், ஜனவரி 06, 2009

பாலபாரதி

2007ம் ஆண்டு சனவரி மாதம். வலைப்பதிவுகள் எழுத ஆரம்பித்து ஆறு மாதங்களுக்கு மேல் ஆகியிருந்தது. அருள் குமாரை சில முறை சந்தித்து எழுத்து, வாழ்க்கை குறித்து பேசியிருந்தேன்.

ஏதோ ஒரு விடுமுறை நாள், ஞாயிற்றுக் கிழமையோ, பொங்கல் நாளோ, அல்லது குடியரசு தினமோ நினைவில்லை. வீட்டில் இணைய இணைப்பு இல்லை, வீட்டுக்கு எதிரில் இருந்த இணையக் கூடத்தில் போய் பின்னூட்டங்களையும் புதிய பதிவுகளையும் மேய்ந்து கொண்டிருந்தேன். அப்போது அதுதான் வாழ்க்கையின் முக்கிய பிணைப்பாக இருந்தது.

செல்பேசியில் அருள்குமார் அழைத்தார். 'நடேசன் பூங்காவில் சில வலைப்பதிவர்கள் கூடியிருக்கிறோம், நீங்களும் வாங்களேன்' கொஞ்ச நேரத்தில் போக முடிவு செய்து விட்டேன். வீட்டுக்கு வந்து தங்கையிடம் சொல்லி விட்டு இரு சக்கர வண்டியில் கிளம்பி விட்டேன். நடேசன் பூங்காவின் திருப்பதி தேவஸ்தானம் பக்கத்தில் வெளியே வண்டியை விட்டு விட்டு உள்ளே நுழைந்தேன். செல்பேசியில் வழி பெற்றுக் கொண்டே நடந்து கொண்டிருந்தேன்.

பூங்காவுக்கு நடுவே குடை போல அமைத்திருந்த இடத்தில் உட்கார்ந்திருந்தார்கள், அருள்குமார், அவரது நண்பர் திரைப்படத் துறையின் வீரமணி, பிரியன், ஜெய்சங்கர், செல்லமுத்து குப்புசாமி, கவிஞர் மதுமிதா. உரையாடல் துண்டு துண்டாக தயங்கித் தயங்கி நகர்ந்து கொண்டிருந்தது. பாலபாரதியும் வரப் போகிறார் என்று சொன்னார்கள்.

'அதோ வந்து விட்டார்'

தோளில் ஒரு சோல்னா பை. கொஞ்சம் பரந்த உடல், முக அமைப்பு. நடுத்தர உயரம். உள்ளே வந்ததுமே ஏதோ புதிய மின்சாரம் பாய்ந்தது போல கலகலப்பு ஏற்பட்டு விட்டது. அவருக்கே உரிய சிம்மக் குரலில் நலம் விசாரித்து அறிமுகப்படுத்திக் கொண்டு பேச ஆரம்பித்தார். அப்படி நான்கு பேர் நடுவில் இயல்பாக பேச முடிகிறவர்களைப் பார்க்கும் போது ஏற்படும் மெலிதான பொறாமையுடன் கவனித்துக் கொண்டிருந்தேன்.

மதுமிதா கொண்டு வந்திருந்த கொய்யாப்பழம் வெட்டிச் சாப்பிட்டோம்.

'முழுநேரமும் கவிஞர்தானா' என்ற கேள்விக்கு 'புத்தகக்கடையில் வேலை செய்கிறேன்' என்று மெலிதான சுய எள்ளலுடன் பதில் சொன்னார் பாலா.

'வலைப்பதிவுகளில் எழுதுபவர்கள் வளர வேண்டும். அச்சு ஊடகங்களில் எழுத்து வெளியாகும் அளவுக்கு முதிர்ச்சி வேண்டும்' என்ற பொருள் படும்படியாக ஒரு கருத்தை வைத்தார் பாலபாரதி. 'கருத்துக்களை சரிபார்ப்பதில், எழுத்துப் பிழைகள் மலிந்து கிடக்கின்றன. வள வளவென்று பக்கம் பக்கமாக எழுதுகிறார்கள்' என்று கூடுதல் கருத்துக்களை சொன்னார்.

'வலைப்பதிவுகளில் எழுதுவதின் பரிணாம வளர்ச்சி பாரம்பரிய அச்சு ஊடகங்களில் எழுதுவது என்று ஒத்துக் கொள்ள முடியாது. இதன் வடிவம், வெளிப்பாடு தனித்துவம் கொண்டது' என்று எதிர்க் கருத்து சொல்லும் நிறைவுடன் சொன்னேன். இப்படியே பேசிக் கொண்டிருந்து விட்டுப் புறப்பட முடிவு செய்தோம்.

அப்படியே மகாபலிபுரம் போய் விட்டு வரலாம் என்று ஒரு திட்டம் பற்றிக் கொண்டது. தயங்கியவர்களை எல்லாம் உற்சாகப்படுத்தி ஏழெட்டு பேர் தேறினோம். அருள் போய் நல்ல ஒரு வண்டி எடுத்து வரப் போனார். பூங்காவுக்கு எதிரிலான தேநீர்க்கடையில் தேநீர் குடிக்கலாம் என்று போனோம். இளநீர் குடிக்க ஒரு குழு சேர்ந்தது.

'பாரதியார் இறந்தது மனமுடைந்த தற்கொலையாக கூட இருக்கலாம்' என்று ஏதோ பேச்சில் வந்தது. மிகவும் உற்சாகமாக ஆமோதித்தார் பாலபாரதி.

நான்கு வண்டிகளில் கிளம்பி விட்டோம். நான் ஒரு வண்டி ஓட்டினேன், கூடவே இன்னொரு நண்பர். பாலபாரதி வீரமணி ஓட்டிய வண்டியின் பின்னால் உட்கார்ந்ததாக நினைவு. எல்லோரும் சேர்ந்து ஓட்டிக் கொண்டு போவது நடக்கவில்லை. சிறிது தூரத்தில் தனித்தனியாக அல்லது இரண்டிரண்டு வண்டிகளாக போய்க் கொண்டிருந்தோம்.

பாலபாரதியுடன் பேச வேண்டும் என்று ஒரு ஈர்ப்பு. கிழக்குக் கடற்கரைச் சாலையில் போய்க் கொண்டிருக்கும் போது ஒரு கட்டத்தில் அவர் உட்கார்ந்திருந்த வண்டியுடன் இணையாக ஓட்டியபடியே பேச ஆரம்பித்தேன். அவரும் ஆர்வமாக பதில் சொல்லிக் கொண்டு வந்தார். நான் அடைய வேண்டிய பல குணங்களை அவர் பிரதிபலிப்பதாக எனக்குத் தோன்றியிருக்கலாம். எப்படியாவது இவரைப் புரிந்து கொண்டு விட வேண்டும் என்று ஆசை.

மகாபலிபுரத்துக்குப் போய் சாப்பிட்டு சுற்றிப் பார்த்து விட்டு, 'சென்னைப் பட்டிணம்' என்று ஒரு கூட்டு வலைப்பதிவு ஆரம்பிக்கலாம் என்று முடிவு செய்து கொண்டோம். அன்று தொலைபேசி மூலம் கலந்து கொண்ட பொன்சும் அதில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். திரும்பும் போது பாலாவும் நானும் ஒரே வண்டியில்.

நான் மெலிதான ஒரு சட்டை போட்டுக் கொண்டு போயிருந்தேன். தை மாத மாலையில் இரு சக்கர வண்டியில் ஓட்டுவதற்கு அது போதவே போதாது. மழையும் ஆரம்பித்து நடுங்கிக் கொண்டே ஓட்டிக் கொண்டிருந்தேன். திருவான்மியூர் வந்ததும், பாலாவின் இன்னொரு முத்திரைக் குணமான தேநீர்க்கடையில் தேநீர் குடித்து தம் அடிக்கும் வேலையையும் செய்தார்.

மகாபலிபுரம் பயணம் குறித்து தொடர் பதிவுகள் போடுவது என்று 'உலக தமிழ் வலைப்பதிவுகளிலேயே முதல் முறையாக, சுற்றுலா போய் வந்த இடுகைகள்' என்று எல்லோரும் எழுதி  ஒரே நாளில்  வெளியிட்டோம்.

சென்னைப்பட்டணம் கூட்டு வலைப்பதிவு மூலமாக வலைப்பதிவர்களை பெரிய சக்தியாக உருவாக்க வேண்டும் என்று பாலபாரதி தூண்டிக் கொண்டே இருந்தார். நண்பர்கள் சில முறை கூடிப் பேசினோம். அருள் குமாரின் அலுவலகத்தில் நான்கைந்து முறை சந்தித்துக் கொண்டோம். வலைப்பதிவையும் ஆரம்பித்து மாறி மாறி இடுகைகள் போடுவதையும் செய்யலானோம்.

பாலபாரதி மும்பையில் குமுதம் நிருபராக வேலை பார்த்தது, செல்பேசி துணைப் பொருட்கள் விற்கும் தொழில் செய்தது, அந்தத் தொழிலில் மழை வெள்ளம் காரணமாக முழுகிப் போனது, மும்பையின் பெரும் பிரமுகர்களை பேட்டி கண்டது என்று பல கட்டங்களில் பேசித் தெரிந்து கொண்டிருந்தேன். இரு சக்கர வண்டி ஓட்ட மாட்டார்.

நடேசன் பூங்காவில் நண்பர் திரு வருவதை முன்னிட்டு ஒரு வலைப்பதிவர் சந்திப்பு என்று லக்கிலுக் அறிவித்திருந்தார்.

பாலபாரதி அதற்குள் சென்னை பதிவர்கள் மத்தியில் தனிப்பெரும் சக்தியாக உருவெடுத்திருந்தார். உட்லெண்ட்சு விடுதியில் நடக்கும் போண்டா சந்திப்புகளை விட சிறப்பான சந்திப்புகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பலர் போட்டி போட்டார்கள். வந்தவர்களின் பெயர்களை எழுதி வாங்கிக் கொள்வது, வட்டமாக உட்கார்ந்து எல்லோரையும் அறிமுகம் செய்து கொள்ள வைப்பது என்று நல்ல வழிகளை வகுத்தார்.

தொடர்ச்சியாக பதிவர் சந்திப்புகள் நாலைந்து நடந்தன. இடையில் சென்னைப்பட்டணம் பதிவர்கள் சார்பாக என்னென்ன செய்யலாம் என்று தீவிரமாக விவாதிக்க ஆரம்பித்தோம். பானிபூரி, சாட் விற்கும் கடைத்தொடர்களை நடத்தும் தொழில் செய்வது குறித்து கூட ஒரு முறை பேசினோம். 2008 மேயில் அதில் இறங்கி விடலாம் என்று பாலபாரதி திட்டம் போட்டார்.

'சும்மா பேசிப் பேசி கலைந்து விடாமல் தமிழ் வலைப்பதிவுகளை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு போக வேண்டும். வலைப்பதிவுகளைக் குறித்த விழிப்புணர்வு பரவலாகப் போய்ச் சேர வேண்டும். ஏற்கனவே வலைப்பதிவில் எழுதிக் கொண்டிருப்பவர்கள், இன்னும் மேல் நுட்பங்களைக் கையாள ஆரம்பிக்க வேண்டும்' என்பது பாலபாரதியின் அடிப்படை நோக்கங்களில் ஒன்றாக இருந்தது.

அது குறித்தான பேச்சுக்களின் விளைவாக சென்னை பதிவர் பட்டறை நடத்தலாம் என்று முடிவு செய்தோம். பலர் பேசி, பலவிதமாகத் திட்டமிட்டு, இடம் பார்த்து, குறுந்தகடுக்கு திட்டம் வகுத்து, சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்வது, விளம்பர உதவி பெறுவது, நிதி திரட்டுவது என்று பல பணிகள் நடக்க ஆரம்பித்தன. தூய்மையான நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டு, அந்த நோக்கத்திலிருந்து திசை திரும்பி விடாமல் செயல்படுத்தும் நேர்மையின் வெற்றியாக அந்த பதிவர் பட்டறை மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது.

கிட்டத்தட்ட அது ஒரு உச்சம் போல ஆகி விட்டது. அதற்குப் பிறகு ஆண்டுதோறும் பட்டறை நடத்துவது, கல்லூரிகளிலெல்லாம் பட்டறை நடத்துவது, ஊருக்கு ஊர் பட்டறை நடத்துவது, திரட்டி ஒன்று உருவாக்குவது என்று பல முறை பேசி நடைமுறைக்கு பெரிதாக எதுவும் வந்து விடவில்லை.

ஒத்திசைந்த அதிர்வுகளால் கூடிய நண்பர்களின் ஆற்றலால், உழைப்பால் உருவான அமைப்புள், அந்த அதிர்வுகள் மாறி விட ஒத்திசைவு குலைந்து குழுவும் பிரிந்து போனது. ஒருவர் வெளிநாடு, ஒருவர் திருமண வேலைகள், ஒருவர் தொழில் சார்ந்த பணிகள், ஒருவர் வேலை மாற்றம் என்று இறங்கி விட அதன் பிறகு பாலபாரதியை சந்திப்பது கூட குறைந்து போனது.

கடவுளை நம்புபவர்கள் எல்லாம் அவன் செயல் என்பார்கள். பாலபாரதியை அந்தக் கட்டத்தில் சந்தித்தது அப்படிப்பட்ட செயல் என்றுதான் சொல்ல வேண்டும். கிட்டத்தட்ட ஈரக் களிமண் போல இருந்தேன். ஆட்படும் சக்திகளைப் பொறுத்து வாழ்வின் போக்கு உருவெடுத்திருக்கும். அடிப்படை நேர்மை, ஆகக் கூடிய பரவலான பொதுநலன் இரண்டையும் ஊக்குவிக்கும் தொடர்புகள் அவரைச் சூழ்ந்திருந்த நட்புக் கூட்டம் மூலம் எனக்கும் கிடைத்தன.

குடும்பத்தில் கடைக்குட்டிப் பையனாக பிறந்து வளர்ந்து கொள்கை மாறுபாடுகளால் பலரை பகைத்துக் கொண்டிருக்கிறார். வீட்டுச் சூழல், பாசம், அன்பு போன்றவற்றை தொலைத்து விட்டதாக பலமுறை வருத்தப்பட்டிருக்கிறார்.

பெரியார் மீது ஆழமான பற்று உடையவர். விவாதம் செய்வதற்காக விவாதிப்பது என்பது அவரிடம் இல்லை. தான் சொல்வதற்கு எதிர்ப்பு இல்லாத சூழலில் சொல்ல வேண்டியதைச் சொல்லி அதில் சிறு மாற்றுக் கருத்துக்களை கேட்டுக் கொள்வார். யாராவது வரிந்து கட்டிக் கொண்டு விவாதிக்க வருகிறார்கள் என்றால் அதை திறமையாக தவிர்த்து விடுவார். நான் திமுக அரசையோ, கலைஞரையோ குறை சொல்ல ஆரம்பித்தால் அதை விவாதிக்காமல் விட்டு விடுவார். பெரியார் கொள்கைகளை குறை சொல்பவர்களை விட்டு ஒதுங்கியே விடுவார்.

தனக்கு சரி என்று படுவதற்காக போராடும் இயல்பும் அவருக்கு இருந்தது. 'நிறைய பெண் நண்பர்கள் உண்டு. அவர்களிடம் தொலைபேசி உரையாடிக் கொண்டிருப்பேன்.' நண்பர்கள் கூட்டம்தான் அவருக்கு மூச்சுக் காற்று.

எழுதுவது என்பது கொஞ்சம் சிரமமான வேலைதான் அவருக்கு. பேச்சின் மூலம் தனது கருத்துக்களை எடுத்துச் சொல்வதில் இணையில்லாதவர். அவரது குரலின் வசீகரம் கேட்பவரைக் கட்டிப் போட்டு விடும். தான் நினைப்பதை தெளிவாக உறுதியான சொற்களில் எடுத்து சொல்வார். ஏற்கனவே சொன்னது போல, அந்தக் குரலில் இருக்கும் உறுதி அதை நிலைநிறுத்தப் போராடுவதில் இருக்காது.

அவரது கருத்தை அவர் சொல்லும் போது 'இதுதான் இறுதி கருத்து, இதிலிருந்து இம்மியளவும் நகர மாட்டார்' என்று நமக்குத் தோன்றும். ஆனால் அதற்கு மாற்றாக யாராவது ஒரு கருத்தை சொல்லி விட்டால் அதிக சச்சரவு இல்லாமல் உடனேயே ஏற்றுக் கொண்டு விடுவார் அல்லது ஏற்றுக் கொள்ளா விட்டால் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து விடுவார் (தம்மடிக்கப் போய் விடுவார்).

தொடர்ந்து ஒரு இடத்தில் இருப்பது என்பது அவருக்கு ஆகாத ஒன்று. ஒரு மணி நேரக் கூட்டத்தில் உட்கார்ந்த இடத்தை விட்டு நகராமல் இருந்தார் என்பது பார்க்க அரிதானது. கூட்டம் நடந்தால், நான்கு முறை வெளியில் போய் வரும் பணிகளில் இறங்கியிருப்பார். தேநீர் ஏற்பாடு செய்வது, தேநீர் வினியோகிப்பது, நண்பர் ஒருவரை அழைத்து வருவது, ஒன்றும் இல்லா விட்டால் வெளியில் போய் தம் அடித்து விட்டு வருவது என்று 10 நிமிடங்களுக்குள் நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.

அவரை தொழில் துறையில் இழுத்து விட வேண்டும் என்று பேசிப் பார்த்திருக்கிறேன். தனியாக தொழில் செய்யவும் வழி சொல்லிப் பார்த்திருக்கிறேன். மறுத்துச் சொல்லாமல் கேட்டுக் கொண்டிருந்து விட்டு அப்புறம் மழுப்பியிருப்பார். மனதளவில் அவர் ஒரு சமூக ஆர்வலர். பரவலான மக்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ள முடியும் ஊடகத் துறைதான் அவருக்குப் பொருந்தி வரும். ஊடகத் துறையிலும் வணிகப் பிரிவிலோ, அலுவலகத்தில் உட்கார்ந்து கொண்டு இயக்கும் பணிகளோ அவருக்கு ஒத்து வராது. நான்கு பேரைப் பார்க்க வேண்டும், ஓடிக் கொண்டே இருக்க வேண்டும், உலகத்தில் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொண்டே இருக்க வேண்டும், நலிந்தவர்கள் நான்கு பேருக்கு தனது பணி மாறுதலை ஏற்படுத்துகிறது என்று தெரிய வேண்டும்.

திருமணம் செய்து கொள்வதிலும் புரட்சி செய்து மனமொத்த வாழ்க்கைத் துணையைக் கைப்பிடித்திருக்கிறார். பகுத்தறிவுத் திருமணம், அதைத் தொடர்ந்து பதிவு, சூழல் கனிந்த பிறகு இல்வாழ்க்கை ஆரம்பம் என்று பொதுவுடமை சமூகத்தில் இயல்பாக நடக்கும் முறையை பின்பற்றியிருக்கிறார்கள்.

பாலபாரதியிடமிருந்து கற்றுக் கொண்டதையும் பெற்றுக் கொண்டதையும் வைத்து வாழ்வில் பல மாறுதல்கள் ஏற்பட்டிருக்கின்றன. அவர் போன்ற நண்பர்களின் பார்வையில் நாம் செய்வது ஒப்புதலைப் பெறுமா என்று கேட்டுக் கொண்டு முடிவெடுத்தாலே சரியான வழியைப் பின்பற்றி விட முடியும்.

சனி, ஜனவரி 03, 2009

கட்சிகளும் விடியலும்

திருமங்கலம் இடைத்தேர்தல் சூடு பிடித்துள்ளது. ஒரு வாக்காளருக்கு 1000 ரூபாய் என்று கொடுத்து விலைக்கு வாங்கும் அளவுக்கு பணநாயகம் வளர்ந்து விட்டிருக்கிறது. திமுகவும், அதிமுகவும் போட்டி போட்டுக் கொண்டு மக்களாட்சியின் குரல்வளையை நெரிக்கும் கைங்கரியத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

திருதராஷ்டிரன் இறுதிக் காலத்தில் சரியான வழிப்படி நடக்க வேண்டும் என்று நினைத்தாலும், அவரது இளமைக் காலத்தின் குணங்களின் குடியிருப்பாக துரியோதனாதிகள் பாரதப் போர் வரை கொண்டு வந்து விட்டார்கள். கலைஞருக்கு இந்த ஆட்சிக் காலத்தின் போது அவரால் தடுக்க முடியும் செயல்கள் குறைவாகவே இருக்கின்றன. அழகிரி மனது வைத்து விட்டால், அவரை தடுத்து நிறுத்த தமிழகத்தின் எந்த சக்தியாலும் முடியாது என்ற நிலை ஏற்பட்டு விட்டிருக்கிறது.

கட்சியிலோ ஆட்சியிலோ எந்த முக்கியப் பொறுப்பும் வகிக்காமலேயே, அரசு நிர்வாகத்தையும், கட்சி அமைப்புகளையும் ஆட்டிப் படைக்கும் குண்டராக திகழ்கிறார் அவர். முதலமைச்சருக்கு அவரிடம் இருக்கும் பயத்தையும் பாசத்தையும் உணர்ந்துள்ள அதிகாரிகளும் கட்சி உறுப்பினர்களும் அவரது மாஃபியாதனமான நடவடிக்கைகளுக்கு பணிந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்.

இதற்கு மறுபக்கத்தில் ஆணவத்தின் மொத்த உருவமாக செயலலிதா. மக்களாட்சியின் நெஞ்சில் மிதித்து கொன்று புதைத்த கல்லறையின் மீதுதான் இவர் கட்சி நடத்திக் கொண்டிருக்கிறார். திமுகவில் நடக்கும் உட்கட்சி தேர்தல்கள், கட்சி அமைப்புகளை மதிக்கும் பண்பு, தமிழர் நலனுக்கு சிந்திப்பது, நிர்வாகத்தில் செயல் திறன் என்ற நல்ல போக்குகளையெல்லாம் கழித்து விட்டுப் பார்த்தால் கிடைப்பது அதிமுக. கலைஞர் குடும்ப அரசியல் நடத்துகிறார் என்றால் இவர் நடத்துவது அரசியலே இல்லை.

திருமங்கலத்தில் இரண்டு கட்சிக் குண்டர்களும் அடித்துக் கொண்டது போல தமிழகமெங்கும் அடித்துக் கொண்டு சாக வேண்டும். அப்படி அடிதடியில் இறங்கக் கூடியவர்களை களை எடுத்து விடுவது சமூகத்துக்கு மிகவும் நல்லது.

இவர்களுக்கும் மாற்றாக விசயகாந்து என்று நினைக்கும் போது வயிற்றைக் கலக்குகிறது. எல்லோரையும் கழித்துக் கட்டி விட்டு மூலையில் உட்காரவா முடியும் என்று விசனம் ஏற்படத்தான் செய்தாலும், விசயகாந்தை முதலமைச்சராக நினைத்துப் பார்க்க கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஆனால், திருமங்கலம் இடைத்தேர்தலில் தேமுதிமுகவுக்கு வெற்றி கிடைத்தால் மற்ற இரண்டு கட்சிகளுக்கும் ஒரு எச்சரிக்கை மணி அடித்ததாக இருக்கும். அது நடக்க வேண்டும் என்று ஆசை. நடந்தும் விடுமோ! விருத்தாச்சலத்தில் பாமகவின் தகிடுதத்தங்களுக்கு இடையேயே வெற்றி பெற்றுக் காட்டிய விசயகாந்து மீண்டும் ஒரு தொகுதி அற்புதத்தை நடத்தினாலும் நடத்தி விடுவார்.

2011ல் தேர்தலுக்குப் பிறகு தேமுதிகவும், பொதுவுடமை கட்சிகளும், பாமகவும், சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்கும் நிலைமை ஏற்பட்டால் தமிழ் சமூகத்துக்கு திருந்துவதற்கு நல்லதொரு வாய்ப்பு கிடைக்கலாம்.

திமுக 30, அதிமுக 20, தேமுதிக 70, பொதுவுடமை கட்சிகள் 30, பாமக 30 இருந்தால் அந்த சமன்பாடு சாத்தியமாகலாம். ஈழத்தமிழருக்கு ஆதரவு, ஊழலை ஒழிக்க உறுதி, மது விலக்கு கொண்டு வர தீவிரம், தொழிலாளர் நலன், சமத்துவ கொள்கைகளுக்கு ஆதரவு என்று கிட்டத்தட்ட ஒரு கனவு ஆட்சி தமிழகத்துக்குக் கிடைத்து விடும்.

தமிழகமெங்கும் திமுக அதிமுகவைச் சேர்ந்து குண்டர்களின் போட்டி வியாபாரக் களமாகி விட்டிருக்கிறது. அடாவடி நடவடிக்கைகளால் கோடிக்கணக்கான சொத்துக்களைக் குவித்து வைத்துக் கொண்டு அடாவடி அரசியல் செய்த இந்த இரு கூட்டத்தினரின் 20 ஆண்டு கால நச்சு அரசியலின் வீரியத்தை இறக்குவதற்கு உறுதியான, மக்கள் ஆதரவு பெற்ற அரசு ஒன்று வேண்டும்.

இந்த ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தலிலும் பொதுவுடமைக் கட்சியினர், மாயாவதியின் பிஎஃச்பி, சந்திரபாபு நாயுடுவின் தெலுகுதேசம், தமிழ்நாட்டிலிருந்து தேமுதிக, பாமக, பீகாரில் ராம்விலாச் பாசுவான், ஒரிசாவில் நவீன் பட்னாயக், ஜம்மு காசுமீரில் தேசிய மாநாட்டுக் கட்சி என்று அவியலாக ஒரு மூன்றாவது அணி ஆட்சி அமைப்பது பாரதீய ஜனதாவின் இந்திய தேசிய நலனுக்கு விரோத அரசியலுக்கும், காங்கிரசு கட்சியின் மனுவாத அரசியலுக்கும் மாற்றாக அமையும். எப்படியாவது இரண்டு கட்சி முறை வந்து விட வேண்டும் என்று சோ போன்றவர்கள் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போதுதான் அவரது கட்சிக்கு ஒரு காலாவது இருக்கும் என்று ஒரு நப்பாசை.

சில கோடி ரூபாய்கள், கணக்கில் காட்ட முடியாமல் வைத்திருந்தது கட்சி அலுவலகத்திலிருந்து களவு போய் விட்டதாம். அதன் மீது வருமானவரித்துறை ஏன் விசாரணை ஆரம்பிக்கவில்லை? போன நம்பிக்கை வாக்கெடுப்பின் போது கத்தை கத்தையாக நோட்டுக்களை நாடாளுமன்றத்தில் விசிறியடித்த உறுப்பினர்களின் மீது என்ன விசாரணை நடத்தப்பட்டது?

பாஜகவின் பிரிவினை அரசியலை மக்கள் நிராகரித்து விடுவார்கள் அல்லது அப்படி நிராகரிப்பதுதான் நமக்கு நல்லது என்று தோன்றுகிறது. இந்தியாவில் இந்த கட்சி வேரழிந்து போக வேண்டும். காங்கிரசு கட்சி சூழ்நிலைக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளும் பச்சோந்தி. அரசியல் சூழல் மாறினால் அதிகம் ஊறு செய்யாத ஒரு பிராணியாக அதுவும் இருந்து விட்டுப் போகும் நிலை ஏற்படலாம்