புதன், நவம்பர் 23, 2011

குடிக்காத 12 மணி நேரம் உழைக்கும் ஆட்டோ ஓட்டுனர்

"பேருந்து கட்டணம் உயர்ந்ததால் உங்களுக்கு வியாபாரம் அதிகரிக்கத்தான் செய்யும். பெரிய அளவில் இல்லா விட்டாலும், மக்கள் ஆட்டோ பிடிக்க யோசிக்கும் தருணங்கள் அதிகமாகும்"

"அப்படியா! எவ்வளவு ஏத்தியிருக்காங்க. காலையில் விலை ஏறியிருக்கு என்று தலைப்புச் செய்தி பார்த்தேன், ஆனா விபரம் தெரியாது."

கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது, இவருக்கு எப்படி விபரம் தெரியாமல் இருக்கிறது.

"கிட்டத்தட்ட இரண்டு மடங்கு ஏறி விட்டதுங்க, வடபழனியிலிருந்து சிறுசேரி செல்ல குளிர் சாதன பேருந்தில் 33 ரூபாய் இருந்தது 50 ரூபாய் ஆகி விட்டது. வேலூருக்கு 40 ரூபாய் இருந்தது 72 ரூபாய் ஆகி விட்டது "
(எக்ஸ்பிரஸ் பேருந்தில் 46லிருந்து 81 ஆக உயர்ந்தது பின்னர் தெரிந்தது)

"ஆமா, வேலூரிலிருந்து எங்க அக்கா பேசினாங்க. எப்போ சென்னை வருகிறீர்கள் என்று கேட்டேன். இப்போ பஸ் கட்டணம் எல்லாம் ஏறி விட்டது. வர முடியாது, குறைந்த பிறகுதான் வருவேன் என்று சொன்னார்."

"நான்கு பேர் கொண்ட குடும்பம் வேலூரிலிருந்து சென்னை வந்தால் போக வர கூடுதல் செலவு 200 ரூபாய் ஆகி விடும். கஷ்டம்தான். உங்க ஆட்டோ சங்கம் எல்லாம் இருக்கிறது, அவர்கள் எல்லாம் இதற்கு போராட வேண்டும். முன்பெல்லாம் ஆட்டோ ஓட்டுனர்கள் நினைத்தா நகரத்தையே ஸ்தம்பிக்க வைக்க முடியும். இப்போ போராட்டங்களை இல்லாம போச்சு. "

"அப்படி யாரும் யோசிக்கிறதில்லைங்க, ஒரு நாள் வண்டி ஓட்டினா வண்டிக்கு வாடகை கட்டலாம், பெட்ரோல் மற்ற செலவு போக வீட்டுக்கு காசு கொண்டு கொடுக்கலாம். ஸ்டிரைக் பண்ணினா அதுக்கு மண் விழுந்து விடும். எங்க சங்கம் இருக்கு, வருஷத்துக்கு ஏதோ சந்தா கட்டுகிறோம் என்று நினைக்கிறேன். அவர்களுக்கு இந்தியா முழுவதும் கிளைகள் உண்டு. அவர்களிடம் சொல்லி இதை எல்லாம் எதிர்த்து போராட்டம் ஏற்பாடு செய்யச் சொல்ல வேண்டும்"

"இப்படியே போய்க் கொண்டிருநால் என்ன ஆகும்? மக்களுக்கு அவங்க வாழ்க்கை நேரடியாக பாதிக்கப்படும் போதுதான் போராடும் எண்ணம் வருகிறது. கூடங்குளத்தில் பாருங்க, மக்களுக்கு உண்மையிலேயே பயம் வந்து விட்டது. நம்ம குழந்தை குட்டிகள், பேரக் குழந்தைகள் வாழ்க்கைக்கு அபாயம் என்று உணர்ந்ததும் தெருவில் இறங்கி போராட ஆரம்பித்து விட்டார்கள். மீனவர்கள் அதிகாலை மீன் பிடிக்கப் போய் விட்டு வந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்கிறார்களாம்"

"அப்படியா அது என்ன போராட்டம்? ஏன் போராடுகிறார்கள்?"

விபரங்கள் சொல்லி விட்டு, "எனக்கு ஆச்சரியமா இருக்கு, நீங்க நாட்டு செய்திகளே தெரியாம இருக்கீங்களே என்று"

"ஆமா சார் எனக்கு நேரமே கிடைப்பதில்லை, 10 மணிக்கு ஆட்டோ எடுத்தா இரவு 10 மணி வரை ஓட்டுவேன். அப்புறம் வீட்டுக்குப் போய் படுத்து தூங்கினா காலையில் 8.30க்குத்தான் எழுந்திருக்க முடியும். அவ்வளவு உடம்பு வலியும் அசதியும் இருக்கும். மற்ற சிலரைப் போல நான் குடிப்பதில்லை. 10 மணிக்கு திரும்பவும் வண்டி எடுக்கணும்.


இரண்டு பசங்க, ஒரு குழந்தை 2ம் வகுப்பு, இன்னொரு குழந்தைக்கு 3 வயது. மனைவி குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள வேலைக்குப் போவதில்லை. நம்ம குடும்பத்தையும் பார்த்துக் கொண்டு, எதிர்காலத்துக்கும் திட்டமிடணும் என்றால் உழைத்தால்தான் ஆகும்.

2ம் வகுப்பு குழந்தைக்கு 1500 ரூபாய் பீஸ் வாங்கினாங்க. போகப் போக அதிகமாகும் என்று தோணுது. ஒரு குழந்தை மட்டும்தான் இருக்கணும் என்று தோன்றுகிறது. அப்போதான் சமாளிக்க முடியும்."

"இந்த கட்டணம் இன்றைய நிலவரத்துக்குக் குறைவுதான். போகப் போக திடீரென்று அரசு உதவு பெறும் பள்ளிகள் இனிமேல் சுயநிதி பள்ளிகளாக மாற வேண்டும் என்று யாராவது சொன்னாலும் சொல்லி விடலாம். அப்போ கட்டணம் எல்லாம் பல மடங்கு ஏறி விடும்"

"ஆமா சார், நினைச்சாலே பயமா இருக்கு. பாடுபட்டு பிழைப்பதில் கஷ்டம் வர வர அதிகமாகிக்கிட்டே போகிறது. நம்ம குழந்தைகளை எந்த மாதிரி உலகத்தில் விட்டு விட்டுப் போகிறோம் என்று நினைத்துப் பார்த்தால் மனம் கலங்குகிறது"

"குளிர் காலம் ஆரம்பித்து விட்டால் மக்கள் வெளியில் வருவது மாலையில் குறைந்து விடும்" என்று அவர் குறிப்பிட்டார்.

"நீங்க எந்த பகுதி"

"மண்ணடி"

"ஓ, மண்ணடியா! இப்போதான் ஓட்ட ஆரம்பிக்கிறீங்களா, இதை முடித்து விட்டு வீட்டுக்குப் போக வேண்டியதுதானா"

"காலையில் இருந்தே ஓட்டுகிறேன். 10 மணிக்கெல்லாம் வீட்டுக்குப் போகணும். கோயம்பேடு போய் போவேன்".

கருத்துகள் இல்லை: