உலகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உலகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், மார்ச் 12, 2019

மார்க்சின் மூலதனமும் 21-ம் நூற்றாண்டின் உலக முதலாளித்துவமும்

தை 21-ம் நூற்றாண்டு உலகமயமான முதலாளித்துவம் பற்றிய ஒரு முழுமையான கோட்பாடாக உருவாக்க வேண்டும் என்று ஜான் ஸ்மித் வாதிடுகிறார். எப்படி மார்க்ஸ் முதலாளித்துவ உற்பத்தி முறையின் இயங்கு விதிகளை, மதிப்பு விதியிலிருந்து முழுமையாக விளக்கினாரோ, அதே போல இன்று தோன்றியிருக்கும் புதிய கட்டத்தை மதிப்பு விதியின் அடிப்படையில் விளக்க வேண்டும்.

மூலதனம் நூலில் மார்க்ஸ் முதலாளித்துவ உற்பத்தி முறை ஆதிக்கம் செலுத்தக் கூடிய ஒரு நாட்டை எடுத்து்க கொள்கிறார். "வெளிநாட்டு வர்த்தகம், அரசின் செயல்பாடுகள், கூலி உழைப்பு சக்தியின் மதிப்பை விடக் குறைவாக கொடுக்கப்படுவது இவற்றை எல்லாம் பற்றி நான் பேசப் போவதில்லை, அவற்றை அடுத்தடுத்த ஆய்வுகளில் எடுத்துக் கொள்வோம்" என்று ஒதுக்கி வைத்து ஆய்வு செய்கிறார்.

இன்றைக்கு நாடுகளுக்கிடையே ஏற்றத் தாழ்வு மையமான விஷயமாக வந்திருக்கிறது. அன்று சரக்கு இங்கிலாந்திலேயே உற்பத்தியாகி இங்கிலாந்திலேயே விற்பனையானது. உற்பத்தி முதலாளியிடமிருந்து விற்பனை முதலாளி உபரி மதிப்பை கைப்பற்றினாலும் அது ஒரே நாட்டுக்குள் நடந்து விடுகிறது. இன்றோ உற்பத்தி முதலாளி இந்தியாவில் இருக்கிறார், விற்பனை முதலாளி அமெரிக்காவில் இருக்கிறார். எனவே, இரண்டு நாடுகளுக்கிடையேயான உறவில் மதிப்பு விதி செயல்படுவதை பற்றி ஆய்வு செய்ய வேண்டியிருக்கிறது. இது போல பல விஷயங்களை நாம் ஆய்வு செய்ய வேண்டியிருக்கிறது.

இதனை ஒரு முழுமையான மார்க்சிய கோட்பாடாக உருவாக்குவதை தனிப்பட்ட ஒருவர் செய்து முடிக்க முடியாது. "நான் எடுத்துக் கொண்டிருப்பது, உற்பத்தி உலகமயமாதலில் மூன்றாம் உலக நாட்டு தொழிலாளர்களின் மதிப்பு அதிகரித்திருப்பது, இதில் மதிப்பு எப்படி கைப்பற்றப்படுகிறது என்பதை ஆய்வு செய்கிறேன்" என்கிறார். இதை ஒரு ஆய்வறிக்கையாக 2010-ல் எழுதுகிறார். இதை தரவுகள், வாதங்களை, கருத்துக்களை அப்டேட் செய்து 2016-ல் ஒரு புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்.

மூலதனம் நூலை புரட்டிப் பார்த்தால், ஜான் ஸ்மித், அறுதி உபரி மதிப்பு, ஒப்பீட்டு மதிப்பின் உற்பத்தி அறுதி மற்றும் ஒப்பீட்டு உபரி மதிப்பின் உற்பத்தி என்ற முதல் பாகத்தின் மூன்று பகுதிகளில் அவர் கவனம் செலுத்துகிறார். இது போக மூன்றாம் பாகத்தில் லாப வீதம் குறைந்து கொண்டு போவது, உபரி மதிப்பு சராசரி லாபமாக மாற்றமடைதல் போன்ற பகுதிகளையும் தனது வாதங்களில் பயன்படுத்துகிறார்.

மூலதனம் நூலின் முதல் பாகத்தின் முதல் பகுதியில் 3 அத்தியாயங்களில் பரிசீலிக்கப்படும் பணம் என்பதும் இன்றைக்கு மார்க்ஸ் பரிசீலித்த நிபந்தனைகளிலிருந்து வெகுவாக மாறியிருக்கிறது. மார்க்ஸ், “நான் தங்கச் சரக்கை பணமாக எடுத்துக் கொள்கிறேன்" என்று சொல்கிறார். தங்கம் என்பது மனித உழைப்பு சக்தியை செலுத்தி உற்பத்தி செய்யப்பட்ட ஒரு சரக்கு. மூலதனம் நூலில் தங்க அடிப்படையிலான பண முறை, வங்கிகளின் செயல்பாடுகள் தங்கக் கையிருப்பை அடிப்படையாகக் கொண்டிருப்பது என்றுதான் பரிசீலிக்கப்படுகின்றன. 3-வது பாகத்தில் இங்கிலாந்து வங்கி பணம் அச்சடித்து வெளியிடுவதற்கு குறிப்பிட்ட அளவு தங்கக் கையிருப்பு வைத்திருக்க வேண்டும் என்ற சட்டம் பற்றி விவாதிக்கப்படுகிறது.

உலகப் பொதுப்பணமாக தங்கத்தை பயன்படுத்தும் நடைமுறை 2-ம் உலகப் போரின் சமயத்தில் மாறுகிறது. அப்போது உலக முதலாளித்துவ நாடுகள் ஒன்று கூடி அமெரிக்க டாலருக்கு தங்கத்துடன் நிலையான விகிதத்தை வரையறுக்கிறார்கள். $35-க்கு ஒரு அவுன்ஸ் தங்கம் பரிவர்த்தனை செய்து கொள்வதாக அமெரிக்க அரசு உலக நாடுகளுக்கு உத்தரவாதம் அளிக்கிறது. அதன் அடிப்படையில் அனைத்து முதலாளித்துவ நாடுகளும் டாலரை உலகப் பொதுப்பணத்தை பயன்படுத்த ஆரம்பிக்கின்றனர். இது கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் நடைமுறையில் இருக்கிறது. உதாரணமாக, இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே வர்த்தக பற்றாக்குறை ஏற்பட்டால் இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு கப்பலில் தங்கத்தை ஏற்றி அனுப்பத் தேவையில்லை. டாலரை பரிமாறிக் கொள்வார்கள். ஏனென்றால், எப்போது வேண்டுமானாலும், டாலரை அமெரிக்க மத்திய வங்கியிடம் கொடுத்து தங்கம் வாங்கிக் கொள்ளலாம்.

1970-களில் உற்பத்தி முறையில் ஏற்பட்ட மாற்றம், மூலதனத் திரட்சியினால் ஏற்பட்ட விளைவுகளினால் அமெரிக்க அரசு, “இனிமேல், டாலருக்கு பதிலாக தங்கம் தருவது என்ற உத்தரவாதத்தை கைவிடுகிறோம். இந்த இரண்டுக்கும் பிணைப்பு இல்லை. 100 டாலர் கொண்டு கொடுத்தால் சில்லறை தருகிறோம். தங்கம் தரப் போவதில்லை" என்று அறிவிக்கின்றனர். 1970-கள் முதல் எந்த நாணயத்துக்கும் தங்க அடிப்படை இல்லை, உலகம் முழுவதும் யூரோ, டாலர், யென், பவுண்ட், சமீபத்தில் சீன யுவான் ஆகிய நாணயங்கள் உலகப் பொதுப்பணமாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. டாலருடைய முற்றாதிக்கம் நிலவுகிறது.

மார்க்ஸ் எழுதிய முதல் 3 அத்தியாயங்களில் பணம் பற்றி விவாதிக்கப்படுகிறது. அதில் மார்க்ஸ் தவறாக எழுதவில்லை. அன்றைய நிலைமையில் தங்கம் உலகப் பொதுப்பணமாக உள்ளது. சூக்குமமற்ற மனித உழைப்பு உருவேற்றப்பட்ட உடனடி வடிவமாக தங்கம் உள்ளது. காகிதப் பணமும் சுற்றோட்டத்தில் பயன்பட்டது. அப்படி இல்லாத உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக இதுதான் நிலைமை. இன்னும் 10 ஆண்டுகளில் இது மாறுமா என்று தெரியவில்லை, ஆனால், இன்றைக்கு தங்கம் உலகப் பொதுப்பணமாக இல்லாத கட்டமைவுதான் செயல்படுகிறது.

இதே போல மூலதனத் திரட்சியின் நிகழ்முறை, வங்கித் துறை எப்படி செயல்படுகிறது என்று ஆய்வு தேவைப்படுகிறது. பங்குச் சந்தையாகட்டும், அன்னியச் செலாவணி சந்தையாகட்டும், பிட் காய்ன் பற்றிய பிரச்சனை ஆகட்டும், கடன் பத்திரச் சந்தை ஆகட்டும் இவற்றின் கட்டமைவு சிக்கலானதாகவும், பிரம்மாண்டமாகவும் வளர்ந்திருக்கிறது.

ரியல் எஸ்டேட் இயற்கை வளங்களின் பொருளாதாரம் என்ன. 3 அடி வரை விவசாயம் செய்து கொள்ளலாம் அதற்குக் கீழ் இருப்பது முதலாளிகளுக்கு சொந்தம் என்று சொல்கிறார்கள். இதில் மீத்தேன் எடுக்க லைசன்ஸ் கொடுங்கள் என்று ஒரு இடத்தில், இன்னொரு இடத்தில் இரும்புத் தாது எடுக்க மலையை கேட்கிறார்கள், அலுமினியம் எடுக்க கவுத்தி வேடியப்பன் மலை வேண்டும் என்கிறார்கள்.

இந்தப் பொருளாதாரம் எப்படி இயங்குகிறது. இது ஏதோ ஆய்வுத் துறை ஆர்வத்துக்கானது மட்டும் இல்லை. இதைப் புரிந்தால்தான் நாம் யார் யார் எங்கு நிற்கிறார்கள். ஆலைத் தொழிலாளியின் பங்கு என்ன, சிறு விவசாயியின் நிலை என்ன என்று புரிந்து கொள்ள முடியும்.

முதலாளித்துவ வளர்ச்சிப் போக்கில் சிறு உடைமையாளர்கள் அழிந்து போவது அவசியமானது என்ற கோட்பாடு எல்லாம் பழைய காலத்தில் எழுதி வைத்தவை. இன்றைக்கு அது அப்படியே பொருந்துமா? சிறு விவசாயிகள் இருக்கிறார்கள். அவர் 8 வழிச்சாலையை எதிர்த்து நிற்கிறார். ஒருவர் அவரை ஆதரிக்க வேண்டும் என்கிறார். இன்னொருவர் நீங்கள் பெருவீத உற்பத்திக்கு எதிராக நிற்கிறீர்கள், முதலாளித்துவத்தை எதிர்க்கிறீர்கள், நீங்கள் பிற்போக்குவாதி என்கிறார்.

இவ்வாறாக, நாம் எல்லோரும் யானையை தடவிப் பார்த்து புரிந்து கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். 4 கண் தெரியாத நபர்கள் யானையை பார்க்க போனார்களாம். ஒருவர் காதை தடவிப் பார்த்து விட்டு யானை முறம் போல இருக்கிறது என்றாராம். இன்னொருவர் காலை தடவிப் பார்த்து விட்டு இல்லை இல்லை யானை தூண் போல இருக்கிறது என்றாராம். இரண்டு பேரும் விவாதம் செய்து கொள்கிறார்கள். முறம் போலத்தான் இருக்கிறது, தூண் போலத்தான் இருக்கிறது என்று அடித்துக் கொள்கிறார்கள்.

முதலாளித்துவ உற்பத்தி முறை என்ற யானை என்னவாக இருக்கிறது என்று காட்டியது மார்க்சின் பணி. மார்க்ஸ் கற்றுக் கொண்டு 21-ம் நூற்றாண்டில் இன்றைய உலக முதலாளித்துவ கட்டமைப்பு எப்படி உள்ளது, எப்படி இயங்குகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

உதாரணமாக, சப் பிரைம் நெருக்கடி பற்றி பேசுகிறோம். மார்க்சிய அமைப்புகள் எழுதிய கட்டுரைகள் பலவற்றில் நமது புரிதல் மேலோட்டமாக இருக்கிறது. வீட்டுக்கடன் வாங்கினார்கள், கட்ட முடியவில்லை, கவிழ்ந்து விட்டது என்ற அளவில் புரிந்து கொண்டிருக்கிறோம். இந்த நிதித்துறைக்கான கட்டமைப்பு பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இதற்கான சிறப்பு படிப்புகளை படித்தவர்கள் முதலீட்டு வங்கிகளை இயக்குகிறார்கள். இந்தக் கட்டமைவுகள் புரிந்து கொள்ளாமல் உலக முதலாளித்துவத்தை புரிந்து கொள்வது எப்படி?

இதைப் புரிந்து கொள்ளாமல் நாம் பண மதிப்பு நீக்கம் பற்றி எப்படி பேச முடியும். பண மதிப்பிழப்பு என்பது "நான் அதிகாரத்தில் இருப்பதால் நான் உத்தரவு போட்டு பணத்தை மாற்றி அமைத்து விடலாம்" என்று நினைத்த பா.ஜ.க/ஆர்.எஸ்.எஸ் சிந்தனையின் முட்டாள்தனத்துக்கு நல்ல உதாரணம். "எல்லோரும் பணத்தைக் கொடுங்க என்று அறிவித்தால் எல்லாம் மாறி விடும்" என்று நினைத்தார்கள். பணத்தின் பொருளாதார அடிப்படை பற்றிய ஆரம்பநிலை அறிவு கூட அவர்களுக்கு இல்லை. அவர்கள் மூலதனம் முதல் பாகத்தைக் கூட படித்திருக்கவில்லை என்பதுதான் இதன் பொருள்.

எல்லாவற்றையும் மார்க்ஸ் அல்லது லெனின் எழுதி வைத்து விட்டு போய் விட்டார். அதை அப்படியே எடுத்துக் கொள்ளலாம் என்று பார்ப்பது தவறு. மார்க்ஸ் அல்லது லெனின் பிரச்சனைகளை எப்படி பரிசீலித்தார், எப்படி முடிவுகளை வந்தடைந்தார் என்பதுதான் முக்கியமானது. லெனின் அந்த காலத்துக்கு, ரசியாவுக்கும் உலகத்துக்கும் ஏற்ற முடிவுகளை வந்தடைகிறார். அவற்றை எப்படி வந்தடைந்தார் என்பதுதான் முதன்மையானது.

மூலதனம் நூலில் என்ன சிறப்பு என்றால், அந்நூல் இயக்கவியல் பொருள்முதல்வாதத்தை ஒவ்வொரு வாக்கியத்திலும் கற்றுக் கொடுக்கிறது. அதை படித்தால் இயக்கவியல் பொருள்முதல்வாத அடிப்படையிலான அறிவியல் சிந்தனை முறை வளர்கிறது. அதைப் படிக்க முடியவில்லை, புரியவில்லை என்பதற்குக் காரணம் நமது சிந்தனை முறை தவறாக இருப்பதுதான்.

மேலும், முதலாளித்துவ கட்டமைவு என்பது ஒரு நாட்டுக்கு மட்டும் உட்பட்டதாக என்றைக்குமே இருந்ததில்லை. மூலதனம் முதல் பாகம் 4-வது அத்தியாயத்தில் மார்க்ஸ் சொல்வது போல, 16-ம் நூற்றாண்டில் உலகச் சந்தையும் உலக வர்த்தகமும் தோன்றியதில் இருந்துதான் நவீன மூலதனத்தின் ஆட்சி தொடங்கியது. இதை புரிந்து கொண்டால்தான் இன்றைய முதலாளித்துவ சமூகம் என்ற யானையை புரிந்து கொள்ள முடியும்.

அதற்கான பொறுப்பு மார்க்சிய அறிஞர்களின் கையில் இருக்கிறது என்று ஜான் ஸ்மித் சொல்கிறார்.

(காரல்) மார்க்சிடமும் (ஜான்) ஸ்மித்திடமும் கற்றது - 6 (இறுதிப் பகுதி)

திங்கள், மார்ச் 11, 2019

உலகளாவிய உற்பத்தியும் பொருளாதாரவியல் விளக்கங்களும்

த்தகைய குறைவான கூலி, மோசமான பணிச் சூழலில் முன்னணி பிராண்ட் பொருட்கள் உற்பத்தி ஆவதை நியாயப்படுத்துபவர்களி்ல ஒருவர் ஜக்தீஷ் பகவதி என்ற பொருளாதாரவியல் நிபுணர்.

ராணா பிளாசா விபத்துக்கு 6 மாதங்களுக்கு முன்பு அதே டாக்காவில் தஸ்றீன் ஃபேஷன்ஸ் என்ற தொழிற்சாலையில் தீவிபத்து ஏற்பட்டு 112 பேர் இறந்து விட்டனர். இது தொடர்பாக ஜக்தீஷ் பகவதி ஒரு கட்டுரை எழுதுகிறார். "உற்பத்தி ஆவது பிராண்ட் பொருளாக இருக்கலாம். ஆனால், பணத்தை கொடுத்து பொருளை வாங்குவதோடு எங்கள் பொறுப்பு முடிந்தது. அவர்கள் சுதந்திர சந்தையில் பேரம் பேசித்தானே உற்பத்தி செய்கிறேன். €1.35 என்ற விலையை சுதந்திரமாக ஏற்றுக் கொண்டுதானே உற்பத்தி செய்கிறான். அதனால் அவர்கள் நாட்டு தொழிலாளியை அப்படி நடத்தினால் எனக்கு என்ன ஆச்சு? வங்கதேச அரசு என்ன செய்கிறது? அவர்களுக்குத்தான் பொறுப்பு" என்று எழுதுகிறார். ராணா பிளாசா விபத்துக்குப் பிறகும் அதே போல எழுதுகிறார்.

ஆனால், வெறும் பொருளாதார உறவுதான் எங்களுக்கு பொறுப்பு இல்லை என்று சொன்னாலும், பொறுப்பை தட்டிக் கழிக்க முடியவில்லை. இத்தகைய உற்பத்தி நிறுவன உறவுகளை எப்படி புரிந்து கொள்வது என்று ஜான் ஸ்மித் கேட்கிறார். வங்கதேசத்தில் கடந்த 10-15 ஆண்டுகளில் பொருளாதாரம் நிறைய மாறியிருக்கிறது. முன்பு இருந்தது போல இல்லாமல் ஆயத்த ஆடை உற்பத்திக்காக 5,000 தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. அவற்றில் 45 லட்சம் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். அவர்களில் 85% பெண்கள். இது தொடர்பாக ஐ.நா நிறுவனங்கள் ஆய்வுகள் செய்துள்ளன.

ஆம்பூரில் உள்ள காலணி தொழிற்சாலைகளிலும் வேலை செய்பவர்களில் பெரும்பாலும் பெண்களாக இருப்பார்கள். உழைப்பு பட்டாளத்தை பெண்மயமாக்குவது என்று இதை அழைக்கிறார்கள். பெண்களுக்கு ஆண்களுக்குக் கொடுக்கும் கூலியில் முக்கால் பங்கு கொடுத்து கூலிச் செலவை குறைக்க முடிகிறது. வங்க தேச ஆயத்த ஆடைத் துறையில் பெண்களின் கூலி ஆண்களுக்குக் கொடுக்கப்படும் கூலியில் சுமார் 73% ஆக உள்ளது என்கிறார் ஜான் ஸ்மித். சென்னைக்கு அருகில் இயங்கிய ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் நோக்கியா ஃபோன் உற்பத்தி தொழிற்சாலையில் கூட பெண்கள்தான் அதிகமாக ஈடுபடுத்தப்பட்டனர்.

இவ்வாறு பல்வேறு வழிகளில் கூலியை குறைத்து லாபத்தை அதிகரிப்பதற்கு முதலாளித்துவம் வழி கண்டு பிடிக்கிறது, குறைந்த விலை, குறைந்த கூலி, செலவுக் குறைப்பு, அதிக லாபம், மூலதனக் குவிப்பு என்று ஓடிக் கொண்டே இருக்கிறது. இந்த உந்து சக்தி எப்படி இயங்குகிறது என்பதிலிருந்து ஜான் ஸ்மித் பேசுகிறார். இதை எப்படி புரிந்து கொள்ளப் போகிறோம். ஜக்தீஷ் பகவதி போன்ற முதலாளித்துவ அறிஞர்களை விட்டு விடுவோம்.

கம்யூனிஸ்ட் கட்சிகள், மார்க்சிய இயக்கத்தில் இதை எப்படி புரிந்து கொள்கிறோம். இதற்கு என்ன விளக்கம் அளிக்கிறோம்? ஏகாதிபத்தியம் பற்றி நாம் புரிந்து கொள்வது லெனின் எழுதிய ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சகட்டம் என்ற நூலில் இருந்து. அந்த நூலில் பெரிய ஏகபோக தொழில் நிறுவனங்கள் உருவாவது, வங்கிகள் ஏகபோகங்களாக உருவெடுப்பது, வங்கிகளும் தொழில் நிறுவனங்களும் இணைந்து நிதி மூலதனம் உருவாவது, மூலதனம் ஏற்றுமதி செய்யப்படுவது, ஏகாதிபத்திய நாடுகள் காலனிகளாக பிரித்துக் கொள்வது என்று 5 அம்சங்களை அந்த நூல் விளக்குகிறது.

ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் என்ற நூல் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை என்பது போன்ற ஒரு பிரகடனம். அரசியல் ரீதியாக என்ன நடந்து கொண்டிருக்கிறது, நாம் என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறது. ஜான் ஸ்மித் இதை எப்படி பார்க்கிறார்?

19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கற்பனாவாத சோசலிஸ்டுகளான சான் சிமோன், ஃபூரியே, சிஸ்மாண்டி போன்றவர்கள் முதலாளித்துவ சமூகத்தை மிகக் கடுமையாகவும் துல்லியமாகவும் விமர்சிக்கிறார்கள். “என்ன மாதிரியான உலகம் இது. இவ்வளவு பொருட்கள் உற்பத்தியாகி குவிகின்றன. ஆனால், பெரும்பான்மை மக்கள் ஏழ்மையில், பட்டினியில் உழல்கிறார்கள். எதிர்காலத்தில் நாம் ஒரு பொன்னுலகை படைப்போம். எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கும் ஒரு உலகத்தை படைப்போம்" என்று இவர்கள் பேசுகின்றனர். இவை அனைத்தும் அறிவியல் அடிப்படை இல்லாத கற்பனாவாத சிந்தனைகள்.

முதலாளித்துவம் பற்றிய அறிவியல் அடிப்படையை வழங்குவது மார்க்ஸ் தனது 20-30 ஆண்டு கால உழைப்பின் மூலம் படைத்த மூலதனம் நூல். மூலதனம் நூல் சரக்கு - பயன் மதிப்பு, பரிவர்த்தனை மதிப்பு, மதிப்பை படைப்பது எது, உழைப்பின் இரட்டைத் தன்மை என்று ஆரம்பிக்கிறது. மூலதனம் நூலில் மார்க்ஸ் பேசக்கூடிய எந்த ஒரு விஷயத்தையும் இந்தப் புள்ளியில் இருந்து வளர்த்துச் சென்று அடையலாம்.

அறிவியல் இந்த அடிப்படையில்தான் செயல்படுகிறது. உதாரணமாக, 2500 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்க அறிஞர் தேல்ஸ் உலகத்தில் எல்லாமே நீரால் ஆனது என்று முன் வைத்த கருதுகோள் அறிவியல் சிந்தனையின் வளர்ச்சியில் மிகப்பெரிய ஒரு பாய்ச்சல் என்கிறார்கள் அறிஞர்கள்.

இவ்வாறு முதலாளித்துவத்தின் எல்லா நிகழ்வுகளையும் ஒரு அடிப்படை கருதுகோளிலிருந்து விளக்கும் போது அவற்றில் என்னென்ன பாத்திரங்கள் உள்ளன, அவர்களுக்கிடையே இருக்கும் உறவு என்ன, மாறிச்செல்லும் இயக்கத்தின் விதிகள் என்ன என்று எல்லா விஷயங்களும் மூலதனம் நூலில் விளக்கப்படுகின்றன.

அத்தகைய அறிவியல் அடிப்படையில் லெனினின் ஏகாதிபத்தியம் நூல் எழுதப்படவில்லை. அவரது நோக்கமும் அதுவாக இருக்கவில்லை. அடுத்த 100 ஆண்டுகளில் உலக கம்யூனிச இயக்கத்தில் என்ன நடந்தது என்று ஜான் ஸ்மித் பரிசீலனை செய்கிறார். 1915 முதல் 2010 வரையில் மார்க்சிய அறிஞர்கள் செய்த ஆய்வுகளை பரிசீலிக்கிறார். சோவியத் யூனியனிலும் உலகின் முன்னணி கம்யூனிஸ்ட் கட்சிகளிலும் ஸ்டாலினிசம் பொருளாதாரத் துறையில் அறிவியல் அணுகுமுறையை காலி செய்து விட்டது என்கிறார். பால் ஸ்வீசி, பால் பேரன் அவர்கள் மதிப்பு விதியை ஒட்டி ஏகபோகங்களை பரிசீலிக்கிறார்., பின்னர் சார்புநிலை கோட்பாட்டு வாதிகள் மதிப்பு விதியின் அடிப்படையில் பேசியிருக்கின்றனர். 1990-கள், 2000-களில் டேவிட் ஹார்வி, எலன் வுட், மைக்கேல் ராபர்ட்ஸ் போன்ற கல்வித்துறை அறிஞர்கள் ஆய்வு செய்கின்றனர்.

இவர்கள் யாரும் புதிதாக தோன்றியிருக்கும் ஒரு நிலைமையை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. 1970-80களில் பெரும்பான்மை தொழிலாளர்கள் அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பானில் இருந்தார்கள். இன்று 80% தொழிலாளர்கள் மூன்றாம் உலக நாடுகளில் உள்ளனர். இந்தத் தொழிலாளர்கள் மதிப்பை படைத்து இந்த மதிப்பு பல்வேறு நிறுவனங்களுக்கிடையே பங்கிடப்படுகிறது. இந்த நிகழ்வை தீர்மானிக்கும் விதிகள் என்ன என்று எப்படி கண்டுபிடிப்பது?

மேலே சொன்ன உதாரணத்தில் வங்கதேசத்தின் ஜி.டி.பியை பார்த்தால் ஒரு சட்டைக்கு €0.90 தான் சேர்ப்பார்கள். €1.35 ஏற்றுமதி, €0.40 இறக்குமதி. €.95தான் வங்கதேசத்தின் ஜி.டி.பியில் சேரும். ஜெர்மனியின் ஜி.டி.பில் €3.60 சேரும். இதன்படி 'ஜெர்மனி பணக்கார நாடு, அங்குதான் உற்பத்தித் திறன் அதிகம். அவர்கள் €3.60 உற்பத்தி செய்திருக்கிறார்கள். வங்கதேச தொழிலாளர்கள் €0.90 தானே உற்பத்தி செய்திருக்கிறார்கள்' இப்படி நாம் எடுக்கும் தரவுகளில் பல தவறான சித்திரங்களை தருகின்றன. புள்ளிவிபரங்களையே இந்த பார்வையோடு கையாள வேண்டியிருக்கிறது என்று ஜான் ஸ்மித் வாதிடுகிறார்.

(காரல்) மார்க்சிடமும் (ஜான்) ஸ்மித்திடமும் கற்றது - 5

(6-வது பகுதியில் தொடரும்...)

புதன், டிசம்பர் 01, 2010

அரசியலும் தொழில் வணிகமும் - புதிய உலகம்

அரசியல், பன்னாட்டு உறவுகள், வணிக நிறுவனங்களுக்கிடையேயான பரிமாற்றங்கள் அனைத்திலும் மூடிமறைப்பிலேயே பணிகள் நடந்து வந்திருக்கின்றன.

'மக்கள் எல்லாம் ஒன்றும் தெரியாத அப்பாவிகள், நாம் திரைமறைவில் பேச்சு வார்த்தை நடத்தி, பேரம் பேசி முடிவுகள் எடுத்து அறிவிப்போம். அதை மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.'

இந்தியாவில் நீரா ராடியா தொலைபேசி பதிவுகள், அமெரிக்க வெளியுறவுத் துறையின் தகவல் பரிமாற்றங்கள் விக்கிலீக்சால் வெளியிடப்பட்டது இவை தகவல் தொழில் நுட்பப் புரட்சிக்குப் பிறகான புதிய உலகின் நிதர்சனங்கள்.

இதற்கான எதிர்வினையாக, அதிகார வட்டங்களும், வணிக நிறுவனங்களும் தமது தகவல் பரிமாற்றங்களை இன்னமும் ரகசியமாக பூட்டி வைக்க முயற்சிப்பார்கள். இணையத்தின் வெளிப்படையான செயல்பாட்டை முடக்கிப் போடும் சட்டங்களும் ஒப்பந்தங்களும் வர ஆரம்பிக்கலாம். இவை வெற்றி பெற்று விட்டால் ஆர்வெலின் 1984 / மாட்ரிக்ஸ் திரைப்படம் போன்று ஆட்டி வைக்கும் சில சூத்திரதாரிகளுக்கு நாம் ஆடிக் கொண்டிருக்கும் நிலைமை தொடரும்.

இந்தத் தகவல் விடுதலையை (information wants to be free) தடுக்க முடியாவிட்டால், அரசியல்வாதிகளும், அதிகாரிகளும், தொழில் முனைவர்களும் நடந்து கொள்ளும் அடிப்படை முற்றிலும் மாற வேண்டியிருக்கும். நான்கு சுவர்களுக்குள் ஒன்றும், வெளியுலகுக்கு ஒன்றுமாக இரட்டை வேடங்கள் வைத்திருக்க முடியாமல் போய் விடும்.

சிக்கலான பேச்சு வார்த்தைகள், அதீத ஆதாயம் தரும் தொழில் உத்திகளை ரகசியமாக வைத்திருக்க முடியாது என்ற நிதர்சனத்தை ஏற்றுக் கொண்டு அனைவரும் செயல்பட வேண்டியிருக்கும்.

வியாழன், ஆகஸ்ட் 12, 2010

கல்லால் அடித்துக் கொல்லப்பட வேண்டும் - கற்கால மனிதர்களின் சட்டம்

இரானில் திருமணத்துக்கு வெளியில் பாலுறவு வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்ணை கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும் என்று விதித்த தண்டனைக்கு எதிராகக் குரலெழுப்புவோம்.

http://english.aljazeera.net/news/middleeast/2010/08/2010812141953137551.html

வியாழன், ஜூலை 08, 2010

இலங்கை அரசுக்கு எதிரான பொருளாதாரத் தடைகள் - 2

முகிலனின் புறக்கணிப்பு

இலங்கைக்கு போனீங்க காலை வெட்டிப்புடுவன் என்ற இடுகைக்கு சில திருத்தங்கள்:

1. இலங்கையில் எடுக்கப்படும் தமிழ்த் திரைப்படங்கள் புறக்கணிக்கப்படும்.
2. இலங்கை அணி விளையாடும் கிரிக்கெட் ஆட்டங்கள் புறக்கணிக்கப்படும்.
3. இலங்கைக்குப் போய் விளையாடும் கிரிக்கெட் அணிகள் புறக்கணிக்கப்படும்.

4. இலங்கையின் 1950க்கு பிறகான வரலாற்றில் ஈழப் போராட்டம் விரிவாக வகுப்பறைகளில் சொல்லித் தரப்படும்.
5. இந்தியர்கள் இலங்கைக்கு சுற்றுலா அல்லது தொழில் தொடர்புகளை ஏற்படுத்தக் கூடாது.
6. இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு வரும் பொருட்களை புறக்கணிக்க வேண்டும்

7. இலங்கை அரசின் கொடியையும், சின்னங்களையும் புறக்கணிக்க வேண்டும்
8. இலங்கையின் விளைபொருட்களை வாங்கக் கூடாது.

செவ்வாய், ஜூலை 06, 2010

ஐரோப்பியர் மனிதர்கள், இந்தியர்கள் இருதயமற்றவர்கள்

வளர்ந்து வரும் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரிச் சலுகை அளிக்கும் திட்டத்திலிருந்திலிருந்து இலங்கையை ஐரோப்பிய யூனியன் நீக்கியுள்ளது.

மனித உரிமை நடைமுறைகளை அமல்படுத்துவதில் கண்டறியப்பட்ட குறைபாடுகள் காரணமாக கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்த வரிச்சலுகையை தற்காலிகமாக ரத்து செய்ய முடிவு எடுக்கப்பட்டாலும், பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு ஆறு மாதங்களுக்குள் உரிய நடவடிக்கைகளை எடுக்கு இலங்கை அரசுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

ஜூலை முதல் தேதிக்கு முன்பு இதற்கான பதில் கிடைக்காததால் இலங்கைக்கு ஜிஎஸ்பி ரத்தாகிறது - பிபிசி செய்தி.

பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஐரோப்பிய யூனியனுக்கு இலங்கை அரசின் அட்டூழியங்கள் கண்ணில் படுகின்றன. தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் கண்ணடைத்துப் போயிருக்கிறது.
  • தமிழர் பகுதிகளுக்கு தன்னாட்சி உரிமை வழங்கும் அரசியல் அமைப்பை செயல்படுத்தும் வரை இலங்கை அரசுக்கு எதிரான பொருளாதார / அரசியல் தடைகளை உலக நாடுகள் செயல்படுத்த வேண்டும்.

  • இதற்கான முன்முயற்சிகளை தமிழ்நாடும், இந்திய அரசும் செய்ய வேண்டும்.

  • தென் ஆப்பிரிக்காவில் நிறவெறி அரசுக்கு எதிரான தடைகளில் இந்தியா முன்னிலை வகித்தது போல இலங்கை அரசுக்கு எதிராகவும் செயல்பட வேண்டும்.
(தொடரும்)

வெள்ளி, ஜூன் 18, 2010

அமெரிக்க உயிர்களும், இந்திய உயிர்களும்

'Compared to 11 deaths reported during oil rig explosion, Bhopal's tragedy has claimed the lives of 15, 0000 men, women and children.'

அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு

While the US government holds BP and its CEO Tony Heyward directly responsible for the spill; in 1984, the US embassy pushed for 'safe passage' for the then Union Carbide chief Warren Anderson.

புதன், செப்டம்பர் 16, 2009

10 ஆண்டுகளுக்குப் பிறகு - சில குறிப்புகள்

முந்தைய நாள் நன்கு வெயிலடித்திருந்ததால் சுடுதண்ணீர் நிறைய நிரம்பியிருந்தது. இன்றைக்கு சூரிய சக்திக் கலனின் சூட்டை இழக்காமல் தடுக்கும் பூச்சை மேம்படுத்துவதற்கு தொலைபேச வேண்டும். சுடுதண்ணீரை ஒரு பீங்கான் கோப்பையில் பிடித்து, அரைத்து வைத்திருந்த துளசி, சுக்குப் பொடியையும் சிறிதளவு தேனையும் சேர்த்து சூடாகக் குடித்து விட்டு அடுத்த வேலை.

மின்சார அளவு நாள் முழுமைக்கும் போதுமானதாகத்தான் தெரிகிறது. எல்லா வேலைகளையும் முடித்துக் குளித்து தியானமும் செய்த பிறகுதான் வெளியுலகச் செய்திகளை உள்ளே விட வேண்டும். கைக்கெட்டும் தூரத்தில் இருக்கும் இயக்கியைப் பயன்படுத்தி தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில் நடந்து விட்ட நடப்புகளைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற துடிப்பு மட்டும் குறையவேவில்லைதான்.

படிக்கும் அறைக்குள் வந்து செய்தித் தளங்களை இயக்கினேன். இதைப் படித்து விட்டு நியூ கினியா நாட்டைப்பற்றிய விபரங்களைப் பார்க்க வேண்டும். தமிழ்ஈழத்தில் நடக்கப் போகும் உலகத் தமிழ் மாநாடு குறித்த செய்திகளை மேய்ந்து விட்டு வலைத்தளத்தில் எழுதியவற்றை பதிந்து விட்டேன்.

உலகத் தமிழ் மாநாட்டை தொலைதொடர்பாக நடத்தாமல் பங்கேற்பவர்கள் எல்லோரும் நேரில் கலந்து கொள்ளுமாறு ஏற்பாடு செய்கிறார்கள். அத்தனை ஆண்டுகள் போரில் அவதிப் பட்ட மக்கள் உருவாக்கிய சாதனைகளை உலக தமிழ் சமூகம் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம். அதே மாநாட்டின் parallel அமர்வுகளாக சிங்கள மொழி வளர்ப்பு மாநாடும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

28ம் தேதியிலிருந்து 30ம் தேதி வரை மூன்று நாட்கள். போக வேண்டும் என்றுதான் ஆசை. மூன்று நாட்கள் விடுமுறை ஆகி விடும்.

ஒன்பதரை மணிக்கு தொழில் நுட்ப ஆய்வுக் கூட்டம். அது சீக்கிரமாக முடிந்து விட்டால் கருத்தரங்கையும் பார்த்துக் கொள்ளலாம். கருத்தரங்கை ஒரு திரையில் ஓட விட்டுக் கொண்டேன். அமைப்பாளர்கள் அரங்கில் நாற்காலிகளை அமைத்திருந்தார்கள். இது போல நேரடி விவாதங்களுக்கு செய்ய வேண்டிய பணிகளின் சிக்கல் மட்டும் குறைந்தபாடில்லை. ஒன்பதரைக்குள் ஒவ்வொருவராக ஆய்வுக்கூட்டத்துக்கு வந்து விட்டார்கள்.

அரை மணி நேரத்தில் கூட்டம் முடிந்து விட கருத்தரங்கு ஒலியை உயர்த்தினேன். கூட்டத் திரை நகர்ந்து பொதுப்படையாக வைத்திருந்த கணினித் திரைகள் ஓட ஆரம்பித்தன. கருத்தரங்கில் அறிமுக உரைகள் மூன்று முடிந்து முதல் உரையாளர் பேச ஆரம்பித்திருந்தார். வங்காளத்தைச் சேர்ந்தவர் என்று அடிக்குறிப்பு. இன்றைக்கு மொழி மாற்றத்தின் தரம் மிகச் சிறப்பாக இருந்தது. குறிப்பாக வங்காள மொழியிலிருந்து தமிழுக்கும் மொழி பெயர்க்கும் போது பலருக்கு சறுக்கி விடுகிறது. புதிய மொழிமாற்றி இன்றுதான் செயல்படுத்தியிருக்கிறார்கள்.

தமிழ் ஒலிபரப்பை மாற்றி வங்காள மொழியில் அவர் பேசுவதை ஒலிக்க விட்டேன். காதில் தேமதுரம் பாய்வது போன்ற உணர்வைத் தரும் மொழி. அவரது குரல் தமிழிலும் நன்கு ஒலிக்கிறது. உரையை மொழி மாற்றம் செய்து, பேசுபவரின் குரலிலேயே விரும்பிய மொழியில் கேட்டுக் கொள்ளும் வசதி பெரிய வரப்பிரசாதம்தான்.

அடுத்த பேச்சாளர் இந்தியில் ஆரம்பித்தார். இந்தியில் முதுகலை படித்துக் கொண்டிருக்கும் மாணவி. இந்தியிலிருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யும் இயக்கி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர் எழுதி வெளியிட்டது. அவரது குரல் மட்டுமில்லாமல் மனமும் ஒலிப்பதாகத் தோன்றுவதற்கு இன்னும் ஒரு காரணமாகப் போய் விட்டது.

கருத்துச் சிதறல்கள் அறையை நிறைக்க ஆரம்பித்தன. நேற்று இரவில் எனக்குப் படிக்க அனுப்பியிருந்த பதிப்பிலிருந்து மேலும் பல மாறுதல்கள் செய்து இன்னும் செதுக்கி விட்டிருந்தார். 10 நிமிடங்களுக்கான உரை. ஆரம்பிக்கும் போது நேரடியாகக் கலந்து கொண்டிருந்த 15 பேரைத் தவிர வெளியிலிருந்து 20 பேர் இணைந்திருந்தார்கள். ஒவ்வொரு நிமிடத்திலும் நூற்றுக்கணக்கான இணைப்புகள் சேர்ந்து கொண்டிருக்கின்றன என்று முனையம் காட்டியது.

இந்த நேரத்தில் நடக்கும் கருத்தரங்குகளுக்கு நல்ல வரவேற்பும் விளம்பரமும் கிடைக்கின்றன. அமெரிக்காவில் பின்மாலை, ஜப்பானில் பிற்பகல், சீனாவில் வேலை நேரம், மத்தியக் கிழக்கு நாடுகளில் வேலை ஆரம்பிக்கும் பொழுது. ஐரோப்பிய நாடுகளில் மட்டும்தான் அதிகாலையாக இருக்கும். நிகழ்ச்சியைப் பற்றிய கருத்துக்கள் சூடுபிடிக்க பல இணைப்புகள் சரசரவென்று உள்ளே நுழைந்தன.

சரியாக 10 நிமிடங்களில் உரை முடித்து விட்டது. அதற்குள் 3368 கருத்துரைகளும் 216 விளக்கத் தேவைகளும் வந்து விட்டிருந்தன. விளக்கத் தேவைகளில் பார்ப்பவர்களின் தெரிவில் முதல் 5 இடங்களைப் பிடித்த கேள்விகளுக்கு பதில் சொல்வார் என்று அறிவிப்பு வந்தது.

செவ்வாய்க் கிரகத்தில் மனிதர்கள் குடியேறும் போது அங்கு பூமியில் இருப்பது போன்றே பல மொழிகள், பல கலாச்சாரங்களை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும் என்பதுதான் அவளது கருத்துரையின் அடிப்படை. அது தொடர்பாக இருந்த ஐயங்களும், பதற்றங்களும் கேள்விகளில் நன்றாகவே தெரிந்தன. அப்படித் திட்டமிடுவதால் குடியேற்றத்துக்கான செலவுகள் 3% மட்டுமே அதிகமாகும் என்ற கணக்கீடுகள். இந்த ஆராய்ச்சியுரையின் முடிவால் குடியிருப்பில் கலந்து கொள்ள முன்வருபவர்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரிக்கப் போகிறது.

அது ஒரு பக்கம் தொடர்ந்து கொண்டிருக்க நிறுவனத் திரையிலும் உரையாடல் வேண்டுகோள்கள் நிறைந்து விட்டிருந்தன. அடுத்த சனிக்கிழமை ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொள்ள முடியுமா? நேரடி விழாக்களில் கலந்து கொள்வதை முடிந்த வரை தவிர்ப்பது என்று முடிவு செய்திருந்தாலும் இது போன்ற வேண்டுகோள்கள் தவிர்க்க முடியாமல் வந்து கொண்டுதான் இருக்கின்றன. நேரடியாகக் கலந்து கொள்ள முடியா விட்டாலும், அவர்கள் விழாவுக்கு எனது கருத்துரையை அனுப்புகிறேன் என்று பதில்.

வெளியில் வெயில் ஏற ஆரம்பித்திருந்தது. அறையில் வெப்பநிலையை பராமரிக்கும் கருவியின் ஹம் ஓசை இன்னும் ஒரு ஜதி உயர்ந்தது.

முன்பெல்லாம் flexi-timings என்று நிறுவனங்களில் ஒரு முறையை செயல்படுத்துவதைப் பற்றி பெரிதாக விவாதித்துக் கொண்டிருந்தார்கள். வீட்டிலிருந்தே வேலைகளைப் பார்த்துக் கொள்வது, தேவைப்படும் போது மட்டும், முக்கியமாக குழு சந்திப்புகள், விவாதங்களுக்கு மட்டும் அலுவலகத்துக்கு வாரத்துக்கு இரண்டு மூன்று நாட்கள் வருவது என்று நடைமுறை பேசப்பட்டு வந்தது. வீட்டில் இருந்தே வேலை பார்க்கும் போது என்னென்ன சிக்கல்கள் வரும் அவற்றை எப்படிக் கையாளுவது என்பது ஒரு பெரிய தடையாக இருந்தது.

ஒரு பொத்தானைத் தட்டினால் 'நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம், அடுத்தவர்கள் நம்மை அணுகலாமா' என்று வெளிப்படுத்திக் கொள்ளலாம். நமது வேலை திரையை, நமது உருவத்தை மற்றவர்கள் பார்க்கலாமா என்று அமைத்துக் கொள்ளலாம். அதைப் போல யார் யார் எங்கெங்கு என்னென்ன வேலையில் ஈடுபட்டுள்ளார்கள் என்று மூன்றாவது திரையின் வலது ஓரத்தில் பார்த்துக் கொள்ளலாம். சுஜாதா இணையத்தை அறிமுகம் செய்து எழுதிய புத்தகத்தின் தலைப்பைப் போல உலகம் உண்மையிலேயே வீட்டுக்குள்ளேயே வந்து விடுகிறது.

ஒரு நாளைக்கு 8 மணி நேரம் வேலை பார்த்தால் மட்டும் போதாது, அந்த எட்டு மணி நேரத்தில் குறைந்தது 6 மணி நேரம் மற்றவர்களுக்கு வெளிப்படுத்திக் கொண்டு அவர்கள் அணுகும் நிலையில் இருக்க வேண்டும் என்று நெறி வகுத்துக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாணி. சிலர் சரியாக 6 மணி நேரத்துக்கு மேல் ஒரு நிமிடம் கூட பொது இணையத்தில் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதில்லை. 'என் வாழ்க்கையை எனது சுயத்தை வைத்துக் கொள்வது எனது உரிமை' என்று வாதம்.

இப்படி எழுதும் போது கணினித் திரை மற்றவர்களுக்குக் காட்டுவதில்லை. தொந்தரவு செய்ய வேண்டாம் என்று தகவலையும் போட்டு விட்டால், புருவங்கள் முடிச்சிட நான் உட்கார்ந்திருப்பதை, நிறுவன சகாக்களும், உறவினர்களும், நண்பர்களும் - இணைப்பில் உள்ள, அணுகல் கொடுத்துள்ளவர்கள் - பார்த்துக் கொள்ளலாம்.

உரையை விண்வெளி கழகத்தின் இணையத்தளத்தின் முதல் பக்கத்தில் சுட்டி கொடுத்திருக்கிறார்கள். 24 மணி நேரத்தில் 300 மில்லியன்களுக்கும் அதிகமான பேர் படித்திருக்கிறார்கள்.

நாடாளுமன்ற மக்களவையில் நடக்கும் விவாதத்தையும் வாக்கெடுப்பையும் பார்த்துக் கொண்டிருந்தேன். சீனாவில் நடக்கும் உள்நாட்டு போராட்டத்தைக் குறித்த விவாதம். ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா என்ன முடிவெடுக்க வேண்டும் என்று பேசி முடிவெடுக்கும் அமர்வு. யார் யார் எப்படி வாக்களிப்போகிறார்கள் என்று முடிவு செய்வதற்கு முன்பு ஒவ்வொரு தரப்பிலிருந்தும் இரண்டிரண்டு பேர் பேசினார்கள்.

அமெரிக்காவைச் சார்ந்த தாய்வானிலிருந்து செயல்பட்டு வந்த தேசியக் கட்சியை அங்கீகரிக்க வேண்டும் என்று ஒரு தரப்பு, பெய்ஜிங்கிலிருந்து நாட்டை 70 ஆண்டுகளாக ஆண்டு வரும் கம்யூனிஸ்டு கட்சியை அங்கீகரிக்க வேண்டும் என்று இன்னொரு தரப்பு, தேசிய ஆட்சி ஒன்றை ஏற்படுத்தி புதிய அரசியலமைப்பு சட்டம் வகுத்து அதன்படி தேர்தல் நடத்த வேண்டும் என்று மூன்றாவது தரப்பு. அரை மணி நேரத்தில் விவாதங்கள் முடிந்தன. முதலில் பிரதிநிதிகளின் வாக்கெடுப்பு. ஒவ்வொரு மக்களவை உறுப்பினரும் தனது தேர்வை குறிப்பிட்டதும், அவர்களது தொகுதி, தொகுதியில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை, இவர் தேர்தலில் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை என்று பட்டியல் வளர்ந்து கொண்டே போனது.

அடுத்த 1 மணி நேரத்தில் பொது வாக்கெடுப்பு நடக்கும். தமது தொகுதி உறுப்பினர் அளித்த வாக்கை ஏற்றுக் கொள்ளாதவர்கள், தமது வாக்கை மாற்றி அளிக்கலாம். மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையிலிருந்து மாற்று வாக்குகளைக் கழித்து விட்டு உறுப்பினரின் வாக்கின் மதிப்பை எடுத்துக் கொள்வார்கள்.

தினசரி நடக்கும் வாக்கெடுப்புகளில் கலந்து கொள்ள யாருக்கும் நேரமும் விருப்பமும் இருப்பதில்லை. உறுப்பினரின் முடிவில் ஒரு சில வாக்குகள் மட்டுமே மாற்றாக பதிவாகும். இது போன்று முக்கியமான நேரங்களில், பங்கெடுப்பு பல ஆயிரங்களாக, சில நேரங்களில் பாதிக்கும் அதிகமாகக் கூடப் போக நேரிடும்.

செவ்வாய், செப்டம்பர் 15, 2009

U V W

அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டு எல்லா நாடுகளையும் பாதிக்கும் பொருளாதாரச் சுணக்கமும் அதைத் தொடர்ந்த வளர்ச்சியும் எப்படி இருக்கும் என்ற விவாதங்களில் இப்படித்தான் abcd படிக்கிறார்கள் பொருளாதார வல்லுனர்கள்.

பொருளாதார வளரச்சியைக் காட்டும் வரைபடம் கீழிறங்குவது சுருக்கம், மேலேறுவது வளர்ச்சி.

1. U வடிவம்
பொருளாதார வளர்ச்சி வெகுவாக கீழிறங்கி (Uவின் இடது புறச் செங்குத்துக் கோடு), சில காலாண்டுகளுக்கு குறைந்த நிலையிலேயே இருந்து விட்டு (Uவின் உட்புற தொய்வு) மெதுவாக வளர்ச்சி மீட்சி பெறும் (Uவின் வலது புறச் செங்குத்துக் கோடு) என்பது ஒரு கருத்து.

2. V வடிவம்
பொருளாதாரம் சுருங்குவது நின்றவுடன் அடுத்தடுத்த காலாண்டுகளில் வளர்ச்சி வேகமாக பழைய நிலைக்குத் திரும்பும் (Vயின் இடது புறம் போல் இறங்கி வலது புறக் கோடு போல உடனேயே ஏறிவிடும்) என்பது நம்பிக்கை நிறைந்தவர்களின் கருத்து.

3. W வடிவம்.
இறங்குவது இறங்கும், அதைத் தொடர்ந்து இரண்டாவது கட்டத்தில் Wவின் இரண்டாவது கோட்டைப் போல வளர்ச்சி வேகமாகத் திரும்பும், ஆனால் அடுத்தக் கட்டத்தில் மீண்டும் வேகமான வீழ்ச்சி ஏற்படும் என்று வயிற்றில் புளியைக் கரைப்பவர்களும் இருக்கிறார்கள்.

எந்த வடிவத்தில் வளர்ச்சி திரும்பும் என்பது மில்லியன் டாலர் கேள்விதான்

வியாழன், மே 21, 2009

வாய்ச் சொல் வீரர்கள்

இத்தனை ஆயிரம் பேரின் உயிரிழப்புக்கு நாமெல்லாருமே ஒரு வகையில் காரணம்தான்.

ஓய்வு நேரத்தில் வலைப்பதிவில் எழுதுவது, அதில் அரசியல்வாதிகளைக் குறை சொல்வது, வேலைகளை எல்லாம் முடித்து விட்டு நேரம் கிடைக்கும் போது மற்றவர்களுடன் காரசாரமாக விவாதிப்பது இதை விட எந்தத் துரும்பை நகர்த்திப் போட்டு விட்டோம்?

கொடுங்கோலை எதிர்த்துப் போராடும் மக்களை பாதுகாப்பான தொலைவில் சுகமாக இருந்து கொண்டு 'இன்னும் பலமாக அடி, பக்கத்தில் கிடக்கும் கல்லைத் தூக்கி எறி, நாங்க எல்லாம் இருக்கிறோம்' என்று வாய் வார்த்தைகளை மட்டும் கொட்டி விட்டு ஒவ்வொரு மரணத்துக்கும் பிறகு இரங்கல் செய்தியும், துக்கமும் வெளிப்படுத்துவதோடு நின்று விடுகிறோம்.

அடையாள வேலை நிறுத்தம் என்று வந்தால் கூட நமது பணிக்கு பாதிப்பில்லாத நாளில் வருகிறதா என்று பார்த்து அன்று வேலை நிறுத்தம் செய்கிறோம். வேறு முக்கியமான நாளில் வந்திருந்தால் வழக்கமான வேலைகளைப் பார்க்கப் போயிருப்போம்.

இந்திய கிரிக்கெட் 'வீரர்கள்' அப்படி படுகொலை நடந்து கொண்டிருக்கும் அந்த நாட்டில் விளையாடப் போகும் போது, கோபப்பட்ட நாம் அதற்குத் துணை போகும் இந்திய அரசாங்கத்தின் குடையின் கீழ்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 'அரசுக்கு வரி செலுத்தப் போவதில்லை, அரசுடன் ஒத்துழைக்கப் போவதில்லை' என்று ஏதாவது நடவடிக்கை எடுக்க முடிந்ததா?

வெறும் வார்த்தை ஜாலங்களையும், தந்தி அனுப்புவதையும் காட்டி மக்களின் கண்களைக் கட்டிக் கொண்டிருக்கிறார் என்று கருணாநிதியைச் சாடிய அதே நேரத்தில் நாம் என்ன அதிகமாகச் செய்து விட்டோம்? அதே வார்த்தை ஜாலங்கள்தான், வலைப்பதிவில் ஒரு இடுகைதான்.

'நம் எல்லோரின் கைகளிலும் இரத்தம்' என்று ரீடிஃப் டாட் காமில் பத்ரகுமார் என்பவர் எழுதியிருந்தார். 1980களில் இலங்கையில் இந்தியத் தூதரகத்தில் பணியாற்றியவராம். 'விடுதலைப் புலிகளை வசதிப் படும் போது வளர்த்து விட்டு, இந்திய நோக்கம் மாறும் போது அவர்களை ஆட்டுவிக்க முயற்சித்து தோற்றவுடன் பொறுமையாக கெட்டிக்காரத்தனமாக அவ்வளவு பேரையும் அழிக்கத் துணை போனோம். இந்த கொலைப்பழி பரம்பரை பரம்பரையாகத் தொடரும்' என்று எழுதியிருந்தார்.

நம்மால் செய்ய முடியாத ஒன்றை ஆதரித்து எழுதவோ பேசவோ கூடாது. வாழ்க்கையைத் துறந்து துப்பாக்கி தூக்கி வவுனியா காடுகளுக்குப் போகத் தயாராக இல்லாத வரை விடுதலைப் புலிகளை ஆதரித்து சத்தம் போட்டுக் கொண்டிருக்கக் கூடாது. பொறுப்புகளைத் தூக்கி எறிந்து விட்டு தெருவில் இறங்கிப் போராடத் தயாராக இல்லாத வரையில் சமூக அவலங்களைக் குறித்துப் புலம்பிக் கொண்டிருக்கக் கூடாது. பத்து வார்த்தைகள் பேசினால், நூறு வார்த்தைகள் எழுதினால், குறைந்தது அந்த வழியில் வாரத்துக்கு ஒரு நாளாவது செயலில் காட்ட முடிய வேண்டும். அப்படி நடைமுறையில் செயல்படுத்த முடியாதவற்றை கதைத்துக் கொண்டிருப்பது intellectual masturbationதான்.

கருணாநிதிக்கு மத்திய அமைச்சரவை பதவிகளுக்காக டில்லி போகத் தெரிகிறது, ஈழத் தமிழரின் இன்னல்களைக் குறித்து தந்தி அனுப்ப மட்டும்தான் முடிகிறது என்று சொல்வதற்கு தகுதி கிடையாது. நம்முடைய வேலை என்றால் மாய்ந்து மாய்ந்து செய்கிறோம். ஈழத்துயரங்களுக்கு பதிவதோடு நின்று விடுகிறோம். அவ்வளவு அக்கறை என்றால் படகேறி வட இலங்கையில் இறங்கப் போக வேண்டும். அதனால் என்ன துன்பம் வருகிறதோ அதைத் தாங்கிக் கொள்ள வேண்டும். அதைச் செய்ய முடியாதவர்கள் வெற்றாக கதைத்துக் கொண்டிருப்பதில் பலனுமில்லை, நியாயமுமில்லை.

நம்ம நாலாவது வீட்டில் இருக்கக் கூடியவர் என்ற முகம், தாய், தந்தையர், மனைவி, மக்கள் என்று புகைப்படங்கள். இதைப் போல ஆயிரம் ஆயிரம் குடும்பங்கள் தம்மைப் பலி கொடுத்திருக்கின்றன. அவர்களுக்கெல்லாம் ஆதரவு என்ற பெயரில் வெற்று ஊக்குவிப்பைக் கொடுப்பதுதான் நம்மால் முடிந்திருக்கிறது. இனிமேல் இது போல வெற்று வாய் வார்த்தைகளைக் கொட்டுவதை நிறுத்தி விட வேண்டும்.

ஞாயிறு, நவம்பர் 16, 2008

ஆதம் சுமித்தின் வரலாற்றுப் பிழை

கடந்த முன்னூறு ஆண்டுகளாக கோலோச்சி வரும் முதலாளித்துவ சந்தைப் பொருளாதார சமூக அமைப்புக்கு அடித்தளம் அமைத்தவர் ஆதம் சுமித். தனி மனிதர்கள் தத்தமது சுயநலத்தை மட்டும் கருத்தில் கொண்டு செயலாற்றும் போது சமூகத்துக்குத் தேவையான பணிகள் நடந்து விடுகின்றன. அப்படி நடப்பதுதான் குறைந்த செலவில், சரியான வழியில் நடப்பதற்கான ஒரே முறை என்று கோட்பாட்டு முறையில் நிறுவிக் காட்டியவர் ஆதம் சுமித்து.

ஆதம் சுமித்து வாழ்ந்தது 18ம் நூற்றாண்டில். அவர் எழுதிய நூல் - வெல்த் ஆஃப் நேசன்சு.

அந்த முறையில் இருக்கும் ஓட்டையை முழுமையாக அலசி ஆராய்ந்து மாற்று பொருளாதாரச் சமூக அமைப்பை உருவாக்க அறைகூவல் விடுத்தவர் 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த கார்ல் மார்க்சு. இவரது தஃச் கேபிடல் என்ற நூலும், கம்யூனிச பிரகடனமும் 20ம் நூற்றாண்டின் உலக அரசியலின் இழுபறிகளுக்கு அடிப்படையாக அமைந்தன.

ஆதம் சுமித்தின் சுயநலமே சமூக நலம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் கடந்த 300 ஆண்டுகளின் தொழில்நுட்ப , பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றங்களைப் பார்த்து வருகிறோம். ஆனால் இந்த முன்னேற்றங்கள் கலப்படமற்ற நன்மைகள் மட்டுமா என்று கேட்டால், இல்லை.

தொழில் நுட்ப வளர்ச்சிகள் மனிதரை மனிதர் கொல்வதற்கும் அழிவு வேலைகளுக்கும் பயன்படுவது பெரிதும் அதிகரித்தது. பொருளாதார வளர்ச்சி பெரும்பாலான மக்களை துன்பத்திலும் வறுமையிலும் ஆழ்த்துவதிலேயே முடிந்தது. ஆதிக்கம் செலுத்த முடிந்த நாடு அல்லது சமூகங்கள் நலிந்த பிரிவினரை சுரண்டி தம்மை வளப்படுத்திக் கொள்வது நடந்து கொண்டிருக்கிறது.

ஆதம் சுமித்தின் கோட்பாடு மனிதனின் இயற்கை இயல்பை தூண்டி விடுவதை அடிப்படையாக கொண்டிருக்கிறது. விலங்குகளாக காட்டில் வாழும் போது இயற்கை போக்குகள் இப்படி இருந்திருக்கும்:

1. உணவுக்காக அல்லது போட்டியின் காரணமாக சக மனிதனையும் பிற விலங்குகளையும் கொல்வது இயற்கையாக இருந்திருக்கும்.
2. உடலின் தூண்டுதலின் பேரில் நினைத்த இடத்தில், நினைத்த நேரத்தில் சாப்பிடுவது, கழிவது, உறவு கொள்வது இயல்பாக இருந்திருக்கும்
3. தன்னைத் தாக்க வருபவர்களிடமிருந்து ஓடித் தப்பிப்பது இயல்பாக இருந்திருக்கும். கொஞ்சம் நம்பிக்கை இருந்தால் திரும்பத் தாக்குவதும் நடக்கும்.

ஒரு சிலர் இந்த இயல்புப் போக்குகளைக் கைவிட்டு, சக மனிதருடன் ஒத்து வாழும் முறையை வகுத்து கூடி வாழ ஆரம்பித்திருப்பார்கள். அப்படி இயற்கை போக்கை மட்டுறுத்தி குழுவாக வாழ ஆரம்பித்த சமூகங்கள், இயற்கையாக விலங்கு நெறியில் வாழ்ந்த மனிதர்களை விட சிறப்பாக தளைத்து பெருகியிருப்பார்கள். இப்படி பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளின் பரிணாம வளர்ச்சியில், நலம் பயக்கும் முறைகளை சேர்த்துக் கொண்டே போன சமூகங்கள்தான் இன்றைக்கும் தாக்குப் பிடித்து இருக்கின்றன.

தன்னுடைய நலத்தை மட்டும் பார்த்துக் கொள்வது என்று மனிதருக்குப் போதிக்கும் கோட்பாடு, மனிதரின் மனதுள் புதைந்து கிடக்கும் விலங்கு இயல்பை தூண்டி விடுவதாக அமைந்து விட்டது. அப்படித் தூண்டி விட்டாலும், முழுவதும் பல்லாயிரமாண்டு பரிணாம வளர்ச்சியை உதறி விட்டு விலங்கு வாழ்க்கைக்குத் திரும்பி விடவில்லை.

அலுவலகத்தில், பணியிடத்தில் சுயநலத்தின் அடிப்படையில் பணியாற்றி விட்டு வீட்டுக்கு வரும் ஒருவர் தனது குழந்தையிடம் விலங்காகப் பழகாமல், நன்னடத்தை கோட்பாட்டின்படிதான் பழகுவார். நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு நல்லது செய்யும் அதே நேரத்தில் தொழிற்சாலை இருக்கும் ஊரின் நீர்நிலைகளை நச்சுப்படுத்தத் தயக்கம் வருவதில்லை.

அந்த இரட்டை வாழ்க்கைதான் சந்தைப் பொருளாதார சமூகத்தின் சரிவுக்கான வித்து. ஆதம் சுமித்தைத் தாண்டி மார்க்சையும், மனித நெறிகளையும் சேர்த்து புதியதோர் வாழ்க்கை நெறி காண்பது 21ம் நூற்றாண்டில் நடக்கலாம்.

வியாழன், ஜனவரி 10, 2008

கரையான் புற்றுக்குள் பாம்பு - இசுரேல்

இப்போது இசுரேல் என்று சொல்லப்படும் பகுதி பாலஸ்தீனமாகவே இருந்து வந்தது.

சில மதப் புத்தகங்களைத் தவிர்த்து வேறு எந்த வரலாற்று ஆதாரங்களும் இல்லாமல், அந்த நேரத்தில் ஆண்டு கொண்டிருந்த பிரித்தானியா பாலஸ்தீனத்தை பிரித்து ஒரு பகுதியை யூதர்களின் நாடாகவும், இன்னொரு பகுதியை பாலஸ்தீன அரேபியர்களுக்கும் கொடுக்க முடிவு செய்தது. அதை ஐக்கிய நாட்டுச் சபையும் ஏற்றுக் கொண்டது. ஆனால், பெரும்பான்மையாக அங்கு வசித்த பாலஸ்தீனர்களும் பாலஸ்தீனத்தைச் சுற்றியிருந்த பிற அரபு நாடுகளும் அதை ஏற்றுக் கொள்ளவே இல்லை.

ஒரு தொழிற்சாலை அமைப்பதற்காக பரம்பரை பரம்பரையாக பாவித்து வந்த நிலத்தை விட்டுக் கொடுக்கும் வலியை விட பல மடங்கு பெரியது, தமது நிலத்தை/தொழிலை/வீட்டை யாருக்கோ சொந்த நாடு அமைக்க விட்டுக் கொடுப்பது. அதைத்தான் செய்யும் படி பாலஸ்தீனியர்கள் வற்புறுத்தப்பட்டார்கள். உலகெங்கிலுமிருந்தும் யூதர்கள் இசுரேலுக்கு குடியேற ஊக்குவிக்கப்பட்டார்கள்.

அப்படி தமது நாட்டை இழந்த பாலஸ்தீனியர்களுக்கும் அவர்களுக்கு ஆதரவான அரபு நாடுகளுக்கும் இருக்கும் வலியும் கோபமும் புரிந்து கொள்ளக் கூடியதே.

அமெரிக்காவின் ஆதரவிலும் ஆயுதங்களினாலும் தமது மக்களின் வீரத்தினாலும் யூதர்களின் புதிய நாடு பாலஸ்தீனிய எதிர்ப்பை ஒடுக்கி வல்லானாக வாய்க்கால் வகுத்துக் கொண்டிருக்கிறது. பாலஸ்தீனியர்களுக்காக ஒதுக்கப்பட்டபகுதிகளைக் கூடப் பிடித்து வைத்துக் கொண்டு சொந்த ஊருக்குள்ளேயே அகதிகளாக மாற்றி விட்டிருக்கிறது.

பாலஸ்தீனமும் இந்தியா போல பிரித்தானிய ஆட்சியின் கீழ் இருந்து வந்தது. தென்சென்னை பகுதியை, பாகிஸ்தான் பிரிவினையால் நாடற்று போய் விட்ட சிந்திக்களுக்கு சொந்த மாநிலம் என்று தனியாகப் பிரித்து விட்டால் எப்படி இருக்கும். மயிலாப்பூரில், திருவல்லிக்கேணியில், அடையாறில், நங்கநல்லூரில் ஆண்டாண்டு காலமாக இருப்பவர்களை எல்லாம் 'பெட்டியைக் கட்டிக் கொண்டு அந்தப் பக்கமா போயிடுங்க இந்த இடமெல்லாம் பாவம் தமக்கென்று நாடு இல்லாத சிந்திக்களுக்குக் கொடுக்க முடிவு செய்து விட்டோம்' என்று இந்திய நாடாளுமன்றம் சொன்னால் எப்படி இருக்கும்?

அதே கதைதான், இஸ்ரேலிலும் நடந்தது. யாருடைய நிலத்தை யாரோ எடுத்து யூதர்களுக்கு வழங்கி விட்டார்களாம். அதற்கு பரவலான பிரதிநிதித்துவம் இல்லாத ஐக்கிய நாடுகள் சபையின் ஒப்புதல் வேறு. கேட்க வேண்டிய அந்த ஊர் மக்களை யாரும் கேட்கவில்லை!

அன்றிலிருந்து அமெரிக்காவின் அடாவடியான இசுரேல் ஆதரவு போக்கால் உலகில் அமைதி குலைந்திருக்கிறது. தனது வணிக நலன்களுக்காக சவுதி அரேபியா, குவைத் போன்ற நாடுகளின் ஆட்சியாளர்களை கைக்குள் போட்டுக் கொண்டு அவர்களது சர்வாதிகார ஆட்சிகளையும் தாங்கிப் பிடித்து வருகிறது. மக்கள் விருப்பப்படி ஆட்சி நடக்கும் நாடுகள் ஈராக், ஈரான் மட்டுமே. அந்த இரண்டுடன் அமெரிக்காவுக்கு ஆகாது.

எப்போ தீர்வு வரும்?

செவ்வாய், ஜனவரி 08, 2008

நல்லாரும் தீயாரும்

நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று .

தீயாரைக் காண்பதுவும் தீதே திருவற்ற
தீயார்சொல் கேட்பதுவும் தீதே - தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே அவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது.

-மூதுரை, ஔவையார்

ஞாயிறு, ஜூன் 17, 2007

யார் யாரை தாங்குவது!!!

பேருந்தில் ஒரு கண் தெரியாத முதியவர். சின்ன உருவம். நான் உட்கார்ந்த இருக்கையில் ஏற்கனவே இருந்தார்.

முதலில் கண் தெரியாதவர் என்று கவனிக்கவில்லை. உட்கார்ந்த சிறிது நேரத்தில் கையால் என்னைத் தொட முயன்றதைக் கண்டு கொள்ளவில்லை. சிறிது நேரத்தில் பேச்சு கொடுத்தார்.

பேருந்து நிலையத்தில் இறங்கியதும் கையைப் பிடித்து கடுக்கரை போகும் பேருந்து நிற்கும் இடத்துக்கு அருகில், தேநீர்க் கடை அருகில் விட்டு விடச் சொன்னார். அந்தத் தேநீர்க் கடைக்காரர் பேருந்து ஏற்றி விட்டு விடுவாராம்.

'ராணித் தோட்டத்தில் வேலை பார்க்கிறேன். அடுத்த வருஷம் ரிட்டயர் ஆகிறேன். டிரைவர் சீட்டுக்கு வயர் பின்னும் வேலை. அது இல்லாத போது போல்ட்டுகளை அடுக்கிக் கொடுக்கும் வேலை. என்னை போல இன்னும் இரண்டு பேர் வேலை பார்க்கிறார்கள். ஒருவர் என்னை விட 4 வயது சின்னவர், இன்னொருவர் சின்ன வயது - இப்பதான் திருமணம் ஆகியிருக்கிறது'

57 வயது மதிக்க முடியாத தோற்றம். கண் தெரியாத வாழ்க்கையில் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக இந்த வேலை செய்து வருகிறாராம்.

'ஓய்வு பெற்ற பிறகு எப்படி நேரம் போகும்' என்று கேட்டேன்.

'வெளியே எங்கேயும் போக முடியாது. வேலைக்குப் போவதைத் தவிர வேறு எங்கும் தனியாக அனுப்ப மாட்டார்கள். குடும்பக் கவலை வேறு அதிகம். மூன்று பெண்களைக் கட்டிக் கொடுத்த கடன்கள் அடைக்க வேண்டும். மாதம் மூவாயிரம் ரூபாய் வட்டிக்கே கொடுக்கிறேன். பையன்களுக்குப் பொறுப்பு இல்லை. மூத்த இரண்டு பேரும் வளர்ந்து கல்யாணம் ஆகி பிள்ளைகளும் உண்டு. இன்னும் என் சம்பாத்தியத்தை நம்பித்தான் இருக்கிறான்கள். சின்னவன் எஞ்சினீயரிங் படிக்கிறான்.'

'எல்லாம் நான் ரிட்டயர் ஆவதை நோக்கிக் காத்திருக்கிறான்கள். எனக்கு பத்தாயிரம், இருபதாயிரம் என்று வரப் போகும் பணத்துக்கு இப்பவே திட்டம் போட்டுக்கிட்டிருக்கான்க. பன்னிரண்டாயிரம் ரூபாய் சம்பளம், பென்ஷன் மூவாயிரம் வரும். கண் தெரியாமல் எவ்வளவுதான் செய்ய முடியும். எல்லாம் என்னை நம்பித்தான் இருக்கிறாங்க. பொண்ணுகளும் அதே கதைதான்'

அதிர்ச்சியாக இருந்தது. 'பசங்களை வளர்த்து விட்டாச்சு. இனிமேல் வீட்டை விட்டு அனுப்பி விடுங்கள். இல்லை என்றால் நீங்களும் வீட்டுக் காரியும் வேறு வீடு பார்த்துக் கொள்ளுங்கள். இனிமேல் அவங்க வேலை அவங்க பொறுப்புதான். எவ்வளவு நாள்தான் நீங்க தாங்க முடியும்.' என்று என்னுடைய வேண்டாத அறிவுரை கூறினேன்.

'இப்படித்தான் யாராவது பக்கத்தில் இருப்பவர்களிடம் கையைப் பிடித்து விட்டு விடச் சொல்லுவேன். அந்த டீக்கடைக்காரர் அப்புறம் ஏத்தி விட்டு விடுவார்.' பேருந்து நின்ற பிறகு அவர் பேருந்து ஏற வேண்டிய இடமும் நாங்கள் போகும் இடமும் ஒன்றுதான். கடைக்கருகில் விட்டு விட்டேன்.

செவ்வாய், மே 01, 2007

வாழ்க்கையின் குறிக்கோள் என்ன?

உலகில் எல்லா தீமைகளும் மறைந்து போனால் எவ்வளவு ஆக்கபூர்வமான வேலைகள் நடக்க வெளி ஏற்படும். போர்களும் ஆயுத உற்பத்தியும், ஒருவரை ஒருவர் வெறுத்தலும், கோபமும், ஆத்திரமும் மறைந்து விட்டால் ஏற்படும் வெற்றிடத்தில் ஆக்க சக்தி நிரம்பி வழியும். கண்ணுக்கு கண் என்று ஒருவரை ஒருவர் குருடாக்கிக் கொண்டிராமல் ஏதாவது ஒரு இடத்தில் திசை திரும்பி எல்லா மாந்தரும் ஒரே திசையில் தமது முயற்சியைச் செலுத்தினால் வானை அளப்பதும் விண்மீன்களில் குடியிருப்புகளை உருவாக்குவதும் மனிதனுக்கு முடியாமலா போகும்!

நம்முடைய ஆற்றல்கள் வெவ்வேறு திசைகளில் திரும்பி பிளவுபட்டுக் கிடக்கின்றன. இரும்புத்துண்டில் அணுக்களின் ஈர்ப்பு விசைகள் எதிரெதிர் திசைகளில் நோக்கிக் கொண்டிருப்பதால் ஒன்றை ஒன்று ரத்து செய்து விடுகின்றன. மின்சாரப் பாய்ச்சல் மூலம் எல்லா அணுக்களையும் ஒரே திசையில் மின்ஈர்ப்பை செலுத்தத் தூண்டினால் தனது சுற்றுப் புறத்தை மாற்றி விடக் கூடிய காந்த சக்தி உருவாகிறது.

இது போல உருவான எல்லாக் காந்தங்களும் ஒரே திசையில் நோக்கியிருந்தால் எந்த பெரும் சக்தியையும நகர்த்தி தாம் விரும்பிய நிலைக்கு மாற்றி அமைத்துக் கொள்ளலாம். தமக்கு ஒப்புதல் இல்லாது சக்திகளை எதிர்த்து விரட்டி விடலாம்.

இயற்கையை மனிதன் தனக்கு ஏற்றதாக மாற்றிக் கொள்ள இது ஒன்றே வழி. ஆழிப் பேரலைகளும், சுழிக்காற்றுகளும் ஒருங்கிணைந்து மனித சக்தியின் முன் ஒரு குழந்தை போல பாசத்தோடு கழுத்தைக் கட்டிக் கொள்ளும். ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டு எதிரெதிர் திசையில் நின்று கொண்டிருக்கும் மனிதக் கூட்டங்கள்தான் பேரலைகளில் அடித்துச் செல்லப்படுகின்றன. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பது பேச்சுப் போட்டிகளில் மட்டும் முழங்க வேண்டிய வெற்றுரை அல்ல.

மனிதன் கடலைத் துளைவ, வானை அளக்க வல்ல ஆற்றலை ஒருங்கிணைக்கும் ஒரே வழி அன்பு வழி. ஒவ்வொரு மனதும் அன்பால் நிரம்பி வழிய வேண்டும். வெள்ளை, கறுப்பு, மஞ்சள், பழுப்பு மனிதர்கள், பலவேறு மதத்தினர், ஏழை, பணக்காரர், பல நூறு மொழி பேசுபவர்கள் ஒவ்வொருவரும் தம்மை இறைவனாகப் போற்றித் தம் சக மனிதர்களையும் தம்மைப் போன்ற மதிப்பினராக நடத்தினால் இது நிச்சயம் நடக்கும்.

முதலாளிக்கு எதிராக தொழிலாளி ஆயுதம் ஏந்த வேண்டும், இந்துவுக்கு எதிராக முஸ்லீமும், முஸ்லீமுக்கு எதிராக கிருத்துவரும், கிருத்துவருக்கு எதிராக இந்துக்களும் கை உயர்த்த வேண்டும் என்ற பேதை தத்துவங்கள் இருக்கும் வரை இங்கு உய்வுக்கு வழியில்லை. அடிப்படையில் தெய்வ இயல்பு படைத்த மனிதர்கள் மனது வைத்தால், நம் வாழ்நாளிலேயே அந்த சொர்க்க பூமியை உருவாக்கி விடலாம். விண்கலத்தில் ஏறி தூரத்து தாரகைகளுக்கு பயணம் செய்து வரலாம்.

அதுவரை சபிக்கப்பட்டவர்களாக இந்த பூமிப்பந்துடன் கட்டுண்டு கிடப்பதுதான் நமது விதியாக இருந்து விடும். நமது மனம் என்னும் பேராற்றலை சரியான திசையில் செலுத்தி அந்த உடோபிய உலகை உருவாக்குவது இன்றைய உலகின் ஒவ்வொரு மனிதப் பிறவியின் கையில் இருக்கிறது. எதுவும் வேண்டாம், சிறப்பாக எதையும் சாதிக்க வேண்டாம். மனதினுள் சின்னதாக ஒலித்துக் கொண்டிருக்கும் நல் வாழ்வை வலியுறுத்தும் குரலுக்கு செவி சாய்த்தால் போதும்.

உலகம் தயாராக இருக்கிறதா அல்லது எள்ளி நகையாடப் படுமா என்பதைக் குறித்தெல்லாம் கவலைப்படாமல் நம்மால் முடிந்ததைச் செய்து கொண்டே போக வேண்டும். தயக்கமின்றி செயலில் இறக்கி நல்ல எண்ணங்கள் எல்லா மனங்களிலும் பரவ எல்லா விதமான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.

வெள்ளி, ஜனவரி 26, 2007

ஆப்பிரிக்காவில் ஆறு நாட்கள்

ஆப்பிரிக்கா என்றால் இருண்ட கண்டம் என்று ஐரோப்பிய கண்டுபிடிப்பாளர்கள் சொல்லி வைத்ததை நாமும் கிளிப்பிள்ளைகள் போல பள்ளிகளில் சொல்லிக் கொடுத்து, கற்றுக் கொண்டிருக்கிறோம். இருட்டு, வறுமை, பட்டினியில் சாகும் குழந்தைகள், எயிட்ஸ் நோய் பரவல், சண்டை என்று மனத் தோற்றங்கள்.

போன இடத்தில் நண்பர் இணைய உரையாடலில் இந்தியாவில் ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது 'ஆப்பிரிக்கா எப்படி இருக்கிறது?' என்று கேள்வி வந்திருக்கிறது. பின்னால் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த அந்த ஊர்க்காரர், 'மனிதர்களை கொன்று தின்று கொண்டிருக்கிறோம் என்று சொல்லுங்கள்' என பாதி கடுப்பாக பாதி நகைச்சுவையாகச் சொன்னாராம்.

ஆப்பிரிக்கா என்றால் தென்னாப்பிரிக்கா மனதுக்கு வந்து விடுகிறது, கிரிக்கெட் விளையாடும் நாடாதலால். நான் போனது, கண்டத்தின் மேற்கில் வடபகுதியில் இருக்கும் புர்கினா ஃபாஸோ. பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று இது. ஸ்பெயினுக்கு அருகாக இருக்கும் அல்ஜீரியா என்ற பெரிய நாடு, அதற்குக் கீழே மாலி, நைஜர், அதற்கும் கீழே தென் மேற்காக இந்த நாடு உள்ளது. கடற்கரையைப் பிடிக்க வேண்டுமென்றால் எல்லை தாண்டி பெனின், கானா அல்லது ஐவரி கோஸ்டுக்குத்தான் போக வேண்டும்.

போகும் போது முதல் தாவலாக துபாய் வரை போய் விட்டு, அங்கிருந்து வடகிழக்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் நம்ம கடாஃபி அண்ணனின் திரிபோலியில் இறங்கி விட்டு, அடுத்த விமானத்தில் வாகாதோகு என்ற தலைநகருக்குப் போய்ச் சேர்ந்தோம்.

இந்த இரண்டு இடங்களுக்கு இடையேயான விமானச் சேவை ஆப்பிரிக்கியா என்ற நிறுவனத்துடையது. அதன் மீது 9999 என்று பெரிதாக எழுதியிருக்கிறார்கள். 1999ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஆப்பிரிக்க ஐக்கிய நாடுகள் என்று அமைத்த நாளை அது குறிக்கிறதாம். இது லிபியாவின் திட்டம். இன்னொரு ஐக்கிய நாடுகளுடன் போட்டி போடும் அளவுக்கு உருவாகும் சாத்தியங்கள் இந்தக் கண்டத்துக்கும் இருக்கத்தான் செய்கிறது. போதை பொருட்கள், போர் வெறி, அன்னிய தலையீடுகள் இல்லா விட்டால் நம் வாழ் நாளிலேயே கூட அப்படி ஒரு அற்புதம் நடந்து விடலாம்.

புர்கினா ஃபாஸோ என்ற நாடு தமிழ் நாட்டை விட ஏறக்குறைய இரண்டு மடங்கு பெரியது, அளவில். மக்கள் தொகையோ தமிழக மக்கள் தொகையில் பாதி. பெரிய நகரங்களில் மேல் நாட்டு உதவியுடன் போட்டுக் கொண்ட சாலைகளைத் தவிர சரியான சாலைகள் ஊர்களில் எங்கும் கிடையாதாம்.

நாங்கள் போன நிறுவனத்திலேயே வேலூர் மாவட்டத்திலிருந்து இரண்டு பேர், மைசூரைச் சேர்ந்த ஆனால் தமிழில் சரளமாகப் பேசும் ஒருவர், மும்பையைச் சேரந்த ஒருவர் என்று நான்கு இந்தியர்கள் பணி புரிகிறார்கள். மேலாண்மை பட்டம் பெற்று திட்டப் பணிகளில் அனுபவம் பெற்ற இன்னொரு தமிழர் பிளாஸ்டிக் நிறுவனம் ஒன்றிற்காக உள்ளூரிலேயே புதிய தொழிற்சாலை அமைத்து வெற்றிகரமாக நடத்தி வருகிறார். அவரையும் சந்திக்க வாய்த்தது.

தமிழ் நாட்டிலிருந்து (கிருஷ்ணகிரி, திருச்சி, சென்னை, பணகுடி - நாகர்கோவில் அருகில்) நான்கு பேர் நகருக்கு வெளியே சாலையில்லாத தெரு விளக்கு இல்லாது அத்துவானக் காட்டில் தங்கியிருந்து கிறித்துவ மத அமைப்பு ஒன்றின் சார்பில் சமூகப் பணி செய்து வருகிறார்கள். அவர்களின் அறிமுகமும் கிடைத்தது.

இவர்களைத் தவிர குஜராத்திலிருந்து பல ஆண்டுகளாக தொழில் நடத்தி வரும் ஓரிருவரைச் சந்தித்தோம்.

பொதுவாக 'கறுப்பன்கள்' என்று பேச்சில் கிண்டலாகக் குறிப்பிடுவது, அவன்-இவன் என்று எல்லோரையும் குறிப்பிடுவது, இந்த ஊரில் ஒன்றுமே கிடையாது, ஒழுக்கமே கிடையாது என்று ஒரேயடியாக ஒதுக்கித் தள்ளுவது என்ற பேச்சுக்களைத் தாண்டி இவர்கள் ஊரை விட்டு மொழி தெரியாத ஊரில் செய்து வரும் பணிகள் மகத்தானவை.