வியாழன், ஆகஸ்ட் 29, 2019

வினவின் சாதி-ஆணவம்

இயக்குனர், சமூக செயல்பாட்டாளர் ரஞ்சித் பற்றிய வினவின் இந்தக் கேள்வி-பதிலில் (சுட்டி கீழே) சாதி ஆணவமும், வன்மமும், திமிரும், நயவஞ்சகமும் சொட்டுகிறது. அவற்றை 4 பகுதிகளாக பார்க்கலாம்.

1. வினவின் சாதி-ஆணவம்

//இயக்குநர் ரஞ்சித் எப்போதும் சீற்றம் கொள்வதில்லை, தலித் மக்கள் தொடர்பான பிரச்சினைகள் என பொதுவெளியில் பிரபலமாகும் சிலவற்றில் மட்டும் சீற்றம் கொள்கிறார். அது சரியா என பார்ப்பதும் அவர் ஏன் அப்படி சீற்றம் கொள்கிறார் என்று பார்ப்பதும் வேறு வேறு இல்லை. சரி, ஏன் சீற்றம் கொள்கிறார்?//

எழுத்தாளர் டோனி மாரிசன் / இயக்குனர் ரஞ்சித்
சாதி தலித் மக்கள் தொடர்பான பிரச்சனை அல்ல. அது இந்திய சமுகத்தின் மொத்தத்தையும் காவு வாங்கி வரும் பிரச்சனை. மொத்த சமுகத்தையும் பின் தங்க வைத்திருக்கும் பிரச்சனை.
சாதியப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வக்கற்று இருப்பவர்களுக்கிடையில் அதற்கு முகம் கொடுத்து எதிர்வினையாற்றும் ரஞ்சித்தை தலித் மக்கள் தொடர்பான பிரச்சினைகளில், அதுவும் பிரபலமாகும் பிரச்சினைகளில் மட்டும் தலையிடுகிறார் என்று கூறுகிறது, வினவு. அதாவது 'ரஞ்சித்துக்கு சாதியை தவிர வேறு எதுவும் தெரியாதுங்க, எப்ப பார்த்தாலும் அதையே தான் பேசிட்ருப்பாரு' என்கிற சாதி வெறியர்களின் கருத்தைதான் இவர்களும் வேறு வடிவத்தில் வேறு வார்த்தைகளில் சொல்கிறார்கள்.

இது தொடர்பாக சமீபத்தில் கருப்பின மக்களின் வாழ்க்கை பற்றிய இலக்கியங்களை படைத்த அமெரிக்க எழுத்தாளர் டோனி மாரிசனின் பேட்டி ஒன்றை பாருங்கள். (சுட்டி கீழே)
"எப்போது வெள்ளையின மக்களைப் பற்றிய இலக்கியத்தை எழுதப் போகிறீர்கள்" என்று டோனி மாரிசனிடம் கேட்கிறார், பத்திரிகையாளர். அதற்கு டோனி மாரிசனின் பதில்? “இது எவ்வளவு மோசமான இனவாதம் நிரம்பிய கேள்வி என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா?"

"ரஞ்சித் தலித் மக்கள் தொடர்பான பிரச்சனைகள் பற்றி மட்டும் சீற்றம் கொள்கிறார்" என்பது "எவ்வளவு மோசமான சாதிஆணவம் நிரம்பிய கருத்து என்பதை" வினவு உணர முடியாததற்குக் காரணம் உள்ளது.

“நான் ஏற்கனவே மையமான சமூகப் பிரச்சனைகளைத்தான் எழுதிக் கொண்டிருக்கிறேன" என்கிறார், டோனி மாரிசன். அது போல சாதி பிரச்சனைகளுக்கு ஜனநாயக ரீதியான எதிர்வினை ஆற்றுவதன் மூலம் ரஞ்சித் ஏற்கனவே சமூகத்தின் மையமான பிரச்சனைகளுக்காகத்தான் சீற்றம் கொள்கிறார். அதைப் புரிந்து கொள்ள முடியாத வினவுக்கு அது "தலித் மக்கள் தொடர்பான பிரச்சனைகள் மட்டும்" என்று தெரிகிறது. இதற்கு அடிப்படையாக இருப்பது சாதிப் பிரச்சனைக்கு “அரை நிலப்பிரபுத்துவம்" என்று வினவு பூசிக் கொண்டிருக்கும் ஐரோப்பிய புனுகு.

சுட்டி

கருத்துகள் இல்லை: