வெள்ளி, மார்ச் 08, 2019

ராணிப்பேட்டை டேனரி படுகொலையில் சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் பங்குண்டா?

டுத்த காட்சி. 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் 30-ம் தேதி ராணிப்பேட்டையில் நடந்த ஒரு விபத்து பற்றியது. அதில் 10 வட மாநிலத் தொழிலாளர்கள் உயிரோடு சேற்று சுனாமியில் புதைக்கப்பட்டு கொல்லப்பட்டார்கள்.

ராணிப்பேட்டை நகரம் இருப்பது சென்னையில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தூரம்தான். 1970-80-களில் தோல் பதனிடும் தொழிலை மிகப்பெரிய அளவில் அங்கு கொண்டு வருகிறார்கள். சிப்காட் 1, சிப்காட் 2 என்று அரசே நிலத்தை கையகப்படுத்தி, விவசாய கிராமங்களுக்கு மத்தியில் டேனரிகளை கொண்டு வருகிறார்கள்.


பொதுவாக, தோல் பதனிடுவதற்கு பயன்படுத்தும் இரசாயனங்கள் கழிவு நீரில் வெளியேறும். ஐரோப்பாவில் கழிவு நீரை சுத்திகரித்துதான் வெளியில் விட வேண்டும் என்று சட்டம் இருக்கிறது. இந்தியாவில் அடுத்த 25 ஆண்டுகளுக்கு (1990-கள் வரை) யாருமே சுத்திகரிப்பு செய்யவில்லை. இரசாயனம் கலந்த கழிவு நீரை அப்படியே வெளியிட்டனர்.
அது சுற்றியிருந்த கிராமங்களில் நிலத்தையும் நிலத்தடி நீரையும் நஞ்சாக்கியது. 1990-களில் ஒரு என்.ஜி.ஓ போட்ட மனுவில் உச்ச நீதிமன்றம் கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலை இல்லை என்றால் எல்லா பதனிடும் தொழிற்சாலைகளையும் இழுத்து மூடி விடும்படி உத்தரவிட்டது.

இதற்கு அரசு நிதி ஒதுக்குகிறது. இங்கிலாந்தில் இருந்து, நெதர்லாந்தில் இருந்தும் நிபுணர்கள் வருகின்றனர். ஒவ்வொரு பகுதிக்கும் பொது சுத்திகரிப்பு ஆலை ஒன்றை ஏற்படுத்துகின்றனர். அதாவது, 100 ஆலைகள் இருந்தால் அவர்கள் அனைவரும் கழிவுநீரை வெளியிடுவதை ஒன்றாக சேர்த்து சுத்திகரிப்பார்கள். இத்தகைய சுத்திகரிப்பு ஆலை ராணிப்பேட்டை சிப்காட் 1-ல் இயங்கி வருகிறது.

இரசாயனம் கலந்த கழிவு நீரை சுத்தப்படுத்தும் போது கரைந்திருந்த இரசாயனங்கள் எல்லா்ம் பிரித்து எடுக்கப்படும். தண்ணீர் சுத்தமாக்கப்பட்டு வெளியில் விட்ட பிறகு (அப்படி சுத்தமாக்கப்படுகிறதா என்பது வேறு கேள்வி, அதை இங்கு பேசப் போவதில்லை) பிரித்து எடுக்கப்பட இரசாயனங்களின் சேறு, சகதி மிஞ்சும். இதை என்ன செய்வது? பொதுவாக அதை காயவைத்து லாரியில் எடுத்துச் சென்று அதற்கென்று ஏற்பாடு செய்யப்பட்ட நிலத்தில் கொட்டி வைக்க வேண்டும். இந்த சுத்திகரிப்பு ஆலையில் கழிவு இரசாயன சகதியை சேமித்து வைப்பதற்கு ஒரு தொட்டி கட்டியிருந்தார்கள். தொட்டி நிரம்பியதும் அதை அப்புறப்படுத்த வேண்டும். ஆனால் அதை எடுத்துக் கொண்டு போகவில்லை. குறிப்பிட்ட கட்டத்தில் தொட்டி நிரம்பி விட்டது. தொட்டிக்கு பக்கத்தில் எந்தவிதமான முறையான திட்டமும், வடிவமைப்பும் செய்யாமல் மதில் கட்டி சகதியை கொட்ட ஆரம்பிக்கிறார்கள்.

இந்தச் சுவரை ஒட்டி சுமார் 4-6 டன் சகதி தேங்கி நிற்கிறது. அதற்கு பக்கத்தில் சுவரை ஒட்டி ஆர்.கே லெதர்ஸ் என்ற தோல் ஆலை உள்ளது. ஜனவரி 30-ம் தேதி இரவு சகதியின் அழுத்தத்தால் சுவர் உடைந்து போனது. சகதி சுனாமி போல வெளியேறி அந்தப் பகுதி முழுக்க சேறு நிரம்பி விட்டது. பக்கத்தில் இருந்த டேனரியில் 10 தொழிலாளர்கள் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்கள்.



அது ஒரு தொழிற்பேட்டை, இரசாயனம் பயன்படுத்தும் இடம். சாதாரணமாக வேலை செய்ய அனுப்பினாலேயே முகத்தை மூடி, கையில் உறை போட்டுத்தான் போக வேண்டும். இங்குதான் 10 பேர் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்கள். இந்த 10 தொழிலாளர்களும் சேறில் மூழ்கடிக்கப்பட்டு, இரசாயனத்தில் மூச்சுத் திணறி, மின் கசிவில் பரவிய மின்சாரத்தில் சிக்கிக் கொல்லப்பட்டனர். 10 பேரும் மேற்கு வங்கத்தின் மிதினாப்பூர் மாவட்டத்தில் இருந்து வந்தவர்கள். இங்கு இந்த தோல் தொழிற்சாலையில் வேலை செய்ய வந்திருக்கிறார்கள்.

எனக்கு இது தனிப்பட்ட முறையில் நெருக்கமான இடம். ராணிப்பேட்டையில் தொழில் தொடர்பாக பல முறை சுற்றி வந்திருக்கிறேன். ஆர்.கே லெதர் நிறுவனத்தை பற்றி பலமுறை பேசியிருக்கிறேன். இதை எப்படி புரிந்து கொள்வது? இதற்கு எங்கு போய் விளக்கம் தேடுவீர்கள்?

இந்த டேனரியும் சரி, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையமும் சரி, சீனத் தொழிற்சாலையும் சரி பொருளாதாரத் துறையில்தான் வருகின்றன. ஆனால், நான் கல்லூரியில் படிக்கும் போது வாசித்த பால் சாமுவேல்சன் போன்றவர்கள் எழுதிய முதலாளித்துவ பொருளாதாரவியல் நூல்களில் இதற்கான விடை கிடைக்காது. "இது எல்லாம் எங்கள் துறையில் வராது, மாசுக் கட்டுப்பாட்டுத் துறை என்ன செய்து கொண்டிருந்தது, அரசு என்ன செய்தது" என்று இவற்றைப் பற்றிய ஆய்வை சமூகவியல் துறைக்கு ஒதுக்கி விடுவார்கள்.

இந்த ஒரு காட்சியை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஆர்.கே லெதர் என்பது என்ன? இந்த நிறுவனத்தின் பார்ட்னர்கள் நான் வேலை செய்த டாடா நிறுவனத்தில் நான் சேர்வதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு ஹாங்காங்கில் வேலை செய்தார்கள். டாடா நிறுவனத்தின் தோலை ஹாங்காங் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் பணியில் இருந்தார்கள். சிறிது காலத்துக்குப் பிறகு டாடா நிறுவனத்தை விட்டு விலகி தனியாக நிறுவனம் ஆரம்பித்து ராணிப்பேட்டையில் தாமே ஆலை நடத்தி தோல்களை சீன தொழிற்சாலைகளுக்கு ஹாங்காங் வழியாக ஏற்றுமதி செய்யும் தொழிலை நடத்தினார்கள்.

ஆர்.கே லெதர்ஸ் ஆகட்டும், டாடா நிறுவனம் ஆகட்டும், இந்தியாவில் உற்பத்தி ஆகும் தோலை ஹாங்காங் அலுவலகம் மூலமாக சீனத் தொழிற்சாலைகளுக்கு சந்தைப்படுத்தி வந்தனர். சீனத் தொழிற்சாலையில் உற்பத்தியாகும் தோல் பொருட்கள் அமெரிக்காவுக்கும், ஐரோப்பாவுக்கும் ஏற்றுமதி ஆகும்.


சென்னை சர்வதேச தோல் பொருட்கள் கண்காட்சி

ஹாங்காங் விற்பனை மீட்டிங்கில் என்ன நடக்கும்? அத்தகைய மீட்டிங் ஒன்றுக்கு நான். போயிருக்கிறேன்.

அமெரிக்காவின் பிராண்ட் நிறுவனத்தின் பிரதிநிதி வருவார். அமெரிக்க பிராண்ட் பிரதிநிதி, தோல் உற்பத்தி செய்யும் நிறுவனத்தைச் சேர்ந்தவர், சீனாவில் இருக்கும் காலணி உற்பத்தி நிறுவன பிரதிநிதி, ஹாங்காங் வர்த்தக நிறுவனத்தைச் சேர்ந்தவர். இந்த நான்கு பேரும் உட்கார்ந்து பேசுவார்கள். அடுத்த சீசனில் நைன் வெஸ்ட், அல்லது நைக், ரீபோக் போன்ற அமெரிக்க பிராண்ட் எத்தனை லட்சம் ஜதை காலணிகள் செய்வது என்று விவாதிப்பார்கள்.
"இதற்கு தேவையான தோலை இவரிடம் இருந்து இன்ன விலையில் வாங்கிக் கொள்ளுங்கள். இவர் இன்ன விலையில் காலணி உற்பத்தி செய்து தருவார்" என்று எல்லாவற்றையும் அமெரிக்க பிராண்ட் நிறுவனமே திட்டமிட்டு ஏற்பாடு செய்யும். காலணியில் என்ன மாதிரியான தோலை பயன்படுத்த வேண்டும், அதன் விலை என்ன என்பது வரை முடிவு செய்து சொல்லி விடுவார்கள்.

இப்போது கேள்வி, ராணிப்பேட்டையில் நடந்த விபத்துக்கு யார் பொறுப்பு? தோல் தொழிற்சாலை முதலாளியா, சீன காலணி உற்பத்தி நிறுவனமா, ஹாங்காங் வர்த்தக நிறுவனமா, அல்லது அமெரிக்க பிராண்ட் நிறுவனமா அல்லது எல்லோருமா?
பொதுவாக என்ன சொல்கிறார்கள்? "இந்தியாவில் சிஸ்டம் சரியில்லை, லஞ்சம் தலை விரித்து ஆடுகிறது. இந்திய முதலாளி அவர்கள் நாட்டு தொழிலாளியையே ஈவு இரக்கம் இல்லாமல் சுரண்டுகிறார். ஏன் டேனரியில் தூங்க வைத்தார்கள். இந்தியாவில் சிஸ்டத்தை சரி செய்ய வேண்டும்" என்கிறார்கள்.

ஜான் ஸ்மித் இந்த வாதத்தை மறுக்கிறார். உலகளாவிய இந்த உற்பத்திச் சங்கிலி எப்படி இயங்குகிறது? இதை எப்படி புரிந்து கொள்வது என்று அவர் விளக்குகிறார்.

(காரல்) மார்க்சிடமும் (ஜான்) ஸ்மித்திடமும் கற்றது - 2
(3-வது பகுதியில் தொடரும்....)
  1. உலகளாவிய உற்பத்தியும் கனவு கண்ட மென்பொருளும்
  2. ராணிப்பேட்டை டேனரி படுகொலையில் சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் பங்குண்டா?
  3. அமெரிக்க ஆப்பிளுக்கு அடிமைகளாக உழைக்கும் சீனத் தொழிலாளர்கள்
  4. ஆப்பிள் முதலான மேற்கத்திய பிராண்டுகளின் லாபத்தின் ரகசியம்ம்
  5. உலகளாவிய உற்பத்தியும் பொருளாதாரவியல் விளக்கங்களும்
  6. மார்க்சின் மூலதனமும் 21-ம் நூற்றாண்டின் உலக முதலாளித்துவமும்

கருத்துகள் இல்லை: