திங்கள், ஜனவரி 28, 2008

கொடும்பாவங்கள்

காந்தி அடிகளின் சமாதியில் இப்படி எழுதப்பட்டுள்ளதாம்

ஏழு கொடும்பாவங்கள்
  1. உழைக்காமல் ஈட்டிய செல்வம்
  2. கட்டுப்பாடு இல்லாத நுகர்வு
  3. மனிதம் இல்லாத அறிவியல்
  4. பண்பாடு இல்லாத அறிவு
  5. கொள்கை இல்லாத அரசியல்
  6. நேர்மை இல்லாத வியாபாரம்
  7. தியாகம் இல்லாத வழிபாடு
??????????

பகல் கொள்ளையர் - ரிலையன்சு

நான் ஏன் ரிலையன்சு பொருட்கள்/ சேவைகளை வாங்குவதில்லை?

சந்தைப் பொருளாதாரத்தின் சாபக்கேடு, வணிக நிறுவனங்களும் அரசு நிர்வாகங்களும் கள்ள உறவு வைத்து கொண்டு வாடிக்கையாளர்களையும் பொது மக்களையும் ஏமாற்றுவதுதான்.
  1. 'சிடிஎம்ஏ தொழில் நுட்பத்தில் செல்பேசி சேவை வழங்குபவர்கள், குறிப்பிட்ட வட்டாரத்துக்கு வெளியே இணைப்பு கொடுக்கும் ஊர்மாற்று சேவை (roaming) அளிக்க அனுமதி கிடையாது' என்ற விதிக்குட்பட்டு உரிமம் வாங்கிய ரிலையன்சு நிறுவனம், அந்த விதிகளை மீறி நாடெங்கும் ஊர்மாற்று சேவை வழங்கியது.
    சில வாரங்களுக்குப் பிறகு அது முறையீட்டு அமைப்பின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டதும், தண்டத் தொகையாக சில நூறு கோடி ரூபாய்கள் கட்டி விட்டு அத்தகையை சேவையையே அனுமதிக்க வைத்து விட்டது ரிலையன்சு.
    இது போல விதியை உடைத்து, மற்ற போட்டியாளர்களை விட சிறப்பு திறன் பெற்றுக் கொள்வது ரிலையன்சுக்குப் பழகிப் போன ஒன்று.

  2. கிராமப் புறங்களில் தொலைதொடர்பு சேவை வழங்கும் பொறுப்புடைய பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு மானியமாக தனியார் நிறுவனங்கள் ADC எனப்படும் இணைப்புக் குறைபாட்டுக் கட்டணம் கொடுக்க வேண்டும். வெளிநாட்டிலிருந்து ஒரு அழைப்பு இந்தியாவுக்கு வந்தால் கணிசமான தொகை குறைபாட்டுக் கட்டணமாக பிஎஸ்என்எல்லுக்குப் போகும்.
    அதை உடைத்து, கள்ளத்தனமாக பிஎஸ்என்எல் வலையமைப்பையே பயன்படுத்தி, உள்ளூரிலிருந்தே இணைப்பு வருவதாக பொய்த் தோற்றம் ஏற்படுத்தி கோடி கோடியாகச் சம்பாதித்தது ரிலையன்சு நிறுவனம்.
    உண்மை அம்பலமானதும் தண்டம் கட்டி விட்டுத் தொடர்ந்து அந்த சட்ட விரோதச் செயலை செய்து வருகிறது.

  3. நெகிழித் தொழிலில் வேறு போட்டியாளர்களை ஒழித்து முற்றுரிமை (monopoly) பெற்று விடும்படியான நடவடிக்கைகளை மேற்கொண்டு இப்போது முற்றுரிமையுடன் கொள்ளை ஆதாயம் சம்பாதிப்பதாக அந்தத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் நண்பர் தெரிவிக்கிறார்.

  4. சந்தைப் பொருளாதாரத்தில் பெரிய நிறுவனத்தின் உரிமையாளர்கள் என்ற பொறுப்பில் இருப்பவர்கள், தம்மிடம் வந்து சேரும் செல்வம் சமூகம் முழுவதற்குமானது. குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட பதவியில் நாம் இருப்பதால் நம்மிடம் வருகிறது என்று உணர்ந்து பொறுப்புடன் அதை மீண்டும் தொழில் வளர்ச்சிக்கோ, சமூக நலனுக்கோ பயன்படுத்த வேண்டும்.

    முகேஷ் அம்பானி 200 மில்லியன் டாலர்களுக்கு விமானம் வாங்கி தனது மனைவிக்கு பரிசளிப்பதும், 400 கோடி ரூபாய்களுக்கு சொந்த வீடு கட்டிக் கொள்வதுமாக பணத்தை ஊதாரித்தனமாக வீணாக்குகிறார்.
இப்படி தவறான வழிகளில் நிறுவனத்தை வளர்த்துத் தொழிலைப் பெருக்குவது, அப்படி அடாவடியாகப் பிடித்து சந்தை ஆதிக்கத்தின் மூலம் கிடைக்கும் ஆதாயத்தை பொறுப்பில்லாமல் செலவழிப்பது என்ற இரட்டைக் குற்றவாளியான ரிலையன்சு குழுமம் அரசாங்கத்தால் குற்றம் சாட்டப்பட்டு இழுத்து மூடப்பட்டிருக்க வேண்டும். அது நடக்காமல் போவதால், என்னளவில் அந்தக் குழுமத்தைப் புறக்கணித்து வருகிறேன்.
  • ரிலையன்சு பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் போடுவதில்லை.
  • ரிலையன்சு ஃபிரஷ் கடைகளில் பொருள் வாங்குவதில்லை.
  • ரிலையன்சு தொலைபேசிச் சேவைகளைப் பயன்படுத்துவதில்லை.
  • ரிலையன்சு இணையச் சேவைகளைப் பயன்படுத்துவதில்லை.
நெகிழித் துறையில் நாம் வாங்கும் பொருட்களில் பல ரிலையன்சுக்கு ஆதாயம் சேர்க்கின்றன என்பதை உணர்கிறேன். அவற்றின் முழு விபரமும் மாற்றும் கிடைத்தவுடன் அவற்றையும் புறக்கணிக்க ஆரம்பிப்பேன்.

ஞாயிறு, ஜனவரி 27, 2008

இப்படிச் செய்யலாமே!

  1. நாளிதழ் தினமும் படிப்பவர்கள் பழைய தாள்களை ஓரிரு மாதங்களுக்கு ஒரு முறை பழைய விலைக்குப் போடுவது வழக்கம். அதை நேரடியாகச் செய்யாமல் வீட்டில் வேலை பார்க்கும் வேலைக்கார அம்மா, அல்லது கட்டிடக்காவல்காரர் அல்லது அது போன்று அந்த நூறு ரூபாய்கள் பெரிதாகப் பயன்படுபவர்களிடம் கொடுத்து விற்றுக் கொள்ளச் சொல்லாமே!
  2. சமையல் வாயுவுக்கு அரசு ஒரு சிலிண்டருக்கு இருநூறு ரூபாய்களுக்கு மேல் மான்யம் வழங்குகிறதாம். அந்தக் கூடுதல் விலையைத் தாங்கிக் கொள்ள முடிந்த நாம் அரசு சமையல் வாயுவை புறக்கணித்து, அரசு நிறுவனங்களிடமிருந்து வணிக முறை இணைப்பையோ அல்லது தனியார் இணைப்பைப் பெற்றுப் பயன்படுத்தலாமே!
  3. பழைய பொருட்களை ஒழிக்கும் போது சட்டையோ, கால்சட்டையோ, பையோ, பாத்திரமோ ஆறு மாதங்களுக்கு மேல் பயன்படாமல் இருக்கிறது என்று பார்த்தால் அதைப் பயன்படுத்த முடிபவரிடம் கொடுத்து விடலாமே!

புதன், ஜனவரி 23, 2008

சீனா மனிதர்கள் மூலம் (வாங் ஷிங்)

சீனாவுக்குப் போனதும் யாரையும் பீடிக்கக் கூடிய ஒரு வியாதி உடனடி படிப்பறிவின்மை. அறிவிப்புகள், பெயர்ப்பலகைகள், தெருப்பெயர்கள் எங்கு பார்த்தாலும் சீன மொழி எழுத்துக்கள்தான் வரவேற்கும்.

மொழி கற்றுக் கொள்ளா விட்டால் பட்டினி கிடக்க வேண்டியதுதான். வேலை எப்படி பார்ப்பது?

ஆறு மாத கல்லூரி வகுப்பில் சேர்ந்து மொழி அறிவைத் தேத்திக் கொள்ளலாம் என்று விண்ணப்பித்தால், எங்கள் நிறுவனத்தில் அதற்கு முட்டுக்கட்டை போட்டு விட்டார்கள். ஓய்வு நேரத்தில் கற்றுக் கொண்டால் போதும்.

கூட வேலை பார்த்த சீன நண்பர் யாராவது வார இறுதிகளில் வந்து கற்றுத் தர ஏற்பாடு செய்வதாகச் சொன்னார். ஒரு நாள், 'நம்ம அலுவலகத்தை பெருக்கி தூய்மை செய்ய வரும் அம்மாவின் மகள் உனக்கு சீன மொழி கற்றுத் தருவாளாம்' என்று சொல்ல வேடிக்கையாக இருந்தது.

வாரா வாரம் சனிக்கிழமையும் ஞாயிற்றுக் கிழமையும் காலை வேளைகளில் 2 மணி நேரம் வகுப்பு. முதல் முதலில் சந்தித்த போது உருண்டை முகம், ச்சின்னக் கண்கள், உப்பிய கன்னங்கள், ஒல்லியான உருவம் என்று குழந்தைப் பொம்மை போல இருந்த அந்தப் பெண்ணா நமக்கு ஆசிரியர் என்று வியப்பாக இருந்தது.

சாங்காய் நார்மல் பல்கலைக் கழகம் என்ற ஆசிரியர் பயிற்சி அளிக்கும் கல்லூரியில் ஆங்கிலத்தில் பட்டப் படிப்பு படித்துக் கொண்டிருந்தாள் அந்தப் பெண். வாங் ஷிங் என்று பெயர். வாங் என்பது குடும்பப் பெயர் ஷிங் என்பது கூப்பிடும் பெயர். இது போதாது என்று சீனாவின் இளைஞர்களுக்கு ஆங்கிலப் பெயர் ஒன்றையும் சூட்டி விடுகிறார்கள்.

'நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது எங்க ஆங்கில ஆசிரியர் பேர் கொடுத்தார்' எலன் என்ற பெயர். வெளி நாட்டினருக்கு வசதியாக அந்தப் பெயராம். சீனாவின் உலகமயமாக்கலுக்கு மக்களைத் தயார் செய்யும் போக்கு. நம்ம ஊரிலாவது கால் சென்டரில் வேலை செய்யப் போகிறவர்களுக்கு மட்டும்தான் மேல் நாட்டுப் பெயர். இங்கு எல்லா குழந்தைகளுக்குமா!

எனக்கு அத்தகைய ஆங்கிலப் பெயர்களைப் பார்த்தால் வெறுப்பாக இருக்கும். யாரையுமே அவர்களது சீனப் பெயராலேயே கூப்பிடுவது என்று உறுதி செய்து கொண்டேன்.

வார நாட்களுக்கு அலுவலகம் வருவது போல சனி, ஞாயிறிலும் காலையில் எழுந்து குளித்து, தரையடி ரயில் பிடித்து 9 மணிக்கு அலுவலகத்துக்கு வந்து விடுவேன். 10 மணி முதல் 12 மணி வரை வகுப்பு. அதன் பிறகும் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு ஒரு மணிக்கெல்லாம் வீட்டுக்குப் போய் விடுவேன்.

'நாங்கெல்லாம் சாங்காய்னீஸ்' என்று பெருமை. 'சீனாவில் 95% ஹான் இனத்தவர்' என்று பாடத்தில் வரும் போது 'நானும் ஹான் இனம்தான்' என்று பெருமை.

1997ல் நான் அங்கு போய்ச் சேர்ந்திருந்த போதுதான் ஆங்காங் சீன ஆட்சியின் கீழ் வரும் நாள் வந்தது. அதற்கான கொண்டாட்டமாக சாங்காயின் மக்கள் மைதானத்தில் பெருங்கூட்டம் கூடியதாம். அடுத்த நாள் வகுப்புக்கு வரும் போது, 'கூட்டத்துக்குப் பிறகு திரட்டிய குப்பையின் அளவு 30 டன்னாம். நாங்கல்லாம் வெட்கப்படணும்.' என்று கண்களை உருட்டிக் கொண்டு சொல்கிறார்.

சில மாதங்கள் வகுப்புக்குப் பிறகு ஒரு நாள், 'எங்க வீட்டுக்கு வந்து சாப்பிடணும்' என்று ஆசிரியையும் அவர் அம்மாவும் சொன்னார்கள். 'சரி, போகலாமே' என்று தயார் செய்து கொண்டோம். அலுவலகம் இருக்கும் 20 மாடிக் கட்டிடப் பகுதிக்கு அருகில்தான், ஷான்ஷி தெற்கு தெருவில்தான் வீடு.

வாய்ஹாய் சாலை என்ற பணம் புரளும் சாலையை வெட்டிச் செல்லும் தெரு ஷான்ஷி தெற்குத் தெரு.

(தொடரலாம்)