சனி, ஜூலை 07, 2012

காலடித் தடங்கள், நிழல்கள், மற்றும் நிதர்சனம்

ஜெயந்த் வி நார்லிகர் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் 


கடந்த நான்கைந்து ஆண்டுகளாக அடிப்படைத் துகள்கள் பற்றிய இயற்பியல் ஹிக்ஸ் போஸான் என்ற துகளையே வலம் வந்து கொண்டிருக்கிறது. ஊடகங்கள் இந்த துகளை "கடவுள் துகள்" என்று செல்லமாக அழைக்கின்றன. உயர் ஆற்றல் துகள்களைப் பயன்படுத்தி பரிசோதனைகள் நடத்துவதற்கு உலகிலேயே தலை சிறந்த சோதனைக் கூடம் ஜெனீவாவில் அமைந்துள்ள செர்ன் (அணுக்கரு ஆராய்ச்சிக்கான ஐரோப்பிய நிறுவனம்)ஆகும். ஹிக்ஸ் போஸானை கண்டுபிடிக்கும் நோக்கத்தில் உயர் ஆற்றல் துகள்களின் மோதல்களை விடாமல் நடத்திக் கொண்டிருந்தது செர்ன்.

அதிக ஆற்றலுடன் அடிப்படைத் துகள்களை மோத விடும் போது அவை உடைந்து புதிய துகள்களாக உருமாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலமாக புதிய துகள்களையும் புதிய இடைவினைகளையும் கண்டுபிடிக்க முயற்சிக்கலாம். இரண்டு விஞ்ஞானிகள் குழுக்கள் இந்த வழியில் ஹிக்ஸ் போஸானின் இருப்பை கண்டுபிடிக்க முயற்சித்து வந்தனர். இப்போது இந்த மோதல்களின் பின் விளைவுகளில் ஹிக்ஸ் போஸான் பங்கெடுத்துக் கொண்டதற்கான ஆதாரம் அவர்களுக்கு கிடைத்திருப்பதாக தெரிகிறது. அந்த பரிசோதனையைப் பற்றிய விபரங்களை தெரிந்து கொள்வதற்கு முன்பு, ஹிக்ஸ் போஸானின் இருப்பை நிரூபிக்க விஞ்ஞானிகள் ஏன் இவ்வளவு தவித்துக் கொண்டிருந்தார்கள் என்பதையும், அதற்கு "கடவுள் துகள்" என்ற படோடபமான பெயர் ஏன் வழங்கப்பட்டது என்பதையும் பார்க்கலாம்.

இயற்கையின் மர்மங்களை புரிந்து கொள்ள முயற்சி செய்யும் இயற்பியலாளர்கள், இயற்கையைப் பற்றிய விதிகளின் அடிப்படையில் வேலை செய்கிறார்கள் என்று வரலாறு காட்டுகிறது. ஆரம்பத்தில் பல தரப்பட்ட விதிகள் பல இருந்திருக்கலாம். ஆனால், விஞ்ஞானிகள் போய்ச் சேர விரும்பும் ஆதர்ச சூழலில் பரந்த பயன்பாடு உடைய குறைந்த எண்ணிக்கையிலான விதிகளே இருக்கும். எடுத்துக்காட்டாக, மின்ஈர்ப்பு பற்றிய கூலும் விதியை எடுத்துக் கொள்வோம், அது மின்னூட்டம் பெற்ற துகள்கள் ஒன்றை ஒன்று ஈர்ப்பது அல்லது விலக்குவதைப் பற்றி பேசுகிறது. காந்த ஈர்ப்பு மற்றும் விலக்கத்தை பற்றி இதே போன்ற ஒரு விதி உள்ளது. வெளியிலிருந்து பார்க்கும் போது வெவ்வேறாக தெரியும் இந்த விதிகளை ஒரே குடைக்குள் கொண்டு வந்தது ஜேம்ஸ் கிளார்க் மேக்ஸ்வெல்லின் மின்காந்தப் புலம் என்ற கோட்பாடு. அது நடந்தது 1865ல். ஒரு நூற்றாண்டுக்கு பிறகு மின்காந்த விசையும் இயற்கையின் இன்னொரு விசையான "மெல்லிய விசை"யும் ஒன்றுபடுதல் நடந்தது. மின்-மெல்லிய விசை என்று அழைக்கப்படுவது இயற்பியலாளர்கள் அப்துஸ் சலாம் மற்றும் ஸ்டீவன் வைன்பெர்க் ஆகியோரின் பரிசோதனைகளின் முடிவு ஆகும்.

முன்னேற்றத்துக்கான அடுத்த கட்டம் வலுவான விசையை இதே ஒன்றுபடுத்தல் கட்டமைப்புக்குள் கொண்டு வர முடியுமா என்பதை நோக்கி பயணிக்கிறது. ஒன்றுபடுத்தலுக்கான இந்த பயணத்தின் இறுதிக் கட்டத்தில்தான் முதலில் முறையாக கண்டுபிடிக்கப்பட்ட ஈர்ப்பு விசையை மற்ற விசைகளுடன் ஒன்று சேர்க்கும் முயற்சி சாத்தியமாகும் என்பதுதான் வேடிக்கை. ஆப்பிள் விழுவதிலிருந்து தூண்டப்பட்டதாக சொல்லப்படும் நியூட்டனின் கண்டுபிடிப்புதான் ஈர்ப்பு விசை.

ஒன்றுபடுத்தல் பாதையில் பயணிக்கும் விஞ்ஞானிக்கு வழி காட்ட ஒரு குத்து மதிப்பான வழிகாட்டல் இருக்கிறது. பொருட்களை மேலும் மேலும் சிறிய அளவில் பரிசோதனை செய்து கொண்டே அணு மற்றும் மூலக்கூறு வடிவம் வரை வேதியியலாளர் போவது போல, இயற்பியலாளர் இன்னும் சிறிய அளவில் அணுவுக்குள்ளும் உட்கருக்குள்ளும் இருக்கும் துகள்களை நோக்கி தனது ஆய்வை நகர்த்துகிறார். மேலும் மேலும் சிறிய அளவில் ஆய்வுகள் நடத்த பயன்படுத்தப்படும் துகள்களுக்கு மேலும் மேலும் அதிக அளவில் ஆற்றல் தேவைப்படுகிறது. மின்சாரத்தை காந்தவியலுடன் ஒருங்கிணைப்பதற்கு உயர் ஆற்றல் துகள்கள் தேவைப்படவில்லை. ஆனால் அடுத்த கட்டத்துக்கு அவை தேவைப்பட்டன. மின்-மெல்லிய விசையை உறுதிப்படுத்துவதற்கு புரோட்டானை விட நூறு மடங்கு அதிக ஆற்றலில் துகள் மோதல்கள் நடத்த வேண்டியிருந்தது. புரோட்டான் அணுவின் உட்கருவில் இருக்கும் துகள்களில் முக்கியமான ஒன்றாகும்.

பருப்பொருளின் அடிப்படை இயல்புகளை புரிந்து கொள்ளும் திசையை நோக்கி ஒருவர் பணியாற்றும் போது எதிர் கொள்ளும் கேள்வி: "ஒரு துகள் எங்கிருந்து எப்படி நிறை என்ற பண்பை பெறுகிறது?" நவீன இயற்பியலின் தொடக்கமான இயக்கம் பற்றிய நியூட்டனின் மூன்று விதிகளிலிருந்து இயற்பியலின் வளர்ச்சியை பார்க்கும் போது இந்தக் கேள்வி நீண்ட காலம் பதில் சொல்லப்படாமல் இருப்பது என்ற சாதனையை கொண்டது என்று உணரலாம். உலகத்தில் உள்ள ஒவ்வொன்றுக்கும் சடத்துவம் என்ற பண்பு இருக்கிறது என்கின்றன நியூட்டனின் விதிகள். ஓய்வு நிலையில் இருக்கும் பருப்பொருளை நாம் நகர்த்த முயற்சித்தால் அதன் மீது விசையை செலுத்த வேண்டும். அதே அளவுடைய பீரங்கி குண்டை விட ஒரு கால் பந்தை நகர்த்துவது எளிதாக இருக்கிறது. சடத்துவம் எல்லா பொருட்களுக்கும் ஒரே அளவு இல்லை என்று இந்த வேறுபாடுகள் காட்டுகின்றன. சடத்துவத்தின் அளவை நிறை என்று நியூட்டனின் விதிகள் சொல்கின்றன. ஆனால், நிறை எப்படி உருவாகிறது என்றோ, பொருளின் நிறையை எது தீர்மானிக்கிறது என்பதோ நமக்கு இன்னும் தெரியாது.

அணுத் துகள்களுக்கான நவீன கோட்பாட்டில் இந்த கேள்வி விடையளிக்கப்படாமல் இருக்கிறது. எனினும், 1960 களின் ஆரம்பத்தில் பீட்டர் ஹிக்ஸ் முன்மொழிந்த கருத்துக்களின் படி ஹிக்ஸ் துகள் என்று பின்னர் அழைக்கப்பட்ட துகள்தான் மற்ற துகள்களுக்கு நிறையை அளிப்பதற்கு பொறுப்பானது. அடிப்படைத் துகள்கள் பற்றிய எந்த ஒரு நவீன கோட்பாட்டுக்கும் தொடக்கப் புள்ளியாக கருதப்படும் செந்தர மாதிரி ஹிக்ஸ் துகள் இருக்க வேண்டும் என்பதை வேண்டுவதோடு அதன் நிறையும் அடிப்படை பண்புகளும் குறிப்பிட்ட அளவு மதிப்புகளுக்குள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. அடிப்படை துகள்கள் இந்திய இயற்பியலாளர் சத்யேன் போஸால் வகுக்கப்பட்ட விதிகளை பின்பற்றுகின்றனவா அல்லது இத்தாலிய இயற்பியலாளர் என்ரிகோ பெர்மியால் வகுக்கப்பட்ட விதிகளை பின்பற்றுகின்றனவா என்பதைப் பொறுத்து போஸான்கள் அல்லது பெர்மியான்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஹிக்ஸ் துகள் ஒரு போஸான் என்பதால் அது ஹிக்ஸ் போஸான் என்று அழைக்கப்படுகிறது. காலப்போக்கில் அதன் அடிப்படைத் தன்மையின் காரணமாக நோபல் பரிசு பெற்ற நியோன் லேடர்மேன் சூட்டிய "கடவுள் துகள்" என்ற பெயரை பெற்றது. தேவையில்லாமல் கடவுளை உள்ளே நுழைக்கும் இந்த பெயரை பல விஞ்ஞானிகள் விரும்புவதில்லை.

எதிர்பார்த்த நிறையுடைய ஹிக்ஸ் போஸானை கண்டு பிடிப்பது துகள் இயற்பியலின் செந்தர மாதிரியை இன்னும் அதிக வலுவாக்கும். அது கண்டுபிடிக்கப்படா விட்டாலோ, அல்லது வேறுபட்ட நிறையில் காணப்பட்டாலோ, நவீன துகள் இயற்பியலின் பல கருத்துக்கள் மாற்றப்பட வேண்டியிருக்கும். அண்டத்தின் தொடக்கங்களை ஆய்வு செய்யும் அண்டவியலாளர்களும் இந்த பரிசோதனைகளை கவனமாக கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.  பருப்பொருள் எப்படி உருவானது, பிக்பேங்கில் அண்டம் உருவான பிறகு எப்படி பரப்பப்பட்டது என்பது குறித்த முக்கியமான பல கேள்விகளின் பட்டியல் அவர்களிடம் இருக்கிறது.

ஜூலை 4, 2012 அன்று செர்ன் அறிவித்த கண்டுபிடிப்பை இந்த பின்னணியில்தான் பார்க்க வேண்டும். அவதானிக்கப்பட்ட மோதல் நிகழ்வுகளின் ஆய்வு போஸான் போல நடந்து கொள்ளும் புரோட்டான் அல்லது நியூட்ரானை விட கணிசமான அதிக நிறையுடைய ஒரு துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுட்டுகின்றன. அதன் பண்புகள் எதிர்பார்க்கப்படும் ஹிக்ஸ் போஸான் பண்புகளை அது ஒத்திருக்கின்றன. ஆனால் இந்த கண்டுபிடிப்புடன் தொடர்புடைய விஞ்ஞானிகள் முனைந்து வலியுறுத்துவைப் போல அவர்கள் தேடிக் கொண்டிருக்கும் ஹிக்ஸ் போஸான் அதுதான் என்று இப்போதே முடிவு செய்ய முடியாது. அந்த முடிவுக்கு வருவதற்கு முன்பு பொறுமையும் இன்னும் பல பரிசோதனைகளும் தேவை.

இதைப் பற்றி ஒரு ஒப்பீட்டை பார்க்கலாம் : கடற்கரையில் உங்களுக்கு தெரிந்த ஒருவரை தேடிக் கொண்டிருக்கிறீர்கள். அவரது தடங்களோடு ஒத்து போகும் சில காலடி தடங்களை பார்க்கிறீர்கள், உங்கள் நண்பரின் நிழலை போன்ற நிழல் தெரிந்ததாக கேள்விப்படுகிறீர்கள். இவற்றின் மூலம் அவர் கடற்கரையில்தான் எங்கோ இருக்கிறார் என்று உங்களுக்கு நம்பிக்கை ஏற்படுகிறது. ஆனால் அவரை நீங்கள் இன்னும் நேரில் பார்க்கவில்லை.

ஹிக்ஸ் போஸான் இப்போது தோன்றி மறையும் நிழலாகத்தான் காணப்பட்டிருக்கிறது. 

செவ்வாய், ஏப்ரல் 24, 2012

இணைய இதழ்களும் இளைய சமுதாயமும்


இணைய இதழ்களும் இளைய தலைமுறையும் என்ற தலைப்பின் நோக்கம் இணைய இதழ்கள் இளைய தலைமுறையினரை எப்படி கவர்ந்திருக்கின்றன என்று பார்ப்பதுதான். அவர்கள்தான் எதிர்கால வாசகர்களாக மாறப் போகிறார்கள். அதனால் அது தொடர்பான போக்குகளை தெரிந்து வைத்திருப்பது ஊடகத்துறையில் இருப்பவர்களுக்கு மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது.

தகவல் பரிமாற்றத்துக்கான இந்த தொழில்நுட்ப மாற்றம் அடிப்படையானதா அல்லது கடந்து போகும் மேகமாக கலைந்து போய் விடுமா என்ற கேள்வி. இந்த மாற்றம் இனி வரும் ஆண்டுகளில் நிலை பெற்று உலக மக்களின் படிக்கும், தகவல் பெறும் முறைகளில் அடிப்படை மாற்றங்களை உருவாக்கும் என்பதுதான். எப்படி அவ்வளவு உறுதியாக சொல்ல முடிகிறது?

நவீன அச்சு தொழில் நுட்பம் 1436ல் கூட்டன்பெர்கால் கண்டுபிடிக்கப்பட்டு 1456ல் கூட்டன்பெர்க் பைபிள் வெளியிடப்பட்டது. ரோட்டரி பிரின்டிங் பிரஸ் 1843ல் கண்டுபிடிக்கப்பட்டது. ஊடகங்களை குறிப்பிடும் சொல்லான பிரஸ் என்பது பிரின்டிங் பிரஸ் என்ற ஆங்கில சொல்லிலிருந்து வந்தது.

புத்தகங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட 15ம் நூற்றாண்டில் அதை பயன்படுத்துவது எவ்வளவு குழப்பமான ஒன்றாக இருந்திருக்கும் என்பதை விளக்க ஒரு காணொளியை பார்க்கலாம்.




அச்சிட்ட புத்தகங்கள், இதழ்கள் கிட்டத்தட்ட ஐந்து நூற்றாண்டுகளாக நமக்கு பயன்பட்டு வருகின்றன. படைப்பாளர், பதிப்பாளர், அச்சு நுட்பத் துறையாளர், வினியோகிப்பு சங்கிலி, வாசகர் என்று நீண்ட காலமாக பழகிப் போன முறை ஒன்று நம்மிடையே இருக்கிறது. அதன் மொழி, அதன் முறைகள் நமக்கு பழகி போயிருக்கின்றன. அந்த பழக்கத்திலிருந்து நாம் சீக்கிரம் மாறி விட முடியுமா? புத்தகங்களும் அச்சு இதழ்களும் முழுக்க முழுக்க இணைய இதழ்களால் இல்லாமல் செய்யப்பட்டு விடுமா என்ற கேள்வி எழுகிறது?

'என்ன இருந்தாலும் புத்தகம் போல வருமா? கையில் புத்தகத்தைப் பிடித்துக் கொண்டு, தாளின் மணத்தை முகர்ந்து கொண்டு படிப்பது போல வருமா? புத்தகத்தை படித்துக் கொண்டு படிக்கலாம், டாய்லெட்டில் உட்கார்ந்து கொண்டு படிக்கலாம், பூங்காவில் புல் தரையில் உட்கார்ந்து கொண்டு படிக்கலாம், படித்த இடத்தைக் குறிக்க விளிம்பை மடக்கிக் கொள்ளலாம், அடிக் கோடிடலாம், குறிப்புகளை எழுதி கொள்ளலாம். இதெல்லாம் கணினியில் அல்லது மின்னணு கருவிகளில் முடியுமா' என்று வாசகர்களாக நமக்குள் கேள்வி எழுகிறது.

முதல் விஷயம் தாளின் வாசனை தரும் கவர்ச்சி. புத்தக வாசனை என்பது புத்தகத்தில் இருக்கும் தகவல், படைப்புடன் இணைத்துதான் நமக்கு கிளர்ச்சியை தருகிறது. அதை ஒதுக்கி விடலாம். மற்ற விஷயங்கள் அனைத்துமே சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட e-book படிப்பான்களில் தீர்வு காணப்பட்டு விட்டது. அவற்றில் e-இங்க் என்ற தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி கண்ணை உறுத்தாமல், காகித எழுத்துக்களை படிப்பது போலவே படிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. அமேசான் கிண்டில் சாதனத்தின் 2007ம் ஆண்டு பதிப்பு பற்றிய ஒரு காணொளியை பார்க்கலாம்.



நாம் பார்த்தது போல இந்த கருவியில் படிக்கும் போது புத்தகங்களின் வலது பக்க மேல் முனையை மடித்துக் கொள்ளலாம், குறிப்பு எடுத்துக் கொள்ளலாம், தெரியாத விபரங்களை தேடி பார்த்துக் கொள்ளலாம். இதன் எடை சுமார் 170-300 கிராம் மட்டுமே, அதாவது சாதாரண ஒரு பேப்பர் பேக் நாவலின் அளவுதான். அதனால் இதை சட்டைப் பைக்குள் வைத்துக் கொள்ளலாம், படுத்துக் கொண்டு ஒற்றை கையால் பிடித்து பயன்படுத்தலாம்.

அமேசான் கிண்டில் அடிப்படை வடிவம்

கூடவே இந்த கையடக்க கருவியில் நூற்றுக்கணக்கான புத்தகங்களை வைத்துக் கொள்ளலாம். புத்தகங்களுக்கான பேக் அப் இன்னொரு கணினியில், அல்லது பென் டிரைவில் வைத்துக் கொள்ளலாம். புத்தகங்களை இணையத்தில் வாங்கி சேமித்துக் கொள்ளலாம். கருவி உடைந்து விட்டால் புதிய கருவி வாங்கி பேக் அப்பிலிருந்து புத்தகங்களை ஏற்றிக் கொள்ளலாம். வீடு மாற்றும் போது பெட்டி பெட்டியாக புத்தகங்களை சுமந்து மாற்ற வேண்டியதில்லை. இதன் அமெரிக்க விலை 79 அமெரிக்க டாலர்கள் (சுமார் 4,000 ரூபாய்). யாருக்காவது புத்தகம் இரவல் கொடுக்க வேண்டுமானால் மின்னஞ்சலில் அனுப்பி கொள்ளலாம்.

இவ்வளவு இருந்தும் ஏன் இது இன்னும் பரவலாக பயன்படுத்தப்படவில்லை?

இதற்கு காரணங்கள்

1. இணைய/மின்னணு கருவி வாய்ப்புகள் இல்லாமல் இருப்பது.

2. பதிப்பக துறையில் படைப்புக்கான ஊதியம் பெறுவதற்கான மாதிரி இன்னமும் முழுமை பெறாமல் இருப்பது.

முன்னேறிய நாடுகளான அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா, ஆஸ்திரேலியா, ஜப்பான், கொரியா போன்ற நாடுகளில் பெரும்பகுதி மக்கள் இணையத்தில் இணைந்துள்ள மின்னணு கருவிகளை வாங்க முடிந்தாலும், தகவலை படைத்தவர், பொதிபவர், வினியோகிப்பவர் இவர்களுக்கு எந்த வகையில் ஊதியம் அளிப்பது என்ற முக்கியமான கேள்வியில்தான் இணைய வழி வினியோகம் சிக்கி நிற்கிறது. பாடல்களாகட்டும், திரைப்படங்களாகட்டும், புத்தகங்களாகட்டும், இணைய இதழ்களாகட்டும் பணம் சம்பாதிக்கும் வழி முறை இன்னமும் தெளிவாகவில்லை.

வாசகர்கள் சந்தா கட்டி படிக்கும் மிகச் சில இணைய பத்திரிகைகளை தவிர மற்ற அனைத்து இணைய இதழ்களும் விளம்பர வருமானத்தையே நம்பி இருக்கின்றன. அல்லது நிறுவனத்தின் மற்ற பகுதிகள் இணைய பிரிவுக்கு ஆதரவு தருகின்றன. இணைய பிரிவின் மூலம் மற்ற பகுதிகளுக்கு விளம்பரமும் விற்பனை அதிகரிப்பும் கிடைக்கிறது.

சந்தா கட்டி படிக்கும் இதழ்களாக தமிழில் ஆனந்த விகடன் முதலான இதழ்கள், ஆங்கிலத்தில் இந்தியா டுடே, பன்னாட்டு அளவில் வால்ஸ்ட்ரீட் ஜர்னல் போன்றவை இருக்கின்றன.

புதிய கருவிகளான கிண்டில், ஐ-பேட் போன்றவற்றில் பயனாளரிடம் இதழை அல்லது புத்தகத்தை விற்று வருமானம் வருகிறது. அந்த வருமானத்தில் வினியோகிப்பாளருக்கு என்ன பங்கு, படைப்பாளிக்கு என்ன பங்கு, பதிப்பாளருக்கு என்ன பங்கு என்ற சச்சரவு இன்னும் முழுமையாக தீரவில்லை. பெரிய நிறுவனங்களான அமேசான், ஆப்பிள் போன்றவர்கள் இதில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். நாளிதழ்கள், வார இதழ்கள், மாத பத்திரிகைகள், அறிவியல் வெளியீடுகள் என்று சந்தா செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

இது போன்ற கருவிகளில் வாங்கும் புத்தகங்களை நகல் எடுக்கவோ பிறருக்கு அனுப்பவோ முடியாது. வாங்கிய புத்தகங்கள் விற்ற நிறுவனங்களின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன. ஒரு முறை அமேசான் ஒரு புத்தகத்தை விற்ற பின் ஏதோ காப்புரிமை பிரச்சனை ஏற்பட, அதை வாங்கியவர்களின் கருவிகளிலிருந்து அந்த புத்தகத்தை நீக்கி விட்டது பெரிய பிரச்சனையானது.

இந்த பிரச்சனைகள் அனைத்தும் தீர்க்கப்பட வேண்டும்.

இந்த வணிக ரீதியான மாதிரிகள் உருவாக்கப்பட்டு விட்ட பிறகு வினியோக வீச்சு பெருமளவு விரிந்து விடும். கார்னிங் கண்ணாடி நிறுவனம் உருவாக்கிய எதிர்கால சாத்தியங்கள் பற்றிய காணொளியை இப்போது பார்க்கலாம்.


கவன சிதறல்கள்

கிண்டில், ஐ-பேட் போன்ற கருவிகள் பல வண்ண திரையுடன் வீடியோ, இணைய இணைப்பு, மியூசிக் பிளேயர் என்று பல்லூடக கருவியாக மாற்றப்பட்டிருக்கின்றன. இவற்றால் புத்தகம் படிக்கும் கவனம் கலைகிறது என்று பலர் புகார் சொல்கிறார்கள்.

இணையத்தின் மிகப் பெரிய பிரச்சனை கவனச் சிதறல்தான். இந்து நாளிதழில் ஒரு கட்டுரை படித்துக் கொண்டிருக்கும் போதே அங்கு இருக்கும் சுட்டி மூலமாக அல்லது இன்னொரு தத்தலில் வீடியோ ஒன்றை பார்க்க தாவி விடுகிறோம். அந்த கவனச் சிதறலை கணக்கில் எடுத்துக் கொண்டு இணைய இதழ்கள் இயங்க வேண்டியிருக்கிறது. கவனச் சிதறலை தம் பக்கம் ஈர்க்கவும், தம் பக்கம் வந்தவர்களை தமது தளத்திலேயே இருக்கும் படி தளத்தை வடிவமைப்பதும் தேவையானதாக இருக்கிறது.

இணைய இதழ்கள் புதிய கட்டுரைகள் அல்லது செய்திகள் வெளியானதும் அவற்றுக்கான சுட்டிகளை டுவிட்டர், பேஸ்புக், கூகுள் பிளஸ் போன்ற சமூக வலைத்தளங்களில் பகிர்வது இப்போது பரவலான வழக்கமாகி விட்டது. ஒரு கட்டுரையின் பக்கவாட்டில் அல்லது இறுதியில் தொடர்புள்ள முந்தைய செய்திகள், காணொளிகள், புகைப்படங்களை இணைக்க முடிகிறது.

இன்னொரு முக்கிய கூடுதல் வசதி வாசகர் பின்னூட்டம். தினமலர் இணைய இதழில் ஒவ்வொரு செய்திக்கும் நூற்றுக்கணக்கான பேர் கருத்து சொல்கிறார்கள். (அவர்கள் அனைவருமே ஒரே ஆளா என்று சில சமயம் சந்தேகம் ஏற்பட்டதுண்டு). பின்னூட்டம் எழுதுவதும், வெளியாவதும் எளிதானதாக இருப்பதால் இணைய இதழ்களுக்கு அவை ஒரு முக்கிய உயிரோட்டமாக இருக்கின்றன.

இணைய இதழ்களுக்கு போட்டியாக சமூக வலைத்தளங்கள், வீடியோக்கள், வலைப்பதிவுகள் இருக்கின்றன. தொழில் முறை ஊடகவியலாளர்கள் தம்மை நிலைநிறுத்திக் கொள்ள இன்னும் பல மடங்கு திறமையை காட்ட வேண்டியிருக்கும். ஒரு வலைப்பதிவுக்கும், ஆய்வு செய்து எழுதப்பட்ட கட்டுரைக்கும் உள்ள வேறுபாடுதான் இணைய இதழ்களின் வலிமை.

ஊடகத்தில் பணி புரியும் ஒருவர் எப்படி தன்னை தயாரித்துக் கொள்ள வேண்டும். மடிக்கணினியில் தமிழில் தட்டச்சு செய்ய கற்றுக் கொள்ள வேண்டும். இணையத்தில் ஒரு வலைப்பதிவு, டுவிட்டர் கணக்கு, பேஸ்புக் கணக்கு வைத்துக் கொள்வது அவசியத் தேவை. வலைப்பதிவுகள் மூலம் தம்மை முன்னிறுத்திக் கொண்டு வளர்ந்த பத்திரிகையாளர்கள், திரைப்படத் துறையினர் சிலரை நாம் அனைவரும் அறிவோம்.

அச்சு பத்திரிகைகள், நாளிதழ்கள் என்ன செய்ய வேண்டும்?

நிச்சயம் இணைய இதழ்களுக்கு போக வேண்டும். அச்சு இதழில் விளம்பர வருமானம் குறைவாக இருக்கும் இதழ்கள் கூட இணையத்தில் வெளியாவதன் மூலம் வருமானம் ஈட்ட ஆரம்பிக்கலாம். கூகுள் ஆட்சென்ஸ், ஆட்வேர்ட்ஸ் போன்ற சேவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

வெள்ளி, பிப்ரவரி 17, 2012

பேஸ்புக் கணக்கு ஒழிப்பு


பேஸ்புக் கணக்குகள் நீக்குதல்

பேஸ்புக் கணக்குகளை வெற்றிகரமாக செயலிழக்கச் செய்து விட்டேன். பேஸ்புக் கணக்கை நீக்குவது எப்படி என்று தேடினால் இரண்டு லிங்குகள் கிடைத்தன. எல்லாமே பேஸ்புக்கின் உதவிக் குறிப்புகள்தான். (http://www.facebook.com/help/search/?q=how+do+i+delete+my+account)

முதல் குறிப்பில், கணக்கில் புகுபதிகை செய்து அமைப்புகள் போய், கணக்கை முடக்கவும் என்று கிளிக் செய்ய வேண்டும். அலுவலக மின்னஞ்சலுடன் இணைக்கப்பட்ட, குறைவான செயல்பாடுகள், நண்பர்கள் கொண்ட கணக்கில் லாகின் செய்திருந்தேன்.

அதை கிளிக் செய்ததும், அடுத்த பக்கத்தில் 'நண்பர்கள்' புகைப்படங்கள் வரிசையாக வைத்து, "இன்னார் உங்களை தேடுவார், அன்னார் உங்களை தேடுவார்" என்று உணர்வுரீதியான அழுத்தம் தரும் பக்கம். அதிலும் உறுதி சொன்ன பிறகு அடுத்த பக்கத்தில் "ஏன் பேஸ்புக் கணக்கை முடக்க விரும்புகிறீர்கள்?' என்ற கருத்தெடுப்பு. 'பாதுகாப்பு குறித்த கவலை' என்று தேர்ந்தெடுத்தேன். அடுத்த பக்கத்தில் கடவுச்சொல்லை உறுதி செய்து, captcha எழுத்துக்களை உள்ளிட வேண்டும். அதற்கடுத்த பக்கத்தில் வெளியில் அனுப்பி விட்டார்கள். மின்னஞ்சலுக்கு, இப்படி "உங்கள் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் நீங்கள் மீண்டும் கணக்கை பயன்படுத்த விரும்பினால், உங்கள் மின்னஞ்சல், கடவுச் சொல்லைப் பயன்படுத்தி லாகின் செய்தால் போதும், உங்கள் விபரங்கள், அமைப்புகள் இப்போது இருந்தபடியே திரும்ப கிடைத்து விடும்' என்று ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்கள்.

இன்னொரு கணக்கு தனிப்பட்ட மின்னஞ்சலுடன் இணைந்தது. பொதுவாக பேஸ்புக்கில் எதையும் எழுதவோ, தகவல் அறிவிக்கவோ செய்யாமல் இருந்தாலும், பேஸ்புக்கில் செயல்படும் நண்பர்கள், உறவினர்கள் அனுப்பிய அழைப்பை ஏற்பது மட்டும் செய்து கொண்டிருந்தேன். அப்படி நிறைய அழைப்புகள் சேர்ந்து வாரத்துக்கு நான்கைந்து முறையாவது எட்டிப் பார்க்கும் கணக்காக அது இருந்தது. அதில் நுழைந்து கணக்கை நீக்குவது பற்றிய தேடலின் இன்னொரு சுட்டிக்குப் போனேன். 'நீங்கள் கணக்கை நிரந்தரமாக முற்றிலுமாக அழிக்க விரும்பினால்' என்ற தலைப்பில் அதன் விளைவுகளை விளக்கி விட்டு, 'அப்படி விரும்பினால் இந்தச் சுட்டியை கிளிக்கவும்' என்று ஒரு சுட்டி இருந்தது. அதை கிளிக்கியதும் கடவுச்சொல்லை உறுதி செய்து captcha உள்ளிட்டதும் 'உங்கள் கணக்கு முடக்கப்பட்டது. இன்னும் 14 நாட்களுக்குப் பிறகு உங்கள் அனைத்து விபரங்களும் அமைப்புகளும் நிரந்தரமாக நீக்கப்பட்டு விடும். அதற்குள் நீங்கள் விரும்பினால் கணக்கை உயிர்ப்பித்துக் கொள்ளலாம். உங்கள் மின்னஞ்சல், கடவுச் சொல் மூலம் லாகின் செய்து அதைச் செய்யலாம்' என்று அறிவிப்பு. அதே விபரம் மின்னஞ்சலிலும் அனுப்பி விட்டிருந்தார்கள்.

பேஸ்புக் கணக்கை நீக்குவதில் அதிக மனப் போராட்டம் ஏற்பட்டு விடவில்லை. புகைப்படங்கள், கட்டுரைகள், கருத்துக்கள், விவாதங்கள் என்று எதிலுமே பேஸ்புக்கில் கலந்து கொண்டிருக்கவில்லை. மற்றவர்கள் சேர்த்த புகைப்படங்களில் எனது படத்தில் டேக் செய்திருந்தது மட்டும் எனது டைம்லைனில் வந்தது. இவற்றைத் தவிர வேறு எதுவும் செய்தது போய் விடுமே என்ற வருத்தம் இல்லை.

பேஸ்புக் மீதான ஆரம்ப அணுகுமுறை

ஏன் பேஸ்புக் கணக்கை நீக்க வேண்டும்? இணையத்தில் சமூக வலைத்தளங்களை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் என்ற கருத்து நிச்சயம் இல்லை. சமூக வலைத்தளங்களின் மூலம் பெரிதும் எதுவும் கிடைத்து விடப் போவதில்லை என்று தெரிந்தாலும், அவற்றை ஒரு கருவியாக பயன்படுத்த வேண்டும் என்ற கருத்து மாறவில்லை. டுவிட்டர், கூகுள்+, கூகுளின் பிற சேவைகளில் கணக்கு இருக்கிறது. அவ்வப்போது குறைந்த அளவிலான கருத்து தெரிவிப்புகளையும் செய்கிறேன். பிளாக்கர் மூலம் வலைப்பதிவுகளில் நிறைய எழுதி வைத்திருக்கிறேன்.

பேஸ்புக்கின் மீது ஆரம்பத்திலிருந்தே விமர்சனம் நிறைய இருந்தது. பேஸ்புக் கணக்கு ஆரம்பிப்பதற்கு முன்பே அமெரிக்க பயனர்கள் ஸ்லாஷ்டாட்டில் வைத்த விமர்சனங்களை நிறைய படித்திருந்தேன். அப்போது பேஸ்புக், ஆர்குட், மைஸ்பேஸ் என்று சமூக வலைத்தளங்களின் போட்டி தணிய ஆரம்பித்து பேஸ்புக் முன்னணியில் வர ஆரம்பித்திருந்த சமயம். 'பேஸ்புக்கில் சுய தகவல்களுக்கு பாதுகாப்பு, அந்தரங்கம் இல்லை' என்பதுதான் அந்த விமர்சனங்களின் சாராம்சம்.

என்னைப் பொறுத்த வரை 'அந்தரங்கமாக தகவல்களை பாதுகாத்து வைத்துக் கொள்ள வேண்டும்' என்பது மிகவும் குறைவாகவே இருக்கிறது. வலைப்பதிவில் கூட  நாட்குறிப்பு என்ற பெயரில் முடிந்த வரை மற்றவர்களை குறிப்பிடாமல் எனது தினசரி வாழ்க்கையை பதிவு செய்து வந்தேன். ஆனால் 'பேஸ்புக்கின் கவர்ச்சியில் சிக்கி தம்மைப் பற்றிய தகவல்கள், புகைப்படங்களை பகிர்ந்து கொள்பவர்கள் அனைவரும் அதன் விளைவுகளை முழுமையாக புரிந்து கொண்டிருப்பார்கள் என்று சொல்ல முடியாது' என்பது லாஜிக்கான வாதமாக இருந்தது. அந்த வாதத்தை நிரூபிப்பது போல நடைமுறையில் பல செய்திகள், நிகழ்வுகள் வெளியாகிக் கொண்டிருந்தன.

பேஸ்புக்கின் வெற்றி அடிப்படை

பேஸ்புக்கின் அடிப்படை கோட்பாடு, 'யாருக்கும் அந்தரங்கம் இல்லை' என்பதுதான். 'பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை பொதுவில் பரப்பி அதன் மூலம் பணம் சம்பாதிப்பதுதான்' பேஸ்புக்கின் வணிக அடிப்படை. அடிப்படையில் பேஸ்புக்கின் வடிவமைப்பு, பகிர்ந்து கொள்ளப்படும் தகவல்களை பொதுவில் வெளியிடும் வகையில் இருந்தது/இருக்கிறது. அந்தரங்க பாதுகாப்பு ஆர்வலர்களின் தொடர்ந்த விமர்சனங்களுக்குப் பிறகு பேஸ்புக் கூடுதல் பாதுகாப்புகளை அடிப்படை வடிவமைப்பின் மீது ஏற்படுத்திக் கொண்டது.

அதன் மூலம், இப்போது ஒருவர் 'விரும்பினால்', தனது விபரங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்குமாறு பேஸ்புக்கை பயன்படுத்த முடியும். ஆனால், அப்படி எத்தனை பேர் 'விரும்பு'வார்கள்? அப்படிப்பட்ட விருப்பத்தை ஏற்படுத்த பேஸ்புக் என்ன செய்கிறது? என்று பார்த்தால் பெரிய அளவில் இல்லை.

'பயனர்களின் தனித் தகவல்களை சரக்காக பயன்படுத்தி வருமானம் ஈட்டுவது, வருமானத்தை அதிகரிக்கும் வகையில் தனது பயன்பாட்டை வடிவமைப்பது' என்றுதான் பேஸ்புக் செயல்படுகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகள் எல்லாம் அரை மனதோடு, குறை சொல்பவர்களின் வாயை மூட செயல்படுத்தப்பட்டவைதான்.

பேஸ்புக்கும் பாதுகாப்பும் ஒன்றுக்கொன்று முரணானவை

விண்டோஸ் (3.1, 95, 98, Me) தனிநபர் கணினியில் பயன்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டது. அதை நெட்வொர்க் சூழலில், இணையத்தில் பாதுகாப்பாக இயங்க வைக்க எவ்வளவு முயற்சித்தும் முடியாமல் போனது. அதே சுமைதான் NT அடிப்படையிலான XP முதலான இயங்குதளங்களுக்கும் இருக்கிறது. ஆரம்ப வடிவமைப்பில் பாதுகாப்பை கணக்கில் எடுத்துக் கொள்ளாத எந்த மென்பொருள் பயன்பாட்டையும் அதன் பிறகு வெளிச்சேர்க்கைகள் மூலம் பாதுகாப்பானதாக மாற்ற முடியாது. இதே பிரச்சனை பேஸ்புக்குக்கும் இருக்கிறது.

பேஸ்புக்கில் சேருபவர்களுக்கு ஏற்படுத்தப்படும் உணர்வு, 'நாம் நமது நண்பர்களின் மத்தியில் இருக்கிறோம்' என்பது. நண்பர்கள் ஏற்பாடு செய்யும் பார்ட்டி ஒன்றில் கலந்து கொள்ளும் உணர்வுதான் பேஸ்புக்குக்குள் ஏற்படுகிறது. பார்ட்டியில் சந்திக்கும் போது ஏற்கனவே தெரிந்தவர்களுக்கு ஹலோ சொல்லி விட்டு, தெரியாதவர்களுடன் அறிமுகம் செய்து கொண்டு சமூக வாழ்க்கையை விரிவுபடுத்திக் கொள்கிறோம். அதே போன்ற தோற்றமும் உணர்வும் பேஸ்புக் பயன்படுத்தும் போது ஏற்படுகிறது.

நண்பர் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதும், நண்பர் கோரிக்கைகளை அனுப்புவதும் இயல்பான ஒன்றாக படுகிறது. முகத்துக்கு நேர் பேசுவதில் தயங்கும் இளைஞர்கள் கூட கணினியின் முன்பு கிடைக்கும் முகமிலி வசதியில் நண்பர்கள் ஊடே சகஜமாக பேச, எழுத, எதிர்வினை புரிய முடிகிறது. நண்பர்களை கோரிக்கை அனுப்புவதற்கு பேஸ்புக் தொடர்ச்சியாக பரிந்துரைகளை செய்து கொண்டிருக்கிறது, ஒரு நல்ல பார்ட்டி ஒருங்கிணைப்பாளராக விருந்தில் கலந்து கொண்டிருக்கும் எல்லோரையும் மகிழ்ச்சியாக பிறருடன் சேர்ந்து நேரம் செலவழிக்க ஏற்பாடு செய்து தருகிறது.

விருந்தில் ஏற்படும் தொடர்புகள் வளர்ந்து சிலருடன் தனிப்பட்ட ஆழமான உறவாக வளர்வதற்கும் பேஸ்புக்கில் வசதி கிடைக்கிறது. அது காதல், திருமணம் என்று கூட வளர்ந்து போகலாம்.

80 கோடி பேர் கலந்து கொள்ளும் விருந்து

இதுதான் பேஸ்புக்கின் அடிப்படை. அது ஒரு மிகப்பெரிய பார்ட்டி, அதில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். உள்ளே நுழைவதற்கு ஏதாவது ஒரு அடையாள அட்டையை (மின்னஞ்சல், பெயர்) காண்பித்தால் போதும். உள்ளே நுழைந்த பிறகு நீங்கள் அதில் கலந்து கொள்ளும் விருந்தினர்கள் அனைவரிடமும் உறவாடும் வாய்ப்பு கிடைக்கிறது.

அமெரிக்காவில் உருவானதால் பேஸ்புக் நடத்தும் இந்த பார்ட்டி/விருந்து என்பது மேற்கத்திய பாணியில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அந்த அடிப்படையில் அது செயல்படுகிறது. இந்த மகிழ்ச்சியான, வசதியான சூழலில் என்ன நடக்கிறது என்பதன் விளைவுகள்தான் கடந்த சில ஆண்டுகளில் நாம் செய்திகளில் படிக்கும் கேள்விப்படும் நிகழ்வுகள்.

இந்த அடிப்படையின் மிகப்பெரிய சிக்கல், அந்த பார்ட்டி ஒரே ஹாலின் கீழ், சுமார் 80 கோடி பயனர்களும் ஒரே குழுவாக புழங்குவதாக இருப்பதுதான். சுமார் 80 கோடி பேர் ஒரு பார்ட்டியில் கலந்து கொள்வதை கற்பனை செய்து கொள்ளுங்கள். நடைமுறையில் அது சாத்தியமில்லாத பார்ட்டியாக இருந்தாலும் நிகர்நிலை உலகில் அது சுமார் 30 முதல் 40 பேர் வரை புழங்கும் பார்ட்டியைப் போல  எளிமையாக இருக்கிறது. அதில் நண்பர்களுடன் கட்டித் தழுவி மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்ளலாம். முன்பின் தெரியாதவர்களாக இருந்தாலும், பார்ட்டிக்குள் வந்திருக்கிறார்கள் என்றால், நிச்சயம் நம்பத் தகுந்தவர்தான் என்ற அடிப்படையில் அறிமுகத்தை ஏற்படுத்திக் கொண்டு பேச ஆரம்பிக்கலாம்.

அப்படிப்பட்ட நம்பிக்கையான குழுவின் மத்தியில் தனிப்பட்ட தகவல்களை பகிர்ந்து கொள்ளலாம், புகைப்படங்களை காட்டலாம். 'இவற்றை செய்யும் போது நமக்கும் இருக்கும் உணர்வு 30 முதல் 40 பேர் வரை கலந்து கொண்டிருக்கும் ஒரு நண்பர் குழுவில் நாம் பேசிக் கொண்டிருக்கிறோம் என்பதுதான். ஆனால், உண்மையில் 80 கோடி பேர் அதே அறையில் புழங்கிக் கொண்டிருக்கிறார்கள்'.

1. அவர்களை அழைத்த பேஸ்புக் அவர்களின் பெயர், மின்னஞ்சல் முகவரி மட்டும் உறுதி செய்து கொண்டிருக்கிறது.
2. அவர்கள் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து பல்வேறு கலாச்சார பின்னணியிலிருந்து வந்திருப்பவர்கள்.
3. நாம் பகிர்ந்து கொள்ளும் ஒவ்வொரு தகவலும் 80 கோடி பேரில் யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளும்படி இருக்கிறது.

செயற்கையான பாதுகாப்பு உணர்வுடனான, உண்மையில் அப்படிப்பட்ட பாதுகாப்பு இல்லாத சூழலில் இயங்குவதுதான் பேஸ்புக்கின் பிரச்சனையே. தேவைப்படும் சமூக பாதுகாப்புகளை உண்மையாகவே செயல்படுத்தி விட்டால், பேஸ்புக்கின் வணிக மாதிரியே இல்லாமல் போய் விடும்.

பேஸ்புக்கில் ஏற்படும் நடைமுறை சிக்கல்கள்

இந்த முரண்பாட்டின் அடிப்படையில்தான்

1. தனது ஆண் நண்பர் பேஸ்புக்கில் அவரது உறவு நிலையை மாற்றியதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார் ஒரு பெண். அந்த இளைஞரைப் பொறுத்த வரை அவர் தனிப்பட்ட முறையில் தனது புரொபைலில் ஒரு மாற்றத்தை செய்து கொண்டிருக்கிறார். அவரது காதலியோ 'அது உலகின் முன்பு பகிரங்கமாக சொல்லப்பட்டிருக்கிறது' என்பதை உணர்ந்து மனம் உடைந்து தனது உயிரை எடுத்துக் கொண்டிருக்கிறார்.

2. சாரு நிவேதிதா போன்ற பொறுக்கிகளுக்கு இப்படிப்பட்ட பார்ட்டி ஹால் ஒரு மாபெரும் வாய்ப்பு. தயக்கத்துடனும் கூச்சத்துடனும் பார்ட்டிக்குள் நுழைந்து ஓரமாக ஆரஞ்சு ஜூசை சிப்பிக் கொண்டிருக்கும் இளம் பெண்ணை குறிபார்த்து, அவரது அழகைப் புகழ்ந்து, அவரது உடையை பாராட்டி பேச்சு கொடுக்க ஆரம்பித்து, தனியறைக்குள் அழைத்துப் போய் பாலியல் வன்முறை செய்யும் காமக் கொடூரர்களுக்கான களம் இது. அத்தகைய காமக் கொடூரர்கள் பேஸ்புக்கின் அடிப்படையையும் அதில் கலந்து கொள்ள வரும் பலதரப்பட்ட பயனர்களின் மன உணர்வுகளையும் பெருமளவு புரிந்து கொண்டுள்ளார்கள். அத்தகைய புரிதலும், நண்பர்களின் ஆதரவும் இல்லாத மதுரைப் பொண்ணுகள் எண்ணெய்க் காகிதத்தில் மோதி மாட்டிக் கொள்ளும் பூச்சிகளாக மாட்டிக் கொள்கிறார்கள்.

3. சிலர் பேஸ்புக் மூலமாக, பார்ட்டியில் நட்பு ஏற்படுத்திக் கொண்டு, புகைப்படங்களை பரிமாறிக் கொள்கிறார்கள். நேரில் சந்திக்கும் வாய்ப்பு இருப்பதில்லை. அனுப்பப்பட்ட புகைப்படம் உண்மையானதா என்று கூட சரிபார்க்க  முடியாது. ஒரு பெண் பயனரிடம் அவரது பேஸ்புக் நணபர் புரபோஸ் செய்ய அவரும் அதை ஏற்றுக் கொள்ள, அந்த காதலர் 'நாம்தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறோமே, உன் கவர்ச்சியான புகைப்படங்களை அனுப்பி வை' என்று கேட்க இவரும் அனுப்பி வைத்திருக்கிறார். அதை அவன் இணையத்தில் பரவலாக போஸ்ட் செய்து விட்டிருக்கிறான்.

இவை எதுவும் பேஸ்புக்கின் தவறு இல்லை என்பது உண்மை. பேஸ்புக் ஒரு களம் மட்டுமே ஏற்படுத்திக் கொடுக்கிறது. நிஜ உலகில் மனிதர்களிடம் என்னென்ன சிக்கல் இருக்கிறதோ அந்த சிக்கல்கள்தான் பேஸ்புக்கில் வெளிப்படுகின்றன. அந்த சிக்கல்கள் பெரிதாக உருவெடுக்கும்படியான களத்தை உருவாக்கி, அத்தகைய சிக்கல்கள் பற்றிய எச்சரிக்கை உணர்வு ஏற்படாதவாறு போலியான சூழலை ஏற்படுத்தி, பயனர்களை சிக்க வைப்பதுதான் ஏற்படுத்துவதுதான் பேஸ்புக் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூக சிக்கல்.

கவனத்தில் கொள்ள வேண்டியவை

1. பேஸ்புக்கில் உங்களுக்கு நண்பர் கோரிக்கை விடுப்பவர் தெருவில் சந்திக்கும் முன்பின் தெரியாத நபர். பார்ட்டியில் சந்திக்கும் நண்பர் வட்டத்துக்குள் உள்ள நபர் இல்லை.

2. பேஸ்புக்கில் நீங்கள் பகிர்ந்து கொள்ளும் எந்த தகவலும், நாற்சந்தியில் சுவரில் ஒட்டப்பட்ட போஸ்டர் போன்றது. நண்பர்கள் குழுவுக்குள் நம்பிக்கைக்குரியவர்கள் மட்டும் பார்க்கும் படியான வெளிப்பாடு இல்லை.

3. யாரும் பார்க்கவில்லை என்று பார்ட்டி ஹாலின் பக்கவாட்டு அறைக்குள் பகிர்ந்து கொள்ளும் புகைப்படங்களும், தனிமையில் இருக்கிறோம் என்ற உணர்வில் செய்யும் செயல்களும் உலகுக்கே தெரிகின்றன. தனி அறையைச் சுற்றி பல காமெராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

உள்ளே நடப்பவை சக நண்பரால் பொதுவில் வெளியிடுப்படும் என்ற எண்ணத்துடனேயே எதையும் செய்ய வேண்டும்.

3. பேஸ்புக் மூலம் ஏற்படும் எந்த நட்பு அல்லது உறவு, ரயில் பயணத்தில் பேச்சு கொடுத்து ஏற்படும் நட்பு/உறவு போன்றது மட்டுமே. அதைத் தாண்டி வேறு எந்த சமூக ஆதாரமும் நம்பகமும் அதில் இல்லை. நிஜ உலகில் எப்படி உறவுகளை எச்சரிக்கையுடன் சரி பார்க்கிறோமோ அப்படி சரி பார்த்துக் கொள்ள வேண்டும்.

4. கூடுதலாக, தமிழ் பயனர்களைப் பொறுத்த வரை பேஸ்புக் இடைமுகம் மட்டும்தான் தமிழில் இருக்கிறது, அதன் செயல்பாடுகள் அனைத்துமே மேற்கத்திய பார்ட்டியின் அடிப்படையில்தான் இருக்கின்றன. அதனால் தனியாக  பாதிப்பு இல்லை என்றாலும் சின்னச் சின்ன வழிகளில் மேற்கத்திய பார்ட்டிகளுக்கு பரிச்சயமானவர்கள் சமாளித்துக் கொள்ளும் சிக்கல்கள் அவற்றிற்கு அறிமுகம் இல்லாதவர்களை வீழ்த்தி விடுகின்றன.

இவற்றைப் புரிந்து கொண்டு எல்லோரும் செயல்படுவது சாத்தியமில்லை, அப்படிச் செயல்பட வைக்க பேஸ்புக் எந்த நடவடிக்கையும் எடுக்கப் போவதுமில்லை. பேஸ்புக் போன்ற உலகளாவிய பார்ட்டி என்பது தனிமனித பாதுகாப்புக்கும், இயல்பான சமூக வாழ்க்கைக்கும்  முற்றிலும் விரோதமானது.

திங்கள், பிப்ரவரி 13, 2012

வாழ்வின் ஆதாரம்


அறிவு முயற்சியில் சலிப்பு

வாசிப்பது, எழுதுவது சலித்துப் போவதற்கு முக்கிய காரணம் நமக்கு எல்லாம் தெரிந்து விட்டது என்ற முடிவுதான்.

'உலகின் எல்லா நிகழ்வுகளையும் விளக்குவதற்கான தத்துவத்தை வந்தடைந்து விட்டோம்' என்று தோன்றி விட்டால் பார்ப்பது, படிப்பது எல்லாவற்றையும் அந்த தத்துவத்துக்குள் பொருத்திப் பார்ப்போம். ஒருவரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது அவர் சொல்பவை காதில் விழுந்தாலும் மூளைக்குள் போவதில்லை. நாம் ஏற்கனவே வரைந்து வைத்திருக்கும் சட்டகத்திற்குள் என்ன பொருந்துமோ அதை மட்டும் எடுத்து அதில் பொருத்திக் கொள்கிறோம். 'அவர் என்ன சொல்லப் போகிறார் என்று ஏற்கனவே தெரியும், பார்த்தால் அதைத்தான் சொன்னார்' அவர் வேறு ஏதாவது சொல்லியிருந்தாலும், நமக்குத் தேவையானதை மட்டும் கேட்டுக் கொள்கிறோம்.

தொடர்ந்து அவரது 'அறியாமை'யை நீக்குவதற்கு நமக்குத் தோன்றிய கருத்தை அவர் காதில் போட விளைகிறோம். அவரும் நம்மைப் போன்ற ஆளாக இருந்து விட்டால் அவருக்குள்ளும் இதே போன்ற பதிவுதான் ஏற்படும். இரண்டு செவிடுகள் பேசிக் கொள்வது போன்ற உரையாடல் பல நேரங்களில் நடக்கிறது.

தத்துவ சட்டகங்கள்

நாம் இது வரை தெரிந்து கொண்டவை,  இப்போதைய அறிவு நிலை இவற்றை ஒரு சட்டகத்துக்குள் பொருத்தி வைத்திருக்கிறோம். அப்படி ஒரு சட்டகம்தான் வாழ்க்கையின் பிடிப்பு. அது குறிப்பிட்ட மதக் கோட்பாடாக இருக்கலாம், அல்லது அரசியல் கட்சியாக இருக்கலாம் அல்லது தத்துவநிலையாக இருக்கலாம். புதிதாக சந்திக்கும், தினசரி நிகழ்வுகளை அந்த சட்டகத்துக்குள் பொருந்துகிறதா என்று மட்டும் அவ்வப்போது சரி பார்க்கிறோம். ஏதாவது ஒன்று கொஞ்சம் கரடு முரடாக பொருந்தாமல் இருந்தால் அதன் ஓரங்களை மடக்கி திணித்துக் கொள்கிறோம். தேவைப்பட்டால் சுருட்டி மடக்கி வைத்துக் கொள்கிறோம்.

ஒரு நாள் என்ன செய்தாலும் பொருந்தி போகாத ஒரு நிகழ்வு அனுபவம் ஏற்படுகிறது. அந்த நேரத்தில் சட்டகம் உடைய வேண்டும். அல்லது அதை மாற்றி அமைக்க வேண்டும். அதைச் செய்யும் துணிச்சல் அதன் மூலம் ஏற்படும் விளைவுகளை சந்திக்கும் தைரியம் தேவை.

அறிவியலிலும் உலக அளவில் இப்படி நடக்கிறது.

நாம் ஏற்படுத்தும் விதிகள் அமைத்துக் கொள்ளும் சட்டகங்கள் எதற்கும் கட்டுப்பட வேண்டும் என்று உலகத்துக்கு விதி இல்லை. உலகமும், விலங்குகளும் தாவரங்களும், மனிதர்களும் நமது அறிவியல் விதிகளைப் பற்றி தெரிந்து கொள்ளாமலேயே வளர்ந்து கொண்டிருக்கின்றன.

நமது அப்போதைய விதிகளுக்குள் கட்டுப்படாத ஒரு சோதனை அளவீடை சந்திக்கும் போது, பல விஞ்ஞானிகள் அதை ஏதோ பரிசோதனை முறையில் தவறு என்று ஒதுக்கி விடலாம் (அப்படியும் பல தவறான அளவீடுகள் கிடைக்கின்றன). மீண்டும் ஒரு முறை பரிசோதனையை கவனமாக செய்து பார்க்கிறார் அந்த விஞ்ஞானி, மீண்டும் அதே அளவீடு. அந்த அளவீட்டை அப்போதைய அறிவியல் கோட்பாடு சட்டகத்தினுள் விளக்க  முடியவில்லை. மீண்டும் ஒரு முறை பரிசோதனையை தவறு ஏற்படக் கூடிய சாத்தியங்களை எல்லாம் விலக்கி விட்டு பரிசோதிக்கிறார். அப்போதும் அதே அளவீடு. இப்போதுதான் அதை கவனமாக பதிவு செய்து ஒரு அறிவியல் அறிக்கையாக வெளியிடுகிறார்.

முதலில் அதைப் படிப்பவர்கள் நம்பிக்கையற்று எதிர்வினை ஆற்றுகிறார்கள். அவர்களில் சிலர் இப்போது நிலவி வரும் நம்பிக்கைக்கு மாற்றான அந்த முடிவுகளை உடைத்துக் காட்ட அல்லது உறுதி செய்ய தாமும் அறிக்கையில் கொடுத்துள்ள பரிசோதனை முறையைப் பின்பற்றி செய்து பார்க்கிறார்கள். அவர்களுக்கு அதே அளவீடு கிடைக்கலாம் (அல்லது அப்போதைய சட்டகத்துக்குட்பட்ட அளவீடு கிடைக்கலாம்). அதே புதிய அளவீடு கிடைத்தால், அவர்களும் தமது சோதனைகளை வெளியிடுவார்கள்.

இப்போதுதான் உலகம் புதிய அறிவியல் கோட்பாட்டை நோக்கி நகரத் தொடங்குகிறது. இப்படி உண்மையிலிருந்து நமது நம்பிக்கைகளை சட்டகங்களை தொடர்ந்து பரிசோதித்து மாற்றிக் கொள்ள அல்லது தேவைப்பட்டால் முற்றிலும் உடைத்துக் கொள்ள தயாராக இருக்க வேண்டும். ஏனென்றால் the world refuses to be classified உலகம் வகைப்படுத்தப்படுவதற்கு உட்படுவதில்லை.

ஒத்துப் போதலும் நிராகரிப்பும்

'நம்முடைய வகைப்படுத்தல்கள் அனைத்தையும் நிராகரிக்க வேண்டுமா' என்பது அடுத்த கேள்வி.

மனித குலத்தின் அறிவுகளை வகைப்படுத்தல் மூலம் இயற்கையில் நடப்பவற்றை முன்கணிக்கவும் அவற்றைப் பயன்படுத்தி புதிய கண்டுபிடிப்புகளை செய்யவும், அல்லது அவற்றை மாற்றி அமைக்க ஏற்பாடுகள் செய்வதும் சாத்தியமாகிறது. உலகத்தில் நடந்த அனைத்து நிகழ்வுகளையும், நடக்கப் போகும் அனைத்து நிகழ்வுகளையும் விளக்கும் படியான முழுமையான சட்டகம் என்றும் ஏற்பட்டு விடப் போவதில்லை. குறிப்பிட்ட கால கட்டத்தில் நமக்குத் தெரிந்த தகவல்களின் அடிப்படையில் உருவாக்கப்படும் அறிவியலின் அடிப்படையில் வாழ்க்கையை வளர்த்துக் கொள்ள முடிகிறது. ஆராய்ச்சி செய்து இந்த சட்டகத்துக்கு மாறான முடிவுகளை தேடும் விஞ்ஞானிகளைத் தவிர மற்ற அனைவரும் அந்த சட்டகங்களின் விதிகளை ஏற்றுக்  கொண்டு செயல்படுகிறார்கள். அதுதான் சாத்தியமான நடைமுறை.

நாம் கண்டது, கேட்டது, உணர்ந்தது இவற்றின் அடிப்படையில்தான் நமது அறிவு உருவாகிறது. நாம் கண்டது, கேட்டது, உணர்ந்தது இவற்றை தனித்தனியாக நினைவில் வைத்திருக்காமல் ஒரு சட்டகத்துக்குள் அமைத்துக் கொள்வதன் மூலம் பகுத்தறிவும் புதிய கண்டுபிடிப்புகளும் சாத்தியமாகின்றன.

அத்தகைய சட்டகங்களுக்குள் பொருந்தாத அனுபவங்களை விளக்க சட்டகத்தை மாற்றி விரிவுபடுத்த அல்லது புதிய சட்டகத்தை உருவாக்க அந்த பணியில் ஈடுபட்டிருக்கும் மிகச் சிலர் வேலை செய்கிறார்கள்.
புதிய சட்டகம் பழைய நிகழ்வுகளுக்கான விளக்கத்தையும் உள்ளடக்கியிருப்பதோடு, பழைய சட்டகத்தை விட மேம்பட்ட நிலையில் இருக்கிறது.  அந்த மேம்பட்ட சட்டகத்தின் அடிப்படையில் நாம் மேம்பட்ட வாழ்க்கையை நடத்துகிறோம்.

வாழ்க்கை போராட்டங்கள்

1. மனிதர்கள் சந்திக்கும் அடிப்படையான சவால், இயற்கையுடனான போராட்டம். இயற்கையில் கிடைக்கும் பொருட்களை பொருத்தமாக பயன்படுத்துவது, இயற்கை சக்திகளை எதிர் கொள்வது இவற்றுக்கான போராட்டம்தான் அறிவியல்.

2. வேலைப் பிரிவினை செய்து கொண்ட பிறகு அதனால் ஏற்படும் சமூக உறவுகளிடையே ஏற்படும் போராட்டம் இன்னொரு போராட்டம், முழுக்க முழுக்க மனிதரால் உருவாக்கப்பட்டது. மனித சமூகமும் அப்போதைய நடைமுறையைப் பின்பற்றி பல பிரிவுகளான சட்டகமாக புரிந்து கொள்ளப்படுகிறது. மதங்கள், மொழிக் குழுக்கள், தேசங்கள், 20ம் நூற்றாண்டின் நாடுகள் என்று ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொரு சட்டகம் ஏற்படுத்தப்பட்டு அதற்குள் செயல்படுகிறோம்.

3. மூன்றாவதாக ஒவ்வொருவரும் சந்திக்கும் போராட்டம் தனக்கும் சமூகத்துக்கும் இடையிலான உறவைப் பற்றியது. 'நாம் எப்படி சமூகத்தைப் புரிந்து கொண்டிருக்கிறோம். சமூகத்தில் நமது பாத்திரம் என்ன' இந்த அடிப்படையில்தான் நாம் செயல்படுகிறோம். குடும்பம், சாதிக் குழு, இனக்குழு, மொழிக் குழு, தேசம், நாடு என்று ஒவ்வொரு படிநிலையாக நமது இடத்தை பொருத்திக் கொண்டிருக்கிறோம். இந்த படிநிலைகள் மனிதரால் அப்போதைய தேவைக்கு உருவாக்கப்பட்டவை என்பதை நாம் புரிந்து கொள்ளத் தேவையில்லை, புரிந்து கொள்வதுமில்லை. நமக்குக் கொடுக்கப்பட்ட சட்டகத்துக்குள் வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறோம்.

மாறும் வழிமுறை

அறிவியலில் ஏற்படும்  மாற்றங்களைப் போல சமூக உறவுகளிலும் மாற்றம் ஏற்படுகிறது. மனித அறிவு வளர வளர, புதிய புதிய தகவல்கள் தெரிய வர, ஏற்கனவே இருந்த சட்டகத்தை மறுபரிசீலனை செய்து மாற்றி அமைப்பதற்கான அல்லது உடைத்து புதிய சட்டகத்தை உருவாக்குதவற்கான தேவையும் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏற்படும்.

அறிவியலில் பின்பற்றுவது போல, ஒருவர்  சொன்னதாலேயே அறிவியல் கோட்பாடு உருவாகி விடாது. அவர் சொல்வதை சக விஞ்ஞானிகள் பரிசோதனை செய்து உறுதி செய்ய வேண்டும். அது வரை தெரிந்த உண்மைகளையும் இனிமேல் பரிசோதனைகளில் செய்யும் அளவீடுகளையும் விளக்க வேண்டும். பரிசோதனையில் என்ன அளவீடு கிடைக்கும் என்று கணிக்க வேண்டும். இப்படி பல ஆண்டுகள் பரிசோதனைகளுக்குப் பிறகுதான் அறிவியல் சட்டகம் மாறுகிறது அல்லது உடைக்கப்படுகிறது.

அதே போல, இன்றைக்கு இருக்கும் அறிவியல் விதிகள்தான் இறுதியானவை. இனிமேல் புதிதாக கண்டுபிடிக்க எதுவுமில்லை. எல்லோரும் அப்படியே சொன்னதை செய்து கொண்டு வாழ்ந்தால் சொர்க்கம்தான் என்று அறிவியல் சொல்வதில்லை, சொல்லவும் முடியாது.

சமூக அமைப்புகளிலும் இது பொருந்துகிறது. சமூகத்தின் செயல்பாட்டுக்கு குறிப்பிட்ட சட்டகங்கள் அவற்றுக்கான விதிகள், அவற்றைப் பின்பற்றுவது அவசிய தேவை. யாரோ ஒரு சோம்பேறியின் மனதில் உதித்த கற்பனை கனவுகளின் அடிப்படையில் மற்றவர்கள் தமது நம்பிக்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதை யாரும் ஏற்றுக் கொள்வதில்லை.

சட்டகத்துக்குள் பொருந்தாத உண்மையை அதே போல ஒருவர் நடைமுறையில் உணர்ந்து, அதை வெளியிட்டு, பலர் அதை நடைமுறையில் பரிசோதனை செய்து பார்த்து உறுதி செய்த பிறகு அந்த புதிய தரவு சட்டகத்துக்குள் பொருந்தும் படி சட்டகம் விரிவுபடுத்தப்பட வேண்டும் அல்லது மாற்றப்பட வேண்டும்.

புதன், பிப்ரவரி 01, 2012

பொருளாதார பாடம் கசப்பது ஏன்?


இப்போதைய வாசிப்பு

இப்போது 3 புத்தகங்கள் வாசிக்கும் மேசையில் இருக்கின்றன.

  • முதலாவது அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் என்ற அ.அனிக்கின் எழுதிய சோவியத் வெளியீடு. 
  • இரண்டாவது A History of Capitalism (1500-2000) என்ற Michael Beud எழுதிய புத்தகம். பிரெஞ்சு பொருளாதார பேராசிரியரான அவர் 1980ல் ஆரம்பித்து 1999 பதிப்பில் நூற்றாண்டின் இறுதி வரைக்குமான வரலாற்றையும் சேர்த்து பிரெஞ்சு மொழியில் பதிப்பித்த புத்தகம். அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு. 
  • மூன்றாவதாக கம்யூனிஸம் என்ற அரவிந்தன் நீலகண்டன் எழுதிய புத்தகம். 

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் என்ற புத்தகம் மனித சமூகத்தில் பொருளாதார சிந்தனைகளின் வரலாற்றை விவரிக்கிறது. அரிஸ்டாட்டில் அரசியல் பொருளாதாரம் பற்றி கொண்டிருந்த கருத்துக்களில் ஆரம்பித்து 16ம் நூற்றாண்டிலிருந்து இங்கிலாந்திலும், பிரான்சிலும், அமெரிக்காவிலும், ஹாலந்திலும் பல்வேறு கால கட்டங்களில் வாழ்ந்த, பொருளாதார கோட்பாடுகளில் கவனம் செலுத்திய அறிஞர்கள் பற்றி விளக்குகிறது.

கேபிடலிசத்தின் வரலாறு என்ற புத்தகம் 18ம் நூற்றாண்டிற்கு முந்தைய நிலப்பிரபுத்துவ பொருளாதாரத்திலிருந்தான வளர்ச்சிகள், 18ம் நூற்றாண்டின் புரட்சிகள், தொழில் மயமான வளர்ச்சி, காலனி ஆட்சி, உலகப் போர்கள், 20ம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் நடந்து நிகழ்வுகள் என்று புள்ளிவிபரங்களுடனும் தகவலுடனும் பேசுகிறது.

அரவிந்தன் நீலகண்டனின் நூல் மார்க்ஸ், எங்கெல்ஸிலிருந்து துவங்குகிறது. மார்க்சியம் அதிலிருந்து உருவாக்கப்பட்ட கம்யூனிசம் என்பது ஒரு வில்லத்தனமான கோட்பாடு என்பதை நிறுவுவது அந்த புத்தகத்தின் நோக்கம். மார்க்ஸ், எங்கெல்ஸ், அதன் பிறகு ரஷ்ய தலைவர்கள், சீனா, கம்போடியா, கியூபா என்று சோசலிச நாடுகளில் நிகழ்ந்த சம்பவங்களை தனது பார்வையில் வண்ணம் அடித்து விளக்குகிறர். கம்யூனிசம் என்பது பஞ்சம், படுகொலை , பேரழிவுக்கு வழி வகுக்கும் என்பது புத்தகத்தின் தலைப்பிலிருந்து கடைசி வரி வரை சொல்லப்படுகிறது.

பொருளாதாரம் வாசிப்பு அனுபவங்கள்

நான் முதலில் பொருளாதாரம் பற்றி படிக்க ஆரம்பித்தது கல்லூரியில். தோல் தொழில்நுட்பம் படித்தாலும், கல்லூரியின் இறுதி ஆண்டில் 7வது பருவத்தில் ஒரு மேலாண்மை பாடமாக பொருளாதாரம் இருந்தது.  அந்த வகுப்பில் நடத்தப்பட்ட பாடங்கள் பிடித்திருந்தன. அதிலிருந்து தேடிப்பிடித்து சில அமெரிக்க பொருளாதார பாடப் புத்தகங்களை எடுத்துக் கொண்டேன். அமெரிக்க தகவல் மையத்தின் நூலகத்தில் உறுப்பினராக இருந்ததால் Economics  என்ற பெயரில் வைக்கப்பட்டிருந்த நான்கைந்து புத்தகங்களை படிக்க முடிந்தது.

டிமாண்ட், சப்ளையிலிருந்து ஆரம்பித்து உற்பத்தி, சந்தைகள், நுகர்வோர், போட்டி, போட்டியின்மை, ஏகபோகம், குடும்பங்களின் வருமானம், தனிநபரின் நிறைவு, உற்பத்தியில் செலவுகள், தேசிய வருமானம், வேலை வாய்ப்பு, வேலை இல்லாத் திண்டாட்டம், வரி விதிப்பு, அரசின் அவசியம், அரசின் பணிகள், உலக வர்த்தகம் என்று எல்லா புத்தகங்களுக்கும் பொதுவான தலைப்புகள் இருந்தன.

இவற்றிற்கெல்லாம் முதன்மையாக இருந்தது பால் சாமுவேல்சன் எழுதிய புத்தகம். அதுதான் பல பல்கலைக் கழங்களில் பாடநூலாக பின்பற்றப்பட்டது. 1980களிலேயே 12வது பதிப்பு வந்து விட்டதாக நினைவு. இப்போது 20வது பதிப்புக்கு அருகில் இருக்கிறது என்று நினைக்கிறேன். பிந்தைய பதிப்புகளில் நார்ட்ஹவுஸ் என்பவருடன் இணைந்து நூலை எழுதி வெளியிட்டார்.

பொருளாதார பாடத்தில் இரண்டு பிரிவுகள் வைத்திருக்கிறார்கள். மைக்ரோ எகனாமிக்ஸ் என்பது தனிநபர், குடும்பங்கள், நிறுவனங்கள் எப்படி செயல்படுகின்றன, எப்படி முடிவுகள் எடுக்கின்றன என்பதைப் பற்றியது, மேக்ரோ எகனாமிக்ஸ் என்பது, நாடுகள், சமூங்கள் எப்படி செயல்படுகின்றன, முடிவுகள் எடுக்கின்றன, பிற நாடுகளுடன் உறவாடுகின்றன என்பதைப் பற்றியது.

மைக்ரோ எகனாமிக்ஸ் கொஞ்சம் விறைப்பாக செயற்கையாக இருப்பதாகத் தோன்றும். மேக்ரோ எகனாமிக்ஸ் படிப்பதற்கு சுவாரஸ்யமாகவும் கவர்ச்சியாகவும் இருக்கும். ஆனால் நமது வாழ்க்கைக்கு மைக்ரோ எகனாமிக்ஸ்தானே தேவையானது என்று நினைத்துக் கொள்வேன். அதுதான் நாம் எப்படி முடிவு எடுக்கிறோம், எப்படி பொருட்களை நுகர்கிறோம், எப்படி சம்பாதிக்கிறோம், எப்படி பேரம் பேசுகிறோம் என்பதை விளக்குகிறது.

பொருளாதார பாடப்புத்தகங்களை தவிர 20ம் நூற்றாண்டின் மேற்கத்திய பொருளாதார அறிஞர்கள் எழுதிய பொதுவான புத்தகங்களையும் படித்தேன். குறிப்பாக கேல்பிரித் என்பவர் எழுதிய affluent society முதலான புத்தகங்கள். ஆல்வின் டோப்ளர் எழுதிய future shockIn search of excellence என்ற ஆய்வு நூல். முந்தையதில் தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியால் மனித வாழ்க்கை எப்படி மாறும் என்று பக்கம் பக்கமாக விளக்கியிருப்பார். இரண்டாவது நூலில் அமெரிக்காவின் தலை சிறந்த நிறுவனங்கள் எப்படி தரத்தையும், வாடிக்கையாளர் சேவையையும் சாதிக்கின்றன என்று பல நிறுவனங்களை ஆய்வு செய்த நூல். Small is beautiful என்ற நூல் சூமாகர் எழுதியது. 20ம் நூற்றாண்டின் பெரும் நிறுவனங்கள், பெருமளவிலான உற்பத்தி என்பது மாறி சிறு அளவிலான உற்பத்தியாக உருமாறும் என்பது அவரது கோட்பாடு.

கல்லூரியில் படித்த மற்ற எந்த பாடத்தையும் விட இந்த பொருளாதாரம் தொடர்பான வாசிப்பு மிகவும் பொருள் பொதிந்ததாக தோன்றியது.

நடைமுறை பொருளாதார வாசிப்பு

கல்லூரி முடித்து வேலைக்குச் சேர்ந்த பிறகும் இத்தகைய புத்தகங்களை படிப்பதை தொடர்ந்தேன். கையில் காசு கிடைத்ததால் சாமுவேல்சனின் எகனாமிக்ஸ் புத்தகம் வாங்கிக் கொண்டேன். இந்தூரின் நடைபாதைக் கடைகளில் வாங்கி குவித்தவை தனி. அந்தக் கட்டத்தில் சுமார் 1994 வாக்கில் தினமும் எகனாமிக் டைம்ஸ் நாளிதழை படிக்க ஆரம்பித்தேன். மன்மோகன் சிங்/நரசிம்ம ராவ் சந்தைப் பொருளாதாரத்தை அவிழ்த்து விட்டு தனியார் மயம், தாராள மயம், உலக மயம் என்ற கோட்பாடுகளை நடைமுறைப்படுத்திக் கொண்டிருந்த கால கட்டம். சுமார் 2 ஆண்டுகள் அந்த நாளிதழை படித்துக் கொண்டிருந்தேன்.

எகனாமிக் டைம்ஸ் இந்தூருக்கு பம்பாயிலிருந்து வரும். மாலையில்தான் வீட்டுக்குக் கொண்டு போடுவார்கள். அடுத்த நாள் காலையில் தொழிற்சாலைக்குப் போகும் பேருந்து பயணத்தில் அதைப் படித்துக் கொண்டிருப்பேன். அடுத்த 15 ஆண்டுகளில் டைம்ஸ் ஆப் இந்தியாவும், எகனாமிக் டைம்சும் குப்பை பத்திரிகைகளாக மாறுவதற்கு முந்தைய கட்டம். இந்திய பொருளாதாரம், வணிக நிறுவனங்கள், அரசு கொள்கைகள், பங்குச் சந்தை, விலை வாசி என்று பொருளாதாரம் சார்ந்த விபரங்களை அதில் படிக்க முடிந்தது.

படிப்பதற்கு எளிதாக இருக்க வேண்டும் என்று பொருத்தமில்லாத தலைப்புகள், கவர்ச்சியான புகைப்படங்கள் போன்றவை செய்திகளுக்கு துணையாக அணிவகுக்க ஆரம்பித்திராத காலகட்டம் அது.

இந்த நாளிதழிலும் மைக்ரோ எகனாமிக்ஸ் குறைந்த அளவிலேயே வந்தது. முதலீட்டு ஆலோசனைகள், வரி விதிப்பு தொடர்பான கேள்வி பதில் என்று ஓரிரு பக்கங்களோடு அது நின்று விட்டிருந்தது. எந்த ஒரு செய்தி அலசலையும் எடுத்துக் கொண்டாலும் அதில் நாட்டின் அரசியல், ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சி. உலக பொருளாதார நிலைமை இவை மூன்றுமே தலை காட்டி விடும்.

டாடா ஸ்டீல் பற்றி அலசல் இருந்தால் அதில் இந்த மூன்று முக்கிய காரணிகளையும் பற்றி பேசியிருப்பார்கள். நிறுவனத்தின் தொழிலாளர் கொள்கை, மொத்த வருமானம், லாபம், எதிர் கால திட்டங்கள் இவற்றின் பின்னணியிலேயே பேசப்பட முடியும்.

மைக்ரோ எகனாமிக்ஸ் என்பது செயற்கையானது என்று தோன்றினாலும், நமக்கென்ன தெரியும், மெத்தப்படித்த பொருளாதார ஆசிரியர்கள் அப்படிப் பிரித்து விளக்கினால் ஏதாவது பொருள் இருக்கத்தான் செய்யும் என்று அதை மனதுக்குள்ளேயே அழுத்திக் கொள்வேன். மேல்நிலைப் பள்ளி வகுப்புகளில் அல்லது இளங்களை பொருளாதார வகுப்புகளில் மார்ஷல் என்ற இங்கிலாந்து பேராசிரியர் எழுதிய மைக்ரோ எகனாமிக்ஸ் பாட புத்தகங்கள்தான் முதன்மையாக போதிக்கப்படுகின்றன என்று பிற்பாடு கேள்விப்பட்டேன். எகனாமிக்ஸ் படிக்க யாரும் ஆர்வமாக முன் வராதது புரிந்தது போல இருந்தது.

2006ல் வலைப்பதிவுகள் அறிமுகம் ஆன பிறகு சாமுவேல்சனின் புத்தகத்தில் தரப்படுள்ள கோட்பாடுகளை சிறு சிறு பதிவுகளாக எழுதலாம் என்று முயற்சித்து கிட்டத்தட்ட எல்லா தலைப்புகளையும் எழுதினேன். அப்போது எகனாமிக் டைம்ஸ் படிக்க முடியாதபடி (எனக்கு) ஆகி விட்டிருந்தது.

பொருளாதார வரலாற்று நாயகர்கள்

சாமுவேல்சனின் எகனாமிக்ஸ் புத்தகத்தில் பொருளாதாரவியலின் வரலாறுஆதம் ஸ்மித்திடமிருந்து ஆரம்பிக்கும். அவர்தான் நவீன பொருளாதாரவியலின் தந்தை. நாடுகளின் செல்வத்துக்கு காரணங்களைப் பற்றிய ஆய்வு என்ற நூலை எழுதியவர்.

அடுத்ததாக டேவிட் ரிக்கார்டோ என்பவர்.

மூன்றாவதாக காரல் மார்க்சின் மூலதனம் என்ற ஆய்வு நூல், அதன் விளைவுகள்.

1930களில் கீன்ஸ் என்ற இங்கிலாந்து பிரபு எழுதிய நாட்டின் வேலை வாய்ப்பு, வளர்ச்சி பற்றிய புத்தகம்.

1960களில் மில்டன் பிரீட்மேன், கால்பிரித் போன்றவர்களுடன் முடியும்.

முந்தைய பதிப்புகளில் காரல் மார்க்சுக்கு நான்கைந்து பக்கங்கள் ஒதுக்கி அவர் கணித்த முதலாளித்துவத்தின் வீழ்ச்சிக்கான காரணங்கள், அது எப்படி தவிர்க்கப்பட்டு வருகிறது என்று விளக்கியிருப்பார்கள். சமீபத்திய பதிப்புகளில் அது ஒரு பெட்டிக் குறிப்பு அளவுக்குச் சுருங்கியிருந்தது.

பொருளாதாரவியலில் முரண்நிலைகள்

பொருளாதார துறையில் அரிஸ்டாடில் காலத்திலிருந்தே எதிரெதிர் கோட்பாட்டு முகாம்கள் செயல்பட்டே வந்திருக்கின்றன. ஆதம் ஸ்மித், கீன்ஸ், பிரீட்மேன் போன்றவர்கள் ஒரு முகாம் என்று வைத்துக் கொண்டால் ரிகார்டோ, மார்க்ஸ், கேல்பிரித் போன்றவர்களை எதிர் முகாமில் இருப்பதாக வைத்துக் கொள்ளலாம். அந்த கோட்பாட்டு முரண்பாடுகளைப் பற்றி அந்த பாடப் புத்தகங்கள் பேசுவதில்லை.

தண்ணீர்

சாமுவேல்சனின் புத்தகத்தில் ஒரு முக்கியமான கேள்வி.

'பொருளின் விலை அதன் பயன்பாட்டைப் பொறுத்து நிர்ணயிக்கப்படுகிறது' என்பது ஒரு கோட்பாடு. 'அப்படியென்றால் மிகவும் பலனளிக்கும் தண்ணீரின் விலை குறைவாகவும், பயன் மதிப்பு இல்லாத வைரத்தின் விலை மிக அதிகமாகவும் இருப்பதன் காரணம் என்ன?' என்பது கேள்வி.

அதாவது புத்தகம் சொல்லித் தரும் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டால் முரண்பாடு காட்டும் கேள்வி. வைரத்துக்கும் தண்ணீருக்கும் இடையிலான முரண்பாடு பெரிதாக வெளிப்படையாக தெரிந்தாலும் இதை மாதிரி மற்ற பொருட்களிலும் இதே முரண்பாடுகள் இருக்கின்றன.

அதை விளக்க இன்னொரு கோட்பாடு வரும். 'பொருளின் விலை பயன்பாட்டைப் பொறுத்து அல்ல, கடைசி அலகின் கூடுதல் பயன்பாட்டைப் பொறுத்தது (marginal utility)' என்பதுதான் அந்த கேள்விக்கு பதில்.

ஒரு பொருளாதார மனிதனுக்கு முதல் 1 லிட்டர் தண்ணீரின் பயன்பாடு வைரத்தை விட உயர்ந்தது. தண்ணீரே கிடைக்கா விட்டால் வைரத்தைக் கூட கொடுத்து குடிப்பதற்கு 1 லிட்டர் தண்ணீர் வாங்கத் தயாராக இருப்பார். அடுத்தடுத்து 1000 லிட்டர், 10000 லிட்டர் தண்ணீர் கிடைக்கும் போது அதன் பயன்பாடு குறைந்து கொண்டே வருகிறது, ஒரு உணவுப் பொருளை அதிகமாக சாப்பிடச் சாப்பிட திகட்டுவதைப் போல. வைரத்தின் உயர்ந்த விலைக்குக் காரணம் அது குறைவாக கிடைப்பது, அதனால் இறுதி அலகின் பயன்பாடு அதிகம். தண்ணீரின் அதிக விலைக்கு காரணம் அது அதிகமாக கிடைப்பது.

இது பாடப் புத்தகம் நிறைய கேள்வி எல்லாம் கேட்கக் கூடாது என்று படித்து விட்டு நகர்ந்து விடுவோம். அதை நம்பி நடந்து கொள்ள வேண்டும்.

இந்த அலசலில் மிகப்பெரிய ஓட்டை இது கேள்வியை அதற்கு தொடர்புள்ள முக்கியமான பகுதியை விட்டு விட்டு பரிசீலிக்கிறது என்பதே. தண்ணீர் அதிகமாக கிடைப்பதற்கு காரணம் என்ன? வைரம் குறைவாக கிடைப்பதற்கு காரணம் என்ன? ஒரு பொருள் கிடைப்பதை நிர்ணயிப்பது எது?


இந்த கேள்விக்குள் எங்கு வருவோம் என்றால், தொழிற்சாலையின் உற்பத்தி செலவுகள் பற்றி பேசும் போது. ஒரு தொழிலாளர் அல்லது இயந்திரத்தை பயன்படுத்துவது என்பது அதை பயன்படுத்துவதன் மூலம் கிடைக்கும் இறுதி கூடுதல் அலகைப் பொறுத்தது என்று இன்னும் ஒரு சிக்கலான கோட்பாட்டை அறிமுகம் செய்வார்கள். அதனால்தான் மைக்ரோ எகனாமிக்ஸ் வறட்சியாக பட்டது என்று நினைக்கிறேன்.


நேர்மையை விட்டுக் கொடுக்க வேண்டிய தருணம்

ஒருவருக்கு வயிற்று வலி என்றால் அதற்கு பல காரணங்கள்  இருக்கலாம். உச்சி முதல் உள்ளங்கால் வரையில் எல்லா உறுப்புகளுக்கும் அதில் பங்கு அல்லது அதன் விளைவில் பங்கு உண்டு. வயிற்று வலி காரணமாக சரியாக சாப்பிடா விட்டால் உடம்பில் எந்த உறுப்புக்கும் சக்தி கிடைக்காத நிலை ஏற்படும். இதை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் யாராவது வயிற்று வலியைப் பற்றி பேசவோ, ஆய்வு செய்யவோ, மருந்து கொடுக்கவோ முயற்சிக்கிறார்கள் என்றால் நமக்கு சிரிக்கத் தோன்றும்.

அதே முயற்சிதான் பொருளாதார பாடத்திலும் கடந்த 200 ஆண்டுகளாக வெற்றிகரமாக செய்து கொண்டிருக்கிறார்கள். பொருளாதார பாடத்திலிருந்து விரிவடைந்து முழு பொருளாதாரத்துக்கும் உலக சமூகத்துக்கும் அப்படித்தான் சிந்திக்க கற்றுக் கொடுக்கிறார்கள். ஆதம் ஸ்மித்தின் பொருளாதார மனிதனின் சுயநலத்தில் ஆரம்பித்து, கீன்ஸின் முழு வேலை வாய்ப்புடனான சமூகத்தை உருவாக்க அரசின் பங்கு என்பது வரை முழுமையை புறக்கணித்து விட்டு பகுதிக்கு மட்டும் களிம்பு போடும் வேலையை செய்கிறார்கள்.

ஏன் அப்படி செய்ய வேண்டும்? அப்படி செய்பவர்கள் எல்லாம் அயோக்கியர்களா? அல்லது முட்டாள்களா?

சார்புக் கொள்கையை உருவாக்கிய 20ம் நூற்றாண்டின் தலைசிறந்த விஞ்ஞானி ஐன்ஸ்டைனுக்கு குவாண்டம் அறிவியலை ஏற்றுக் கொள்வதில் மறுப்பு இருந்தது. 'கடவுள் பகடையாடுவதில்லை' என்று சொல்லி அதை நிராகரித்தார். குவாண்டம் கோட்பாடுகளின்படி ஒரு துகளின் இடம் அல்லது வேகம் இரண்டையும் முற்றிலும் துல்லியமாக தீர்மானிக்க முடியாது. அது கடவுளால் கூட முடியாது என்பது அதன் நீட்சி. கடவுளை நம்பும் ஐன்ஸ்டைனால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதனால் குவாண்டம் அறிவியலுக்குள் அவர் வேலை செய்யவில்லை.

இயற்கை அறிவியலிலேயே அறிவியலாளர்களுக்கு இப்படிப்பட்ட தாக்கங்கள் இருக்கும் போது சமூக அறிவியலான பொருளாதாரவியலில் இந்த தாக்கம் இரண்டற கலந்து இருந்தது.

அறிவியல் அணுகுமுறை தரும் முடிவுகள்

பொருளாதாரத்தை முழுமையாக ஆராய்ந்து, பொருளின் விலையின் இரண்டு பக்கத்தையும் ஆய்வு செய்து பார்க்கும் போது கிடைக்கும் முடிவுகள் அதிர்ச்சி தரும்படி இருந்தன. ரிக்கார்டோதான் பொருளின் மதிப்பு பற்றிய கோட்பாட்டை முதலில் ஆராய்ச்சி செய்து முழுமையாக வெளிப்படுத்தியவர். அதன் விளைவுகளை விளக்கிச் சொல்ல அவரது வளர்ப்பும் சூழ்நிலையும் வழி தரவில்லை. அவர் காலத்திய மற்ற அறிஞர்கள் அவரை நிராகரிப்பதில் சுறுசுறுப்பாக இருந்தார்கள்.

காரல் மார்க்ஸ் அந்த விளைவுகளை அவற்றின் இயல்பான இறுதி நிலை வரை விளக்கி மூலதனம் எழுதினார். அதற்கான நேர்மையான பதில் இன்று வரை முதலாளித்துவ பொருளாதாரவியலில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

மேக்ரோ, மைக்ரோ எகனாமிக்ஸ், இறுதி அலகின் கூடுதல் பயன்பாடு,  என்று செயற்கையாக கோட்பாடுகளை உருவாக்கி மழுப்ப வேண்டியிருக்கிறது. அந்த கோட்பாடுகள் தலை சிறந்த அறிஞர்களால் வளர்த்து நிறுவப்பட்டு சமூகத்தில் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

விளைவுகளை நான் காலனி படையெடுப்புகளாக, உலகப் போர்களாக, கொரியா, வியட்நாம், ஈராக், ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்புகளாக, போபால் விபத்தாக, முல்லைப் பெரியாறு பிரச்சனையாக, 2G ஊழலாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். அவை ஒவ்வொன்றுக்கும் தீர்வுகள் சொல்கிறார்கள். காரணங்கள் கண்டுபிடிக்கிறார்கள். இஸ்லாமிய ஜிகாத், நாடு பிடிக்கும் ஆசை, இன வெறி, சர்வாதிகாரி என்று பல காரணங்கள் பல வழிகளில் சொல்லப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. ஆனால் எந்த பிரச்சனையும் இது வரை தீர்ந்ததாக வரலாறு இல்லை. பிரச்சனைகள் மறக்கப்பட்டு விடுகின்றன, அல்லது அடுத்து வரும் இன்னொரு பிரச்சனையால் மறைக்கப்பட்டு விடுகின்றன.

பொருளின் மதிப்பு

பொருளின் விலை அல்லது மதிப்பு குறித்த கேள்விதான் இதற்கு அடிப்படை. பொருளின் விலை அல்லது மதிப்பை தீர்மானிப்பது எது?

பொருளின் விலை அல்லது மதிப்பை தீர்மானிப்பது, 'பொருளை உருவாக்க செய்யப்படும் வேலையின் அளவு'. வைரத்தை தோண்டி எடுத்து பட்டை தீட்டி கடைக்கு கொண்டு வந்து விற்க நிறைய வேலை தேவைப்படுகிறது. அதனால் அதன் விலை அதிகம். தண்ணீர் வீட்டிலிருந்து வெளியில் போய் ஏரிக் கரைக்குப் போனால் கிடைக்கிறது, அதனால் அதன் விலை குறைவு.

இங்கு இரண்டாவதாக புரிந்து கொள்வதற்கு சிரமமான கடைசி அலகின் கூடுதல் மதிப்பு என்ற கோட்பாடு தேவையே இல்லை. ஒரு பொருள் எவ்வளவு பயன் மதிப்பு உடையதாக இருந்தாலும் அதன் உற்பத்தி உழைப்புதான் அதன் விலையை தீர்மானிக்கிறது. பயன் மதிப்பு இல்லாத பொருளுக்கு அதிகமான உழைப்பு தேவைப்பட்டாலும் விலை அந்த அளவு கிடைக்காமல் போய் விடலாம். உதாரணமாக ஒருவர் பல நாட்கள் உழைத்து ஒரு ஓவியம் வரைகிறார், யாரும் அதை வாங்க முன்வரவில்லை (பயன் மதிப்பு இல்லை) என்றால் அதற்கு விலை இல்லை, அல்லது விலை வாங்குபவர்களுக்கு கிடைக்கும் பயன் மதிப்பினால்தான் தீர்மானிக்கப்படுகிறது. ஆனால், அடிப்படை உற்பத்தி செலவுதான் என்பதை கவனிக்க வேண்டும். அந்த உற்பத்தி செலவுக்கு ஏற்ற விலை கிடைக்காவிட்டால் அதன் உற்பத்தி நின்று விடும்.

பயன் மதிப்பு அடிப்படையிலான பொருளாதாரக் கோட்பாடு செயற்கையானது. அதை தாங்கிப் பிடிக்க செயற்கையான பல நடவடிக்கைகள் தேவை, கீன்சின் முழு வேலை பொருளாதார கோட்பாட்டிலிருந்து பிரீட்மேனின் பணக் கொள்கை வரை பல வழியில் அதைத் தாங்கிப் பிடிக்க வேண்டியிருக்கிறது.

செவ்வாய், ஜனவரி 31, 2012

தட்டச்சும் திறன்


10ம் வகுப்பு முடிந்த கோடை விடுமுறையின் போது ஆங்கிலத் தட்டச்சு கற்றுக் கொள்ளப் போனோம். வீட்டிலிருந்து சுமார் 4 கிலோமீட்டர்கள் போய் நகரத்தின் மையத்தில் இருக்கும் தட்டச்சு பயிற்றுப் பள்ளியில் படிக்க வேண்டும். asdf lkjh என்று அடிப்பதுதான் முதல் பாடம். இதை ஒரு பக்கம் முழுவதும் அடிக்க வேண்டும். இரண்டு எழுத்து வரிசைகளுக்கும் இடையே இடைவெளி, ஒரு வரி முடிந்த உடன் அடுத்த வரிக்குப் போகும் திருப்பு விசையை அழுத்துவது போன்றவற்றை சரியாக கற்றுக் கொள்ள வேண்டியிருந்தது.

முதல் நாள் அடித்த தாளைப் பார்த்த நிலையத்தின் உரிமையாளர், 'இது என்ன கோழி பீ கிண்டி வைத்தது போல இருக்கிறது' என்று கமென்ட் அடித்தார். புதிதாக வருபவர்களிடம் அவர் அடிக்கும் வாடிக்கையான கமென்ட் என்று இப்போது தெரிந்தாலும், அந்த தாளில் எழுத்துக்கள் அப்படித்தான் கோழி கிண்டி வைத்த பீ போல சிதறியிருந்தன.

அந்த ஒழுங்கு கை வந்த பிறகு அடுத்தடுத்த எழுத்து வரிசைகள், எழுத்துக்களின் மொழி ரீதியான சேர்க்கைகள் என்று பயிற்சி. ஒரு கட்டத்தில் abcdef என்று அடிப்பது ஆரம்பித்தது. மேல் வரிசை ஆங்கில எழுத்துக்களை அடிக்க இடது அல்லது வலது புறம் இருக்கும் ஒரு விசையை அழுத்திக் கொண்டு எழுத்தை அழுத்த வேண்டும். தொடர்ந்து மேல் வரிசை எழுத்துக்களை அடிக்க அதே விசையை அழுத்தி இடது புறமாக தள்ளி பூட்டி விட முடியும். அனைத்துமே இயந்திரவியல் அடிப்படையில் உருவான கருவி.

எழுத்துக்களின் இடம், விரல் பயன்பாடு மனதில் பதிந்த பிறகு முதலில் ஆரம்பித்த மெஷினிலிருந்து மாறி இன்னொரு மெஷினில் பழக ஆரம்பித்தோம். முதல் மெசின் பழசாகி விட்ட இது போன்று கத்துக்குட்டிகள் பழக்கமில்லாத விரல்களால் அழுத்தி அழுத்தி விசைகள் கெட்டித்துப் போயிருப்பது. இந்த மெஷின் பழக்கப்பட்டவர்கள் தேர்ச்சியுடன் பயன்படுத்தியது.

சிறு சிறு உரைகள் அடிக்க ஆரம்பித்தோம். அதிலிருந்து வளர்ந்து கடிதம் எழுதுதல் வரை வந்தது. கிட்டத்தட்ட ஒன்றரை வருட பயிற்சிக்குப் கீழ்நிலை தேர்வுக்குப் போகச் சொன்னார்கள். எஸ்எல்பி பள்ளியில் ஒரு கூடத்தில் தேர்வு. காலையில் முதலில் வேகத்துக்கான தேர்வு. குறிப்பிட்ட பத்தியை வேகமாக குறிப்பிட்ட நேரத்துக்குள் முடிக்க வேண்டும். கூடவே தேர்வு எழுத வந்திருந்த அண்ணன், நேரம் ஆரம்பித்த உடன் ஏற்படும் பெரு ஓசையைக் கண்டு திகைத்து விடக் கூடாது என்று எச்சரித்திருந்தான். அந்த எச்சரிக்கைக்குப் பிறகும் வந்த சத்தம் அது வரை கற்பனை செய்திருக்காததாக இருந்தது.

நான் பழகிக் கொண்டிருந்த எந்திரத்தில் ஒரு விசை சிக்குவதாக இருந்தது. பழகும் போது அதை பெரிய குறையாக புகாராக சொல்லவில்லை. தேர்வில் அந்த சிக்கிய எழுத்தில்தான் நிறைய தவறுகள் ஏற்பட்டிருக்க வேண்டும். அதை வெளியில் வந்து சொன்ன பிறகு யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. அதன் பிறகு மேல்நிலை தேர்வுக்குப் படித்ததாக நினைவில்லை. கீழ்நிலை அல்லது லோயர் தேர்வில் நிமிடத்துக்கு 30 சொற்கள் என்ற வேகத்தில் அடிக்கும் தேர்ச்சி என்று சான்றிதழ் கிடைக்கும். மேல்நிலை தேர்வு எழுதினால் 45 சொற்கள் அடிக்கும் தேர்ச்சி வந்திருக்க வேண்டும்.

இது ஆங்கிலத்தில், எந்திரத் தட்டச்சுக் கருவியில். ஆங்கிலத்தில் கணினியில் இதை விட கணிசமான அளவு அதிக வேகத்தில் அடித்திருக்க முடியும். அப்படி கணிசமான அளவு அடிக்க வேண்டிய வாய்ப்பு கணினியில் ஏற்படவே இல்லை. அலுவலகத்தில் சிறு சிறு கடிதங்கள், பெரும்பாலும் ஒரு பக்கத்துக்குள் அடங்கி விடக் கூடியவை அடிக்க வேண்டியிருந்தது.

டாடாவில் வேலைக்குச் சேர்ந்த பிறகு அங்கு விற்பனைப் பிரிவில் இருந்த கணினியில் இந்த கடிதங்கள் அடிக்கும் வேலை கூட எனக்குக் கிடைக்கவில்லை. நிறுவன மென்பொருளுக்கான சர்வருக்கான முனையத்தில் தரவு உள்ளிடும் சிறு சிறு வேலைகள் செய்தேன். லோட்டஸ் 1,2,3 பயன்பாட்டைப் பயன்படுத்தவும் செய்தேன்.

கடிதங்கள் அடிப்பதற்கு முன்னாள் தட்டச்சு எழுத்தர் பெண்மணி இருந்தார். வேகமாக தரவு உள்ளிடுவதற்கு கணினி துறையிலேயே ஓரிருவர் இருந்தார்கள். விற்பனைக்குப் பொதிந்து தயாராகும் தோல்களைப் பற்றிய  அளவைகளை உள்ளிடும் போது அவர்கள் விரல்கள் நம்புவதற்கு அரிதான வேகத்தில் நடனமாடி முடித்து விடும். அவர்கள் நியூமரிக் பேட் எனப்பட்ட எண் பட்டியை மட்டும் பயன்படுத்துவார்கள். அவர்களை ஒரு கடிதம் எழுதச் சொன்னால் தட்டுத் தடுமாறிதான் எழுதுவார்கள் என்று நினைக்கிறேன்.

அடுத்த தலைமுறை கணினியாக விண்டோசு 95 போட்டு ஒரு கணினி வந்தது. ஐஎஸ்ஓ 9000 சான்றிதழ் பெறுவதற்கான பணிகளில் பிரிவுக்கான கையேடு தயாரிக்கும் பணி எனக்கு வந்தது. அந்தக் கணினி மிகவும் மெதுவாக இயங்கும். ஒரு பக்கம் அடிப்பதற்கு ஒரு மணி நேரம்  வரை கூட பிடிக்கும். அதற்கு இரண்டு காரணங்கள் இருந்திருக்கலாம். மைக்ரோசாப்டு வேர்டின் பயன்பாட்டைப் புரிந்து கொள்வதற்கு ஆன நேரம் ஒரு பக்கம், விண்டோஸ் 95க்குத் தேவையான நினைவகம், செயலகம் இல்லாததாலும் கணினி தள்ளாடியிருக்கலாம். எப்படியோ, சில நூறு பக்கங்களுக்கு வரும் அந்த மேனுவலை அடித்துத் திருத்தி மாற்றி முடிப்பதற்கு பல இரவுகள் வேலை செய்திருந்தேன். கணினியில் தட்டச்சுவதிலும், கணினி பயன்படுத்துவதிலும் சரளமான வேகம் வந்து விட்டிருந்தது.

இப்போதும் எண் பட்டியில் எண்களை உள்ளிடுவதில் தோல் பொதியும் பிரிவில் இருப்பவருடன் ஒப்பிடும் அளவு கூட தேர்ச்சி வந்ததில்லை.
(அதே போல உற்பத்தி தளத்தில் பல்வேறு இயந்திரங்களை இயக்கிப் பார்ப்பதிலும் ஆர்வம் காட்டியதேயில்லை. மேலாளர்கள் அப்படி தொழிலாளர்களுடன் சேர்ந்து இயக்கிப் பார்க்க ஊக்குவித்துக் கொண்டுதான் இருந்தார்கள். இதற்கு முன்பு அது போன்று இயந்திரங்களை இயக்கித் தேர்ச்சி அடைந்தவர்களைப் பற்றி உயர்வாக பாராட்டியும் சொல்வார்கள்.

எளிதாக இயங்கும் எல்லா வேலைகளையும் என் கைப்பட செய்திருக்கிறேன். வேகமாக நகரும் பட்டியின் கீழ் லாவகமாக தோலை நுழைத்து மெருகூட்டும் பணியில் கடைசி வரை கை வைக்கவில்லை. கொஞ்சம் தவறு செய்தால் கை விரல்கள் நசுங்கி விடும் அபாயம், அப்படி நசுங்கா விட்டாலும் அந்த வேகமாக நகரும் கரத்தைப் பார்க்கும் போதே பயம் ஏற்பட்டு விடும். அதையும் கற்றுக் கொண்டவர்கள் பலர் உண்டு. )

அதன் பிறகு ஷாங்காயில் கணினி வாங்கிய பிறகு நிறைய தட்டச்சி பழகினேன். முரசு அஞ்சல் மூலம் தமிங்கில தட்டச்சு முறையைக் கற்றுக் கொண்டேன். தமிழ் 99 விசைப்பலகைக்கு முன்பே இதைக் கற்றுக் கொண்டதால் என்னை பிற்போக்கு வாதி என்று கருத முடியாது. தமிழ் 99 வந்த பிறகு சுமார் 8 ஆண்டுகள் அதிலேயே பழகியதை வேண்டுமானால் தாமதம் சொல்லலாம். ஆனால், கணினி நுட்பங்களில் புதிய தகுதரங்கள் நடைமுறைக்கு வருவதிலும் கணிசமான நேரம் பிடிக்கத்தான் செய்கின்றன.

தமிழ் 99 விசைப்பலகை முறைக்கு மாற வேண்டும். எழுத்துருக்களுக்கான தகுதரம் தனி, விசைப்பலகைகளுக்கான தகுதரம் தனி. எழுத்துருக்களுக்கு டிஸ்கி, டேப், யூனிகோடு என்று தகுதரங்கள். விசைப்பலகைக்கான தகுதரங்கள் எந்த விசையை அழுத்தினால் எந்த எழுத்து வர வேண்டும் என்று வரையறுப்பவை.

கணினிக்கு முன்பே தமிழ் தட்டச்சு முறைக்கான தகுதரம் ஒன்று இருந்தது. நான் அதைக் கற்றுக் கொண்டதில்லை, அது யளனகப என்று வரும் என்று நினைவு. அதில் பழகியவர்கள் அப்படியே கணினியிலும் பயன்படுத்தும்படி மென்பொருள் பயன்பாடுகள் உருவாக்கப்பட்டன.

அப்படி தமிழ் தட்டச்சு கற்றுக் கொள்ளாமல் ஆனால் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யத் தெரிந்தவர்களுக்காக உருவானதுதான் அஞ்சல் அல்லது phonetic முறை. இதில் தமிங்கில எழுத்துக் கூட்டல் முறையில் தமிழ் எழுத்துக்களை உள்ளிடலாம். ammaa என்று அடித்தால் அம்மா என்று புரிந்து கொள்ளும் விசைப் பலகை தகுதரங்கள் உருவாயின. இவற்றில் சிறு சிறு மாறுதல்களுடன் பல வகைகள் கிடைத்தன.

ந என்ற எழுத்துக்கு எந்த விசை, ண அடிப்பது எப்படி, நெடிலுக்கான முறை, ஒற்றெழுத்துக்களை உள்ளிடுதல், இரட்டை எழுத்துக்களை உள்ளிடுத்தல் என்று பல கேள்விகளுக்கு விடை காண வேண்டியிருந்தது.

இந்த தொந்தரவு எதுவும் இல்லாமல், தமிழுக்கு இயல்பான விசைப்பலகை வடிவமைப்புதான் தமிழ்99. தமிழ் 99 மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், அது ஒரு மனதாக எல்லோராலும் பாராட்டப்படுவது. ஆங்கில தட்டச்சு அறிமுகம் இல்லாதவர்கள்,  முதல் முறை கணினியில் தமிழ் தட்டச்சுக் கற்றுக் கொள்பவர்கள் இதைத்தான் கண்டிப்பாக கற்றுக் கொள்ள வேண்டும். ஆங்கிலத்தில் வேகமாக தட்டச்சுபவர்களும் தமிழில் எழுத இதைக் கற்றுக் கொள்வது அவசியம். தமிழில் நிறைய எழுதும் போது மிக உதவியாக இருக்கும்.

நான் சுமார் 2007 வாக்கில் தமிழ் 99 எழுதப் பழகிக் கொண்டேன். சுமார் 6 மாதங்களில் தமிங்கில முறையில் இருந்த வேகத்தை எட்டிப் பிடித்து விட்டேன். தமிங்கிலத்தில் எவ்வளவு வேகமாக எடுத்தாலும் நிமிடத்துக்கு 25 சொற்கள் என்ற வேகத்தைத் தாண்ட முடிந்ததில்லை. அந்த முறையில் ஆங்கில எழுத்துக்களைப் பார்த்துக் கற்றுக் கொள்ளலாம் என்ற ஆதாயம் இருந்தாலும், பல எழுத்துக்களுக்கு 3 விசைகளை அழுத்த  வேண்டியிருந்தது. ணி என்று அடிப்பதற்கு shift-n+i அடிக்க வேண்டும்.

தமிழ் 99 தட்டச்சு முறை தமிழின் 30 அடிப்படை எழுத்துக்களுக்கு இடம் ஒதுக்கியது. இந்த 30 எழுத்துக்களையும் ஒரே விசை அழுத்துவதன் மூலம் அடிக்கலாம். உயிர் மற்றும் மெய் எழுத்துக்கள் சேர்ந்து உருவாகும் உயிர்மெய் எழுத்துக்களைப் பெற 'ணி' என்று அடிக்க ண்+இ என்று இரண்டு விசைகள் அடித்தால் போதும். ஒரு சராசரி தமிழ் உரையை எடுத்துக் கொண்டால் இது வேலையை மூன்றில் ஒரு பகுதியாக குறைத்து விடும். குறைந்த முயற்சியில் வேலையை முடித்து விடலாம்.

இப்போது தமிழ் 99 முறையில் தட்டடச்சும் போது வேகம் நிமிடத்துக்கு 30 சொற்களுக்குக் குறையாமல் கிடைக்கிறது. புத்தகத்தைப் பார்த்து தட்டச்சுவதை இன்னும் முயற்சித்துப் பார்க்கவில்லை. ஒரு மணி நேரத்துக்கு 1800 முதல் 1900 சொற்கள் வரை அடித்து விடலாம்.

இதே போன்று ஆங்கில உரைகளையும் அடித்துப் பார்க்க வேண்டும். பழைய தமிழ் புத்தகம் ஒன்றை எடுத்துக் கொண்டு உள்ளிட்டுப் பழக வேண்டும். மதுரைத் திட்டத்தின் கீழ் மனோன்மணியம் நூலை டிஸ்கி எழுத்துருவில் தமிங்கில தட்டச்சு முறையில் உள்ளிட்டுக் கொடுத்திருக்கிறேன். அது போன்ற திட்டம் ஏதாவதில் இப்போது செய்து பார்க்கலாம். அதே போன்று ஆங்கில நூல் உள்ளிடலையும் project gutenberg போன்ற தளங்களுக்காக செய்து பார்க்கலாம்.

புத்தகத்தைப் பார்த்து அடிப்பதில் தன்னிச்சையாக அடிப்பதை விட வேகம் குறையலாம் அல்லது கூடலாம். தன்னிச்சையாக அடிக்கும் போது மனதில் தோன்றும் வாக்கியங்களை மூளைக்குள்ளாகவே எழுத்துக்கான விசைப்பலகை அழுத்துவதற்கான கட்டளையாக மாறி விடுகிறது. புத்தகத்தைப் பார்த்து அடிக்கும் போது கண்கள் எழுத்துக்களைப் படித்து மூளைக்கு அனுப்பி, அதை விசைக்கான கட்டளையாக மாற்ற வேண்டியிருக்கும். முதல் வேலையில் சிந்தனைக்கான நேரம் அதிகம், இரண்டாவது முறையில் எழுத்த பார்த்து உள்ளுணரும் நேரம் அதிகம். எழுத்து->விசை மாற்றத்துக்கான நேரம் இரண்டுக்கும் ஒன்றுதான்.

1. தானாக எழுதுவது = மூளையில் சொல் தோன்றுதல்+மூளைக்குள் எழுத்து + எழுத்து->விசை மாற்றம்
2. புத்தகத்தைப் பார்த்து எழுதுவது = கண்கள் உரையைப் பார்த்தல்+மூளையில் சொல் எடுத்துக் கொள்ளுதல்+எழுத்து->விசை மாற்றம்.

சிந்திப்பதை விட வாசிப்பதுதான் அதிகம் செய்திருக்கிறோம் (??). அதனால் இரண்டாவதன் வேகம்தான் அதிகமாக இருக்க வேண்டும். கண்கள் மூளைக்கு எழுத்துக்களை கடத்தும் வேகம், நாம் சிந்தித்து வாக்கியம் உருவாக்குவதை விட  பல மடங்கு அதிக வேகத்தில்தான் இருக்க வேண்டும். முயற்சித்துப் பரிசீலனை செய்து பார்த்தால்தான் தெரியும் உண்மை நிலவரம்.

புதன், ஜனவரி 18, 2012

தரும சிந்தனை


ஆலிவர் டுவிஸ்டு என்ற நாவலில் சார்லஸ் டிக்கன்ஸ் எழுதும் புகழ் பெற்ற "I want some more" என்ற காட்சி. கதை நடப்பது தொழிற்புரட்சிக்குப் பிறகான இங்கிலாந்தில். 'ஏழைகள் சட்டத்தின்' கீழ் திக்கற்றவர்கள் பராமரிக்கப்பட்ட காலம் அது.

========
அனாதையான ஆலிவர் டுவிஸ்டை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்ட பெண்மணி ஒரு திட்டம் வைத்திருந்தார். அதன் படி ஒரு குழந்தை எவ்வளவு குறைந்த அளவு உணவில் உயிர் வாழ முடியுமோ அது வரை உணவு அளவு குறைக்கப்படும்.  அதற்குள் குழந்தை பலவீனத்தாலோ, குளிரினாலோ இறந்து விடும் அல்லது கவனக்குறைவால் தீயில் விழுந்து உயிரை விட்டு விடும்.

இந்தச் சூழலில் வளர்ந்த ஆலிவர் டுவிஸ்ட் 9வது பிறந்த நாளில் வெளிறிப் போன தோலோடு குறுகிப் போன வடிவத்தில், நோஞ்சானாக இருந்தான்.

நாட்டில் அனாதைகளை பராமரிப்பதற்கு உருவாக்கப்பட்ட வாரியத்தின் உறுப்பினரான திரு பம்பிள் அன்று விடுதிக்கு வந்தார். இது போன்ற அனாதைகளுக்கான இல்லங்களை ஏழை மக்கள் உண்மையில் விரும்புகிறார்கள் என்று அந்த வாரிய உறுப்பினர்கள் கண்டு பிடித்திருந்தார்கள்.

'காசு கொடுக்கத் தேவையில்லாத உணவு விடுதி -  பொதுச் செலவில் காலை உணவு, மதிய உணவு, தேநீர், இரவு உணவு என்று சொகுசாக வாழலாம். தூங்குவதற்கு உறுதியான ஒரு கூரை - வேலை எதுவும் செய்யத் தேவையில்லை.' என்று ஏழை குழந்தைகள் இந்த இல்லங்களை விரும்புவதாக மோப்பம் பிடித்து விட்ட ஆணைய உறுப்பினர்கள் "நாமதான் இதுக்கு ஒரு முடிவு கட்டணும். உடனடியாக அதைச் செய்வோம்" ஒரு விதியை ஏற்படுத்தினார்கள்.

'அனாதை இல்லத்தில் படிப்படியாக பட்டினியில் சாவது அல்லது வெளியில் போய் முழுப்பட்டினியாக உடனடியாக சாவது' இவற்றில் ஒன்றை தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தைக் கொடுக்க முடிவு செய்தார்கள். குடிநீர் வாரியத்துடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு கணக்கில்லாத அளவு தண்ணீரை பெறுவதற்கும், சோள தொழிற்சாலையிலிருந்து படிப்படியாக குறைவான அளவு ஓட்மீல் பெறுவதற்கும் ஒப்பந்தம் போட்டுக் கொண்டார்கள்.

இவற்றை வைத்து நாளைக்கு மூன்று வேளையும் நிறைய தண்ணீர் சேர்த்த கஞ்சி ஊற்றினார்கள். வாரத்துக்கு இரண்டு தடவை வெங்காயம் வழங்கப்பட்டது, ஞாயிற்றுக் கிழமைகளில் அரைத் துண்டு அப்பம் கூடுதலாக வழங்கப்பட்டது.

பையன்களுக்கு உணவு கொடுக்கப்படும் அறை கல்லால் கட்டப்பட்ட ஒரு முனையில் செம்பு பதிக்கப்பட்ட பெரிய ஹால். செம்பு பதிக்கப்பட்ட பகுதியிலிருந்து சீருடை அணிந்த மாஸ்டர் ஓரிரு பெண் உதவியாளர்களோடு  சாப்பாட்டு வேளைகளில் கஞ்சியை அகப்பையில் எடுத்து ஊற்றுவார். இந்த விருந்துணவில் ஒவ்வொரு பையனுக்கும் ஒரு அகப்பை மட்டும் கிடைத்தது, முக்கியமான திருவிழா நாட்களில் மட்டும் 65 கிராம் ரொட்டியும் கிடைக்கும்.

கஞ்சி கிண்ணங்களை கழுவ வேண்டிய தேவையே வந்ததில்லை. பையன்கள் தமது கரண்டிகளால் அவை பளபளக்கும் வரை சுரண்டி சுத்தம் செய்து விடுவார்கள். அந்த வேலை முடிந்ததும் அவர்கள் விரிந்த கண்களுடன் செம்பு பாத்திரத்தைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருப்பார்கள். தமது விரல்களை நக்கி அதில் தவறி சிதறியிருக்கக் கூடிய துளிகளை தேடிப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பார்கள்.

பொதுவாக பையன்களுக்கு பசி அதிகம். ஆலிவர் டுவிஸ்டும் அவனது சேக்காளிகளும் மூன்று மாதங்கள் இந்த சிறுகக் கொல்லும் பட்டினியை அனுபவித்தார்கள். கடைசியில் அவர்கள் பசியில் வெறி பிடித்தவர்களாக ஆனார்கள். இது போன்ற பட்டினிக்குப் பழக்கம் இல்லாத ஒரு நெட்டையான பையன், 'இன்னொரு கிண்ணம் கஞ்சி கிடைக்கா விட்டால் அன்று இரவு அவனுக்குப் பக்கத்தில் தூங்கும் பையனை தின்று விட'ப் போவதாக குறிப்பால் உணர்த்தினான்.

பையன்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அன்று மாலை யார் மாஸ்டரிடம் போய் கூடுதல் கஞ்சி கேட்பது என்று குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டது. பொறுப்பு ஆலிவர் டுவிஸ்டின் மீது விழுந்தது.

அன்று மாலை மாஸ்டர் சமையல்கார சீருடையில் பாத்திரத்தின் அருகில் நின்று கஞ்சியை பரிமாறினார். பிரார்த்தனை சொல்லப்பட்டது. பையன்களின் முன்பிருந்த கஞ்சி சில நிமிடங்களில் மறைந்தது. பையன்கள் ஆலிவருக்குக்  கண் சாடை காட்டினார்கள், குழந்தையாக இருந்தாலும் பசியின் களைப்பிலும், துயரத்தின் தைரியத்திலும், தனது இடத்திலிருந்து எழுந்த ஆலிவர் டுவிஸ்ட் மாஸ்டருக்கு அருகில் போய்

"சார், எனக்கு இன்னும் கொஞ்சம் வேணும் சார், பிளீஸ்" என்றான்.

குண்டான ஆரோக்கியமான மாஸ்டர் வெளிறிப் போனார். அந்த சிறு போராளியை வியப்புடன் சில விநாடிகள் முறைத்துப் பார்த்தார். அதற்குப் பிறகு தாங்கலாக கஞ்சி பாத்திரத்தை பிடித்துக் கொண்டார்.

"என்ன!"

"பிளீஸ் சார், எனக்கு இன்னும் கொஞ்சம் வேணும்,"

கையிலிருந்த அகப்பையால் ஆலிவரின் தலையில் ஒரு அடி வைத்து விட்டு அவனது கைகளை முறுக்கி கூச்சல் இட்டார் மாஸ்டர்.
----
வாரியத்தின் கூட்டம் நடத்திக் கொண்டிருந்த போது அறைக்குள் பம்பிள் பரபரப்பாக ஓடி வந்தார். உயரமான நாற்காலியில் உட்கார்ந்திருந்த பெரிய மனிதரைப் பார்த்து

"மிஸ்டர் லிம்ப்கின்ஸ், குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும், சார்!. ஆலிவர் இன்னும் கொஞ்சம் கேட்டிருக்கிறான்!"

ஒவ்வொரு முகத்திலும் அதிர்ச்சி அலைகள் பரவி பெரும் பயம் தெரிந்தது.

"இன்னும் கொஞ்சமா! நிதானப்படுத்திக் கொண்டு தெளிவாக பதில் சொல்லுங்கள் பம்பிள். உணவு குழு ஒதுக்கிய இரவு உணவை சாப்பிட்ட பிறகு அவன் இன்னும் கொஞ்சம் கேட்டான் என்றா சொல்கிறீர்கள்?" என்றார் மிஸ்டர் லிம்ப்கின்ஸ்.

"அப்படித்தான் கேட்டான், சார்," என்று பதில் சொன்னார் பம்பிள்.

"அந்த பையன் தூக்கில் தொங்குவான், இந்தப் பையன் தூக்கில் தொங்கத்தான் போகிறான் என்று எனக்குத் தெரிகிறது" வெள்ளை கோட்டு போட்ட பெரிய மனிதர் சொன்னார்.

ஞாயிறு, ஜனவரி 15, 2012

சென்னைப் புத்தகக் கண்காட்சி - 2012


13ம் தேதி ;

ஆங்கிலோ இந்தியன் பள்ளிக்கு முன் நெரிசலில் நிற்கவே வாசலுக்கு நேராக இறங்கிக் கொண்டேன். பள்ளிக்கு உள்ளேயும் மெட்ரோ பணிகள் நடந்து கொண்டிருந்தன. நடந்து போகும் நடைபாதையின் வலது புறம் மெட்ரோ தடுப்புச் சுவர். சென்னை மெட்ரோ என்ற பெயரை அதில் எழுதிக் கொண்டிருந்தார்கள். ஒப்பந்த பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் சாங்காய் தீஜியன் (上海地建) என்ற நிறுவனத்தின் பெயர் சீன எழுத்துக்களில் தெரிந்தது. இந்த நடைபாதை முடியும் இடத்தில் இன்னொரு நுழைவாயில். அதற்கு நேராகத்தான் புத்தகக் கண்காட்சியின் வரவேற்பு வளைவு.

வரிசையாக விளம்பரத் தட்டிகள் வைத்திருந்தார்கள். சுஜாதா, வைரமுத்து, ஜெயமோகன் போன்றவர்களுக்கு பெரிய புகைப்படம் போட்ட தட்டிகள். அடுத்த பகுதிக்கு நுழையும் இடத்தில் வலது புறம் லயன்ஸ் ரத்த தான வண்டி. அதனுள் யாரோ ரத்தம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அடுத்த குறுகிய பகுதியில் இன்னும் தட்டிகள்.

போன முறை இருந்த கலைஞர் புகைப்பட அரங்கு மாயமாகியிருந்தது. அந்தப் பகுதியில் வரிசையாக சாப்பிடும் பொருள் விற்பவர்கள். இயற்கை உணவு என்ற பெயரில் பழங்கள், அடுத்ததாக வறுத்த கடலை, அருணா சூப், பிஸ்ஸா, பாப்கார்ன், ஐஸ்கிரீம் என்று சின்னச் சின்னக் கடைகள்.

இடது புறம் நிகழ்ச்சிக் கூடம். அதன் முன்பாக தினமும் மாலை நிகழ்ச்சி விபரங்கள் ஒரு பக்கமும், வாசகர் எழுத்தாளர் சந்திப்பு விபரங்களையும் தட்டியில் வைத்திருந்தார்கள். பெரிய பந்தல் போட்டு நிகழ்ச்சிகளுக்கான மேடை. வெள்ளிக் கிழமை சுகிசிவம் தலைமையில் பட்டி மன்றம்.

5 ரூபாய் நுழைவுச் சீட்டு வாங்கிக் கொண்டு உள்ளே போனேன். 'பெயரையும் முகவரியையும் நிரப்பிப் போட்டால், பரிசு கிடைக்கும்' என்று சொல்லிக் கொண்டே இருந்தார்கள்.

பெரிய கூடம். ஒவ்வொரு பாதைக்கும் பெயர் கொடுத்திருந்தார்கள். இடது புறத்திலிருந்து ஆரம்பித்தேன். ஒவ்வொரு கடையாகப் பார்த்துக் கொண்டே நகர்ந்தேன்.

1。 விஜயபாரதம் கடையில் ராமஜன்ம பூமி போராட்ட வரலாறு என்று வெளியீட்டை வாங்கினேன். அதை கடையில் சுதேசி சக்தி என்ற பத்திரிகையை ஒருவர் இலவசமாக கொடுத்தார். ஜூலை 2007 இதழ். பழைய விற்காத இதழ்களை இப்படி வினியோகிப்பது நல்ல விளம்பர பிரச்சார உத்திதான்.

மெட்ராஸ் யூனிவர்சிட்டி கடையில் Economic conditions in South India, A Appadorai எழுதிய ஆய்வு நூல், இரண்டு பாகங்களாக 100 ரூபாய் விலை ஒவ்வொன்றும், வாங்கவில்லை, குறித்துக் கொண்டேன்.  இமாச்சல் கடையில் ஆப்பிள் ஜூஸ் குடித்துக் கொண்டேன்.

விருபா.காம் என்று கடை இருந்தது.  கணினியில் விருபா தளத்தின் உள்ளுறை பதிப்பை திறந்து வைத்திருந்தார். ஒரு வேளை பபாசியில் இலவசமாக கொடுத்து விட்டார்களோ என்று கேட்டேன். இல்லையாம். சுமார் 5000 சொச்சம் புத்தகங்கள் பட்டியலிட்டிருக்கிறார். இன்னும் 15000  புத்தகங்கள் இருந்தாலும், 'அவற்றை நான் பார்க்காவிட்டால் பட்டியலில் சேர்ப்பதில்லை' என்றார்.

'இந்த தளத்தில் பெரிய விளம்பரம் இல்லை என்றாலும் இது தொடர்பான மற்ற பணிகள் கிடைக்கின்றன' என்றார். மெட்ராஸ் யூனிவர்சிட்டியின் நூல்களை அட்டவணைப்படுத்துதல், கலைமகளின் 80 ஆண்டு இதழ்களை மின்வடிவமாக்குதல் பணிகளை செய்திருக்கிறார். கலைமகளை இப்போது நடத்துவது நாராயணசாமி என்று பேரனாம். மெட்ராஸ் லா ஜர்னல் என்று நடத்திய குடும்பம்.

நல்லி திசை எட்டும் என்று ஒரு கடை இருந்தது. 'எல்லோருக்கும் நாம் பணம் கொடுத்து ஸ்பான்சர் செய்கிறோம், நாமும் புத்தகங்கள் வெளியிட்டு ஒரு கடையும் போட்டு விடுவோம்' என்று முடிவு செய்து போட்டு விட்டார் என்று நினைத்துக் கொண்டேன். அவர் எழுதிய புத்தகங்கள், அவரைப் பற்றி எழுதப்பட்ட புத்தகங்களை வைத்திருந்தார்கள்.

பூவுலகின் நண்பர்கள் என்ற பெயரில் ஒரு கடை.  'இவர்கள்தான் கல்பாக்கம் அணுஉலைக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுப்பவர்கள்' என்று நினைவு. அவருக்கு விபரங்கள் தெரியவில்லை.

பில்ராத் ஹாஸ்பிட்டல்ஸ் என்ற விளம்பரம்தான் ஆதிக்கம் செலுத்தியது, புரபஷனல் கூரியர்ஸ் விளம்பரங்களும் தொங்கின. இரண்டு நிறுவனங்களுமே ஆளுக்கொரு கடையும் வைத்திருந்தார்கள். சாபோல் என்று தண்ணீர் விற்கும் நிறுவனத்துக்கு ஒரு கடை. அரங்கத்தின் மறு முனையில் வரிசையாக நாளிதழ்கள், வார இதழ்களின் கடைகள். இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ், புதிய தலைமுறை, ராஜ் டிவி, ஆல் இந்தியா ரேடியோ, தூர்தர்ஷன் என்று கடைகள் இருந்தன.

ஆன்மீக வியாபாரத்துக்கு பலர் கடை விரித்திருந்தார்கள். பெரிதாக கூட்டங்கள் இல்லை. சின்மயா மிஷன், யோகா, ஈஷா யோகா, ராமகிருஷ்ண விஜயம், வாழிய நலம், கீதா பிரஸ், கிருஷ்ணமூர்த்தி பவுண்டேசன் என்று பல வகையான கடைகள். எல்லாவற்றிலும் புத்தகங்கள். இஸ்லாமிய புத்தகங்களுக்கான கடைகளும் பல இருந்தன. குரான் விற்பவை, உமறுப் புலவரின் படைப்புகள் என்று அது இன்னொரு பக்கம்.

F1 முதல் F56 வரை இரண்டு பக்க நடைபாதைகளில் திறக்கும் கடைகள். இதற்கு கொஞ்சம் செலவு அதிகமாகும் போலிருக்கிறது. அவற்றைத் தவிர 1லிருந்து 462 வரை ஒரே நடைபாதையில் திறக்கும் கடைகள்.

2。 விடியல் பதிப்பகத்தில் புத்தகங்களை மேய்ந்து கொண்டிருக்கும் போது கிஷன்ஜி பற்றிய புத்தகத்தை கையில் திணித்து விட்டார் ஒருவர். அதை வாங்கிக் கொண்டேன்.

காலச்சுவடு கடையை கடந்து போகும் போது அங்கும் பழைய காலச்சுவடு இதழை வினியோகித்து விளம்பரம் செய்யும் உத்தி செயல்பட்டுக் கொண்டிருந்தது. ஜூலை 2005 இதழ். உலகமயமாக்கல் பற்றிய கட்டுரைகள் முக்கியமானவை. கல்வி பற்றி ஒருவரும் மொழிக்கொள்கை பற்றி செந்தில்நாதனும் எழுதியிருந்தார்கள்.

அடுத்து வேக வேகமாக நடந்தேன். நியூஹொரைசான் மீடியா என்றும் கிழக்கு என்றும் இரண்டு கடைகள். ஜெயமோகன், சாருநிவேதிதா, அரவிந்தன் நீலகண்டன் புத்தகங்கள் அங்கங்கு பரப்பி வைக்கப்பட்டிருந்தாலும் பெரிதாக கைகளில் காணப்படவில்லை.

கிழக்கு கடைக்கு வெளியில் விலைப்பட்டியலை திணிக்க ஒரு பையன். வேண்டாம் என்று உள்ளே போனால், இன்னொரு பையன் கொஞ்சம் கவனக் குறைவாக இருந்த நேரத்தில் திணித்து விட்டான். கடைகளில் தோரணம் தொங்க விட்டிருந்தது கிழக்கு மட்டும்தான்.

3,4. அப்படியே நகர்ந்து கீழைக் காற்று பதிப்பகத்தில் ஐடி துறை நண்பா என்ற புத்தகத்தையும் ரசியப் பொருளாதாரம் பற்றிய ஒரு விமர்சனம் புத்தகத்தையும் வாங்கிக் கொண்டேன்.

5. ஆழி பதிப்பகம்  ஊர்களைப் பற்றிய புத்தக வரிசை வெளியிட்டிருந்தார்கள்.  ஆம்பூர் பற்றி யாழன் ஆதி எழுதியதை வாங்கிக் கொண்டேன்.

ஒலிபெருக்கிகளில் 6 மணிக்கு சுகிசிவம் பட்டி மன்றம் என்று அலறிக் கொண்டிருந்தார்கள். இதற்கிடையில் மேடைப் பேச்சில் ஒருவர் கவர்ச்சிகரமான குரலில் முழங்கிக் கொண்டிருந்தார். 6 மணி பட்டிமன்றத்தை வம்புக்கிழுத்து கிண்டலும் அடித்தார். '6 மணிக்கு பட்டிமன்றமாம் அதற்குள் முடித்து விட வேண்டுமாம் என்று.' அத்தோடு வெளியில் வந்து விட்டேன்.

தமிழருவி மணியன் பேசிக் கொண்டிருந்தார். மேடையில் நெடுமாறன், தா பாண்டியன், நல்ல கண்ணு, சி மகேந்திரன், இயக்குனர் மணிவண்ணன் உட்கார்ந்திருந்தார்கள். வீழ்வேனென்று நினைத்தாயோ என்று ஈழத்தைப் பற்றி சி மகேந்திரன் ஜூனியர் விகடனில் தொடராக எழுதி ஆனந்த விகடன் வெளியிட்டிருந்த புத்தகம் பற்றிய விழா.

அப்போதே 5.30 ஆகி விட்டிருந்தது. '6 மணிக்கு பட்டி மன்றம் ஆரம்பிக்க வேண்டும் அதனால் சீக்கிரம் முடித்துக் கொள்கிறேன்' என்று முன்னுரை சொல்லி விட்டு பேச்சை ஆரம்பித்தார். தமிழருவி மணியன். நிறைய பேசினார். முள்ளி வாய்க்கால், துரோகம், தமிழர்களின் சுரணையின்மை. ஆறு கோடி தமிழர்கள், 4 கோடி வாக்காளர்கள், 10 லட்சம் பேர் ஏன் திரளவில்லை என்று அடுக்கிக் கொண்டே போனார். 'ராஜபக்சே என் கையில் கிடைத்தால் அவனை கொல்வேன்' என்று முழக்கமிட்டார். மணிண்ணன் அப்படி பேசியதாகச் சொல்லி விட்டு 'இல்லை என்றாலும் நான் சொல்கிறேன்., நான் காந்திய வாதியாக இருந்தாலும் கொல்வேன். காந்தியே உன் ரத்தத்தை உறிந்து கொழுக்கும் கொசுவைக் கொல்வது தவறில்லை' என்று சொல்லியிருப்பதாக பிளிறினார்.

தாங்க முடியாமல் எழுந்து அரங்குக்குப் பின்புறம் இருந்த உணவுக் கூடத்துக்குப் போனேன். உள்ளே பிரார்த்தனை பாடல்கள் ஒலிக்க, வாசலில் ஒரு அம்மா பட்டுப் புடவை கட்டி ஒரு கேடலாக் கையில் கொடுத்தார்கள். திருமண விசேஷங்களுக்கு கேட்டரிங் என்று சொல்வதுடன் ராசி பலன் பக்கத்துக்குப் பக்கம். உள்ளே நுழைந்ததும் கழிவுகளைப் போடும் குப்பைக் கூடையில் போட்டு விட்டேன்.

உணவுக் கூடத்தின் உள்ளே வாசலுக்கு நேராக சங்கராச்சாரியார், இறந்து போனவரின் ஆளுயரச் சிலை, உட்கார்ந்திருப்பதாக. விகாரமாக தெரிந்தது.  அதைச் சுற்றி ப வடிவில் சாப்பாட்டுக் கடைகள். நுழைந்தவுடன் வலது புறம் முதலில் தயிர் சோறு, கார சோறு, கொத்தமல்லி சோறு, தோசை, சாட், பூரி, பொங்கல், காபி. உணவுப் பொருட்கள் எல்லாம் 50 ரூபாய், காபி 20 ரூபாய் என்று கல்லாக் கட்டிக் கொண்டிருந்தார்கள்.

காராபாத் என்று சொன்னதைக் கேட்டுக் கொண்டு டோக்கன் வாங்குமிடத்தில் சாம்பார் சாதம் என்று கேட்டேன். காராபாத் என்று திருத்திக் கொடுத்தார். வாங்கி சாப்பிட்டேன். தொட்டுக் கொள்ள பொரித்த அரிசி வற்றல். குடிப்பதற்கு தண்ணீர் கொடுப்பதற்கு இரண்டு பேர் என்று தடபுடலாக 5 நட்சத்திர வசதியில் தெரிந்தது.

சாப்பிட்டு விட்டு வெளியில் வரும் போது தமிழருவி மணியன் முடித்து விட்டிருந்தார். அடுத்தது தா பாண்டியன் பேசுவார் என்றதும், அவர் 'குறுகச் சொல்' என்று திருவள்ளுவரோ யாரோ சொன்னதாகச் சொல்லி நேரத்தை குறைவாக எடுத்துக் கொள்வதாகச் சொன்னார். தமிழ்நாட்டிலிருந்து முதலமைச்சர் தலைமையில் பிரதமரை சந்திக்கப் போன போது என்ன நடந்தது என்று மர்மமாக பேசினார்.  'மகேந்திரனின் புத்தகத்தில் சில இடங்களில் அவரசமாக எழுதிப் போனது போல இருந்தது' என்று விமர்சனமும் வைத்தார். பட்டிமன்ற நேரம் தாண்டி விட்டதை முன்னிட்டு முடித்துக் கொண்டார்.

அடுத்த வழக்கறிஞர் அமர்நாத் நன்றி சொன்னார். போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலைக்கு எதிரான இளைஞர்கள் கூட்டமைப்பின் சார்பில்தான் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். வெளியிட்ட விகடன், இடம் கொடுத்த பபாசி அனைவருக்கும் நன்றி. நிகழ்ச்சி முடிந்தது.

அடுத்த நிகழ்ச்சிக்காக புத்தகக் கண்காட்சி அரங்கிலிருந்து சுகிசிவம் வெளிவந்து கொண்டிருந்தார். பாரதி பாஸ்கர் இன்னொரு பிரபலம் கலந்து கொள்ளப் போகிறவர். அரங்கின் நுழைவாயிலுக்குப் போய் கடை பட்டியல் கேட்டால் ஒரு நாற்காலியில் குவித்து வைத்திருந்ததை எடுத்துக் கொள்ளச் சொன்னார் அந்த வாலண்டியர். அதில் அகர வரிசையில் பதிப்பகங்களின் கடைகளின் பட்டியல். Aa என்று ஆரம்பிக்கும் ஆழி பதிப்பகம் முதலிடத்தில்.

சுகிசிவத்தின் பட்டிமன்ற அரங்கில் நாற்காயிலியில் உட்கார்ந்தேன். முறுக்கு விற்றவரிடம் ஒரு பாக்கெட் வாங்கிக் கொண்டேன். கணினியை இயக்கி, புத்தகக் கண்காட்சியிலிருந்து நேரடி அப்டேட் என்று போட நினைத்து, கேவலமாக உணர்ந்து செய்யவில்லை.

சுகி சிவம் பேச ஆரம்பித்தார். 'இது போன்று படிப்பவர்களின் மத்தியில் பேசும் போது எங்களுக்கு இன்னும் உழைப்பு தேவைப்படுகிறது. உலகின் பல பகுதிகளில் பேசினாலும் இது சிறப்பானது' என்று ஆரம்பித்து. 'வான் காக் ஓவியம் வரைந்தார். மரங்கள் நட்சத்திரங்களைத் தொடுவதாக வரைந்தார்' என்று அரைக்க ஆரம்பித்தார். அதையும் தாங்க முடியாமல் எழுந்து வெளியில் நகர்ந்தேன்.

6. இருட்டி விட்டிருந்தது. கூட்டமும் கொஞ்சம் அதிகரித்திருந்தது. வெளியில் வந்து சாலையைக் கடந்தேன். சாலையின் மறுபக்கம் பழைய புத்தகங்கள் விற்கும் நடைபாதை வியாபாரிகள். 20 ரூபாய்க்கு ஜான் கென்னத் கேல்பிரித் புத்தகம் ஒன்றை வாங்கிக் கொண்டேன். ஆங்கிலத்தில் The New Industrial State என்ற தலைப்பில் எழுதிய கட்டுரைகள்.

அடுத்த நாள் - 14ம் தேதி:

புத்தகக் கண்காட்சியில் நண்பர் வண்டியை நிறுத்தப் போய் விட நான் காத்திருந்தேன்.  இன்று மறுபக்கத்திலிருந்து ஆரம்பித்தோம்.  இஸ்கான் கடையில் போய் பகவத் கீதையைப் புரட்டிக் கொண்டே ரஷ்ய வழக்கு பற்றி பேச்சுக் கொடுத்தார்.

'தடை செய்யப் பார்த்தாங்க, கோர்ட்டில் உடைத்து விட்டோம்' என்று மார் தட்டினார் கடையில் இருந்தவர்.

'ஆனால் இந்த புத்தகம் வன்முறையை தூண்டுவதாக சொல்றாங்களே, நான்கு வர்ணங்களை உருவாக்கியதாக சொல்கிறதே'

'ஆமா  பகவான் அப்படி உருவாக்கினார், ஆனால் அது பிறப்பால் கிடையாது, ஒரு டாக்டர் மகன் எப்படி டாக்டர் ஆக முடியாதோ, எம்பிபிஎஸ் படித்து ஹவுஸ் சர்ஜன் முடித்து அதன் பிறகுதான் டாக்டர் ஆக முடியுமோ அதே போல பிராமணன் என்பது குணங்கள், நடத்தை. அதை யார் வேண்டுமானாலும் எட்டலாம்'

'நான் ஒரு தலித், நானும் பிராமணனாக மாறி, ஒரு பிராமின் லேடியை கல்யாணம் செய்து கொள்ள முடியுமா'

'இந்தக் காலத்தில் யாருமே பிராமணன் கிடையாது. நான் கூட பிராமணன் கிடையாது' என்று ஆரம்பித்தார். கடைசியில் 'புத்தகம் வாங்கப் போறீங்களா இல்லையா' என்று துரத்தி விட்டார்.

7. லெப்ட்வேர்ட் என்ற கடையில் A History of Capitalism என்று  மைக்கேல் பீட் என்பவர் எழுதிய புத்தகத்தை வாங்கினேன். 325 ரூபாய்கள்.

8,9,10,11. கீழைக்காற்று பதிப்பகத்தில் ஹூனான் விவசாயி இயக்கப் பரிசீலனை பற்றிய அறிக்கை, சீனா ஒரு முடிவுறாத போர் என்ற வில்லியம் ஹிண்டனின் நூல், முரண்பாடு பற்றி மாசேதுங் வாங்கினேன். போராடும் தருணங்கள் இன்னொரு பிரதி.

காமிக்ஸ் புத்தகங்கள் கட்டை வாங்கினார். நண்பர் வாங்கச் சொன்னாராம்.

12. வெளியில் வந்து ஆழி செந்தில்நாதனைப் பார்க்க  தொலைபேசியில் அழைத்தால் கடைக்கு வந்திருந்தாராம். கடைக்குப் போனோம். லூர்தம்மாள் சைமன் பற்றிய புத்தகத்தை வாங்கினேன்.

நண்பருக்கு பாமரன் எழுதிய புத்தர் சிரித்தார் புத்தகம் வேண்டும். அதற்காக பாலபாரதிக்குத் தொலைபேசினால், அம்ருதா பதிப்பகத்தில் கேட்கச் சொன்னார். சமீபத்திய ஒரு வெளியீடு உயிர்மையில் வெளியிட்டிருப்பதாகச் சொன்னார். அவரது சாமியாட்டம் சிறுகதைத் தொகுப்பு வெளியாகியிருக்கிறது.

இதற்கிடையில் நாகர்கோவிலைச் சேர்ந்த ஒரு பேராசிரியரின் மனைவி நண்பரிடம் 425 ரூபாய்க்கு புத்தகங்களைக் கட்டி விட்டார்.

13. பாவை பதிப்பகத்தில் Mathematics Can be fun என்ற என்சிபிஎச் வெளியீட்டை வாங்கிக் கொண்டேன். 300 ரூபாய். நானும் கிட்டத்தட்ட 1000 ரூபாய்க்கு வாங்கியிருப்பேன் இதுவரை.

14. கீழைக்காற்றில் அதிகாலையின் அமைதி+போர்வீரனின் கதை அடங்கிய டிவிடி வாங்கிக் கொண்டேன்.

15. டிஸ்கவரி கடையில் சாமியாட்டம் வாங்கினேன். கேபிள் சங்கர் உட்கார்ந்திருந்தார்.

சு சமுத்திரம் எழுத்துக்களைத் தேடினார். மாணிக்கவாசகர் பதிப்பகத்தில் இல்லை என்று சொல்லி விட்டார்கள். 9 மணி நெருங்க, நான் வாசலுக்கு அருகில் ஒரு நாற்காலியில் உட்கார்ந்தேன். 9 மணியளவில் விளக்குகளை அணைத்தார்கள். பரிசுக் குலுக்கலுக்கான அறிவிப்புகள் நடத்தி குலுக்கி பெயர் தேர்ந்தெடுத்து அறிவித்தார்கள்.

திங்கள், ஜனவரி 09, 2012

பஞ்சம் படுகொலை பேரழிவு - அறிவியல் (2)


(ஜரன் திரசன்னா பதிவிலிருந்து)

குரவிந்தன் காலகண்டன் எழுதிய ‘பஞ்சம் படுகொலை பேரழிவு - அறிவியல்’ (ஒரே பொருளுக்கு நான்கு வார்த்தைகள்!) புத்தகம் உழக்கு வெளியீடாக வெளிவந்துள்ளது. நேற்று முதல் புத்தகக் கண்காட்சியில் விற்பனைக்குக் கிடைக்கிறது. நான் எதிர்பார்த்தது போலவே நிறைய பேர் விருப்பத்துடன் வாங்குகிறார்கள். வாங்க யோசிப்பவர்களை, பின்னட்டையில் என்ன எழுதியிருக்கிறது என்பதைப் படிக்கச் சொன்னால், படித்துவிட்டு உடனே வாங்கிவிடுகிறார்கள்.

புத்தகத்தின் பின்னட்டையிலிருந்து:

அறிவியல் உலகுக்குக் கொடுத்த கொடை பஞ்சம் படுகொலை பேரழிவு. அறிவியலின் பெயரைச் சொல்லி உலகெங்கும் கொன்று குவிக்கப்பட்ட அப்பாவி மக்களின் எண்ணிக்கை பலகோடி. விஞ்ஞானிகள் உலகில் தாம் சென்ற இடங்களில் எல்லாம் படுகொலைகளையும் பேரழிவுகளையும் ஈவு இரக்கமின்றி ஏற்படுத்தினார்கள் என்பதை ஆதாரத்தோடு நிறுவுகிறது இந்நூல்.


நியூட்டன், எடிசன், ஐன்ஸ்டைன் என்று தொடர்ச்சியாக விஞ்ஞானிகள் எல்லோருமே எப்படி ரத்தம் தோந்த வரலாற்றை எழுதினார்கள்? எப்படி சக விஞ்ஞானிகளை வேட்டையாடினார்கள்? ராபர்ட் ஹூக்கும் (Robert Hooke),  ஜார்ஜ் வெஸ்டிங்ஹௌசும் (George Westinghouse) என்ன ஆனார்கள்? ஸ்டீபன் ஹாகிங் உண்மையிலேயே இளைஞர்களின் ரோல் மாடல்தானா? ஐன்ஸ்டைன், நியூட்டனை எப்படி எதிர்கொண்டார்? அறிவியல் உண்மையிலேயே முன்னேற்ற வழிதானா? தகவல்கள் அடிப்படையில் உண்மையைக் கண்டறிதல், சக விஞ்ஞானிகளின் கருத்துக்களை விமர்சனம் செய்தல், தவறுகளைச் சுட்டிக் காட்டுதல் என்பதெல்லாம் வேத காலத்துக்கு முன்பே அறிவியிலில் உண்டா? வரலாற்றின் மிக முக்கியமான இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடையளிக்கிறது இந்தப் புத்தகம்.


அறிவியல் இந்தியாவில் ஏற்படுத்திய தாக்கம் என்ன? நேருவின் அறிவியல் பாசம் இந்தியாவுக்குத் தந்த பரிசு என்ன? அமெரிக்காவில் அப்துல் கலாமுக்கு என்ன ஆனது? பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் ஆடிய ஆட்டங்கள் என்ன? இவற்றையும் பதிவு செய்திருக்கிறது இந்நூல்.


வெறும் வாய்ப்பந்தல் போடாமல், அறிவியலின் பயங்கரத்தைப் பற்றிய ஒவ்வொரு குறிப்பையும் அதற்கான ஆதாரத்துடன் எழுதியுள்ளார் குரவிந்தன் காலகண்டன். தமிழ்ப்புத்தக வரலாற்றில் மிக முக்கியமான நூலாக இது அமையும்.

பொதுவாகவே அறிவியல் என்றால் என்ன என்று தெரியாதவர்கள், அறிவியல் என்றால் முற்போக்கு என்று நினைத்துக்கொண்டு அதனால் அங்கு சென்று சேர்ந்தவர்கள் அல்லது தன்னை விஞ்ஞானி என்று சொல்லிக்கொள்வது பெருமை தருவது என்று நினைத்துக்கொள்பவர்கள் – இவர்கள் யாருக்குமே அறிவியலுக்கு ரத்தம் எவ்வளவு பிடிக்கும் என்பது அவ்வளவாகத் தெரியாது. ஏதோ மீடியா குழந்தைகளாக விஞ்ஞானிகள் என்று சொல்லிக்கொண்டு திரிகிறார்கள்.

அறிவியலின் ரத்தம் தோய்ந்த வரலாற்றை, கூட்டுப்படுகொலைகளை, வதைமுகாம்களைப் பற்றியெல்லாம் பொதுப்புத்தி விஞ்ஞானிகள் கேள்விப்பட்டுக்கூட இருக்கமாட்டார்கள். விஞ்ஞானிகள் என்றாலே நேர்மையாளர்கள் என்ற எண்ணமும் இங்கே உள்ளது. ஆனால் உலகளாவில் எப்படி விஞ்ஞானிகள் சந்தர்ப்பவாதிகளாக இருந்திருக்கிறார்கள் என்பதையும் இந்த மீடியா குழந்தைகள் அறிந்திருக்கப்போவதில்லை.

குரவிந்தன் காலகண்டனின் பஞ்சம் படுகொலை பேரழிவு - அறிவியல் புத்தகம் இது அத்தனையைப் பற்றியும் தெளிவாக, விரிவாக, ஆதாரத்துடன் பேசுகிறது.

இந்தப் புத்தகத்தைப் படிக்கப் போகும் மென்மையான இதயம் படைத்த அத்தனை பேரும் அதிரப் போவது நிச்சயம். எங்கெல்லாம் அறிவியல் அங்கெல்லாம் வரிசையாக பஞ்சமும் படுகொலையும் பேரழிவும் வந்துகொண்டே இருக்கின்றன. படுகொலை என்றால் கூட்டுப்படுகொலைகள். விவசாயிகளை ரக ரகமாகக் கொன்று குவித்திருக்கிறார்கள் நம் உலக விஞ்ஞானிகள்.

எடிசன், வெஸ்டிங்ஹௌசுக்கு இடையே நடக்கும் போட்டி, எடிசனைப் பார்த்து வெஸ்டிங்ஹௌசே அதிர்ந்து போவது, ஏன் நியூட்டன் புதைக்கப்படவில்லை என்றெல்லாம் புத்தகம் பட்டையைக் கிளப்புகிறது. இந்தப் புத்தகத்தில் என்னவெல்லாம் இருக்கிறது என்று எழுதினாலே அதுவே இன்னும் 4 பக்கத்துக்கு வரும். மேலும் நான் ஒருமுறை மட்டுமே வாசித்திருக்கிறேன். இன்னொரு முறை நிதானமாக வாசிக்கவேண்டும். அத்தனை முக்கியமான புத்தகம்.

விஞ்ஞானிகள் போல காந்தியை விதவிதமாக விமர்சித்தவர்கள் யாருமில்லை. தன் பேத்தியோடு படுத்து தனது பிரம்மச்சரியத்தைப் பரீட்சித்த காந்தி பற்றிப் பேசவேண்டுமானால் விஞ்ஞானிகள் துள்ளிக்குதித்து ஓடிவருவார்கள். ஆனால் ஐன்ஸ்டைனின் பெண் தொடர்பு, அதன் ஆராய்ச்சி பற்றியெல்லாம் பேசமாட்டார்கள். ஐன்ஸ்டைன் புனிதரன்றோ. காந்தி கெடக்கான் கெழவன்.

இந்தப் புத்தகத்தைப் படித்ததும் உலக விஞ்ஞானிகள் மீது வெறும் இளக்காரம் மட்டுமே எனக்கு மிஞ்சுகிறது. எப்படி உலக விஞ்ஞானிகள் வெஸ்டிங்ஹௌசையும், ஐன்ஸ்டைனையும் அறிஞர்களாக முன்வைக்கிறார்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது. எத்தனை எத்தனை கொலைகள்! எதுவுமே அக்கறையில்லை! எல்லாம் அறிவியல் மயம்.

இந்திய விஞ்ஞானிகள் பற்றியும் இந்தப் புத்தகத்தில் ஒரு நீண்ட அத்தியாயம் உண்டு. நேருவைப் பற்றி இந்தப் புத்தகம் தரும் சித்திரம் அட்டகாசமானது. அதேபோல அமெரிக்காவில்  அப்துல் கலாம் பற்றிய அத்தியாயம் ஒரு நாவலைப் போன்றது. ஸ்டீபன் ஹாகிங் பற்றிய அத்தியாயம் – நல்ல நகைச்சுவை! ஐன்ஸ்டைனின்  அத்தியாயமோ கிளுகிளு. மூடப் பழக்கங்களுக்கு, ஒடுக்குமுறைகளுக்கு நேர்ந்ததைச் சொல்லும் அத்தியாயமோ அதிர்ச்சி. எல்லாவற்றிலும் வன்முறை. விஞ்ஞானிகள் எதிலுமே குறைவைப்பதில்லை.

உலகளவில் அறிவியல் ஏற்படுத்திய பஞ்சத்தால் மக்கள் வேறு வழியின்றி நரமாமிசம் உண்டது பற்றிய தகவல்களைத் தரும் அத்தியாயம் உங்களை உலுக்கக்கூடியது. சுயமோகனின் நாவல்களைப் படித்தும், சில உலகத் திரைப்படங்களைப் பார்த்து மட்டுமே நான் இதுவரை பதறியிருக்கிறேன். அதற்கு நிகரான பதற்றத்தைத் தந்தன, இந்தப் புத்தகத்தின் சில அத்தியாயங்கள்.

96களில் சுயமோகன் எழுதியதைப் பார்த்து ஆச்சரியப்பட்ட அளவிற்கு, நான் இன்னொருமுறை இன்னொரு எழுத்தாளரைப் பார்த்து ஆச்சரியப்படுவேன் என நினைக்கவில்லை. அது நிகழ்ந்தது குரவிந்தனின் காலகண்டனின் எழுத்துக்களைப் பார்த்துதான். இந்நூலின் மூலம் குரவிந்தன் காலகண்டன் முக முக்கியமான எழுத்தாளராக நிலைபெறுவார்.

பல இளைஞர்கள் அறிவியல் என்றாலே என்னவென்று தெரியாமல் அதன் பக்கம் ஈர்க்கப்படுகிறார்கள். ஒரு ப்ளஸ் டூ படிக்கும் பையன் இந்த நூலைப் படித்தால், அவன் வாழ்நாள் முழுவதும் அறிவியல் பக்கமே தலைவைத்துப் படுக்கமாட்டான். அறிவியலின் மீது எதிர்க்கருத்துக் கொண்டிருப்பவர்கள் செய்யவேண்டிய ஒன்று, இந்த நூலை இளைஞர்களுக்கு வாங்கிக் கொடுப்பது. இப்படி ஒரு நூல் இதுவரை தமிழில் இல்லாததுதான் பெரிய குறையாக இருந்தது. அந்தக் குறையும் தீர்ந்தது. இனிமேல் நடக்கவேண்டியது, இந்தப் புத்தகத்தை தமிழர்களுக்குப் பிரபலப்படுத்தவேண்டியது மட்டுமே. இதனை மிக முக்கியமான கடமையாக நினைத்துச் செய்யவேண்டும். (உழக்கு வெளியிட்ட புத்தகம் என்பதற்காக இப்படிச் சொல்கிறேன் என நினைப்பவர்களுக்குத் தடையில்லை!)

விஞ்ஞானிகள் இந்தப் புத்தகத்தை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்று பார்க்க ஆர்வமாக இருக்கிறது. நிச்சயம் திககாரர்கள் போல, குரவிந்தன் காலகண்டனின் இன்னொரு புத்தகமான உடையும் இந்தியா புத்தகத்தை உடைக்கிறேன் என்று சொல்லி, தன் அறியாமையை வெளிப்படுத்திக்கொண்டு நிற்கமாட்டார்கள் என்பது உறுதி. வேறு எப்படி எதிர்கொள்வார்கள் என்று தெரியவில்லை. scientific americanல்  ஒரு கட்டுரை வரலாம். அவர்கள் மட்டுமே இதனை எதிர்கொள்வார்கள் என நினைக்கிறேன். மற்றபடி விஞ்ஞானிகள் கீதையே கைவிட்டது போலவே இதையும் கைவிட்டுவிடுவார்கள். வேறென்ன செய்யமுடியும்? வாய்ப்பந்தல் போட்டு பிரசங்க  மேடைகளில் பேசும் சாமியார்களுக்கு எதிராக அறிவுப்பூர்வமாகப் பேச விஞ்ஞானிகளால் முடியும். ஆனால் மிக அறிவுப்பூர்வமாக எழுதப்பட்ட, ஆதாரத்தோடு எழுதப்பட்ட புத்தகத்தை எப்படி எதிர்கொள்ளமுடியும்? மௌனத்தால்தான்!

எனவே நண்பர்களே, ‘பஞ்சம் படுகொலை பேரழிவு - அறிவியல்’ புத்தகத்தை நிச்சயம் வாங்குங்கள். உங்கள் ஒவ்வொரு நண்பருக்கும் பரிந்துரை செய்யுங்கள். உங்கள் நண்பர் விஞ்ஞானியென்றால் அவர் நிச்சயம் வாசிக்கவேண்டியது இந்தப் புத்தகம் மட்டுமே! உங்கள் நண்பர் அல்லது அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கு இந்தப் புத்தகத்தைப் பரிந்துரை செய்யுங்கள். முடியுமென்றால் நீங்களே வாங்கி அன்பளிப்பாக அளியுங்கள். மற்றவை தன்னால் நடக்கும்.

அறிவியல் ஒழிக.:))))))

(இந்தப் புத்தகம் சென்னை புத்தகக் கண்காட்சியில் உழக்கு அரங்கில் கிடைக்கும்)

ஜரன் திரசன்னா

சனி, ஜனவரி 07, 2012

பஞ்சம், படுகொலை, பேரழிவு - அறிவியல்

பஞ்சம், படுகொலை, பேரழிவு : அறிவியல் என்ற புத்தகத்தில் குரவிந்தன் காலகண்டன், அறிவியல் அதன் அடிப்படையிலேயே அழிவைக் கொண்டிருக்கிறது என்று வாதிடுகிறார். சர் ஐசக் நியூட்டனில் தொடங்கி, ஐன்ஸ்டைன் வழியாக, இன்று வரை அறிவியல் எங்கெல்லாம் பேசப்பட்டுள்ளதோ, எங்கெல்லாம் செயல்முறையில் இருந்துள்ளதோ அங்கெல்லாம் அது திரிந்து, அங்குள்ள மக்களுக்குப் பேரழிவைத் தவிர வேறு எதையும் கொடுத்ததில்லை என்பதை ஆதாரங்களுடன் விரிவாக எடுத்துக் காட்டியுள்ளார்.

பின்னர் ஒரு கேள்வி எழலாம்: ஆனாலும் ஏன் பல அறிவாளி மூளைகளை அறிவியல் வசீகரிக்கிறது. உண்மைகளை பரிசீலனை மூலம் தெரிந்து கொள்வதையும், மனித குலத்தை முன்னேற்றப் பாதையில் செலுத்த வேண்டும் என்பதையும் விரும்புபவர்கள்தானே அறிவியலால் வசீகரிக்கப்படுகிறார்கள்? ஆனால், அதன் பின் என்ன ஆகிறது? இதற்கான பதிலையும் குரவிந்தன் விளக்குகிறார்.

-- கத்ரி காஷாத்ரியின் பதிவிலிருந்து

புதன், ஜனவரி 04, 2012

கண்ணில் விழுந்தவை


1. வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் - சர் வெங்கி ஆகிறார்.
2012 புத்தாண்டை ஒட்டி வெளியிடப்பட்ட பிரிட்டிஷ் அரச விருதுகள் பட்டியலில் சர் பட்டம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு நோபல் பரிசு கிடைத்த நேரத்தில் இந்தியர் என்று காலர் தூக்கி விட்டுக் கொண்டார்கள், பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும்.

2. என் ஆர் நாராயண மூர்த்தி பேட்டி

"டிசம்பர் 29 மிகவும் மோசமான நாள். முதலாவதாக இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோற்றுப் போனது. 120 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் 1.9 கோடி மக்கள் தொகையுடைய நாட்டின் அணியைத் தோற்கடிக்க 11 பேர் இல்லையே என்று வேதனையாக இருந்தது."

3. லோக்பால் பில் இன்னும் உயிரோடுதான் இருக்கிறது - காங்கிரசு.

1968லிருந்தே இதைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நேற்று ஒரு பேச்சு இன்று வேறு பேச்சு என்ற கெட்ட பழக்கமே கிடையாது. 2041லும் இதையே சொல்வார்கள்.

4. இந்திய பங்குச் சந்தையில் வெளிநாட்டு நபர்களும் முதலீடு செய்யலாம்.
பிரதமருக்கு எப்படியாவது வெளிநாட்டுப் பணம் வந்தா சரிதான். சில்லறை வணிகத்தில் முதலீடு இல்லை என்றால் பங்குச் சந்தை வழியாகவாவது வந்து நிறையட்டும்.

என்ன இருந்தாலும் உலக முதலீட்டாளர்களுக்கு இந்தியா மேல் எவ்வளவு பாசம்?

5. 2012ல் 5 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும், நிபுணர்கள் குழு.

6. மோனோ ரயில் ஒப்பந்த புள்ளி தொடர்பான கூட்டம் ரத்து செய்யப்பட்டது. யாரும் கலந்து கொள்ள முன்வரவில்லை.

7. வேலூர் மாநகராட்சியில் ஊழியர்கள் பற்றாக்குறை.

8. இந்திய நிறுவனங்கள் லாபத்தை அதிகரிக்க வெளிநாடுகளைத் தேடுகின்றன.
இந்தியாவில் வளர்ச்சி வீதம் குறைவதால் முதலீட்டுக்கு லாபம் கிடைக்காது என்று வெளி வாய்ப்புகளைத் தேடுகின்றன இந்திய நிறுவனங்கள்.

9. கிரிக்கெட் நேர்முக வர்ணனையை ஒலிபரப்பாத கோவை வானொலி நிலைய நிகழ்ச்சிப் பொறுப்பாளர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

10. திருவண்ணாமலை அருகில் உள்ளாட்சி தேர்தலில் மாற்றி வாக்களித்தார்கள் என்று தோற்றுப் போனவர் வீடுகளுக்கு தீ வைத்து விட  10 இருளர் குடும்பத்தினர் ரோட்டோரம் வசிக்கிறார்கள்.

ஞாயிறு, ஜனவரி 01, 2012

கண்ணில் விழுந்தவை


1. சச் கே சாம்னா என்ற இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அரசியல் தொடர்பான கேள்விகள் கேட்கப் போகிறார்களாம்.

இது வரை 'மாமனார் மீது ஆசை வந்ததுண்டா' போன்ற கேள்விகளை கேட்டு சமூக விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி வந்தவர்கள்  இனிமேல் 'லஞ்சம் வாங்கியதுண்டா' போன்ற கேள்விகளைக் கேட்டு சமூகத்தை தூய்மை செய்யப் போகிறார்களாம்.

செய்தி அறிக்கை

2. பிரிட்டானியா பிஸ்கட் நிறுவனத்தில் பெர்பார்மன்ஸ் காரணம் காட்டி பல ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்களாம்.

நிறுவனத்தின் லாப வளர்ச்சியை குறையாமல் பார்த்துக் கொள்ள வேறு வழியில்லையாம்.

பிரிட்டானியாவின் லாபம் அதிகரிக்க இருக்கிறது

3.  பிரிட்டிஷ் மகாராணி எலிசபத் II அரியணை ஏறி 60 ஆண்டுகள் ஆகி விட்டது.

அவரது மகன் சார்லஸ், திண்ணை எப்போ காலியாகும் என்று  காத்திருக்கிறார், கிழவி விட்டுத் தர மாட்டேன் என்கிறார். இதற்கிடையில் பேரன் வில்லியம் வேறு வரிசையில் வந்து விட்டான்.

எலிசபத் ராணியின் மணிவிழா

4. சோனி சோரி என்ற சத்திஸ்கர் சமூக ஆர்வலர், சித்திரவதை செய்யக் கூடாது என்று நீதி மன்றங்கள் உறுதி வாங்கிக் கொண்டு, போலீஸ் காவலுக்கு அனுப்பப்பட்டார். அடுத்த முறை நீதிமன்றத்துக்குக் கொண்டு வரப்பட்ட போது நடந்து வர முடியாமல் போலீஸ் வேனுக்குள்ளாகவே வருகை பதிவு எடுக்க வேண்டியிருந்ததாம்.

மருத்துவமனையில் சோதனை செய்த மருத்துவர்கள் கடுமையான சித்தரவதைகளும் பாலியல் வன்முறைகளும் அவர் மீது நிகழ்த்தப்பட்டன  என்று அறிக்கை கொடுத்திருக்கிறார்கள்.

தெகல்கா

5. செக்ஸ் சர்வே

அவுட்லுக் போன வார இதழில் வருடாந்திர செக்ஸ் சர்வே வெளியிட்டிருக்கிறார்கள். வாரா வாரம் வாங்கினாலும் இப்போது பத்திரிகையை பெயர் சொல்லிக் கேட்டதும் கடைக்காரர் ஒரு மாதிரி பார்த்து விட்டுத்தான் தந்தார்.

புத்தகத்தில் படங்களும் கட்டுரைகளும் ஒருமாதிரி பார்க்கும் வகையில்தான் இருந்தன.

6. சபரிமலையாக மாறும் தேனி.
சபரிமலைக்கு மாலை போட்ட பல பக்தர்கள் தேனி மாவட்ட எல்லையிலேயே விரதம் முடித்துத் திரும்பி விடுகிறார்களாம்.

கேரள வணிகர்களுக்கு பெறும் இழப்பு.

பக்தர்கள் இப்படியே பழகி விட்டால் சபரி மலையும் இந்திய ஒருமைப்பாடும் என்ன ஆகும்? கவலையாக இருக்கிறது.

7. லட்சக்கணக்கான பேர் வட கொரியாவில் அஞ்சலி
வடகொரியாவின் 'சர்வாதிகாரி' கிம் இல் மறைவுக்கு லட்சக்கணக்கான பேர் அழுது புலம்பி அஞ்சலி செலுத்திய படங்கள் வெளியாகியிருக்கின்றன.

பைட் பைப்பர் போல மக்களை எல்லாம் மயக்கி அழ வைத்து விட்டது போல செய்திகள் சொல்லுகிறார்கள்.

8. 'கல்லூரிகளின் நன்கொடையை ஒழிக்க வேண்டும், ஆனால் கட்டணம் நிர்ணயிக்கும் உரிமை வேண்டும்' என்று புகழ் பெற்ற  கல்வி வியாபாரி ஜி விஸ்வநாதன் கருத்து தெரிவித்திருக்கிறார்.

விஐடி என்ற நிறுவனத்தின் உரிமையாளர் அவர்தான்.

9. 1.4 லட்சம் நேனோ  கார்களில் ஸ்டார்டர் மோட்டாரை மாற்றப் போகிறது டாடா நிறுவனம். 'தரம் உயர்ந்த உதிரி பாகத்தை வாடிக்கையாளருக்குக் கொடுப்பதுதான் நோக்கம்' என்று சாதிக்கிறது.

என்ன ஒரு பெருந்தன்மை!

10. தமிழ்நாட்டில் 7800 ஏரிகள் இல்லாமல் போயின. - 20 ஆண்டுகளில்

11. 2012ல் உலகம் அழியாது என்று பல சோதிடர்கள் உறுதி அளித்திருக்கிறார்கள்.

நிம்மதியாக இருக்கிறது!

12. 100 பில்லியன் (10,000 கோடி  முறை ராமநாமம் எழுதுவது) ராமநாம யக்ஞம் நடத்தியிருக்கிறார்கள்.

கலியுகத்தின் அநியாயங்களை எதிர் கொள்ள வேறு என்னதான் வழி!

13. திருமண விழாக்களுக்கு காப்பீடு செய்யும் வசதி வந்துள்ளது. மழையின் காரணமாகவோ, மணமகன்(ள்) வேறு துணைக்கு ஆதரவாக வெளிநடப்பு செய்து விட்டதாலோ, பொது வேலைநிறுத்தத்தின் காரணமாகவோ திருமணம் நின்று விட்டால் காப்பீடு நிறுவனம் இழப்பீடு கொடுத்து விடும்.

இது வரை யாரும் ஏன் இப்படி யோசிக்கவில்லை?!


14. கட்டுப்படியாகும் மருத்துவ சேவை வழங்கும்படி தனியார் மருத்துவமனைகளுக்கு பிரதம மந்திரி கோரிக்கை விடுத்தார். - காரைக்குடி வாசன் ஐ கேர் நிகழ்ச்சியில் இப்படி பேசியிருக்கிறார்.

இப்பதான் கடமையை ஒழுங்கா செய்கிறார். சபாஷ், கீப் இட் அப்!

15. அம்பானி சகோதரர்கள் மூதாதையர் ஊருக்கு ஒரே நாளில் போனார்களாம்.

16. KG-D6 உற்பத்தி வீழ்ச்சியடைந்ததால் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குச் சந்தை மதிப்பு சரிந்து 2012 ஆரம்பிக்கும் போது முதலிடத்தை இழந்து விட்டது.

17. எல்ஏ ராம் - சீனா போய் வந்த அனுபவங்கள்.
அமெரிக்காவில் எத்தனை வருஷம் இருந்தாலும், சீனாவுக்கே சுற்றுலா போனாலும் தமிழ்நாட்டை மறக்காமல் இருக்கிறாரே!

கொழிக்கிறது சீனா