வியாழன், பிப்ரவரி 19, 2009

தருமங்கள்

'சத்தியம் ராமலிங்க ராஜூ செய்வது எதுவும் வேறு எந்த நிறுவனத்திலும் இல்லாதது கிடையாது. சமூகத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்தாக்கங்கள் தவறு செய்வதை நியாயப்படுத்தும் போது எந்த அளவில் நிறுத்திக் கொள்கிறார்கள் என்பது மட்டும்தான் பார்க்க முடியும்'

'நீங்கள் ______ நிறுவனத்தில் வேலை பார்த்திருக்கிறீர்கள். அங்கு ஒழுக்க நெறிகள் எப்படி இருந்தது?'

'குழுமத்தின் தலைமையிடமிருந்து ஒழுங்கு தவறாமல், சட்டத்துக்குட்பட்டுதான் நடக்க வேண்டும் என்று தெளிவான வழிநடத்தல் இருக்கிறது. ஆனால் தனித்தனி நிறுவன தலைவர்கள் இதைக் கடைபிடிக்கிறார்களா என்றால் கிடையாது. நிறுவனத் தலைவரகளும், துறை தலைவர்களும் பல சட்டங்களை மீறிக் கொண்டுதான் இருந்தார்கள். என்ன, தலைமை அலுவலகத்துக்கு தெரிந்து விடாதபடி பார்த்துக் கொள்வார்கள் அவ்வளவுதான். கண்காணிக்கும் தணிக்கைக் குழுக்களுக்கெல்லாம் போக்கு காட்டுவது என்பது பெரிய சிக்கலே இல்லை'

அவர்களே அப்படி என்றால், நிறுவனத் தலைமையே எப்படி வேண்டுமானாலும் பணம் சம்பாதிக்க வேண்டும், எப்படி வேண்டுமானாலும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று செயல்படும் நிறுவனங்களில் எப்படி இருக்கும் என்பதைக் கற்பனை செய்து பார்த்துக் கொள்ளலாம்.'

'ஆமாமா, பொதுவா எல்லா நிறுவனங்களிலும் அப்படித்தான் நடக்கிறது. நீங்கள் வருமான வரிக்கு சரியான கணக்கைக் காட்டுகிறீர்களா என்ன!, யாருமே காட்டுவது கிடையாது. நான் கூட வருமான வரியைப் பொறுத்த வரை முழு வருமானத்தையும் காட்டுவதில்லை. சரி, தப்பு என்று கிடையாது, எது நடைமுறைக்குப் பொருந்தும் என்றுதான் பார்க்க வேண்டியிருக்கிறது. எல்லாவற்றையும் சரியாகத்தான் செய்வேன் என்று இறங்கி விட்டால் உங்கள் மனைவி குழந்தைகள் கூட உங்களை மதிக்க மாட்டார்கள், ஒதுங்கி விடுவார்கள்'

பதில் சொல்லவில்லை. 'சத்தியம் நிறுவனத்தில் நடக்கும் தணிக்கை நடவடிக்கைகள் போல _________ நிறுவனத்தில் நடத்தினால் என்னென்ன பூதங்கள் வெளி வரும் என்பது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். பொருளாதார சுணக்கம் வந்ததன் தாக்கத்தில்தான் சத்தியத்தின் தகிடுதத்தங்கள் வெளியில் வந்தன.'

'பொருளாதார நெருக்கடி என்று ஆட்குறைப்பு செய்வது புத்திசாலித்தனம் ஆகாது என்பது என் கருத்து. சரக்கு கையிருப்பைக் குறையுங்கள், மற்ற செலவினங்களைக் கட்டுப்படுத்துங்கள், விற்பனைத் தரத்தை மேம்படுத்துங்கள். ஆனால் ஆட்களைப் பொறுத்த வரை இன்னும் சிறப்பாகச் செயல்பட்டு திறமைகளை மேம்படுத்தி கூடுதல் வியாபரம் பெற முயற்சிப்பதுதானே புத்திசாலித்தனம்'

'ஆமாமா, எதுக்கு ஆள் எடுத்தோம் என்று தெரியாமல் எல்லோரும் எடுத்தார்கள். இப்போ எல்லோரும் ஆட்குறைப்பு செய்கிறார்கள். ஆனால் அது சரி கிடையாது. நாம் பணம் சம்பாதித்தோம், சம்பாதிப்பது குறைந்து விடக் கூடாது என்று ஆட்களைக் குறைப்பது நியாயம் கிடையாதுதான். ஆனால் அப்படித்தான் எல்லோரும் செய்கிறார்கள்.'

2 கருத்துகள்:

Unknown சொன்னது…

//'பொருளாதார நெருக்கடி என்று ஆட்குறைப்பு செய்வது புத்திசாலித்தனம் ஆகாது என்பது என் கருத்து. சரக்கு கையிருப்பைக் குறையுங்கள், மற்ற செலவினங்களைக் கட்டுப்படுத்துங்கள், விற்பனைத் தரத்தை மேம்படுத்துங்கள். ஆனால் ஆட்களைப் பொறுத்த வரை இன்னும் சிறப்பாகச் செயல்பட்டு திறமைகளை மேம்படுத்தி கூடுதல் வியாபரம் பெற முயற்சிப்பதுதானே புத்திசாலித்தனம்'//

Doesn't make business sense sivakumar.

எந்தெந்த வழிகளில் எல்லாம் செலவை குறைக்க முடியுமோ அந்தந்த வழிகளில் எல்லாம் செலவை குறைக்க வேண்டும்.சில அலுவலகங்களை,தொழிற்சாலைகளை மூடும்போது அதில் பணியாற்றியவர்களை வீட்டுக்கு அனுப்பித்தான் ஆகவேண்டி இருக்கிறது.

வேலை கொடுப்பதற்காக யாரும் தொழிற்சாலை நடத்துவதில்லை.லாபம் சம்பாதிக்கத்தான் நடத்துகிறார்கள்

மா சிவகுமார் சொன்னது…

வணக்கம் செல்வன்,

லாபம் சம்பாதிப்பது மட்டும் வாழ்க்கையின் நோக்கம் என்று வைத்துக் கொண்டாலும், அதற்கு சக மனிதர்களின் கூட்டுழைப்புதான் ஆதாரம் என்று புரிந்து கொண்டால், இது போல ஆட்குறைப்புக்கான அடிப்படை அசைந்து போகும்.

வேலைக்கு எடுக்கும் போது திறமையை மதிப்பிட்டுதானே எடுக்கிறோம். அதில் தவறுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கலாம். அதை உணர்ந்ததும், திறமை குறைவு அல்லது சாதிப்பு குறைவு என்ற அடிப்படையில் வேறு வேலை பார்த்துக் கொள்ளச் சொல்லலாம்.

ஆனால், பொருளாதார நிலை நலியும் போது ஒட்டு மொத்தமாக ஆட்குறைப்பு செய்யும் போது அது நிறுவனத்தை நடத்திய தலைமையிலிருந்துதானே ஆரம்பிக்க வேண்டும்.

அன்புடன்,
மா சிவகுமார்