சனி, ஜூன் 23, 2007

காந்தி - சில புரிதல்கள்

காந்தியின் தொகுக்கப்பட்ட படைப்புகள் இணையத்தில் பிடிஃஎப் வடிவில் கிடைக்கின்றன. அவரது வாழ்வின் கடைசி மாதங்களில் நடந்து உரைகள், கடிதங்கள், கட்டுரைகள் என்று முதலில் இறக்கி வைத்திருக்கிறேன்.

அவரது சத்தியத் தெளிவயும், நடைமுறைக் கொள்கைகளும், வாய்மை, நேர்மை, மனித குல நன்மை, சேவை உணர்வு என்று இணைத்துப் பார்த்தால் மிக இயல்பாக தெரிகின்றன. புரியாமல் சேற்றை வாரி இறைப்பவர்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள்.

'பிரிவினை என் பிணத்தின் மீதுதான் நடக்கும் என்று எப்போது சொன்னார்' என்று தெரியவில்லை. தில்லியில் அதிகாரம் குவிந்த இந்தியா என்ற நாடு அவருக்கு உடன்பாடு கிடையாது. ஒவ்வொரு சிறு பகுதியும் தமது பொது வேலைகளைக் கவனித்துக் கொண்டால் பிரிவினை என்று முஸ்லீம் லீக் கேட்பதற்கு தேவையே இல்லாமல் போயிருக்கும்.

நேருவுக்கும் ஜின்னாவுக்கும் இங்கிலாந்தைப் போல, சோவியத் யூனியனைப் போல, அமெரிக்காவைப் போல நவீன தேசிய அரசை உருவாக்கி தாம் அதை ஆள வேண்டும் என்று ஆசை. காந்தியின் கனவு சற்றே காலத்துக்கு முற்பட்டது. திறந்த மனதுடன் அவரிடமிருந்து கற்றுக் கொள்ள முன்வந்திருந்தால் கிழக்கு மேற்குக்கு இன்று கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கலாம்.

காந்தியின் கொள்கைகளைச் சரிவரப் புரிந்து கொண்டவர்கள் இருப்பதாகத் தெரியவில்லை. ஒவ்வொருவரும் அவரது ஒரு பக்கத்தைப் பிடித்துக் கொண்டு தொங்குகிறார்கள். இந்துத்துவாவாதியான அரவிந்தன் கூட காந்தீயப் பொருளாதாரம் என்று தமக்கு சாதகமான ஒன்றை மேற்கோள் காட்டுகிறார். அந்தப் பொருளாதாரக் கொள்கைகளுக்கான அடிப்படையை ஆராய்ந்து பார்த்தால் அவர் காத தூரம் ஓடி விடுவார், அல்லது இந்துத்துவா இயக்கங்களிலிருந்து தன்னை முற்றிலுமாக விலக்கிக் கொள்வார்.

கதர் உடுத்துவது, தொப்பி வைப்பது, நூல் நூற்பது என்று அடையாளங்களுக்கு மதிப்பு கொடுத்து தனது கருத்துக்களை நீர்க்கச் செய்து விட்டார் என்று தோன்றுகிறது. கதர் என்பது அடுத்த மனிதனை/ நமது வாழ்வை சீரளிக்காமல் உருவாக்கும் பொருளைப் பாவிக்க வேண்டும் என்பதற்கான அடையாளம். கதரை மட்டும் பிடித்துக் கொண்டு அதன் அடிப்படையான கொள்கையை விட்டு விட்டார்கள்.

இதே போலத்தான் இந்துஸ்தானி பொது மொழியாக வேண்டும் என்பது. இந்தியாவில் ஆங்கிலம் பொது மொழியாக இருப்பது அவமானம். இந்திய மொழிகளில் ஒன்றைப் பொது மொழியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பது நியாயமான கருத்து. ஆனால் அந்த நிலை வரும் முன்னால் எல்லா இந்திய மொழிகளுக்கும் மதிப்பும், சம மரியாதையும் கொடுக்கும் பண்பு மக்களிடையே வளர்ந்திருக்க வேண்டும்.

குஜராத்தில் பிறந்து வளர்ந்ததால் தென்னிந்திய அல்லது வடகிழக்கு மாநில மக்களின் உணர்வுத் தீவிரம் புரியாமல் போயிருக்கலாம். அதை உள்வாங்கிய நேருதான் சரிவர செயல்படுத்தினார். அந்த வகையில் நேரு காந்தியின் முதன்மையான சீடர் என்பதில் ஐயமில்லை. காந்தியின் கொள்கைகளைப் புரிந்து கொண்டு அதைத் தனது கருத்துக்களுடன் இணைத்து செயல்படுத்த முடிந்த தலைவர் அவர்.

படேலுடனான கடிதப் போக்குவரத்து, படேல் குறித்த கருத்துக்களும் தொகுக்கப்பட்ட காந்தியின் படைப்புகளில் விரவிக் கிடக்கின்றன. படேல், சுபாஷ் சந்திர போஸ், போன்றோரிடம் பெரு மதிப்பும் அன்பும் வைத்திருந்திருக்கிறார். ஆனால் தனது கொள்கைகளைப் பிசகாமல் கடைப்பிடிப்பவர் நேரு மட்டும்தான் என்று கண்டு கொண்டிருக்கிறார்.

தனது குருவை வெளிப்படையாக விமரிசிக்கவும் நேரு தயங்கியதில்லை. தனக்கு சரி எனப் பட்டதை ஆதரித்து காந்தியுடன் சண்டை போடுவதும் பல முறை நடந்திருக்கிறது. மற்றவர்கள் போல காந்தியின் மக்கள் செல்வாக்குக்குப் பணிந்து நடக்காமல், எது சரியென்று பட்டதோ அதை மட்டும் ஏற்று நடந்த நேருவின் மீது காந்திக்கு நம்பிக்கை ஏற்பட்டது புரிந்து கொள்ளக் கூடியதுதான்.

11 கருத்துகள்:

சொன்னது…

கட்டுரையின் முதல் பாதியிலே இந்தியாவின் அதிகார குவிப்பு மையமாக டெல்லி இருப்பதை காந்தி ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறியிருக்கிறீர்கள் இந்தியா ஒரு யூனியன் பிரேதேசம் எனும் பட்சத்தில், பல தேசிய இனங்களை தன்னகத்தே கொண்ட நாடு எனும் பட்சத்தில் டெல்லியிலே அதிகாரம் குவிக்கப்படுவதென்பது இந்தியாவை தேசிய இனங்களின் சிறைக்கூடாரமாக மாற்றி இருக்கிறது இப்படி தேசிய இனங்களின் அதிகாரம் குவிக்கப்படுவதை காட்டிலும் பரவலாக்கப்படவேண்டும்(அது மக்கள் அதிகாரமாக பரவலாக்கப்டவேண்டுமென்பது எமது நிலைப்பாடு) என்று கூறி ஆதங்கப்படும் நீங்கள் எந்த அடிப்படையில் பல மொழிகளை கொண்ட தேசிய இனங்கள் இருக்கும் போது மொழி விசயத்தில் தேசிய மொழியாக இணைப்பு மொழியாக அதனை இந்துஸ்தானியாக மையப்படுத்தலாம் என்று கூறுகிறீர்கள்.. இந்துஸ்தானியை எந்த அடிப்படையில் தெரிவு செய்தீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா? இந்தியாவின் இணைப்பு மொழியாக ஆங்கிலம் இருப்பது அவமானமாக தெரியும் உங்களுக்கு, இந்திய ஒரு அரைக்காலனிய நாடாக அடிமைப்பட்டு இன்று மறுபடியும் காலனியாகும் நிலையில் அவலமாய் நிற்கிறதே இது அவமானமாக படவில்லையா..

We The People சொன்னது…

:)

பெயரில்லா சொன்னது…

Your writings reveal your ignorance and half baked knowledge only about Gandhiji and Nehruji. It is funny you people comeout without any shame or hesitation to make comments on indepth matters like these. Try to know you need proper and elaborate reading on the topic and deep analysis before making any comment. You have titled your writings as "Gandhi- some understadings." In fact your content shows you have not understood anyhting.

பெயரில்லா சொன்னது…

It is also a pity that the present day job oriented education has resulted in creating idiots only, who jump and tumble to make thier voice heard.

மா சிவகுமார் சொன்னது…

ஸ்டாலின்,

உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. தேசிய இனங்களின் சிறைக் கூடாரம் என்ற பதம் அழுத்தமாக இருக்கிறது.

//நீங்கள் எந்த அடிப்படையில் பல மொழிகளை கொண்ட தேசிய இனங்கள் இருக்கும் போது மொழி விசயத்தில் தேசிய மொழியாக இணைப்பு மொழியாக அதனை இந்துஸ்தானியாக மையப்படுத்தலாம் என்று கூறுகிறீர்கள்..//

நான் அப்படிக் கூறவில்லை. காந்தி அப்படி நினைத்திருக்கலாம். ஆனால், இந்தியாவில் அதற்குத் தேவையான பண்பாடு இல்லை என்று நான் நினைக்கிறேன். எல்லா மொழிகளையும் மதிக்கும் பண்பு வராததால் இந்துஸ்தான் இணைப்பு மொழியாக முடியாமல் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

//ஒரு அரைக்காலனிய நாடாக அடிமைப்பட்டு இன்று மறுபடியும் காலனியாகும் நிலையில் அவலமாய் நிற்கிறதே இது அவமானமாக படவில்லையா..//

நிச்சயமாக அவமானமாகத்தான் உள்ளது. அடுத்தவருக்குக் கூலி வேலை செய்து பிழைக்கும் சமூகமாகவே நாம் இருப்பது அவமானமான ஒன்று.

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

We The People,

?!

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

அனானி,

எனது கருத்துக்கள் அரை வேக்காடு ன்று கருதினால் முழுமையான கருத்தை விளக்குங்களேன். எனது புரிதல், அல்லது அபுரிதலை சரி செய்து கொள்கிறேன்.

படித்ததில் எனக்குப் பட்டதை எழுதினேன்.

அன்புடன்,

மா சிவகுமார்

naan naathigan சொன்னது…

gandhis name will be in history for his nonviolence. no doubt.

But why he was not bothered in two key issues is a debatable subject

1. Varnasrama dharmam - the class should do its suty. should never try to mingle with the stream.

2.Inequality - Socio-economic imbalance, which would have given equal life to all.

That is it.

மா சிவகுமார் சொன்னது…

//1. Varnasrama dharmam - the class should do its suty. should never try to mingle with the stream.//

'வருணாசிரம தருமம் சரியாகத்தான் ஆரம்பித்தது. குறிப்பிட்ட பிரிவினரை உயர்த்துவதும், சில பிரிவினரைத் தாழ்த்துவதும் இடையில் வந்தவை என்றும்,

அந்த இடைச் செருகலை நீக்கி அசல் வருணாசிரமத்துக்குத் திரும்ப வேண்டும்' என்று காந்தி
கருதினார் என்பது எனக்குப் புரிந்தது. (தவறிருந்தால் திருத்தவும்)

என்னைப் பொறுத்த வரை எந்த வகையில் வருணாசிரமம் நியாயமாக இருந்திருக்கும் அல்லது இருக்க முடியும் என்று புரியவில்லை. அது அழிய வேண்டிய ஒன்று.

//2.Inequality - Socio-economic imbalance, which would have given equal life to all.//

இதற்கு காந்தி எதிராக இருந்தார் என்றா சொல்கிறீர்கள்? எப்படி?

அன்புடன்,

மா சிவகுமார்

வவ்வால் சொன்னது…

வணக்கம் மா.சி,

காந்தி தனக்கேயுறிய சில பல குறைகளுடன் வாழ்ந்து மறைந்த பெரும் தலைவர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.ஆனால் அவர் தனது குறைகளை உணர்ந்தார் அதைமாற்றிக்கொள்ள உடன் பட்டதில்லை.அடுத்தவர்களை சாத்வீகம் என்ற பெயரில் தனது வழிக்கு கொண்டு வருவார். தேவைப்பட்டல் உண்ணா நோன்பு இருப்பேன் என மிரட்டவும் செய்வார்.

உதாரணம் நேதாஜி சுபாஷ் காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்ட போது காந்தி ஆதரவு வேட்பாளர் தோல்வி அடைந்தார் ,உடனே இது எனது தோல்வி என்று சொல்லி வருத்தப்பட்டவர், பின்னர் பூரன சுதந்திரம் என தீர்மானம் நிறைவேற்ற போஸ் முயன்றபோது உண்ணா நோன்பு என்று மிரட்டி மற்ற தலைவர்களைக் கொண்டு தீர்மானத்தை தோல்வியடைய செய்தார், அதனால் மனம் வெறுத்து போஸ் பதவி விலகினார். இது போல பல சொல்லலாம்.

////2.Inequality - Socio-economic imbalance, which would have given equal life to all.//

இதற்கு காந்தி எதிராக இருந்தார் என்றா சொல்கிறீர்கள்? எப்படி?//


வர்ணாசிரமக் கொள்கையில் காந்தி பிற்போக்கான நிலைக் கொண்டிருந்தார் என்பதற்கு உதாரணம்,

சேரன்மாதேவியில் வ.வே.சுப்பிரமணியம் , நடத்திய குரு குலத்தில் ஏற்றத்தாழ்வுகள் உள்ளது , பிராமனர்களுக்கு தனி உணவு, மற்றவர்கலுக்கு தனி உணவு அளிக்கிறார் என குற்றம் சாடடி ,இது போல் நிலை தொடர்ந்தால் குருகுலத்திற்கு காங்கிரஸ் அளிக்கும் நிதியை நிறுத்த வேண்டும் என்று பெரியார் போன்றவர்கள் சொன்னார்கள் காந்தி முன்னிலையில் , தனி உணவு அளிப்பதை வ.வே.சு வே ஒப்புக்கொண்ட பிறகும் .ஆனால் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காத்தார்.

பின்னர் குருகுல மாணவர்களுடன் குற்றாலம் சென்ர போது ,குற்றாலம் நீர் வீழ்ச்சியில் மாட்டிக்கொண்ட தனது மகளை காப்பாற்ற சென்ற வ.வேசு வும் சுழலில் மாட்டி இறந்து விட்டது தனிக்கதை.

எனவே காந்தியின் உள்மனதில் இப்படிப்பட்ட இடைவெளிகள் இருக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது என்பதை மறுப்பதிற்கில்லை.

மா சிவகுமார் சொன்னது…

வாங்க வவ்வால்,

//அடுத்தவர்களை சாத்வீகம் என்ற பெயரில் தனது வழிக்கு கொண்டு வருவார். தேவைப்பட்டல் உண்ணா நோன்பு இருப்பேன் என மிரட்டவும் செய்வார்.//

அவர் மிரட்டினால் ஏன் மற்றவர்கள் கேட்டார்கள் என்பது எனக்கு சரிவரப் புரியாத ஒன்று.

//காந்தியின் உள்மனதில் இப்படிப்பட்ட இடைவெளிகள் இருக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது என்பதை மறுப்பதிற்கில்லை.//

இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை, வவ்வால். காந்தியின் வாழ்க்கையை மேலோட்டமாகப் படித்தால் கூட அவர் ஏற்றத் தாழ்வுகளை முழுமையாக ஒதுக்கியவர் என்று தெரிகிறதே. வவேசு குறித்த நிகழ்வு குறித்து இப்போதுதான் கேள்விப் படுகிறேன்.

அன்புடன்,

மா சிவகுமார்