செவ்வாய், மார்ச் 11, 2008

கூடி வாழணும் பாப்பா

சின்ன வயதில் அம்புலிமாமாவில் படித்த ஒரு கதை:

ஒரு கிராமத்தில் மக்கள் எல்லோரும் ஒற்றமையாகவே இருப்பதில்லை. ஏதாவது முகாந்திரத்தில் ஒருவருக்கொருவர் சச்சரவு செய்து கொண்டு சரியாகப் பேசிப் பழகாமல் இருப்பார்கள்.

அந்தக் கிராமத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் வெளியூரில் படித்து முடித்துத் திரும்பியதும், அந்தக் கிராமத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறான். அந்த நேரத்தில் கிராமத்துக்கு வருகை தரும் அரசாங்கத்தின் முக்கிய அதிகாரியை கௌரவிக்க ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்கிறான். ஊரின் எல்லா குடும்பத்தினரையும் விருந்துக்கு வரவேற்கிறான்.

விருந்து ஆரம்பிக்கிறது. பந்தியில் இலை போட்டு எதிரெதிராக வரிசைகள். எல்லோரும் உட்கார்ந்து விட்டார்கள். சண்டைக்காரர்கள் ஒருவருடன் ஒருவர் பேசிக் கொள்ளாதவர்கள் எல்லாம் எதிரெதிராக உட்கார்ந்து விட்டார்கள்.

"தலைநகரிலிருந்து வந்திருக்கும் உயரதிகாரிக்கு நம்ம ஊர் மக்களின் புத்திசாலித்தனத்தைக் காட்ட நான் ஒரு பந்தயம் வைத்திருக்கிறேன். அதில் வெற்றி பெற்றுக் காட்டி நம்ம ஊர் மானத்தைக் காப்பாற்றும்படிக் கேட்டுக் கொள்கிறேன்". "நன்கு வயிறார சாப்பிடுங்கள். ஆனால், யாருடைய கையும் மூட்டு மடங்காமல் சாப்பிட வேண்டும்".

ஒரே குழப்பம், சாப்பாட்டு அறை முழுவதும் கசமுசா என்று விவாதங்கள்.

கொஞ்ச நேரம் போனது. இன்னும் கொஞ்ச நேரம்.

"மானப்பிரச்சனை, கொஞ்சம் நல்லா யோசியுங்க"

எதிரெதிராக இருந்த இரண்டு பேருக்கு ஒரு வழி தோன்றியது. கை மூட்டு மடங்காமல் சாப்பிட எதிரில் உள்ளவருக்கு ஊட்டி விட ஆரம்பித்தால் போதுமே!

----இதற்கு பதவுரை, பொழிப்புரை, தெளிவுரை எல்லாம் உண்டு----

7 கருத்துகள்:

வால்பையன் சொன்னது…

போட்டி நாட்டில் மட்டுமல்ல, வீட்டிலும் உண்டு என்றே நினைக்கிறேன்
ஆரோக்கியமான போட்டி பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என்றே நினைக்கிறேன்.
ஆனால் போட்டி போட்டு கொண்டு நம் வளங்களை அண்டை நாட்டுக்காரன் சுரண்டுவிடுவது தவறு, அந்த மாதிரியான நேரங்களில் நீங்கள் சொல்வது போல் சாப்பாடு ஊட்டுவது தான் சரியான செயல்

வால்பையன்

கோவி.கண்ணன் சொன்னது…

நல்ல துணுக்கு,

//"நன்கு வயிறார சாப்பிடுங்கள். ஆனால், யாருடைய கையும் மூட்டு மடங்காமல் சாப்பிட வேண்டும்".//

நாலுகால் பிராணியாக மாறி கூட சாப்பிடலாம்.

நல்ல வேளை,
வாயைத் திறக்காமல் சாப்பிட வேண்டும் என்று சொல்லவில்லை.
:))

காட்டாறு சொன்னது…

எங்கள் வீட்டில் ஜனத் தொகை ஜாஸ்தி. 2 குடும்பம். 12 வயசுக்குள்ள உள்ள வாண்டுகள் 7 பேரு. எதாவது சண்டை வந்து கொண்டே இருக்கும். எங்க அம்மா ஒரு முறை வைத்த பந்தயம் இது. இன்னும் ஞாபகம் இருக்குது. நெசமாவே நல்லா என்சாய் செய்தோம். இன்னக்கும் எல்லோரும் (திருமணம் ஆகி குழந்தை குட்டிகளுடன் இருப்பினும்) ஒற்றுமையா இருக்கோமின்னா இது மாதிரி சில சின்ன சின்ன விளையாட்டுகளால் பெரிய விஷயங்களை புரிய வைத்த எங்க அம்மா தான். :-)

KARTHIK சொன்னது…

//எங்க அம்மா ஒரு முறை வைத்த பந்தயம் இது.//

போட்டி சூப்பர்

மா சிவகுமார் சொன்னது…

வால்பையன்,

//ஆரோக்கியமான போட்டி பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என்றே நினைக்கிறேன்.//

போட்டி போடுவதை சேவை உணர்வோடு தொழில் செய்வது என்று மாற்றி யோசித்துப் பாருங்கள். நான்கு பக்கமும் சேவை வழங்க வேண்டும்.

மொழிபெயர்ப்புத் தொழில் செய்யும் ஒருவர் தனது வாடிக்கையாளர் தொழில் சிறக்கச் சேவை செய்வதாக நினைத்து செயல்படலாம். அதற்கு கறாராக பணம் வசூலிப்பது மூலம் தனது குடும்பத்துக்குத் தேவைகளை நிறைவேற்றி சேவை தருவதாக செயல்படலாம்.

போட்டி பொறாமை, பேராசை விட்டு சேவை நோக்கில் செயல்பட ஆரம்பித்தால் எதுவும் குறைந்தும் விடாது, மன நிம்மதியும் அதிகமாகும்.

கோவி கண்ணன்,
//வாயைத் திறக்காமல் சாப்பிட வேண்டும் என்று சொல்லவில்லை. //
:-)

காட்டாறு,
//எங்க அம்மா ஒரு முறை வைத்த பந்தயம் இது. இன்னும் ஞாபகம் இருக்குது. நெசமாவே நல்லா என்சாய் செய்தோம்.//
உண்மையிலேயே இதை நடத்திக் காட்டிய உங்க அம்மாவைப் பற்றித் தெரிந்து மகிழ்ச்சியாக இருக்கிறது.

எங்கள் நிறுவனத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் இது போன்று குழு மனப்பான்மை குறித்து ஒரு விளையாட்டை ஒருவர் நடத்திக் காட்டினார். மறக்க முடியாத அனுபவம்.

http://www.leatherlink.net/leatherlink/blog/?p=6

நீங்களும் படித்துப் பாருங்க கார்த்திக்.

அன்புடன்,
மா சிவகுமார்

KARTHIK சொன்னது…

நல்ல போட்டி அண்ணா
உண்மையில் நல்ல அற்புதமான நிறுவனம்.

உண்மைத்தமிழன் சொன்னது…

மா.சி..

வலையுலகம் இன்றைக்கு இருக்கின்ற நிலைமையில் தங்களுடைய இந்தப் பதிவு மிக மிக அவசியமானதாகும்.

படிக்கின்ற 'கலகக்காரர்கள்' புரிந்து கொள்வார்கள்.. புரிந்து கொள்ள முடியாதவர்கள் தங்களுடைய நிறுவனத்தின் 'குறிக்கோளே இதுதானோ' என்று நினைத்து நிறுனத்தைப் பற்றி பேசுவார்கள்.

ஆனாலும் நான் ஏமாற மாட்டேன்..

இப்படி ரெண்டு நாளைக்கு ஒரு தடவை மக்களுக்கு அறிவுரை சொல்றதைவிட்டுப்புட்டு, எந்த இடத்துல சண்டையோ, அங்கேயெல்லாம் போய் 'புத்தம் சரணம் கச்சாமி' அப்படின்னு உங்களோட உபதேசத்தை வைச்சீங்கன்னா, ஒரு வேளை உங்க பேரைப் பார்த்தவுடனே முனியடிச்ச மாதிரி யாராச்சும் திருந்தலாமில்லையா..

முயற்சி செஞ்சாத்தானே வெற்றி கிடைக்கும்.. இதையும் நீங்கதான சொன்னீங்க கச்சாமி..

ஸோ.. Please try do it..

By the By... இந்தப் பதிவைப் படிச்சவுடனேயே உங்களுக்கு ஒரு பட்டப் பெயர் கொடுத்தே ஆகணும்னு முடிவு பண்ணிட்டேன்..

உங்களுக்கு ஏதாவது பிடிச்சப் பேர் இருந்தா சொல்லுங்க.. அதையே வைச்சுப்புடறேன்..

இல்லாட்டி இந்த பதில்லேயே ஒரு பேரை லேசுபாசா சொல்லியிருக்கேன். அதையே வைச்சிருவேன்.. ஜாக்கிரதை..