புதன், ஜனவரி 04, 2012

கண்ணில் விழுந்தவை


1. வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் - சர் வெங்கி ஆகிறார்.
2012 புத்தாண்டை ஒட்டி வெளியிடப்பட்ட பிரிட்டிஷ் அரச விருதுகள் பட்டியலில் சர் பட்டம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு நோபல் பரிசு கிடைத்த நேரத்தில் இந்தியர் என்று காலர் தூக்கி விட்டுக் கொண்டார்கள், பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும்.

2. என் ஆர் நாராயண மூர்த்தி பேட்டி

"டிசம்பர் 29 மிகவும் மோசமான நாள். முதலாவதாக இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோற்றுப் போனது. 120 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் 1.9 கோடி மக்கள் தொகையுடைய நாட்டின் அணியைத் தோற்கடிக்க 11 பேர் இல்லையே என்று வேதனையாக இருந்தது."

3. லோக்பால் பில் இன்னும் உயிரோடுதான் இருக்கிறது - காங்கிரசு.

1968லிருந்தே இதைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நேற்று ஒரு பேச்சு இன்று வேறு பேச்சு என்ற கெட்ட பழக்கமே கிடையாது. 2041லும் இதையே சொல்வார்கள்.

4. இந்திய பங்குச் சந்தையில் வெளிநாட்டு நபர்களும் முதலீடு செய்யலாம்.
பிரதமருக்கு எப்படியாவது வெளிநாட்டுப் பணம் வந்தா சரிதான். சில்லறை வணிகத்தில் முதலீடு இல்லை என்றால் பங்குச் சந்தை வழியாகவாவது வந்து நிறையட்டும்.

என்ன இருந்தாலும் உலக முதலீட்டாளர்களுக்கு இந்தியா மேல் எவ்வளவு பாசம்?

5. 2012ல் 5 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும், நிபுணர்கள் குழு.

6. மோனோ ரயில் ஒப்பந்த புள்ளி தொடர்பான கூட்டம் ரத்து செய்யப்பட்டது. யாரும் கலந்து கொள்ள முன்வரவில்லை.

7. வேலூர் மாநகராட்சியில் ஊழியர்கள் பற்றாக்குறை.

8. இந்திய நிறுவனங்கள் லாபத்தை அதிகரிக்க வெளிநாடுகளைத் தேடுகின்றன.
இந்தியாவில் வளர்ச்சி வீதம் குறைவதால் முதலீட்டுக்கு லாபம் கிடைக்காது என்று வெளி வாய்ப்புகளைத் தேடுகின்றன இந்திய நிறுவனங்கள்.

9. கிரிக்கெட் நேர்முக வர்ணனையை ஒலிபரப்பாத கோவை வானொலி நிலைய நிகழ்ச்சிப் பொறுப்பாளர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

10. திருவண்ணாமலை அருகில் உள்ளாட்சி தேர்தலில் மாற்றி வாக்களித்தார்கள் என்று தோற்றுப் போனவர் வீடுகளுக்கு தீ வைத்து விட  10 இருளர் குடும்பத்தினர் ரோட்டோரம் வசிக்கிறார்கள்.

ஞாயிறு, ஜனவரி 01, 2012

கண்ணில் விழுந்தவை


1. சச் கே சாம்னா என்ற இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அரசியல் தொடர்பான கேள்விகள் கேட்கப் போகிறார்களாம்.

இது வரை 'மாமனார் மீது ஆசை வந்ததுண்டா' போன்ற கேள்விகளை கேட்டு சமூக விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி வந்தவர்கள்  இனிமேல் 'லஞ்சம் வாங்கியதுண்டா' போன்ற கேள்விகளைக் கேட்டு சமூகத்தை தூய்மை செய்யப் போகிறார்களாம்.

செய்தி அறிக்கை

2. பிரிட்டானியா பிஸ்கட் நிறுவனத்தில் பெர்பார்மன்ஸ் காரணம் காட்டி பல ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்களாம்.

நிறுவனத்தின் லாப வளர்ச்சியை குறையாமல் பார்த்துக் கொள்ள வேறு வழியில்லையாம்.

பிரிட்டானியாவின் லாபம் அதிகரிக்க இருக்கிறது

3.  பிரிட்டிஷ் மகாராணி எலிசபத் II அரியணை ஏறி 60 ஆண்டுகள் ஆகி விட்டது.

அவரது மகன் சார்லஸ், திண்ணை எப்போ காலியாகும் என்று  காத்திருக்கிறார், கிழவி விட்டுத் தர மாட்டேன் என்கிறார். இதற்கிடையில் பேரன் வில்லியம் வேறு வரிசையில் வந்து விட்டான்.

எலிசபத் ராணியின் மணிவிழா

4. சோனி சோரி என்ற சத்திஸ்கர் சமூக ஆர்வலர், சித்திரவதை செய்யக் கூடாது என்று நீதி மன்றங்கள் உறுதி வாங்கிக் கொண்டு, போலீஸ் காவலுக்கு அனுப்பப்பட்டார். அடுத்த முறை நீதிமன்றத்துக்குக் கொண்டு வரப்பட்ட போது நடந்து வர முடியாமல் போலீஸ் வேனுக்குள்ளாகவே வருகை பதிவு எடுக்க வேண்டியிருந்ததாம்.

மருத்துவமனையில் சோதனை செய்த மருத்துவர்கள் கடுமையான சித்தரவதைகளும் பாலியல் வன்முறைகளும் அவர் மீது நிகழ்த்தப்பட்டன  என்று அறிக்கை கொடுத்திருக்கிறார்கள்.

தெகல்கா

5. செக்ஸ் சர்வே

அவுட்லுக் போன வார இதழில் வருடாந்திர செக்ஸ் சர்வே வெளியிட்டிருக்கிறார்கள். வாரா வாரம் வாங்கினாலும் இப்போது பத்திரிகையை பெயர் சொல்லிக் கேட்டதும் கடைக்காரர் ஒரு மாதிரி பார்த்து விட்டுத்தான் தந்தார்.

புத்தகத்தில் படங்களும் கட்டுரைகளும் ஒருமாதிரி பார்க்கும் வகையில்தான் இருந்தன.

6. சபரிமலையாக மாறும் தேனி.
சபரிமலைக்கு மாலை போட்ட பல பக்தர்கள் தேனி மாவட்ட எல்லையிலேயே விரதம் முடித்துத் திரும்பி விடுகிறார்களாம்.

