ஞாயிறு, ஜூன் 17, 2007

தோல் துறை பட்டதாரிகள் சந்திப்பு

அண்ணா பல்கலை, அழகப்பா கல்லூரி தாண்டி சாலை நிறுத்தத்தில் நிற்கும் போது தோல் கழகம் நோக்கி மாணவர்கள் நடந்து கொண்டிருந்தார்கள். இங்கும் வெளி வாசலில் வரவேற்று உள்ளே அனுப்பி வைத்தார்கள்.

பதினைந்து நிமிடங்கள் முன்னதாக வந்து விட்டிருந்தேன். அரங்கினுள் நுழையும் போது அதிகக் கூட்டம் இல்லை. மேடையில் அருகில் பார்த்துக் கையை ஆட்டினால், பதிலுக்கு புன்னகைத்தார். நேராகப் போய் மூன்றாவது வரிசையில் உட்கார்ந்து கொண்டேன்.

சிறப்புரை ஆற்ற வந்திருந்த முனைவர் பீமா விஜயேந்திரன், அவரது வருகையை வழிநடத்தும் திரு ராம்குமார் என்பவர் வந்து அறிமுகம் செய்து கொண்டனர். நம்ம ஊரில் நாலணா தொழில் செய்பவர்கள் கூட பேச்சைக் கேட்க வருபவர்களிடம் பழகி விடுவதை தவிர்த்து விடுவார்கள்.

சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம். முனைவர் விஜயேந்திரன் பின்வரிசையில் இருந்த மாணவர்களையும் கைகுலுக்கி அளவளாவினார். அமெரிக்க நாகரீகத்தின் இந்த இயல்பு மிகப் பாராட்டுக்குரியது. யாரும் வானத்தில் இருந்து இறங்கியதாக நினைப்பதில்லை அவர்கள். எல்லோரையும் மதித்துப் பழகும் போக்கு இயல்பாகவே வருகிறது.

சிறிது சிறிதாக அரங்கம் நிரம்பி முனைவர் டி ராமசாமி வரும் போது பத்து நிமிட தாமதம். அவர் இப்போது மத்திய அரசின் அறிவியல்-தொழில்நுட்பத் துறையில் செயலராகவும், மத்திய ஆராய்ச்சி நிலையங்களின் தலைவராகவும் தில்லியில் பணியாற்றி வருகிறார். நமது தோல் துறை மாணவர்களின் கூட்டமைப்பை வளர்த்து ஆளாக்கிய பெருமை அவருக்கே. இப்போதும் அதை சரியாக வழிநடத்திப் போக வேண்டும் என்று ஆர்வத்தோடு தனது வேலைகளுக்கிடையில் இது போன்ற கூட்டங்களுக்கு வந்து கலந்து கொள்கிறார்.

முதலில் முனைவர் விஜயேந்திரனுக்கு பாராட்டு, அவரது சிறப்புரை, இந்த ஆண்டு ஆல்பா சிறப்புரை விருது வழங்கல், அதன் பிறகு ஆல்பா ஆண்டு பொதுக் கூட்டம், கடைசியில் சாப்பாடு.

ஜகன்னாதன் வரவேற்புரை, அதன் பிறகு முனைவர் ராமசாமியின் வழக்கமான நடையில் பேச்சாளரை அறிமுகம் செய்தல். முனைவர் விஜயேந்திரன் படிப்பில் தலைசிறந்தவராக இருந்ததாகவும் முதுகலைப்பட்டம் தோல் நுட்பத்தில் பெற்ற பிறகு விர்ஜினியா பல்கலையில் ஆராய்ச்சியில் இறங்கி, பாலிமர் துறையில் பெயர் பெற்றவர். இப்போது தாவரங்களிலிருந்து பெட்ரோல் பொருட்களுக்கு மாற்று உருவாக்குதல், வேதி வினை மூலம் ஆற்றலை உருவாக்குதல், நேனோ தொழில்நுட்பம் எனப்படும் மீச்சிறு பொருட்களைப் பற்றி ஆராய்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டுள்லாராம். ஓஹையோ பல்கலையில் பணி புரிகிறார்.

முனைவர் விஜயேந்திரன் பேச ஆரம்பிக்கும் போது ஆரம்பத்தின் தன் அம்மாவைக் குறிப்பிட்டதும் உணர்ச்சிவசப்பட்டு பேச முடியாமல் குரல் உடைந்தது. ஓரிரு நிமிடங்களுக்குப் பிறகு அதே நடுங்கும் குரலில் தொடர்ந்தார். தாம் படித்த கல்லூரியில் சிறப்பு செய்யப் பட்டு உரை ஆற்ற வரும் போது தனது படிப்புக்காக பெற்றோர் செய்து தியாகங்களை நினைத்திருப்பார்.

ஆண்டு பொதுக்குழு நடவடிக்கைகள், தீர்மானங்கள் முடிந்து சாப்பாட்டுக்குக் கிளம்பினோம். கீரை சூப் ஒன்று., வறுத்த சோற்றை எடுக்காமல் வெள்ளை சோறு, ரசம், கடலை, உருளைக்கிழங்கு எடுத்துக் கொண்டேன், தயிர் சாதம், பூரி, பொரித்த வெண்டைக்காய்,, கோழிக்கறி தேவையில்லை. என் உடம்பையும் முகத்தையும் குறித்து மூன்று பேரும் கேட்டு விட்டனர்.

'உடல் ஒல்லியாக இருப்பது நல்லதுதான், ஏன் முகம் வாடிக் கிடக்கிறது. வயிற்றையே காணவில்லை. நன்றாக சாப்பிடு' என்று அறிவுரைகள். 'மாலையில் சாப்பிடாத பசி வாட்டம்' என்று சொன்னேன். 'உங்களுக்குப் பொறாமை' என்று கிண்டலடித்துத் தப்பித்தேன்.

புதிய ஆல்ஃபா தலைவர் ஐஸ்கிரீமுக்கு இழுத்துப் போய் விட்டார். அவர் கடுமையான உணவுக் கட்டுப்பாட்டில் இருப்பவர். நேற்றிலிருந்து ஆல்பா தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார். அவருக்குத் தொலைபேசி கொஞ்சம் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். ஒரு இணைய சமூகத்தை உருவாக்க முயற்சிக்கலாம்.

இறுதியாண்டு மாணவர்கள் நான்கு பேர், சிஎல்ஆர்ஐ ல் நான்கு கணினிகள், இணைய இணைப்பு கொடுத்தால் மூன்று மாதங்களில் எல்லா ஆல்பா உறுப்பினர்களின் தகவல்களையும் தொகுத்து உலகின் எந்த மூலையிலிருந்தும் தொடர்பு வளர்க்கும்படி செய்து விடலாம்.

கருத்துகள் இல்லை: