செவ்வாய், மார்ச் 05, 2019

மூக்கைப் பொத்திக் கொண்டு தினமலரின் பட்டத்தை படிக்கலாம்

தினமலரின் பட்டம் அறிவியல் இணைப்பு பற்றி 2 வாரங்களுக்கு முன்பு எழுதியிருந்தேன்.

நேற்று வாங்கிய பத்திரிகையில் அறிவியல் புரியாதா? என்பதுதான் முதல் பக்க தலைப்பு, அதை நடத்துவது சபாவில் அறிவியல் என்ற அமைப்பு. அதில் விஜய் ஷெனாய், சந்தியா கௌஷிகா, சித்தபிரா சின்கா, ஹரிணி நாகேந்திரா ஆகியோரின் புகைப்படங்களுடன் அவர்கள் பதில் சொன்ன கேள்விகள் குறிப்பிடப்பட்டிருந்தன.

“சபாவில் அறிவியல் (Science at Sabha) என்ற பெயரில் சென்னை கணித அறிவியல் கழகம் ஒரு நிகழ்ச்சியை நடத்துகிறது. "சபாக்களில் சங்கீதம் மட்டும்தான் கேட்க முடியுமா? அறிவியல் தகவல்களைக் கேட்டால் எப்படி இருக்கும்" என்ற எண்ணத்தோடு இதை நடத்துகிறார்கள்.

புறாக்கூடுகளைப் போன்றதே எலக்ட்ரான்களும் என்கிறார் விஜய் ஷெனாய், இந்திய அறிவியல் கழகம், பெங்களூரு. நியூரான் தகவல்கள் எப்படி பயணம் செய்யும் என்று சந்தியா கௌஷிகா, TIFR மும்பை பேசியிருக்கிறார். விளக்கம் சொல்லும் கோட்பாடுகள் என்று சென்னை கணித அறிவியல் கழகத்தின் சித்தபிரா சின்கா முன் வைத்திருக்கிறார். ஸ்மார்ட் நகரங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று ஹரிணி நாகேந்திரா உரையாற்றியிருகிறார்.

இது தவிர 2-ம் பக்கத்தில் ஆதார், அருண் ஜெட்லி, ஆதார் பற்றிய செய்திகள், இந்திரா நூயி, சாகோஸ் தீவுகள், ஆட்டிசம் பற்றிய செய்திகளும் இடம் பெற்றிருந்தன. 3-ம் பக்கத்தில் த.வி வெங்கடேஸ்வரனின் பதில்கள். புயலில், மரங்களும், எடை அதிகமான பொருட்களும் பறக்கின்றன, மனிதன் ஏன் பறப்பதில்லை என்ற 11-ம் வகுப்பு மாணவனின் கேள்வி. சூரியனால் பூமியில் என்னென்ன நடக்கின்றது, சூரியன் அழிந்தால் பூமிக்கு என்ன ஆகும் என்று 8-ம் வகுப்பு படிக்கும் நவீன். தொழில்நுட்பங்கள் பெருகி இருக்கும் நவீன காலத்தில் அதிகக் கண்டுபிடிப்புகள் நடக்காதது ஏன் என்று 12-ம் வகுப்பு படிக்கும் பூர்ணி. நீரைக் கொதிக்க வைத்த பிறகு பாத்திரத்தில் சிறு சிறு குமிழ்கள் தோன்றுவது ஏன் என்று பவன் கார்த்திக் என்ற மாணவர் கேட்டிருக்கிறார். பூர்ணியின் கேள்வியைத் தவிர மற்ற மூன்றும் ஒரு குழந்தையின் மனதில் தோன்றும் இயல்பான கேள்விகள். அவற்றை அறிவியல் துல்லியத்துடன் எளிமையாக விளக்கி பதில் சொல்கிறார். பூர்ணியின் கேள்வி அரசியல் உள்ளடக்கம் நிரம்பியது. அதற்கு நேரடியான பதிலை தருகிறார். இந்த ஒரு பக்கமே பட்டத்தை விண்ணில் பறக்க விட்டு விடுகிறது.

அடுத்த பக்கம் இயற்கை நம் நண்பன் என்ற பெயரில் கட்டு விரியனுக்கும் வெள்ளிக்கோல் வரையனுக்கும் இடையேயான வேறுபாடு, போருக்குப் பலியாகும் இயற்கை என்ற தலைப்பில் மொசாம்பிக் நாட்டை முன் வைத்து போர் எதிர்ப்பு கட்டுரை வெளியாகியுள்ளது. நினைவாற்றலை மேம்படுத்த இரண்டு உத்திகள் என்று ஒரு பக்கம். குடும்ப பாசம் தொடர்பான ஒரு அறநெறிக் கதை.

தமிழ் பக்கத்தில் உணவு உண்பது பற்றியும், வலி மிகுதல் பற்றியும், தமிழில் சொல்வளம் பற்றியும் தகவல்கள். வெளியாகியுள்ளன. கணித அருள் யாருக்கு என்ற தலைப்பில் 41 பேர் கொண்ட வகுப்பில் மிட்டாயை கணித அறிவை பயன்படுத்தி தானே கைப்பற்றிய மாணவனை பற்றிய கதை. இறுதியில் ஆசிரியர் அவனை பாராட்டி எல்லோருக்கும் மிட்டாய் வாங்கிக் கொடுக்கிறார்.

அடுத்து மாணவர் கடிதங்கள், மைக்கேலாஞ்சலோ (இத்தாலி நாட்டு ஓவியர் -15-ம் நூற்றாண்டு), வாலன்டினா டெரஷ்கோவா (விண்வெளியில் பறந்த முதல் பெண் - ரஷ்யர்), ஜோசப் நைஸ்ஃபோர் நிப்ஸ் (புகைப்படத் துறையின் முன்னோடி - 18ம் நூற்றாண்டு), அனைத்துலக மகளிர் நாள், அமெரிக்கோ வெஸ்புகி (இத்தாலிய கடற்பயணி - 15-ம் நநூற்றாண்டு), பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோரின் பிறந்த நாள் குறிப்புகள், யூரி ககாரின் விண்வெளியில் முதல் மனிதர் என்ற குறிப்பு, அவரது மேற்கோள்தான் கடைசிப் பக்கத்தில் முழுப்பக்கமாக.

மொத்தத்தில் அதே தரத்தில் தொடர்வதாக உள்ளது.

செய்தித் தாளில் கூட்டணி பேரத்தில் தி.மு.கவை குழப்புவதற்கான செய்தி, அதே நேரம் இ.பி.எஸ் - ஓ.பி.எஸ்க்கு தே.மு.தி.க கடுப்பேற்றுவதாகவும் செய்தி இணையாக வெளியாகியிருந்தது.

முதல் பக்கத்திலேயே மகா சிவராத்திரியை முன்னிட்டு நாட்டியாஞ்சலி விழா பற்றிய செய்தி புகைப்படத்துடன் வெளியாகியிருக்கிறது. கடைசி பக்கத்தில் "காவிரியும் ஒரு நாள் கங்கையாகும், பிரவாகமெடுத்து ஓடுவதில் அதன் தங்கையாகும்" என்ற தலைப்பில் கும்பமேளாவுக்காள அலகாபாத் போய் வந்த எல்.முருகராஜ் என்ற தினமலர் நிருபரின் கட்டுரை. சாமியார்களின் புகைப்படம், புனித நீராட குவிந்த பக்தர்கள் என்று இன்னொரு புகைப்படம்.

கங்கையை வழிபடுவது போல காவிரியையும் வழிபட ஆரம்பித்தால் காவிரியிலும் நீர் பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்து விடும் என்று ஒரு அபத்தத்துடன் கட்டுரையை முடிக்கிறார். 'கங்கையிலும் சாக்கடை, கழிவுகள் கலக்கின்றன, காவிரி கர்நாடக மழை வெள்ளத்தினால் மட்டுமே நீர் பெறுகிறது, கங்கை இமயமலை பனி உருகலிலும் நீரை பெறுகிறது' இதை எல்லாம் புறக்கணித்து விட்டு பக்தி மயமாக அடித்து விட்டிருக்கிறார்கள்.

இதில் நகரத்தின் பெயரை அலகாபாத் என்றுதான் எழுத வேண்டியிருக்கிறது.

கடைசி பக்கத்தில் "படைகள் மீது சந்தேகமா என்று மோடி விளாசல்", "மசூத் அஸார் மரணமா, வாய் திறக்க பாக் மறுப்பு" என்று தேர்தல் பிரச்சாரம். அமெரிக்க பல்கலையில் இந்தியருக்கு பதவி, இலங்கை பிரதமர் திருப்பதியில் என்று இந்து மத, இந்திய பிரச்சாரம்.

12-ம் பக்கத்தில் ராணுவ வெறி, எதிரி நாட்டின் மீது வெறுப்பைத் தூண்டும் வகையில் ஒரு முக்கால் பக்கக் கட்டுரை.

ஒரு பக்க பொருளாதார செய்திகள், அதில் ஜி.டி.பி வளர்ச்சி குறைந்திருப்பது, போர் அபாயம் சந்தையை பாதிப்பது என்று எழுதுகின்றனர்.

கூட்டணி விவகாரங்கள் பற்றி ஒரு பக்கம்.

“பாக் விமானத்தை விரட்டி அடித்தது எப்படி, அபிநந்தனின் சாதுர்யத்தை குறித்து பரபரப்பு தகவல் என்று ஒரு செய்தி. வாசகர் கடிதத்தில் அ.தி.மு.க தலைமையில் ஜனநாயக சக்திகள் ஒன்று சேர்வதாகவும், பாக்.கிற்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்றும் கருத்துக்கள்.

அதன் பிறகு போலீஸ் செய்திகள் ஒரு பக்கம் முழுவதும்.

அண்ணா நூலகத்தில் தனியார் நிறுவனம் நடத்திய அரசியல் நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுத்தது குறித்து கல்வியாளர்கள், புத்தக வாசிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்தார்களாம். தேர்தல் பிரச்சார அரசியல் கூட்டத்துக்கு பள்ளிக் கல்வித் துறை அனுமதி அளித்திருக்கிறது. கோட்டூர்புரத்தில் உள்ள இந்த நூலகத்தில் இப்படி நடந்ததை விமர்சிக்கிறது

கருத்துகள் இல்லை: