சனி, ஏப்ரல் 13, 2019

ஒரு மின்னல் பார்வையில் கிழக்குக் கடற்கரை இந்தியாவும், வட இந்தியாவும்

மார்ச் 24-ம் தேதி இரவு தொடங்கி, ஏப்ரல் 2-ம் தேதி மாலை வரை சென்னை - விஜயவாடா - விசாகபட்டினம் - புபனேஸ்வர் - ஹவுரா, கொல்கத்தா - தன்பாத் - கயா - அலகாபாத் - டெல்லி - கோட்டா - ரத்லாம் - சூரத் - மும்பை - புனே - சென்னை பயணம்

ரயில் பயணத்தை மையமாகக் கொண்டு போனதால் நகர்வில் இருக்கும் மக்கள் பிரிவினரையே முதன்மையாக பார்த்தேன்.

நிம்மதியற்ற, அலைந்து கொண்டே இருக்கும், கடுமையான மாற்றங்களை எதிர்கொண்டிருக்கும் மக்கள் பட்டாளம் இந்தியாவின் சாரமாக இருக்கிறது.

விவசாயிகளும் சரி முறையான தொழிலாளர்களும் சரி, ஒப்பந்தத் தொழிலாளர்களும் சரி, மாணவர்களும் சரி, நிறைவின்றி தேட்டத்திலும் ஓட்டத்திலும் உள்ளனர். எதை பிடிப்பது, எதை விடுவது, எங்கு போய் வாழ்வது என்ற நிம்மதியின்றி ஓடிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த ஓட்டத்தை விஜயவாடாவில் தொடங்கி, விசாகப்பட்டினம், புபனேஸ்வர், ஹவ்ரா, கொல்கத்தா, தன்பாத், கயா, அலகாபாத், காசியாபாத், டெல்லி, கோட்டா, ரத்லாம், சூரத், மும்பை, பாந்த்ரா, புனே, என்று எல்லா இடங்களிலும் பார்க்க முடிந்தது. இந்த இடங்களில் இந்தியாவின் கிழக்கு மேற்கு பகுதியைச் சேர்ந்த பலதரப்பட்ட மக்களை பார்க்க முடிந்தது.

டம் விட்டு இடம் போய் படிக்கும், படிப்பில் திருப்தி இல்லாமல் இருக்கும் இளைஞர்கள் -
  • விஜயவாடாவில் சித்தார்த்தா மருத்துவக் கல்லூரியில் 4-வது ஆண்டு படிக்கும் வாரங்கல் பையன் - மேற்படிப்பு போக வேண்டும்
  • எம்.பி.பி.எஸ் முடித்து அமெரிக்கா போக முயற்சித்துக் கொண்டிருக்கும் சுவிக்ஞன் இந்தியாவையும் அவனது பெற்றோரையும் வெறுக்கிறான்
  • லக்னோவைச் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவன் தென்னிந்தியாவின் உணவு பழகாமல் சிரமப்படுகிறான்
  • புபனேஸ்வர் ரயிலில் முதலாம் ஆண்டு மெக்கானிக்கல் படிக்கும் பிரதீக் nutritionist ஆக விரும்புகிறான், 
  • இன்போசிஸ்-ல் வேலை செய்யும் பாலாவுக்கு புபனேஸ்வரை தவிர வேறு எங்காவது போய் வேலை செய்ய வேண்டும் என்று தவிப்பு. 
இன்னும் பலர் இடம் விட்டு இடம் பெயர்ந்து படிக்க, வேலை செய்ய போயிருக்கின்றனர்.
  • புபனேஸ்வர் பேருந்தில் சந்தித்த ஒரு மாணவர் சென்னையில் சி.டி.சி5 விப்ரோவில் இன்டெர்ன்ஷிப் செய்திருக்கிறார். 
  • சுவிக்ஞன் சி.எம்.சி வேலூருக்குப் போயிருக்கிறார். 
  • வெல் ஸ்பன் நிறுவனத்தில் வாபிக்கு வேலைக்குப் போகும் பையன் உலகத்தைப் பார்த்திருக்கிறான்.
  • ராஜ்குமார் என்ற சூரத்தில் இறங்கிய பையன் அவர்கள் உற்பத்தி செய்யும் ஆடை விற்பனை செய்வதற்கு ஆள் தேடித் தரும்படி கேட்கிறான். 
  • சென்னை வரும் ரயிலில் கல்புர்கியில் ஏறிய பையனுக்கு 25 வயதுதான். கல்லூரியில் துறைத் தலைவரை அடித்து மண்டை உடைந்து, மூளை வெளியில் வந்து 6 மாதம் சிறையில் இருந்திருக்கிறான். இப்போது கட்டுமான கம்பெனியில் வேலை. இன்னும் 5 ஆண்டுகள் வேலை செய்து விட்டு பின்னர் தன் விருப்பப்படி வாழப் போகிறானாம். 
  • தன்பாதில் அமித், அப்பா கோல் இந்தியா ஓய்வு பெற்றவர், அண்ணன் போக்குவரத்துத் தொழில் செய்து கொண்டிருக்க இவர் சொகுசாக சுற்றிக் கொண்டிருக்கிறார். 
  • தன்பாதில் இன்னும் இரண்டு இளைஞர்கள் இந்தியா விஷன் என்ற கம்பெனி கால் சென்டரில் வேலை செய்கின்றனர். 
  • ரேணிகுண்டாவுக்குப் போகும் பையன் வீட்டில் கிராமத்து டிபன் கடை. அப்பா பக்கவாதம் வந்து படுக்கையில். தம்பி கல்லூரியில். இவன் கடை நடத்த வேண்டும். அட்டெண்டன்ஸ்-க்காக கல்லூரிக்குப் போயக் கொண்டிருக்கிறான். 
இது போக சிறப்புத் திறன் இல்லாத தொழிலாளர்களும் ஓடிக் கொண்டே இருக்கிறார்கள்.
  • மும்பை - சென்னை ரயிலில் திருவல்லா வரை போவதற்கான டிக்கெட்டுடன் ரயிலில் பயணிக்கும் இளைஞன். கையில் காசு இல்லை, சாப்பிடுவதில்லை. 
  • கோட்டா - ரத்லாம் ரயிலில் சந்தித்த அலகாபாத்துக்கு அப்பால் இருந்து ராஜ்கோட்டுக்கு அப்பால் வேலைக்குப் போகும் இளைஞர்கள், பூரியும் ஊறுகாயும் தொட்டுத் தின்று வயிற்றை நிறைத்துக் கொள்கின்றனர், ஒரு வேளை உணவு, வாய்க்கு ருசியில்லாத உணவு.
  • ஹவுராவில் ரிக்‌ஷாவில் அழைத்துச் சென்று ரூம் காட்டிய இசுலாமிய தொழிலாளி. ஜார்கண்டை சேர்ந்தவர். மோடி, அமித் ஷாவை ஏளனம் செய்கிறார். 
  • புபனேஸ்வரில் ராஜூ என்ற பையன். திருப்பூரில் வேலை செய்திருக்கிறான். ஜார்கண்டை சேர்ந்தவன். புபனேஸ்வரில் அக்கா வீட்டில் இருக்கிறான். ரயிலை தவற விட்டு அபராதம் கட்டியிருக்கிறான். 
  • புனா ரயில் நிலையத்தில் தூங்கிக் கொண்டிருந்த லத்தூர் விவசாயியும் அவரது மகனும். 
நகரங்களுக்குள் சந்தித்தவர்கள்
  • கொல்கத்தாவின் இமிடேஷன் நகை கடை நடத்தும் முன்னாள் ராணு வீரர் 1992-ல் சென்னைக்கு வந்தாராம். ஆவடி heavy ordinance தொழிற்சாலையில் பயிற்சி எடுத்தாராம். இப்போது வெளியில் போவது எல்லாம் சாத்தியமே இல்லை என்கிறார்.
  • புபனேஸ்வரில் பேருந்து நிறுத்தத்தில் நிழல் தேடி வந்த ஒரு பழுத்துக் கனிந்த வயதான அம்மா, வேகா வெயிலில் ஒரு நடந்து வந்து பேருந்து நிறுத்தத்தில் உட்கார்ந்தார். தண்ணீர் பாட்டிலை கொடுத்ததும், பாட்டில் மூடியை வாங்கி அதில் ஊற்றிக் குடித்தார். இளைப்பாறி விட்டு கிளம்பும் போது தலையில் கைவத்து ஆசீர்வதித்து விட்டுப் போனார்.
    நான் பேசுவது அவருக்குப் புரியவில்லை, அவர் பேசுவது எனக்குப் புரியவில்லை. ஆனால், அங்கு ஒரு பிணைப்பு இருந்தது.
தேர்தல் விவாதங்கள்
  • அடுத்த பேருந்து நிறுத்தத்தில் ஒடிசா அரசியல் பற்றியும், தமிழக அரசியல் பற்றியும் புத்திசாலித்தனமாக பேசிய ஒரு வயதானவர்.
  • மும்பை - சென்னை ரயிலில் ஆந்திராவைச் சேர்ந்த தெலுங்கு விவசாயிகள் தேர்தல் பற்றி விவாதத்துக் கொண்டு வந்தனர். சந்திரபாபு நாயுடு பெண்களின் பெயரில் மாதம் ரூ 5,000 அனுப்பியதால் பெண்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்திருக்கிறது என்று பேசினார்கள் என்று ரேணிகுண்டா கல்லூரி பையன் கூறினான். அந்த விவாதம் தொடர்ந்து கொண்டே இருந்தது. 
  • இதைத் தவிர புபனேஸ்வரில் நிதீஷ்குமார் கட்சியின் பிரச்சார வாகனம் ஒன்று. வேறு எங்கும் தெருக்களில் தேர்தல் தீவிரத்தை காணவில்லை. 
  • மோடியைப் பற்றி கயா ரயில் நிலையத்தில் விவாதம் நடந்து கொண்டிருந்தது. 
தொகுத்துப் பார்க்கும் போது, பா.ஜ.க - இந்துத்துவ அரசியல் வட இந்தியாவில் கேள்வி கேட்பார் இல்லாத ஆதிக்கத்தில் இல்லை. அதை எதிர்த்து கடுமையான எதிர்ப்பு நீரோட்டம் செயல்படுகிறது. அது வெளியில் தலைகாட்டுவதற்கு தயங்குகிறது.

ரகசிய வாக்களிப்பு முறையில், நிச்சயமாக பா.ஜ.கவின் மீதான அதிருப்தியை வெளிப்படுத்துவதாக அமையும். VVPAT மூலம் யாருக்கு ஓட்டு போட்டாய் என்ற தெரிந்து விடும் என்ற அச்சமும் இருக்கலாம்.

கொல்கத்தாவைத் தவிர கம்யூனிஸ்டுகள் வேறு எங்கு கண்ணில் பட்டனர். தன்பாதில்? டெல்லியில்? ரத்லாமில்? சூரத்தில் - இல்லை என்பதுதான் பதில். அதற்குப் பதிலாக கோயில்களும், பா.ஜ.கவின் மேளாக்களும் நிரம்பி வழிகின்றன.

தனிப்பட்ட அனுபவம்

எந்த இடத்திலும் உடனடியாக வீட்டுக்குப் போய் விட வேண்டும் என்ற தவிப்பு ஏற்படவே இல்லை. இணைய இணைப்பும், பழகிப் போய் விட்டிருந்த உணவு முறையும், எளிய வாழக்கை முறையும் கிடைத்த வாய்ப்புகளை நிறைவோடு பயன்படுத்தி பயணிப்பதை எளிதாக்கியிருந்தன.

பேச்சுக் கொடுத்தவர்கள் எல்லாம் இயல்பாக நெருக்கமாக பேசினார்கள். வாழ்க்கை விபரங்களை பகிர்ந்து கொண்டார்கள். முக்கியமாக தன்பாதில் அமித், புபனேஷ்வருக்கு அருகில் பிரதீக், வாபியில் வேலை செய்யும் QC தொழிலாளி, ரேணிகுண்டாவில் படிக்கும் மாணவர், கட்டுமானத் துறையில் safety engineer வேலை செய்யும் 25 வயது இளைஞர் என யாரும் தங்களை மறைத்துக் கொள்ள முயற்சிக்கவில்லை.

கோட்டாவிலிருந்து ரத்லாம் வரையிலான பயணத்தில் தொழிலாளர்கள் நெருக்கமாகி விட்டார்கள். ரத்லாமில் இறங்க வேண்டாம், வடோதராவில் இறங்கி மும்பைக்கு ரயிலை பிடிக்கலாம் என்று வலியுறுத்த ஆரம்பித்து விட்டார்கள்.

ரத்லாம் - சூரத் பாதையில் ராஜ்குமாரும், வாபி பையனும் நெருக்கமாக பேசினார்கள். ரத்லாம் - சூரத் ரயிலில் கூட்ட நெரிசலில் பெண்களும், கைக்குழந்தையுடன் கூடிய பெண்கள் உட்கார்வதற்கு சண்டை போட்டு இடம் வாங்கிக் கொடுத்தேன்.

ஆள், இந்தப் பக்கத்தைச் சேர்ந்தவர் இல்லை, தென்னிந்தியர் என்று பலர் ஊகித்துக் கொண்டனர்.

கருத்துகள் இல்லை: