புதன், ஜூலை 18, 2007

குழம்பில் புளி ஊற்றுவது எதுக்கு?

புளிப்பு சுவை என்ற வெளிப்படையான விடை ஒரு புறம் இருக்க, புளி சேர்ப்பதால் என்ன வேதியியல் மாற்றம் நடக்கிறது என்று பார்க்கலாம்.

தூய்மையான தண்ணீரில் அமிலத் தன்மையும் காரத்தன்மையும் சமநிலையில் இருக்கும். உயிரினங்கள் வாழ்ந்து தழைக்க இந்த சமச் சூழல் தேவை. புளியில் அமிலத் தன்மை இருக்கிறது. புளி சேர்த்தக் குழம்பில் அமிலக் காரச் சமநிலை மாறி, அமிலத் தன்மை மிஞ்சி விடும். இதனால் உணவுப் பொருளில் வளர்ந்து பெருகி குழம்பைக் கெட்டுப் போக வைக்கக் கூடிய நுண்ணுயிரிகளின் செயல்பாடு குறைந்து குழம்பு அதிகமான நேரம் கெட்டுப் போகாமல் இருக்கும்.

குளிர் சாதனப் பெட்டிகள் இல்லாத காலங்களில் செய்த உணவை முடிந்த வரை கெட்டுப் போகாமல் காத்துக் கொள்ள இந்த புளி சேர்ப்பது பயன்பட்டது. சமைத்த மீதத்தை ஆறியதும் குளிரப் பெட்டியில் வைத்துக் கொள்ளும் வசதி இருக்கும் போது இந்தக் காரணம் அடிபட்டுப் போகிறது.

அடுத்த கேள்வி:
சாப்பிடும் போது குளிர்ந்த நீர் குடிக்கலாமா?

19 கருத்துகள்:

வெங்கட்ராமன் சொன்னது…

நம்ம ஆளுங்க எவ்வளவு விவரமா இருந்திருக்காங்க பாருங்க. . . .
பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

ரவி சொன்னது…

nalla vidayam...good info...

dondu(#11168674346665545885) சொன்னது…

எல்லாம் சரிதான். கிருமிகள் அழிக்க மட்டும்தானா புளி? அறுசுவைகளுள் புளிப்பும் ஒன்றுதானே. அதற்கும் காரணம் வயிற்றில் ஜீரண சக்திக்கு அமிலம் தேவை என்ற அடிப்படையில்தானே புளி சேர்க்கிறோம். குளிர்ப்பெட்டி வந்து வெளியில் நிலைமை மாறினாலும் வயிறு அப்படியேதானே உள்ளது?

அன்புடன்,
டோண்டு ராகவன்

வவ்வால் சொன்னது…

மா.சி,

சுவைக்காக மட்டும் அல்லாமல் ,புளிக்கு மருத்துவ குணம் உண்டு அத்னால் தான் அதனை உணவில் சேர்க்கிறார்கள்.அதில் டார்டாரிக் என்ற அமினோ அமிலம் உள்ளது , மேலும் தாமிர சத்தும் உள்ளது. பாரம்பரிய இந்திய உணவில் சேர்க்கப்படும் பொருட்கள் அனைத்திற்கும் இப்படி ஏதேனும் ஒரு காரணம் இருக்கும்.

பேதியானால் நிறுத்த புளி உதவும். அதே சமயம் அதிக அளவு புளி சேர்த்துகொண்டால் ரத்தம் சுண்டி விடும் என சித்த மருத்துவம் கூறுகிறது. எனவே தான் பத்திய உணவில் புளி சேர்க்க கூடாது என்பார்கள்.

ஒரு நாட்டு வைத்தியம் , ஒரு சிறிய உருண்டை புளி அதே அளவு சுண்ணாம்பும் சேர்த்து நன்கு பிசைந்து உடனே தேள் கடித்த இடத்தில் வைத்தால் விஷம் இறங்கிவிடும்.

புளிக்கு விஷமுறிவு குணம் உண்டு எனவே அது மேலும் பல விஷக்கடி, மற்றும் மருத்துவத்திற்கும் பயன்படுகிறது.

அயோடின் நமக்கு தேவை ஆனால் சில இடங்களில் அயோடின், ஃபுளோரின் நிலத்தடி நீரில் அதிகம் இருக்கும்(இவை அதிகம் ஆனால் எலும்பு பாதிக்கப்படும், முன்கழுத்து கழலை நோய் வரும்) அதனை நீக்க சிறு உருண்டை புளியை நீரில் போட்டால் போதும் அதனை உருஞ்சி விடும்.

புளியங்கொட்டை நெசவு தொழில், தோல் தொழில், காகித தொழிலில் பயன்படுகிறது. வெடிமருந்தும் தயாரிக்கலாம்!

மாசிலா சொன்னது…

இதுவரை கேள்வியே படாத செய்தி. சுவைக்காக மட்டுமே புளி உபயோகத்தில் இருந்து வந்தது எனதான் நம்பியிருந்தேன். நீங்கள் வைக்கும் கூற்றுக்கு ஆதாரம் உண்டா, மா.சி? என்னை பொறுத்த வரை, அறுசுவை அடிப்படையிலேயே இதை உணவில் சேர்த்திருப்பார்களோ என நினைக்கிறேன். புளிக்கு இரத்தத்தை சுண்ட வைக்கும் தகுதியும் உண்டெனெ கேட்டதுண்டு.

பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி மா.சி.

வவ்வால் சொன்னது…

மா.சி ,
உணவு உண்ணும் முன்பு சிறிது தண்ணீர் குடிக்கலாம் ,அதனால் உணவுக் குழலின் நெகிழும் தன்மை அதிகரித்து எளிதாக உள்தள்ளும். ஆனால் ஒவ்வொரு கவளத்திற்கும் கொஞ்சம் நீர்குடிக்க கூடாது, வாயு கோளாறு தான் வரும்.(வயிற்றில் உணவு ,நீர்,உணவு ..நீர் என ஒரு அடுக்கு உருவாகி , அஜீரணக்கோளாரு வரும்)

மிதமான குளிர்ந்த நீர்க்குடிக்கலாம், ரொம்பவும் குளிர்ந்த நீர்குடித்தால் உண்வுகுழல் சுருங்கும் என நினைக்கிறேன்.

நீரை மெல்லவேண்டும் , உணவை குடிக்க வேண்டும் என்று பழமொழி உண்டு... விளக்கம் அதிலேயே உள்ளது. நீரை நின்று கொண்டு குடிக்க கூடாது , அமர்ந்த நிலையில் குடிக்க வேண்டும் என்றும் சொல்வார்கள். அப்படி குடித்தால் குடலுக்கு நேராக நீர் செல்லும் அது உடலுக்கு ஆகாது என்கிறார்கள் காரணம் தெரிந்தால் சொல்லுங்கள்

மாசிலா சொன்னது…

//நீரை மெல்லவேண்டும் , உணவை குடிக்க வேண்டும் என்று பழமொழி உண்டு... விளக்கம் அதிலேயே உள்ளது.// அருமை வவ்வால். இதையும் நான் கேள்விப்பட்டதே கிடையாது.

பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பர்களே.

சேதுக்கரசி சொன்னது…

தகவலுக்கு நன்றி.. புளி சேர்க்காத உணவை உடனடியாகக் குளிர்சாதனப் பெட்டியில் வைப்பார்கள் என்று கவனித்திருக்கிறேன்.. புளி சேர்த்த உணவு அதிக நாள் தாங்கும்.

சரி, அதன் அமிலத்தன்மையால் புளி நல்லதல்ல என்றும் கூறுகிறார்களே.. புளிக்கு பதிலாக சிலர் எலுமிச்சை சாறு பயன்படுத்துவர்.

பெயரில்லா சொன்னது…

\\சுவைக்காக மட்டும் அல்லாமல் ,புளிக்கு மருத்துவ குணம் உண்டு அத்னால் தான் அதனை உணவில் சேர்க்கிறார்கள்.அதில் டார்டாரிக் என்ற அமினோ அமிலம் உள்ளது //

Tartaric acid is not an amino acid. Amino acids are nitrogen containing organic acids and the simplest amino acid is Glycine.

பெயரில்லா சொன்னது…

Tamarind is not native to India. It came from Africa. Prior to its arrival in India we used lemon (still being used) for the sour taste.
Similarly, chillies came from South America to replace black pepper.

- Ravi

வவ்வால் சொன்னது…

அனானி ,

டார்டாரிக் அமிலம் அமினோ குருப் இல்லை தான் ,தவறாகப்போட்டுவிட்டேன் , எல்லாம் பழைய நினைவுகளில் இருந்து போடுவது தான் ,,, மாறிவிட்டது மற்றபடி இதர தகவல்கள் எல்லாம் சரியாக உள்ளது என்றே நினைக்கிறேன் ,

புளிக்கு ஈஸ்ட் ஆப்ரிகா தாயகமாக இருந்தாலும் பலகாலமாக பெருமளவு இந்தியாவில் விளைவிக்கப்படுகிறது,அதனால் தான் "Tamarindus indica" என்று பெயர் வந்துள்ளது. மிலகாய் ரொம்ப சமிபத்திய வரவு ... வாஸ்கோட காம தான் இங்கு கொண்டு வந்தது என நினைக்கிறேன்.

மா சிவகுமார் சொன்னது…

நன்றி வெங்கட்ராமன், செந்தழல் ரவி.

டோண்டு சார்,

கிருமிகளை அழிக்க என்று சொல்வதை விட வளர விடாமல் தடுக்க என்று சொல்லலாம். வயிற்றில் ஏற்கனவே மிக வலிமையான ஒரு அமிலம் இருக்கிறது. அதற்குத் துணை சேர்க்க வெளியிலிருந்து அமிலம் தேவையா என்று தெரியவில்லை.

குளிர் நீர் குறித்து என்னுடைய புரிதலை அடுத்த இடுகையாக போடுகிறேன்.

வவ்வால்,

தகவல்களுக்கு நன்றி. டார்ட்டாரிக் அமிலம் ஒரு வலிமை குறைந்த அமிலம்.

மாசிலா,

//நீங்கள் வைக்கும் கூற்றுக்கு ஆதாரம் உண்டா, மா.சி?/

என்னுடைய அனுபவம் மட்டும்தான் இதை எழுதத் தூண்டுதல், ஒரே பக்குவத்தில் புளி சேர்த்து செய்த குழம்பு இரண்டு நாட்கள் கெடாமல் இருக்கிறது. புளிக்குப் பதிலாக வெறும் தக்காளி மட்டும் போட்டு வைத்தது கெட்டுப் போகிறது.

நம்ம ஊரில் பாட்டிகள், பெரியவர்கள் சொல்லும் உண்மைகளைப் பற்றிப் பேசலாம் என்றுதான் இது போன்ற தகவல்களைப் பற்றி எழுத எண்ணம்.

வவ்வால்,

//நீரை மெல்லவேண்டும் , உணவை குடிக்க வேண்டும் என்று பழமொழி உண்டு...//

அதாவது எதையும் அவசர அவசரமாக விழுங்காமல் ஆற அமரச் சவைத்து ருசித்துச் சாப்பிட வேண்டும் என்றுதானே பொருள். ஓஷோ இதைப் பற்றி நிறைய சொல்லுவார்.

//மிதமான குளிர்ந்த நீர்க்குடிக்கலாம், ரொம்பவும் குளிர்ந்த நீர்குடித்தால் உண்வுகுழல் சுருங்கும் என நினைக்கிறேன்.//

இன்னொரு வேதி வினைக் காரணமும் இருக்கிறது என்று தோன்றுகிறது.

வாங்க சேதுக்கரசி,

//புளி சேர்க்காத உணவை உடனடியாகக் குளிர்சாதனப் பெட்டியில் வைப்பார்கள் என்று கவனித்திருக்கிறேன்.. புளி சேர்த்த உணவு அதிக நாள் தாங்கும்.//

அதே அதே! :-)

//அதன் அமிலத்தன்மையால் புளி நல்லதல்ல என்றும் கூறுகிறார்களே.. புளிக்கு பதிலாக சிலர் எலுமிச்சை சாறு பயன்படுத்துவர்.//

அதுவும் உண்மைதான். அமிலத் தொந்தரவு இருப்பவர்கள் புளியைத் தவிர்ப்பது நல்லதாகத்தான் இருக்கும்.

தகவல்களுக்கு நன்றி அனானி, ரவி.

அன்புடன்,

மா சிவகுமார்

வவ்வால் சொன்னது…

maa.si,

உணவே மருந்து என்ற நூலில் குளிர்ந்த நீருக்கு அமில தண்மையும் , வெண்ணீருக்கு காரத்தன்மையும் இருக்கும் என்று போட்டுள்ளார்கள், cold water in அந்த வேதித்தன்மை செரிமானத்திற்கு பாதகமாக இருக்கலாம்!

மேலும் குறைந்த வெப்பம் வேதிவினை திறனைக்குறைக்கும் என்பார்கள். ரம்மில் கூட சுடு நீர் கலந்து குடித்தால் அதிகம் கிக் வரும் என்று ஒரு அனுபவஸ்தர் சொல்லக்கேட்டுள்ளேன்!

புளியில் இருக்கும் முக்கியமான அமிலம் டார்டாரிக் தான் வலிமை குறைவாக இருந்தாலும் அது தான் காரணமாக இருக்க வேண்டும். தக்காளியில் பொட்டாசியம் டார்டேட் இருக்கிறது என நினைக்கிறேன். அதிகம் தக்காளி சேர்த்தால் சிறுநீரகத்தில் கல் உருவாகும் அபாயம் உள்ளது!

புளிக்கு பதில் வெறும் எலுமிச்சைப்போட்டு மீன் குழம்பு வைத்தால் சரி படுமா?

Koothanalluran சொன்னது…

அரபியில் 'தமர் என்றால் பழம் , அரேபியர்கள் புளியை Tamar Al Hind என்பார்கள் இந்தியாவில் இருந்து வந்த பழம் எனும் பொருளில், Tamarind என எப்படி வந்தது என ஆராய வேண்டும்

நின்று கொண்டு தண்ணீர் குடித்தால் hernia வரவதற்கு வாய்ப்பு உண்டென படித்ததாக நினைவு.

Chandravathanaa சொன்னது…

(பழப்)புளி போட்டு வைக்கும் கறிகள் விரைவில் பழுதடைய மாட்டா, என்பதை நான் அறிந்து வைத்திருக்கிறேன். அந்தப் புளியில் இத்தனை விடயங்கள் உண்டென்பதை இப்போதுதான் அறிகிறேன்.

எங்கள் ஊரில் குழந்தை பெற்றெடுத்த பெண்களுக்கு முதல் 30நாட்களுக்கும் பழப்புளி விட்ட கறியே வைத்துக் கொடுப்பார்கள். காரணம் புளிக்கு வயிற்றுப்புண்ணைமாற்றும் தன்மை உள்ளது, என்பார்கள். நானும் அதையே சாப்பிட்டேன்.

இதே நேரம் சிலருக்கு அதிக பழப்புளி விட்ட கறிகளினால் வயிற்றுப்போக்கு ஏற்படுவதையும் அறிந்திருக்கிறேன். இவர்கள் ஏற்கெனவே குடல் பலவீனமான, அமிலம் ஒத்துவராத ஆட்களாக இருப்பவர்கள்.

வவ்வால் கேட்டது போல மீனுக்கு தேசிப்புளி சுவைக்காது. பழப்புளியில்தான் பழகி விட்டோம். அது ஒரு காரணமாக இருக்கலாம். ஜேர்மனியர்கள் மீனுக்கு தேசிப்புளி விட்டுத்தான் சமைக்கிறார்கள்.

விற்றமின்-சி இரும்புச்சத்தை உடலில் சேரப் பண்ணுவதற்கு உதவுகிறது. அதனால் இறைச்சிக்கு தேசிப்புளி விட்டுச் சமைக்கிறார்கள். (வெங்கட்ராமன் சொன்ன எம்மவர்களின் விவரமான தன்மை. இதுதான். நான் பலமுறை வியந்திருக்கிறேன். எப்படி இதையெல்லாம் கண்டு பிடித்தார்கள் என்று யோசித்திருக்கிறேன்.) இதே இறைச்சிக்கு பழப்புளியை விட்டால் சுவை மாறி விடும். கீரைக்கும் தேசிப்புளி விடுவதற்குக் காரணம் அதிலுள்ள இரும்புச்சத்து முழுவதுமாக உடம்பில் சேர்ந்து விட வேண்டும் என்பது.

இந்த தேசிப்புளியை விட்டுச் சமைக்கும் கறிகள் மிக வேகமாகப் பழுதாகி விடுகின்றன.

என்ன இருந்தாலும் சில கறிகளுக்கு தேசிப்புளி என்றும் சிலதுக்கு பழப்புளி என்றும் வைத்திருக்கின்றோம். மாறிச் சமைத்தால் சுவைப்பதில்லை. இது எமது பழக்கத்தினால் இருக்கலாம்.

இவையெல்லாம் எனது அனுபவங்கள் மட்டுமே.

மீன்குழம்புக்கு பழப்புளி விட்டுச் சமைப்பது போல வருமா?

மா சிவகுமார் சொன்னது…

பயனுள்ள விபரங்களுக்கு நன்றி வவ்வால், சந்திரவதனா, ஷாபூ.

அன்புடன்,

மா சிவகுமார்

வவ்வால் சொன்னது…

//அரேபியர்கள் புளியை Tamar Al Hind என்பார்கள் இந்தியாவில் இருந்து வந்த பழம் எனும் பொருளில், Tamarind என எப்படி வந்தது என ஆராய வேண்டும்//

"tamar சேர்ந்து hindi = tamarind ", அதுவும் நீங்கள் சொன்னதும் ஒன்று தான் அப்படி தான் டாமரின்ட் என்று வந்தது

காட்டாறு சொன்னது…

பயனுள்ள பகுதி! மேலும் எழுதவும்.

மா சிவகுமார் சொன்னது…

நன்றி காட்டாறு.

அன்புடன்,
மா சிவகுமார்