வியாழன், ஆகஸ்ட் 29, 2019

வினவின் குறுங்குழுவாத சிந்தனைகள்

இயக்குனர், சமூக செயல்பாட்டாளர் ரஞ்சித் பற்றிய வினவின் இந்தக் கேள்வி-பதிலில் (சுட்டி கீழே) சாதி ஆணவமும், வன்மமும், திமிரும், நயவஞ்சகமும் சொட்டுகிறது. அது பற்றிய 4-வது மற்றும் கடைசி பதிவு.

4. வினவின் குறுங்குழுவாத சிந்தனைகள்

//அவரது முயற்சிகளில் பங்கேற்கும் பொதுவானவர்களில் பெரும்பாலானோர் அவரது திரைப்பட பிம்பத்தை மையமாக வைத்து திரையுலகில் தனக்கொரு இடம் கிடைக்காதா என்று வருகின்றனர். இது ரஞ்சித்துக்கும் தெரியாமல் இருக்காது.//

ரஞ்சித்துடன் இருப்பவர்கள் மீது முத்திரை குத்தும் குள்ளநரித்தனம், இது.

//இருப்பினும் யாராக இருப்பினும் தனிநபராக சமூகப் பிரச்சினைக்கு தீர்வு காண முயலும்போது முதல் சுற்றில் பெரும் நம்பிக்கையும், உத்வேகமும் இருக்கும். அடுத்த சுற்றுகளில் அந்த நம்பிக்கை சமூக யதார்த்தத்தால் கொஞ்சமோ நிறையவோ விரக்தியடையும். பிறகு ஊரோடு ஒத்து வாழ் என்று ‘முதிர்ச்சி’ அடையும்.//

கூட்டாக சேர்ந்து தீர்வு காண முயற்சித்த வினவு “ஊரோடு ஒத்து வாழ் என்று 'முதிர்ச்சி'” அடைந்திருக்கிறது; பொதுவானவர்களிடம் நன்கொடை பெற்றுக்கொண்டுதான் இயங்குகிறது. மேலும், புரட்சிகர உள்ளடக்கத்தை மட்டுமின்றி வடிவத்தையும் அத்தகைய பாசாங்கையும் கூட கைவிட்டு ஒரு செய்திப் பெட்டகமாக காலம் தள்ளிக் கொண்டிருக்கிறது.


//இந்தச் சரணடைவு ஏதோ திரைப்பட பிரபலம் மற்றும் தலித் அரசியல் பேசுவோருக்கு மட்டும் நடப்பதல்ல. மார்க்சியத்தை தனிநபராக ‘தூக்கிச் சுமக்கும்’ தனிநபர்களும் கூட இப்படித்தான் வீழ்கிறார்கள். மற்றவர்களை விட மார்க்சிய தனிநபர்வாதிகளிடம் பேச்சும் எழுத்தும் கொஞ்சம் அதிகமிருக்கலாம். என்ன இருந்தாலும் ஏதோ கொஞ்சம் ‘தத்துவம்’ படித்தவர்கள் அல்லவா?//

கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டத்தில் கோவிந்தா போடும் கோஷ்டிகளாக மாறி விடுவது இது போன்ற அபத்தக் களஞ்சியங்களால்தான்.

முதன்மையான கேள்வி தனிநபரா, அமைப்பா என்பது இல்லை. சரியானதா, தவறானதா, புரட்சிகரமானதா, தேங்க வைப்பதா என்பதுதான் முதன்மையானது. அந்தக் கேள்விக்கு சரியான பதிலை வகுத்துக் கொண்டு நடைமுறையில் செயல்படும் அமைப்புதான் புரட்சிகர அமைப்பாக இருக்க முடியும். அந்த வகையில் தனிநபராக இருந்தாலும் ரஞ்சித் சரியான பிரச்சனையைப் பற்றி பேசுகிறார், சமூகத்தில் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்கு போராடுகிறார். வினவு அமைப்பாக இருந்தாலும் தவறாக பேசுகிறது, தேக்கத்தை நோக்கிச் செலுத்துகிறது.

"உன் கண்ணுல ஒரு பதட்டம் இருக்கு. காலு தரையில நிக்கல. மொத்தத்துல நீ நீயா இல்ல. முதல்ல நில்லு.அப்புறமா வந்து நீ சொல்ல வேண்டியத சொல்லு" என்று ஒரு படத்தில் சூர்யாவிடம் அவரது காதலி சொல்வது போல வினவு நிதானத்தில் இல்லை என்று மட்டும் நன்றாகத் தெரிகிறது.

சுட்டி

கருத்துகள் இல்லை: