வியாழன், நவம்பர் 03, 2011

ஆன்மீகத்தின் அவசியம் அல்லது இடம்தான் என்ன?

http://www.jeyamohan.in/?p=21829

சிறு வயதில் கடவுள் நம்பிக்கையுடன், 'மாலையில் 6 மணி அடித்தால் விளக்கு வைத்து சாமி பாட்டு படிக்க வேண்டும்' என்ற பக்தி ஒழுக்கத்திலும், ரமண மகரிஷியின் 'நான் யார்' என்ற தியான முறையை கடைப்பிடித்த அப்பாவின் ஆன்மீகத் தேடலின் தடயங்களாக மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி முதல், ராமகிருஷ்ண பரமஹம்சர், ஓஷோ, ஜே கிருஷ்ணமூர்த்தி பற்றிய புத்தகங்கள் வாசிக்கக் கிடைத்த சூழலில் வளர்ந்தவன் நான். பகவத் கீதையின் சுலோகங்களை படிக்க பல முறை முயற்சி செய்ததும், ராஜாஜியின் ராமாயணம்,மகாபாரதத்தை பல முறை படித்ததும் நடந்திருக்கிறது.

கல்லூரியில் படிக்கும் போது ஜே கிருஷ்ணமூர்த்தியின் 'எண்ணங்களின் குவியல்தான் நான்' ஆதலால் அறிந்ததினின்றும் விடுதலை பெற்று வாழ்வதுதான் ஆன்மீக வாழ்க்கை என்று படித்துப் படித்து புரிந்து கொள்ள முயன்றேன். அதன் பிறகு ஓஷோவின் வாழ்க்கையை கொண்டாடும் உரைகளையும், கட்டுரைகளையும், கேள்வி பதில்களையும் படித்து பிரமித்திருக்கிறேன். 

இவை அனைத்திலும் ஊடாக நெருடிய விஷயம், ஆன்மீக அக வாழ்க்கைக்கும், லௌகீக புற வாழ்க்கைக்கும் இடையில் இருக்கும் முரண்பாடு. 

ரமண மகரிஷிதான் மனித வாழ்க்கையின் வழிகாட்டி என்று எடுத்துக் கொண்டால், உலகம் முழுவதும் ஆன்மீகம் பரவும் போது மலையில் குடிசைகளில் எளிமையாக சமைத்து விலங்குகளுடன் வாழ்வதுதான் மிஞ்சுமா என்றும், ஓஷோவின் போதனைகள்தான் ஆன்மீகத்துக்கு இட்டுச் செல்பவை என்று ஏற்றுக் கொண்டால் எல்லோரும் ஆசிரமத்தில் மூன்று வேளை தியானம், ஆனந்த நடனம் என்று வாழ ஆரம்பித்து விட்டால் வெளி உலகில் நாம் பள்ளியில் படிக்கும் அறிவியலுக்கும், நிறுவனத்தில் பயன்படுத்தும் உற்பத்தி இயந்திரங்களுக்கும், இன்று தட்டச்சிக் கொண்டிருக்கும் கணினிகளுக்கும் இடம் இல்லாமல் போய் விடும். ஓஷோவின் ஆசிரமத்திற்கு சாப்பிட உணவு கூட அந்த அமைப்பில் இல்லாதவர்களிடமிருந்துதான் பெற வேண்டியிருக்கிறது (அவர்களும் ஆன்மீக வழியில் இறங்கி விட்டால் என்ன ஆகும்?). 

இதுதான் அடிப்படை உறுத்தல்!

அறிவியலையும் ஆன்மீகத்தையும் ஏதாவது ஒன்றை மட்டும்தான் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கிறது. நாள் முழுவதும் அறிவியல் வழியில் வேலை செய்து விட்டு, மாலையிலும் வார இறுதியிலும் ஆன்மீக வழியில் வாழ்வது வாழ்க்கையை ஒன்றுடன் ஒன்று முரண்பட்ட இரு துருவங்களில் இழுப்பதாகப் பட்டது. 

இயற்கையாகவே ஏதாவது (திரைப்படம் எடுத்தல், மென்பொருள் எழுதுதல், நாற்காலி செய்தல், வண்டி ஓட்டுதல்) புதிது புதிதாக செய்ய வேண்டும் என்று உந்துதலை உணர முடிகிறது. சக மனிதர்களோடு சமூகமாக வாழ்வது இன்னொரு அடிப்படை பண்பாக தோன்றுகிறது. ஆன்மீக வழியில் இந்த இரண்டையுமே மறுக்க வேண்டியிருக்கிறது. 

இப்படி இருக்கையில் ஆன்மீகமா, அறிவியலா என்ற கேள்வி வரும் போது அறிவியல் என்று தேர்ந்தெடுப்பது சரியாகப் படுகிறது. ஆன்மீகத்தின் அவசியம் அல்லது இடம்தான் என்ன?

கருத்துகள் இல்லை: