தமிழ்நாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ்நாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், மார்ச் 25, 2019

ரோஜாவைத் தாலாட்டும் தென்றல் - ராஜாவின் மேஜிக், எஸ்.பி.பியின் கண்ணீர்

ரோஜாவைத் தாலாட்டும் தென்றல் என்ற பாடல், மூலம் எஸ்.பி பாலசுப்பிரமணியம் குடும்பத்தை அழவைத்த பாடகர்கள்.

கல்பனா என்ற பாடகியும், ரித்திக் என்ற பையனும் இந்தப் பாடலை பாடுகின்றனர். எஸ்.பி.பாலசுப்பிரமணியனும், அவரது மகன் எஸ்.பி.பி. சரணும் நிபுணர்களாக உட்கார்ந்திருக்கின்றனர்.

இது போன்ற போட்டி நிகழ்ச்சிகளில் இசை, பாடல், மெட்டு, சூழல், பார்வையாளர் எல்லாம் மிகச்சிறப்பாக ஒத்திசைந்து விடும் தருணங்களில் இதுவும் ஒன்று. பாடலை அந்தக் குட்டிப் பையன் பாடும்போது எஸ்.பி.பியும் அவரது மகனும் கையைத் தூக்கி விடுகின்றனர். "எப்படிடா இப்படி பாடுகிறாய்?" என்று வியக்கிறார் எஸ்.பி.பி. அவரது கண்களில் கண்ணீர், துடைத்துக் கொள்கிறார்.

“டேய், எங்க மொத்தக் குடும்பத்தையும் அழ வைக்கிற நீ, ஒன்னை பார்த்துக்கறேன். உங்க வீடு நொளம்பூர்லதான இருக்கு, வர்றேன்" என்கிறார் சரண்.

எஸ்.பி.பி "இளையராஜா பற்றி பேசப் போகிறேன்" என்று ஆரம்பிக்கிறார்.

"இது போன்ற ஒரு மெட்டை யார் போட முடியும், இதன் ஒவ்வொரு இஞ்சும், ஒவ்வொரு பகுதியும், மிக கடினமான மெட்டமைப்பு, இளையராஜா நீடுழி வாழ வேண்டும்.

இதற்கு எத்தனை தேசிய விருதுகள் கிடைத்திருக்க வேண்டும். அங்க இருக்கிற யாருக்காவது இது என்னென்னு புரியுமா? ஏதோ நல்லா இருக்குன்னு நினைச்சிப்பாங்க. இந்த பாட்டை நானும் ஜானகி அம்மாவும் பாடுவதற்கு எவ்வளவு நேரம் பிடிச்சது. இதில பல சின்னச்சின்ன நுணுக்கங்கள் எல்லாம் வருது, அது ஒவ்வொன்றையும் அவர் விடாமல் பிடித்து பாட வைப்பார். எந்த வாத்தியத்தை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும் என்று அவருக்குத் தெரியும்.

அதை எல்லாம் எவ்வவளவு அனாயசமாக பாடுகிறான் இந்தப் பையன். ஒவ்வொண்ணும் செமி, செமி நோட்ஸ்தான். இந்த மாதிரி ஒரு மெட்டமைப்பு, நாங்க எல்லாம் இந்தப் பாட்டை கஷ்டப்பட்டு பாடி கைத்தட்டல் எல்லாம் வாங்கிட்டோம். இப்போ இந்த சுண்டக்கா பையன் குட்டிப் பையன் வந்து பாடிட்டு போயிட்டான்."

என்று தழுதழுக்கிறார்.

விஜய் டி.வியும், முர்டோக்கின் ஸ்டார்-ம் உலகின் அனைத்து விதமான வணிக நோக்கத்துக்காக இந்த நிகழ்ச்சிகளை நடத்தினாலும் அதில் பாடுபவர்களின் உழைப்பும், திறமையும், முயற்சியும் நிஜம். ஸ்டார் விஜயும், முர்டோக்கும் இந்தப் பூமியில் பிறப்பதற்கு முன்பும் இது போன்ற திறமைகள் இருந்தன, அவை ஒரு சிறிய வட்டத்தில் அவர்களது குடும்பத்தில் ஊரில் ஒரு சிலரை மகிழ்வித்துக் கொண்டிருந்தன. இப்போது அவை முதலாளித்துவ லாப தேடல் அலையில் மிதந்து மிகப்பெரிய மேடைகளில் ஏறுகின்றன. இன்னும் பலரது கலையை ஊக்குவிக்கின்றன.

பாடலை கேட்டு மகிழ்வோம்.

ரோஜாவைத் தாலாட்டும் தென்றல் 

ஞாயிறு, மார்ச் 24, 2019

லிடியன் நாதஸ்வரம் - உலக இசை அரங்கில் ஒரு தமிழ்ப் புயல்

லிடியன் நாதஸ்வரம் என்ற பையன் அமெரிக்காவில் நடக்கும் World’s Best என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முதலிடம் பெற்று $10 லட்சம் (சுமார் ரூ 7 கோடி) வென்றிருக்கிறான்.


12 வயது லிடியன் பியானோ மேதையாக இருக்கிறான். ஒரே நேரத்தில் முற்றிலும் வேறுபட்ட இரண்டு மெட்டுகளை வாசிப்பது, அதி வேக கதியில் வாசிப்பது என்று அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை வாய் பிளக்க வைக்கிறான்.

ஹேரி பாட்டர் பின்னணி இசை, அதைத் தொடர்ந்து மிஷன் இம்பாசிபிள் இசை, பின்னர் இரண்டையும் ஒரே நேரத்தில் - ஒரு கையால் அதையும், ஒரு கையால் இதையும் வாசிக்கிறான். “Oh my God, you ought to be kidding me” என்று கத்துகிறார் ஒருங்கிணைப்பாளர். அடுத்து ஜூராசிக் பார்க் இசை, தனது கை விரல்கள் தோற்றுவிக்கும் மாயத்தைக் கேட்டு அவனது முகத்தில் குழந்தைத்தனமான குதூகலம், சூப்பர் மேன் அடுத்து.



நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தன்னாலும் பியானோ வாசிக்க முடியும் என்று ஒரு எளிய வாசிப்பை செய்து காட்டி விட்டு, "impressed?" என்று கேட்க, "ஆம்" என்று அப்பாவி தமிழ் முகத்துடன் பதில் சொல்கிறான், லிடியன்.

மொசார்ட்டின் டர்க்கிஷ் மார்ச் என்ற மெட்டை கண்ணைக் கட்டிக் கொண்டு வாசிக்கிறான். ”பியானோவுடன் நிலாவுக்குச் சென்று அங்கு பீத்தோவனின் மூன் லைட் சொனாட்டா வாசிக்க விரும்புவதாகச்" சொல்கிறான்.


flight of the bumble bee என்று ஒரு தேனீ பறக்கும் ஓசையை இசையாக வடிக்கிறான். 108 beats per minute – metronym அமைத்துக் கொண்டு அதை வாசிக்கிறான், நடுவர்களும் பார்வையாளர்களும் உண்மையிலேயே வாயைப் பிளக்கின்றனர். அதன் பிறகு 325 beats per minute

அவனது அப்பாவும் பார்வையாளர் மத்தியில் உட்கார்ந்திருக்கிறார். இருவரும் சென்னையைச் சேர்ந்தவர்கள். லிடியன் ஏ.ஆர் ரஹ்மான் நடத்தும் பயிற்சி பள்ளியில் பயின்றிருக்கிறான்.


விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் போலவே பக்காவான செட், ஒருங்கிணைப்பவர்கள், நடுவர்கள், பார்வையாளர்கள், இசையமைப்பாளர்கள் என்று நிறைந்த அரங்கத்துக்கு வண்ண வண்ண விளக்குகள் ஒளியூட்டுகின்றன. இறுதிக் கட்டத்தில் முதல் இரண்டு இடத்தில் லிடியனும் உடல் வித்தைகள் செய்யும் குழுவான குக்கிவானும் இருக்கின்றனர். கடைசியில் லிடியனுக்கு அதிக வாக்குகள் கிடைத்து வெற்றி பெறுகிறான்.

லிடியன் முகத்தில் ஒரு புன்னகை கீற்றைத் தவிர பெரிதாக கொண்டாட்டமோ, குதித்தலோ, முட்டி மடக்குதலோ இல்லை. ஆழமான பையனாக இருக்கிறான். அவனது அப்பாவும் அமைதியானவராக இருக்கிறார். அவர்கள் இருவருக்கும் சேர்த்து நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பவர், குக்கிவான் குழு ஆரவாரம் செய்து கொள்கின்றனர்.

யூடியூபில் லிடியன் முதலிடம் பெறும் வீடியோவை 21 லட்சம் பேர் பார்த்திருக்கின்றனர். ஆங்கில இந்து பத்திரிகையில் ஒரு செய்தி, scroll.in செய்தி, விகடன் சினிமாவில் ஒரு வீடியோ, ஏ.ஆர் ரஹ்மான் லிடியனை பாராட்டி பேசியிருக்கிறார். டெல்லி, மும்பை ஊடகங்களில் எதையும் காணவில்லை. தமிழ்நாடு, இந்தியாவில்தான் இருக்கிறதா?

லிடியனுக்கு நமது கைத்தட்டல்களையும், பாராட்டுதல்களையும் பரிசாக்குவோம்!

செவ்வாய், மார்ச் 12, 2019

மார்க்சின் மூலதனமும் 21-ம் நூற்றாண்டின் உலக முதலாளித்துவமும்

தை 21-ம் நூற்றாண்டு உலகமயமான முதலாளித்துவம் பற்றிய ஒரு முழுமையான கோட்பாடாக உருவாக்க வேண்டும் என்று ஜான் ஸ்மித் வாதிடுகிறார். எப்படி மார்க்ஸ் முதலாளித்துவ உற்பத்தி முறையின் இயங்கு விதிகளை, மதிப்பு விதியிலிருந்து முழுமையாக விளக்கினாரோ, அதே போல இன்று தோன்றியிருக்கும் புதிய கட்டத்தை மதிப்பு விதியின் அடிப்படையில் விளக்க வேண்டும்.

மூலதனம் நூலில் மார்க்ஸ் முதலாளித்துவ உற்பத்தி முறை ஆதிக்கம் செலுத்தக் கூடிய ஒரு நாட்டை எடுத்து்க கொள்கிறார். "வெளிநாட்டு வர்த்தகம், அரசின் செயல்பாடுகள், கூலி உழைப்பு சக்தியின் மதிப்பை விடக் குறைவாக கொடுக்கப்படுவது இவற்றை எல்லாம் பற்றி நான் பேசப் போவதில்லை, அவற்றை அடுத்தடுத்த ஆய்வுகளில் எடுத்துக் கொள்வோம்" என்று ஒதுக்கி வைத்து ஆய்வு செய்கிறார்.

இன்றைக்கு நாடுகளுக்கிடையே ஏற்றத் தாழ்வு மையமான விஷயமாக வந்திருக்கிறது. அன்று சரக்கு இங்கிலாந்திலேயே உற்பத்தியாகி இங்கிலாந்திலேயே விற்பனையானது. உற்பத்தி முதலாளியிடமிருந்து விற்பனை முதலாளி உபரி மதிப்பை கைப்பற்றினாலும் அது ஒரே நாட்டுக்குள் நடந்து விடுகிறது. இன்றோ உற்பத்தி முதலாளி இந்தியாவில் இருக்கிறார், விற்பனை முதலாளி அமெரிக்காவில் இருக்கிறார். எனவே, இரண்டு நாடுகளுக்கிடையேயான உறவில் மதிப்பு விதி செயல்படுவதை பற்றி ஆய்வு செய்ய வேண்டியிருக்கிறது. இது போல பல விஷயங்களை நாம் ஆய்வு செய்ய வேண்டியிருக்கிறது.

இதனை ஒரு முழுமையான மார்க்சிய கோட்பாடாக உருவாக்குவதை தனிப்பட்ட ஒருவர் செய்து முடிக்க முடியாது. "நான் எடுத்துக் கொண்டிருப்பது, உற்பத்தி உலகமயமாதலில் மூன்றாம் உலக நாட்டு தொழிலாளர்களின் மதிப்பு அதிகரித்திருப்பது, இதில் மதிப்பு எப்படி கைப்பற்றப்படுகிறது என்பதை ஆய்வு செய்கிறேன்" என்கிறார். இதை ஒரு ஆய்வறிக்கையாக 2010-ல் எழுதுகிறார். இதை தரவுகள், வாதங்களை, கருத்துக்களை அப்டேட் செய்து 2016-ல் ஒரு புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்.

மூலதனம் நூலை புரட்டிப் பார்த்தால், ஜான் ஸ்மித், அறுதி உபரி மதிப்பு, ஒப்பீட்டு மதிப்பின் உற்பத்தி அறுதி மற்றும் ஒப்பீட்டு உபரி மதிப்பின் உற்பத்தி என்ற முதல் பாகத்தின் மூன்று பகுதிகளில் அவர் கவனம் செலுத்துகிறார். இது போக மூன்றாம் பாகத்தில் லாப வீதம் குறைந்து கொண்டு போவது, உபரி மதிப்பு சராசரி லாபமாக மாற்றமடைதல் போன்ற பகுதிகளையும் தனது வாதங்களில் பயன்படுத்துகிறார்.

மூலதனம் நூலின் முதல் பாகத்தின் முதல் பகுதியில் 3 அத்தியாயங்களில் பரிசீலிக்கப்படும் பணம் என்பதும் இன்றைக்கு மார்க்ஸ் பரிசீலித்த நிபந்தனைகளிலிருந்து வெகுவாக மாறியிருக்கிறது. மார்க்ஸ், “நான் தங்கச் சரக்கை பணமாக எடுத்துக் கொள்கிறேன்" என்று சொல்கிறார். தங்கம் என்பது மனித உழைப்பு சக்தியை செலுத்தி உற்பத்தி செய்யப்பட்ட ஒரு சரக்கு. மூலதனம் நூலில் தங்க அடிப்படையிலான பண முறை, வங்கிகளின் செயல்பாடுகள் தங்கக் கையிருப்பை அடிப்படையாகக் கொண்டிருப்பது என்றுதான் பரிசீலிக்கப்படுகின்றன. 3-வது பாகத்தில் இங்கிலாந்து வங்கி பணம் அச்சடித்து வெளியிடுவதற்கு குறிப்பிட்ட அளவு தங்கக் கையிருப்பு வைத்திருக்க வேண்டும் என்ற சட்டம் பற்றி விவாதிக்கப்படுகிறது.

உலகப் பொதுப்பணமாக தங்கத்தை பயன்படுத்தும் நடைமுறை 2-ம் உலகப் போரின் சமயத்தில் மாறுகிறது. அப்போது உலக முதலாளித்துவ நாடுகள் ஒன்று கூடி அமெரிக்க டாலருக்கு தங்கத்துடன் நிலையான விகிதத்தை வரையறுக்கிறார்கள். $35-க்கு ஒரு அவுன்ஸ் தங்கம் பரிவர்த்தனை செய்து கொள்வதாக அமெரிக்க அரசு உலக நாடுகளுக்கு உத்தரவாதம் அளிக்கிறது. அதன் அடிப்படையில் அனைத்து முதலாளித்துவ நாடுகளும் டாலரை உலகப் பொதுப்பணத்தை பயன்படுத்த ஆரம்பிக்கின்றனர். இது கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் நடைமுறையில் இருக்கிறது. உதாரணமாக, இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே வர்த்தக பற்றாக்குறை ஏற்பட்டால் இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு கப்பலில் தங்கத்தை ஏற்றி அனுப்பத் தேவையில்லை. டாலரை பரிமாறிக் கொள்வார்கள். ஏனென்றால், எப்போது வேண்டுமானாலும், டாலரை அமெரிக்க மத்திய வங்கியிடம் கொடுத்து தங்கம் வாங்கிக் கொள்ளலாம்.

1970-களில் உற்பத்தி முறையில் ஏற்பட்ட மாற்றம், மூலதனத் திரட்சியினால் ஏற்பட்ட விளைவுகளினால் அமெரிக்க அரசு, “இனிமேல், டாலருக்கு பதிலாக தங்கம் தருவது என்ற உத்தரவாதத்தை கைவிடுகிறோம். இந்த இரண்டுக்கும் பிணைப்பு இல்லை. 100 டாலர் கொண்டு கொடுத்தால் சில்லறை தருகிறோம். தங்கம் தரப் போவதில்லை" என்று அறிவிக்கின்றனர். 1970-கள் முதல் எந்த நாணயத்துக்கும் தங்க அடிப்படை இல்லை, உலகம் முழுவதும் யூரோ, டாலர், யென், பவுண்ட், சமீபத்தில் சீன யுவான் ஆகிய நாணயங்கள் உலகப் பொதுப்பணமாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. டாலருடைய முற்றாதிக்கம் நிலவுகிறது.

மார்க்ஸ் எழுதிய முதல் 3 அத்தியாயங்களில் பணம் பற்றி விவாதிக்கப்படுகிறது. அதில் மார்க்ஸ் தவறாக எழுதவில்லை. அன்றைய நிலைமையில் தங்கம் உலகப் பொதுப்பணமாக உள்ளது. சூக்குமமற்ற மனித உழைப்பு உருவேற்றப்பட்ட உடனடி வடிவமாக தங்கம் உள்ளது. காகிதப் பணமும் சுற்றோட்டத்தில் பயன்பட்டது. அப்படி இல்லாத உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக இதுதான் நிலைமை. இன்னும் 10 ஆண்டுகளில் இது மாறுமா என்று தெரியவில்லை, ஆனால், இன்றைக்கு தங்கம் உலகப் பொதுப்பணமாக இல்லாத கட்டமைவுதான் செயல்படுகிறது.

இதே போல மூலதனத் திரட்சியின் நிகழ்முறை, வங்கித் துறை எப்படி செயல்படுகிறது என்று ஆய்வு தேவைப்படுகிறது. பங்குச் சந்தையாகட்டும், அன்னியச் செலாவணி சந்தையாகட்டும், பிட் காய்ன் பற்றிய பிரச்சனை ஆகட்டும், கடன் பத்திரச் சந்தை ஆகட்டும் இவற்றின் கட்டமைவு சிக்கலானதாகவும், பிரம்மாண்டமாகவும் வளர்ந்திருக்கிறது.

ரியல் எஸ்டேட் இயற்கை வளங்களின் பொருளாதாரம் என்ன. 3 அடி வரை விவசாயம் செய்து கொள்ளலாம் அதற்குக் கீழ் இருப்பது முதலாளிகளுக்கு சொந்தம் என்று சொல்கிறார்கள். இதில் மீத்தேன் எடுக்க லைசன்ஸ் கொடுங்கள் என்று ஒரு இடத்தில், இன்னொரு இடத்தில் இரும்புத் தாது எடுக்க மலையை கேட்கிறார்கள், அலுமினியம் எடுக்க கவுத்தி வேடியப்பன் மலை வேண்டும் என்கிறார்கள்.

இந்தப் பொருளாதாரம் எப்படி இயங்குகிறது. இது ஏதோ ஆய்வுத் துறை ஆர்வத்துக்கானது மட்டும் இல்லை. இதைப் புரிந்தால்தான் நாம் யார் யார் எங்கு நிற்கிறார்கள். ஆலைத் தொழிலாளியின் பங்கு என்ன, சிறு விவசாயியின் நிலை என்ன என்று புரிந்து கொள்ள முடியும்.

முதலாளித்துவ வளர்ச்சிப் போக்கில் சிறு உடைமையாளர்கள் அழிந்து போவது அவசியமானது என்ற கோட்பாடு எல்லாம் பழைய காலத்தில் எழுதி வைத்தவை. இன்றைக்கு அது அப்படியே பொருந்துமா? சிறு விவசாயிகள் இருக்கிறார்கள். அவர் 8 வழிச்சாலையை எதிர்த்து நிற்கிறார். ஒருவர் அவரை ஆதரிக்க வேண்டும் என்கிறார். இன்னொருவர் நீங்கள் பெருவீத உற்பத்திக்கு எதிராக நிற்கிறீர்கள், முதலாளித்துவத்தை எதிர்க்கிறீர்கள், நீங்கள் பிற்போக்குவாதி என்கிறார்.

இவ்வாறாக, நாம் எல்லோரும் யானையை தடவிப் பார்த்து புரிந்து கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். 4 கண் தெரியாத நபர்கள் யானையை பார்க்க போனார்களாம். ஒருவர் காதை தடவிப் பார்த்து விட்டு யானை முறம் போல இருக்கிறது என்றாராம். இன்னொருவர் காலை தடவிப் பார்த்து விட்டு இல்லை இல்லை யானை தூண் போல இருக்கிறது என்றாராம். இரண்டு பேரும் விவாதம் செய்து கொள்கிறார்கள். முறம் போலத்தான் இருக்கிறது, தூண் போலத்தான் இருக்கிறது என்று அடித்துக் கொள்கிறார்கள்.

முதலாளித்துவ உற்பத்தி முறை என்ற யானை என்னவாக இருக்கிறது என்று காட்டியது மார்க்சின் பணி. மார்க்ஸ் கற்றுக் கொண்டு 21-ம் நூற்றாண்டில் இன்றைய உலக முதலாளித்துவ கட்டமைப்பு எப்படி உள்ளது, எப்படி இயங்குகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

உதாரணமாக, சப் பிரைம் நெருக்கடி பற்றி பேசுகிறோம். மார்க்சிய அமைப்புகள் எழுதிய கட்டுரைகள் பலவற்றில் நமது புரிதல் மேலோட்டமாக இருக்கிறது. வீட்டுக்கடன் வாங்கினார்கள், கட்ட முடியவில்லை, கவிழ்ந்து விட்டது என்ற அளவில் புரிந்து கொண்டிருக்கிறோம். இந்த நிதித்துறைக்கான கட்டமைப்பு பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இதற்கான சிறப்பு படிப்புகளை படித்தவர்கள் முதலீட்டு வங்கிகளை இயக்குகிறார்கள். இந்தக் கட்டமைவுகள் புரிந்து கொள்ளாமல் உலக முதலாளித்துவத்தை புரிந்து கொள்வது எப்படி?

இதைப் புரிந்து கொள்ளாமல் நாம் பண மதிப்பு நீக்கம் பற்றி எப்படி பேச முடியும். பண மதிப்பிழப்பு என்பது "நான் அதிகாரத்தில் இருப்பதால் நான் உத்தரவு போட்டு பணத்தை மாற்றி அமைத்து விடலாம்" என்று நினைத்த பா.ஜ.க/ஆர்.எஸ்.எஸ் சிந்தனையின் முட்டாள்தனத்துக்கு நல்ல உதாரணம். "எல்லோரும் பணத்தைக் கொடுங்க என்று அறிவித்தால் எல்லாம் மாறி விடும்" என்று நினைத்தார்கள். பணத்தின் பொருளாதார அடிப்படை பற்றிய ஆரம்பநிலை அறிவு கூட அவர்களுக்கு இல்லை. அவர்கள் மூலதனம் முதல் பாகத்தைக் கூட படித்திருக்கவில்லை என்பதுதான் இதன் பொருள்.

எல்லாவற்றையும் மார்க்ஸ் அல்லது லெனின் எழுதி வைத்து விட்டு போய் விட்டார். அதை அப்படியே எடுத்துக் கொள்ளலாம் என்று பார்ப்பது தவறு. மார்க்ஸ் அல்லது லெனின் பிரச்சனைகளை எப்படி பரிசீலித்தார், எப்படி முடிவுகளை வந்தடைந்தார் என்பதுதான் முக்கியமானது. லெனின் அந்த காலத்துக்கு, ரசியாவுக்கும் உலகத்துக்கும் ஏற்ற முடிவுகளை வந்தடைகிறார். அவற்றை எப்படி வந்தடைந்தார் என்பதுதான் முதன்மையானது.

மூலதனம் நூலில் என்ன சிறப்பு என்றால், அந்நூல் இயக்கவியல் பொருள்முதல்வாதத்தை ஒவ்வொரு வாக்கியத்திலும் கற்றுக் கொடுக்கிறது. அதை படித்தால் இயக்கவியல் பொருள்முதல்வாத அடிப்படையிலான அறிவியல் சிந்தனை முறை வளர்கிறது. அதைப் படிக்க முடியவில்லை, புரியவில்லை என்பதற்குக் காரணம் நமது சிந்தனை முறை தவறாக இருப்பதுதான்.

மேலும், முதலாளித்துவ கட்டமைவு என்பது ஒரு நாட்டுக்கு மட்டும் உட்பட்டதாக என்றைக்குமே இருந்ததில்லை. மூலதனம் முதல் பாகம் 4-வது அத்தியாயத்தில் மார்க்ஸ் சொல்வது போல, 16-ம் நூற்றாண்டில் உலகச் சந்தையும் உலக வர்த்தகமும் தோன்றியதில் இருந்துதான் நவீன மூலதனத்தின் ஆட்சி தொடங்கியது. இதை புரிந்து கொண்டால்தான் இன்றைய முதலாளித்துவ சமூகம் என்ற யானையை புரிந்து கொள்ள முடியும்.

அதற்கான பொறுப்பு மார்க்சிய அறிஞர்களின் கையில் இருக்கிறது என்று ஜான் ஸ்மித் சொல்கிறார்.

(காரல்) மார்க்சிடமும் (ஜான்) ஸ்மித்திடமும் கற்றது - 6 (இறுதிப் பகுதி)

திங்கள், மார்ச் 11, 2019

உலகளாவிய உற்பத்தியும் பொருளாதாரவியல் விளக்கங்களும்

த்தகைய குறைவான கூலி, மோசமான பணிச் சூழலில் முன்னணி பிராண்ட் பொருட்கள் உற்பத்தி ஆவதை நியாயப்படுத்துபவர்களி்ல ஒருவர் ஜக்தீஷ் பகவதி என்ற பொருளாதாரவியல் நிபுணர்.

ராணா பிளாசா விபத்துக்கு 6 மாதங்களுக்கு முன்பு அதே டாக்காவில் தஸ்றீன் ஃபேஷன்ஸ் என்ற தொழிற்சாலையில் தீவிபத்து ஏற்பட்டு 112 பேர் இறந்து விட்டனர். இது தொடர்பாக ஜக்தீஷ் பகவதி ஒரு கட்டுரை எழுதுகிறார். "உற்பத்தி ஆவது பிராண்ட் பொருளாக இருக்கலாம். ஆனால், பணத்தை கொடுத்து பொருளை வாங்குவதோடு எங்கள் பொறுப்பு முடிந்தது. அவர்கள் சுதந்திர சந்தையில் பேரம் பேசித்தானே உற்பத்தி செய்கிறேன். €1.35 என்ற விலையை சுதந்திரமாக ஏற்றுக் கொண்டுதானே உற்பத்தி செய்கிறான். அதனால் அவர்கள் நாட்டு தொழிலாளியை அப்படி நடத்தினால் எனக்கு என்ன ஆச்சு? வங்கதேச அரசு என்ன செய்கிறது? அவர்களுக்குத்தான் பொறுப்பு" என்று எழுதுகிறார். ராணா பிளாசா விபத்துக்குப் பிறகும் அதே போல எழுதுகிறார்.

ஆனால், வெறும் பொருளாதார உறவுதான் எங்களுக்கு பொறுப்பு இல்லை என்று சொன்னாலும், பொறுப்பை தட்டிக் கழிக்க முடியவில்லை. இத்தகைய உற்பத்தி நிறுவன உறவுகளை எப்படி புரிந்து கொள்வது என்று ஜான் ஸ்மித் கேட்கிறார். வங்கதேசத்தில் கடந்த 10-15 ஆண்டுகளில் பொருளாதாரம் நிறைய மாறியிருக்கிறது. முன்பு இருந்தது போல இல்லாமல் ஆயத்த ஆடை உற்பத்திக்காக 5,000 தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. அவற்றில் 45 லட்சம் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். அவர்களில் 85% பெண்கள். இது தொடர்பாக ஐ.நா நிறுவனங்கள் ஆய்வுகள் செய்துள்ளன.

ஆம்பூரில் உள்ள காலணி தொழிற்சாலைகளிலும் வேலை செய்பவர்களில் பெரும்பாலும் பெண்களாக இருப்பார்கள். உழைப்பு பட்டாளத்தை பெண்மயமாக்குவது என்று இதை அழைக்கிறார்கள். பெண்களுக்கு ஆண்களுக்குக் கொடுக்கும் கூலியில் முக்கால் பங்கு கொடுத்து கூலிச் செலவை குறைக்க முடிகிறது. வங்க தேச ஆயத்த ஆடைத் துறையில் பெண்களின் கூலி ஆண்களுக்குக் கொடுக்கப்படும் கூலியில் சுமார் 73% ஆக உள்ளது என்கிறார் ஜான் ஸ்மித். சென்னைக்கு அருகில் இயங்கிய ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் நோக்கியா ஃபோன் உற்பத்தி தொழிற்சாலையில் கூட பெண்கள்தான் அதிகமாக ஈடுபடுத்தப்பட்டனர்.

இவ்வாறு பல்வேறு வழிகளில் கூலியை குறைத்து லாபத்தை அதிகரிப்பதற்கு முதலாளித்துவம் வழி கண்டு பிடிக்கிறது, குறைந்த விலை, குறைந்த கூலி, செலவுக் குறைப்பு, அதிக லாபம், மூலதனக் குவிப்பு என்று ஓடிக் கொண்டே இருக்கிறது. இந்த உந்து சக்தி எப்படி இயங்குகிறது என்பதிலிருந்து ஜான் ஸ்மித் பேசுகிறார். இதை எப்படி புரிந்து கொள்ளப் போகிறோம். ஜக்தீஷ் பகவதி போன்ற முதலாளித்துவ அறிஞர்களை விட்டு விடுவோம்.

கம்யூனிஸ்ட் கட்சிகள், மார்க்சிய இயக்கத்தில் இதை எப்படி புரிந்து கொள்கிறோம். இதற்கு என்ன விளக்கம் அளிக்கிறோம்? ஏகாதிபத்தியம் பற்றி நாம் புரிந்து கொள்வது லெனின் எழுதிய ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சகட்டம் என்ற நூலில் இருந்து. அந்த நூலில் பெரிய ஏகபோக தொழில் நிறுவனங்கள் உருவாவது, வங்கிகள் ஏகபோகங்களாக உருவெடுப்பது, வங்கிகளும் தொழில் நிறுவனங்களும் இணைந்து நிதி மூலதனம் உருவாவது, மூலதனம் ஏற்றுமதி செய்யப்படுவது, ஏகாதிபத்திய நாடுகள் காலனிகளாக பிரித்துக் கொள்வது என்று 5 அம்சங்களை அந்த நூல் விளக்குகிறது.

ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் என்ற நூல் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை என்பது போன்ற ஒரு பிரகடனம். அரசியல் ரீதியாக என்ன நடந்து கொண்டிருக்கிறது, நாம் என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறது. ஜான் ஸ்மித் இதை எப்படி பார்க்கிறார்?

19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கற்பனாவாத சோசலிஸ்டுகளான சான் சிமோன், ஃபூரியே, சிஸ்மாண்டி போன்றவர்கள் முதலாளித்துவ சமூகத்தை மிகக் கடுமையாகவும் துல்லியமாகவும் விமர்சிக்கிறார்கள். “என்ன மாதிரியான உலகம் இது. இவ்வளவு பொருட்கள் உற்பத்தியாகி குவிகின்றன. ஆனால், பெரும்பான்மை மக்கள் ஏழ்மையில், பட்டினியில் உழல்கிறார்கள். எதிர்காலத்தில் நாம் ஒரு பொன்னுலகை படைப்போம். எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கும் ஒரு உலகத்தை படைப்போம்" என்று இவர்கள் பேசுகின்றனர். இவை அனைத்தும் அறிவியல் அடிப்படை இல்லாத கற்பனாவாத சிந்தனைகள்.

முதலாளித்துவம் பற்றிய அறிவியல் அடிப்படையை வழங்குவது மார்க்ஸ் தனது 20-30 ஆண்டு கால உழைப்பின் மூலம் படைத்த மூலதனம் நூல். மூலதனம் நூல் சரக்கு - பயன் மதிப்பு, பரிவர்த்தனை மதிப்பு, மதிப்பை படைப்பது எது, உழைப்பின் இரட்டைத் தன்மை என்று ஆரம்பிக்கிறது. மூலதனம் நூலில் மார்க்ஸ் பேசக்கூடிய எந்த ஒரு விஷயத்தையும் இந்தப் புள்ளியில் இருந்து வளர்த்துச் சென்று அடையலாம்.

அறிவியல் இந்த அடிப்படையில்தான் செயல்படுகிறது. உதாரணமாக, 2500 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்க அறிஞர் தேல்ஸ் உலகத்தில் எல்லாமே நீரால் ஆனது என்று முன் வைத்த கருதுகோள் அறிவியல் சிந்தனையின் வளர்ச்சியில் மிகப்பெரிய ஒரு பாய்ச்சல் என்கிறார்கள் அறிஞர்கள்.

இவ்வாறு முதலாளித்துவத்தின் எல்லா நிகழ்வுகளையும் ஒரு அடிப்படை கருதுகோளிலிருந்து விளக்கும் போது அவற்றில் என்னென்ன பாத்திரங்கள் உள்ளன, அவர்களுக்கிடையே இருக்கும் உறவு என்ன, மாறிச்செல்லும் இயக்கத்தின் விதிகள் என்ன என்று எல்லா விஷயங்களும் மூலதனம் நூலில் விளக்கப்படுகின்றன.

அத்தகைய அறிவியல் அடிப்படையில் லெனினின் ஏகாதிபத்தியம் நூல் எழுதப்படவில்லை. அவரது நோக்கமும் அதுவாக இருக்கவில்லை. அடுத்த 100 ஆண்டுகளில் உலக கம்யூனிச இயக்கத்தில் என்ன நடந்தது என்று ஜான் ஸ்மித் பரிசீலனை செய்கிறார். 1915 முதல் 2010 வரையில் மார்க்சிய அறிஞர்கள் செய்த ஆய்வுகளை பரிசீலிக்கிறார். சோவியத் யூனியனிலும் உலகின் முன்னணி கம்யூனிஸ்ட் கட்சிகளிலும் ஸ்டாலினிசம் பொருளாதாரத் துறையில் அறிவியல் அணுகுமுறையை காலி செய்து விட்டது என்கிறார். பால் ஸ்வீசி, பால் பேரன் அவர்கள் மதிப்பு விதியை ஒட்டி ஏகபோகங்களை பரிசீலிக்கிறார்., பின்னர் சார்புநிலை கோட்பாட்டு வாதிகள் மதிப்பு விதியின் அடிப்படையில் பேசியிருக்கின்றனர். 1990-கள், 2000-களில் டேவிட் ஹார்வி, எலன் வுட், மைக்கேல் ராபர்ட்ஸ் போன்ற கல்வித்துறை அறிஞர்கள் ஆய்வு செய்கின்றனர்.

இவர்கள் யாரும் புதிதாக தோன்றியிருக்கும் ஒரு நிலைமையை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. 1970-80களில் பெரும்பான்மை தொழிலாளர்கள் அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பானில் இருந்தார்கள். இன்று 80% தொழிலாளர்கள் மூன்றாம் உலக நாடுகளில் உள்ளனர். இந்தத் தொழிலாளர்கள் மதிப்பை படைத்து இந்த மதிப்பு பல்வேறு நிறுவனங்களுக்கிடையே பங்கிடப்படுகிறது. இந்த நிகழ்வை தீர்மானிக்கும் விதிகள் என்ன என்று எப்படி கண்டுபிடிப்பது?

மேலே சொன்ன உதாரணத்தில் வங்கதேசத்தின் ஜி.டி.பியை பார்த்தால் ஒரு சட்டைக்கு €0.90 தான் சேர்ப்பார்கள். €1.35 ஏற்றுமதி, €0.40 இறக்குமதி. €.95தான் வங்கதேசத்தின் ஜி.டி.பியில் சேரும். ஜெர்மனியின் ஜி.டி.பில் €3.60 சேரும். இதன்படி 'ஜெர்மனி பணக்கார நாடு, அங்குதான் உற்பத்தித் திறன் அதிகம். அவர்கள் €3.60 உற்பத்தி செய்திருக்கிறார்கள். வங்கதேச தொழிலாளர்கள் €0.90 தானே உற்பத்தி செய்திருக்கிறார்கள்' இப்படி நாம் எடுக்கும் தரவுகளில் பல தவறான சித்திரங்களை தருகின்றன. புள்ளிவிபரங்களையே இந்த பார்வையோடு கையாள வேண்டியிருக்கிறது என்று ஜான் ஸ்மித் வாதிடுகிறார்.

(காரல்) மார்க்சிடமும் (ஜான்) ஸ்மித்திடமும் கற்றது - 5

(6-வது பகுதியில் தொடரும்...)

சனி, மார்ச் 09, 2019

புதிய பாதை படைக்கும் தே.மு.தி.க - சுதீஷ், பிரேமலதாவின் அரசியல் சாணக்கியம்!

தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற கட்சி ஒரே நேரத்தில் அ.தி.மு.கவுடனும், தி.மு.கவுடனும் கூட்டணி பேரம் நடத்தியது என்று ஒரு சர்ச்சை ஓடுகிறது. கூட்டணி பேரம் நடத்தியதில் தவறில்லையாம் அதை வெளிப்படையாக சொன்னதுதான் பிரச்சனையாம். முன்னதாக பா.ம.கவும் இரு தரப்பிடமும் பேரம் பேசியது என்பது அனைவரும் அறிந்த ரகசியமாக இருந்தது. இப்படி ஒளித்து மறைத்து வெட்கப்பட்டுக் கொண்டு செய்து வந்தவற்றை வெளிப்படையாக போட்டு உடைக்கும் கட்சிகளுக்கு முன்னோடி விஜயகாந்தின், இல்லை இல்லை, அவரது மனைவி பிரேமலதாவின் தே.மு.தி.க.

தேசியம், திராவிடம் எல்லாவற்றையும் உதிர்த்து போட்டு விட்டு கட்சி நடத்த முடியும் கட்டம் வந்திராத 2005-ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட கட்சி இது. அதனால், பெயரில் தேசியம், முற்போக்கு, திராவிடம் என்பதை எல்லாம் சேர்க்க வேண்டியது இருந்தது. அப்போதுதான் அரசியலில் முன்னணியில் இருக்கும் இளைஞர்களை ஈர்க்க முடியும்.

அதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு சாதிக் கட்சி ஆரம்பித்த மருத்துவர் ராமதாஸ் அதற்கு பாட்டாளி மக்கள் கட்சி என்று பெயர் வைத்தார். பாட்டாளி வர்க்கத்தைச் சேர்ந்த வன்னியர் சாதி இளைஞர்களை கவர் செய்ய வேண்டிய அரசியல் நிலைமை அன்று இருந்தது.

சமீபத்தில் டி.டி.வி தினகரன் என்பவர் ஆரம்பித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சிக்கு இந்த பாவலாக்கள் எதுவும் தேவைப்படவில்லை. ஜெயலலிதா, பண மூட்டை இரண்டும் சேர்ந்ததுதான் அவரது கட்சியின் கொள்கையும் விதிமுறைகளும்.

சரி, இப்போது தே.மு.தி.கவுக்கு திரும்பி வருவோம்.

சமூக அநீதிகளைக் கண்டு கொதிக்கும் இளைஞனாக திரைப்படங்களில் வில்லன்களை பந்தாடியவர் விஜயகாந்த். அவரது மனைவி பிரேமலதா, மனைவியில் தம்பி சுதீஷ் இவர்களை மையமாக வைத்து உருவானதுதான் தே.மு.தி.க என்ற கட்சி. அரசியலில் நுழைவதற்கு தயாரிப்பாக பல ஆண்டுகளாகவே ரசிகர் மன்றங்களை ஆதரிப்பது, ஏழைகளுக்கு உதவி செய்வது என்று ஒரு பிராண்டை உருவாக்கிக் கொண்டிருந்தார்.

2005-ல் தனியாக கட்சி ஆரம்பித்து 2006 சட்டமன்ற தேர்தலில் விருத்தாச்சலம் தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆகியிருந்த விஜயகாந்தின் தலையை தட்டி வைக்க வேண்டும் என்பதும் தி.மு.கவின் கணக்காக இருந்தது. 2006-2011 தி.மு.க ஆட்சியில் இவர்களுக்கு சொந்தமான கல்யாண மண்டபத்தின் ஒரு பகுதியை கோயம்பேடு மேம்பாலம் கட்டுவதற்காக இடித்து விட்டார்கள். அதைத் தவிர்க்கும்படி சாலை போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த தி.மு.கவின் டி.ஆர்.பாலுவை பல முறை சந்தித்தும் அவர்கள் மசியவில்லை. விஜயகாந்தோ இந்த அநீதியை எதிர்த்து முகம் சிவந்து அடுத்த தேர்தலில் அ.தி.மு.கவுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டார். அந்தக் கூட்டணி அமோக வெற்றி பெற்று அ.தி.மு.க ஆளும் கட்சியாகவும், தே.மு.தி.க முக்கிய எதிர்க்கட்சியாகவும் சட்டமன்றத்துக்குள் நுழைந்தன.

தேர்தலுக்கு சில நாட்களுக்குப் பின் அ.தி.மு.க அமைச்சர் மரியம் பிச்சை கார் விபத்தில் பலியான போது, "இப்போதுதான் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார், அதை அனுபவிக்க முடியாமல் அய்யோ பாவம் பலியாகி விட்டார்" என்று அறிக்கை விட்டார் விஜயகாந்த். இவ்வாறாக, சட்டமன்ற உறுப்பினர் பதவி என்பது அனுபவிப்பதற்கானது என்ற ஊரறிந்த ரகசியத்தை தன் வாயாலும் போட்டு உடைத்து விட்டார்.

அதன் பிறகு ஜெயலலிதாவுடன் முட்டிக் கொண்டு ஜெயலலிதா ஒரு சர்வாதிகாரி என்ற வெளிப்படையான ரகசியத்தை உலகுக்கு அறிவித்தார். கட்சி எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்குவது, கட்சி தாவ வைப்பது என்று ஜெயலலிதா தே.மு.தி.கவை திட்டமிட்டு சிதைத்தார். இதற்கிடையில் விஜயகாந்த் உடல்நிலை மோசமாகி பேசுவது பிரச்சனையாக இருந்தது. 2014 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.கவுடனும் 2016 சட்ட மன்ற தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி என்றும் போட்டியிட்டு எதுவும் தேறவில்லை.

எனவே, இப்போது போட்ட முதலீட்டை காப்பாற்றிக் கொள்ள பிரேமலதாவும், சுதீஷூம் நேற்று பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி கலக்கியிருக்கின்றனர். "பெண் வீட்டில் இருந்தால் நான்கு பேர் கேட்டு வரத்தான் செய்வார்கள்" என்ற ரகசியத்தை அம்பலமாக்கியிருக்கிறார்.

தமிழகமே, இதற்கு மேல் என்ன வேண்டும், அரசியல் தரத்துக்கு!

வெள்ளி, மார்ச் 08, 2019

ராணிப்பேட்டை டேனரி படுகொலையில் சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் பங்குண்டா?

டுத்த காட்சி. 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் 30-ம் தேதி ராணிப்பேட்டையில் நடந்த ஒரு விபத்து பற்றியது. அதில் 10 வட மாநிலத் தொழிலாளர்கள் உயிரோடு சேற்று சுனாமியில் புதைக்கப்பட்டு கொல்லப்பட்டார்கள்.

ராணிப்பேட்டை நகரம் இருப்பது சென்னையில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தூரம்தான். 1970-80-களில் தோல் பதனிடும் தொழிலை மிகப்பெரிய அளவில் அங்கு கொண்டு வருகிறார்கள். சிப்காட் 1, சிப்காட் 2 என்று அரசே நிலத்தை கையகப்படுத்தி, விவசாய கிராமங்களுக்கு மத்தியில் டேனரிகளை கொண்டு வருகிறார்கள்.


பொதுவாக, தோல் பதனிடுவதற்கு பயன்படுத்தும் இரசாயனங்கள் கழிவு நீரில் வெளியேறும். ஐரோப்பாவில் கழிவு நீரை சுத்திகரித்துதான் வெளியில் விட வேண்டும் என்று சட்டம் இருக்கிறது. இந்தியாவில் அடுத்த 25 ஆண்டுகளுக்கு (1990-கள் வரை) யாருமே சுத்திகரிப்பு செய்யவில்லை. இரசாயனம் கலந்த கழிவு நீரை அப்படியே வெளியிட்டனர்.
அது சுற்றியிருந்த கிராமங்களில் நிலத்தையும் நிலத்தடி நீரையும் நஞ்சாக்கியது. 1990-களில் ஒரு என்.ஜி.ஓ போட்ட மனுவில் உச்ச நீதிமன்றம் கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலை இல்லை என்றால் எல்லா பதனிடும் தொழிற்சாலைகளையும் இழுத்து மூடி விடும்படி உத்தரவிட்டது.

இதற்கு அரசு நிதி ஒதுக்குகிறது. இங்கிலாந்தில் இருந்து, நெதர்லாந்தில் இருந்தும் நிபுணர்கள் வருகின்றனர். ஒவ்வொரு பகுதிக்கும் பொது சுத்திகரிப்பு ஆலை ஒன்றை ஏற்படுத்துகின்றனர். அதாவது, 100 ஆலைகள் இருந்தால் அவர்கள் அனைவரும் கழிவுநீரை வெளியிடுவதை ஒன்றாக சேர்த்து சுத்திகரிப்பார்கள். இத்தகைய சுத்திகரிப்பு ஆலை ராணிப்பேட்டை சிப்காட் 1-ல் இயங்கி வருகிறது.

இரசாயனம் கலந்த கழிவு நீரை சுத்தப்படுத்தும் போது கரைந்திருந்த இரசாயனங்கள் எல்லா்ம் பிரித்து எடுக்கப்படும். தண்ணீர் சுத்தமாக்கப்பட்டு வெளியில் விட்ட பிறகு (அப்படி சுத்தமாக்கப்படுகிறதா என்பது வேறு கேள்வி, அதை இங்கு பேசப் போவதில்லை) பிரித்து எடுக்கப்பட இரசாயனங்களின் சேறு, சகதி மிஞ்சும். இதை என்ன செய்வது? பொதுவாக அதை காயவைத்து லாரியில் எடுத்துச் சென்று அதற்கென்று ஏற்பாடு செய்யப்பட்ட நிலத்தில் கொட்டி வைக்க வேண்டும். இந்த சுத்திகரிப்பு ஆலையில் கழிவு இரசாயன சகதியை சேமித்து வைப்பதற்கு ஒரு தொட்டி கட்டியிருந்தார்கள். தொட்டி நிரம்பியதும் அதை அப்புறப்படுத்த வேண்டும். ஆனால் அதை எடுத்துக் கொண்டு போகவில்லை. குறிப்பிட்ட கட்டத்தில் தொட்டி நிரம்பி விட்டது. தொட்டிக்கு பக்கத்தில் எந்தவிதமான முறையான திட்டமும், வடிவமைப்பும் செய்யாமல் மதில் கட்டி சகதியை கொட்ட ஆரம்பிக்கிறார்கள்.

இந்தச் சுவரை ஒட்டி சுமார் 4-6 டன் சகதி தேங்கி நிற்கிறது. அதற்கு பக்கத்தில் சுவரை ஒட்டி ஆர்.கே லெதர்ஸ் என்ற தோல் ஆலை உள்ளது. ஜனவரி 30-ம் தேதி இரவு சகதியின் அழுத்தத்தால் சுவர் உடைந்து போனது. சகதி சுனாமி போல வெளியேறி அந்தப் பகுதி முழுக்க சேறு நிரம்பி விட்டது. பக்கத்தில் இருந்த டேனரியில் 10 தொழிலாளர்கள் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்கள்.



அது ஒரு தொழிற்பேட்டை, இரசாயனம் பயன்படுத்தும் இடம். சாதாரணமாக வேலை செய்ய அனுப்பினாலேயே முகத்தை மூடி, கையில் உறை போட்டுத்தான் போக வேண்டும். இங்குதான் 10 பேர் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்கள். இந்த 10 தொழிலாளர்களும் சேறில் மூழ்கடிக்கப்பட்டு, இரசாயனத்தில் மூச்சுத் திணறி, மின் கசிவில் பரவிய மின்சாரத்தில் சிக்கிக் கொல்லப்பட்டனர். 10 பேரும் மேற்கு வங்கத்தின் மிதினாப்பூர் மாவட்டத்தில் இருந்து வந்தவர்கள். இங்கு இந்த தோல் தொழிற்சாலையில் வேலை செய்ய வந்திருக்கிறார்கள்.

எனக்கு இது தனிப்பட்ட முறையில் நெருக்கமான இடம். ராணிப்பேட்டையில் தொழில் தொடர்பாக பல முறை சுற்றி வந்திருக்கிறேன். ஆர்.கே லெதர் நிறுவனத்தை பற்றி பலமுறை பேசியிருக்கிறேன். இதை எப்படி புரிந்து கொள்வது? இதற்கு எங்கு போய் விளக்கம் தேடுவீர்கள்?

இந்த டேனரியும் சரி, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையமும் சரி, சீனத் தொழிற்சாலையும் சரி பொருளாதாரத் துறையில்தான் வருகின்றன. ஆனால், நான் கல்லூரியில் படிக்கும் போது வாசித்த பால் சாமுவேல்சன் போன்றவர்கள் எழுதிய முதலாளித்துவ பொருளாதாரவியல் நூல்களில் இதற்கான விடை கிடைக்காது. "இது எல்லாம் எங்கள் துறையில் வராது, மாசுக் கட்டுப்பாட்டுத் துறை என்ன செய்து கொண்டிருந்தது, அரசு என்ன செய்தது" என்று இவற்றைப் பற்றிய ஆய்வை சமூகவியல் துறைக்கு ஒதுக்கி விடுவார்கள்.

இந்த ஒரு காட்சியை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஆர்.கே லெதர் என்பது என்ன? இந்த நிறுவனத்தின் பார்ட்னர்கள் நான் வேலை செய்த டாடா நிறுவனத்தில் நான் சேர்வதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு ஹாங்காங்கில் வேலை செய்தார்கள். டாடா நிறுவனத்தின் தோலை ஹாங்காங் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் பணியில் இருந்தார்கள். சிறிது காலத்துக்குப் பிறகு டாடா நிறுவனத்தை விட்டு விலகி தனியாக நிறுவனம் ஆரம்பித்து ராணிப்பேட்டையில் தாமே ஆலை நடத்தி தோல்களை சீன தொழிற்சாலைகளுக்கு ஹாங்காங் வழியாக ஏற்றுமதி செய்யும் தொழிலை நடத்தினார்கள்.

ஆர்.கே லெதர்ஸ் ஆகட்டும், டாடா நிறுவனம் ஆகட்டும், இந்தியாவில் உற்பத்தி ஆகும் தோலை ஹாங்காங் அலுவலகம் மூலமாக சீனத் தொழிற்சாலைகளுக்கு சந்தைப்படுத்தி வந்தனர். சீனத் தொழிற்சாலையில் உற்பத்தியாகும் தோல் பொருட்கள் அமெரிக்காவுக்கும், ஐரோப்பாவுக்கும் ஏற்றுமதி ஆகும்.


சென்னை சர்வதேச தோல் பொருட்கள் கண்காட்சி

ஹாங்காங் விற்பனை மீட்டிங்கில் என்ன நடக்கும்? அத்தகைய மீட்டிங் ஒன்றுக்கு நான். போயிருக்கிறேன்.

அமெரிக்காவின் பிராண்ட் நிறுவனத்தின் பிரதிநிதி வருவார். அமெரிக்க பிராண்ட் பிரதிநிதி, தோல் உற்பத்தி செய்யும் நிறுவனத்தைச் சேர்ந்தவர், சீனாவில் இருக்கும் காலணி உற்பத்தி நிறுவன பிரதிநிதி, ஹாங்காங் வர்த்தக நிறுவனத்தைச் சேர்ந்தவர். இந்த நான்கு பேரும் உட்கார்ந்து பேசுவார்கள். அடுத்த சீசனில் நைன் வெஸ்ட், அல்லது நைக், ரீபோக் போன்ற அமெரிக்க பிராண்ட் எத்தனை லட்சம் ஜதை காலணிகள் செய்வது என்று விவாதிப்பார்கள்.
"இதற்கு தேவையான தோலை இவரிடம் இருந்து இன்ன விலையில் வாங்கிக் கொள்ளுங்கள். இவர் இன்ன விலையில் காலணி உற்பத்தி செய்து தருவார்" என்று எல்லாவற்றையும் அமெரிக்க பிராண்ட் நிறுவனமே திட்டமிட்டு ஏற்பாடு செய்யும். காலணியில் என்ன மாதிரியான தோலை பயன்படுத்த வேண்டும், அதன் விலை என்ன என்பது வரை முடிவு செய்து சொல்லி விடுவார்கள்.

இப்போது கேள்வி, ராணிப்பேட்டையில் நடந்த விபத்துக்கு யார் பொறுப்பு? தோல் தொழிற்சாலை முதலாளியா, சீன காலணி உற்பத்தி நிறுவனமா, ஹாங்காங் வர்த்தக நிறுவனமா, அல்லது அமெரிக்க பிராண்ட் நிறுவனமா அல்லது எல்லோருமா?
பொதுவாக என்ன சொல்கிறார்கள்? "இந்தியாவில் சிஸ்டம் சரியில்லை, லஞ்சம் தலை விரித்து ஆடுகிறது. இந்திய முதலாளி அவர்கள் நாட்டு தொழிலாளியையே ஈவு இரக்கம் இல்லாமல் சுரண்டுகிறார். ஏன் டேனரியில் தூங்க வைத்தார்கள். இந்தியாவில் சிஸ்டத்தை சரி செய்ய வேண்டும்" என்கிறார்கள்.

ஜான் ஸ்மித் இந்த வாதத்தை மறுக்கிறார். உலகளாவிய இந்த உற்பத்திச் சங்கிலி எப்படி இயங்குகிறது? இதை எப்படி புரிந்து கொள்வது என்று அவர் விளக்குகிறார்.

(காரல்) மார்க்சிடமும் (ஜான்) ஸ்மித்திடமும் கற்றது - 2
(3-வது பகுதியில் தொடரும்....)
  1. உலகளாவிய உற்பத்தியும் கனவு கண்ட மென்பொருளும்
  2. ராணிப்பேட்டை டேனரி படுகொலையில் சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் பங்குண்டா?
  3. அமெரிக்க ஆப்பிளுக்கு அடிமைகளாக உழைக்கும் சீனத் தொழிலாளர்கள்
  4. ஆப்பிள் முதலான மேற்கத்திய பிராண்டுகளின் லாபத்தின் ரகசியம்ம்
  5. உலகளாவிய உற்பத்தியும் பொருளாதாரவியல் விளக்கங்களும்
  6. மார்க்சின் மூலதனமும் 21-ம் நூற்றாண்டின் உலக முதலாளித்துவமும்

ஞாயிறு, ஜனவரி 15, 2012

சென்னைப் புத்தகக் கண்காட்சி - 2012


13ம் தேதி ;

ஆங்கிலோ இந்தியன் பள்ளிக்கு முன் நெரிசலில் நிற்கவே வாசலுக்கு நேராக இறங்கிக் கொண்டேன். பள்ளிக்கு உள்ளேயும் மெட்ரோ பணிகள் நடந்து கொண்டிருந்தன. நடந்து போகும் நடைபாதையின் வலது புறம் மெட்ரோ தடுப்புச் சுவர். சென்னை மெட்ரோ என்ற பெயரை அதில் எழுதிக் கொண்டிருந்தார்கள். ஒப்பந்த பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் சாங்காய் தீஜியன் (上海地建) என்ற நிறுவனத்தின் பெயர் சீன எழுத்துக்களில் தெரிந்தது. இந்த நடைபாதை முடியும் இடத்தில் இன்னொரு நுழைவாயில். அதற்கு நேராகத்தான் புத்தகக் கண்காட்சியின் வரவேற்பு வளைவு.

வரிசையாக விளம்பரத் தட்டிகள் வைத்திருந்தார்கள். சுஜாதா, வைரமுத்து, ஜெயமோகன் போன்றவர்களுக்கு பெரிய புகைப்படம் போட்ட தட்டிகள். அடுத்த பகுதிக்கு நுழையும் இடத்தில் வலது புறம் லயன்ஸ் ரத்த தான வண்டி. அதனுள் யாரோ ரத்தம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அடுத்த குறுகிய பகுதியில் இன்னும் தட்டிகள்.

போன முறை இருந்த கலைஞர் புகைப்பட அரங்கு மாயமாகியிருந்தது. அந்தப் பகுதியில் வரிசையாக சாப்பிடும் பொருள் விற்பவர்கள். இயற்கை உணவு என்ற பெயரில் பழங்கள், அடுத்ததாக வறுத்த கடலை, அருணா சூப், பிஸ்ஸா, பாப்கார்ன், ஐஸ்கிரீம் என்று சின்னச் சின்னக் கடைகள்.

இடது புறம் நிகழ்ச்சிக் கூடம். அதன் முன்பாக தினமும் மாலை நிகழ்ச்சி விபரங்கள் ஒரு பக்கமும், வாசகர் எழுத்தாளர் சந்திப்பு விபரங்களையும் தட்டியில் வைத்திருந்தார்கள். பெரிய பந்தல் போட்டு நிகழ்ச்சிகளுக்கான மேடை. வெள்ளிக் கிழமை சுகிசிவம் தலைமையில் பட்டி மன்றம்.

5 ரூபாய் நுழைவுச் சீட்டு வாங்கிக் கொண்டு உள்ளே போனேன். 'பெயரையும் முகவரியையும் நிரப்பிப் போட்டால், பரிசு கிடைக்கும்' என்று சொல்லிக் கொண்டே இருந்தார்கள்.

பெரிய கூடம். ஒவ்வொரு பாதைக்கும் பெயர் கொடுத்திருந்தார்கள். இடது புறத்திலிருந்து ஆரம்பித்தேன். ஒவ்வொரு கடையாகப் பார்த்துக் கொண்டே நகர்ந்தேன்.

1。 விஜயபாரதம் கடையில் ராமஜன்ம பூமி போராட்ட வரலாறு என்று வெளியீட்டை வாங்கினேன். அதை கடையில் சுதேசி சக்தி என்ற பத்திரிகையை ஒருவர் இலவசமாக கொடுத்தார். ஜூலை 2007 இதழ். பழைய விற்காத இதழ்களை இப்படி வினியோகிப்பது நல்ல விளம்பர பிரச்சார உத்திதான்.

மெட்ராஸ் யூனிவர்சிட்டி கடையில் Economic conditions in South India, A Appadorai எழுதிய ஆய்வு நூல், இரண்டு பாகங்களாக 100 ரூபாய் விலை ஒவ்வொன்றும், வாங்கவில்லை, குறித்துக் கொண்டேன்.  இமாச்சல் கடையில் ஆப்பிள் ஜூஸ் குடித்துக் கொண்டேன்.

விருபா.காம் என்று கடை இருந்தது.  கணினியில் விருபா தளத்தின் உள்ளுறை பதிப்பை திறந்து வைத்திருந்தார். ஒரு வேளை பபாசியில் இலவசமாக கொடுத்து விட்டார்களோ என்று கேட்டேன். இல்லையாம். சுமார் 5000 சொச்சம் புத்தகங்கள் பட்டியலிட்டிருக்கிறார். இன்னும் 15000  புத்தகங்கள் இருந்தாலும், 'அவற்றை நான் பார்க்காவிட்டால் பட்டியலில் சேர்ப்பதில்லை' என்றார்.

'இந்த தளத்தில் பெரிய விளம்பரம் இல்லை என்றாலும் இது தொடர்பான மற்ற பணிகள் கிடைக்கின்றன' என்றார். மெட்ராஸ் யூனிவர்சிட்டியின் நூல்களை அட்டவணைப்படுத்துதல், கலைமகளின் 80 ஆண்டு இதழ்களை மின்வடிவமாக்குதல் பணிகளை செய்திருக்கிறார். கலைமகளை இப்போது நடத்துவது நாராயணசாமி என்று பேரனாம். மெட்ராஸ் லா ஜர்னல் என்று நடத்திய குடும்பம்.

நல்லி திசை எட்டும் என்று ஒரு கடை இருந்தது. 'எல்லோருக்கும் நாம் பணம் கொடுத்து ஸ்பான்சர் செய்கிறோம், நாமும் புத்தகங்கள் வெளியிட்டு ஒரு கடையும் போட்டு விடுவோம்' என்று முடிவு செய்து போட்டு விட்டார் என்று நினைத்துக் கொண்டேன். அவர் எழுதிய புத்தகங்கள், அவரைப் பற்றி எழுதப்பட்ட புத்தகங்களை வைத்திருந்தார்கள்.

பூவுலகின் நண்பர்கள் என்ற பெயரில் ஒரு கடை.  'இவர்கள்தான் கல்பாக்கம் அணுஉலைக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுப்பவர்கள்' என்று நினைவு. அவருக்கு விபரங்கள் தெரியவில்லை.

பில்ராத் ஹாஸ்பிட்டல்ஸ் என்ற விளம்பரம்தான் ஆதிக்கம் செலுத்தியது, புரபஷனல் கூரியர்ஸ் விளம்பரங்களும் தொங்கின. இரண்டு நிறுவனங்களுமே ஆளுக்கொரு கடையும் வைத்திருந்தார்கள். சாபோல் என்று தண்ணீர் விற்கும் நிறுவனத்துக்கு ஒரு கடை. அரங்கத்தின் மறு முனையில் வரிசையாக நாளிதழ்கள், வார இதழ்களின் கடைகள். இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ், புதிய தலைமுறை, ராஜ் டிவி, ஆல் இந்தியா ரேடியோ, தூர்தர்ஷன் என்று கடைகள் இருந்தன.

ஆன்மீக வியாபாரத்துக்கு பலர் கடை விரித்திருந்தார்கள். பெரிதாக கூட்டங்கள் இல்லை. சின்மயா மிஷன், யோகா, ஈஷா யோகா, ராமகிருஷ்ண விஜயம், வாழிய நலம், கீதா பிரஸ், கிருஷ்ணமூர்த்தி பவுண்டேசன் என்று பல வகையான கடைகள். எல்லாவற்றிலும் புத்தகங்கள். இஸ்லாமிய புத்தகங்களுக்கான கடைகளும் பல இருந்தன. குரான் விற்பவை, உமறுப் புலவரின் படைப்புகள் என்று அது இன்னொரு பக்கம்.

F1 முதல் F56 வரை இரண்டு பக்க நடைபாதைகளில் திறக்கும் கடைகள். இதற்கு கொஞ்சம் செலவு அதிகமாகும் போலிருக்கிறது. அவற்றைத் தவிர 1லிருந்து 462 வரை ஒரே நடைபாதையில் திறக்கும் கடைகள்.

2。 விடியல் பதிப்பகத்தில் புத்தகங்களை மேய்ந்து கொண்டிருக்கும் போது கிஷன்ஜி பற்றிய புத்தகத்தை கையில் திணித்து விட்டார் ஒருவர். அதை வாங்கிக் கொண்டேன்.

காலச்சுவடு கடையை கடந்து போகும் போது அங்கும் பழைய காலச்சுவடு இதழை வினியோகித்து விளம்பரம் செய்யும் உத்தி செயல்பட்டுக் கொண்டிருந்தது. ஜூலை 2005 இதழ். உலகமயமாக்கல் பற்றிய கட்டுரைகள் முக்கியமானவை. கல்வி பற்றி ஒருவரும் மொழிக்கொள்கை பற்றி செந்தில்நாதனும் எழுதியிருந்தார்கள்.

அடுத்து வேக வேகமாக நடந்தேன். நியூஹொரைசான் மீடியா என்றும் கிழக்கு என்றும் இரண்டு கடைகள். ஜெயமோகன், சாருநிவேதிதா, அரவிந்தன் நீலகண்டன் புத்தகங்கள் அங்கங்கு பரப்பி வைக்கப்பட்டிருந்தாலும் பெரிதாக கைகளில் காணப்படவில்லை.

கிழக்கு கடைக்கு வெளியில் விலைப்பட்டியலை திணிக்க ஒரு பையன். வேண்டாம் என்று உள்ளே போனால், இன்னொரு பையன் கொஞ்சம் கவனக் குறைவாக இருந்த நேரத்தில் திணித்து விட்டான். கடைகளில் தோரணம் தொங்க விட்டிருந்தது கிழக்கு மட்டும்தான்.

3,4. அப்படியே நகர்ந்து கீழைக் காற்று பதிப்பகத்தில் ஐடி துறை நண்பா என்ற புத்தகத்தையும் ரசியப் பொருளாதாரம் பற்றிய ஒரு விமர்சனம் புத்தகத்தையும் வாங்கிக் கொண்டேன்.

5. ஆழி பதிப்பகம்  ஊர்களைப் பற்றிய புத்தக வரிசை வெளியிட்டிருந்தார்கள்.  ஆம்பூர் பற்றி யாழன் ஆதி எழுதியதை வாங்கிக் கொண்டேன்.

ஒலிபெருக்கிகளில் 6 மணிக்கு சுகிசிவம் பட்டி மன்றம் என்று அலறிக் கொண்டிருந்தார்கள். இதற்கிடையில் மேடைப் பேச்சில் ஒருவர் கவர்ச்சிகரமான குரலில் முழங்கிக் கொண்டிருந்தார். 6 மணி பட்டிமன்றத்தை வம்புக்கிழுத்து கிண்டலும் அடித்தார். '6 மணிக்கு பட்டிமன்றமாம் அதற்குள் முடித்து விட வேண்டுமாம் என்று.' அத்தோடு வெளியில் வந்து விட்டேன்.

தமிழருவி மணியன் பேசிக் கொண்டிருந்தார். மேடையில் நெடுமாறன், தா பாண்டியன், நல்ல கண்ணு, சி மகேந்திரன், இயக்குனர் மணிவண்ணன் உட்கார்ந்திருந்தார்கள். வீழ்வேனென்று நினைத்தாயோ என்று ஈழத்தைப் பற்றி சி மகேந்திரன் ஜூனியர் விகடனில் தொடராக எழுதி ஆனந்த விகடன் வெளியிட்டிருந்த புத்தகம் பற்றிய விழா.

அப்போதே 5.30 ஆகி விட்டிருந்தது. '6 மணிக்கு பட்டி மன்றம் ஆரம்பிக்க வேண்டும் அதனால் சீக்கிரம் முடித்துக் கொள்கிறேன்' என்று முன்னுரை சொல்லி விட்டு பேச்சை ஆரம்பித்தார். தமிழருவி மணியன். நிறைய பேசினார். முள்ளி வாய்க்கால், துரோகம், தமிழர்களின் சுரணையின்மை. ஆறு கோடி தமிழர்கள், 4 கோடி வாக்காளர்கள், 10 லட்சம் பேர் ஏன் திரளவில்லை என்று அடுக்கிக் கொண்டே போனார். 'ராஜபக்சே என் கையில் கிடைத்தால் அவனை கொல்வேன்' என்று முழக்கமிட்டார். மணிண்ணன் அப்படி பேசியதாகச் சொல்லி விட்டு 'இல்லை என்றாலும் நான் சொல்கிறேன்., நான் காந்திய வாதியாக இருந்தாலும் கொல்வேன். காந்தியே உன் ரத்தத்தை உறிந்து கொழுக்கும் கொசுவைக் கொல்வது தவறில்லை' என்று சொல்லியிருப்பதாக பிளிறினார்.

தாங்க முடியாமல் எழுந்து அரங்குக்குப் பின்புறம் இருந்த உணவுக் கூடத்துக்குப் போனேன். உள்ளே பிரார்த்தனை பாடல்கள் ஒலிக்க, வாசலில் ஒரு அம்மா பட்டுப் புடவை கட்டி ஒரு கேடலாக் கையில் கொடுத்தார்கள். திருமண விசேஷங்களுக்கு கேட்டரிங் என்று சொல்வதுடன் ராசி பலன் பக்கத்துக்குப் பக்கம். உள்ளே நுழைந்ததும் கழிவுகளைப் போடும் குப்பைக் கூடையில் போட்டு விட்டேன்.

உணவுக் கூடத்தின் உள்ளே வாசலுக்கு நேராக சங்கராச்சாரியார், இறந்து போனவரின் ஆளுயரச் சிலை, உட்கார்ந்திருப்பதாக. விகாரமாக தெரிந்தது.  அதைச் சுற்றி ப வடிவில் சாப்பாட்டுக் கடைகள். நுழைந்தவுடன் வலது புறம் முதலில் தயிர் சோறு, கார சோறு, கொத்தமல்லி சோறு, தோசை, சாட், பூரி, பொங்கல், காபி. உணவுப் பொருட்கள் எல்லாம் 50 ரூபாய், காபி 20 ரூபாய் என்று கல்லாக் கட்டிக் கொண்டிருந்தார்கள்.

காராபாத் என்று சொன்னதைக் கேட்டுக் கொண்டு டோக்கன் வாங்குமிடத்தில் சாம்பார் சாதம் என்று கேட்டேன். காராபாத் என்று திருத்திக் கொடுத்தார். வாங்கி சாப்பிட்டேன். தொட்டுக் கொள்ள பொரித்த அரிசி வற்றல். குடிப்பதற்கு தண்ணீர் கொடுப்பதற்கு இரண்டு பேர் என்று தடபுடலாக 5 நட்சத்திர வசதியில் தெரிந்தது.

சாப்பிட்டு விட்டு வெளியில் வரும் போது தமிழருவி மணியன் முடித்து விட்டிருந்தார். அடுத்தது தா பாண்டியன் பேசுவார் என்றதும், அவர் 'குறுகச் சொல்' என்று திருவள்ளுவரோ யாரோ சொன்னதாகச் சொல்லி நேரத்தை குறைவாக எடுத்துக் கொள்வதாகச் சொன்னார். தமிழ்நாட்டிலிருந்து முதலமைச்சர் தலைமையில் பிரதமரை சந்திக்கப் போன போது என்ன நடந்தது என்று மர்மமாக பேசினார்.  'மகேந்திரனின் புத்தகத்தில் சில இடங்களில் அவரசமாக எழுதிப் போனது போல இருந்தது' என்று விமர்சனமும் வைத்தார். பட்டிமன்ற நேரம் தாண்டி விட்டதை முன்னிட்டு முடித்துக் கொண்டார்.

அடுத்த வழக்கறிஞர் அமர்நாத் நன்றி சொன்னார். போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலைக்கு எதிரான இளைஞர்கள் கூட்டமைப்பின் சார்பில்தான் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். வெளியிட்ட விகடன், இடம் கொடுத்த பபாசி அனைவருக்கும் நன்றி. நிகழ்ச்சி முடிந்தது.

அடுத்த நிகழ்ச்சிக்காக புத்தகக் கண்காட்சி அரங்கிலிருந்து சுகிசிவம் வெளிவந்து கொண்டிருந்தார். பாரதி பாஸ்கர் இன்னொரு பிரபலம் கலந்து கொள்ளப் போகிறவர். அரங்கின் நுழைவாயிலுக்குப் போய் கடை பட்டியல் கேட்டால் ஒரு நாற்காலியில் குவித்து வைத்திருந்ததை எடுத்துக் கொள்ளச் சொன்னார் அந்த வாலண்டியர். அதில் அகர வரிசையில் பதிப்பகங்களின் கடைகளின் பட்டியல். Aa என்று ஆரம்பிக்கும் ஆழி பதிப்பகம் முதலிடத்தில்.

சுகிசிவத்தின் பட்டிமன்ற அரங்கில் நாற்காயிலியில் உட்கார்ந்தேன். முறுக்கு விற்றவரிடம் ஒரு பாக்கெட் வாங்கிக் கொண்டேன். கணினியை இயக்கி, புத்தகக் கண்காட்சியிலிருந்து நேரடி அப்டேட் என்று போட நினைத்து, கேவலமாக உணர்ந்து செய்யவில்லை.

சுகி சிவம் பேச ஆரம்பித்தார். 'இது போன்று படிப்பவர்களின் மத்தியில் பேசும் போது எங்களுக்கு இன்னும் உழைப்பு தேவைப்படுகிறது. உலகின் பல பகுதிகளில் பேசினாலும் இது சிறப்பானது' என்று ஆரம்பித்து. 'வான் காக் ஓவியம் வரைந்தார். மரங்கள் நட்சத்திரங்களைத் தொடுவதாக வரைந்தார்' என்று அரைக்க ஆரம்பித்தார். அதையும் தாங்க முடியாமல் எழுந்து வெளியில் நகர்ந்தேன்.

6. இருட்டி விட்டிருந்தது. கூட்டமும் கொஞ்சம் அதிகரித்திருந்தது. வெளியில் வந்து சாலையைக் கடந்தேன். சாலையின் மறுபக்கம் பழைய புத்தகங்கள் விற்கும் நடைபாதை வியாபாரிகள். 20 ரூபாய்க்கு ஜான் கென்னத் கேல்பிரித் புத்தகம் ஒன்றை வாங்கிக் கொண்டேன். ஆங்கிலத்தில் The New Industrial State என்ற தலைப்பில் எழுதிய கட்டுரைகள்.

அடுத்த நாள் - 14ம் தேதி:

புத்தகக் கண்காட்சியில் நண்பர் வண்டியை நிறுத்தப் போய் விட நான் காத்திருந்தேன்.  இன்று மறுபக்கத்திலிருந்து ஆரம்பித்தோம்.  இஸ்கான் கடையில் போய் பகவத் கீதையைப் புரட்டிக் கொண்டே ரஷ்ய வழக்கு பற்றி பேச்சுக் கொடுத்தார்.

'தடை செய்யப் பார்த்தாங்க, கோர்ட்டில் உடைத்து விட்டோம்' என்று மார் தட்டினார் கடையில் இருந்தவர்.

'ஆனால் இந்த புத்தகம் வன்முறையை தூண்டுவதாக சொல்றாங்களே, நான்கு வர்ணங்களை உருவாக்கியதாக சொல்கிறதே'

'ஆமா  பகவான் அப்படி உருவாக்கினார், ஆனால் அது பிறப்பால் கிடையாது, ஒரு டாக்டர் மகன் எப்படி டாக்டர் ஆக முடியாதோ, எம்பிபிஎஸ் படித்து ஹவுஸ் சர்ஜன் முடித்து அதன் பிறகுதான் டாக்டர் ஆக முடியுமோ அதே போல பிராமணன் என்பது குணங்கள், நடத்தை. அதை யார் வேண்டுமானாலும் எட்டலாம்'

'நான் ஒரு தலித், நானும் பிராமணனாக மாறி, ஒரு பிராமின் லேடியை கல்யாணம் செய்து கொள்ள முடியுமா'

'இந்தக் காலத்தில் யாருமே பிராமணன் கிடையாது. நான் கூட பிராமணன் கிடையாது' என்று ஆரம்பித்தார். கடைசியில் 'புத்தகம் வாங்கப் போறீங்களா இல்லையா' என்று துரத்தி விட்டார்.

7. லெப்ட்வேர்ட் என்ற கடையில் A History of Capitalism என்று  மைக்கேல் பீட் என்பவர் எழுதிய புத்தகத்தை வாங்கினேன். 325 ரூபாய்கள்.

8,9,10,11. கீழைக்காற்று பதிப்பகத்தில் ஹூனான் விவசாயி இயக்கப் பரிசீலனை பற்றிய அறிக்கை, சீனா ஒரு முடிவுறாத போர் என்ற வில்லியம் ஹிண்டனின் நூல், முரண்பாடு பற்றி மாசேதுங் வாங்கினேன். போராடும் தருணங்கள் இன்னொரு பிரதி.

காமிக்ஸ் புத்தகங்கள் கட்டை வாங்கினார். நண்பர் வாங்கச் சொன்னாராம்.

12. வெளியில் வந்து ஆழி செந்தில்நாதனைப் பார்க்க  தொலைபேசியில் அழைத்தால் கடைக்கு வந்திருந்தாராம். கடைக்குப் போனோம். லூர்தம்மாள் சைமன் பற்றிய புத்தகத்தை வாங்கினேன்.

நண்பருக்கு பாமரன் எழுதிய புத்தர் சிரித்தார் புத்தகம் வேண்டும். அதற்காக பாலபாரதிக்குத் தொலைபேசினால், அம்ருதா பதிப்பகத்தில் கேட்கச் சொன்னார். சமீபத்திய ஒரு வெளியீடு உயிர்மையில் வெளியிட்டிருப்பதாகச் சொன்னார். அவரது சாமியாட்டம் சிறுகதைத் தொகுப்பு வெளியாகியிருக்கிறது.

இதற்கிடையில் நாகர்கோவிலைச் சேர்ந்த ஒரு பேராசிரியரின் மனைவி நண்பரிடம் 425 ரூபாய்க்கு புத்தகங்களைக் கட்டி விட்டார்.

13. பாவை பதிப்பகத்தில் Mathematics Can be fun என்ற என்சிபிஎச் வெளியீட்டை வாங்கிக் கொண்டேன். 300 ரூபாய். நானும் கிட்டத்தட்ட 1000 ரூபாய்க்கு வாங்கியிருப்பேன் இதுவரை.

14. கீழைக்காற்றில் அதிகாலையின் அமைதி+போர்வீரனின் கதை அடங்கிய டிவிடி வாங்கிக் கொண்டேன்.

15. டிஸ்கவரி கடையில் சாமியாட்டம் வாங்கினேன். கேபிள் சங்கர் உட்கார்ந்திருந்தார்.

சு சமுத்திரம் எழுத்துக்களைத் தேடினார். மாணிக்கவாசகர் பதிப்பகத்தில் இல்லை என்று சொல்லி விட்டார்கள். 9 மணி நெருங்க, நான் வாசலுக்கு அருகில் ஒரு நாற்காலியில் உட்கார்ந்தேன். 9 மணியளவில் விளக்குகளை அணைத்தார்கள். பரிசுக் குலுக்கலுக்கான அறிவிப்புகள் நடத்தி குலுக்கி பெயர் தேர்ந்தெடுத்து அறிவித்தார்கள்.

புதன், நவம்பர் 23, 2011

சென்னை - வேலூர் பேருந்து கட்டணம் - ஒரு சிறு விவாதம்

வேலூர் 102 விரைவுப் பேருந்து நிற்க ஆட்களை அழைத்துக் கொண்டிருந்தார் நீல நிற சீருடை அணிந்த, கண்ணாடி போட்ட கொஞ்சம் வயதான நடத்துனர். இரண்டு பேருந்துகள் தாண்டி குளிர் சாதன பேருந்தும் கண்ணில் பட்டது. கட்டணங்கள் ஏறியிருக்கும் நிலையில் அதில் போவதெல்லாம் கட்டுப்படி ஆகாது.

ஒரு குடும்பமாக 102 விரைவு வண்டி நடத்துனரிடம் "எவ்வளவு டிக்கெட்" என்று பெண் ஒருவர் கேட்டார்.

"81 ரூபாய்" - அதிர்ச்சி.

நாளிதழில் 40 ரூபாய் வேலூர் கட்டணம் 68 ரூபாய் என்று போட்டிருந்தது. அது சாதாரண பேருந்தில் இருக்கலாம். அப்படி ஒரு பேருந்து ஓடுவதாகவே தெரியவில்லை. பொதுவாக கிடைப்பது 46 ரூபாய் வாங்கும் விரைவுப் பேருந்துகள்தான். அது இப்போது 81 ஆக்கியிருக்கிறார்கள்.

"இது என்னங்க அநியாயம். இப்படி ஏத்திட்டாங்க"

"என்னம்மா 10 வருஷமா ஏத்தலை, தங்க விலை எவ்வளவு ஏறியிருக்கு, டீசல் விலை எவ்வளவு ஏறியிருக்கு, அதான் இதுவும் ஏறுகிறது"

"உங்களுக்குத் தெரியாததா, போக்குவரத்துக் கழகங்களில் ஊழலை ஒழித்தாலே போதும். டயர் வாங்க, உதிரிப் பாகம் வாங்க என்று எவ்வளவு பணம் கொள்ளை அடிக்கிறார்கள். பழைய கட்டண வீதத்திலும் தனியார் பேருந்துகள் லாபத்தில்தானே ஓடின. அவங்க கொள்ளை அடிப்பதற்கு மக்களை கஷ்டப்படுத்துகிறார்கள்"

"இப்படி அநியாயம் பண்றீங்களே!"

"இவங்களை ஒன்னும் சொல்ல முடியாதுங்க, இவங்களும் கஷ்டப்பட்டு வேலை பார்க்கத்தான் செய்கிறார்கள். மேலே இருக்கிறவங்கதான் கொள்ளை அடிப்பவர்கள்"

குடிக்காத 12 மணி நேரம் உழைக்கும் ஆட்டோ ஓட்டுனர்

"பேருந்து கட்டணம் உயர்ந்ததால் உங்களுக்கு வியாபாரம் அதிகரிக்கத்தான் செய்யும். பெரிய அளவில் இல்லா விட்டாலும், மக்கள் ஆட்டோ பிடிக்க யோசிக்கும் தருணங்கள் அதிகமாகும்"

"அப்படியா! எவ்வளவு ஏத்தியிருக்காங்க. காலையில் விலை ஏறியிருக்கு என்று தலைப்புச் செய்தி பார்த்தேன், ஆனா விபரம் தெரியாது."

கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது, இவருக்கு எப்படி விபரம் தெரியாமல் இருக்கிறது.

"கிட்டத்தட்ட இரண்டு மடங்கு ஏறி விட்டதுங்க, வடபழனியிலிருந்து சிறுசேரி செல்ல குளிர் சாதன பேருந்தில் 33 ரூபாய் இருந்தது 50 ரூபாய் ஆகி விட்டது. வேலூருக்கு 40 ரூபாய் இருந்தது 72 ரூபாய் ஆகி விட்டது "
(எக்ஸ்பிரஸ் பேருந்தில் 46லிருந்து 81 ஆக உயர்ந்தது பின்னர் தெரிந்தது)

"ஆமா, வேலூரிலிருந்து எங்க அக்கா பேசினாங்க. எப்போ சென்னை வருகிறீர்கள் என்று கேட்டேன். இப்போ பஸ் கட்டணம் எல்லாம் ஏறி விட்டது. வர முடியாது, குறைந்த பிறகுதான் வருவேன் என்று சொன்னார்."

"நான்கு பேர் கொண்ட குடும்பம் வேலூரிலிருந்து சென்னை வந்தால் போக வர கூடுதல் செலவு 200 ரூபாய் ஆகி விடும். கஷ்டம்தான். உங்க ஆட்டோ சங்கம் எல்லாம் இருக்கிறது, அவர்கள் எல்லாம் இதற்கு போராட வேண்டும். முன்பெல்லாம் ஆட்டோ ஓட்டுனர்கள் நினைத்தா நகரத்தையே ஸ்தம்பிக்க வைக்க முடியும். இப்போ போராட்டங்களை இல்லாம போச்சு. "

"அப்படி யாரும் யோசிக்கிறதில்லைங்க, ஒரு நாள் வண்டி ஓட்டினா வண்டிக்கு வாடகை கட்டலாம், பெட்ரோல் மற்ற செலவு போக வீட்டுக்கு காசு கொண்டு கொடுக்கலாம். ஸ்டிரைக் பண்ணினா அதுக்கு மண் விழுந்து விடும். எங்க சங்கம் இருக்கு, வருஷத்துக்கு ஏதோ சந்தா கட்டுகிறோம் என்று நினைக்கிறேன். அவர்களுக்கு இந்தியா முழுவதும் கிளைகள் உண்டு. அவர்களிடம் சொல்லி இதை எல்லாம் எதிர்த்து போராட்டம் ஏற்பாடு செய்யச் சொல்ல வேண்டும்"

"இப்படியே போய்க் கொண்டிருநால் என்ன ஆகும்? மக்களுக்கு அவங்க வாழ்க்கை நேரடியாக பாதிக்கப்படும் போதுதான் போராடும் எண்ணம் வருகிறது. கூடங்குளத்தில் பாருங்க, மக்களுக்கு உண்மையிலேயே பயம் வந்து விட்டது. நம்ம குழந்தை குட்டிகள், பேரக் குழந்தைகள் வாழ்க்கைக்கு அபாயம் என்று உணர்ந்ததும் தெருவில் இறங்கி போராட ஆரம்பித்து விட்டார்கள். மீனவர்கள் அதிகாலை மீன் பிடிக்கப் போய் விட்டு வந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்கிறார்களாம்"

"அப்படியா அது என்ன போராட்டம்? ஏன் போராடுகிறார்கள்?"

விபரங்கள் சொல்லி விட்டு, "எனக்கு ஆச்சரியமா இருக்கு, நீங்க நாட்டு செய்திகளே தெரியாம இருக்கீங்களே என்று"

"ஆமா சார் எனக்கு நேரமே கிடைப்பதில்லை, 10 மணிக்கு ஆட்டோ எடுத்தா இரவு 10 மணி வரை ஓட்டுவேன். அப்புறம் வீட்டுக்குப் போய் படுத்து தூங்கினா காலையில் 8.30க்குத்தான் எழுந்திருக்க முடியும். அவ்வளவு உடம்பு வலியும் அசதியும் இருக்கும். மற்ற சிலரைப் போல நான் குடிப்பதில்லை. 10 மணிக்கு திரும்பவும் வண்டி எடுக்கணும்.


இரண்டு பசங்க, ஒரு குழந்தை 2ம் வகுப்பு, இன்னொரு குழந்தைக்கு 3 வயது. மனைவி குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள வேலைக்குப் போவதில்லை. நம்ம குடும்பத்தையும் பார்த்துக் கொண்டு, எதிர்காலத்துக்கும் திட்டமிடணும் என்றால் உழைத்தால்தான் ஆகும்.

2ம் வகுப்பு குழந்தைக்கு 1500 ரூபாய் பீஸ் வாங்கினாங்க. போகப் போக அதிகமாகும் என்று தோணுது. ஒரு குழந்தை மட்டும்தான் இருக்கணும் என்று தோன்றுகிறது. அப்போதான் சமாளிக்க முடியும்."

"இந்த கட்டணம் இன்றைய நிலவரத்துக்குக் குறைவுதான். போகப் போக திடீரென்று அரசு உதவு பெறும் பள்ளிகள் இனிமேல் சுயநிதி பள்ளிகளாக மாற வேண்டும் என்று யாராவது சொன்னாலும் சொல்லி விடலாம். அப்போ கட்டணம் எல்லாம் பல மடங்கு ஏறி விடும்"

"ஆமா சார், நினைச்சாலே பயமா இருக்கு. பாடுபட்டு பிழைப்பதில் கஷ்டம் வர வர அதிகமாகிக்கிட்டே போகிறது. நம்ம குழந்தைகளை எந்த மாதிரி உலகத்தில் விட்டு விட்டுப் போகிறோம் என்று நினைத்துப் பார்த்தால் மனம் கலங்குகிறது"

"குளிர் காலம் ஆரம்பித்து விட்டால் மக்கள் வெளியில் வருவது மாலையில் குறைந்து விடும்" என்று அவர் குறிப்பிட்டார்.

"நீங்க எந்த பகுதி"

"மண்ணடி"

"ஓ, மண்ணடியா! இப்போதான் ஓட்ட ஆரம்பிக்கிறீங்களா, இதை முடித்து விட்டு வீட்டுக்குப் போக வேண்டியதுதானா"

"காலையில் இருந்தே ஓட்டுகிறேன். 10 மணிக்கெல்லாம் வீட்டுக்குப் போகணும். கோயம்பேடு போய் போவேன்".

செவ்வாய், ஆகஸ்ட் 30, 2011

மக்கள் எழுச்சிப் போராட்டங்கள்


எந்த பெரிய கட்சியும், பெரிய தலைவரும் அழைப்பு விடாமல் வெளிப்படையாகத் தெரியாத உணர்வலையால் பாதிக்கப்பட்டு தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் ஒரே நோக்கத்துடன் மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவது மக்கள் எழுச்சிப் போராட்டம் என்று சொல்லலாம்.

1. 2009ல் இறுதிக் கட்ட ஈழப் போரில் ஆரம்பித்த மக்கள் எழுச்சிப் போராட்டம் ஒரு கெட்டிக்காரத்தனமான முதலமைச்சரால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது.

2. மீனவர்கள் தாக்கப்படும் பிரச்சனையை சேவ் தமிழ்ஸ் முன்னெடுத்தது.

3. 2011 சட்டசபை தேர்தலின் போது மேலே சொன்ன மாநிலம் தழுவிய செயல்பாடுகள் நடந்தன. பெரு ஊடகங்கள் இவற்றை முழுவதுமாகவே இருட்டடிப்பு செய்தாலும் (விகடன் குழுமம் தவிர) ஆயிரக் கணக்கான ஆர்வலர்கள் சிறு சிறு குழுக்களாக மாநிலம் எங்கும் இயங்கினார்கள்.

விளைவாக காங்கிரசு சேர்ந்திருந்த கூட்டணிக்கு பலத்த அடி கிடைத்தது.

4. இலங்கை போர்க்குற்றம் குறித்த ஐநா அறிக்கையைத் தொடர்ந்து  போர்க்குற்றம் இனப்படுகொலைக்கு எதிரான இளைஞர்கள் என்ற கூட்டமைப்பின் கீழ் 19 இயக்கங்கள் செயல்பட ஆரம்பித்தன.

பெரும்பாலும் தனித்தனியான குழுக்களாகவே செயல்பட்டார்கள்.

இந்த போராட்டத்துக்கு சேனல்4 தொலைக்காட்சி, ஹெட்லைன்ஸ் டுடே, ஜெயா டிவி என்ற காட்சி ஊடகங்களிலும், தினமணி, விகடன் போன்ற அச்சு ஊடகங்களிலும் முழுமையான தகவல்கள் வெளியாகி தமிழகமெங்கும் போய்ச் சேர்ந்தன.

இறுதியில் தமிழ்நாடு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுவது வரை நடந்தது.

5. ராஜீவ் கொலை வழக்கில் 3 பேருக்குத் தூக்கு என்று மத்திய அரசு உறுதி செய்து நிறைவேற்ற தூண்டிய பிறகு நிகழ்ந்த எழுச்சி மாநிலமெங்கும் வெகு வேகமாக பரவியது.

அனைத்து அரசியல் கட்சிகள் (காங்கிரசு தவிர), பத்திரிகைகள், காட்சி ஊடகங்கள், தலைவர்கள்/பேச்சாளர்கள் (சோ, சுப்ரமணியசாமி, தங்கபாலு, இராம கோபாலன் தவிர) தூக்கு தண்டனைக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார்கள்.

வெள்ளிக் கிழமை சென்னை உயர்நீதி மன்ற பெண் வழக்கறிஞர்களின் உண்ணாநிலை போராட்டத்தில் ஆரம்பித்து, எந்தவிதமான மைய ஒருங்கிணைப்பும் இல்லாமல் மாணவர்களும் போராளிகளும் எல்லா பெரிய நகரங்களிலும் போராட்டங்களை  முன்னெடுத்தார்கள். துயரத்துக்குரிய நிகழ்வாக தோழர் செங்கொடியின் உயிர்த்தியாகம் அமைந்தது.

இந்த எழுச்சியின் தாக்கம் சட்டசபையில் ஒருமனதான தீர்மானமாகவும், உயர்நீதிமன்றத்தில் இடைக்கால தடையாகவும் உருவெடுத்திருக்கிறது.

வெள்ளி, ஜூன் 10, 2011

Thank You, Chief Minister!

"ஈழத் தமிழினத்தை இனப்படுகொலை செய்த இலங்கை அரசையும், அதன் ஆட்சியாளர்ளையும் போர்க் குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டும் என்று கோரி தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானம் தங்கள் இனத்திற்கு அரசியல் உரிமையை பெற்றுதரும் கொழுக்கொம்பு என்று இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞ்ஞானம் சிறீதரன் கூறினார்."

"சென்னை வந்த சிறீதரன் நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்குரைஞர்கள் ஏற்பாடு செய்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசியபோது, தமிழினத்திற்கு விடிவுத் தேடித் தரும் இப்படிப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்றியமைக்காக தமிழக முதலமைச்சருக்கும், தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் அனைத்திற்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாகக் கூறினார்."

"இலங்கை ஆட்சியாளர்களை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்ற இத்தீர்மானம்தான் எங்களுக்குக் கிடைத்த கொழுக்கொம்பாக உள்ளது. இதைக் கொண்டுதான் எமது மக்களின் உரிமைக்கும், உயர்வுக்கும் வழிவகுக்க வேண்டும் என்று சிறீதரன் கூறினார்."

"தமிழர்களின் பாரம்பரிய பூமியான இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் போர் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகிய பின்னரும் எப்படிப்பட்ட சூழல் நிலவுகிறது என்பதை சிறீதரன் விரிவாக எடுத்துக் கூறினார்."

http://tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/1106/10/1110610049_1.htm

சனி, ஜூன் 04, 2011

மெல்லிதயம் கொண்டோரே மெரினாவிற்கு வாரீர்!...





இரு வாரங்களுக்கு முன் மே 18 ம் தேதி அன்று மெரினாவில் ஈழப்படுகொலைகள் நினைவாக மெழுகுதிரி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. அப்பொழுது அங்கு வந்திருந்த பொது மக்கள் பலரும் என்ன நிகழ்வு நடைபெறுகிறது என்று கேட்டறிந்து அவர்களும் தத்தம் குடும்பத்தினரோடு மெழுகுதிரி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். அவர்களோடு பேசிக்கொண்டிருந்தபோதுதான் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இதுவரை நடைபெறவில்லை என்பதை உணர்ந்தோம்.

ஒவ்வொரு கட்சியினரும் அமைப்பினரும் இனப்படுகொலைகளைக் கண்டித்து பல்வேறு பொதுக்கூட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடத்தியிருந்தாலும், பெருமளவிலான பொதுமக்கள் கலந்து கொள்ளும் நிகழ்வு இதுவரை நடைபெறவில்லை என்பதை அறிந்தோம். பொதுமக்களுக்கும் இதுபோன்ற ஒரு ஆதங்கம் இருப்பதையும் அறிய முடிந்தது. இந்தச் சூழலில் பொதுமக்கள் கலந்து கொள்ளும் மாபெரும் அஞ்சலி நிகழ்வு ஒன்றினை சாதி, மத, கட்சி, அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்ப்பட்டு ஏற்பாடு செய்யலாம் என்று தோன்றியது.

இது தொடர்பாக பல்வேறு அமைப்பினரோடும் ஆலோசனை செய்தோம். ஈழப் படுகொலைகளை நினைவு கூறும் அதே சமயம், இலங்கைக் கடற்படையால் கொல்லப்பட்ட 543 தமிழக மீனவர்களுக்கும் அஞ்சலி செலுத்துவதாகவும் இந்த நிகழ்வை அமைத்துக்கொள்ளலாம் என்றும் சில ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டு, அதுவும் அனைத்து நண்பர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்வுக்கான நாளாக ஜூன் 26 தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டோருக்கு ஆதரவு தெரிவிக்கும் நாளாக ஐ.நா சபையால் அறிவிக்கப்பட்ட நாளான ஜூன் 26 அன்று நமது அஞ்சலியை செலுத்துவோம்.

இந்த நிகழ்வினை பலவேறு தரப்பினரும் தாமே முன்வந்து முன்னெடுத்தால் பெருமளவிலான மக்கள் கலந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். இதனைக் கருத்தில் கொண்டு, நாம் அனைவரும் இது நமது முன்னெடுப்பு என்று முன்வந்து பணியாற்ற வேண்டும். ஒவ்வொருவரும் அவரவர் குடும்ப உறுப்பினர்களோடு பேசி அவர்களையும் வரச் சொல்லுங்கள். பக்கத்து வீட்டினர், அலுவலகத்தில் உடன் பணிபுரிவோர், மற்ற நண்பர்கள் என்று அனைவரிடமும் பேசி அஞ்சலி செலுத்தும் நிகழ்வுக்கு அனைவரையும் வரச்செய்யுங்கள்.

இணையத்திலும் பல்வேறு கட்டங்களில் இதற்கான பணிகளை மேற்கொள்ளவேண்டும். Twitter Campaign எப்பொழுது தொடங்குவது என்பதை ஆலோசனை செய்து தொடங்குவோம். அதுவரை நீங்கள் அனுப்பும் ட்விட்டுகளில் #June26Candle என்னும் Hash Tag இணை சேர்த்துக்கொள்ளுங்கள்.

மெல்லிதயம் கொண்டோரே
மெழுகுதிரி ஏந்த
மெரினாவிற்கு வாரீர்.

நாள்: ஜூன் 26
நேரம்: மாலை 5 மணி
இடம்: மெரினா கண்ணகி சிலை.

நன்றி : கும்மி 

வேண்டுகோள் : இந்தப்பதிவை பதிவர்கள் அனைவரும் தங்கள் தளத்தில் வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன் .

சனி, மே 14, 2011

தமிழர் எதிரி காங்கிரசுக்கு எதிரான பரப்புரை தாக்கங்கள்

(ஏப்ரல் 30 அன்று இன்னொரு பதிவில் எழுதி வைத்தது. கருத்துக் கணிப்புகள் என்று சொல்லி சூதாட விரும்பாமல் பரவலாக பகிர்ந்து கொள்ளவில்லை) என்னுடைய உள்ளுணர்வில், நான் பேசிய மக்களின் அடிப்படையில் பார்த்தால் அதிமுக ஸ்வீப்தான் என்று எதிர்பார்த்திருந்தேன். ஆனால், இது போன்ற தேர்தல் கணிப்பு அல்லது விருப்பத்தை செய்வது ஒரு குருட்டு வித்தை போன்றதுதான். 'நடந்தால் அப்போதே சொன்னேன்' என்று சொல்லிக் கொள்ளலாம், 'இல்லை என்றால், மக்கள் மந்தைகள்' என்று பழி போட்டுக் கொள்ளலாம். 'பெரிய நிறுவனங்களில் புள்ளியியல் அடிப்படையில் செய்யும் கணிப்புகளும் கிட்டத்தட்ட இதே மாதிரிதான்' என்பது என் கருத்து

ஈழப் படுகொலைகள் பற்றி ஊடகங்களிலும் அரசியல் கட்சிகள் மத்தியிலும் பரபரப்பு ஏற்பட்டதற்கு கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்து பணியாற்றி வந்தவர்களின் உழைப்பு மிகவும் முக்கியமானது.

  • ஆனந்த விகடனை முதலாவதாகக் குறிப்பிட வேண்டும். திருமாவேலனின் கட்டுரைகள், தமிழ்நதி, கவிஞர் முத்துலிங்கம் எழுதிய சிறுகதைகள் கட்டுரைகள் கணிசமான ஒரு பகுதியினரின் மனதில் ஈழப் பிரச்சனையின் ரணத்தை உயிரோடு வைத்திருந்தது.
  • அடுத்ததாக சீமானின் பரப்புரை, அவரது இயக்கம், தனிப்பட்ட செயல்முறை பற்றி விமர்சனங்கள் இருந்தாலும் தமிழ்நாடு அளவில் ஈழப் பிரச்சனையின் முகமாக செயல்பட்ட அவரது பணி மகத்தானது.
  • மூன்றாவதாக காங்கிரசை எதிர்த்துக் களப்பணிஆற்றிய தமிழ் உணர்வாளர்களின் பரப்புரை. அப்போதே நினைத்தது போல தேர்தலின் வெற்றி தோல்வியை விட கணிசமான மக்களிடம் ஈழப் படுகொலைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியதில் அது தனக்குரிய பங்கை ஆற்றியது.
  • கடைசியாக நெடுமாறன், வைகோ போன்று தொடர்ந்து உறுதியாக உழைக்கும் தலைவர்கள். மேலே சொன்ன மூன்று பேரும் கடைசிக் கட்ட போரில் நடந்த அநியாயங்களால் மனம் வெதும்பி செயல்பட்டவர்கள் என்றால் இவர்கள் எந்த கால கட்டத்திலும் மனம் ஊசலாடாமல் உறுதியாக நின்றிருக்கிறார்கள்.

அந்த வகையில் நான்காவதாக ஜெயலலிதாவையும் இதில் சேர்க்கலாம். கருணாநிதியை எதிர்த்து அரசியல் செய்வதற்காகவே ஈழப் பிரச்சனையை பயன்படுத்துவதாகத் தோன்றினாலும். முந்தைய நிலைப்பாடுகள் எப்படி இருந்தாலும் முக்கியமான கட்டத்தில் பேசி பத்திரிகைகளில் செய்தி இடம் பெறச் செய்த வகையில் அவரது பணி முக்கியமானது.

அவரது நிலைப்பாடுகளை சராசரி தமிழ்நாட்டு மக்களின் நிலைப்பாடாக பார்க்கலாம். 1989 வரை ஈழ இயக்கங்களுக்கு முழுமையான ஆதரவு. 1991ல் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட பிறகு தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவு அளிப்பது தவறு என்ற குற்ற உணர்வில் கடுமையான ஒதுக்கி வைத்தல், ராஜீவ் காந்தி கொலையில் தொடர்புள்ளதாகச் சொல்லப்பட்ட விடுதலைப் புலிகளை ஆதரிக்க மறுத்தது.

இறுதிக் கட்டப் போரில் நியாயங்கள், சர்வதேச சட்டங்கள், மனிதாபிமானம் மனித உரிமைகள் எல்லாவற்றையும் காற்றில் பறக்க விட்டு போருக்குப் பின் மக்களை கேவலமாக நடத்தும் சிங்கள பேரினவாத அரசின் மீது கோபம். அந்தக் கோபத்தின் வெளிப்பாடு என்று சொல்லலாம்.

இது சரி தவறு என்று அவரவர் அரசியல், உணர்வு நிலைப்பாடு பொறுத்து இருக்கலாம். ஆனால் இது ஒரு வகையான விளக்கம்.

இந்தியா டுடேயின் தேர்தலுக்குப் பின்னான கருத்துக் கணிப்பின் திமுக கூட்டணி 115-130 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி 105-120 தொகுதிகளிலும் வெற்றி பெறலாம் என்று கணித்திருக்கிறார்களாம். இதனால் என்ன விளைவு ஏற்படும்?

திமுக உச்ச வரம்பு வெற்றி பெற்றால்

திமுக கூட்டணி - 130 தொகுதிகள்
திமுக - 90
காங்கிரசு - 25
பாமக - 15
விசி - 5

அதிமுக கூட்டணி - 104 தொகுதிகள்
அதிமுக - 75
தேமுதிக - 15
கம்யூனிஸ்டுகள் - 10
பிறர் - 5

சிறுபான்மை அரசாக இந்த முறை யாரும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.

காங்கிரசும் திமுகவும் கூட்டணி அரசுதான் ஏற்படும் அல்லது

அதிமுக, தேமுதிக, காங்கிரசு சேர்ந்து அரசு அமைக்கும் சூழலும் ஏற்படலாம். கம்யூனிஸ்டுகள் எதிரணிக்குப் போய் விடுவார்கள். பாமக அரசுக்கு ஆதரவு கொடுக்கலாம். திமுகவின் 2G ஊழலில் தங்களுக்குத் தொடர்பில்லை என்று காங்கிரசு அதிமுக அணிக்குப் போய் விடலாம்.

இரண்டாவது சூழலில் திமுக கீழ் வரம்பு வெற்றி பெற்றால்,
திமுக கூட்டணி - 115 தொகுதிகள்
திமுக - 90
காங்கிரசு - 15
பாமக - 7
விசி - 3

அதிமுக கூட்டணி - 120 தொகுதிகள்
அதிமுக - 80
தேமுதிக - 20
கம்யூனிஸ்டுகள் 15
பிறர் - 5

இந்தச் சூழலில் அதிமுக+தேமுதிக+பிறர் ஆட்சி அமைக்க முடியும், கம்யூனிஸ்டுகள் வெளியிலிருந்து ஆதரவு தரலாம்.

நான் நடத்திய பத்து பதினைந்து பேரிலான கருத்துக் கணிப்பின் அடிப்படையில்
1. அரசு ஊழியர்கள் திமுகவுக்கு வாக்களித்திருக்கிறார்கள்.
2. அரசு உதவி பெறுபவர்கள் திமுகவுக்கு வாக்களித்திருக்கிறார்கள் - கூலி வேலை செய்பவர்கள், முதியவர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர்.
3. 200 ரூபாய் பெரிய தொகையாக கருதுபவர்கள் திமுகவுக்கு வாக்களித்திருப்பார்கள்.
4. திமுக உறுப்பினர்கள் திமுகவுக்கு வாக்களித்திருக்கிறார்கள்

4. சுயதொழில் செய்பவர்கள் திமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருக்கிறார்கள். - வியாபரம், சேவைத் தொழில்கள் (மருத்துவர், வழக்கறிஞர், கணக்காளர்கள்), நிலம் படைத்த விவசாயிகள், மீனவர்கள்
5. நீண்ட கால திமுக ஆதரவாளர்களில் பலர் அதிமுகவுக்கு வாக்களிக்கா விட்டாலும், சுயேச்சை அல்லது 49 O வாக்கு அளித்திருக்கிறார்கள்.
6. தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் வெள்ளைச் சட்டை வர்க்கத்தினர் திமுகவுக்கு எதிராக வாக்களித்திருக்கிறார்கள்.
7. இளைஞர்களில் பலர் சீமானின் தாக்கத்தால் ஈழப் பிரச்சனை தொடர்பான வெறுப்பில் திமுகவுக்கு வாக்களிக்கவில்லை.

என்னுடைய கணிப்பில் திமுகவின் வாக்கு சதவீதம் 2009 நாடாளுமன்றத் தேர்தலை விடக் குறைந்திருக்க வேண்டும். 2009 மே மாதத்துக்குப் பிறகுதான் ஈழத்துக்குச் செய்த துரோகத்தின் முழு சோகமும் மக்களைத் தாக்கியது. அந்தத் தேர்தலில் திமுகவுக்கு வாக்களித்த தமிழ் உணர்வாளர்களில் பலர் இந்த முறை எதிர்த்து வாக்களித்திருப்பார்கள்.

அந்தத் தேர்தலுக்குப் பிறகுதான் 2G ஊழல், திரைப்படத் துறை ஆதிக்கம் குறித்த கோபங்கள் வெளியாக ஆரம்பித்தன. அந்தத் தேர்தலில் திமுகவுக்கு வாக்களித்த நடுத்தர மக்களில் பலர் இந்த முறை எதிர்த்து வாக்களித்திருப்பார்கள்.

என்னுடைய கணிப்பின் படி, போட்டி நிலைமை இருந்திருந்தால்
திமுக - 65
காங்கிரசு - 10
பாமக - 15
விசி - 5

அதிமுக - 90
தேமுதிக - 25
கம்யூனிஸ்டுகள் - 20
மமக - 3

ஸ்வீப் என்று இருந்தால் திமுக கூட்டணி மண்ணைக் கவ்வும். அந்தச் சூழலில்
திமுக - 10
காங்கிரசு - 6
பாமக - 8
விசி - 2

அதிமுக - 140
தேமுதிக - 40
கம்யூனிஸ்டுகள் - 23
மமக - 3

முதல்கணிப்பின் படி முடிவுகள் வந்தால் நன்றாக இருக்கும். கம்யூனிஸ்டுகள்+தேமுதிக கடிவாளங்களுடன் அதிமுக ஆட்சி அமைவது இருப்பதில் நல்ல அமைப்பாக இருக்கும்.

செவ்வாய், மே 10, 2011

பிளஸ் -2 ஃபெயில் (புனைவு)


பிளஸ்-2 தேர்வில்  தேர்ச்சி பெறாத மாணவர் அன்புச் செல்வத்திடம் தினக் கண்ணாடி நிருபர் பேட்டி கண்ட விபரங்கள்

பத்திரிகையாளர் :
நீங்க பிளஸ்-2வில் ஃபெயிலானது பற்றி என்ன சொல்ல விரும்புறீங்க?

அன்புச் செல்வம்:
அதைக் கேட்க உங்களுக்கு என்ன தகுதி இருக்கு? நீங்க பிளஸ்-2வில் எவ்வளவு மதிப்பெண்கள் எடுத்தீர்கள்?

பத்திரிகையாளர் :
நான் படிச்ச சமயத்தில் பிளஸ்-2 கிடையாது, பியூசி படித்தேன்.

அன்புச் செல்வம் :
பிளஸ்-2 தேர்வு எழுதக் கூடச் செய்யாத உங்களுக்கு என்னிடம் கேள்வி கேட்க வெட்கமாக இல்லையா?

பத்திரிகையாளர் :
இல்லை...., நல்லா படிப்பீங்க, மார்க் எடுப்பீங்கன்னு உங்க அப்பா அம்மா நம்பிக்கை வச்சிருந்தாங்க....

அன்புச் செல்வம் :
நான் 4ம் வகுப்பு படிக்கும் போது கணக்குப் பாடத்தில் நூற்றுக்கு நூறு வாங்கிய போது எனது ஆசிரியர் என்னைக் கட்டித் தழுவி கண்ணீர் உகுத்ததை இந்தத் தருணத்தில் நினைவு கூர்கிறேன்.

7ம் வகுப்பில் கட்டுரைப் போட்டியில் மாவட்ட அளவில் இரண்டாம் பரிசு வாங்கி வந்த போது என்னை வருங்காலத்தின் விடிவெள்ளி என்று எல்லோரும் போற்றியதை உங்களுக்குச் சுட்டிக் காட்டுகிறேன்.

அதை எல்லாம் விடுங்கள், பத்தாம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்றேனே அதைப் பற்றி ஏன் நினைத்துப் பார்க்க மாட்டேன் என்கிறீர்கள்?

பத்திரிகையாளர்:
இல்லை...., டிவி பார்ப்பதைக் குறைத்து கொஞ்சம் படிப்பில் கவனம் செலுத்தியிருந்தால் பாசாகியிருப்பீங்க என்று சொல்றாங்களாமே?

அன்புச் செல்வம்:
எங்கள் வீட்டில் தொலைக்காட்சி இருக்கிறது, நான் பார்க்கிறேன். அவன் வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டியே கிடையாது, திரையரங்குக்குப் போய்தான் படம் பார்க்க வேண்டும். பொறாமையில் பேசுபவர்களை உலகம் நன்கு அறியும்.

பத்திரிகையாளர் :
சரி, இப்போ என்னதான் செய்யப் போறீங்க? திரும்பவும் எழுதி பாஸாகும் உத்தேசம் உண்டா? உங்க கூட ஃபெயிலானவங்க எல்லாம் மறு தேர்வு எழுதப் போறதா சொல்றாங்களே!

அன்புச் செல்வம்:
அதைப் பற்றிச் சரியான நேரத்தில், சரியான இடத்தில் முடிவு எடுக்கப்படும். இப்போது எங்கள் வீட்டுக்கு கம்பி வழி இணைப்புக்குப் பதிலாக நேராக வீட்டுக்கு (DTH)சேவை வாங்கும் வேலையில் ஈடுபட்டிருக்கிறேன்.

அன்புச் செல்வத்துடன் சுற்றும் அவரது ரசிகரான 8ம் வகுப்புப் படிக்கும், இளையகண்ணன் கருத்து சொல்கையில்

அன்புச் செல்வத்தைப் பிடிக்காதவங்கதான் கடுப்பில் அவரைக் கொற சொல்றாங்க. அவனுங்க எல்லாம் பக்கத்து வீட்டுக் கார பழனிச்சாமிக்கு வால் பிடிப்பவனுங்க!

அன்புச் செல்வம் அண்ணனைப் போல சைட் அடிப்பதில் எக்ஸ்பர்ட் யாரும் உண்டா?

ஒரு முறை தெருமுனையில் குட்டைச் சுவரில் நாங்களெல்லாம் உட்கார்ந்திருக்கும் போது, ஒரு பெண் கடந்து போக, அவர் அடித்த கமென்டில் அந்தப் பெண் ஓடியே போய் விட்டாள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு அந்த வழியாகப் போவதையே அந்தப் பெண் விட்டு விட்டாள்.

அவரது கிண்டல் அடிக்கும் திறமைக்கு நான் எப்போதுமே ரசிகன்.

அவரைக் குறை சொல்லணும் என்றாலும் எங்களைப் போன்ற ரசிகர்கள்தான் சொல்லணும். அவங்க அப்பா அம்மாவுக்கும் ஆசிரியர்களுக்கு என்ன தகுதி இருக்கு!

அவங்க வீட்டில் டிவி புரோகிராம் எல்லாம் ஒழுங்க வர வைப்பது யாரு? கேபிளை ஒழித்து, DTH கொண்டு வர முயற்சிப்பது யாரு? அதை எல்லாம்  யோசிக்காம, பிளஸ்-2 எக்சாம் பத்தி மட்டுமே பேசிக்கிட்டு இருக்காங்க

ஒரு நாள் அவர் சினிமாவில் பெரிய டைரக்டரா வரும் போது பங்களாவில் சொகுசாக வாழப்போவது அவங்க அப்பா அம்மாதானே! அப்போ அவர் படித்த ஆசிரியர்கள் என்று பத்திரிகைகளில் படம் வெளியாகும் போது வேண்டாம் என்று சொல்லி விடுவார்களா!

சனி, மே 07, 2011

காங்கிரசைத் தோற்கடிப்போம் முன்னணி

கண்ணனிடமிருந்து மின்னஞ்சல்

வேலூரில் காங்கிரசு எதிர்ப்பு பரப்புரையை நடத்தி முடித்த "காங்கிரசு எதிர்ப்பு முன்னணி" யின் மீளாய்வு கூட்டம் கடந்த 22/4/2011 அன்று காலை சென்னையில் நடைப்பெற்றது. அதில் வேலூர் பரப்புரையின் நிறை/குறைகள் விவாதிக்கப்பட்டன.

மேலும் '2014 ஆம் ஆண்டு நாடளுமன்ற தேர்தலில் தமிழர்களுக்கான அரசியல் தேவையும், அரசியல் மாற்றமும்' பேசப்பட்டன.

'மே 13 தேர்தல் முடிவுகள் வெளியாகும் பட்சத்தில் காங்கிரசு பெரும் தோல்வியை தழுவும் தருணத்தில் நாம் எப்படி வினையாற்றப் போகிறோம்' என்ற விடயங்கள் பேசப்பட்டன.

இறுதியாக '63 தொகுதிகளில் காங்கிரசுக்கு எதிராக வேலை செய்த இயக்கங்களை ஒன்று திரட்டி சென்னையில் "காங்கிரசின் தோல்வி, தமிழர்களின் வெற்றி" என்ற ஒற்றை முழக்கத்தை முன் வைத்து சென்னையில் பெரிய விழா ஒன்றினை நடத்த' முடிவுசெய்யப்பட்டது.

'அதே போல காங்கிரசு தோல்வி பெறும் தொகுதிகளிலும் மீண்டும் மக்களை சந்தித்து நன்றியினையும் தெரிவித்துக்கொள்ளும் முறைகளையும் வாய்ப்பு இருந்தால் தெருமுனைகூட்டங்கள் அல்லது பொதுக்கூட்டங்கள் நடத்தலாம் ' எனப் பேசப்பட்டன.

மேற்குறிப்பிட்ட கருத்தினை ஒத்த அமைப்புகள் அல்லது தனி நபர்கள் கீழே குறிப்பிட்டுள்ள எண்களில் தொடர்பு கொள்ளவும்.

நன்றி
9940963131/9003154128

ஞாயிறு, ஏப்ரல் 17, 2011

ஓட்டுக்குப் பணம் கொடுப்பவர்களுக்கு திமுக தலைவர் கடும் கண்டனம்




சென்ற தடவை தேர்தல் நடந்ததே, இதை எல்லாம் கேள்விப்பட்டீர்களா? உருட்டுப் பேச்சுகளும் மிரட்டு விழிகளும். கரட்டுப் பார்வைகளும், கத்திக் குத்துகளும், காலை இடறி விடுவதும், மோட்டார் ஏறி ஆள் சாவதும், இவைகளை எல்லாம் கேள்விப்பட்டீர்களா? வாதத்துக்கு வாதம், புள்ளி விவரத்துக்கு புள்ளி விவரம், வேண்டுகோளுக்கு வேண்டுகோள், அது நடந்தது.

இந்தத் தடவை என்ன நடக்கிறது?

'ஓட்டுக்குப் பணம் கொடுத்துக் கொண்டு போகிறார்கள். காங்கிரஸ்காரர்கள்' என்று கேள்விப்பட்டு நம்முடைய தோழர்கள் 'பணம் வாங்காதே!' என்று கூச்சலிட்டுக் கொண்டு போனால், உடனே டெலிஃபோன் செய்து, போலீஸ் பாராவைக் கொண்டு வந்து போட்டு நம்முடைய தோழர்களைத் தடுத்து 'ஆகட்டும் உங்கள் வேலை ஆகட்டும்' என்று போலீசே பாதுகாப்புத் தருகிறார்கள்.

நான் போலீஸ் அதிகாரிகளுக்குச் சொல்லுகிறேன். காங்கிரஸ் தொண்டர்களுக்கு 'நீங்கள் ஏன் இந்தப் பணத்தைக் கொடுக்கிற வேலையைச் செய்கிறீர்கள்.'

நீங்களே ஆரம்பியுங்கள், என்ன கெட்டு விட்டது? நீங்கள் பாதுகாப்பாக இருந்து, காங்கிரஸ் தொண்டர்கள் பணம் கொடுப்பதை விட நீங்களே, 'நிறைய்ய போலீஸ் வந்திருக்கிறது. இன்னின்ன தெருவுக்கு நாலு போலீஸ் பணம் கொடுக்கும்' என்று தண்டோரா போட்டு விட்டுக் கொடுங்கள்.

என்ன செய்வீர்கள் அதனாலே? என்னைத் தோற்கடிக்க வேண்டும் என்பதுதானே உங்கள் எண்ணம்? என்னைத் தோற்கடிப்பதாலே உங்களுக்குக் கிடைக்கிற லாபம் என்ன? என்னைத் தோற்கடிப்பதாலே நீங்கள் எதைத் தூய்மைப்படுத்தப் போகிறீர்கள்? என்னைத் தோற்கடித்து விட்டால்  உங்களுடைய எந்தக் கொடி வானத்திலே பறக்கப் போகிறது?

துணிவோடு நீங்கள் இருப்பீர்களானால்!

பணத்தையும் கொடுத்து வெங்கடேச பெருமாள் படத்தை வைத்தார்களாம். ஆக, உங்களுக்கு என்னை எதிர்க்க வக்கில்லை வழியில்லை, ஏழுமலை ஏறி அவரை அழைத்துக் கொண்டு வருகிறீர்கள். பரவாயில்லை, அவர்தானே வருகிறார், வரட்டும்.

ஆக, என்னை எந்த அளவுக்கு உயர்த்தியிருக்கிறீர்கள்? ஒரு சாதாரண அரசியல் கட்சியிலே உள்ளவன் என்று மதிக்கவில்லை. 'அண்ணாதுரையைத் தடுக்க வேண்டுமானால் 5 ரூபாய் கூட போதாது. தீராத வல்வினை எல்லாம் தீர்த்து வைப்பவனைக் கொண்டு வந்து அவன் படத்தின் கீழ் 5 ரூபாயை வைத்து எடுத்துக் கொள்' என்று சொல்லுகிறீர்கள்.

அதை நீட்டுகிற போது தாய்மார்களைக் கேட்கிறேன் 'உற்று அந்தப் படத்தைப் பாருங்கள்'.

அந்தத் தெய்வம் எதற்காக ஏழுமலைக்கு அப்பாலே இருக்கிறது என்று எண்ணிப் பார்த்தீர்களா? நாட்டிலே இருக்கிற அக்கிரமம் தாள மாட்டாமல் தொலைவாகப் போயிருக்கிறது. நல்லவர் கஷ்டப்பட்டாகிலும் அங்கு வரட்டும் என்பதற்காகத்தான் அங்கே போயிருக்கிறதே தவிர,  நாட்டில் அக்கிரமம் இல்லை என்றால் நம்முடைய வரதராஜப் பெருமாள் இப்போது ஊரோடு ஊராக இருந்திருக்க முடியும்.

நீங்கள், உங்கள் தொல்லை தாளமாட்டாமல் ஏழு மலைக்கு அப்பால் இருக்கிறவரை, மறுபடியும் அழைத்துக் கொண்டு வந்து 'அதர்ம காரியத்துக்கு நீ துணை செய்' என்றால் உண்மையிலே துணை செய்வாரா?

வெங்கடேசப் பெருமாள் படத்தின் பேரிலே 5 ரூபாயை வைத்து அதை யாராவது வாங்கினால் வெங்கடேசப் பெருமாளிடத்திலே நம்பிக்கை உள்ளவர்களுக்கு நான் சொல்கிறேன் அவர்கள் இது வரையிலே கும்பிட்ட கோவிந்தனுக்கு அவர்கள் செய்கின்ற துரோகத்தைப் போல கோவிந்தன் ஏது கோபாலன் ஏது என்று பேசுகின்றவர்கள் கூட அவ்வளவு துரோகம் செய்ததில்லை என்பதை அருள் கூர்ந்து எண்ணிப் பார்த்துக் கொள்ளுங்கள்.

கர்ப்பூரத்தைக் கொழுத்தி கோவிலில் அடித்து விட்டு கால் ரூபாய் நான் வாங்கியதில்லை என்று பொய்ச் சத்தியம் செய்பவனைக் கூடச் சாதாரணமாகக் கருதலாம்.  வெங்கடேசப் பெருமாள் படத்தை வைத்து அதன் பிறகு 5 ரூபாய் நோட்டை வைத்து அதை எடுக்கப் போகிற நேரத்தில் தாய்மார்களும் பெரியவர்களும் ஒரு தடவை முகத்தைப் பாருங்கள். வெங்கடேசப் பெருமாள் எதற்காக இருக்கிறார் என்பதை பாருங்கள். ஐந்து ரூபாய் நோட்டு வாங்கிக் கொடுக்கவா இருக்கிறார்.

கை கால் பிடிப்பு வந்தால் அவரைக் கும்பிட்டால் நீங்கும் என்கிறார்கள்.
புத்திக் கோளாறு ஏற்பட்டால் அவரைக் கும்பிட்டால் நீங்கும் என்கிறார்கள்.
மலடிகள் அந்தக் கோவிலுக்குப் போய் வந்தால் பிள்ளை பிறக்கும் என்கிறார்கள்.
சொத்து இல்லாதவர்கள் அந்தக் கோயிலுக்குப் போய் வந்தால் அற வழியிலே சொத்துச் சம்பாதிக்கலாம் என்கிறார்கள்.

பக்தர்கள் பலமாதிரி அதைப் பற்றிச் சொல்கிறார்கள்.

அப்படிப்பட்ட ஒரு தேவதையைக் கொண்டு வந்து 5 ரூபாய் நோட்டை அதன் பேரிலே வைத்தால்!

நான் இதைக் கூட எண்ணியிருப்பேன். 5 ரூபாயை எடுத்து விட்டு வெறும் வெங்கடேசப் பெருமாளைக் காட்டியிருந்தாலாவது, 'ஓ,  வெங்கடேசப் பெருமாளுக்கு மதிப்பு இருக்கிறது' என்று எண்ணுவேன். எனக்கு இப்பொழுது எதற்கு மதிப்பு என்றே தெரியவில்லை, 5 ரூபாய் நோட்டுக்கு மதிப்பா, வெங்கடேசப் பெருமாளுக்கு மதிப்பா, இந்த இரண்டையும் ஒன்றின் மேல் ஒன்றின் மேல் வைக்கிறார்களே அது மதிப்பா என்று தெரியவில்லை. அதை விடக் கூடாநட்பா இது!

வெங்கடேச பெருமாள் படத்தின் பேரில் 5 ரூபாய் நோட்டை வைத்து வோட்டரிடத்திலே நீட்டுகிறீர்களே அதை விடக் கூடா நட்பா இது? இவர் என்ன வெங்கடேச பெருமாள், நான் மேலெடுத்த 5 ரூபாய் நோட்டா? இதைக்காட்டி உங்களுடைய வாக்குகளை நாங்கள் தட்டிப் பறிக்க விரும்புகிறோமா?

இதை எண்ணிப் பாருங்கள். ஆகையினால் அந்தப் பணத்தைத் தொடுவதற்கு கை கூச வேண்டும். அந்தப் படத்தைப் பார்ப்பதற்கு கண் கூச வேண்டும். அதைத் தொடுகிற போது இதயத்திலே இது வரையிலே இருந்த வந்த எல்லா நியாய உணர்ச்சியும் பொங்கி வழிய வேண்டும். அது வழியுமானால், அந்தப் பணம் பாவத்தின் சின்னம். அந்தப் பணம் உரிமைச் சீட்டைத் தட்டிப் பறிப்பதற்காக, ஊர்ச்சொத்தை அடித்து உலையிலே போடுகிறவர்கள் நமக்குத் தருகின்ற லஞ்சத் தொகை என்று கருத வேண்டும்.

நண்பர்களே அந்த 5 ரூபாய் நமக்கு எத்தனை காலத்துக்கு வரும்? நீங்கள் அருமையாகப் பெற்றெடுத்த ஒரு குழந்தைக்கு பட்டுச் சட்டைத் தைக்க வேண்டும் என்றால் கூட அந்த 5 ரூபாய் காணாது. ரெண்டு நாளைக்கு நிம்மதியாகச் சாப்பிடலாம். நாலு தடவை அந்த சாப்பிட்ட சந்தோஷத்திலே இருக்கலாம்.

அதற்குப் பிறகு நீங்கள் என்னுடைய முகத்தைப் பார்க்க வேண்டாமா? என்னுடைய முகத்தைப் பார்க்கிற நேரத்தில் ஐந்து ரூபாய்க்காகவா நமக்காக பாடுபட்ட ஒருவனுக்குக் கெடுதல் செய்தோம் என்று உங்கள் உள்ளம் உங்களை உறுத்தாதா? எண்ணிப்பாருங்கள்.

இல்லை, இவ்வளவுக்கும் பிறகு எடுத்துக் கொள்ளத்தான் வேண்டும் என்று கருதினால் அதைச் சில பேர் செய்ததைப் போல திருப்பியாவது கொடுங்கள்.  அதிலே இருக்கிற அந்த பாவத்தைப் போக்கி நல்ல காரியத்துக்கு பயன்படுத்துவதற்கு நாங்கள் அதை உபயோகிக்கிறோம்.

இல்லை, இன்னும் கூட ஒன்று சொல்கிறேன். இதை அப்படியே எங்களிடத்திலே கொடுங்கள். அதற்குப் பிறகு யார் உங்களுக்குக் கொடுத்தார்களோ அதே காங்கிரஸ்காரர்களிடத்திலே  திருப்பித் தர நான் ஒப்புக் கொள்கிறேன். அந்த பாவ காசு கூட எனக்கு வேண்டாம்.

ஆனால் இதை நம்பி ஜனநாயகத்தைப் பாழாக்காதீர்கள்.

என் பேரிலே கோபம் யாருக்காவது இருந்தால் தனியாக கூப்பிட்டு நாலு வார்த்தை ஏசுங்கள். என் பேரிலே ரொம்ப அருவெறுப்பு இருந்தால் நான் ஒண்டிச் சண்டியாக வரும்போது அடித்துக் கூடப் போடுங்கள். ஆனால், நாட்டைப் பாழாக்காதீர்கள்.

நல்ல தருணம்! ஜனநாயகம் வளர்வதற்கு ஏற்ற நல்ல சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட நேரத்தில் சாதாரண காசுக்காக மயங்கி ஜனநாயகம் வளர்வதற்கு நீங்கள் கேடு செய்யாதீர்கள் என்று பணிவன்போடு நான் கேட்டுக் கொள்கிறேன்.

'உனக்கு என்ன இந்தக் காங்கிரசு ஆட்சியிடத்திலே இவ்வளவு பெரிய கோபம்' என்று யாராவது கேட்டீர்களானால் நான் சொல்லுவேன். காங்கிரசு என்ற கட்சியின் பேரிலே கூட அல்ல.

இடுப்பிலே நாம் கட்டுகிற வேட்டி வெள்ளையாகத்தான் எடுத்துக் கட்டிக் கொள்கிறோம். நடந்து போகிறபோது அந்த வேட்டி தானாக அவிழ்ந்து போய் குப்பைக் கூளத்தில் விழுவதில்லை. ஊரில் இருக்கிற குப்பை கூளம் எல்லாம் காற்றால் அடிக்கப்பட்டு வேட்டியில் ஒட்டிக் கொள்கிறது. ஒட்டிக் கொண்ட உடனே 'இது என்னுடைய வேட்டி, இந்த அழுக்கு எங்களூர் அழுக்கு, இருக்கட்டும்' என்றா சும்மா இருக்கிறோம்.

வெளுப்பவனை அழைத்து அதைக் களைந்து போடவில்லையா. வெளுத்துக் கொடுங்கள் என்று கேட்கவில்லையா.  அவன் அதை எடுத்துக் கொண்டு போய் ஆற்றுத் தண்ணீரில் அழுந்தத் தோய்த்து கற்பாறையில் ஓங்கித் துவைக்கிற போது பக்கத்திலே நின்று கொண்டு

'அப்பா அப்படி அடிக்காதே, அது ஆறே முக்கால் ரூபாய் வேட்டி,  நான் அருமையாக வாங்கியது அதை அந்த அடி அடிக்காதே' என்று சொன்னால், சொல்ல மாட்டோம், சொன்னால் வெளுப்பவன் என்ன சொல்லுவான் ,

'அய்யா நீ ஏற்றி வைத்திருக்கிற அழுக்கு இந்த அடிக்குக் கூடப் போகாது, இது இன்னமும் வெள்ளாவி வைத்து எடுத்தால்தான் அழுக்குப் போகும் போல இருக்கிறது. எண்ணைய் சிகண்டு ஏறி விட்டது' என்று அல்லவா சொல்லுவான்

அதே போல ராஜாஜி அவர்கள் காங்கிரசை கடுமையாகத் தாக்குகிறார் என்று நேரு பண்டிதரும் மற்றவர்களும், ''அய்யோ இந்த அடி அடிக்கிறாரே' என்றால், அதிலே இருக்கிற எண்ணைய் சிகண்டு அவருக்குத் தெரிகிறது, அடிக்கிறார். அவருக்கென்ன வேட்டியின் மீதிலா கோபம். எண்ணெய் ஜிகண்டின் பேரிலே கோபம்.

ஆனால் சிலபேர், வேட்டி அழுக்கானாலும் சுலபத்திலே எடுத்துப் போட மாட்டார்கள். மேற்பக்கத்தில் அழுக்கானால் உள்பக்கத்தில மடிப்பு வருமாறு கட்டிக் கொள்வார்கள், இடுப்புப்பக்கம் அழுக்கானால் கால்பக்கத்தைக் கட்டிக் கொள்வார்கள். கால்பக்கத்தில் அழுக்கானால் இடுப்புப் பக்கத்தில் கட்டுப் போடுவார்கள்.

'இது உனக்கு எப்படி இவ்வளவு விபரமாகத் தெரியும்' என்று நீங்கள் கேட்பீர்கள். எனக்கே அது பழக்கம்.
எனக்கு அந்தப் பழக்கம் ஏற்பட்டது என்னுடைய குருநாதர் அருள் பெரியார் ராமசாமிக்கு அந்தப் பழக்கம். ஆகையினால்தான் அந்த விஷயத்தை அவ்வளவு விபரமாக நான் சொல்லுகிறேன்.

அதைப் போல காங்கிரஸ் கட்சியுடைய ஆட்சி பூராவிலும் அழுக்கேறி விட்டிருக்கிறது.