வியாழன், ஆகஸ்ட் 12, 2010

கம்யூனிஸ்ட் தொழிலாளர் செயல்பாட்டுப் பொதுமேடை

நேற்று ஒரு பொதுக்கூட்டத்திற்குப் போயிருந்த போது வினியோகிக்கப்பட்ட பிரசுரத்தில் எழுதியிருந்தது. Communist Workers Platform (CWP) என்ற பெயரில் வெளியாகியிருக்கும் இந்தப் பிரசுரத்தில் "படியுங்கள் மாற்றுக் கருத்து" என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இணையத்தில் தேடினால் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு வலைப்பதிவும் கிடைத்தது.
http://sattavizhippunarvu.blogspot.com/2010/07/cwp.html

==========

நமது நாட்டின் சமூக அமைப்பு முதலாளித்துவம் ஆகும். இங்கு நிலவுவது முதலாளித்துவ லாப நோக்கப் பொருளாதாரம். லாப நோக்கம் உழைப்பவரையும் நாட்டின் வளங்களையும் சுரண்டி தனியார் கொழுக்க வழிவகுத்துக் கொடுக்கிறது. அதிக எண்ணிக்கையில் நமது நாட்டில் உழைப்பாளர் இருப்பது மிகக் குறைந்த கூலி கொடுத்து சுரண்ட முதலாளிகளுக்கு வாய்ப்பு வசதியை ஏற்படுத்தித் தருகிறது, சுரண்டலின் விளைவாக சமூகத்தின் மிகப் பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் வாங்கும் சக்தி சூறையாடப்படுகிறது. அது முதலாளித்துவ பொருளாதாரத்தில் உற்பத்தித் தேக்க நெருக்கடியினை தோற்றுவிக்கிறது.

நமது நாட்டின் அரசு இந்த முதலாளித்துவத்தின் நலன்களுக்காக அடிப்படையில் இருக்கக்கூடிய அரசு. அது உருவாக்கும் திட்டங்கள், கொள்கைகள் அனைத்தும் முதலாளித்துவத்தின் வளர்ச்சிக்கும், பராமரிப்புக்கும் உதவுபவையே. மக்களின் வாங்கும் சக்தி சூறையாடப்படுவதால் உற்பத்திப் பொருள் விற்பனை குறைந்து ஏற்கனவே இருக்கும் தொழிற்சாலைகளே உற்பத்தியை முழுவீச்சில் தொடரமுடியாமல் திணறுகின்றன, இந்நிலையில் குன்றி வரும் முதலீட்டு வாய்ப்புகளை எப்படியாவது முதலாளிகளுக்கு ஏற்படுத்தி தருவதும் அரசின் பணியாக உள்ளது. நெருக்கடியின் சுமை முழுவதையும் உழைக்கும் மக்கள் மீது முதலாளித்துவம் சுமத்துகிறது. அதனை எதிர்த்து கிளம்பும் உழைக்கும் மக்கள் இயக்கங்களை நசுக்குவதும் திசை திருப்புவதும் முதலாளித்துவ அரசின் முக்கிய பணிகளாக உள்ளன.

முதலீட்டு வாய்ப்பை ஏற்படுத்துவதற்காக பொதுநல அரசு என்ற பாவனையில் அரசு அதன் கைவசம் வைத்திருந்த பொது சுகாதாரம், கல்வி போன்றவற்றையும் கூட தனியார் முதலாளிகளுக்கு தாரை வார்த்து கொடுக்கிறது. உழைக்கும் மக்களை கசக்கிப் பிழிந்து பெரும் வரிப்பணத்தை முதலாளிகளுக்கு மானியமாக வழங்குகிறது . அதைக் கொண்டே உழைக்கும் வர்க்க இயக்கத்தை நசுக்கப் பயன்படும் அடக்குமுறை கருவிகளை மென்மேலும் வலிமைப்படுத்துகிறது.

முதலாளித்துவ நெருக்கடி முற்றிவரும் இன்றைய நிலையில் மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஜனநாயக உரிமைகள் பலவும் பறிபோய்க் கொண்டுள்ளன. அமைப்பு வெகு வேகமாக பாசிசத்தை நோக்கிச் சென்று கொண்டுள்ளது.

இவ்வாறு மக்கள் சந்தித்து கொண்டுள்ள பிரச்னைகள் அனைத்தின் ஊற்றுக்கண்ணாக இருக்கக் கூடிய முதலாளித்துவத்தை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்றி உழைக்கும் மக்களின் நலன் பேணும் சோசலிச அமைப்பை நிறுவுவது உணர்வு பெற்ற உழைக்கும் மக்கள் இன்றைய நிலையில் ஆற்ற வேண்டிய வரலாற்றுக் கடமையாகும். அந்த முதலாளித்துவ எதிர்ப்பு சோசலிச சமூக மாற்றத்தை அடிப்படை அரசியல் வழியாகக் கொண்டு உண்மையான சமூக மாற்ற சக்திகள் அனைத்தையும் ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைத்து சமூக மாற்றத் திசைவழியில் செயல்படுவதற்காக உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருவதே கம்யூனிஸ்ட் தொழிலாளர் செயல்பாட்டுப் பொது மேடை (CWP) அமைப்பாகும்.
==========

கருத்துகள் இல்லை: