ஞாயிறு, பிப்ரவரி 11, 2007

சுடர் நகர்கிறது

கவிதாவின் சுடரில் எனக்கு ஒளி

எப்படி உங்களால், எழுத்து, வியாபாரம், நண்பர்கள், பிற பொது பணிகள், வெளி ஊர் பயனம் என்று எல்லாவற்றையும் ஒருவித நிதானத்துடன், தடையில்லாமல் செய்ய முடிகிறது?

'எல்லாம் சரிதான், பதட்டத்தில் கோட்டை விட்டு விடுவாய்' என்பதுதான் என் மீதான அப்பா அம்மாவின் விமரிசனம். சின்ன வயதில் நிதானம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் ஆள்தான் நான்.

'பதட்டப்படுவதால் ஆக வேண்டிய எதுவும் நடக்கப் போவதில்லை' என்ற உண்மை உறைத்த பிறகு, உறைப்பதற்கான வழிகளைத் தேடிய பிறகு நிதானம் தொற்றிக் கொண்டது. 'நம்ம வேலை ஆக வேண்டியதுதான், அதற்குச் சிறந்த வழி அமைதியாக நமது பங்கைச் செய்து கொண்டு போவதுதான்' என்ற புரிதல் வந்த பிறகு பதட்டம் மறைந்து விட்டது.

வேலை செய்கிறேன். அதற்கான வெளியூர் பயணங்களும் நடந்து விடுகின்றன. நண்பர்கள் மிகக் குறைவு. பொதுப் பணிகள் எதுவும் பெரிதாகச் செய்ய ஆரம்பிக்கவில்லை இன்னும்.

உங்களிடம் அதிகம் கவனித்தது, உங்களின் perfection. அதற்குக் காரணம் என்ன என்று எதை சொல்வீர்கள். உங்களின் கல்விமுறை, வளர்ப்பு முறை, இல்லை உங்களை நீங்களே தயார் செய்து கொண்டீர்களா?

என்னிடம் perfection (முழுமை) இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. வெற்றிகரமான தொழில் முனைவர்கள், அரசியல்வாதிகள், படைப்பாளிகள் கடைப்பிடிக்கும் ஒழுங்குடன் ஒப்பிடும் போது நாமெல்லாம் வாழ்க்கையை வீணடித்துக் கொண்டுதான் இருக்கிறோம். அதைக் குறைக்கும் பயணத்தில் சிறிது தூரம் வந்திருக்கிறேன் என்று உங்கள் கேள்வியிலிருந்து தெரிகிறது. எனக்குள் இன்னும் பல படிகள் மேம்பட வேண்டும் என்று தவிப்பு.

அரைகுறையாக வேலை பார்ப்பதன் அடிப்படை காரணம் சோம்பேறித்தனம்தான் என்று நினைக்கிறேன். செய்யும் வேலையில் சோம்பலை ஒழித்து முழுக் கவனம் செலுத்தினால் முழுமை அடைந்து விடலாம்.

உங்களின் எல்லா பதிப்புகளுமே..மிக சிறந்தவை, பயனுள்ளவை என சொல்ல கூடிய வகையில் அமைந்துள்ளது. ஆனால் அதிகமாக யாரையும் சென்று அடையவில்லை என்பது எங்களுடைய கனிப்பு. பயனுள்ள பதிவுகளை படிப்பவர்களை அதிகமாக்க என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

எழுத ஆரம்பித்தது, சென்ற ஆண்டு ஏப்ரலில். நான் எதிர்பார்த்தற்கு மேலேயே அங்கீகாரங்களும் படிப்பவர்களும் நண்பர்களும் கிடைத்திருக்கிறார்கள். உங்களைப் போல சொல்லிச் சொல்லி எனது பதிவுகளைப் படிப்பவர்களும் அதிகமாகி விட்டார்கள்.

படிப்பவர்கள் விரும்பும் வண்ணம் எழுதுவது இன்னும் அதிகமான பேரைப் படிக்கத் தூண்ட முதல் படி. தீவிரமான பொருளையும் எளிமையாக எழுதினால் எல்லோரும் படிப்பார்கள்.

ராகவன் சார் - பதிவுகளுக்கு பின்னூட்டமே இல்லை அதனால் போலி ஆரம்பித்தேன் என்று கூறியுள்ளார் மற்றும் அவரை குறை கூறி வரும் பலர் போலி பெயர்களில், போலி பதிவுகள், பின்னூட்டங்கள் போடுகிறார்கள்- இது பற்றி உங்கள் கருத்து.

பெயரிலியாகவோ, மாற்றுப் பெயரிலோ எழுதுவது அவரவர் விருப்பம். அதைக் கட்டுப்படுத்த நினைப்பது தவறு என்பது என்னுடைய கருத்து. மறுமொழி மட்டுறுத்தல், பெயரிலி பின்னூட்டங்களை கட்டுப்படுத்தல் இரண்டுமே தவறு என்று ஆரம்பம் முதலே நான் நம்பி வருகிறேன்.

ஒருவரது பெயரைப் பயன்படுத்தி அவர் எழுதுவது போல ஆள்மாறாட்டம் செய்வது, அடுத்தவரைப் புண்படுத்தும்படி எழுதுவது இவற்றை தவிர்த்து விட்டால் மாற்றுப் பெயரில் எழுதுவதால் என்ன தவறு?

டோண்டு சார் மாற்றுப் பெயரில் எழுதுபவர்களை எதிர்த்துக் கொண்டே மாற்றுப் பெயரில் எழுதியதுதான் பலருக்கு வருத்தம் என்று படுகிறது.

சொந்தப் பெயரில் எழுத முடியாதை எழுதாமலே இருப்பது என்பது என் கொள்கை.

எப்போதும் சீரியசாக இருக்கும் உங்களை, நகைசுவை பதிவு ஒன்று போட சொன்னால் போடுவீர்களா?.. போடுவேன் .என்றால் எப்போது?. இல்லை என்றால் ஏன்?

முடிந்தால்தானே போட முடியும்.

நகைச்சுவைக்கு சிறப்பான மனநிலை வேண்டும். 'ஏதோ உலகமே நம்ம தலையில்தான் ஓடுகிறது' என்று சுமந்து கொண்டு திரிபவர்களுக்கு நகைச்சுவை சாத்தியமாகாது. எழுத்திலும், பேச்சிலும் நான் நகைச்சுவை முயன்றால் அது யாரையாவது மோசமாக புண்படுத்துவதில்தான் போய் முடிகிறது. அதை விட நகைச்சுவை முயற்சிகளை தவிர்த்து விடுவதுதான் நல்லது என்று முடிவு செய்தேன்.

நான் சுடர் ஏற்ற அழைப்பது ஓசை செல்லா.
  1. இணைய உலகில் பத்து ஆண்டுகளுக்கும் மேற்பட்ட உங்கள் சிறப்பு அனுபவங்களைப் பற்றி ஏன் அதிகமாக எழுதுவதில்லை?
  2. உங்கள் வலைப்பூவில், கையில் கருவியோடு இருக்கும் புகைப்படத்தை எடுத்தது யார்?
  3. உங்கள் இணைய ஊடக அறிவைப் பயன்படுத்தி பெரியாரது கொள்கைகளை பரப்ப ஏன் முயல்வதில்லை?
  4. வாழ்க்கையின் குறிக்கோள் என்ன, உங்களுக்கு?
  5. இணையத்தில் குழந்தைகளை தவறாகப் பயன்படுத்தும் கும்பல்களை எப்படித் தடுத்து நிறுத்தலாம்?

12 கருத்துகள்:

நாமக்கல் சிபி சொன்னது…

நல்ல பதில்கள்!

இவற்றுக்கும் சிரத்தை மேற்கொண்டு அழகாக கொடுத்திருக்கிறீர்கள்!

நல்ல கருத்துக்களை எங்களுக்கும் சொல்லி இருக்கிறீர்கள்!

நன்றி!

MyFriend சொன்னது…

உங்களுடைய ஒவ்வொரு பதிலிலும் ஒரு தெளிவு இருக்கிறது..

நிதானமாகவும் சொல்ல வந்தததையும் அழகாக சொல்லி இருக்கிறீர்கள். :-)

மா சிவகுமார் சொன்னது…

நன்றி நாமக்கல் சிபி, மை ஃபிரண்ட்.

அன்புடன்,

மா சிவகுமார்

பெயரில்லா சொன்னது…

சிவா,

உங்க பதில்கள் நன்று, அதிலும் நிதானம் தெரிகிறது. :)

ஆனால், நீங்கள் சுடர் ஒப்படைக்க தேர்ந்தெடுத்த மனிதர், உங்களின் கீழ்க்கண்ட கருத்துக்கு மாறுபட்ட வராயிற்றே? உங்களின், முந்தைய படைப்பு வரிகளிலிருந்து

//உன் சாதி என்ன என்று கேட்பவனையும், என் சாதி இன்ன என்று சொல்பவனயும் நாக்கைத் துணித்துத தண்டனை அளிப்போம் என்று இந்தச் சமூகம் துணிந்தால் நடக்கலாம்.//

கவிதா | Kavitha சொன்னது…

சிவகுமார்ஜி, சிபி மற்றும், நண்பர் சொன்னது போன்று மிக நிதானமான, பதில்கள்.

ராகவன் சார் பற்றிய கேள்விக்கு உங்களின் பதில் எனக்கு ஒரு தெளிவை ஏற்படுத்தியது எனலாம்.

நன்றி, உங்களுக்கும் கேப்பங்கஞ்சி கொடுக்க அழைக்கவேண்டும் என்ற வெகுநாளைய விருப்பம்...உங்களின் இந்த பதில்களால், மேலும் நிறைய கேட்டு பதில்கள் பெற ஆவலை தூண்டுகிறது.. வருகிறோம்..பெருகிறோம்.. விரைவில்ல்.. :)

பொன்ஸ்~~Poorna சொன்னது…

// மாற்றுப் பெயரில் எழுதுபவர்களை எதிர்த்துக் கொண்டே மாற்றுப் பெயரில் எழுதியதுதான் பலருக்கு வருத்தம் என்று படுகிறது.//
உண்மை தான் சிவகுமார்.. நிதானமான பதில்கள் வழக்கம் போலவே... :)

இராம்/Raam சொன்னது…

அருமையான பதில்கள் சிவா சார்,

நன்றி

சுந்தர் / Sundar சொன்னது…

உங்கள் பதில்கள் அனைத்தும் , உங்கள் ஆளுமையை வெளிப்படுத்தின !
தொடரட்டும் உங்கள் எழுத்துப்பணி. வாழ்த்துக்கள்

கோபிநாத் சொன்னது…

வணக்கம் சிவாகுமார்..

அருமையான பதில்கள்,
எல்லோரும் சொல்லுவது போல் உங்கள் பதில்களில் நிதானம் உள்ளது உண்மை தான்

வாழ்த்துக்கள்

மா சிவகுமார் சொன்னது…

//நீங்கள் சுடர் ஒப்படைக்க தேர்ந்தெடுத்த மனிதர், உங்களின் கீழ்க்கண்ட கருத்துக்கு மாறுபட்ட வராயிற்றே?//

அனானி,

சாதியைப் பொறுத்த வரை நானும் செல்லாவும் ஒத்தக் கருத்தைக் கொண்டுள்ளோம் என்றே நினைக்கிறேன். அப்படி இல்லா விட்டாலும் கருத்து வேறுபாட்டுக்கும் நட்புக்கும் என்ன முரண்பாடு?

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

வாங்க கவிதா,

//வருகிறோம்..பெருகிறோம்.. விரைவில்ல்.. :)//

உங்கள் கேள்விகள் சிந்தனையைத் தூண்டி பலவற்றை எனக்கும் புரிய வைக்க உதவின.

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

நன்றி பொன்ஸ், ராம், சுந்தர், கோபிநாத்,

அன்புடன்,

மா சிவகுமார்