செவ்வாய், மே 22, 2007

கோவை சந்திப்பு - விடுபட்டவை

கோவை சந்திப்பு பற்றிய இடுகையில் பல விபரங்கள் விட்டுப் போயின. அதற்கு என்னென்ன சாக்கு சொல்லலாம் என்று யோசித்ததில்:
  1. முந்தைய இரவு 10.30க்கு ஏறி, காலை ஐந்து மணிக்கு கண் விழித்து, ஓடும் பேருந்தில் ஐந்தேகால் முதல் ஆறேகால் வரை எழுதியதால் இருக்கலாம்.

  2. கடைசி வரிசையில் 29ம் எண் இருக்கையில் தூக்கித் தூக்கிப் போடத் தூக்கம் சரியாக இல்லாத கலக்கத்தால் இருக்கலாம்.

  3. வலது புறம் 30ம் எண் இருக்கையில் பயணித்த கொஞ்சம் குண்டான இளைஞர், தூக்கத்தில் அரை மணிக்கு ஒரு முறை தனது கனத்த கையை வேகமாக என் தோளில் இறக்கிக் கொடுத்த அதிர்ச்சியில் தூக்கம் தடைப்பட்டுக் கொண்டே இருந்ததால் ஏற்பட்ட சோர்வால் இருக்கலாம்.

  4. இடது புறம் நடைபாதைக்கு அப்பால் இருந்த 27, 28 எண்களில் இருந்து இளம் சகோதரிகளின் இருப்பின் பாதிப்பால் இருக்கலாம்.

  5. பேருந்தில் குலுக்கலில், முன் இருக்கையின் மீது கணினி போய் மோதி உடைந்து விடக் கூடாது என்ற தவிப்பால் இருக்கலாம்.

  6. காலையில் பல் தேய்க்காமலேயே எழுதும் கசப்புணர்வாக இருந்திருக்கலாம். (சிறிலின் பாதிப்போ!)

  7. எதுவும் இல்லை, வயதாகி விட்டது, நினைவாற்றல் குறைந்து வருகிறது என்ற உண்மையாகவும் இருக்கலாம்.
எப்படியோ விட்டுப் போனவைகளில் பல நேற்று மாலையே உறைத்து விட்டது. இன்று காலையில் வினையூக்கியின் பதிவைப் படித்ததும் மீதியும் நினைவுக்கு வந்தது.
  • ஓசை செல்லா
    தங்குவதற்கு ரேட்சன் விடுதியை ஏற்பாடு செய்ததிலிருந்து ஆரம்பித்து இந்தப் பட்டறையை தனியொருவராக திட்டம் வகுத்து ஏற்பாடு செய்ய ஆரம்பித்துக் கடைசி நிமிடத்தில் அம்மை கண்ட காரணத்தால் மூன்று நாட்கள் அலைய முடியாமல், தொலைபேசி மூலமாகவே முடிந்த வரை செய்து வந்திருக்கிறார் செல்லா.

  • காலையில் பல் தேய்க்காமலேயே தொலை படக் காட்சி, ஒலிக் காட்சி மூலமாக வெகு நேரம் உரையாடிய சிறில் அலெக்ஸ்.
    சற்று முன் பதிவைப் பற்றி பல கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். இது போன்று பல்வேறு பகுதிகளிலிருந்து பதிவர்களால் செய்தி பகிர்ந்து கொள்ளப்படும் கூட்டுப் பதிவு இது உலகிலே முதல் முறையாக இருக்கலாம்.

  • காலையில் தலையைக் காட்டி விட்டு போய் விட்ட பதிவர் உதயசெல்வி அவர்கள்

  • எல்லோருக்கும் சாக்லெட்டும், சுகுணா திவாகருக்கு பின்நவீனத்துவ சிற்பமும் வாங்கி வந்திருந்த செந்தழல் ரவி. உள்ளே போட்டிருந்த பனியன் வாசகம் தெரியட்டும் என்று திறந்த சட்டையுடன் உள்ளே அவர் நுழைந்ததுமே அறையில் ஒரு டிகிரி வெப்பம் ஏறியது. ஏற்கனவே புழுக்கம் அதிகமாகத்தான் இருந்தது.

  • செல்லாவும் தானும் எப்படி இணைய உலகில், ஆர்க்குட்டில் அடிபட்டு உதைபட்டு இருந்த காலத்தில் புணர்ச்சி பழகுதல் வேண்டா என்று பார்க்காமலேயே நட்பு ஆரம்பித்த கதையை விவரித்த பாமரன்.

    செல்லாவைப் போல பாமரன் இருக்கிறாரா, பாமரன் போல செல்லா இருக்கிறாரா என்று நினைக்க வைக்கும் அளவுக்கு இரண்டு பேரின் கருத்துக்களும் சொல்லாடல்களும், பேச்சுப் பாணியும் ஒரே மாதிரி இருக்கின்றன.

  • தங்கச்சி குளிக்கத் தடுக்குக் கட்ட வக்கில்ல
    ராமருக்குக் கோயில் கட்ட செங்கல் தூக்கப் போறான்
    என்று முகவரிக் கவிதை சொன்ன பாலபாரதியின் கவிஞர் நண்பர் கோவை முத்து.

  • 'தில்லி முழுவதும் உங்கள் பொருளாதாரக் கட்டுரைகள் பரபரப்பாகப் பேசப் படுகின்றன' என்று முதலில் காலையிலும் (மொத்தம் ஐந்து தமிழ்ப்பதிவர்களிடையே மட்டும்தான் என்று பின்னர் சொன்னார்), மாலையில் அபிஅப்பா தொலைபேசிய போது, என்னிடம் அலைபேசியைக் கொடுக்கும் முன்னர், நான் ஹேன்ட்சம்மாக இருக்கிறேன் என்று அவருக்கும் சொல்லி என் வாழ்க்கையை முழுமை பெற வைத்த சென்ஷி.

  • பத்திரிகை நிருபராக வந்தாலும், பேசப்பட்ட பொருட்களில் உணர்வு பூர்வமாகக் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த இந்து நாளிதழின் சுபா.

  • ஜோயல் ஆன் சாஃப்டுவேர் சுட்டி.
பிற இடுகைகள்
  1. என்னுடையது
  2. செந்தழல் ரவி
  3. வினையூக்கி
  4. வினையூக்கி - 2
  5. சுப்பையா வாத்தியார்
  6. சென்னப்பட்டிணம் - 1, 2, 3
  7. பாலபாரதி
  8. தியாகு
  9. மோகன் தாஸ
  10. முகுந்தராஜ்
  11. சுகுணா திவாகர்
  12. புதிய பாலபாரதி

5 கருத்துகள்:

கவிதா | Kavitha சொன்னது…

முதன் முறையா நகைசுவை உணர்வு சேர்ந்து இருக்கும் பதிவா இதை நான் படிக்கிறேன்..

நல்ல பதிவு, ஆனாலும்

சிவகுமார்ஜி..என்ன ஆச்சி உங்களுக்கு..? சென்ஷி சொன்னதன் விளைவா ??

நல்லா இருக்கு..பயந்துடாதீங்க.. :))

மா சிவகுமார் சொன்னது…

//முதன் முறையா நகைசுவை உணர்வு சேர்ந்து இருக்கும் பதிவா இதை நான் படிக்கிறேன்..//

அப்பாடா,

நீங்க கேட்டபடி நகைச்சுவைப் பதிவும் முயன்றாகி விட்டது. யாரும் அரிவாளைத் தூக்காமல் இருந்தால் சரிதான் :-)

அன்புடன்,

மா சிவகுமார்

- யெஸ்.பாலபாரதி சொன்னது…

அந்த கவிதை ந.முத்துவின் "இருக்கு" தொகுப்பில் வந்தவை. அதை இங்கே படிக்கலாம்.

Mani - மணிமொழியன் சொன்னது…

Hello Sir, pls see my write-up on Kovai meet.

http://labtap.blogspot.com/2007/05/blog-post_22.html

மா சிவகுமார் சொன்னது…

நன்றி பாலா,

மணிமொழியன்.

உங்கள் பதிவை எட்டிப் பார்த்தது நன்றாக இருக்கிறது. தொடர்ந்து உங்கள் கவிதைகளைப் படிக்க ஆர்வம்.

அன்புடன்,

மா சிவகுமார்