கேரள வணிகர்களுக்கு பெறும் இழப்பு.

பக்தர்கள் இப்படியே பழகி விட்டால் சபரி மலையும் இந்திய ஒருமைப்பாடும் என்ன ஆகும்? கவலையாக இருக்கிறது.

7. லட்சக்கணக்கான பேர் வட கொரியாவில் அஞ்சலி
வடகொரியாவின் 'சர்வாதிகாரி' கிம் இல் மறைவுக்கு லட்சக்கணக்கான பேர் அழுது புலம்பி அஞ்சலி செலுத்திய படங்கள் வெளியாகியிருக்கின்றன.

பைட் பைப்பர் போல மக்களை எல்லாம் மயக்கி அழ வைத்து விட்டது போல செய்திகள் சொல்லுகிறார்கள்.

8. 'கல்லூரிகளின் நன்கொடையை ஒழிக்க வேண்டும், ஆனால் கட்டணம் நிர்ணயிக்கும் உரிமை வேண்டும்' என்று புகழ் பெற்ற  கல்வி வியாபாரி ஜி விஸ்வநாதன் கருத்து தெரிவித்திருக்கிறார்.

விஐடி என்ற நிறுவனத்தின் உரிமையாளர் அவர்தான்.

9. 1.4 லட்சம் நேனோ  கார்களில் ஸ்டார்டர் மோட்டாரை மாற்றப் போகிறது டாடா நிறுவனம். 'தரம் உயர்ந்த உதிரி பாகத்தை வாடிக்கையாளருக்குக் கொடுப்பதுதான் நோக்கம்' என்று சாதிக்கிறது.

என்ன ஒரு பெருந்தன்மை!

10. தமிழ்நாட்டில் 7800 ஏரிகள் இல்லாமல் போயின. - 20 ஆண்டுகளில்

11. 2012ல் உலகம் அழியாது என்று பல சோதிடர்கள் உறுதி அளித்திருக்கிறார்கள்.

நிம்மதியாக இருக்கிறது!

12. 100 பில்லியன் (10,000 கோடி  முறை ராமநாமம் எழுதுவது) ராமநாம யக்ஞம் நடத்தியிருக்கிறார்கள்.

கலியுகத்தின் அநியாயங்களை எதிர் கொள்ள வேறு என்னதான் வழி!

13. திருமண விழாக்களுக்கு காப்பீடு செய்யும் வசதி வந்துள்ளது. மழையின் காரணமாகவோ, மணமகன்(ள்) வேறு துணைக்கு ஆதரவாக வெளிநடப்பு செய்து விட்டதாலோ, பொது வேலைநிறுத்தத்தின் காரணமாகவோ திருமணம் நின்று விட்டால் காப்பீடு நிறுவனம் இழப்பீடு கொடுத்து விடும்.

இது வரை யாரும் ஏன் இப்படி யோசிக்கவில்லை?!


14. கட்டுப்படியாகும் மருத்துவ சேவை வழங்கும்படி தனியார் மருத்துவமனைகளுக்கு பிரதம மந்திரி கோரிக்கை விடுத்தார். - காரைக்குடி வாசன் ஐ கேர் நிகழ்ச்சியில் இப்படி பேசியிருக்கிறார்.

இப்பதான் கடமையை ஒழுங்கா செய்கிறார். சபாஷ், கீப் இட் அப்!

15. அம்பானி சகோதரர்கள் மூதாதையர் ஊருக்கு ஒரே நாளில் போனார்களாம்.

16. KG-D6 உற்பத்தி வீழ்ச்சியடைந்ததால் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குச் சந்தை மதிப்பு சரிந்து 2012 ஆரம்பிக்கும் போது முதலிடத்தை இழந்து விட்டது.

17. எல்ஏ ராம் - சீனா போய் வந்த அனுபவங்கள்.
அமெரிக்காவில் எத்தனை வருஷம் இருந்தாலும், சீனாவுக்கே சுற்றுலா போனாலும் தமிழ்நாட்டை மறக்காமல் இருக்கிறாரே!

கொழிக்கிறது சீனா

திங்கள், டிசம்பர் 26, 2011

தகவல் தொழில்நுட்பப் புரட்சியும் வியாபார நியாயமும்

15ம் நூற்றாண்டுக்கு முன்பு எளிதில் தாண்ட முடியாத அட்லாண்டிக் பெருங்கடலால் பிரிக்கப்பட்ட ஐரோப்பா கண்டத்துக்கும் அமெரிக்க கண்டங்களுக்கும் மிகக் குறைந்த அளவிலான கடல் வழி தொடர்பே இருந்தது.  15ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் ஏற்பட்ட புதிய கண்டுபிடிப்புகள் கடல் வழி பயணத்தில் முன்னேற்றங்களை ஏற்படுத்தி அட்லான்டிக் பெருங்கடலை கடந்து போகும் சாத்தியத்தை ஏற்படுத்தியிருந்தன.

இதை 20ம் நூற்றாண்டில் நிகழ்ந்த தகவல் தொழில் நுட்ப புரட்சியுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். பெரும் தூரத்தால் பிரிக்கப்பட்டிருந்த இந்திய-அமெரிக்க நிலப்பரப்புகளுக்கிடையே உடனடி தகவல் பரிமாற்றம் செய்து கொள்வதற்கான இணைய தொழில் நுட்பம் உருவானது.

15ம் நூற்றாண்டில், ஐரோப்பியர்கள் பெருகி வரும் தமது வர்த்தக நடவடிக்கைகளை விரித்துச் செல்ல புதிய லாபகரமான வணிக வாய்ப்புகளை கண்டுபிடிப்பதற்கான தேவை அதிகரித்தது. குறிப்பாக, ஆப்பிரிக்கக் கடற்கரையில் கிடைத்த தங்கத்தை பரிமாறி இந்தியாவில் கிடைத்த வாசனை பொருட்களை வாங்கி வர மத்திய கிழக்கு இஸ்லாமிய நாடுகளை சார்ந்திருப்பதை தவிர்க்க விரும்பினார்கள் ஐரோப்பியர்கள். 1494வாக்கில் போர்ச்சுக்கீசிய அரசர் பல மேற்கு ஆப்பிரிக்க அரசுகளுடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டதன் மூலமாக, ஆப்பிரிக்காவின் சமூகங்களுடன் பகைமை இல்லாமல் வர்த்தக உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள முடிந்தது.

20ம் நூற்றாண்டின் இறுதியில் ஏற்பட்ட உலக வர்த்தக மையம், அறிவு சார் சொத்துரிமை சட்டங்கள் முதலான நாடுகளுக்கிடையேயான ஒப்பந்தங்கள், மூலதனம் நாடு விட்டு நாடு பாய்வதற்கான சட்ட அமைப்பை ஏற்படுத்திக் கொடுத்தது.

16ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவில் நிலத்தையும் இயற்கை வளங்களையும் கைப்பற்றி முதலாளித்துவ லாபங்களை ஈட்டுவதற்கான ஐரோப்பியர்களின் முயற்சியின் விளைவாக தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டது. தேயிலை, புகையிலை, பருத்தி, கரும்பு தோட்டங்களில் பயிர் செய்து, அறுவடை செய்து, பதப்படுத்துவதற்கு பெரும் அளவிலான உழைப்பு தேவைப்பட்டது.  மலிவாக கிடைத்த பெரும் அளவிலான நிலங்களை கைப்பற்றி நிலவுடமையாளர்கள் உருவாகி தொழிலாளர்களை தேடினார்கள். அப்படி தொழிலாளர்களாக ஐரோப்பாவிலிருந்து வந்த சுதந்திர மக்கள் கூட சிறிது காலத்திலேயே நிலம் வாங்கி நிலவுடமையாளர் ஆக முடிந்தது. இதனால் வேலை செய்பவர்களின் தேவை அதிகரித்துக் கொண்டே போனது. அமெரிக்க பழங்குடி மக்களை கொத்தடிமைகளாக்கி வேலை வாங்குவதில் இயற்கையான பல சிக்கல்கள் ஏற்பட்டன.

20ம் நூற்றாண்டில் அமெரிக்காவிலும் மேற்கு ஐரோப்பாவிலும் வேகமாக வளர்ச்சி பெற்றிருந்த நுகர்வு நிறுவனங்கள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், முதலீட்டு நிறுவனங்களுக்குத் தேவையான தகவல் மேலாண்மை பணிகளைச் செய்ய அமெரிக்காவில் நிலவிய தொழிலாளர் முறைகளும் சம்பள விகிதங்களும் ஏற்புடையதாக இல்லாமல் இருந்தது. மாற்று வழிகளைத் தேடிக் கொண்டிருந்தது பெருகி வந்த மூலதனம்.

16,17ஆம் நூற்றாண்டுகளில் அமெரிக்காவில் உழைப்பு தேவையை பூர்த்தி செய்து கொள்ள ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகளை பிடித்துச் சென்று அமெரிக்காவில் வேலையில் ஈடுபடுத்தும் வர்த்தகம் ஆரம்பித்தது. போர்க் கைதிகளாக பிடிபட்டவர்களும், குற்றம் புரிந்தவர்களும் மன்னர்களால் அடிமைகளாக விற்கப்பட்டனர். ஆனால், பெரும்பான்மையான அடிமைகள் ஆப்பிரிக்க வியாபாரிகள் ஐரோப்பியர்களுடன் கூட்டாக ஊர்களுக்குள் புகுந்து துப்பாக்கி முனையில் கடத்துவதன் மூலம் பிடிக்கப்பட்டு விற்கப்பட்டவர்கள். வணிக ரீதியிலான அடிமை வியாபாரம் அதிகரிக்க அதிகரிக்க போரின் விளைவாக கைதிகள் பிடிக்கப்படுவது குறைந்து போய் கைதிகள் பிடிப்பதற்காக போருக்குப் போவது வாடிக்கையாகிப் போனது.  அருகாமையிலுள்ள தேசிய இனங்களைச் சேர்ந்த ஆப்பிரிக்கர்களை பிடித்து அடிமைகளாக தொழிலாக வைத்திருந்த ஆப்பிரிக்கர்கள் பலர் செயல்பட்டனர்.

மனிகோங்கோ என்ற ஆப்பிரிக்க இனக்குழுத் தலைவர் போர்ச்சுக்கீசிய மன்னருக்கு எழுதிய கடிதத்தில் "எமது குடிமக்களில் பலர் உங்கள் குடிமக்களான வர்த்தகர்கள் கொண்டு வரும் போர்ச்சுக்கீசிய பொருட்களின் மீது ஆசை வைக்கிறார்கள். இந்த ஆசையை தீர்த்துக் கொள்ள சுதந்திர கறுப்பு மனிதர்களை பிடித்து விற்று விடுகிறார்கள். கைதிகளை இரவின் மறைவில் கடற்கரைக்கு கடத்திச் செல்கிறார்கள். வெள்ளைக்காரர்கள் கையில் அடிமைகள் ஒப்படைக்கப்பட்டவுடன் அடையாளத்துக்காக பழுக்கக் காய்ச்சப்பட்ட கம்பியின் மூலம் சூடு வைக்கப்படுகிறார்கள். தினமும் வர்த்தகர்கள் எங்கள் மக்களை - இந்த மண்ணின் மைந்தர்களை, எங்கள் பிரபுக்களின் மகன்களை, எனது சொந்த குடும்பத்தினரை கூட பிடித்து செல்கிறார்கள். இந்த அநியாயமும் அடாவடியும், எங்கள் நாட்டில் மக்கள் தொகையை முழுவதும் அழித்து விட்டிருக்கிறது. எங்களது நாட்டுக்கு நீங்கள் மதகுருக்களையும் பள்ளி ஆசிரியர்களையும் மட்டும் அனுப்புங்கள், மற்ற பொருட்கள் தேவையில்லை. எங்கள் நாட்டில் அடிமைகள் வர்த்தகம் அல்லது அடிமைகள் கடத்தல் நடக்கக் கூடாது என்று நான் விரும்புகிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

அடிமை வியாபாரிகளில் போர்ச்சுக்கீசியர்கள், ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுக்காரர்கள், ஸ்பேனியர்கள், டச்சுக்காரர்கள், மற்றும் அமெரிக்கர்கள் முதல் இடங்களை வகித்தார்கள். ஆப்பிரிக்க கடற்கரையில் தமது அலுவலகங்களை வைத்திருந்து, ஆப்பிரிக்க பழங்குடி தலைவர்களிடமிருந்து மனிதர்கள் விலைக்கு வாங்கினார்கள். இப்போதைய மதிப்பீடுகளின் படி சுமார் 1.2 கோடி மக்கள் அட்லான்டிக் தாண்டி அனுப்பப்பட்டார்கள் என்று தெரிகிறது.  அடிமை முறை மூன்று பகுதியிலான பொருளாதார சுழற்சியின் ஒரு கண்ணியாக விளங்கியது. அது நான்கு கண்டங்களையும், 4 நூற்றாண்டுகளையும் கோடிக்கணக்கான மக்களையும் உள்ளடக்கியிருந்தது.

'20ம் நூற்றாண்டில் வளர்ந்திருந்த தகவல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி அமெரிக்க/ஐரோப்பிய நிறுவனங்களுக்குத் தேவையான மென்பொருள், தகவல் தொழில்நுட்ப பணிகளை அமெரிக்காவில் ஆகும் செலவில் நூற்றில் சில பகுதி செலவில் இந்தியாவில் செய்து கொள்ள முடியும்' என்று கண்டு கொண்ட முதலாளித்துவ நிறுவனங்கள் அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள ஆரம்பித்தன. அதற்கு டாடாவின் டிசிஎஸ், நாராயணமூர்த்தியின் இன்போசிஸ் போன்ற நிறுவனங்கள் உள்ளூர் கங்காணிகளாக செயல்பட ஆரம்பித்து வெகு வேகமாக வளர்ந்தனர்.

அடிமை வர்த்தகம் முக்கோண வர்த்தகம் என்று அழைக்கப்பட்டது. முக்கோணத்தின் ஒரு பக்கம் ஐரோப்பாவிலிருந்து ஆப்பிரிக்காவுக்கு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுவது. ஒவ்வொரு கைதிக்கும் ஆப்பிரிக்க அரசர்கள் துப்பாக்கிகள், ஆயுதங்கள், மற்றும் உற்பத்தி பொருட்கள் போன்ற பொருட்களை ஐரோப்பாவிலிருந்து வரவழைத்துக் கொண்டனர். முக்கோணத்தின் இரண்டாவது பக்கத்தில் அடிமைப்படுத்தப்பட்ட ஆப்பிரிக்கர்கள்அமெரிக்காவுக்கும் மேற்கிந்திய தீவுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டார்கள். முக்கோணத்தின் கடைசி பக்கமாக அமெரிக்காவிலிருந்து அடிமை உழைப்பு மூலம் உருவான பண்ணைகளின் விளைபொருட்களான பஞ்சு, சர்க்கரை, புகையிலை, மோலாசஸ், ரம் போன்றவை ஐரோப்பாவுக்கு அனுப்பப்பட்டன.

நவீன அடிமை வியாபாரத்தின் மூலம் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட உழைப்பு, அதில் ஈடுபட்ட இந்திய நிறுவனங்கள் உலக அளவில் வளர்வதற்கான வாய்ப்பை வளர்த்தன. டாடா ஸ்டீல் இங்கிலாந்தின் கோரஸ் ஸ்டீலையும், டாடா மோட்டார்ஸ் லேண்ட்ரோவர்-ஜாகுவார் நிறுவனங்களையும் விழுங்குவதற்கு இந்த வர்த்தகத்தில் ஈட்டிய டாலர்கள் அடிப்படையாக அமைந்தன. இந்தியர்கள் அமெரிக்காவுக்கு அனுப்பிய உழைப்புக்கு மாற்றாக இந்தியாவுக்குள் KFC, Pizza Hut, Pepsi, Coca Cola போன்ற அமெரிக்க பொருட்கள் கொண்டு வரப்பட்டு மக்களுக்கு விற்கப்படுகின்றன. கூடவே ராணுவத்துக்கு ஆயுதங்கள், விமானப் போக்குவரத்துக்கு போயிங்-ஏர்பஸ் விமானங்கள் என்றும் இறக்குமதி செய்யப்படுகின்றன.

அமெரிக்காவில் அடிமைகளின் குழந்தைகள் அடிமைகளாகவே பிறந்தார்கள். அமெரிக்காவில் அடிமைகள் விருப்பப்படி திருமணம் செய்து கொள்வது தடை செய்யப்பட்டிருந்தது. மனிதாபிமானம் மிக்க எஜமான்கள் கூட அடிமைகளை தமக்கு சமமாக நடத்துவதில்லை. அடிமைகள் கால்நடைகள் போலவே கருதப்பட்டனர். மூர்க்கத்தனமான இந்த வியாபாரம் லட்சக்கணக்கான நபர்களின் சாவுக்கும் இனங்களின் அழிவுக்கும் காரணமாக இருந்தது. சுமார் 1.2 கோடி அடிமைகள் ஆப்பிரிக்காவிலிருந்து கப்பலில் ஏற்றி அனுப்பப்பட்டனர் என்றும் அவர்களில் சுமார் 10% முதல் 20% வரை வழியிலேயே கொல்லப்பட்டார்கள் என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் பதிவு செய்கிறார்கள்.

அடிமைகள், ஆப்பிரிக்க கடற்கரையில் கப்பலில் ஏற்றப்படுவதற்கு முன்பு தொழிற்சாலைகள் என்று அழைக்கப்பட்ட துறைமுகங்களில் அடைத்து வைக்கப்பட்டார்கள். இந்த காத்திருக்கும் நேரத்தில் சுமார் 8,20,000 அடிமைகள் கொல்லப்பட்டிருப்பார்கள் என்று மதிப்பிடப்படுகிறது. இதன் பிறகு அடிமைகள் மத்திய பயணத்தை மேற்கொள்கிறார்கள். இந்த கடற்பயணத்தில் சுமார் 22 லட்சம் அடிமைகள் உயிரிழந்திருப்பார்கள். பல மாதங்களுக்கு நெருக்கமாக, சுகாதார வசதி இல்லாத அறைகளுக்குள் அடைக்கப்பட்டிருந்தார்கள். அடிமைகளின் சாவு வீதத்தைக் குறைப்பதற்காக கட்டாய நடனமாடுதல், சாப்பிட விரும்பாதவர்களுக்கு கட்டாயமாக உணவு ஊட்டுதல் போன்ற 'நலவாழ்வு' நடவடிக்கைகளையும் கப்பல் உரிமையாளர்கள் மேற்கொண்டார்கள். கப்பலின் சூழலைத் தாங்க முடியாமல் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டவர்களும் ஏராளம்.

ஐடி நிறுவனங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு கால் லெட்டருக்குக் காத்திருத்தலையும், பெஞ்சில் காத்திருத்தலையும், இரவு ஷிப்டுகளில் வாழ்க்கையைத் தொலைத்தலையும் ஒத்திருப்பதை நினைவுபடுத்தலாம்.

அமெரிக்காவின் விர்ஜினியா மாநிலம் 1778ல் அடிமைகள் இறக்குமதி செய்யப்படுவதை தடை செய்த முதல் மாநிலமானது. அடிமை வியாபாரத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்த டென்மார்க் 1792ல் சட்டமியற்றி 1803க்குப் பிறகு அதை தடை செய்தது.  அதைத் தொடர்ந்து ஐரோப்பிய அரசுகள் ஒவ்வொன்றாக அடிமை வியாபாரத்தை தடை செய்தன. அமெரிக்காவில் வந்து சேர்ந்த கடைசி அடிமை கப்பல் 1859ல் சட்ட விரோதமாக பல ஆப்பிரிக்கர்களை அலபாமாவுக்கு கடத்தி வந்தது. 5 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கா அடிமை முறையை ஒழித்தது.

அதன் பிறகு கடந்த 150 ஆண்டுகளாக அடிமை வர்த்தகமும் அடிமை முறையும் ஏற்படுத்திய அழிவுகளையும் கொடுமைகளையும் பற்றி நூற்றுக் கணக்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

20ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பெருமளவு ஆரம்பித்த நவீன உலகமயமாக்கலின் சமூக, கலாச்சார, பொருளாதார அழிவுகள் குறித்து ஆய்வுகள் எதுவும் நடக்கவில்லை. இந்த நாசகார அமைப்பை உடைத்து மக்கள் குடியரசுகள் உருவான பிறகு அத்தகைய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு இதன் கொடூரங்கள் முழுமையாக வெளிப்படும் என்பதில் ஐயமில்லை.

மனிதர்களை தாக்கிப் பிடிப்பது, கடத்திச் சென்று விற்பது, சூடு போட்டு அடையாளம் ஏற்படுத்துவது, கப்பலில் ஆடு மாடுகள் போல அடைத்து ஏற்றிச் செல்வது, கால்நடைகள் போல  பராமரித்து வேலை வாங்குவது போன்றவற்றை இன்றைய உலகில் யாரும் ஏற்றுக் கொள்வதில்லை. ஆனால், அடிமை வர்த்தகம் நடந்த ஆண்டுகளிலும், அடிமை முறை நடைமுறையில் இருந்த காலகட்டத்திலும் அதற்கு ஆதரவாக, அதனால் விளையும் பொருளாதார முன்னேற்றத்தைத் தூக்கிப் பிடித்து வர்த்தகர்கள், ஆட்சியாளர்கள், சிந்தனையாளர்கள் வாதிட்டார்கள், அடிமை முறையை ஊக்கத்துடன் கடைப்பிடித்து வந்தார்கள்.

இன்றைய முதலாளித்துவ அமைப்பின் கீழ் கோடிக்கணக்கான மக்களை சுரண்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் டாடா குழுமமும் இன்போசிஸ் நாராயண மூர்த்தியும், 500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்திருந்தால் அடிமை வியாபாரத்திலும் தீவிரமாக ஈடுபட்டிருப்பார்கள். அத்தகைய அடிமை வர்த்தகர்கள் மீது இன்றைய வரலாறு காரி துப்புவது போல இன்றைய உலகில் சுரண்டல்காரர்களாக கொடி கட்டி நிற்கும் இவர்களுக்கு வரலாற்றில் என்ன இடம் கிடைக்கும் என்பதை நாம் நன்றாகவே புரிந்து கொள்ளலாம்.

டாடாவின் புதிய தலைமை


டாடா குழுமத்தின் இப்போதைய தலைவரான ரத்தன் டாடா 2012ல் ஓய்வு பெறும்போது அவரது இடத்தில் வரப் போகிறவர் அவரது மச்சான் உறவுமுறைக்கார சைரஸ் மிஸ்திரி என்று அறிவித்திருக்கிறார்கள்.

'உலகெங்கிலுமுள்ள திறமையான தலைமை நிர்வாகிகளை பரிசீலித்து அடுத்த குழுமத் தலைவரை தேர்ந்தெடுக்கப் போகிறோம்' என்று இரண்டு ஆண்டுகளாக ஊடகங்களில் பரபரப்பு காட்டிக் கொண்டிருந்தார்கள். கடைசியில் இடுப்பில் உட்கார்ந்திருந்த குழந்தையை தேடிக் கண்டுபிடித்தது போல பரிசீலனை குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான சைரஸ் மிஸ்திரியையே தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

டாடா குழும நிறுவனங்களில் கட்டுப்படுத்தும் பங்குகளை வைத்திருக்கும் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தனிப்பெரும் உரிமையாளரான ஷாபூர்ஜி பல்லோன்ஜி மிஸ்திரியின் மகன்தான் சைரஸ் மிஸ்திரி (இந்தியாவின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இவரும் இருக்கிறார்). குடும்பத்துக்கு வெளியில் கட்டுப்பாடு போய் விடக்கூடாது என்ற ஒழுக்கமும், அதிக பங்குகள் வைத்திருப்பவர்தான் சட்டாம்பிள்ளை என்ற கார்பொரேட் ஒழுங்குமுறையும் தூக்கிப்பிடிக்கப்பட்டது யாருக்கும் வியப்பைத் தந்து விடவில்லை.

இந்தியாவின் பிற தொழிலதிபர்கள் புதிய இளவரசருக்கு தமது நல்வாழ்த்துக்களை முறையாக தெரிவித்துக் கொண்டார்கள்.

'அனில் அம்பானி ஊழல் செய்திருக்கலாம், சத்யம் ராமலிங்க ராஜூ மோசடி செய்திருக்கலாம், ஆனால் ஒரு டாடாவைப் போல ஒரு இன்போசிஸ்சைப் போல எல்லா நிறுவனங்களும் செயல்படுவதுதான் சொர்க்கபுரியை உருவாக்கும் மார்க்கம்'. 2010-11 நிதியாண்டில் சுமார் 40,000 கோடி ரூபாய் வருமானம் ஈட்டிய டாடா குழுமம்தான் இந்தியாவில் முதலாளித்துவத்தின் ஆதர்ச பிரதிநிதியாக தூக்கிப்பிடிக்கப்படுகிறவர்கள்.

'டாடான்னா நேர்மை' என்று விளம்பரங்களில் அவர்களே பறைசாற்றிக் கொள்வது யாருக்கு நேர்மையாக இருப்பது?

1840களில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இந்தியாவிலிருந்து அபின் விற்பதன் மூலம் சீன மக்களை போதைக்கு அடிமையாக்கும் விரிவாக்கக் கொள்கையை பின்பற்றியது. '(creation of wealth ) நாட்டுக்கு வளம் உண்டாக்குவது என்றால் நாட்டை ஆளும் வர்க்கத்தின் நலன்களுடன் ஒட்டி நின்று பணம் சேர்ப்பதுதான்' என்பதை 19ம் நூற்றாண்டின் முதல் பாதியிலேயே பின்பற்றியவர் இன்றைய டாடாக்களின் மூதாதையர். அபின் வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகித்து பொருள் ஈட்டியவர் ஒரு டாடா.

இது தொடர்பாக ஹாங்காங் அரசு வெளியிட்ட ஆவணங்களிலிருந்து (http://www.legco.gov.hk/1886-87/h870325.pdf)

"கூட்டத்தின் போது 'ஹாங்காங் அபின் இறக்குமதியாளர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள்' என்ற ஹாங்காங்கைச் சேர்ந்த வர்த்தகர்களின் சார்பாக டேவிட் சாசூன் & சன்ஸ் நிறுவனத்தின் ஷெல்லிம் எசகீல் ஷெல்லிமும் டாடா & கம்பெனியின் ருத்தன்ஜீ டாடாவும் அடங்கியவர்கள் ஒரு விண்ணப்பத்தை சமர்ப்பித்தார்கள்”

20ம் நூற்றாண்டில் 50 ஆண்டுகளுக்கு மேல் டாடா குழுமத்தின் தலைவராக இருந்த ஜேஆர்டி டாடாவின் தந்தைதான் ருத்தன்ஜீ தாதாபாய் டாடா. 1991லிருந்து இன்று வரை பொறுப்பில் இருக்கும் ரத்தன் டாடா ஜேஆர்டி டாடாவின் மருமகன்.

1868ல் ஜாம்ஷெட்ஜி டாடா துணித்துறை நிறுவனம் ஒன்றை மும்பையில் நிறுவி டாடா குழுமத்தின் வரலாற்றை ஆரம்பித்து வைத்தார். 1877 ஜனவரி 1ஆம் தேதி விக்டோரியா மகாராணி இந்தியாவின் பேரரசி என்று அறிவிக்கப்பட்ட நன்னாளில் தானும் தனது நண்பர்களும் பணம் போட்டு ஆரம்பித்த நாக்பூர் ஜவுளி ஆலைக்கு 'பேரரசி ஆலை' என்று பெயர் சூட்டி ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்துக்கு விசுவாசத்தைக் காட்டிக் கொண்டார் ஜாம்ஷெட்ஜி டாடா.

'தமது அரசியல் அதிகாரம் போய் விட்டாலும் இந்தியாவை தொடர்ந்து கொள்ளை அடிக்க வழி வேண்டும்' என்ற தொலைநோக்குப் பார்வையுடன் ஆங்கிலேயர்கள் 1884ல் ஆரம்பித்து வைத்த இந்திய தேசிய காங்கிரசின் முன்னணி ஆதரவாளர்களில் ஒருவராகவும் நின்றவர் ஜாம்ஷெட்ஜி டாடா.

இந்தியாவின் முதல் எ்கு ஆலை, மகாராஷ்டிரத்தில் நீர்மின்நிலையம், பெங்களூரில் இந்திய அறிவியல் கழகம், தாஜ்மகால் ஐந்து நட்சத்திர விடுதி என்று எதிர்கால டாடா குழுமத்தின் பரந்து பட்ட வர்த்த பேரரசின் அடித்தளங்களை அவர் உருவாக்கினார். இவற்றுக்குத் தேவையான நிலம், இயற்களை வளங்கள், அரசாங்க மானியம், வேண்டிய அனுமதிகள் பெறுவதற்கு அப்போதைய ஆங்கிலேயே காலனிய ஆட்சியாளர்களின் மனம் கோணாமல் நடந்து கொண்டு இந்த 'தேசிய' நிறுவனங்களை கட்டி அமைத்தார்.

'இந்திய தேசிய நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்டது' என்று டாடாவின் வரலாற்றாசிரியர்களால் வியக்கப்படும் டாடா ஸ்டீல் முதலாம் உலகப் போரின் போது ஆங்கிலேய போர் முன்னெடுப்புகளுக்கு உறுதுணையாக வடக்கு ஆப்பிரிக்காவுக்கு தண்டவாளங்கள் அமைக்க எ்கு தயாரித்து அளித்தது.

1916ல் நடந்த பங்குதாரர்கள் கூட்டத்தில், "அமோக லாபம்... ஆரம்ப வடிவமைப்பை விட 30% உற்பத்தி அதிகரிப்பு... தயாராக, வாங்க விரும்பும் சந்தைகள், ஆர்டர் பதிவேடு நிரம்பி வழிகிறது" என்று மகிழ்ச்சியுடன் நிறுவன தலைவர் அறிவிப்பதற்கு உறுதுணையாக ஏகாதிபத்திய பேரழிவு போரை பயன்படுத்திக் கொண்டது இந்த தேசபக்த குழுமம்.

1938ல் பொறுப்பேற்ற ஜேஆர்டி டாடா அடுத்தடுத்து அமைந்த காங்கிரசு 'சோசலிச' உருவாக்கிய தனியார் நிறுவனங்கள் கொள்ளை அடிப்பதற்கான லைசன்ஸ் ராஜ், கோட்டா ராஜ் இவற்றுக்கு ஏற்றபடி டாடா குழும நிறுவனங்களை வளர்த்துச் சென்று தமது முன்னோடிகளின் சீரிய பணிகளை தொடர்ந்தார்.

இப்போதைய தலைவர் ரத்தன் டாடா, நெருக்கி வந்த உலக ஏகாதிபத்தியங்களுக்குத் இந்திய பொருளாதாரம் திறந்து விடப்பட்ட ஆண்டுகளில் நீரா ராடியா போன்ற கார்பொரேட் தரகர்கள், பன்னாட்டு நிதி சூதாட்டம், மெகா ஊழல்கள் என்று டாடா குழும நிறுவனங்களை காலத்துக்கு ஏற்ப வளர்த்தெடுத்தார்.

குழும நிறுவனங்களின் தேசிய பாசாங்குகளை உடைத்து டாடா ஸ்டீலை பிரிட்டனின் கோரஸ் ஸ்டீல் நிறுவனத்தை விழுங்க வைத்து அதை செரிக்க கசாயம் கொடுத்துக் கொண்டிருக்கிறார். டாடா மோட்டாருக்கு பிரிட்டனின் லேண்ட்ரோவர் - ஜாகுவார் என்ற கடப்பாரையை ஊட்டி விட்டு பன்னாட்டு குழுமமாக்கியிருக்கிறார். டிசிஎஸ் என்று அமெரிக்காவுக்கு ஆள் பிடித்துக் கொடுக்கும் நிறுவனத்தையும் வெற்றிகரமாக நடத்தி தகவல் தொழில் நுட்ப புரட்சியிலும் தமக்குரிய கணிசமான பங்கை பிடித்திருக்கிறார்கள்.

ஆங்கிலேய காலனி ஆட்சியாளர்களாயிருந்தாலும், நேருவின் சோசலிச அரசாக இருந்தாலும், 1980களுக்குப் பிறகான உலகமயமாக்கப்பட்ட சூழலாயிருந்தாலும், காலத்திற்கேற்ப தேவைக்கேற்ப தாளம் போட்டு திறமையாக தமது கால் பரப்பி வளர்வதுதான் இவர்களின் சிறப்பு. நேற்று முளைத்த காளான்களாக அம்பானிகளும், மிட்டல்களும் ஊழல்களில் மாட்டி விழித்துக் கொண்டிருக்க அப்படி எல்லாம் சிக்கிக் கொள்ளாமல், சட்டத்தின் வரையறைக்குள் தனது கொள்ளைகளை வைத்துக் கொள்வது அல்லது தமக்கு ஏற்றபடி சட்டங்களை மாற்றி அமைத்துக் கொள்வது போன்ற கார்பொரேட் அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள்.

'காலத்துக்கேற்ப தொழில் முனைவு செய்வதுதான் எங்கள் தர்மம், அந்தந்த கால கட்ட அமைப்புகளுக்குள் திறமையாக செயல்பட்டு நாட்டில் வளங்களை உருவாக்கினோம்' என்பதுதான் டாடா போன்றவர்களின் தத்துவம். இனிய இசையை ஓட விட்டு, நன்கு குளிப்பாட்டி, மஞ்சள் பூசி, மாலை போட்டு தன் கழுத்து அறுக்கப்படுவதை உணராமலேயே ஆட்டின் சங்கை அறுப்பது அவர்களது அணுகுமுறை. அறுபடும் ஆடுகளைப் பற்றிய கவலை அவர்களுக்கு ஏன் இருக்க வேண்டும்?

கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் இழைக்கும் கொடூரங்களை பொருட்படுத்தாமல் வர்த்தகம் செய்யும் இவர்களுக்கும் நாசி ஜெர்மனி அரசாங்கத்துக்கு கம்ப்யூட்டர் தொழில் நுட்பம் வழங்கி ஹோலகாஸ்டுக்கு துணை போன ஐபிஎம் நிறுவனத்துக்கும் என்ன வேறுபாடு!

டாடா குழுமம் போன்ற 'நியாயமான' ஒரு நிறுவனம் 600 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவில் ஆரம்பிக்கப்பட்டிருந்தால் ஆப்பிரிக்காவின் கடற்கரை நாடுகளிலிருந்து கருப்பு இன மக்களைக் கடத்திச் சென்று அமெரிக்காவில் விற்பனை செய்யும் அடிமை வியாபாரத்தின் மூலம் வளம் சேர்க்கத் தயங்கியிருப்பார்களா?

ஞாயிறு, டிசம்பர் 18, 2011

சுவரும் ஒரு கற்பாறையும் - ஆஷிஷ் குமார் சென்


The Wall And A Hard Place ‘Careful what you wish for’: 
Warnings for Pandora’s new haunt 
ASHISH KUMAR SEN

லாஸ்ஏஞ்சலீசுக்கு அருகில் உள்ள பர்பாங்க் பகுதி குடிமக்கள் வரவிருக்கின்ற புதிய பக்கத்து வீட்டுக்காரரை எதிர்த்து போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள்.

ஊழியர்களுக்கு அடிமாட்டு கூலி கொடுப்பது, குறைபாடுள்ள நலத்திட்டங்கள் செயல்படுத்துவது, பக்கத்து வீட்டுக்காரர்களை வேலையிழக்க வைப்பது போன்றவை குறித்து அதன் மீது குற்றம் சாட்டுகிறார்கள். அவர்களின் கோபத்தின் இலக்கு : பெரிய-பெட்டி சில்லறை வணிகர் வால்மார்ட் “வால்மார்ட் இந்த நாட்டில் சில்லறை வணிகமும் உற்பத்தியும் நடைபெறுவதை கெடுத்துக் குட்டிச்சுவராக்கி விட்டவர்கள் என்பதால் அவர்களை நாங்கள் எதிர்க்கிறோம்” என்கிறார் போராட்டத்தின் முன்னணியில் இருக்கும் கேட் நிக்சா.

யாருடைய ஊரிலெல்லாம் வால்மார்ட் கடை திறக்கப்படவிருக்கிறதோ அவர்களுக்கெல்லாம் அவரிடம் ஒரு எச்சரிக்கை இருக்கிறது. “கடுமையாக போராடுங்கள், அல்லது ஊரை விட்டு தொலைந்து போய் விடுங்கள். ஏனென்றால் வால்மார்ட் உங்கள் ஊரையே பாழாக்கி விடப் போகிறது. ”

அமெரிக்காவில் வால்மார்ட் புதிய ஒரு கடை திறக்கத் திட்டமிடும் ஒவ்வொரு சமயமும் இந்த எச்சரிக்கை எழுகிறது. இந்த பெரு வணிக சங்கிலி தொடர் சிறு வணிகர்கள் மீது செலுத்தும் அழிவு பூர்வமான தாக்குதல் எல்லாவற்றையும் விட பெரிய கவலையாக இருக்கிறது. கிராமப்புற சமூகங்களில் சுற்று வட்டாரத்தில் இருந்த சில்லறை வணிகர்களை வால்மார்ட் அழித்தொழித்து விட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

வால்மார்ட்டைப் போல் இல்லாமல், குடும்பங்களால் நடத்தப்படும் கடைகள், தமது வருமானத்தை சமூகத்துக்குள்ளேயே செலவழிக்கிறார்கள். அவர்கள் மூடப்பட நேரிடும் போது மொத்த சமூகமும் பாதிக்கப்படுகிறது. “பொதுவாக, (பெரும்-பெட்டி சில்லறை வணிகர்கள்) சில்லறை விற்பனையை அதிகரிக்கிறார்கள், ஆனால் அது போட்டியிடும் சிறு சில்லறை வணிகர்களை அழிப்பது மூலமாகத்தான் நடக்கிறது,” என்று 'வால்மார்ட் இயக்கம்' பற்றி ஆய்வு செய்த அயோவா மாநில பல்கலைக்கழகத்தின் தலைமை பேராசிரியர் கென்னத் ஈ ஸ்டோன் சொல்கிறார்.

அவுட்லுக் கருத்து கேட்டதற்கு வால் மார்ட் பதில் சொல்லவில்லை. பொதுவாக, பொருளாதார முன்னேற்றத்துக்கு பெரு சில்லறை வணிகர்கள் உதவுவார்கள் என்று தம்பட்டம் அடிக்கப்படுவது கேள்விக்குரியது என்று நிபுணர்கள் சொல்கிறார்கள். சிகாகோவின் மேற்கு பக்கத்தில் வால்மார்ட்டின் தாக்கம் குறித்து இல்லினாய்ஸ் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் டேவிட் மெர்ரிமேன் ஒரு ஆய்வு நடத்தியிருக்கிறார். விற்பனை அல்லது வேலை வாய்ப்பில் எந்த அதிகரிப்பையும் அவர் காணவில்லை. “சமூகத்துக்கு பொருளாதார முன்னேற்ற ஆதாயம் எதுவும் கிடைப்பதை நாங்கள் பார்க்க முடியவில்லை” என்று அவர் சொல்கிறார்.

உருவாக்கப்பட்ட வேலை வாய்ப்புகளின் தன்மையையும் விமர்சிப்பவர்கள் கேள்விக்குரியதாக்குகிறார்கள். “வால்மார்ட், டெஸ்கோ, கேரபோர் போன்ற கார்பொரேட்டுகள் இந்தியாவுக்கு வருவது பற்றிய பரபரப்புகளுக்கிடையே, இந்த நிறுவனங்கள் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் மிகக் கீழ் நிலை வேலை வாய்ப்புகளைத்தான வழங்குகின்றன என்பதை கவனிக்க வேண்டும்” என்று இந்தியா ரிசோர்ஸ் மையத்தின் உலக எதிர்ப்பு இயக்குனரான அமித் ஸ்ரீவத்சவா சொல்கிறார்.

வழங்கும் தொடர் சங்கிலியின் எல்லா கண்ணிகளிலும் ஈடுபடுவதன் மூலம் பெரும்-பெட்டி சில்லறை வணிகர்கள் தமது லாபத்தை அதிகப்படுத்திக் கொள்கின்றனர். வால்மார்ட் தனது பெரிய அளவையும் வாங்கும் திறனையும் பயன்படுத்தி தான் வாங்கும் விவசாய பொருட்களுக்கும் தொழிற்சாலை பொருட்களுக்கும் விலை நிர்ணயிக்கிறது ” என்கிறார் ஸ்ரீவத்சவா. இதன் விளைவாகத்தான் வாங்கும் உற்பத்தியாளர்களை “நசுக்குவதில் " வால்மார்ட் புகழ் பெற்றது. சிறு விவசாயிகள்தான் இழப்புகளை சந்திக்கிறார்கள் என்கிறார் அவர்.

ஆனால், பல உள்ளூர் விவசாயிகள் வால்மார்ட்டின் கடுமையான நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ள விரும்புவதில்லை என்கிறார் ஸ்டோன். பெரும் பெட்டி சில்லறை வணிகர்கள் அளிக்கும் குறைந்த விலைதான் நுகர்வோருக்கு கிடைக்கும் ஆதாயங்களில் முதல் இடம் பிடிக்கிறது. வேட்டையாடும் விலை குறித்த வால்மார்ட்டின் புகழ் பெரிதுபடுத்தப்பட்டது என்று சில பொருளியல் நிபுணர்கள் சொல்கிறார்கள். “நுகர்வோர் தாமாகவேதான் ஏற்கனவே இருக்கும் கடைகளை விட்டு வால்மார்ட்டுக்குப் போகிறார்கள். அதனால் அவர்களுக்கு ஏதோ ஆதாயம் கிடைக்கிறது என்பது தெளிவு” என்று சொல்கிறார் மெர்ரிமேன்.

அமெரிக்காவின் வால்மார்ட் அனுபவங்களிலிருந்து இந்தியா என்ன பாடங்கள் கற்றுக் கொள்ள வேண்டும்? “பெரும்-பெட்டி கடை திறந்ததும் உலகே அழிந்து விடப் போவதில்லை என்று இந்தியா கற்றுக் கொள்ள வேண்டும்" என்கிறார் ஸ்டோன். காலணி அல்லது ஹார்ட்வேர் போன்ற தனிப்பட்ட கவனம் தேவைப்படும் கடைகள் பெரிய கடைகளுடன் இடத்தைப் பகிர்ந்து கொண்டு தாக்குப் பிடிப்பதோடு செழித்து வளரக் கூட முடியும்.

ஐக்கிய உணவு மற்றும் வணிக தொழிலாளர்கள் பன்னாட்டு தொழிற்சங்கத்தின் ஆதரவில் செயல்படும் 'வால்மார்ட்டில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவது' அமைப்பின் பேச்சாளர் பென் வேக்ஸ்மேனின் கண்ணோட்டம் இவ்வளவு உற்சாகமாக இல்லை. “வாங்குபவர்கள்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதுதான் இந்தியாவுக்கான பாடம் என்று நான் நினைக்கிறேன்,” என்று அவர் சொல்கிறார். வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சில்லறை வணிகத் துறையை திறந்து விட்டே தீருவோம் என்று இந்திய அரசாங்கம் அடம் பிடிக்க விரும்பினால், குறைந்தபட்சம் ஊழியர்களின் ஊதியமும் நலத்திட்டங்களும் மாற்ற முடியாத கல்லில் பொறிக்கப்பட்டதாக நிர்ணயிக்கப்பட வேண்டும் என்கிறார் அவர். “இந்தியாவின் சில்லறை வணிகத்தில் எந்த மாதிரியான தரத்தை அமைக்க வேண்டுகிறீர்கள் என்பதற்குத்தான் நாம் வந்து சேருகிறோம்" என்று அவர் சொல்கிறார். “அந்த தரங்களை ஏற்படுத்துவதை வால்மார்ட் கையில் விட்டு விட்டால், அதல பாதாளத்தில்தான் அவை போய் நிற்கும்”