ஞாயிறு, ஜூன் 24, 2007

விவசாயி - என்னதான் தீர்வு?

விவசாய விளைபொருட்களை யாரோ வியாபாரி திரட்டி, அதை லாரிக் காரரின் கைக்கு ஒப்படைத்து, கோயம்பேடு வந்திறங்கி, மொத்த வியாபாரி வாங்கி கடையில் வைத்திருப்பதை, கீரைக்கார அம்மா/மூலைக்கடை உரிமையாளர் வாங்கி வந்து விற்பதில் பல குறைபாடுகள் இருக்கின்றன,
  1. வெளிப்படையாகத் தெரிவது ஒவ்வொரு கை மாறும் போதும் ஏறும் செலவுகள்.
  2. ஒவ்வொரு கை மாறலிலும் சிதைந்து போகும் ஒரு பகுதி காய் கனிகள்.
  3. ஒவ்வொரு கை மாறலிலும் இழக்கும் தகவல் பரிமாற்றம்.
மூன்றாவதான தகவல் பரிமாற்றத்தின் இழப்புகளால்
  • விவசாயிக்கு, எந்தச் சந்தையில் என்ன பொருள் தேவைப்படுகிறது என்ற விபரம் புரியாமல் போய் விடுகிறது. விளையா விட்டால் பேரிழப்பு, நிறைய விளைந்தாலும் எல்லோருக்கும் விளைச்சல் ஏற்பட விலை சரிந்து கைக்காசு இழப்பு என்று வாழ்க்கையே நிச்சயமற்றதாகப் போய் விடுகிறது.

  • தனது விளைபொருளை வாங்கிச் சாப்பிடப் போகும் மனிதர்களிடம் நேரடித் தொடர்பு இல்லாததால் விவசாயிகள் என்ன முறையிலாவது விளைச்சலைப் பெருக்க ஆரம்பிக்கிறார்கள்.

    சாப்பிடுபவர்கள் உடலைப் பாதிக்கும் அளவுக்கு பூச்சிக் கொல்லி பயன்படுத்துதல், மாம்பழங்களைப் பழுக்க வைக்க சுண்ணாம்புக்கல்லை பயன்படுத்துதல் என்று தீங்கு விளைவிக்கும் செயல்கள் வாங்கப் போகும் வியாபாரியின் கண்ணைக் கட்டுவது என்ற நோக்கத்துடன் செய்யப் படுகின்றன.

    இதே தோட்டக்காரர், மாம்பழம் வாங்கப் போவது தெருவின் கடைசி வீட்டில் வசிக்கும் பத்து வயது சிறுமி என்றால் நிச்சயமாக ஆரோக்கியமான முறையில்தான் விளைச்சலை பெருக்க முயற்சிப்பார்.
இந்த வகையில், மேற்சொன்ன நான்கு கை மாறும் முறை மாறி, விவசாயியிடமிருந்து சில்லறை விற்பனையில் இறங்கும் பெரு நிறுவனம் வாங்கி வர, அந்தக் கடைகளில் சாப்பிடுபவர்கள் வாங்கிக் கொள்வது பெருமளவு முன்னேற்றம்தான்.

இடையில் லாரிக் காரர்களுக்கு, வியாபாரிகளுக்கு, சிறு கடை நடத்துபவர்களுக்கு இழப்பு ஏற்படும் என்ற வாதம், 'கணினி மயமானால் வங்கி ஊழியர்கள் எல்லாம் வேலை இழப்பார்கள்' என்று போராடிய அதே சரியில்லாத வாதம்தான்.

சந்தைப் பொருளாதாரத்தில் பரிணாம வளர்ச்சி என்ற ஆழிப் பேரலையை தடுத்து நிறுத்தி விட முடியாது. எண்பதுகளில் எதிர்த்த கணினி மயமாக்கம் இன்று எல்லா வங்கிகளிலும் நடைமுறையில் வந்திருக்கிறது. (அந்த ப் போராட்டங்களினால் கால தாமதமானது ஒரு தீங்காக இருந்தாலும், நிர்வாகம் வேலை செய்பவர்களின் நலனையும் கருத்தில் கொண்டு செயல்பட வைத்தது, அதன் நன்மை).

விவசாய விளை பொருள் சில்லறை வணிகத்தில் பெரு நிறுவனங்கள் ஈடுபடுவதை விட சிறந்தது, பயிரிடும் விவசாயிகள் நுகர்வோரை நேரடியாகத் தொடர்பு கொண்டு விளை பொருட்களை விற்பது.
  • நுகர்வோருக்கு சரியான விலையில் தீங்கற்ற கலப்பற்ற பொருட்கள் கிடைக்கும்.
  • விவசாயிகளுக்கு விளை பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும்
  • விவசாயிகளுக்கு வாடிக்கையாளர்களுடன் அண்மை ஏற்பட்டு விவசாயம் செய்வதில் உறுதியான நிலை உருவாகும்.
(தொடரும்)

25 கருத்துகள்:

ILA (a) இளா சொன்னது…

நானும் இதையே பதிவிடனும்னு ரொம்ப நாளா நினைச்சுகிட்டே இருந்தேங்க. இன்னும் விரிவா என் பதிவுல எழுதறேங்க. உங்க கருத்துல 100 சதவீதம் உடன்படுகிறேன்

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

வணக்கம்,

//விவசாய விளை பொருள் சில்லறை வணிகத்தில் பெரு நிறுவனங்கள் ஈடுபடுவதை விட சிறந்தது, பயிரிடும் விவசாயிகள் நுகர்வோரை நேரடியாகத் தொடர்பு கொண்டு விளை பொருட்களை விற்பது.///

தாங்கள் பிரச்சினையின் ஒரு பரிணாமத்தை மட்டுமே பேசியிருக்கிறீர்கள்...

நான் என்னுடைய அனுபவத்தை பகிர்ந்துக்கொள்ள விழைகிறேன்...

நான் கீரை பயிரிட்டு நேரிடையாக சந்தையில் மக்களிடம் விற்றவன்... ஆனால் எல்லா நாட்களும் என்னுடைய கீரை விற்பது கிடையாது... ஒரு நாள் நான் 50 கட்டுகள் கொண்டு சென்றால் எல்லாமும் விற்று தீர்ந்து விடும்...
அடுத்த நாள் 10 கட்டுகள் கூட விற்பது கிடையாது... மாதக்கணக்கில் சந்தையை ஆராய்ந்து சரி "செவ்வாய்கிழமை" மக்கள் கீரை அதிகமாக வாங்குகிறார்கள் என்று கொண்டு சென்றால் சந்தைக்கு மிக அதிகமாக கீரை வந்து இருக்கும். (இங்கு விலையோ மற்ற காரணிகளை விட மக்களின் தேவை எவ்வளவோ அவ்வளவுதான் விற்கும் என்பதுதான் முக்கியமான முடிவு) ஆக அன்று உற்பத்தி செய்த கீரைகள் அனைத்தும் வீணாகி போகும். சந்தையை நீண்ட நாட்கள் கண்காணிக்கிற வணிகர்கள் தான் உற்பத்தியாளர்களிடம் சரியான அளவில் கொள்முதல் செய்யமுடிகிறது. எனவே விவசாயிகள் வணிகர்களிடம் தங்களின் உற்பத்தி பொருளை விற்கின்றனர்.

சந்தையை பற்றிய அறிவை விவசாயிகள் பெற வேண்டும் என்பதும் இயலாத காரியம்.

இரண்டாவது சந்தையில் இன்றைக்கு காய்,கனிகளை பொருத்தவரை எவ்வளவு சதவிகிதம் உற்பத்தியில் நுகரப்படுகிறது என்பது முக்கிமான பிரச்சினை...

சென்னை கோயம்பேட்டுக்கு வருகின்ற காய்கறிகளில் 30 சதவிகிதம் முதல் 50 சதவிகிதம் வரைதான் மக்களால் நுகரப்படுகிறது... மற்றவை அழுகி வீணாகிவிடுகிறது.

உதாரணத்திற்கு தேங்காய் 8ரூபாய் விற்கிறது என்றால் உற்பத்தியாளர் 5ரூபாயோ அல்லது 6ரூபாயோ கேட்க முடியும்.
ஏனென்றால் தேங்காய் உற்பத்தியில் 90சதவிகதம் நுகர்வை நாம் எட்டியிருக்கிறோம்.
ஆனால் மற்ற காய், கனிகள் நுகர்வு விகிதம் வேறு... பிறிதொரு நாள் விரிவாக பதிவிடுகிறேன்.
அசுரன் அவர்களிடமும் சில்லறை வணிகத்தை விவாதிக்க இருக்கிறேன். அங்கும் முடிந்தால் உங்கள் கருத்துகளை விவாதிக்கிறேன்.

Badri Seshadri சொன்னது…

சீக்கிரமாக அழியும் பொருள் எனும்போது 'நேரடி விற்பனை' என்பது சாத்தியமானதே இல்லை. கம்ப்யூட்டர் (டெல்), புத்தகங்கள் (பல நிறுவனங்கள்) என்றால் டைரெக்ட் சேல் (நேரடி விற்பனை) என்பது சாத்தியமாகும்.

விவசாயிகளுக்கு ஒரே வழி கூட்டுறவை ஏற்படுத்தி பெரிய நிறுவனமாவதே (அமுல் - பால் உற்பத்தியாளர்கள்). அதன்பின் மொத்தமாக விற்பனை செய்வது அல்லது நேரடி விற்பனை என்பதை அவர்கள் யோசிக்கலாம்.

Unknown சொன்னது…

சிவா,
இங்கெ விவசாயிகளின் விவசாயப் பொருட்களின் சந்தைப் படுத்தலை மட்டுமே அணுகயுள்ளீர்கள்.நீங்கள் மற்ற விசயங்களையும் பதிவீர்கள் என்று நம்புகிறேன்.விவசாயம் பற்றிப் பேசும்போது அதன் உற்பத்தியில் இருந்து ஆரம்பித்தால் சரியான வழிகள் கிடைக்கும்.

மாமரம் எப்போது வைத்தாலும் மாங்காய்(பழம்) ஒரு குறிப்பிட்ட காலத்தில் மட்டும்தான் உற்பத்தியாகும்.

கீரை எப்போது போட்டாலும் சொல்லி வைத்தாற்போல் சில நாட்களில் அறுவடைக்கு வந்துவிடும்.

இது போல் பல ...

நாம் ஒவ்வொன்றையும் பிரித்து அணுகவேண்டும்.ஏனென்றால் இவற்றை வெவ்வேறு அணுகுமுறைகளில் நாம் நிச்சயம் கட்டுக்குள் கொண்டுவர முடியும்.

*****

வியபாரம் என்று வந்துவிட்டால் உற்பத்தி செய்தவனேதான் சந்தைப்படுத்த வேண்டும் என்று இல்லை.உழைப்பிற்கு ஏற்ப இலாபத்தை பிரித்துக் கொள்ளலாம்.தவறே கிடையாது.

தரகு மண்டி விவாகாரங்கள் நிறையச் சிக்கலானது.தரகு மண்டிக்காரனிடம் கடன் வாங்கியே அழிந்து போன விவசாயிகளும் உண்டு.நினைத்தது நடக்காமல் இயற்கை செய்த சதியால் தூக்கில் தொங்கிய தரகு மண்டிக்காரர்களும் உண்டு.

****

விவசாயத்தில் கூட்டுறவு முயற்சி தேவை.
கிராமங்களில் எக்கச்சக்கமான கூட்டுறவு பால் பண்ணைகளைப் பார்த்து இருப்பீர்கள். பாலும் உடனேயே விற்கவேண்டிய பொருள்.இருந்தாலும் அது நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது.அதற்காண காரணங்களை விளக்கலாம். ஆனால் அது திசை திருப்பலாக அமைந்துவிடும். :-)))

***
// பயிரிடும் விவசாயிகள் நுகர்வோரை நேரடியாகத் தொடர்பு கொண்டு விளை பொருட்களை விற்பது.//

உழவர் சந்தைகள் இதற்காக அமைக்கப்பட்டவையே. ஆனால் அதுவும் சாதாரண தரகு மண்டியளவில் தேய்ந்து போய்விட்டது.

//விவசாயிக்கு, எந்தச் சந்தையில் என்ன பொருள் தேவைப்படுகிறது என்ற விபரம் புரியாமல் போய் விடுகிறது. விளையா விட்டால் பேரிழப்பு, நிறைய விளைந்தாலும் எல்லோருக்கும் விளைச்சல் ஏற்பட விலை சரிந்து கைக்காசு இழப்பு என்று வாழ்க்கையே நிச்சயமற்றதாகப் போய் விடுகிறது.//

விவசாயிக்கு இவை எல்லாம் தெரிந்தே இருக்கிறது.இயற்கையால் ஏற்படும் இழப்புக்கு நாம் அதிக அளவில் ஏதும் செய்ய முடியாது.

வானிலை விவரங்கள் துல்லியமாக வேண்டும்.
பருவங்கள் மாறாதிருக்க இயற்கை வளங்கள் பாதுகாக்கப்படவேண்டும்.

அதிக விளைச்சல் கட்டுப்படுத்தக் கூடியதே. பயிரிடாமைக்கு மானியம் மற்றும் குளிர்பதன வசதிகளால் கட்டுக்குள் கொண்டுவந்து விடலாம்.

//தனது விளைபொருளை வாங்கிச் சாப்பிடப் போகும் மனிதர்களிடம் நேரடித் தொடர்பு இல்லாததால் விவசாயிகள் என்ன முறையிலாவது விளைச்சலைப் பெருக்க ஆரம்பிக்கிறார்கள்.//

எல்லா விசயத்திலும் நேரடித் தொடர்பு என்பது முடியாத காரியம்.சந்தைப்படுத்தலை பிறரிடம் ஒப்படைப்பது தவறல்ல.இதனை முறைப்படுத்தலாம் வழியுள்ளது.

**************************

நெடுநாளைய ஆதங்கம்:

IT ல் புண்ணாக்கு நாடு, தலைசிறந்த IIT உள்ள நாடு என்று சொல்லிக் கொள்ளும் நாம் இதுவரை விவசாயிகளுக்காக ஒரு உருப்படியான விசயங்களை அறிமுகப்படுத்தவில்லை.

கேவலம் இன்னும் "தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யலாம் " "கொட்டாம்பட்டியில் இன்று வெய்யில் 30து டிகிரி அடித்தது "என்ற அளவிலேயெ நமது வானிலை அறிக்கை உள்ளது.

இதை வைத்து "களை" புடுங்கக்கூட திட்டமிட முடியாது.இந்த வள்ளலில் வல்லரசாகி எதைக் கிழிக்கப் போகிறார்களோ தெரியவில்லை.

இவர்கள் செய்யும் தொழில்களுக்கு எந்த விலக்கு கொடுத்தாலும் சொரணை இல்லாமல் வாங்கிக் கொள்ளும் தொழிலதிபர்கள், விவசாயிக்கு மானியம் என்றால் அலறிவிடுவார்கள்.நாரயணமூர்த்திகளுக்கு வெள்ளைக்காரன் காசு கொடுத்தால்தான் வேலை நடக்கும். நாட்டுக்காக ஒன்றும் செய்ய சுய சொரணை வராது.

அரசியல்வியாதிகளுக்கு பல பிரசனைகள். தாமிரபரணியில் கோக் தண்ணி எடுத்தால் என்ன? ஆறு நாசமாய்ப் போனால் என்ன?

நாம் செய்யலாம் வாருங்கள்.

நல்ல ஆரம்பம் வாழ்த்துகள்!


FYI:
India Inc Stinks-SEZ ல் செக்ஸ் அனுமதி உண்டா ?
http://kalvetu.blogspot.com/2007/02/india-inc-stinks-sez.html

Sridhar V சொன்னது…

//நாம் இதுவரை விவசாயிகளுக்காக ஒரு உருப்படியான விசயங்களை அறிமுகப்படுத்தவில்லை.//

இருக்கிறது. ஆனால் வெகு சில...

இங்கே பெங்களூருவில் Safal fruit and vegetable auction market என்ற சந்தை இருக்கிறது. விவசாயிகளுக்கும் வியாபாரிகளுக்கும் மிக நல்ல முறையில் விரைவான வியாபாரம் நடத்தப்படும் சந்தை.

http://economictimes.indiatimes.com/articleshow/411150.cms

உலகத்திலேயே மிகப் பெரும் நவீனமயமாக்கப் பட்ட விவசாய சந்தை நெதர்லாந்திலே இருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக பெங்களூரு சந்தையை சொல்கிறார்கள்.

நிறைய வசதிகள் -

1500 டன் காய்கறிகள் / பழங்கள் சேமித்து வைக்கலாம்.

பழ வகைகளை சுகாதாரமான முறையில் சேமித்து, தர வாரியாக அறிவியல் முறைப்படி பழுக்க வைத்து சந்தை படுத்தலாம்.

விவசாயிகளின் பொருட்கள் வியாபாரிகளிடம் ஏலம் விடப்படும். கணிணி மயமாக்கப்பட்ட பெரும் ஏலச் சந்தை உண்டு.

இலாப நோக்கம் மட்டுமல்லாமல் விவசாயிகளின் தேவை அறிந்து சேவைகள் வழங்குவது.

நிறைய இருக்கிறது. இந்த மாதிரி ஒரு அமைப்பை பரவலாக ஏற்படுத்தினால் நிச்சயம் நல்ல பயன் இருக்கிறது.

உண்மைத்தமிழன் சொன்னது…

விவசாய விளைப் பொருட்களை விற்பனை செய்ய முறையான ஒரு அமைப்போ அல்லது முறைமையோ இல்லாததுதான் இன்றைய விவசாய விளைபொருட்களின் விலை உயர்வுக்கு முக்கியக் காரணம்.

காண்டம் விற்பனையில் புதுமையை புகுத்தியிருப்பதாகச் சொல்லி ஒரு அரசு நிறுவனமே ஒரு டிஸைனை வடிவமைத்து விற்பனை செய்கிறது. அந்த அக்கறை விவசாயத்தின் மீது அரசுகளுக்கு இல்லை என்பது கண்கூடு. காரணம் விவசாயத்தின் தாக்கம் அரசியல்வாதிகளைக் கவரவில்லை. அவர்களுக்கு வேண்டிய ஓட்டு வங்கி அதற்கடுத்த நிலையில் இருக்கும் நுகர்வோர்தான்..

திண்டுக்கல் அருகேயிருக்கும் எரியோட்டைச் சுற்றியிருக்கும் கிராமங்களில் விளையும் வெங்காயங்கள் எரியோட்டிற்கு கொண்டு வரப்படுவது தலைசுமையில் இல்லாவிடில் மாட்டு வண்டியில். அங்கிருந்து திண்டுக்கல்லுக்கு பஸ்ஸில்.. திண்டுக்கல்லில் பாதி இறங்கிய பிறகு மீதி மதுரை மார்க்கெட்டிற்கு..

முதலில் ஒரு கிலோ 10 ரூபாய் என்று விவசாயி பேச ஆரம்பித்தால் அந்த மூட்டையை வைத்துவிட்டு அடுத்த மூட்டைக்குப் போய்விடுகிறார்கள் தரகு வியாபாரிகள். தற்போதைக்கு தப்பித்தால் போதும் என்று சொல்லி வந்த விலைக்கு அவரிடமே விற்கிறார் விவசாயி.

திண்டுக்கல் தரகு மண்டிக் கடைக்கு வெங்காயம் வந்து சேரும்போது அந்த மண்டியின் பார்ட்னர்கள் எத்தனை பேரோ அதைப் பொறுத்து கிலோ 25, 30 என்று செல்லும். போதாக்குறைக்கு தரகு மண்டிகள் அனைவரும் ஒரு கூட்டணி அமைத்து இன்றைக்கு இவ்வளவுக்குத்தான் விற்பனை என்று தங்களுக்குள் பேசி வைத்துக் கொள்கிறார்கள். வாங்குபவன் அந்த தெருவில் எந்தக் கடைக்குச் சென்றாலும் அதே விலை அல்லது அந்த விலையிலிருந்து ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் வித்தியாசம் இருக்கும். இ

இந்த அவசர யுகத்தில் யார் கடை, கடையாக ஏறி இறங்குவது? ஏதோ ஒரு கடையில் வாங்கி போகிறார்கள். வாங்குகின்ற விலைக்கு இரட்டிப்பாக லாபம் சம்பாதிக்கிறார்கள் தரகு மண்டிக்காரர்கள். உண்மையில் இதில் பாதி தொகை விவசாயிகளுக்குச் செல்ல வேண்டும். யார் இதைக் கேட்பது?

நெல்லை கொள்முதல் செய்வதில் குடோனுக்கு கொண்டு சென்றால் அங்கிருக்கும் அதிகாரிகளுக்கு எடைக்கு இவ்வளவு என்று லஞ்சம் கொடுத்தால்தான் அது ஏற்கப்படும். இல்லையெனில் அது சொத்தை.. புழு இருக்கு. வாடை அடிக்குது என்று சொல்லி இன்றைக்கு, நாளைக்கு என்று விரட்டுவார்கள். அந்த இடத்திலிருந்து எந்த 'முதல்வனுக்கு' போன் போட்டுச் சொல்லி அந்த விவசாயி பரிகாரம் காண்பான்..? ஒரு வருடம் அப்பனுடன் வரும் பையன் மறுவருடம் அந்தத் தொழிலையே தொட மறுக்கிறான். விவசாயம் தொழில் என்பதிலிருந்து 'நம் பூர்வீகத் தொழில்' என்ற பெயருக்கு கீழே இறங்கிக் கொண்டிருக்கிறது.

மக்களுக்கான அரசுகள் வந்தால் ஒழிய.. எதிலும் எந்த முன்னேற்றமும் வரப் போவதில்லை ஸார்..

வவ்வால் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
வவ்வால் சொன்னது…

// * இதே தோட்டக்காரர், மாம்பழம் வாங்கப் போவது தெருவின் கடைசி வீட்டில் வசிக்கும் பத்து வயது சிறுமி என்றால் நிச்சயமாக ஆரோக்கியமான முறையில்தான் விளைச்சலை பெருக்க முயற்சிப்பார்.

இந்த வகையில், மேற்சொன்ன நான்கு கை மாறும் முறை மாறி, விவசாயியிடமிருந்து சில்லறை விற்பனையில் இறங்கும் பெரு நிறுவனம் வாங்கி வர, அந்தக் கடைகளில் சாப்பிடுபவர்கள் வாங்கிக் கொள்வது பெருமளவு முன்னேற்றம்தான்.//

வணக்கம் மா.சி.

இது என்ன வகையான வாதம் என்று தெரியவில்லை, எனக்கு தெரிந்து இப்படி சொல்வது முடக்கு வாதம், அல்லது குருட்டு வாதம், ஏங்க ரிலையன்ஸ் சில்லரை வர்த்தகத்தில் ஈடுபட்டால் இப்படி பூச்சி மருந்து இல்லத விளைப்பொருல் கிடைக்குமா, இல்லை இப்போ அவங்க விக்குறதுல பூச்சி மருந்து இல்லையா?

பூச்சி மருந்த விவசாயீ பயண்படுத்தக் காரணம் நம்ம அரசு வேளான் அதிகரிகள் தான், அவர்கள் தரும் பரிந்துறையை தான் செய்கிறார்கள், பல விவசாயிகள் பின்னர் தாங்களாகவே முன் சொன்ன மருந்தை ஒவ்வொரு சாகுபடிக்கும் பயன்படுத்த துவங்கி அதுவே பூச்சி இருந்தாலும் இல்லாவிட்டாலும் என்ற நிலைக்கு போய்விட்டது.

நாமே சுயமாக மெடிக்கலில் தலைவலி மாத்திரை வாங்கி போட்டுக்கொள்வது போல , பரிந்துரைக்கடிதம் இல்லாமல் பூச்சி மருந்து விற்க கூடாது என சட்டம் வர வேண்டும்.

இப்பொழுதான் ஓரளவிற்கு ஆர்கானிக் விவசாயம் குறித்து விழிப்புணர்வு வந்துள்ளது, நம்மாழ்வார்ப் போன்ற இயற்கை வேளான் விஞ்ஞானிகள் அதற்காக பாடுபடுகிறார்கள்.விரைவில் அது எல்லா மட்டத்திலும் பரவவேணும் என முயற்சிக்காமல் , சில்லரை விற்பனையில் ரிலையன்ஸ் போன்றவர்கள் வந்தால் மருந்து அடிக்காமல் காய் கறிகள் கிடைக்கும் என்பதா?

இன்னும் சொல்லப்போனால் பின்னாளில் அவர்கள் விவசாயிகளிடம் ஒப்பந்தம் போட்டு விளைபொருல் விளைவிக்க துவங்குவார்கள் அப்பொழுது குறைந்த முதலீட்டில் அதிக விளைச்சல் வேண்டி அதிக வீரிய பூச்சி மருந்து , உரங்களை பயன்படுத்த சொல்லித்தருவார்கள் விவசாயிகளுக்கு.

உ.ம்: பெப்சி தனது சிப்ஸ் தயாரிப்பிற்காக உருளை கிழங்கை ஒப்பந்த சாகுபடி முறையில் பெருகிறது.

//விவசாய விளை பொருள் சில்லறை வணிகத்தில் பெரு நிறுவனங்கள் ஈடுபடுவதை விட சிறந்தது, பயிரிடும் விவசாயிகள் நுகர்வோரை நேரடியாகத் தொடர்பு கொண்டு விளை பொருட்களை விற்பது//

உழவர் சந்தை என்று ஒன்றுள்ளதை அறிவீர்களா? அரசே சந்தைக்கு இடம் ,கடை , தராசு முதலியவை தந்து விவசாயிகளை நேரடியாக விற்பனை செய்ய ஊக்குவிக்கிரது. வில்லிவாக்கத்தில் எனக்கு தெரிந்து ஒன்றுள்ளது,அம்ப்பத்தூரிலும் உள்ளது.

அவை செயல்பட்ட போதிலும் மக்கள் பெருமளவில் அங்கு செல்வதில்லை , காரணம் அங்கே ஆங்கில காய்கறிகள் எனப்படும் கேரட், பீட் ரூட், முட்டைகோஸ், உருளை கிடைக்காது, அவர்ரை அவற்றை சாதரணமாக, கோவை, ஊட்டி பகுதிகளில் தான் விளைவிப்பார்கள் , அங்கு இருந்து சென்னை உ.ச விற்கு கொண்டுவர விவசாயிகளால் முடியாது.

உ .ச வின் சட்டத்தின் படி ஒரு விவசாயி தான் விளைவிக்கும் பொருளைத்தான் விற்க முடியும்,இந்த சட்டத்தை அரசு மாற்றினால் உழவர் சந்தைக்கு பெருமளவில் மக்கள் வருவார்கள்.

K.R.அதியமான் சொன்னது…

Land ceiling act, which was intended to re-distribute lands from zamindars, actually resulted in fragmentation of land holdings into univiable tiny bits. the poor farmer who wishes to migrate to other sectors of economy cannot sell his land for a better rate as corporate farming is not allowed (like in the west) ; low productivity, and little investment in irrigation (and worse with apathatic maintainance of tanks, bunds, etc), along with ever increasing input costs (due to defict produced inflation) has made farming unprofitable.

increased mechanisation and use of technology along with large and viable farm size will enable more efficient farming. for that population grwoth must be curtailed and the manufacturing sector must grow fast to employ the farm labour. this happened in the west in the past century and only 5 % of the population in US is engaged in farming. the situation was similar there in the 19the century...

prices are determined by market and it is foolish to artifically prop up prices of cotton or paddy by govt. increased minimum support prices (much above the actual market prices) makes more farmers to cultivate than otherwise. but there is a limit to govt resources to support this price. hence the govt is not able to fullfill its commitments and co-op sugar mills and cotton federations default in payments. the crisis in cotton in
W.India is because of this. combined with popultist free power,
it has made more farmers borrow and take huge risks. if there was no govt intervention, then probably these marginal farmers would not have borrowed but migrated as labourers elsewhere.
the whole process would hav balanced itself in a free pricing and sourcing mechanism.

the sugar mills are all in red mainly due to this and the past polices of compulsory levy and MSP for farmers. remember that sugar mills is a industry which did not exist some 150 years ago and we used vellam and karruppati. if real free market polcies were adopted, sugar would have been costiler but there would not have been this corruption and misery
for all the players. and people woould have used other forms of sugar....

பெயரில்லா சொன்னது…

இங்கு எல்லாரும் நிறைய விசயம் சொல்லியிருக்காங்க. பலர் நல்ல பாயின்டுகளை தந்துள்ளனர், பாரி.அரசு, கல்வெட்டு (எ) பலூன் மாமா, வவ்வால், k.r.athiyaman அவர்களுக்கு நன்றி.

//விவசாய விளை பொருள் சில்லறை வணிகத்தில் பெரு நிறுவனங்கள் ஈடுபடுவதை விட சிறந்தது, பயிரிடும் விவசாயிகள் நுகர்வோரை நேரடியாகத் தொடர்பு கொண்டு விளை பொருட்களை விற்பது.//

[சந்தையை பற்றிய அறிவை விவசாயிகள் பெற வேண்டும் என்பதும் இயலாத காரியம். ]

பாரி சார் சொல்வதே சரி என்று நினைக்கிறேன். சந்தையை அறிவது இயலாத காரியமாக இல்லையென்றாலும் மிக கடினமான வேலை. உழவர் சந்தை வெற்றியடையாததற்கு காரணமும் இதுதான்.


இருப்பினும் தனியார் நிறுவனமான ITC'யின் e-choupal முறையில் கணினி, இணையம் முலம் எங்கு தனது விளைபொருட்களுக்கு அதிக விலை கிடைக்கின்றது என்று அறியலாம்். யார் அதிக விலை கொடுக்கிறார்க்ளோ அவரிடமே விற்பனை செய்து பயனடையலாம்.
ஒருவர் auction-market என்று கூறிப்பிட்டுள்ளார். இது போல புது முயற்ச்சிகளால் விவசாயிகள் வரும்காலத்தில் பயனடைவது நிச்சயம்.

ஒருவர் கீரைகள் வியாபாரமாகமல் இருந்தால் அழிந்துவிடுகின்றன என்றார். ஆனால் அதை குளிர்பதனம் செய்தால் அது அழிந்துபோகாது. இதற்கு cold-storage facilities என்று பெயர். இந்தியாவில் இது கிடையாது என்னென்றால் இதற்கு தேவையான 24 மணி நேர-மின்சாரம் இல்லை. இங்கு மின்சாரம் தெசியமயமாக்கபட்ட ஒன்று, அதனால் மறைமுகமாக பாதிக்க படுவதோ விவசாயிகள்.

அரசு என்றைக்கு அடிப்படையான கட்டுமான வசதிகளை அளிக்கின்றதோ அன்றுதான் இந்த நாடு விளங்கும், அதை விட்டுபுட்டு இலவச மின்சாரம், இலவச டி.வி, கடன் தள்ளுபடி, உழவர் சந்தை என்றேல்லாம் பேசிகொண்டிருந்தால் நாடு விளங்காமல் போய்விடும்.

மா சிவகுமார் சொன்னது…

வாங்க இளா,

//நானும் இதையே பதிவிடனும்னு ரொம்ப நாளா நினைச்சுகிட்டே இருந்தேங்க. இன்னும் விரிவா என் பதிவுல எழுதறேங்க.//

ஒரு சின்ன திட்டம் ஆரம்பிக்க முயற்சி. சில நாட்களில் ஆரம்ப உரு வந்து விடும் என்று நினைக்கிறேன்.

பாரி அரசு,

//தாங்கள் பிரச்சினையின் ஒரு பரிணாமத்தை மட்டுமே பேசியிருக்கிறீர்கள்...//

நேரடியாக என்றால் நேருக்கு நேர் என்றில்லாமல், நேரடித் தொடர்பு என்று வைத்துப் பாருங்கள், நான் அடுத்த பகுதிகளில் சொல்ல வருவதற்கு அதுதான் பொருத்தம்.

//சந்தையை பற்றிய அறிவை விவசாயிகள் பெற வேண்டும் என்பதும் இயலாத காரியம். //

தகவல் தொழில் நுட்ப புரட்சிக்குப் பிந்தைய உலகிலும் அது இயலாது என்று நினைக்கிறீர்கள்? கருவிகள் உருவாக்கப்படவில்லை என்றாலும், முயன்றால் முடிந்து விடக் கூடியது என்றே நினைக்கிறேன்.

வணக்கம் பத்ரி,

//விவசாயிகளுக்கு ஒரே வழி கூட்டுறவை ஏற்படுத்தி பெரிய நிறுவனமாவதே (அமுல் - பால் உற்பத்தியாளர்கள்). அதன்பின் மொத்தமாக விற்பனை செய்வது அல்லது நேரடி விற்பனை என்பதை அவர்கள் யோசிக்கலாம்.//

சரியான கருத்து. அத்தகையக் கூட்டுறவுக்கு வழி வகுப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்படுவதாகத் தெரியவில்லையே!

கல்வெட்டு,

//மாமரம் எப்போது வைத்தாலும் மாங்காய்(பழம்) ஒரு குறிப்பிட்ட காலத்தில் மட்டும்தான் உற்பத்தியாகும்.//

அப்படி நாடு முழுவதும் எத்தனை மாமரங்கள் இந்த பருவத்தில் உற்பத்தி தரப் போகின்றன என்பது போன்ற விபரங்கள் கைவசம் இருந்தால் விவசாயி இன்னும் நம்பிக்கையுடன் பயிர் செய்ய ஆரம்பிக்கலாம்.

//IT ல் புண்ணாக்கு நாடு, தலைசிறந்த IIT உள்ள நாடு என்று சொல்லிக் கொள்ளும் நாம் இதுவரை விவசாயிகளுக்காக ஒரு உருப்படியான விசயங்களை அறிமுகப்படுத்தவில்லை.//

அமெரிக்காவுக்கு உழைத்தால் டாலர்கள் கிடைக்கும். இதைச் செய்தால் என்ன ஆதாயம், அதுதான் "தேசபக்த நிறுவனங்கள்" கவனம் இன்னும் இங்கு திரும்பவில்லை.

//இங்கே பெங்களூருவில் Safal fruit and vegetable auction market என்ற சந்தை இருக்கிறது. விவசாயிகளுக்கும் வியாபாரிகளுக்கும் மிக நல்ல முறையில் விரைவான வியாபாரம் நடத்தப்படும் சந்தை.//

தகவலுக்கு நன்றி ஸ்ரீதர் வெங்கட். இந்தச் சந்தை இயங்கும் இணைய முகவரி ஏதாவது தெரியுமா?

உண்மைத் தமிழன்,

தேவையான சேவை அளிக்கும் இடைத் தரகர்களைப் புரிந்து கொள்ளலாம். நீங்கள் சொல்வது போல அடாவடி செய்யும் அமைப்புகள் மறைந்து போவதே நல்லது.

//ஏங்க ரிலையன்ஸ் சில்லரை வர்த்தகத்தில் ஈடுபட்டால் இப்படி பூச்சி மருந்து இல்லத விளைப்பொருல் கிடைக்குமா, இல்லை இப்போ அவங்க விக்குறதுல பூச்சி மருந்து இல்லையா?//

ரிலையன்ஸ் பத்திப் பேசவே ஆரம்பிக்கவில்லை, வவ்வால் :-). என்னைப் பொறுத்த வரை ரிலையன்ஸ் என்ற நிறுவனத்தின் பொருட்களை வாங்காமல் தவிர்க்கிறேன். அது இன்னொரு பதிவுக்கு.

என்னதான் அரசாங்கம் சொன்னாலும், தமது வீட்டுத் தேவைக்குப் பூச்சி மருந்தில் முக்காமல்தானே காய்கறி எடுத்துக் கொள்வார்கள்!

பொருளாதாரக் காரணங்களால் எல்லோரும் போகும் வழியைப் பின்பற்ற வேண்டியக் கட்டாயம் இருக்கிறது. விளை பொருளுக்கு நல்ல விலை கிடைத்து விவசாயப் பொருளாதாரம் மேம்பட்டால்தான் இது போன்ற பழக்கங்கள் நிற்கும்.

அதியமான்,

மாற்றங்கள் நடக்கத்தான் செய்கின்றன. ஆனால், இடைக்காலத்தில் நம்ம ஊருக்கு ஏற்ற வழி சொல்லுங்கள்.

அன்புடன்,

மா சிவகுமார்

Pavals சொன்னது…

//பயிரிடும் விவசாயிகள் நுகர்வோரை நேரடியாகத் தொடர்பு கொண்டு விளை பொருட்களை விற்பது.// இதை நிறைய பேரு சொல்லி கேள்விபடுறேன்.. இதே வார்த்தைய சொல்லிட்டு தான் 'உழவர் சந்தை'ன்னு ஒரு சமாச்சாரம் கொண்டு வந்தாங்க.. அது நல்லதா கெட்டதா'ன்னு அரசியலுக்கு அப்பாற்பட்டு பார்த்தீங்கன்னா.. ஒன்னே ஒன்னு சொல்லலாம்.. அந்த திட்டத்துனால 99% பிரயோஜனம் இல்லை.

தக்காளிய எடுத்துக்கோங்க.. காலையில ஆறு ஏழு மணிகுள்ள அதை சந்தையில கொண்டு போயி தள்ளிட்டு அந்த விவசாயி திரும்ப வந்து மறுபடியும் தோட்டத்துக்கு வெயில் ஏறுவதுகுள்ள தண்ணி விடனும்.. அவன் போயி சந்தையில உக்காந்து 11/12 மணி வரை வியாபரம் செய்ய முடியுமா, நிகழ்வுல, கண்டிப்பா முடியாது. இப்படித்தான் ஒவ்வொரு உழவர்சந்தையும் 'உழவர்' கார்டு வச்சிருக்கிற வியபாரிகளால நிறைஞ்சு கிடக்கு.

நுகர்வோர்க்கும் விவசாயிக்கும் இடைப்பட்டு இருக்கிற அந்த தரகு வியாபரத்துல ஒரு ஒழுங்கு கொண்டு வந்தா இது சாத்தியமாகலாமே ஒழிய கண்டிப்பா விவசாயி நேரடியா நுகர்வோர் கிட்ட போறதுங்கிறது, போகாத ஊருக்கு வழிதான்.

அப்புறம் பூச்சிகொல்லி/சுன்னாம்பு கல் பத்தி சொல்லியிருக்கீங்க.. நல்லது. ஆனா பூச்சிகொல்லிய பத்திய விழிப்புணர்வு விவசாயிக கிட்ட கிடையாததும், பத்து வருசங்களுக்கு மேலா எல்லா 'அக்ரி'களும் அரசு எந்திரங்களும் போற்றி வளர்த்த அந்த விசயத்துல //தனது விளைபொருளை வாங்கிச் சாப்பிடப் போகும் மனிதர்களிடம் நேரடித் தொடர்பு இல்லாததால் விவசாயிகள் என்ன முறையிலாவது விளைச்சலைப் பெருக்க ஆரம்பிக்கிறார்கள்.// இந்த வாதம் கண்டிப்பா ஏற்புடையது இல்லை. அவனும் அதையே தான் சாப்பிடுறான், அதுனால தன் வீதியில இன்னொருத்தன் போன்றவை.. ம்ஹும்.

சுன்னாம்பு கல் வைக்கிறது விவசாயி இல்லைங்க.. லைட்டா மஞ்ச தெரிஞ்சாவே அந்த பழத்தை வியாபாரி வாங்க மாட்டான், அது 'கழிச்சது'ல போயிரும். தன் அக்கம்பக்கத்துக்கும், சொந்தங்களுக்கும் இலவச வினியோகம் தான் செய்யனும். விவசாயி விக்கிறது காய், அட்லீஸ்ட் காய்வெட்டா இருக்கிற மா' தான். அதை பழுக்க வைக்கறது சந்தைபடுத்தும் வியாபாரிகள்.

மீண்டும் "நுகர்வோர்க்கும் விவசாயிக்கும் இடைப்பட்டு இருக்கிற அந்த தரகு வியாபரத்துல ஒரு ஒழுங்கு கொண்டு வந்தா இது சாத்தியமாகலாமே ஒழிய கண்டிப்பா விவசாயி நேரடியா நுகர்வோர் கிட்ட போறதுங்கிறது, போகாத ஊருக்கு வழிதான்". ஆனா எப்படி? எப்போ?

Pavals சொன்னது…

//விவசாயியிடமிருந்து சில்லறை விற்பனையில் இறங்கும் பெரு நிறுவனம் வாங்கி வர, அந்தக் கடைகளில் சாப்பிடுபவர்கள் வாங்கிக் கொள்வது பெருமளவு முன்னேற்றம்தான்.// இதை பத்தி சொன்னா ஒருவேளை பதிவு திசை திரும்பிருமோன்னு பார்த்தேன் :) இருந்தாலும்..

இது கண்டிப்பாக நல்ல முயற்ச்சியாக இருக்கும். அதுவும் இரண்டுக்கு மேற்பட்ட நிறுவனங்கள் இதில் எந்த விதமான 'மறைமுக உடன்படிக்கை'யும் இல்லாம வந்தா கண்டிப்பா விவசாயிக்கு நலம் தான். சிறு வியாபாரிகள் நலன் பாதிக்கும்னு சொல்றாங்க.. ஆனா வியாபாரிகள விட குறைஞ்சது 10/15 மடங்கு அதிகமாக இருக்கிற விவசாயிக்கு நல்லது தான்.

எங்க ஊர்ல கூட இப்போ டிபார்ட்மென்ட் ஸ்டோர் தான் சந்தைய விட விலை கம்மின்னு மக்கள் போறாங்க. அவர்களுக்கு ஒப்பந்த முறையில குடுக்கிற விவசாயுக்கு சந்தோசம் தான். நல்ல விலை இல்லைன்னாலும், சந்தையில கொட்ட்டு வரவேண்டிய நாட்களே நிறையா இருந்துட்டு இருந்தது இப்பொ இல்லை, எப்படியும் ஒரு கட்டுபடியாகிற விலை கிடைக்குது. ஆனா இவுங்க சுத்துவட்டாரத்துல மூணே கடை வச்சிருகர ஆளுக அதுனால அதிக விவசாயிகளுக்கு இவுங்க ரீச் இல்லை, (அந்த போட்டியில விவசாயி கிட்ட காசு குறைக்கறாங்க தான், ஆனா நிரந்தர வாடிக்கையாளர்ங்கிற முறையில விவசாயிக்கு உபயோகம் தான்)

கோவை, பொள்ளாச்சி மாதிரி இடங்கள்ல இந்த மாதிரி ஸ்டோர்ஸ் வந்தாச்சு, அதுனால மார்கெட் வியபாரம் கொஞ்சம் அடியும் வாங்கியாச்சு, ஆனா இன்னும் இங்க கொடிபுடிச்சு கண்ணாடிய உடைக்க ஆள் இல்லை, ஒரு வேளை எங்க ஊர்ல மார்க்கெட்ல இருக்கிற சில்லறை வியாபாரிகளுக்கு அந்த 'கொள்கை புடிப்புள்ள' ஆசாமிக கிட்ட போயி இன்னும் அழுவலையோ என்னமோ. :)

வவ்வால் சொன்னது…

மா.சி ,

வாழைப்பழ காமெடி பண்றிங்க ,

//மேற்சொன்ன நான்கு கை மாறும் முறை மாறி, விவசாயியிடமிருந்து சில்லறை விற்பனையில் இறங்கும் "பெரு நிறுவனம் வாங்கி வர", அந்தக் கடைகளில் சாப்பிடுபவர்கள் வாங்கிக் கொள்வது பெருமளவு முன்னேற்றம்தான்.//

இந்த இடத்தில் பெரு நிறுவனம் என்பது என்ன , விளக்கவும்,

ரிலையன்ஸ் என்ற பெயரைப்போடவில்லை எனில் அவ்வாறு சொன்னதாக ஆகாதா, ரிலையன்ஸ், டாடா, வால்மார்ட் எல்லாம் பெரு நிறுவனங்கள் என நான் நினைத்துக்கொண்டுள்ளேன், ஒரு வேளை இவற்றை விடவும் பெரு நிறுவனங்களை நீங்கள் சொல்கிறீர்களோ, மைக்ரோசாப்ட் ஆ?

உழவர் என்ற உற்ப்பத்தியாளர், நுகர்வோர் நேரடி சந்திப்பிற்கு உழவர் சந்தை சிறந்த ஒரு மாடல், இந்த உழவர் சந்தை அமைப்பு அமெரிக்கா போன்ற வளர்ந்த நாட்டிலும் உள்ளதாகக் கேள்விப்பட்டேன் அதன் அடிப்படையில் தான் இங்கே அந்த சந்தை கொண்டுவரப்பட்டது. அந்த அமைப்பில் உள்ள சில குறைகளை நீக்கி ஒழுங்குபடுத்தினால் சிறப்பாக செயல்படும். கிராமங்களில் வார சந்தை நடைபெறுகிறதே போனது இல்லையா?

இணையவழி சந்தைப்படுத்துதல் அனைத்து விவசாயிகளுக்கும் சாத்தியமா? ஆனால் அதனையும் அரசு செய்யாமல் இல்லை கிசான் நெட் என்ற பெயரில் இணையசந்தை ஏற்படுத்தி உள்ளது.

http://www.kisan.com/

புதுவையில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிலையம் வாயிலாக இணையம், கம்பி இல்லாத்தந்தி என்று சில தேர்ந்தெடுத்த கிராமங்களில் மட்டும் கொடுத்து அவர்களை புதுவை மைய சந்தையின் சந்தை நிலவரத்தை உடனே அறிந்து அதற்கு ஏற்றார்ப்போல் செயல்பட வைக்கிறார்கள்.

தானியங்கள் அல்லாத அழுகும் விவசாய விளைப்பொருட்களுக்கு இணைய வழி சந்தைப்படுத்துதல் சற்று கடினம் தற்போதைய உள்கட்டமைப்பில்.

திடீர் என ஒரே பயிரை அதிக அளவில் அனைவரும் பயிரிட்டு அதிகமாக உற்பத்தி செய்து விலை வீழ்ச்சி ஏற்படாமல் தடுப்பது மிக முக்கியம். அதற்கு மேல் நாடுகளில் உள்ளது போல் பயிர் பதிவு முறை மற்றும் பயிரிடும் பரப்பளவினை முன் கூட்டி தீர்மனிக்கும் முறை வேண்டும்.

இந்த முறை எப்படி செயல் படும் எனில் ,வரும் பருவத்திற்கு ஒரு குறிப்பிட்ட பயிரின் தேவை எவ்வளவு என அரசு கணக்கிடும் அதற்கு தேவையான நில அளவில் மட்டும் பயிரிடலாம் அதற்கு விவசாயி முன்பதிவு செய்ய வேண்டும். அவர்களுக்கு மட்டும் மானியம் , மற்றவர்கள் வேறுப்பயிரிட வேண்டும். விதைக்கும் நாள் முதல் கொன்டு அரசு அறிவித்துவிடும்.இதன் மூலம் அதிகப்படி உற்பத்தி ,விரயம் தவிர்க்கப்படும். விலை விவசாயிகளின் சாகுபடி செலவிற்கு எற்றார்ப்போல் கிடைக்கும்.

பெயரில்லா சொன்னது…

//increased mechanisation and use of technology along with large and viable farm size will enable more efficient farming. for that population grwoth must be curtailed and the manufacturing sector must grow fast to employ the farm labour//

மெக்கனைசேசன் சில பொருட்களுக்கு மட்டுமே சாத்தியம் உதாரணத்திற்கு
நெல். அமே...ரிக்காவாக இருந்தாலும் காலிப்ளவரும் , கேபேஜ்,
தக்காளியும் காலங்காத்தால மெக்சிகன் தொழிலாளி கையால்தான்
பறிக்கிறான். விவசாயத்தை எட்டியும் பார்க்காத ஆட்கள் பின்னூட்டம் இடுவது
இப்படிதான் இருக்கும்.

பாபுலேசன்ல ஒரு அரை பில்லியனை பட்டினி போட்டு கொன்னுட்டா
பிரச்சினை சரியாயிடும் ? அப்படி கொல்வதென்றால் யாரை கொல்வது
உணவு உற்பத்தி செய்பவனையா அல்லது ஐடிக்காரனையா?

வீணாகும் பொருட்களை கேன் செய்யலாம் அல்லது freeze பண்ணலாம்.
5000 வருடங்கள் முன்பு ஊறுகாய், வடாம் டெக்னாலஜி கண்டுபிடித்தவர்கள்
இந்தியர்கள். :(

சைனாவிலிருந்து பருத்தி இறக்குமதி செய்து கேரளாவில் வால்மார்ட்டுக்கு
துணி தைக்கிறார்கள். அப்புறம் லோக்கல் பருத்திக்கு எப்படி விலை
கிடைக்கும்?

வவ்வால் சொன்னது…

இது என்ன உள்குத்து அரசியல் பதிவா அனானியாக வந்து சொல்கிறீர்கள், சரி போகட்டும் உங்களுக்கு விவசாயம் நன்கு தெரிகிறது என்பதை கோடிட்டு காட்டியுள்ளீர்கள்!!! எனவே உங்களிடம் இந்த சந்தேகத்தை கேட்போம்,

ஒரு கிலோ பீன்ஸ் விலையும் ஒரு கிலோ கேன்ட் பீன்ஸ் விலையும் ஒன்றாக இருக்குமா, விளைப்பொருள் வீணாகாமல் தடுப்பது மட்டும் இல்லை , விவசாயிக்கு உழைப்புகு ஏற்ற ஊதியம் போய்சேர வேண்டும், மக்களுக்கும் வாங்கும் விலையில் விற்கப்பட வேண்டும்.

பதப்படுத்தும் தொழில் பெரும் பணக்கரர்கள் கையில் உள்ளது, மேலும் பதப்படுத்தப்பட்ட உணவு சாதாரண மக்கள் வாங்கும் விலையில் இல்லை. அப்படி இருக்கும் இந்திய சூழலுக்கு இது சாத்தியமா நன்கு அறிந்தவரே கூறுங்கள்.

ஒரு லிட்டர் பால் 12 ரூபாய் எனில் அதுவே டெட்ரா பாக்கில் வரும் பால்(Tazza) 50 ரூபாய், தபு கூடா விளம்பரத்துகு வருவார் அந்த பதப்படுத்தப்பட்ட பாலுக்கு.இப்பொழுது அந்த நிறுவனம் கூடுதல் பணம் தருமா பால் விற்றவனுக்கு.

மாகி தக்காளி சாஸ் அதிகவிலை ஆனால் அவர்கள் ஒரு கிலோ தக்காளி 50 பைசாவிற்கு வாங்குவதாக செய்தித்தாளில் வந்துள்ளது.

அதற்காக பதப்படுத்துதல் வேண்டாம் என சொல்லவில்லை, விரயம் ஆவதை தவிற்க பயன்படுத்தலாம் ஆனால் அதனால் அடிமட்ட விவசாயி அடையும் பலன் என்னவென பார்க்கவேண்டாமா? எனவே மதிப்பு கூட்டும் நடவடிக்கைகளுக்கு முன்னர் விவசாயிக்கு ஏதேனும் செய்ய வேண்டும் சார்!

விற்பனை பிரதினிதிகள் எல்லாம் விவசாயம் ப்ற்றி பின்னுட்டம் போட்டால் உங்களைப்போல தான் போடுவார்கள்.coz they wont know the manufacturing process they know only how to sell and churning money out of anything

மா சிவகுமார் சொன்னது…

//சந்தையை அறிவது இயலாத காரியமாக இல்லையென்றாலும் மிக கடினமான வேலை. உழவர் சந்தை வெற்றியடையாததற்கு காரணமும் இதுதான்.//

அதற்கானக் கட்டமைப்பு எங்கே அனானி? இன்றைக்கு ஒருவருக்கொருவர் அரட்டை அடிக்க இணையக் கருவிகள் உள்ளன. அது ஏன் விவசாயிக்குப் பயன்பட மாட்டேன் என்கிறது?

திருமணப் பொருத்தத்துக்குப் படிக்காதவர்களும் இணைய மையத்திற்குப் போய் விபரம் சேர்த்துக் கொள்கிறார்கள். விவசாயிக்கு ஏன் வழி இல்லை?

//நுகர்வோர்க்கும் விவசாயிக்கும் இடைப்பட்டு இருக்கிற அந்த தரகு வியாபரத்துல ஒரு ஒழுங்கு கொண்டு வந்தா இது சாத்தியமாகலாமே ஒழிய கண்டிப்பா விவசாயி நேரடியா நுகர்வோர் கிட்ட போறதுங்கிறது, போகாத ஊருக்கு வழிதான்.//

ஒத்துக்கறேன் கொங்கு ராசா.

தரகு வியாபாரத்தில் ஒழுங்கு வர வேண்டும் என்றால் விவசாயிக்கு நிலவரம் தெரிய வேண்டும். முன் கூட்டியே திட்டமிட வசதிகள் வேண்டும்.

//ஆனா வியாபாரிகள விட குறைஞ்சது 10/15 மடங்கு அதிகமாக இருக்கிற விவசாயிக்கு நல்லது தான்.//

அதுதான் நடக்க வேண்டும். 10-15 நிறுவனங்கள் போட்டியிட்டால் பெரு நிறுவன வரவால் விவசாயிக்கு நன்மைதான். இடைத் தரகுக் குறைந்து நல்ல விலை கிடைக்கும். கட்டமைப்புகள் பெருக முதலீடுகள் நடக்கும்.

வவ்வால்,

எனக்குக் காமடியும் வருகிறதே! :-)

//திடீர் என ஒரே பயிரை அதிக அளவில் அனைவரும் பயிரிட்டு அதிகமாக உற்பத்தி செய்து விலை வீழ்ச்சி ஏற்படாமல் தடுப்பது மிக முக்கியம். அதற்கு மேல் நாடுகளில் உள்ளது போல் பயிர் பதிவு முறை மற்றும் பயிரிடும் பரப்பளவினை முன் கூட்டி தீர்மனிக்கும் முறை வேண்டும்.//

அதை யார் தீர்மானிப்பார்கள். அரசு போடும் கணக்குகளின் கதை எல்லோருக்கும் தெரியும். குறிப்பிட்டப் பயிரை போடும் முன் விவசாயிக்கு 4 மாதம் கழித்து அந்தப் பயிர் சந்தைக்கு வரும் போது வேறு பகுதிகளிலிருந்து எவ்வளவு எண்ணம் வரப் போகிறது என்ற மதிப்பீடு கிடைத்தால் உதவியாக இருக்கும் அல்லவா?

//பாபுலேசன்ல ஒரு அரை பில்லியனை பட்டினி போட்டு கொன்னுட்டா
பிரச்சினை சரியாயிடும் ? //

அது மட்டுமில்லை. விவசாயம் மற்ற தொழில்களைப் போல் இல்லை என்று நினைக்கிறேன். விவசாயிகளுக்கு அதில் உணர்வு பூர்வமான ஈடுபாடு இருக்கிறது. வெளியிலிருந்து பேசும் நாம் எளிதாக வேறு தொழிலுக்குப் போகும்படி சொல்வது சரியாகாது

அன்புடன்,

மா சிவகுமார்

K.R.அதியமான் சொன்னது…

Diesel prices (which is the life blood of any economy) is very high here due to some 100 % taxation and corruption in PSU companies result in this mess. and worse there is going to be an acute shortage of petroleum products in future as new capacity is not being added because of price controls, and all oil marketing cos are bleeding.

production costs and transport costs are proportional to diesel prices. and in farming many farmers use diesel pumpsets.

A holistic approach to the whole economic problems is needed to solve the problems in farming.

Most subsidies are not targeted and rich and medium sized farmers enjoy the benefits at the cost of the marginal farmers.

Fertiliser policy is a mess and all units in this sector are bleeding. recently they had appealed directly to the PM to help them ; and no new capacity is being added n the past decade as this sector is becomming unviable..

and there is the contradiction of keeping the food prices low for the nation while farmers need higher prices for their produce...

K.R.அதியமான் சொன்னது…

Pls see this good link :

http://indianeconomy.org/2007/06/28/world-bank-offers-600-million-loan-to-india/

மா சிவகுமார் சொன்னது…

//Most subsidies are not targeted and rich and medium sized farmers enjoy the benefits at the cost of the marginal farmers.//

தொழில் துறையில் வரிச் சலுகைகள், அரசு மானியங்களையும் சேர்த்துதானே சொல்கிறீர்கள், அதியமான்? அதிலும் பெரிய நிறுவனங்களுக்கு எல்லாச் சலுகைகளையும் ஒழித்து விடுவது சரியாக இருக்குமா?

அன்புடன்,

மா சிவகுமார்

K.R.அதியமான் சொன்னது…

i was referring to the free power enjoyed indiscriminately by all farmers (incl rich one who use most of the benenfits, while they can afford to pay at least 25 paise per unit. in our area, i have seen pumpsets being operated for 24 hrs or more..

and fertiliser subsidy too is cornered by the rich farmers in Punjab, Haryana and Maharastra.

if a break up of the total subsidy to user profile is figured this data will be more clear.

similar to all classes above lower income groups enjoying subsisdy of Rs.200 per cylinder of LPG gas.

indirect taxation covers all section of the population. (e.g : taxes on diesel, textiles, drugs, etc) and the tax money is used to subsidise the undererving in this cynical times..

பெயரில்லா சொன்னது…

//சந்தையை பற்றிய அறிவை விவசாயிகள் பெற வேண்டும் என்பதும் இயலாத காரியம். //

//தகவல் தொழில் நுட்ப புரட்சிக்குப் பிந்தைய உலகிலும் அது இயலாது என்று நினைக்கிறீர்கள்? கருவிகள் உருவாக்கப்படவில்லை என்றாலும், முயன்றால் முடிந்து விடக் கூடியது என்றே நினைக்கிறேன்.//

//அதற்கானக் கட்டமைப்பு எங்கே அனானி? இன்றைக்கு ஒருவருக்கொருவர் அரட்டை அடிக்க இணையக் கருவிகள் உள்ளன. அது ஏன் விவசாயிக்குப் பயன்பட மாட்டேன் என்கிறது?//

பயன்படுகிறது:

1. தனியார் நிறுவனமான ITC'யின் e-choupal முறையில் கணினி, இணையம் முலம் எங்கு தனது விளைபொருட்களுக்கு அதிக விலை கிடைக்கின்து என்று அறியலாம்்.
ஆனால் இந்த வசதி நாடு முழுவதும் இல்லை.

e-choupalலை பாராட்டி முனைவர்.அப்துல் கலாம் இதோ:
http://www.itcportal.com/newsroom/press06june07-a.htm

2. ஓட்டன்சத்திரம் காய்கறி மார்கெட்டின் இணைய முகவரி இது
http://www.oddanchatrammarket.com/

இது போல பலர் முயற்சி செய்து வருகின்றனர்.

ஒரு விவசாயிக்கு சந்தையை அறிவதைவிட cold-storage facilities மிக முக்கியம். இந்தியாவில் மின்சாரம் தெசியமயமாக்கபட்டதால் cold-storage facilities இருப்பதில்லை, அத பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க சிவா.

மா சிவகுமார் சொன்னது…

//if a break up of the total subsidy to user profile is figured this data will be more clear.//

இதைத்தான் நானும் சொல்ல விரும்பினேன் அதியமான். அரசு சலுகைகள் தேவையில்லாதவர்களுக்கும் போய்ச் சேருவது விவசாயத்தில் மட்டும் இல்லையயே!

அனானி,

//இது போல பலர் முயற்சி செய்து வருகின்றனர். //

இன்னும் பல முயற்சிகள் தேவைதான்.

//ஒரு விவசாயிக்கு சந்தையை அறிவதைவிட cold-storage facilities மிக முக்கியம். இந்தியாவில் மின்சாரம் தெசியமயமாக்கபட்டதால் cold-storage facilities இருப்பதில்லை, அத பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க சிவா.//

இன்னும் நினைக்க ஆரம்பிக்கவில்லை அனானி :-). நீங்கள் சொல்லும் விளைவு பல காரணங்கள் பின்னிப் பிணைந்தது இல்லையா. தனியாக விவாதிக்கப்பட வேண்டிய ஒன்று.

அன்புடன்,

மா சிவகுமார்

பெயரில்லா சொன்னது…

நண்பர் கேட்டதற்காக ,
பொருள்கள் வீணாவதை தடுக்க கேனிங்க் செய்யலாம். இது
ஒன்றும் பயங்கர ஹைடெக் தொழில்நுட்பம் இல்லை. வீட்டிலேயே
கூட செய்யக்கூடியதுதான்.

நண்பர் கேட்டதற்காக ,
பொருள்கள் வீணாவதை தடுக்க கேனிங்க் செய்யலாம். இது
ஒன்றும் பயங்கர ஹைடெக் தொழில்நுட்பம் இல்லை. வீட்டிலேயே
கூட செய்யக்கூடியதுதான். தொழில்நுட்பத்தை ஆராய்ச்சி சாலைகளில்
பூட்டி வைக்காமல் பொதுவில் கொண்டு செல்ல வேண்டும். அதற்கான
அக்கறை தான் எங்கும் இல்லை.

பம்பாயிலிருந்து வரும் மேகீ வாங்குவதை விட லோக்கலில் தயாரிக்கப்படும்
பொருட்களை வாங்கினால் டிவி விளம்பரத்திற்கெல்லாம் சேர்த்து காசு கொடுத்து
பொருட்கள் வாங்க வேண்டியதில்லை.

பெயரில்லா சொன்னது…

[url=http://www.casinovisa.com/deposit-casinos/]online blacljack[/url] , [url=http://www.concordiaresearch.com/]slots[/url] , [url=http://www.realcazinoz.com/casino_games]casinos online[/url] , [url=http://www.avi.vg/category.php?a=sex4sexx&cid=20]adult games[/url] , [url=http://www.free-casino-bonus.com/winner-casino-bonus-code/]tropez casino[/url]