ஞாயிறு, மார்ச் 16, 2008

மீண்டும் சந்திப்போம்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்து, வலைப்பதிவுகளில் ஓரளவு நிறைவாகவே செய்ய முடிந்திருக்கிறது.

இரண்டு ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான இடுகைகள் எழுதி பல விலைமதிக்க முடியாத நட்புகளை ஏற்படுத்திக் கொள்ள முடிந்தது. வாழ்க்கையும் அடுத்தக் கட்டத்துக்கு நகர்ந்திருக்கிறது.

இப்படி ஒரு தருணம் வரும் போது கொஞ்சம் நிதானித்து, செய்கைகளை ஆராய்ந்து இதற்கு அடுத்த நிலை என்று அலசிப் பார்க்க வேண்டும். வலைப்பதிவுகளுக்கு அடுத்த நிலைக்கு நான் எப்படி நகர முடியும்? ஒரு நேரத்தில் சரியாகப் பட்ட-பலனுள்ளதாக இருந்த பழக்கங்கள் எல்லா நேரத்திலும் தேவை என்று சொல்லி விட முடியாது.

நான் தமிழ் மணம் சமூகத்தில் பங்கேற்பதற்கு ஒரு இடைவெளி ஏற்படுத்திக் கொள்கிறேன்.

இதே பழக்கங்கள், தேடல்கள், கேள்விகள் தொடர்ந்து கொண்டே இருக்கும். அவை இன்னொரு தளத்தில் இன்னொரு வடிவத்தில் வெளிப்படலாம். இதன் மூலம் ஏற்படும் நேரத்தில் வேறு ஒரு தளத்தில் இன்னும் சிறப்பாக செயல்பட வாய்ப்பு கிடைக்கலாம்.

'பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல' என்ற விதிப்படி பழையவர்கள் திட்டமிட்டு புதியவர்களுக்கு வழி விட்டு நிற்பது உதவலாம். என்னுடைய இருப்பு சிலருக்கு மனத்தடையாக இருக்கலாம். அப்படி ஒருவர் இருந்தாலும் எனது விலகல் அவருக்கு இடம் ஏற்படுத்திக் கொடுக்கும்.

பொருள் சார்ந்த ஆக்க பூர்வமான பதிவுகள் அதிகமாக வேண்டும் என்று ஆர்வமுடைய நண்பர்கள், தாம் எழுத திட்டமிட்டிருப்பதை தள்ளிப் போடாமல், உடனேயே ஆரம்பித்து விடுமாறு என்று மட்டும் கேட்டுக் கொள்கிறேன். நான் எழுதியதால் தனிப்பட்ட முறையில் சிறிதளவாவது பலனடைந்ததாக உணரும் ஒவ்வொருவரும் தம் பங்குக்கு ஒரு சில இடுகைகளாவது எழுதி வெளியிடலாம்.

அடுத்த ஒரு ஆண்டுக்கு நான் வலைப்பதிவுகள் சமூகம் பக்கம் எட்டிப் பார்க்கவே போவதில்லை. ஒரு ஆண்டுக்குப் பிறகு ஈர்ப்பு பலமாக இருந்தால் திரும்பி பார்க்கலாம். அது வரை எல்லோருக்கும் வணக்கம். மீண்டும் சந்திப்போம்.

இன்னொரு தளத்தில், இன்னொரு உருவில் நாம் எல்லோரும் சந்தித்துக் கொண்டேதான் இருக்கப் போகிறோம். அப்படியொரு தளத்தில் மீண்டும் சந்திப்போம்.

கருத்துகள் இல்லை: