வியாழன், ஆகஸ்ட் 29, 2019

சாதிய பிரச்சனையில் வினவின் அரசியல் ஓட்டாண்டித்தனம்

இயக்குனர், சமூக செயல்பாட்டாளர் ரஞ்சித் பற்றிய வினவின் இந்தக் கேள்வி-பதிலில் (சுட்டி கீழே) சாதி ஆணவமும், வன்மமும், திமிரும், நயவஞ்சகமும் சொட்டுகிறது. அது பற்றிய 2-வது பதிவு.

2. சாதிய பிரச்சனையில் வினவின் அரசியல் ஓட்டாண்டித்தனம்

//சில திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். அவற்றில் இரண்டு ரஜினி படங்கள். அவர் பிரபலமாவதற்கு இது போதும். கூடவே ரஜினி பட இயக்குநர் என்ற அளவில் ஊதியமும் பெறுகிறார். இப்போது அவரிடம் கொஞ்சம் நிதியாதாரம் சேர்கிறது.//

ரஜினி படத்தை இயக்குவதற்கு முன்பே ரஞ்சித் தனக்கென ஒரு பாதையை உருவாக்கிக் கொண்டவர் (மெட்ராஸ்). அதனால், ரஞ்சித்துக்குக் கிடைத்த பிரபலம் அவருடைய சமூகப் பார்வைக்கும், திறமைக்கும், செயல் திறனுக்கும் கிடைத்த பரிசுதானே தவிர, ரஜினியின் பிரபலத்திலிருந்து ஒட்டிக் கொண்ட ஜிகினா இல்லை.

//இரண்டும் சேர்ந்து அவருக்கென ஒரு தனிநபர்வாதப் பார்வையை உருவாக்குகிறது. பிறகு மேடைகளில் பேசுகிறார்.//
ரஞ்சித், தனது படங்களிலும், பேச்சுக்களிலும் ஒவ்வொரு இடத்திலும் மிகத் தெளிவாக தன்னுடைய அரசியல் அம்பேத்கர் முன் வைத்த சாதி ஒழிப்பு அரசியல் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார், அதில் என்ன தனிநபர்வாதப் பார்வையைக் கண்டது, வினவு?

//வாய்ப்பு வரும்போது தலித் மக்கள் தொடர்பான பிரச்சினைகளில் யாரும் எதுவும் செய்யவில்லை எனத் துவங்கி தலித் அடையாள அரசியலை முன்வைக்கிறார். சில சமயம் அவருக்கு வரும் எதிர்வினைகள் கடுமையாக இருக்கிறது. அதனால் அடுத்தமுறை பேசும்போது இன்னும் கொஞ்சம் முதிர்ச்சியாக பேசுகிறார்.//

"தலித் மக்கள் தொடர்பான பிரச்சினைகளில் யாரும் எதுவும் செய்யவில்லை" என்பதை மறுக்கும் வகையில் வினவு சார்ந்திருக்கும் அரசியல் கட்சி செய்தவற்றை பட்டியலிட்டால், ரஞ்சித்தின் செயல்பாடுகளோடு அவற்றை ஒப்பிட்டு பரிசீலித்திருந்தால் நேர்மையானதாக இருந்திருக்கும்.

//தலித் மக்கள் தொடர்பான பிரச்சினை பல்வேறு அரசியல் சமூக பொருளாதார விசயங்களோடு தொடர்புடையது. அவற்றோடு களத்தில் இருக்கும் சமூக அரசியல் இயக்கங்களின் பார்வை நடைமுறையோடு தொடர்புடையது.//

அதாவது அரசியல், சமூக, பொருளாதார விஷயங்கள் எல்லோருக்கும் புரியாதாம். வினவு அரசியல், சமூக, பொருளாதார விஷயங்களை புரிந்து கொண்டு நடைமுறையோடு தொடர்புடைய பார்வை வைத்திருக்கிறார்களாம். அது என்ன புண்ணாக்கு பார்வை என்று சொல்வதற்குக் கூட தெம்பு இல்லை.

//இவற்றை கற்பது, கற்று ஆய்வது என்பது ஒரு தனிநபராக செய்வது வெகு சிரமம்.//
இந்தியாவில் சாதி பற்றி பல்வேறு கட்சிகள் கூட்டாகச் சேர்ந்து கும்மி அடித்ததை விட அண்ணல் அம்பேத்கர் தனிநபராக பல மடங்கு அதிகமாகவும், சிறப்பாகவும் கற்று ஆய்வு செய்திருக்கிறார். அம்பேத்கரின் "இந்தியாவில் சாதிகள்”, "சாதி ஒழிப்பு" இவற்றின் மீதான ஆய்வு முறையிலான விமர்சனக் கட்டுரை ஒன்றையாவது வினவு காட்ட முடியுமா? அல்லது இந்த அறிவு சாதனைகளுக்கு இணையாக சாதி பற்றி கம்யூனிஸ்ட் கட்சி ஒன்று எழுதிய ஆய்வுக் கட்டுரையை (குறிப்பாக அம்பேத்கரின் சமகாலத்தில்) சொல்ல முடியுமா? [இதைப் பற்றி தனியாக விரிவாக விவாதிக்க வேண்டியிருக்கிறது]

சுட்டி
கேள்வி பதில் : பா. ரஞ்சித் – தமிழ் அமைப்புகள் – வலது, இடது கம்யூனிஸ்ட்டுகள் !

கருத்துகள் இல்லை: