ஞாயிறு, டிசம்பர் 18, 2011

கருப்புப் பணம்


கருப்புப் பணம் என்றால் என்ன? 

அரசாங்க சட்ட திட்டங்களுக்கு வெளியில் கணக்கில் வராமல் புழங்கும் பணம் கருப்புப் பணம் என்று வரையறுத்துக் கொள்ளலாம்.

அரசாங்க சட்ட திட்டங்களுக்கு வெளியில் எப்படி பணம் புழங்குகிறது? 

வருமான வரி கட்டுவதைத் தவிர்க்க, வருமானத்தை கணக்கில் காட்டாமல் தனிக் கணக்கில் எழுதிக் கொள்வார்கள். கணக்கில் காட்டும் வருமானத்துக்கு வரி கட்டினால் போதும். தனிக்கணக்கில் சேரும் பணம் கருப்புப் பணம்.

ஒரு நிறுவனம் முதல் 10 ஆண்டுகளுக்கு மத்திய விற்பனை வரி கிடையாது என்ற சலுகையுடன் நடத்தப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். வாடிக்கையாளர்களுக்கு இன்வாய்ஸ் செய்யும் போது பரஸ்பரம் ஒத்துக் கொண்ட விலைக்கு மேல் விற்பனை வரி என்று குறிப்பிட்டு வசூலித்து கொள்கிறார்கள். அரசாங்கத்துக்குக் கட்டுவதில்லை.

'யாரும் கண்டு கொள்ளப் போதவில்லை, அப்படியே யாராவது விற்பனை வரி துறையிலிருந்து விசாரிக்க வந்தால் அவருக்குக் கொஞ்சம் பணம் கொடுத்து சரி கட்டிக் கொள்ளலாம். மாதா மாதம் 1 லட்சம் ரூபாய் கிடைக்கும் போது எப்போதாவது அவருக்கு 50,000 கொடுத்தால் லாபம்தானே!'

ஆண்டுக்கு சுமார் 100 கோடி ரூபாய் ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தின் நிதித்துறை தலைவர் 'ஏற்றுமதி வருமானத்துக்கு வருமான வரி இருக்கு. 33% வரி கட்டணும். நாம எவ்வளவு லாபம் காட்டுகிறோமோ அதில் 33% வருமான வரியாக கட்ட வேண்டியதுதான்' என்று சொன்னார். 'நாம் எவ்வளவு லாபம் காட்டுகிறோமோ' என்பதுதான் இங்கு குறித்துக் கொள்ள வேண்டியது. லாபத்திற்கு வரி இல்லை, 'காட்டும்' லாபத்துக்குதான் வரி.

இன்னொரு நிறுவனத்துக்கு ஆண்டுக்கு சில கோடி ரூபாய் வருமானம் இருக்கும். உரிமையாளருக்கு அக்கவுண்டன்ட் என்ன லாபம் காட்டுகிறார் என்றே தெரியாது. 'ஆண்டு இறுதியில் இவ்வளவு லாபம் காட்டலாமா என்று கேட்பார், சரி என்று சொன்னால் அதை வைத்து கணக்கை முடித்து உரிய வரி கட்டி விடுவார்.'

சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களிலேயே இப்படி என்றால் பெரிய நிறுவனங்களில் பல லட்ச ரூபாய் சம்பளத்துக்கு சிஏக்களையும் வக்கீல்களையும் வைத்துக் கொண்டு எவ்வளவு தில்லாலங்கடி செய்ய முடியும் என்று நினைத்துப் பார்க்க வேண்டும்.

இது ஏன் நடக்க வேண்டும்? ஒருவர் நேர்மையாக தொழில் செய்ய முடியாதா? எல்லோரும் ஒழுங்காக வரி கட்டி விட்டால் பிரச்சனை இல்லைதானே!

இது கைதிகளின் சிக்கல் என்ற prisoner's dilemmaவுடன் தொடர்புடையது.

மென்பொருள் நிறுவனம் A என்று வைத்துக் கொள்வோம். மென்பொருள் செய்து அதை சந்தையில் விற்க போட்டி நிறுவனம் B என்று வைத்துக் கொள்வோம்.

நவீன முதலாளித்துவ பொருளாதார கோட்பாடுகளின் தந்தை எனப் போற்றப்படும் ஆதம் ஸ்மித் 'ஒவ்வொரு மனிதனும் தனது சுயநலத்தை நிறைவேற்றிக் கொள்ளும் போது, கண்ணுக்குத் தெரியாத கை ஒன்று சமூகத்தின் தேவைகளை நிறைவேற்றி வைத்து விடுகிறது' என்று அடிப்படையை வரையறுக்கிறார்.

'ஒவ்வொரு மனிதரும், ஒவ்வொரு நிறுவனமும் தம்மால் முடிந்த வரை தமது லாபத்தை வருமானத்தை அதிகப்படுத்திக் கொள்வதுதான் நாடு முழுவதும் முன்னேறுவதற்கான வழி' என்றுதான் சொல்லித் தருகிறார்கள்.

B நிறுவனத்தை நடத்துபவர்கள் நேர்மையாக லாபம் கணக்கிட்டு வரி கட்டுகிறார்கள் என்றும் A நிறுவனத்தினர் செலவைக் கூட்டிக் காண்பித்து, வரவைக் குறைத்து காண்பித்து குறைந்த லாபத்துக்குத்தான் வரி கட்டுகிறார்கள் என்றும் வைத்துக் கொள்வோம்.

இதன் மூலம் A நிறுவனத்திடம் அதிக பணம் சேர்ந்து விடும். அதை

1. வாடிக்கையாளருக்கு விலை குறைத்து விற்க பயன்படுத்தலாம் - இதனால் போட்டியாளரை விட்டு எல்லோரும் விலகி A நிறுவனத்திடம் வந்து விடுவார்கள்.
2. ஊழியர்களுக்கு கூடுதல் சம்பளம் + மற்ற சப்ளையர்களுக்கு கூடுதல் விலை கொடுக்கப் பயன்படுத்தலாம் - இதன் மூலம் போட்டியாளர்களின் ஊழியர்களும் சப்ளையர்களும் அவரை விட்டு A நிறுவனத்திடம் வந்து விடுவார்.
3. மூன்றாவதாக, இப்படி மிச்சம் பிடித்த பணத்தை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு மூலதனமாக பயன்படுத்தலாம்

போட்டியாளர் நிறுவனம் B சிறிது காலத்தில் மூடப்பட்டு விடும்.

டார்வினின் பரிணாம வளர்ச்சி கோட்பாடான survival of the fittestபடி செயல்படும் சந்தை பொருளாதாரத்தில் A நிறுவனம்தான் fit ஆக இருக்கும். யார் ஆகக் கூடுதல் பணத்தை மிச்சம் பிடிக்கிறார்களோ அந்த வகை நிறுவனங்கள் மட்டும் சந்தையில் நிற்க நேர்மையான நிறுவனங்கள் அழிந்து போய் விடும். இதுதான் முதலாளித்துவ பொருளாதாரத்தின் அடிப்படை வழிகாட்டல்.

இந்த போட்டி போடுதலின் மூலம் மேலும் மேலும் புதிய வழிகளில் சட்ட திட்டங்களுக்குப் புறம்பாக கூடுதல் பணம் சேமிக்க முயற்சிக்கும் போட்டி நடக்கும். புதிய பொருட்கள் அறிமுகம், புதிய தொழில்நுட்பங்கள் கண்டுபிடித்தல் என்ற போட்டிகளுடன் கூடவே உயிர் வாழ்வதற்கான முக்கியமான போட்டியாக இது இருக்கும்.

இந்தியாவில் கருப்புப் பணம்

அன்னிய காலனி ஆதிக்கத்தின் கீழ் ஆட்சியாளர்களின் சட்டத்துக்குட்பட்டு நாட்டின் வளங்களை சுரண்டிச் சென்றார்கள் பிரிட்டிஷ் முதலாளிகள். அதனால் அது கருப்புப் பணம் என்ற வரையறைக்குள் வராது. சுதந்திர அரசாங்கம் அமைந்த பிறகு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக வரிகள் விதிக்கப்பட்டன. அன்னியச் செலவாணி கட்டுப்பாடுகள் செயல்படுத்தப்பட்டன.

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய வளர்ச்சிப் பருவத்தில் இருந்த அமெரிக்க நிறுவனங்களுக்கு உள்ளூர் சந்தையும், ஐரோப்பிய நாடுகளின் சந்தைகளும் போதுமானதாக இருந்தன. அவற்றின் மூலதனம் இந்தியா போன்ற மூன்றாம் நாடுகளுக்கு வர ஆரம்பிக்கவில்லை. அதனால் நாட்டின் கட்டுமானங்களை உருவாக்க பொதுத்துறை நிறுவனங்கள் ஏற்படுத்தப்பட்டன. துறைமுகங்கள், சாலைகள், ஐஐடிகள், ஐஐஎம்கள் என்று பல ஆயிரம் கோடி ரூபாய்கள் அரசாங்கத்தால் முதலீடு செய்யப்பட்டன. இதற்குத் தேவையான நிதி வரி விதிப்பின் மூலம் திரட்ட முயற்சிக்கப்பட்டது.

கார்பொரேட் வரி என்பது வருமானத்திலிருந்து செலவுகளை எல்லாம் கழித்து விட்டு வரும் லாபத்தின் மீது விதிக்கப்படுவது. வாங்கும் பொருட்களுக்கான செலவு+ஊழியர்களின் ஊதியம்+வங்கிக் கடன் கட்டுவது+ தனிக் கடன் கட்டுவது+எந்திரங்கள், கட்டிடங்கள், வாகனங்கள் தேய்மானம் என்று பல வகை செலவினங்களை கழித்த பிறகு மீந்திருக்கும் லாபத்தில் பெரும்பகுதி மேலே சொன்ன நாட்டின் கட்டுமானங்களை இலவசமாக பயன்படுத்துவதன் மூலம் ஒரு நிறுவனத்திடம் வந்து சேருவது.

அப்போதைய உச்சக் கட்ட கார்பொரேட் வரி வீதம் 90% வரை இருந்தது. இவ்வளவு அதிகம் வரி இருப்பதால் வரி ஏய்க்கிறோம் என்று செலவைக் கூட்டிக் காண்பித்து, வரவைக் குறைத்துக் காண்பித்து, வரி ஏய்ப்பு செய்தன நிறுவனங்கள். கூடவே அன்னிய செலவாணி நெறிப்படுத்தல் சட்டத்தின் கீழ் வெளிநாட்டுக்குப் பணம் அனுப்புவதும், ஏற்றுமதி செய்யப்பட்ட பணத்தை முழுமையாக கொண்டு வந்து விடுவதும் கண்டிப்பாக கண்காணிக்கப்பட்டது.

இந்த காலகட்டத்தில் கணிசமான கருப்புப் பணம் உள்நாட்டிலும் வெளி நாடுகளிலும் பதுக்கப்பட்டது. ஒரு உதாரணம் : ஏற்றுமதி விலையில் 12.5% வரை வெளிநாட்டு முகவருக்கு முகமை கட்டணமாக கொடுக்கலாம் என்று சட்டம் சொன்னது. ஒரு நிறுவனம் வெளிநாட்டு முகவரிடம் பேரம் பேசி 2% கட்டணம் மட்டும் ஏற்படுத்திக் கொள்கிறது என்று வைத்துக் கொள்வோம். சுவிட்சர்லாந்தில் தனது குழும நிறுவனம் ஒன்றை ஏற்படுத்தி, 12.5% டாலர் வருமானத்தை அந்த குழும நிறுவனத்துக்கு அனுப்பி விட்டு, அங்கிருந்து 2% உரிய முகவருக்கு அனுப்பும் ஏற்பாடு சட்டப்படி சரி. வெளிநாட்டு குழும நிறுவனம் சந்தைப்படுத்தல் போன்ற சேவைகளை செய்வதாக சொல்லிக் கொள்ளலாம். இப்படியாக ஆண்டுக்கு 500 கோடி ரூபாய் ஏற்றுமதி செய்யும் ஒரு நிறுவனம் சுமார் 50 கோடி ரூபாய் சுவிட்சர்லாந்து வங்கியில் சேர்த்து விடலாம்.

இது மிகவும் மெலிதான, சட்டத்தை வளைத்து சேகரிக்கும் பணம். இன்னும் 'திறமையான' நிறுவனங்கள் இன்னும் பல மடங்கு பணத்தை வெளிநாட்டில் பதுக்கிக் கொள்ளலாம்.

இந்த பணம் அடுத்தடுத்த சுழற்சிகளில் உள்நாட்டில் சொத்துக்கள் வாங்கும் போதும், வெளிநாட்டிலிருந்து அன்னிய முதலீடாகவும், நாட்டுக்குள்ளேயே திரும்பி வரும்.

1. உதாரணமாக அன்னிய நேரடி முதலீட்டுக்கு வரவேற்பு அளிக்க ஆரம்பித்த பிறகு வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெருமளவு பணம் மௌரீஷியஸ் போன்ற வரி சொர்க்கங்கள் வழியாக இந்தியாவுக்குள் வந்தன. என்ரான் நிறுவனம் மகாராஷ்டிராவில் தாபோல் மின்சார நிறுவனம் ஏற்படுத்த கொண்டு வந்த பணம் இந்தியர்கள் வெளிநாட்டில் பதுக்கியிருந்த பணம் என்று என்ரான் திவாலான பிறகு வெளியான ஆவணங்களில் தெரிய வந்துள்ளது.

2. வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் இந்திய பங்கு சந்தையில் முதலீடு செய்ய அனுமதித்த பிறகு, participatory notes என்ற p நோட்டுகள்  மூலம் பணம் பங்குச் சந்தைக்குள் பாய்ந்தது. அதன் படி தனி நபர்கள் நிதி நிறுவனத்திடம் தமது பணத்தைக் கொடுத்து, தமது சார்பில் முதலீடு செய்யக் கோருவார்கள். இந்த p நோட்டுகளை முதலீடு செய்யும் நிதி நிறுவனத்தின் பெயர் மட்டும்தான் அரசுக்குத் தெரியும். அதன் பின் இருக்கும் நபர்களின் பெயர் அரசுக்குச் சொல்ல வேண்டியதில்லை.

3. இதைத் தவிர ரிலையன்ஸ் போன்ற பெரு நிறுவனங்கள் அமைச்சகங்களை தமது கையில் போட்டுக் கொண்டு சட்ட விரோதமாக சம்பாதித்த பணத்தை வெள்ளையாக்கிக் கொள்வது 1990களுக்குப் பிறகு நடக்கிறது. வெளிநாட்டு அழைப்புகளை உள்நாட்டு அழைப்பாக காட்டி பிஎஸ்என்எல்லுக்கு கொடுக்க வேண்டிய கட்டணத்தை 2000 கோடி அளவு ஏய்த்த பிறகு, சுமார் 50 கோடி ரூபாய் அபராதம் கட்டி அதை சரி செய்து கொண்டது ரிலையன்ஸ்

இந்த கருப்புப் பணம் என்பது கரன்சி நோட்டுகளாக அல்லது தங்கக் கட்டிகளாக அடுக்கி வைக்கப்பட்டிருப்பது இல்லை. உள்ளூரில் கருப்புப் பணம் மஞ்சள் பைகளில் போட்டு கை மாற்றப் படுகிறது. அந்தப் பணத்தை யாரும் தோட்டத்தில் குழி தோண்டி புதைத்து வைத்துக் கொள்வதில்லை. அந்தப் பணத்தை அடுத்த பரிமாற்றத்தின் கருப்புப் பண பகுதியாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். பணம் என்பது புழக்கத்தில் விடப்படுவதில்தான் அதன் சக்தியை பெறுகிறது.

தேர்தல் சமயங்களில் கைச்செலவுக்காக இந்தியாவை நோக்கிய இந்த பணப் பாய்ச்சல் பெருமளவு அதிகரிக்கிறது. அதன் மூலம் கட்சி பிரச்சாரத்துக்கான செலவுகள், வாக்காளர்களுக்குக் கொடுக்க வேண்டிய பணம் என்று அவிழ்த்து விடப் படுகிறது. மேலே சொன்னது போல கருப்புப் பணத்தை உருவாக்கி பயன்படுத்தத் தெரியாத கட்சி தேர்தலில் தோற்றுப் போய் அழிந்து போக கருப்புப் பணத்தை ஊக்குவிக்கும் கட்சிதான் நிலைத்து நிற்கும்.

1990களுக்குப் பிறகு இந்த வரி ஏய்ப்பைத் தடுப்பதற்காக என்று சொல்லிக் கொண்டு வருமான வரி வீதத்தைக் குறைத்தார்கள், அன்னியச் செலவாணி கட்டுப்பாடுகளை தளர்த்தினார்கள். பெரா என்பது பெமா என்று பல் பிடுங்கப்பட்டது. அதனால் 1990களுக்குப் பிறகு கருப்புப் பணமாக பராமரிப்பதற்கு தேவை குறைய ஆரம்பித்தது. கருப்பை வெள்ளையாகவே வைத்திருக்க வாய்ப்புகள் நிறைய ஏற்பட்டன. பாரம்பரியமாக கருப்புப் பணம் என்று கருதப்பட்ட வழிகள் அடைபட்டு, அவை சட்டபூர்வமாகி விட்டன.

ஆனாலும் கடந்த 20 ஆண்டுகளில் கருப்புப் பணத்தின் அளவு பல மடங்கு அதிகமாகியிருக்கிறது. ஏன்? எப்படி?

மேலே நாம் பார்த்தது போல தனியார் நிறுவனங்கள் ஒன்றுடன் ஒன்று போட்டியிடும் போது சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கைகளில் பணம் சம்பாதிப்பது பிழைத்திருப்பதற்கான அடிப்படை தேவை ஆகிறது.

1990களுக்குப் பிறகு தாரளமயமாக்கம், தனியார் மயமாக்கம் மூலம் பல பொதுத்துறை செயல்பாடுகள் தனியார் முதலாளிகளுக்குத் திறந்து விடப்பட்டன. தொலைபேசித் துறை,  விமானப் போக்குவரத்துத் துறை, சிறப்புப் பொருளாதார மண்டலம் உருவாக்குதல், சேவைத் துறை என்று தனியார் செயல்படும் அனுமதி வழங்கும் போது அவற்றுடன் தொடர்புடைய தேசத்தின் வளங்களும் தனியாரின் கட்டுப்பாட்டில் மேலாண்மையின் கீழ் போகின்றன.

உதாரணமாக தொலைபேசி துறையில் அலைக்கற்றை, சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் ஏற்படுத்த நிலம், சுரங்கத் துறையில் கனிம வளங்கள் என்று அது வரை அரசு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இருந்த நாட்டின் சொத்துக்கள் தனியாரின் மேலாண்மைக்கு விடப்பட்டன.

இப்படி கருப்புப் பணம் உருவாகி செயல்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்தன. 2G அலைக்கற்றையை எடுத்துக் கொள்வோம். உரிமம் பெறுவதற்கு அரசாங்கம் நிர்ணயித்த தொகையை விட கூடுதலாக அதிகாரிகளுக்கும்/அமைச்சர்களுக்கும் கொடுத்து அலைக்கற்றை பெற்று விட்டால் அதன் மூலம் பெரும் வருமானத்தை ஈட்டலாம். கூடுதலாக கொடுப்பதற்கு சேர்த்து வைத்த கருப்புப் பணம் சுழற்சியில் கொண்டு வரப்படுகிறது. அதைப் பெற்றுக் கொண்ட அரசியல்வாதிகள் தேர்தலில் ஓட்டுகளை விலைக்கு வாங்க இறக்கி விடுகிறார்கள்.

சுரங்கத் துறையில் ஜனார்தன ரெட்டி குறைந்த உரிமத் தொகை செலுத்தி விட்டு அனுமதி பெறாமல் பெருமளவு இரும்புத் தாதுவை வெட்டி ஏற்றுமதி செய்கிறார். டன்னுக்கு குறைந்த உரிமக் கட்டணம் அரசுக்குச் செலுத்தி விட்டு பல மடங்கு அதிக விலையில் விற்கிறார். அது கூட போதவில்லை, அவருக்கு, அரசுக்குக் கணக்கே காட்டாமல் பெருமளவு வெட்டி விற்கிறார். அந்த கணக்குக் காட்டாமல் பெறும் வருமானம்தான் அவரது எதிர்கால வளர்ச்சிக்கான முதலீடு.

மேலே பார்த்தது போல சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் நிலம் மலிவு விலையில் ஒதுக்கீடு பெற்று கருப்புப் பணத்துடன் விற்பனை நடைபெறுவது. நாட்டின் இயற்கை வளங்களை கையாளுவதில்தான் கருப்புப் பணம் புழங்குகிறது என்பதையும் உணர்ந்து கொள்ளலாம்.

$1.4 டிரில்லியன் சுவிஸ் வங்கிகளில். 25 லட்சம் கோடி ரூபாய் என்று பல விதமான கணக்குகள் சொல்லப்படுகின்றன.

கருப்புப் பணத்தை ஒழிப்போம் என்று அண்ணா ஹசாரே மைதானங்களிலும், அத்வானி ரதத்திலும், நாடாளுன்றத்திலும் பேசுவதன் சாத்தியங்கள் என்னென்ன? 

இந்தியர்கள் வெளிநாட்டில் பதுக்கி வைத்திருக்கும் கருப்புப் பணம் முழுவதையும் நாட்டுக்குள் கொண்டு வந்து விட்டால் இத்தனை ஆண்டுகளுக்கு வரியே போட வேண்டாம். ஒவ்வொரு கிராமத்துக்கும் இத்தனை கோடி ரூபாய் பிரித்துக் கொடுத்து விடலாம், அல்லது ஒவ்வொரு குடிமகனுக்கும் இத்தனை லட்ச ரூபாய் கொடுத்து விடலாம் என்று பேசுகிறார்கள். இதன் மூலம் என்ன சாதிக்க நினைக்கிறார்கள்.

மேலே நாம் பார்த்தது போல இந்த கருப்புப் பணம் இருப்பது நிதர்சனமான உண்மை. அது வெள்ளை பணப் புழக்கத்தை விட சில மடங்கு அதிகமாக இருப்பதும் உண்மை. ஆனால் அது என்னென்ன வடிவில் இருக்கிறது. கரன்சிகளாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கவில்லை.

அவை தொழிற்சாலைகளாக, அம்பானியின் 400 கோடி அடுக்கு மாடி கட்டிடமாக, பெரு நிறுவன உரிமங்களாக, தங்க நகைகளாக, வெளிநாட்டு கடன் பத்திரங்களாக மாற்றப்பட்டிருக்கிறது. உண்மையில் கருப்புப் பணத்தை மக்களுக்குப் பங்கு போட்டுக் கொடுக்க வேண்டும் என்று அண்ணா ஹசாரே அல்லது அத்வானி விரும்பினார், முகேஷ் அம்பானி அல்லது ரத்தன் டாடாவின் சொத்துக்களை பறிமுதல் செய்து மக்களிடம் ஒப்படைப்பது என்றுதான் பேச வேண்டும்.

அப்படிப் பேசாமல் கருப்புப் பணம் என்று பொதுப்படையாக பேசுகிறார்கள். நாமும் ஏதோ மாயம் செய்யப் போகிறார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

கருப்புப் பணம் நமது வாழ்க்கையை எப்படிப் பாதிக்கிறது என்று பார்க்கலாம்.

பணம் என்றால் என்ன? 

பணம் என்பது எல்லோரும் கையாளும் ஒன்று. பிறந்த பச்சிளம் குழந்தையின் கையில் 100 ரூபாய் நோட்டைத் திணிக்கும் ஒருவர், 'பாருங்க, எவ்வளவு கெட்டியா பிடிச்சிருக்கு, நிறைய பணம் சம்பாதிக்கும் வளர்ந்து' என்று சொல்வார். உலக அறிவே இல்லாத குழந்தையைக் கூட பணத்துடன் இணைத்துப் பேசுவது நமக்கு இயல்பாக தோன்றுகிறது.

பணம் அவ்வளவு இயல்பானதா? இல்லை, பணம் என்பது இயற்கையில் உருவாகவில்லை. அது மனித குலம் கண்டுபிடித்த மகத்தான ஒரு கருவி. எப்படி கண்டுபிடிக்கப்பட்டது என்று மிகச் சுருக்கமாக பார்க்கலாம்.

இனக்குழு சமூகங்களில் அல்லது நாகரீகத்துக்கு முற்பட்ட காலத்தில் மனிதர்கள் காடுகளில் வாழ்ந்திருந்தார்கள். உயிர் வாழ்வதற்கு உணவு தேவை. உணவை உற்பத்தி செய்ய காய் கனிகளைத் தேடிப் போக வேண்டும் அல்லது விலங்குகளை வேட்டையாட வேண்டும். மிக எளிமையான பிற்போக்கான காலத்தில் பசி எடுத்ததும் ஒரு உந்துதலால் இரையைத் தேடிப் போயிருப்பார்கள், கிடைத்த உணவை சாப்பிட்டு உடலுக்கு சக்தியை ஈட்டியிருப்பார்கள். அந்த சக்தியை அடுத்த நாள் பசிக்கு உணவு தேடப் பயன்படுத்தியிருப்பார்கள்.

உழைப்பு -> விளை பொருள் -> நுகர்வு -> உழைப்பு -> விளைபொருள் என்று இந்த சுழற்சி நிகழ்கிறது. இதுதான் இயற்கை மனிதனுக்குக் கொடுத்த உள்ளுணர்வு சார்ந்த நடவடிக்கை.

இதில் முக்கியமான பகுதி, தனது உழைப்பால் விளைந்த பொருளை நுகர்வதன் மூலம் அடுத்த நாள் உழைப்புக்கான சக்தியை பெறுகிறார். உடலுக்குத் தேவையான அளவுக்குத்தான் உழைத்து விளைபொருள் ஈட்டியிருப்பார். ஈட்டியதை தானே நுகர்ந்து அடுத்த நாள் உழைப்புக்கு சக்தியாக மாற்றிக் கொண்டிருப்பார்.

இது மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட ஒரு விளக்கம்.

ஒருவர் வேட்டையாட போகிறார் - ஒரு நாள் வேட்டையாடி 2 முயல்கள் கொண்டு வருகிறார். ஒருவர் பழம் பறிக்கப் போகிறார், ஒரு நாள் பழம் பறித்து 10 பழங்கள் எடுத்து வருகிறார். இரண்டு பேருமே தமக்குத் தேவையான சக்திக்கு ஏற்ற உணவை கொண்டு வருகிறார்கள். தினமும் முயல் சாப்பிட்டு சலித்த முதலாமவர் இரண்டாமவரிடம் பழத்தை பரிமாறிக் கொள்ள விரும்புகிறார். எப்படிப் பரிமாறிக் கொள்வார்கள்?

2 முயலுக்கு 10 பழங்கள் என்ற வீதத்தில்தான். அப்போதுதான் அடுத்த நாள் வேலைக்கான சக்தியை பெற்றுக் கொள்ள முடியும் என்பது ஒரு பக்கம், நீ ஒரு நாள் வேலை செய்து இதை ஈட்டினாய், நானும் அதே உழைப்பில் அதை ஈட்டினேன் அதனால் இரண்டும் சமம்.

அதாவது பரிமாற்றம் நடப்பது குறிப்பிட்ட பொருளை ஈட்டுவதற்கு செலவிட்ட உழைப்பின் அளவைப் பொறுத்தே இருந்தது. இதுதான் பண்டமாற்று என்பது.

நாகரீகமும், பகுத்தறிவும், நுட்பமும் வளர வளர  உணவு மட்டுமில்லாமல், போர்த்திக் கொள்ள விலங்குகளின் தோல்கள், அலங்கரித்துக் கொள்ள எலும்புகள் என்றும் பொருட்கள் உருவாகியிருக்கும். ஒரு ஆட்டின் தோலை பதப்படுத்தி உடையாக தயார் செய்ய 5 நாட்கள் உழைப்பு பிடிக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதற்கு மாற்றாக அந்த மனிதருக்கு 5 நாட்கள் உயிர் வாழத் தேவையான (அதாவது 5 நாட்கள் உழைப்பில் உருவான) பழங்கள் அல்லது இறைச்சி கொடுத்திருப்பார்கள்.

1 பதப்படுத்தப்பட்ட ஆட்டுத்தோல் = 10 முயல்கள் = 50 பழங்கள்.

பதப்படுத்தப்பட்ட தோல் நீண்ட நாள் கெட்டுப் போகாமல் இருக்கும் பழங்களோ, முயல்களோ உடனேயே நுகரப்பட வேண்டும். காலப் போக்கில் 10 முயல் வைத்திருப்பவர் அதற்கு மாற்றாக பெற்ற பதப்படுத்தப்பட்ட தோலை கொடுத்து விட்டு மூன்றாமவரிடம் 50 பழங்களை வாங்கிக் கொள்ளலாம். அதாவது ஆட்டுத் தோலுக்கு இடை மதிப்பு ஏற்பட்டு விட்டது.

ஒருவரிடம் 10 பதப்படுத்தப்பட்ட தோல்கள் இருந்தால், அவருக்கு 50 நாட்களுக்கான உணவு உத்தரவாதமாக இருக்கிறது. ஒவ்வொரு தோலை விற்றுக் கிடைக்கும் உணவு மூலம் 5 நாட்கள் உயிர் வாழலாம். உணவு பழமாகவோ, இறைச்சியாகவோ இருக்கலாம். ஒரு நாள் கடினமாக உழைத்து வேடைடயாடி 20 முயல்களை பிடித்துக் கொண்டு வந்த ஒருவர் அதற்கு மாற்றாக 2 தோல்களை வாங்கி தனது சேமிப்பாக வைத்துக் கொள்வார்.

இது போல சீக்கிரம் கெட்டுப் போகாத, ஆனால் பரிமாற்ற மதிப்பு (நுகர்வு+உழைப்பு) கொண்ட பொருட்கள் இடைத் தரகர்களாக செயல்பட ஆரம்பித்தன.

50 கிராம் தங்கத்தை உற்பத்தி செய்ய ஆகும் உழைப்புக்கு ஈடான மதிப்பு தங்க நாணயத்துக்கு பரிமாறப்பட்டிருக்கும். ஆனால் காகித பணம், வங்கி வைப்புகள், பங்குச் சந்தைகள், நவீன நிதி மூலதன கருவிகள் மூலம் பணம் என்பது உழைப்பினால் உருவாகாமலே சந்தையில் வெளிவிடப்படுகிறது.

இதனால் உழைப்பின் மூலம் சம்பாதிக்கும் பணம் மதிப்பை இழந்து விடுகிறது. நாட்டின் உள்நாட்டு உற்பத்தியை விட 2 மடங்கு கருப்புப் பணம் புழங்குகிறது என்றால், ஒவ்வொருவரும் உழைத்து சம்பாதிக்கும் பணத்தில் மூன்றில் ஒரு பகுதி மதிப்புதான் அவருக்குப் பயன்படும் பொருட்கள் வாங்க பயன்படுகிறது என்று பொருள். கருப்புப் பணத்தின் புழக்கத்தால் விலைவாசி, 3 மடங்காக உயர்ந்திருக்கும்.

2 கருத்துகள்:

ரிஷி சொன்னது…

சிவகுமார்,
இக்கட்டுரையை இன்றுதான் படித்தேன். மிக எளிதாக புரிந்து கொள்ளும்படி அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.
இவ்வளவு தெளிவான கட்டுரைக்கு பின்னூட்டங்களே ஏன் இல்லை என்பது ஆச்சரியமளிக்கிறது!

மா சிவகுமார் சொன்னது…

நன்றி ரிஷி,

கட்டுரை நீளமாக இருப்பதால் பலர் படிக்காமல் விட்டிருக்கலாம்.

மிகவும் தெளிவாக இருந்தால், இதற்கு மேல் நாம் சொல்ல என்ன இருக்கிறது என்று பின்னூட்டம் போடாமல் விட்டிருக்கலாம் :-)

மா சிவகுமார்