திங்கள், அக்டோபர் 22, 2007

சோஷலிசம்தான் தீர்வா (அசுரன்) - 2

'வயிறு காய்ந்தால்தான் வேலை பார்ப்பான்' என்று மிருக நிலையில் வைத்து செயல்படுவது ஒரு முறை. 'தன் திறமைகளைப் பயன்படுத்தி தன்னால் இயன்ற மிகச் சிறந்த வேலையை செய்ய முயல்வான்' என்பது நாகரீகமடைந்து கிராமங்களிலும், நகரங்களிலும் வாழும் மனிதர்களிடம் எதிர்பார்க்கக் கூடிய மாண்பு.

இந்த பணியின் பலன் யாருக்குப் போய்ச் சேர வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது சிவப்பு உடையோ, கதர் உடையோ, காவி உடையோ, அணிந்த ஒரு கூட்டத்தினரின் உரிமையாக இல்லாமல், அவரவர் தமது உழைப்பின் பலனை தன்னைச் சுற்றி இருப்பவரில் அதிகத் தேவை இருப்பவருக்குப் பயன்படும்படி செலவழிக்கும் உரிமை இருக்க வேண்டும். யாருக்கு அதிகத் தேவை, அதை எப்படி அவருக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று முடிவெடுக்கும் உரிமை தனிமனிதருக்கு இருக்க வேண்டும்.

அந்த நோக்கம் எப்படி எல்லோருக்கும் தோன்றும்?

அத்தகைய நோக்கம் இல்லா விட்டால் என்னதான் புரட்சி செய்தாலும் உள்ளே இருந்து கொண்டே குழி பறித்துக் கொண்டே இருப்பார்கள் அவர்கள். பொதுவுடமை, சமூக நலன் அடிப்படையாக இயங்குபவர்கள் முதலாளித்துவ சந்தைப் பொருளாதார அமைப்பிலும், பேராசையும் சுயநலமும் தவிர்த்து தமது திறமையையும் வருமானத்தையும் பொறுப்புடன் பயன்படுத்துவார்கள். அந்த அடிப்படை மனதில் விதைக்கப்படாதவர்கள், இரும்புத் திரை அல்லது மூங்கில் திரைக்குள்ளும் எப்படி தனது பேராசைக்குத் தீனி போடுவது என்று வழி தேடிக் கொண்டிருப்பார்கள்.

அடிப்படையில் மனிதர்கள் மனம் மாறா விட்டால் சமூகம் மாற முடியாது.

காந்தி போராடித்தான் சுதந்திரம் வந்ததா?
தார்மீக உரிமை மாற்றுவதுதான் மாற்றத்தின் முதல்படி. 'ஜாலியன் வாலாபாக்கில் படுகொலைகள் செய்துதான் பிரித்தானிய பேரரசு இந்தியாவில் நீடிக்க முடியும்' என்று ஆன நாளில் பலர் மனதில் காலனி அரசு தனது அரசாளும் உரிமையை இழந்து விட்டது.

இன்றைக்கு இந்திய அரசமைப்பை சாடும் குழுவினரும் அதைத்தான் நாடுகிறார்கள். பெருவாரியான நடுநிலை மக்களின் மனதில் அமைப்பைக் குறித்த நம்பிக்கையைத் தகர்த்து விட்டால் மாற்றம் தொடங்கி விடும். மாற்றம் என்பது மானிட தத்துவம். ஒன்று போய் மற்றது வருவது தவிர்க்க முடியாத நிகழ்வு. அந்த மாற்றங்களுக்கான தளம் ஏற்படுத்திக் கொடுப்பதும் ஒரு அமைப்பின் பொறுப்பாக இருக்க வேண்டும்.

ஒரு அமைப்பை மாற்றி அதன் இடத்தைப் பிடிக்க பல கொள்கைகள் போட்டி போடும். அதில் எது வெற்றி பெறும், அடுத்தக் கால கட்டத்தில் எத்தகைய அமைப்பு நிலை பெறும் என்று சொல்ல முடியாது. கடை விரிக்க எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. அதிகம் பேர் கொள்ள வந்தால், வணிகம் தளைக்கும், இல்லை என்றால் கோணியைச் சுற்றிக் கொண்டு போக வேண்டியதுதான்.

இது இயல்பாக மனித சமூகத்தில் நடக்கக் கூடியது கார்ல் மார்க்ஸ் முன்கூறும் முதலாளித்துவத்தின் முதிர்ச்சியும் கம்யூனிசத்தின் மலர்ச்சியும் இந்த வழியில் வரக் கூடியவை. ஏதாவது ஒரு பிரிவினரின் சர்வாதிகார அமைப்பு அரசு அமைக்கும் போது மேலே சொன்ன மாற்றங்களுக்கான விதைகளை முயற்சிகளையே வேர் பிடிக்க விடாமல் செய்வது அரசாங்கத்தின் முக்கிய பணியாக ஆகி விடுகிறது.

யாரும் அமைப்பைக் குறை சொல்லிக் கருத்து தெரிவிக்கக் கூடாது. போராட்டங்கள் நடத்தக் கூடாது. அமைப்பில் தலைவர் அல்லது தலைமைக் குழு சொல்வதுதான் இறுதி முடிவு. அதற்கு மேல் மாற்றுக் கருத்து இல்லை என்று இருக்கும் அமைப்புகள் எல்லாம் வளர்ச்சி நின்று போன மரம் போல உளுத்து போய் உதிர்ந்து போகும்.

அப்படி உளுத்து உதிர்ந்த கோட்பாடுகளின் கொடி பிடித்து 'அந்தக் கோட்பாடுகளின் படி, அந்த வழிமுறைகளின் படி நடந்து கொண்டிருந்த போது சீனாவிலும் சோவியத் ரஷ்யாவில் பாலாறும் தேனாறும் ஓடியது. அந்த இன்பத்தைத் தாங்க முடியாத மக்கள் சதி செய்து ஏகாதிபத்திய வழிமுறைகளுக்கு வழி விட்டார்கள். நாமும் அதே வழியில் போவதுதான் தேவையான மாற்றம்' என்று செயல்பட்டுக் கொண்டிருப்பதுதான் புரட்சிகர இயக்கங்களின் வழி.

அது அவர்களின் உரிமை. பல விதமான கருத்துக்களும், கட்சிகளும், பத்திரிகைகளும், செயல்படலாம் என்பதுதான் இந்தியா போன்ற அரசமைப்புகளின் சிறப்பு.

உலகம் இது வரை கண்ட சமூக அமைப்புகளில் இப்போது செயல்படும் மக்களாட்சி முறையான
  • பெரும்பான்மை வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் சட்டமியற்ற,
  • படித்து பட்டம் பெற்ற அதிகாரிகள் பிரதிநிதிகளின் தலைமையின் கீழ் நிர்வாகம் நடத்த,
  • இரண்டையும் ஆரம்பத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட கொள்கைகளுக்கு உட்பட்டு செயல்படுகிறார்களா என்று நீதி மன்றங்கள் சோதித்துப் பார்க்க,
  • இதில் எல்லாம் என்ன ஓட்டைகள் இருக்கின்றன என்று வெளிச்சம் போட்டுக் காட்டும் ஊடகங்களும் சேர்ந்து
சிறந்தது.

இதில் இருக்கும் குறைகள் பல தெரிகின்றன. இது மாறி இதை விடச் சிறந்த முறை மலர வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. ஆனால் இதற்கு மாற்று இதை விட மோசமான, மனிதர்களை இயந்திரங்களாக நடத்திய முறைதான் என்று சொல்வது எப்படி சரியாகும்?

சோஷலிசம்தான் தீர்வா? (அசுரன்)

21 கருத்துகள்:

வடுவூர் குமார் சொன்னது…

போன பதிவு,இந்த பதிவை படிக்கும் போது "நாம் இன்னும் ஒரு சமுதாயமாக எப்படி வாழவேண்டும் என்பதே கண்டுபிடிக்கவில்லை/தெரியவில்லை" என்பது போல் தோன்றுகிறது. :-(

dondu(#11168674346665545885) சொன்னது…

சோவியத் யூனியனும் சரி கம்யூனிஸ்ட் சைனாவும் சரி தொழிலாளர் சர்வாதிகாரம் என்ற பெயரில் சில கட்சி பெரும்புள்ளிகள் ஆட்சி செய்ததுதான் நடந்தது. அசுரன் அவர்கள் தூக்கி பிடிக்கும் ஸ்டாலின் போன நூற்றாண்டு முப்பதுகளில் குலக் எனப்படும் சிறு நில உரிமையாளர்களை லட்சக் கணக்கில் கொன்று குவித்தான்.

செய்திகள் தணிக்கை காரணமாக பாலாறும் தேனாறும் ஓடியதாக வெளி ஆட்களை ஏமாற்றி வந்தனர். ஆனால் கௌளி சொல்லும் பல்லி தானே கழுநீர்ப்பானையிலே விழுந்த கதையாக தலைவர்களே அச்செய்திகளை நம்பத் தொடங்கவே சோவியத் யூனியன் என்ற ஸ்தாபனம் நிலைகுலைய ஆரம்பித்தது. அது எவ்வளவு புறையூடி போயிருந்தது என்பது இப்போதுதான் தெரிகிறது. இருப்பினும் நம்மூர் கம்யூனிஸ்டுகள் அந்த முறையையே பிடித்து தொங்குகின்றனர்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

K.R.அதியமான் சொன்னது…

////முதலாளித்துவ சந்தைப் பொருளாதார அமைப்பிலும், பேராசையும் சுயநலமும் தவிர்த்து தமது திறமையையும் வருமானத்தையும் பொறுப்புடன் பயன்படுத்துவார்கள். அந்த அடிப்படை ///

pls define greed and selfishness correctly. If Henry Ford, Bell, Edison or Bill Gates were not greedy or selfish for profits, then would we be better off now ?
can you explain what motivates all industrialists and entrepreners to produce, expand, ?

misusing or abusing nature thru uncontrolled pollution (ignoring laws, etc) can only be termed as greed. denouncing entreprener indutrialists as greedy or selfish will only de-motivate them or result in discouraging new ventures (like in our socialistic era, when they were looked upon as villains, exploiting innocent workers).

Slim, the mexican magnate who is now richest man in the world (also a philonthropist) has declared that 'my companies have wiped out more poverty than any of my charites' ; same with all companies inclu this google blogger and intel thru which we are communicating freely.

food production has become so cheap in the west in the past 100 years due to 'greedy' companies improving agri-technology. same with pharma and all other sectors.
their greed for profits have saved and helped more people than we can all imagine.

if there was no greed or motive for profits, then probably we all would have lived still as primitive society as hunter-gatherers. (what the comrades define as primitive communism when family and state did not evolve..)

dondu(#11168674346665545885) சொன்னது…

சிவக்குமார் அவர்களே,

உங்களுக்கு ஒரு விஷயம் தெரிய வாய்ப்பிருந்திருக்காது. முதலில் போனஸ் என்று வந்ததே தனிப்பட்ட முதலாளிகள் தாங்களாகவே விருப்பப்பட்டு கொடுத்ததுதான். அதுவும் பண்டிகை சமயங்களில் வரும் ஆர்டர்களை முடிக்க அவர்கள் தந்த ஊக்கத் தொகையாகவே பெரும்பாலான நேரங்களில் அமைந்தது. அதே போனஸ் பிற்காலத்தில் "deferred wage" என்று உருவாக்கம் பெற்றது.

இதில் வேடிக்கை என்னவென்றால் அரசு கம்பெனிகளின் ஊழியர்களுக்கு போனஸ் கிடையாது. ஏன் தெரியுமா? அவை லாப நோக்கில் செயல்படாது, வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதை முக்கிய நோக்கங்களில் ஒன்றாக கொண்டதாகக் கூறப்பட்டதே காரணம்.

எச்.எம்.டி. பெங்களூர் அதே கருத்தை கூறியபோது நீதி மன்றம் வேறுவித வாதத்தை ஏற்றுக் கொண்டது. அதாவது a company without profit motive has no business existing. பிறகுதான் போனஸ் எல்லோருக்கும் விஸ்தரிக்கப்பட்டது.

லாப நோக்கையே குறைகூறிய மாண்புமிகு இந்திரா காந்தியால் நாடே குட்டிச்சுவராயிற்று. 1991-ல் அரசு தன் தங்கத்தையே அடகு வைக்க வேண்டி வந்தது. இத்தனைக்கும் ராஜாஜி அவர்கள் கேலியாகக் குறிப்பிட்ட பெர்மிட் லைசன்ஸ் கோட்டா ராஜ்ஜியமே காரணம் என்றால் அது மிகையாகாது.

வல்லான் முதலில் பொருள் குவிக்கட்டும், கூடவே ஏதேனும் தர்ம காரியங்கள் அவரவர் மன நிலைக்கு ஏற்றபடி செய்யட்டும் (செய்கிறார்களே, இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி போன்றவர்கள்). ஆனால் அதிலும் வந்து அரசியல்வியாதிகள் குட்டையைக் குழப்புவர். இதே நாராயண மூர்த்தி அவர்கள் ஒரு ஆஸ்பத்திரி கட்டி துவக்கவிழா நடத்திய போது தலைமை தாங்கிய வெத்து வேட்ட் மந்திரி ஒருவர் இன்னும் நாராயண மூர்த்தி செய்யவேண்டியதாக தான் நினைத்ததை பட்டியலிட்டு அவற்றை செய்ய கோரிக்கை விடுக்காது, அதிகாரமாக கூறிவிட்டு வேறு சென்றார். இதைத்தான் அதிகாரப் பிச்சை என்பார்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

மு. மயூரன் சொன்னது…

இந்திய சுதந்திரம் போராடிப் பெறப்பட்டதல்ல என்று ஒரு பொதுவான கருத்து இருக்கிறது. அகிம்சைக்கு அடிப்பணிந்துதான் ஆங்கிலேயர் இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக்கொடுத்ததாக இன்னும் நம்மில் சிலர் நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

இப்படி நாம் நம்பவைக்கப்படதற்குப்பின்னாலும், பகத்சிங் அவசர அவசரமாக தூக்கிலிடப்பட்டமைக்கு பின்னாலும் நிறைய சூழ்ச்சிகள் இருக்கின்றன.

உண்மையில் இரண்டாம் உலகயுத்தத்தில் ஞெர்மனியிடம் வாங்கிய அடியில் பிரித்தானியாவும் ஐரோப்பாவும் நிலை குலைந்து போயின. ஞெர்மனி போன்ற நாடுகளுக்கு எதிராக ஐ. நா வில் கொண்டுவரப்பட்ட சட்டங்கள் நேரடியாகவே அக்கால காலனியாதிக்க நாடான பிரித்தானியாவைத் தாக்கியது. பிரித்தானியா வேறு வழி இல்லாமல் தன் காலனிகளுக்கு விடுதலை கொடுக்கவேண்டிய நெருக்குவாரம் ஏற்பட்டது.

இந்தச்சூழலிலே இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுக்கவேண்டிய தேவை ஏற்படுகிறது.
காந்தியை தூக்கிப்பிடித்ததற்குப்பின்னால் நிறைய சுயநலங்கள் இருக்கின்றன. காந்தி எப்போதும் அதிகார வர்க்கத்துக்கு சார்பாகவே இருந்தார். அத்தோடு காந்தியின் கொள்கைகள் ஏகாதிபத்தியத்துக்கு சேவகம் செய்வனவகவும் இருந்தன. கந்தி இந்தியாவின் தேச பிதாவாவது பிரித்தானியாவுக்கு பல வழிகளில் வசதியாக இருந்தது.

மேலும்,

இரண்டாம் உலகப்போரில் ஞெர்மன் தோற்றதற்கு மூல முதற்காரணம் சோவியத் யூனியன்.

சோவியத் யூனியன் தான் நாசிச அதிகாரத்தை ஓட ஓட விடட்டி அவர்களது குகை வரைக்கும் வந்து அழித்தொழித்தது.

அதுவரைக்கும் மற்ற நாடுகளை ஞெர்மன் தாக்கிக்கொண்டிருந்தபோது ஜெர்மன் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு ஆயுதமும் மூலப்பொருட்களும் விற்று அமெரிக்கா உழைத்துக்கொண்டிருந்தது.

மா சிவகுமார் சொன்னது…

//நாம் இன்னும் ஒரு சமுதாயமாக எப்படி வாழவேண்டும் என்பதே கண்டுபிடிக்கவில்லை/தெரியவில்லை//

தேவையில்லாத விவாதங்கள் என்பதை நானும் உணர்கிறேன் குமார். கிடக்கிற வேலை ஆயிரம் இருக்க இது போன்று நேரம் வீணாக்குவது தேவை இல்லைதான்.

டோண்டு சார்,
//சில கட்சி பெரும்புள்ளிகள் ஆட்சி செய்ததுதான் நடந்தது. //
அடிப்படையில் மனப்போக்குகள் மாறாத வரை, under capitalism man exploits man, under socialism it is the otherway round என்பதுதான் நடக்கும்.

அன்புடன்,
மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

வணக்கம் அதியமான்,
//can you explain what motivates all industrialists and entrepreners to produce, expand, ? //

தனது திறமைகளைப் பயன்படுத்தி பலனுள்ள படைப்புகளை உருவாக்க வேண்டும் என்ற தாகம்.

//my companies have wiped out more poverty than any of my charites//

அப்படி ஒரு சில நிறுவனங்கள் இருந்தால், நீதி நியாயம் பார்க்காமல் சுரண்டும், சமூக அரசியல் சட்டங்களை மீறி செயல்படும் நிறுவனங்கள் எத்தனை உருவாகின்றன?

//தர்ம காரியங்கள் அவரவர் மன நிலைக்கு ஏற்றபடி செய்யட்டும்//

ஏதோ போனால் போகிறது என்று செய்வது இல்லை தர்ம காரியங்கள். போனஸ் என்பது தாமதமாகக் கொடுக்கப்படும் ஊதியம் என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

மயூரன்,

இந்திய சுதந்திரம் குறித்த உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. ஒரு வரலாற்று நிகழ்வுக்கு ஒரே காரணத்தை மட்டும் கற்பிக்க முடியாதுதான். பல செயல்பாடுகளின் ஒட்டு மொத்த விளைவாக மாற்றங்கள் ஏற்படுகின்றன.

அன்புடன்,
மா சிவகுமார்

மு. மயூரன் சொன்னது…

இலாபமும் பணமும் தான் ஒருவரது உழைப்பையும் வளர்ச்சியையும் உந்தும் என்கிற சுயநலக் கோட்பாட்டை நீங்களும் ஏற்றுக்கொண்டுவிட்டீர்களோ என்று பயந்துகொண்டிருந்தேன்.

மனிதரது முயற்சிகளுக்கும் வளர்ச்சிக்கும் உந்துசக்தியாயிருப்பது இலாப நோக்கமும் பணம் சம்பாதிப்பதுமல்ல என்பது தொடர்பான உங்கள் தெளிவு மகிழ்ச்சியளிக்கிறது.

பணம் தான் எல்லாம் என்பவர்கள் மனிதரின் ஆதார உணர்ச்சிகளான கூடிவாழ்தல், நேசித்தல், மனித நேயம் போன்றவற்றை எல்லாம் வெறும் பொய்மைகளாக் காட்டி ஒரேயடியாக மறுத்துவிடுகின்றனர்.
இவைபற்றி பேசுபவர்களையும் நக்கலடித்து நகையாடுகின்றனர்.

என்ன செய்வது, இவர்களுக்கு சார்பானதும் சாதகமானதுமான சுயநலக்கொள்கைகளும், ஒருசிலர்வாழ மற்றவர்களை எல்லாம் சுரண்டும் ஏகாதிபத்தியக் கொள்கைகளும் கொண்ட சக்திகளே இன்று உலகில் வெற்றிகரமாக ஆதிக்கத்திலிருக்கின்றனர்.

மனிதருக்கெதிரான கொள்கைகளைக்கொண்ட , மனிதரின் ஆதார உணர்ச்சிகளை எல்லாம் காசுக்கு விற்றுவிட்ட முதலாளித்துவத்தின் அடிப்படையில் இயங்கும் அமெரிக்கா போன்ற நாடுகளின் பெருவெற்றியும் அரியாசனமும் இவர்களை இவ்வளவு பேச வைக்கிறது.

மனிதர் நலம் காப்பது தொடர்பான, மனித விடுதலை தொடர்பான கருத்துக்களும் முயற்சிகளும் இவர்களுக்கு முன்னால் அடிபட்டு வெறும் கேலியாய்ப் போய்விடுவது வருத்தத்துக்குரியதே.

மனிதநேயமும், மனித விடுதலை விரும்பிகளும் அதிகாரத்திற்கு வரும்வரை இருளின் ஆட்சி தொடரும்.

மா சிவகுமார் சொன்னது…

வணக்கம் மயூரன்,

//மனிதரது முயற்சிகளுக்கும் வளர்ச்சிக்கும் உந்துசக்தியாயிருப்பது இலாப நோக்கமும் பணம் சம்பாதிப்பதுமல்ல என்பது தொடர்பான உங்கள் தெளிவு மகிழ்ச்சியளிக்கிறது.//

மனிதனை மிருகமாகவே வைத்திருக்க முயலும் கோட்பாடுகளே இலாப நோக்கமும் பணம் சம்பாதிப்பதுமே அவனைச் செலுத்துகின்றன என்று சொல்லும்.

//மனிதருக்கெதிரான கொள்கைகளைக்கொண்ட , மனிதரின் ஆதார உணர்ச்சிகளை எல்லாம் காசுக்கு விற்றுவிட்ட முதலாளித்துவத்தின் அடிப்படையில் இயங்கும் அமெரிக்கா போன்ற நாடுகளின் பெருவெற்றியும் அரியாசனமும் இவர்களை இவ்வளவு பேச வைக்கிறது.//

கொஞ்சம் நிதானித்து யோசித்துப் பாருங்கள் மயூரன். உண்மையாக வெற்றி பெற்றவர்கள் மனிதருக்கெதிரான கொள்கை கொண்டவர்கள் கிடையாது.

மனிதநேயமும் கொண்டவர்களும், மனித விடுதலை விரும்பிகளும்தான் சாதித்துக் காட்டுகிறார்கள். அவர்களது உழைப்பைத் திசை திருப்பி தமது வெறுப்பு அரசியலுக்குப் பயன்படுத்திக் கொள்ளும் சுயநல வாதிகள்தான் நமது பிரச்சனை. அயன் ராண்ட் எழுதிய atlas shrugged என்ற நாவலை வாய்ப்புக் கிடைத்தால் படித்துப் பாருங்கள்.

அன்புடன்,
மா சிவகுமார்

K.R.அதியமான் சொன்னது…

///மனிதனை மிருகமாகவே வைத்திருக்க முயலும் கோட்பாடுகளே இலாப நோக்கமும் பணம் சம்பாதிப்பதுமே அவனைச் செலுத்துகின்றன என்று சொல்லும். ///

MaSi,

We are both entrepreners running our small companies for a profit motive. are we like as you say above ? do we lack kindness or humanity ?

do not confuse manithaneyam with ordinary human endeavour for a 'profit' ; you yourself has written about the funtions of profit and price in your econmic blog.

no one has answered my point about food production and costs becomming dramatically cheaper in the past 120 years due to profit motive agri-tech cos enterprises (like tractors, water pumps, etc). these profit motives of cos have wiped out more hunger in mankind's long and torturous history than anything else...

பெயரில்லா சொன்னது…

Its heartening to see a real socialist turning the ideology of inhumanism i.e., socialism on its head.

பெயரில்லா சொன்னது…

"நீதி நியாயம் பார்க்காமல் சுரண்டும், சமூக அரசியல் சட்டங்களை மீறி செயல்படும் நிறுவனங்கள் எத்தனை உருவாகின்றன?"

Mr.Siva,
You seem to be confused.
It is the duty of the government to protect citizens from law breaking entities. If the govt fails in its basic duties you should be blaming the govt and the specific parties involved.
You cannot blame the private sector as a whole.

பெயரில்லா சொன்னது…

தரம்பால் எனும் காந்தியவாதி.. நம் 800 களில் நாடிருந்த நிலையைக் கண்டு விண்டியவை கருதத் தக்கவை..

http://www.samanvaya.com/dharampal/

மா சிவகுமார் சொன்னது…

அனானி,

//Its heartening to see a real socialist turning the ideology of inhumanism i.e., socialism on its head.//
நான் எப்போ சோசலிஸ்டா இருந்தேன், எப்போ மனித நேய விரோதியாக இருந்தேன். இப்போ என்ன மாறினேன் என்று புரியவில்லை.

//It is the duty of the government to protect citizens from law breaking entities. If the govt fails in its basic duties you should be blaming the govt and the specific parties involved.
You cannot blame the private sector as a whole.//

உண்மையிலேயே புரியவில்லைதான்!

ஆமாச்சு,
வருகைக்கும் சுட்டிக்கும் நன்றி.

அன்புடன்,
மா சிவகுமார்

Osai Chella சொன்னது…

normally the present day communists understand the democracy better it seems. they have policy like anti corruption. the real issue is a few extremists and fanatics of marxism! Nice counter points siva. But asuran will come back soon!

மா சிவகுமார் சொன்னது…

//the real issue is a few extremists and fanatics of marxism! Nice counter points siva. But asuran will come back soon!//

நன்றி செல்லா. ஒரு காலத்துக்கும் இடத்துக்கும் பொருந்தும் கொள்கைகளை, அப்படியே இன்னொரு காலத்தில் இடத்தில் செயல்படுத்த முடியாது.

இந்துத்துவா 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பொற்காலத்தை கொண்டு வருவதாகச் சொல்வதற்கும், சீன, ரஷ்ய சோஷலிச முறையினால் பொற்காலம் உருவாக்கி விடலாம் சொல்வதற்கும் என்ன வேறுபாடு என்பது என்னுடைய வியப்பு.

எப்படியானாலும் சில வாரங்கள் நிதானித்து அப்புறம் விவாதத்தை தொடரலாம் என்று தீர்மானித்திருக்கிறேன்.

அன்புடன்,
மா சிவகுமார்

thiagu1973 சொன்னது…

உள்ளத்துள் ஒரு புரட்சி என்றார்
ஜெ கிருஸ்ணமூர்த்தி

இம்மாதிரி அகத்தைதிருத்தினால் புறம் திருந்து என்பதன் அடிப்படை கருத்து

கருத்தே முதன்மையானது எனும் நிலைபாடுதான்

ஆனால் புறம் தான் அகத்தை தீர்மானிக்குது

எப்படின்னா ஈழத்தின் இனிமேல் எப்படி அகிம்சை போராட்டம் சாத்தியமில்லையோ

அம்மாதிரிதான்

மனிதன் சிந்தனை ஆன்மா எல்லாமே

புறத்தில் இருந்தே வந்தது

பருபொருளின் ஆக உயர்ந்த துண்டுதான்
மனித மூளை -லெனின்

மா சிவகுமார் சொன்னது…

வணக்கம் தியாகு,

//இம்மாதிரி அகத்தைதிருத்தினால் புறம் திருந்து என்பதன் அடிப்படை கருத்து

கருத்தே முதன்மையானது எனும் நிலைபாடுதான் //

அதற்கும் பொருள் முதல்வாதத்துக்கும் உள்ள போராட்டம் பற்றி நீங்கள் எழுத ஆரம்பித்த இடுகை நினைவுக்கு வருகிறது.

//ஆனால் புறம் தான் அகத்தை தீர்மானிக்குது//

பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அண்ட பெருவெடிப்பிற்கு முன்பு புறமும் அகமும் அற்று இருந்தன. நிச்சயமற்ற கோட்பாட்டின் தப்பித்தலில் விளைந்த நேர் எதிர் துகள்களின் ஆட்டம்தான் இந்த உலகம் என்று அண்ட இயற்பியலில் சொல்வதாக புரிதல்.

புறம்தான் அகத்தை தீர்மானிக்குது என்பது உண்மையானால், குறிப்பிட்ட ஆரம்ப நிலையையும் இயற்பியல் விதிகளையும் வரையறுத்து விட்டால், உலகின் எதிர்காலத்தை திட்டமாக சொல்லி விடலாம் (மத்திய திட்டமிடும் குழு பொருளாதாரத்தை நடத்தி சென்று விடலாம்).

ஆனால், பருப்பொருளில் அணு உட்துகள்களின் உலகில் நிச்சயமற்ற தன்மையால், அதிபெரும் கணினிகளால் ஆரம்ப புள்ளிகளை முற்றிலும் வரையறுத்து விட்டாலும், அடுத்த நிமிடங்களில் எப்படி உலகம் நகர்ந்திருக்கும் என்று யாராலும் கணிக்க முடியாது என்பது அடிப்படை உண்மை.

//பருபொருளின் ஆக உயர்ந்த துண்டுதான்
மனித மூளை -லெனின்//

முற்றிலும் உண்மை. ஆனால் அந்தப் பருப்பொருளின் அடிப்படைத் துகள்கள், அகத்துக்கு, புறத்தைத் தாண்டிய தன்னிச்சையை வழங்குகின்றன.

//எப்படின்னா ஈழத்தின் இனிமேல் எப்படி அகிம்சை போராட்டம் சாத்தியமில்லையோ//

?!

அன்புடன்,
மா சிவகுமார்

thiagu1973 சொன்னது…

//பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அண்ட பெருவெடிப்பிற்கு முன்பு புறமும் அகமும் அற்று இருந்தன. நிச்சயமற்ற கோட்பாட்டின் தப்பித்தலில் விளைந்த நேர் எதிர் துகள்களின் ஆட்டம்தான் இந்த உலகம் என்று அண்ட இயற்பியலில் சொல்வதாக புரிதல்.

புறம்தான் அகத்தை தீர்மானிக்குது என்பது உண்மையானால், குறிப்பிட்ட ஆரம்ப நிலையையும் இயற்பியல் விதிகளையும் வரையறுத்து விட்டால், உலகின் எதிர்காலத்தை திட்டமாக சொல்லி விடலாம் (மத்திய திட்டமிடும் குழு பொருளாதாரத்தை நடத்தி சென்று விடலாம்).//

குறிப்பிட்ட ஆரம்ப கட்டமே விஞ்ஞான அடிப்படையில்தான் வரையறுக்கப்பட்டது

பெருவெடிப்பு அதன் காரணமாக கோள்கள் தோன்ருதல்

விரிந்து வரும் பெருவெளி

அது விரிய விரிய தோன்றும் இடமும் காலமும்

இதெல்லாம் விஞ்ஞான அடிப்படைகள்

ஆனால் இது எந்தகாலத்திலும் கருத்துமுதல் வாதிகளின் நிலை அல்ல.

விஞ்ஞானம் ஒவ்வொருகட்டத்திலும் கருத்துமுதல் வாதத்தை மறுத்து வருகிறது என்பதை நான் அந்த கட்டுரையில் எழுத ஆரம்பித்தேன் .

ஆகவே ஆரம்ப கட்டத்தை இன்னும் வரையறுக்கவில்லை என்பதை கருத்துமுதல் வாதத்தின்
ஒரு வாதமாக பயன்படுத்தவே முடியாது .

:))

அறிதல் தத்துவத்தின் கருவி விஞ்ஞானம் என எடுத்துகொண்டு விவாதித்தால்
கருத்துமுதல் வாதத்தின் முழுமுதல் ஆன்மா
கடவுள் கருத்துதான் தோன்றியது எல்லாமே

விஞ்ஞானத்தால் உடைக்கப்பட்டு

பெருவெடிப்பு என்கிற இடத்துக்கு வந்து இருக்கு என்பதை
நான் சொல்லாமலே விளங்கும்

சரியான அறிதல் நிகழ்ச்சி போக்கை விஞ்ஞானம் தான் தருகிறது நிகழ்ச்சி போக்கின் உயரிய கட்டத்தில் அனைத்திற்கும் விடை இருக்கும் அது வரைக்கும்

அது சொல்வதை ஒத்துகொள்ள முடியாதுன்னு சொன்னீங்கன்னா பூமி உருண்டை இல்லைன்னு
தான் நீங்க சொல்லனும்

மா சிவகுமார் சொன்னது…

ஆகா தியாகு,

//குறிப்பிட்ட ஆரம்ப கட்டமே விஞ்ஞான அடிப்படையில்தான் வரையறுக்கப்பட்டது
பெருவெடிப்பு அதன் காரணமாக கோள்கள் தோன்ருதல்
விரிந்து வரும் பெருவெளி
அது விரிய விரிய தோன்றும் இடமும் காலமும்
இதெல்லாம் விஞ்ஞான அடிப்படைகள்//

'அந்த அடிப்படைகள் எல்லாம் திட்டவட்டமாக வரையறுக்கப்பட்ட விதிகளின் கீழ் நடக்கவில்லை. ஒவ்வொரு துகளும், ஒவ்வொரு புள்ளியிலும், இயற்பியல் விதிகளுக்குட்பட்டு நிச்சயமின்மை கோட்பாட்டின் அடிப்படையில் (தன் விருப்பப்படி) நகர முடியும்' என்பதும் அதே விஞ்ஞான அடிப்படைதான்.

அப்படி இருக்கும் தன்னிச்சையைப் பயன்படுத்தி அதே பரிப்பொருளால் உருவான மனிதன், தனது கருத்துக்களை மாற்றி புறப் பொருட்களின் மீது தாக்கம் ஏற்படுத்தலாம்.

//விஞ்ஞானம் ஒவ்வொருகட்டத்திலும் கருத்துமுதல் வாதத்தை மறுத்து வருகிறது என்பதை நான் அந்த கட்டுரையில் எழுத ஆரம்பித்தேன் .//

தொடர்ந்து எழுதினால் கற்றுக் கொள்வோம்!

//அறிதல் தத்துவத்தின் கருவி விஞ்ஞானம் என எடுத்துகொண்டு விவாதித்தால் கருத்துமுதல் வாதத்தின் முழுமுதல் ஆன்மா கடவுள் கருத்துதான் தோன்றியது எல்லாமே விஞ்ஞானத்தால் உடைக்கப்பட்டு பெருவெடிப்பு என்கிற இடத்துக்கு வந்து இருக்கு என்பதை நான் சொல்லாமலே விளங்கும் //

கடவுள் என்ற கருத்தை தள்ளி வைத்து விட்டு இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஐன்ஸ்டைனின் 'ஆரம்பப் புள்ளிகளை வரையறுத்து விட்டால் அதன் பிறகான எல்லா நிலைகளையும் திட்டமிட்டு விடலாம்' என்ற செந்நிலை இயற்பியல் உடைந்து குவாண்டம் அளவில் நிச்சயமின்மை வந்த பிறகுதான் பெருவெடிப்பே புரிந்து கொள்ளப்படுகிறது.

எவ்வளவுக்கு கடவுள் மறுப்பை விஞ்ஞானம் உறுதிப்படுத்துகிறதோ அவ்வளவுக்கு பொருள் முதல் வாதத்தையும் உடைத்து விடுகின்றன விஞ்ஞான உண்மைகள் என்று நினைக்கிறேன்.

நம்ம கனடா வெங்கட் வந்தால் இன்னும் விரிவாக விளக்குவார் என்று நினைக்கிறேன்.

//நிகழ்ச்சி போக்கின் உயரிய கட்டத்தில் அனைத்திற்கும் விடை இருக்கும்//

அது இல்லை என்பதுதான் இன்றைய விஞ்ஞானத்தின் நிலை.

//அது சொல்வதை ஒத்துகொள்ள முடியாதுன்னு சொன்னீங்கன்னா பூமி உருண்டை இல்லைன்னு
தான் நீங்க சொல்லனும//

நான் எனக்குப் புரிந்த விஞ்ஞானத்தை முற்றிலும் ஏற்றுக் கொள்கிறேன். பூமி தட்டையும் இல்லை, உருண்டையும் இல்லை, அதற்கே உரித்தான வடிவில் இருக்கிறது என்றே அறிகிறேன் :-)

அன்புடன்,
மா சிவகுமார்

பெயரில்லா சொன்னது…

//
இந்துத்துவா 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பொற்காலத்தை கொண்டு வருவதாகச் சொல்வதற்கும், சீன, ரஷ்ய சோஷலிச முறையினால் பொற்காலம் உருவாக்கி விடலாம் சொல்வதற்கும் என்ன வேறுபாடு என்பது என்னுடைய வியப்பு.
//

இந்துத்வாவின் பழமைவாதிகள் (conservatives) தான் இதைச் சொல்கிறார்கள். 5000 ஆண்டுகளுக்கு முன்னர் என்றால், இன்றய சேரியில் வாழும் ஒருவன் அனுபவிக்கும் அடிப்படை வசதி கூட அரண்மனையில் கிடைக்காது.

இத்தகய பழமைவாதிகள் எங்கும் இருப்பார்கள், இருக்கிறார்கள். ஆனால், இந்துத்வா இயக்கத்தின் லிபரல் சிந்தனையாளர்கள் இதை ஏற்பதில்லை. மார்க்ஸீய லிபரலிஸ்டுகள் இன்றும் சோசியலிசம் பேசிக் கொண்டு, சோவியத் ரஷ்யாவிலிருந்து தூக்கி வீசப்பட்ட கொடுங்கோலர்களின் சிலையைத் திறந்துவைக்கிறார்கள். அவர்களைப் பற்றிப் பேசினால் வயிரு எரிந்து சாபம் கொடுக்கிறார்கள்.


இது தான் மார்க்ஸ்வாத லிபரல்களுக்கும் இந்துத்வா லிபரல்களுக்கும் உள்ள வேறுபாடு.