வியாழன், மார்ச் 06, 2008

அதிகம் தேவையில்லை ஜென்டில்மேன்....

மாற்றங்கள் என்பது புரட்டிப் போடும்படியான விளைவுகளை உருவாக்க பெரிய திருப்பங்கள் தேவையில்லை. ஒவ்வொரு கட்டத்திலும், ஒவ்வொரு நாளிலும் ஓரிரு டிகிரிகள் சரி செய்து கொண்டிருந்தால் போதும்.

சரி செய்தலே இல்லாமல் நேர்கோட்டில் போய்க் கொண்டிருந்தால் போய்ச் சேரும் இலக்கும், இது போன்று நுண் மாற்றங்கள் செய்து கொண்டே இருந்தால் அடையும் இலக்கும் பெரிதளவு மாறுபட்டிருக்கும்.

குறிப்பிட்ட இலக்கை அடைய வேண்டுமானால், இந்த சரிபார்த்தல் மிக முக்கியமானது. வாழ்க்கையும் நம்மைச் சூழ்ந்த உலகமும் கடலில் போகும் கப்பல் போன்றவை. கப்பல் ஆடிக் கொண்டே இருக்கும். போன நிமிடத்தில் இருந்த நிலைக்கும் இப்போதைய நிலைக்கும் மாறுதல்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். நான் ஒரு இலக்கைக் குறிவைத்துப் பயணம் செய்ய வேண்டுமானால், கப்பலின் நிலையை அவதானித்து அதன் திசையில் நுண்ணிய மாறுதல்களை செய்து கொண்டே இருக்க வேண்டும்.

ஆரம்பிக்கும் போதே இதுதான் என் முடிவுப் புள்ளி என்று நேர்கோட்டில் இயக்கத்தை அமைத்து விட்டு தூங்கி விட்டால், நேர்கோட்டில் நகரும் கப்பல் நாம் நினைத்த இடத்துக்குப் போகாமல் வேறு எங்கோ போய்ச் சேர்ந்திருக்கும். இடையில் நடுவில் இருந்த பாறை அல்லது குறுக்காக வந்த இன்னொரு கப்பலில் மோதி உடையாமல் தப்பிப் பிழைத்து விட்டால்.

மாற்றம் என்றாலே எல்லோருக்குமே ஒரு பயம் வருகிறது. இன்றைக்கு நாம் செய்வது நமக்குப் பழக்கமானது. இதை விட்டு விட்டு புதியதுக்கு மாறினால் கற்றுக் கொள்ள வேண்டும். அதற்கேற்ப தகவமைத்துக் கொள்ள வேண்டும். அது எல்லாம் கூடுதல் சுமை ஆகி விடும்.

மாற்றம் என்றால் 45 டிகிரியோ, 180 டிகிரியோ திரும்ப வேண்டாம். ஓரிரு டிகிரிகள் திரும்புவது பெருமளவு மாற்றத்தைத் தந்து விடும். ஓரிரு டிகிரிகள் திரும்பினால் நாம் செய்யும் வேலைகளில் பெரிதளவு கற்றுக் கொள்ள எதுவும் இருக்காது. சின்ன சீர்படுத்தல் மட்டுமே இருக்கும்.

ஆனால் விளைவுகளில் பெரிய மாறுதல் இருக்கும்.

2 கருத்துகள்:

வால்பையன் சொன்னது…

சரியாக சொன்னீர்கள்!
அதே போல் திட்டமிடாத செயலும் கண்ணை கட்டி காட்டில் பயணிப்பது போலதான்

வால்பையன்

மா சிவகுமார் சொன்னது…

நிச்சயமாக வால்பையன்,

அன்புடன்,
மா சிவகுமார்