திங்கள், மே 20, 2019

அடைக்கலம் தரும் இலக்கியம் - அருந்ததி ராய்


Author Arundhati Roy

ருந்ததி ராய் பென் அமெரிக்காவின் "ஆர்தர் மில்லர் எழுதுவதற்கான சுதந்திரம் (Arthur Miller Freedom to Write)" உரையாற்றியிருக்கிறார். உரையின் தொடக்கத்திலேயே இன்றைய உலக நிலைமையை சுருக்கமாகவும், சிறப்பாகவும் தொகுத்துச் சொல்கிறார்.

"பனிச்சிரகங்கள் உருகிக் கொண்டிருக்கும்போது, பெருங்கடல்கள் சூடாகிக் கொண்டிருக்கும் போது, நிலத்தடி நீர்மட்டம் பாதாளத்தை எட்டிக் கொண்டிருக்கும் போது, பூமியில் உயிர் வாழ்வை தாங்கிக் கொண்டிருக்கும் சார்புநிலைகளின் மெல்லிய வலைப்பின்னலை நாம் பிய்த்து எறிந்து கொண்டிருக்கும் போது, மனிதர்களுக்கும் எந்திரங்களுக்கும் இடையேயான எல்லையைக் கடந்து செல்லும்படி நமது மலைக்கத்தக்க அறிவாற்றல் நம்மை வழி நடத்திக் கொண்டிருக்கும் போது, அதை விட மலைக்கத்தக்க நமது அகம்பாவம் ஒரு மனித இனமாக நாம் நீடித்து வாழ்வதற்கும் பூமி நீடித்து வாழ்வதற்கும் இடையேயான தொடர்பை புரிந்து கொள்ளும் நமது திறனை மங்க வைத்துக் கொண்டிருக்கும் போது, நாம் கலையின் இடத்தில் கணினி நிரல்களை நிரப்பிக் கொண்டிருக்கும் போது, பெரும்பாலான மனிதர்கள் பொருளாதார செயல்பாடுகளில் பங்கேற்கத் தேவையிருக்காத (எனவே அதற்காக ஊதியம் பெறாத) ஒரு எதிர்காலத்தை எதிர்கொண்டிருக்கும் போது - இந்த முக்கியமான தருணத்தில்தான் வெள்ளை மாளிகையில் வெள்ளையின வெறியர்களும், சீனாவில் புதிய ஏகாதிபத்தியவாதிகளும், புதிய-நாஜிக்கள் திரண்டு நிற்கும் ஐரோப்பிய வீதிகளும், இந்தியாவில் இந்து தேசியவாதிகளும், பிற நாடுகளில் இவர்களைப் போன்ற கசாப்புக்கார இளவரசர்களும், அதைவிடக் குறைந்த சர்வாதிகாரிகளும் என்ன நடக்கப் போகிறது என்று கணிக்க முடியாத எதிர்காலத்துக்குள் நம்மை வழிநடத்திச் செல்லவுள்ளார்கள்."
என்ன ஒரு கலைஞர். மொழியும், உலகைப் பற்றிய பார்வையும் துள்ளி விளையாடுகிறது.

அமெரிக்கா தாலிபானை அழிப்பதற்காக ஆப்கன் மீது போர் தொடுத்தது, இப்போது தாலிபானுடன் பேச்சு வார்த்தை நடத்துகிறது. இதற்கிடையில் ஈராக், லிபியா, சிரியா போன்ற நாடுகளை அழித்திருக்கிறது. ஐ.எஸ் என்ற கொடூர பயங்கரவாதக் கும்பலை வளர்த்து விட்டிருக்கிறது. இப்போது அதேபோன்ற பயங்கரவாத பூச்சாண்டி காட்டி ஈரானைத் தாக்குவதற்கு தயாரித்து வருகிறது.

இந்தச் சூழலில் இலக்கியத்தின் இடம் என்ன?

இலக்கியம் என்பதை தான் எப்படி பார்க்கிறேன், எப்படி பழகுகிறேன் என்று விளக்குகிறார். fiction-க்கும், non-fiction-க்கும் இடையே இலக்கியத்தில் வேறுபாடு இல்லை என்றார். தான் அரசியல், சமூகப் பொருளாதார பிரச்சனைகள் குறித்து எழுதியவற்றை பலர் இலக்கியமாகவே பொருட்படுத்துவதில்லை. நீ மறுபடியும் எப்போது எழுதப் போகிறாய் என்று கேட்கிறார்களாம். என்ன எழுத வேண்டும், எப்படி எழுத வேண்டும் என்று ஆண்கள் அறிவுரை சொல்வார்களாம்.

ஆனால், பிற இடங்களில், நெடுஞ்சாலைகளுக்கு அப்பால் அவை மொழிபெயர்க்கப்பட்டு படிக்கப்படுகின்றன, துண்டு பிரசுரங்களாக வினியோகிக்கப்படுகின்றன. தாக்குதலுக்குள்ளாகும் காடுகளுக்குள்ளும், கிராமங்களிலும், பல்கலைக் கழகங்களிலும் அவை பரவுகின்றன.

எனவே, இலக்கியம் என்பது எழுத்தாளராலும் வாசகர்களாலும் கட்டியமைக்கப்படுகிறது என்கிறார்.

1997-ல் வெளியான The God of Small Things-ல் அவரது கேரள வாழ்க்கை, அயமேனத்தில் குன்றின் மீதிருக்கும் அந்தப் பழைய வீடு, பாட்டியின் ஊறுகாய் தொழிற்சாலை, மீனாச்சல் ஆறு இவற்றின் பின்ணியில் அன்றைய கேரள வாழ்க்கையை சித்தரித்திருக்கிறார். அதில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிரான பகுதிகளும், கம்யூனிஸ்ட் கட்சிக்குள் சாதியம் ஊறிக் கிடப்பதை அம்பலப்படுத்தும் பகுதிகளும் கம்யூனிஸ்டுகளின் எதிர்ப்பை ஈட்டியதாம். அந்த நாவலில் சிரியன் கத்தோலிக்க அம்முவுக்கும் பறையர் சாதி வெளுத்தாவுக்கும் இடையேயான காதல் சமூகத்தின் கூட்டு முகச்சுழிப்பை ஈட்டியிருக்கிறது. 5 ஆண் வழக்கறிஞர்கள் அதற்குத் தடை கோரி வழக்கு தொடுத்திருக்கிறார்கள்.

இதற்கிடையில் அவரது அம்மா சிரியன் கத்தோலிக்க குடும்பங்களில் பெண்ணுக்கு சம சொத்துரிமை கோரி உச்சநீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பைப் பெற்றிருக்கிறார். அம்மாவுக்கும் பெண்ணுக்கும் ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என்று ஒரு எண்ணப் போக்கு இருந்திருக்கிறது. இதற்கிடையில் நாவலுக்கு புக்கர் பரிசு கிடைத்தது உள்ளூர் மலையாளி பெருமையை தூண்டியிருக்கிறது. எனவே, நாவலுக்கு எதிரான  வழக்கை விசாரிக்க வந்த நீதிபதிக்கு ஒவ்வொரு முறையும் நெஞ்சுவலி வந்து அதைத் தள்ளிப் போட்டு விடுகிறார். இறுதியில் 10 ஆண்டுகளுக்குப் பிறகுதான் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது.

அவரது முதல் நாவல் வெளியான ஒரு ஆண்டுக்குள் வாஜ்பாயின் பா.ஜ.க அரசு அணுகுண்டு சோதனை செய்தது. அதைத் தொடர்ந்து எழுதிய கட்டுரையில் இதுதான் என்னுடைய நாடு என்றால் நான் பிரிந்து செல்கிறேன் என்று ஒரு கட்டுரை (The Endo of Imagination) எழுதியிருக்கிறார். அதைத் தொடர்ந்து என்ன எதிர்வினை வந்திருக்கும் என்று புரிந்து கொள்ளுங்கள் என்கிறார். அது முதல்தான் இந்திய தேசியவாதம் ஒரு அடாவடி வடிவத்தைப் பெற்றது என்கிறார்.

அணு குண்டின் கொடூரங்களை ஒவ்வொரு எலும்பிலும் உணர்ந்த தலைமுறை அது. வியட்னாமில் ஏஜென்ட் ஆரஞ்ச் போட்ட செய்திகளை பார்த்து வளர்ந்தவர். அதைத் தொடர்ந்து அடுத்த 20 ஆண்டுகளில் அவர் எழுதிய அரசியல் கட்டுரைகள் 1000 பக்கங்கள் வந்து விட்டனவாம்.

கடைசியில் The Ministry of Atmost Happiness நிகழ்ந்தது. அதில் குடும்பங்களில் இருந்து துரத்தப்பட்டு விட்டவர்களின் கதை சொல்லப்படுகிறது. வீட்டின் கூரை பிய்ந்து போனவர்களின் கதை.

இலக்கியம் நமக்கு அடைக்கலம் தருவதால் அது நமக்குத் தேவைப்படுகிறது.

கருத்துகள் இல்லை: