சனி, மார்ச் 09, 2019

புதிய பாதை படைக்கும் தே.மு.தி.க - சுதீஷ், பிரேமலதாவின் அரசியல் சாணக்கியம்!

தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற கட்சி ஒரே நேரத்தில் அ.தி.மு.கவுடனும், தி.மு.கவுடனும் கூட்டணி பேரம் நடத்தியது என்று ஒரு சர்ச்சை ஓடுகிறது. கூட்டணி பேரம் நடத்தியதில் தவறில்லையாம் அதை வெளிப்படையாக சொன்னதுதான் பிரச்சனையாம். முன்னதாக பா.ம.கவும் இரு தரப்பிடமும் பேரம் பேசியது என்பது அனைவரும் அறிந்த ரகசியமாக இருந்தது. இப்படி ஒளித்து மறைத்து வெட்கப்பட்டுக் கொண்டு செய்து வந்தவற்றை வெளிப்படையாக போட்டு உடைக்கும் கட்சிகளுக்கு முன்னோடி விஜயகாந்தின், இல்லை இல்லை, அவரது மனைவி பிரேமலதாவின் தே.மு.தி.க.

தேசியம், திராவிடம் எல்லாவற்றையும் உதிர்த்து போட்டு விட்டு கட்சி நடத்த முடியும் கட்டம் வந்திராத 2005-ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட கட்சி இது. அதனால், பெயரில் தேசியம், முற்போக்கு, திராவிடம் என்பதை எல்லாம் சேர்க்க வேண்டியது இருந்தது. அப்போதுதான் அரசியலில் முன்னணியில் இருக்கும் இளைஞர்களை ஈர்க்க முடியும்.

அதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு சாதிக் கட்சி ஆரம்பித்த மருத்துவர் ராமதாஸ் அதற்கு பாட்டாளி மக்கள் கட்சி என்று பெயர் வைத்தார். பாட்டாளி வர்க்கத்தைச் சேர்ந்த வன்னியர் சாதி இளைஞர்களை கவர் செய்ய வேண்டிய அரசியல் நிலைமை அன்று இருந்தது.

சமீபத்தில் டி.டி.வி தினகரன் என்பவர் ஆரம்பித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சிக்கு இந்த பாவலாக்கள் எதுவும் தேவைப்படவில்லை. ஜெயலலிதா, பண மூட்டை இரண்டும் சேர்ந்ததுதான் அவரது கட்சியின் கொள்கையும் விதிமுறைகளும்.

சரி, இப்போது தே.மு.தி.கவுக்கு திரும்பி வருவோம்.

சமூக அநீதிகளைக் கண்டு கொதிக்கும் இளைஞனாக திரைப்படங்களில் வில்லன்களை பந்தாடியவர் விஜயகாந்த். அவரது மனைவி பிரேமலதா, மனைவியில் தம்பி சுதீஷ் இவர்களை மையமாக வைத்து உருவானதுதான் தே.மு.தி.க என்ற கட்சி. அரசியலில் நுழைவதற்கு தயாரிப்பாக பல ஆண்டுகளாகவே ரசிகர் மன்றங்களை ஆதரிப்பது, ஏழைகளுக்கு உதவி செய்வது என்று ஒரு பிராண்டை உருவாக்கிக் கொண்டிருந்தார்.

2005-ல் தனியாக கட்சி ஆரம்பித்து 2006 சட்டமன்ற தேர்தலில் விருத்தாச்சலம் தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆகியிருந்த விஜயகாந்தின் தலையை தட்டி வைக்க வேண்டும் என்பதும் தி.மு.கவின் கணக்காக இருந்தது. 2006-2011 தி.மு.க ஆட்சியில் இவர்களுக்கு சொந்தமான கல்யாண மண்டபத்தின் ஒரு பகுதியை கோயம்பேடு மேம்பாலம் கட்டுவதற்காக இடித்து விட்டார்கள். அதைத் தவிர்க்கும்படி சாலை போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த தி.மு.கவின் டி.ஆர்.பாலுவை பல முறை சந்தித்தும் அவர்கள் மசியவில்லை. விஜயகாந்தோ இந்த அநீதியை எதிர்த்து முகம் சிவந்து அடுத்த தேர்தலில் அ.தி.மு.கவுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டார். அந்தக் கூட்டணி அமோக வெற்றி பெற்று அ.தி.மு.க ஆளும் கட்சியாகவும், தே.மு.தி.க முக்கிய எதிர்க்கட்சியாகவும் சட்டமன்றத்துக்குள் நுழைந்தன.

தேர்தலுக்கு சில நாட்களுக்குப் பின் அ.தி.மு.க அமைச்சர் மரியம் பிச்சை கார் விபத்தில் பலியான போது, "இப்போதுதான் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார், அதை அனுபவிக்க முடியாமல் அய்யோ பாவம் பலியாகி விட்டார்" என்று அறிக்கை விட்டார் விஜயகாந்த். இவ்வாறாக, சட்டமன்ற உறுப்பினர் பதவி என்பது அனுபவிப்பதற்கானது என்ற ஊரறிந்த ரகசியத்தை தன் வாயாலும் போட்டு உடைத்து விட்டார்.

அதன் பிறகு ஜெயலலிதாவுடன் முட்டிக் கொண்டு ஜெயலலிதா ஒரு சர்வாதிகாரி என்ற வெளிப்படையான ரகசியத்தை உலகுக்கு அறிவித்தார். கட்சி எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்குவது, கட்சி தாவ வைப்பது என்று ஜெயலலிதா தே.மு.தி.கவை திட்டமிட்டு சிதைத்தார். இதற்கிடையில் விஜயகாந்த் உடல்நிலை மோசமாகி பேசுவது பிரச்சனையாக இருந்தது. 2014 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.கவுடனும் 2016 சட்ட மன்ற தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி என்றும் போட்டியிட்டு எதுவும் தேறவில்லை.

எனவே, இப்போது போட்ட முதலீட்டை காப்பாற்றிக் கொள்ள பிரேமலதாவும், சுதீஷூம் நேற்று பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி கலக்கியிருக்கின்றனர். "பெண் வீட்டில் இருந்தால் நான்கு பேர் கேட்டு வரத்தான் செய்வார்கள்" என்ற ரகசியத்தை அம்பலமாக்கியிருக்கிறார்.

தமிழகமே, இதற்கு மேல் என்ன வேண்டும், அரசியல் தரத்துக்கு!

கருத்துகள் இல்லை: