ஞாயிறு, ஜூன் 24, 2007

மனவளமும் பணவளமும்

நமது வாழ்வில் மூன்று அடுக்குகள் இருப்பதாகச் சொல்லலாம். ஒன்று பொருளாதாரம், இரண்டு அறிவு, மூன்றாவது மனம்/மனிதம்.
  • இருபது வயதில் 10,000 சம்பளம், 30 வயதில் 30,000 வாங்க வேண்டும், நாற்பதில் கோடீஸ்வரனாகி விட வேண்டும், ஐம்பதில் இன்னும் சொத்து சேர்த்திருக்க வேண்டும், அறுபது வயதில் ஓய்வு பெற்று வாழ பணம் இருக்க வேண்டும் என்று திட்டமிடுகிறோம்.

  • பன்னிரண்டு வகுப்பு வரை பள்ளி, அப்புறம் பொறியியல் பட்டம், வேலை பார்க்கும் போது கூட தொலைதூரக் கல்வி, வாரத்துக்கு ஒரு புத்தகம் படிக்க வேண்டும் என்று அறிவைப் பெருக்கிக் கொள்ளவும் பெரும்பாலானோர் தொடர்ந்து முயல்கிறோம்.

  • நமது மனதை/மனிதத்தை வளர்க்க முயற்சியாக எடுப்பதில்லை. பணம் ஈட்டும் போது, அறிவை ஈட்டும் போது மனம் என்னக் கற்றுக் கொள்கிறதோ எப்படி முதிர்ச்சி அடைகிறதோ அதே போக்கில் விட்டு விடுகிறோம். அந்த முயற்சிகளில் எதிர் வினையாக மனச் சோர்வு, உடல் நிலை பாதிப்பு வரும் போது தியானம், மனவளக்கலை பயிற்சிகள் என்று நிவாரணம் தேடுகிறோம்.
வரும் முன் காப்போம் என்று அல்லது இன்னும் ஒரு படி மேல் திட்டமிட்டு ஒவ்வொரு வயதிலும் 'எனது மனவளம் இந்த அளவில் இருக்க வேண்டும்' என்று வகுத்துச் செயல்படுவது நன்மை தரும் என்று நினைக்கிறேன்.

உண்மையில் பார்க்கப் போனால் பணம் ஈட்டவும், அறிவைப் பெருக்கவும் அடித்தளமாக அமைவது மனவளம்தான். சின்ன வயதில் பெற்றோர் தந்த அடித்தளமும், பள்ளியிலும், கல்லூரியிலும் கற்றுக் கொண்ட (மறைமுகமாக) முறைகளும் மனதை வளமாக வைத்திருக்க உதவுகின்றன. அதன் மேல்தான் அறிவு வளர்ச்சியும் பொருளாதார முன்னேற்றமும் அமைய முடியும். ஆனால் இந்த மனவளத்துக்கு நாம் முனைப்பாக பெரிதாக செய்து விடுவதில்லை.

'முக்கியமான தேர்வு இன்று. தேர்வுக்கு முந்தைய நாள் மட்டும் படித்தால் போதும் என்று இருக்கக் கூடாது, ஆண்டு முழுவதும் படிக்க வேண்டும்' என்பது எல்லோருக்கும் அறிவளவில் தெரியும். ஆனால் எத்தனை பேர் அதை முழுமையாகக் கடைப்பிடிக்கிறோம்.

அதே போல இன்றைக்கு இரண்டு மணிக்கு ஒரு முக்கியமான தொழில் முறை சந்திப்பு. அதற்கு திட்டமிட ஓரிரு நாட்கள், குளித்து உடை உடுத்துத் தயாராக ஓரிருமணி நேரம் என்று செலவளிக்கிறோம். சந்திப்பு எப்படிப் போகும் என்று முழுமையாகத் திட்டமிட்டிருக்க முடியாது. சந்திப்பின் போக்கைப் பொறுத்து சரியான முடிவுகள், சரியான பதில்களை உருவாக்க உதவுவது எது?

மகாபாரதத்தில் ஒரு கதை.
பரசுராமருக்கு அரசகுலத்தவரைக் கண்டால் ஆகாது. பிராமணர்களுக்கு மட்டும்தான் தனது வித்தையைக் கற்றுக் கொடுப்பார். அர்ச்சுனனுடன் போட்டிப் போட வேண்டிய கர்ணன் அவரிடம் தான் ஒரு பிராமணன் என்று பொய் சொல்லி மாணவனாகச் சேர்கிறான். எல்லா வித்தைகளையும் கற்றுக் கொள்கிறான். ஒரு நாள், ஆசிரியர் மாணவனின் தொடையில் தலை வைத்துத் தூங்குகிறார்.

வண்டு ஒன்று வந்து தொடையில் அமர்கிறது. ஆசிரியருக்கு தொந்தரவு வரக்கூடாதே என்று அசையாமல் உட்கார்ந்திருக்கிறான் கர்ணன். வண்டு தொடையைத் துளைத்து ரத்தம் பெருக்கெடுத்து குருவை எழுப்பி விடுகிறது.

'ஒரு பிராமணனால் இவ்வளவு வலி தாங்க முடியாது, நீ அரச குலத்தைச் சேர்ந்தவன்' என்று உண்மையைக் கேட்கிறார். அவன் தனது பொய்யை ஒப்புக் கொண்டு விட, 'தேவையான நேரத்தில் என்னிடம் கற்று ஆயுத வித்தைகள் மறந்து போகும்' என்று சாபம் கொடுத்து விடுகிறார்.

அர்ச்சுனனுடன் இறுதிப் போர் புரியும் போது, உண்மையிலேயே மறந்து விடுகிறது. அறிவு இருக்கிறது, மனம் ஒத்துழைக்க மறுத்து விடுகிறது.

கணினியிலும் இதே கதைதான்
கணினியில் எல்லா நிரல்களும் மென்பொருள்களும் வன்தகட்டில் நிறுவப்பட்டிருக்கின்றன. ஆனால் கணினியின் இயக்கி (processor) விபரங்களை எடுத்து வெளியே கொடுக்கா விட்டால் என்ன பலன்?

கணினியின் வன்பொருள் நமது சொத்துக்கள் என்றால், அதில் அடங்கியிருக்கும் மென்பொருட்கள் நமது அறிவுச் செல்வம், எல்லாவற்றையும் ஒருங்கிணைத்துச் செயலில் கொண்டு வருவது நமது மனவளம்.

மனவளத்தைப் பெருக்கிக் கொள்ள மனதுக்குச் சரியான தீனி போட வேண்டும். சின்னச் சின்ன சாதனைகளில் மனதை நிறைத்துக் கொள்ளாமல் செயற்கரிய செய்ய முயல வேண்டும்.

2 கருத்துகள்:

We The People சொன்னது…

நண்பரே!

என்னையும் எட்டு போட்டு விளையாட கூப்பிட்டாங்க, சும்மா இருக்க முடியுமா அதனால நானும் பதிவு போட்டுவிட்டேன்! எட்டு பேரை கூப்பிடனுன்னு ரூல்ஸாம் அதனால உங்களை எட்டு போட்டு விளையாட அழைக்கிறேன்… ஓடிவாங்க!!!

நன்றி,

நா ஜெயசங்கர்

மா சிவகுமார் சொன்னது…

ஜெய்,

விரைவில் எழுத முயற்சிக்கிறேன்.

அன்புடன்,

மா சிவகுமார்