செவ்வாய், மார்ச் 22, 2011

ஜெகதாபட்டிணம் மீனவர் தலைவர் - மீன்பிடி தகவல்கள்

மார்ச் 6ம் தேதி ஜெகதாபட்டிணத்தில் மீனவர் தலைவரை சந்தித்துப் பேசியதின் அடுத்த பகுதி.

மீன்பிடி பிரச்சனைகள்

'இது ஒரு சிறிய கடல். ஆறு கால்வாய் மாதிரி உள்ளது. ராமேசுவரத்திலிருந்து கோடியக்கரை - 3000க்கு மேற்பட்ட விசைப்படகுகளும், 5000க்கு மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்களும் தொழில் செய்றாங்க. எல்லை தாண்டாம போய் மீன் பிடிக்கலாம் என்கிறது ரொம்ப கஷ்டம்'

'இலங்கையில இறால் நெட் கிடையாது. மேல மேய்கிற மீனை மட்டும்தான் பிடிக்கிறாங்க'.

'இரும்பு படகு, நவீன கருவிகள் வந்த பிறகு வெகு தூரம் போய் மீன் பிடிக்கிறாங்க.'

'விவசாயத்த எடுத்துக்கோங்க. மண் மழுங்கி போச்சு'

'கடல் வளம் குறைஞ்சதுக்கு இன்னொரு காரணம் இறால் பண்ணை போட்டது. கடற்கரை ஓரமா விளைநிலங்கள் எல்லாத்தையும் இறால் பண்ணையா மாத்திட்டாங்க. டீசல் 8 ரூபா விற்கும் போது இறால் 600 ரூபாக்கு வித்தது. இப்போ 400 ரூபாய்க்குத்தான் விற்கிறது'.

'எங்களால விசைப்படகு வைச்சு ஒண்ணும் பண்ண முடியலை. படகுக்கு இவ்வளவுன்னு கொடுத்து எடுத்துக்கிட்டா மாற்றுத் தொழிலுக்குப் போகத் தயாரா இருக்கோம். கடலுக்குப் போனா சுடுறான், அடிக்கிறான். கடல்ல போறதுக்கு இடம் இல்லை. சிறிய கடல், பெரிய மீன்பிடிப்பு. '

'கச்சத்தீவை மீட்டுத் தந்தாதான் தீர்வு. கச்சத்தீவிலிருந்து 4 நாட்டிக்கல் மைலுக்கு நமது எல்லை என்று ஆகி விடும். 22 நாட்டிக்கலா இருப்பது 28 நாட்டிக்கலா வரும். அது இருந்தா போதும்.'

'தாரை வார்த்துக் கொடுத்தாச்சு, நூத்துக்கணக்கான பேர் செத்தாச்சு. இதுக்கெல்லாம் காரணம் இலங்கை அரசாங்கம்தான். நம்ம அரசாங்கம் எதுவும் செய்றதில்ல. இப்பப் பேசறது எலக்சன் வரைக்கும்தான்.'

இழுவை படகுகள் பயன்படுத்துவதற்கும் மீனவர்கள் மீதான தாக்குதல்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. மீன்பிடி முறைகள், கடல் வளம் குறைதல் போன்ற பிரச்சனைகள், சமூகத்தின் மற்ற பகுதிகளில் இருக்கும் பிரச்சனைகளுக்கு (கார் ஓட்டினால் பூமி வெப்ப மயமாதல், இரசாயன உரம் போட்டால் விவசாய நிலம் பாழாவது) சமமானவை. அவற்றைப் பற்றி பேசுவது மீனவர்கள் மீதான தாக்குலைப் பற்றிய கவனத்தை திசை திருப்புவதே ஆகும். 

கருத்துகள் இல்லை: