சனி, பிப்ரவரி 02, 2019

இடைக்கால பட்ஜெட் : - மோடி அரசின் கடைசி ஜூம்லா

மோடி அரசின் சார்பாக இடைக்கால நிதி அமைச்சர் பியுஷ் கோயல் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறார். முழு நேர நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உடல்நிலை சரியில்லாமல் அமெரிக்காவில் சிகிச்சைக்கு போயிருப்பதால், பியுஷ் கோயல் அருண் ஜெட்லி செய்திருக்க வேண்டிய வேலையை செய்திருக்கிறார். அருண் ஜெட்லி ஆயுஷ்மான் பாரத் என்று இந்தியாவில் அவரது அரசே நடத்தும் திட்டத்தில் சிகிச்சை பெறாமல் அமெரிக்காவுக்கு எஸ்கேப் ஆகியிருக்கிறார் என்பதை இந்த நேரத்தில் நாம் கவனித்துக் கொள்ள வேண்டும்.

வரும் மே மாதம் நாடாளுமன்ற தேர்தல் வரவிருப்பதால் ஏப்ரல் 1,  2019 முதல் மார்ச் 31, 2020 வரைக்குமான மத்திய அரசின் வரவு செலவுத் திட்டத்தை மோடி அரசு தாக்கல் செய்யவில்லை. தேர்தல் முடிந்து பா.ஜ.க தலைமையிலோ, காங்கிரஸ் தலைமையிலோ வேறு கூட்டணி தலைமையிலோ புதிய அரசு அமைவது வரையில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் மத்திய அரசின் செலவுகளுக்கு நாடாளுமன்றத்திடம் பணம் கேட்பதுதான் வழக்கமான நடைமுறை (இதை vote on account என்று அழைக்கிறார்கள்). ஆனால், மோடி அரசு இடைக்கால பட்ஜெட் என்ற பெயரில் பா.ஜ.க-வின் தேர்தல் வாக்குறுதிகளை அறிவிப்பதற்கான வாய்ப்பாக பயன்படுத்தியிருக்கிறது. கடந்த நான்கரை ஆண்டுகள் பா.ஜ.கவின் மோடி அரசு உடைக்காத நடைமுறைகள், சிதைக்காத நிறுவனங்கள் இல்லை என்று சொல்லி விடலாம், அதில் இதுவும் சேருகிறது.

இந்த பட்ஜெட் சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கும், சிறு விவசாயிகளுக்கும், முறைசாரா தொழிலாளர்களுக்கும் நலத்திட்டங்களை வாரி வழங்கியிருக்கிறது என்று மோடி முதலான பா.ஜ.க தலைவர்களும் ஊடகங்களும் பிரச்சாரம் செய்கின்றன. தேர்தல் ஆண்டில் இது போல மரபை மீறி திட்டங்களை அறிவித்தது போங்காட்டம் என்று எதிர்க்கட்சிகள் குமுறுகின்றன. மோடி அரசின் இன்னும் ஒரு ஜூம்லா இந்த பட்ஜெட் அறிவிப்புகள். புதிய திட்டங்களை நிறைவேற்றுவதற்கான நிதி ஒதுக்கீடு ஜூலையில் முழு பட்ஜெட்டில்தான் செய்ய முடியும். அதுவரை அவை வெறும் வாய்ச்சவடால்களாகவே இருக்கும். “எனக்கு மீண்டும் ஓட்டு போட்டால், நான் ஆட்சிக்கு வந்து இதை எல்லாம் உங்களுக்கு தருவேன்" என்பதுதான் மோடி சொல்லும் செய்தி.

சரி, ஜூம்லாவாக இருந்தாலும் என்னதான் சொல்கிறார் என்று பார்க்கலாம்.

முதலில் வருமான வரிச் சலுகை.

அதற்கு முன் வருமானம் பற்றி பார்த்து விடலாம். உங்கள் வருமானம் ஆண்டுக்கு ரூ 2.5 லட்சத்துக்குக் குறைவாக இருந்தால் நீங்கள் வருமான வரி கட்டப் போவதில்லை. அதாவது மாதத்துக்கு ரூ 20,000-க்கும் குறைவான வருமானம் உள்ளவர்களுக்கு வயித்துப் பிழைப்பே பெரும்பாடாக இருக்கும் போது வருமான வரியும் கட்ட முடியுமா, என்ன? இந்த வரம்புக்குள் நாட்டின் தொழிலாளர்களில், சிறு வணிகர்களில், விவசாயிகளில் 90% பேர் வந்து விடுவார்கள். எஞ்சியிருக்கும் சுமார் 5% பேருக்கு இந்த வருமான வரிச் சலுகைகள் பொருந்தும்.

இதில் என்ன சொல்கிறார்கள்? 2.5 லட்சத்துக்கும் 5 லட்சத்துக்கும் இடையே வருமானம் ஈட்டுபவர்கள் (மாத வருமானம் சுமார் ரூ 40,000 வரை) கட்ட வேண்டிய வரியான 12,500-ஐ தள்ளுபடியாக பெறலாம். அதாவது அவர்கள் வரி எதுவும் கட்ட வேண்டியிருக்காது. இது பெரிய தொழிற்சாலைகளிலும், நடுத்தர அளவு நிறுவனங்களிலும் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கும், நடுத்தர வியாபாரிகளுக்கும் காசை மிச்சப்படுத்தும்.  இது போக சம்பளம் வாங்குபவர்கள் கழிக்க வேண்டிய தொகை அதிகரிப்பு, வங்கி வட்டி மீதான வரிச் சலுகை என்று சில அறிவிப்புகள் உள்ளன.

இரண்டாவது பெரிய திட்டம், 5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்திருக்கும் சிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ 6,000 உதவித் தொகையாக வழங்கப்படும் என்பது. இதில் சுமார் 12 கோடி விவசாய குடும்பங்கள் அடங்கும். இந்தப் பணம் மூன்று  தவணைகளாக அவர்களது வங்கிக் கணக்கில் போடப்பட்டு விடும்.

நல்ல விஷயம்தான்.

ஆனால், விவசாயி கேட்பது குறைந்த விலையில் விதை, உரம், வாடகைக்கு எந்திரங்கள், இன்னொரு பக்கம் விளைந்த பயிருக்கு உத்தரவாதமான கட்டுப்படியாகும் விலை. அதைப் பற்றி எதுவும் பேசாமல், எதுவும் செய்யாமல் கையில் காசாக தருகிறேன், பொழைச்சுக்கோ என்று சொல்லியிருக்கிறது மோடி அரசு.

இந்தத் திட்டத்தை டிசம்பர் 1, 2018 தேதியிலிருந்து அமல்படுத்தப் போவதாக சொல்லி ரூ 20,000 கோடி நிதியும் ஒதுக்கியிருக்கிறது. தேர்தலுக்கு முன்பு ஆர்.கே நகரில் டி.டி.வி தினகரன் கொடுத்த 20 ரூபாய் நோட்டைப் போலத்தான் இந்த இடைக்கால பட்ஜெட் உரை. 20 ரூபாய் நோட்டை கொடுத்தால் 2,000 ரூபாய் பணம் நோட்டுக்கு ஓட்டு என்ற முறையில் மார்ச் மாதம் பா.ஜ.க ஓட்டு கேட்பவர்களின் கணக்குகளுக்கு இந்தப் பணம் அனுப்பி வைக்கப்படும்.

ராகுல் காந்தியும் ஜெயித்து ஆட்சி அமைத்தால் குறைந்தபட்ச அடிப்படை வருமானம் என்ற பெயரில் எல்லோருக்கும் பணம் அனுப்பப் போவதாக வாக்குறுதி அளித்திருக்கிறார். குழந்தைகளுக்கு அரசுப் பள்ளியில் தரமான கல்வி, அருண் ஜெட்லி போல வெளிநாடுகளுக்கு போய் சிகிச்சை எடுக்க வாய்ப்பே இல்லாத உழைக்கும் மக்களுக்கு அரசு மருத்துவமனையில் தரமான செலவில்லாத மருத்துவ வசதி, சுத்தமான குடிநீர் இவற்றை எல்லாம் காசு கொடுத்து வாங்கச் சொல்லி விட்டு பணமாக தருகிறார்களாம்.

படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்காமல் தோற்றுப் போய் விட்ட அரசு கையில் காசு தருகிறோம் என்கிறது. என்னதான் நடக்கிறது?

பணம் கையில் வந்தால் அதைக் கொண்டு போய் முதலாளிகளிடம் பொருள் வாங்குவார்கள், தனியார் பள்ளியில் கட்டணம் கட்டுவார்கள், மருத்துவமனைக்கு செலவழிப்பார்கள். முதலாளிக்கு லாபம், அரசுக்கு பொறுப்பில்லை. இதுதான் பணமாக கொடுப்பதன் பின் இருக்கும் சூட்சுமம்.

குழந்தைக்கு சமைத்து சோறு போட வேண்டிய அப்பா, அம்மா, கையில் 5 ரூபாயை கொடுத்து கடையில் போய் மிட்டாய் வாங்கி சாப்பிடு என்று சொல்வது போன்றது. சமைக்க ஏற்பாடும் செய்யவில்லை, சமைக்க முடியவும் இல்லை. குழந்தைகளை பட்டினி போடுகிறார்கள்.

மூன்றாவது திட்டம்தான் மிக அயோக்கியமானது. சுமார் 10 கோடி முறைசாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத் திட்டம் என்று அறிவித்திருக்கிறார்கள். 30 வயதானவர்கள் மாதா மாதம் ரூ 100 கட்ட வேண்டும். 18 வயதானவர்கள் மாதா மாதம் ரூ 55 கட்ட வேண்டும். 58 வயதுக்குப் பிறகு மாதம் ரூ 3,000 ஓய்வூதியம் கிடைக்குமாம்.

கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. மாதச் சம்பளம் 7,000 8,000 10,000 வாங்கும் தொழிலாளி ஏன் 100 ரூபாய் கட்ட வேண்டும். ஒரு நாளைக்கே 2,000 கோடி சம்பாதிக்கும் முதலாளியிடம் வரி போட்டு இந்தத் திட்டத்துக்கு பணம் சேர்க்க வேண்டியதுதானே?

மேலும், 58 வயதில் ஓய்வூதியம் கிடைக்கும் என்று எந்த உத்தரவாதமும் கிடையாது. சமீபத்தில் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் வேலை நிறுத்தம் செய்ததில் ஒரு பிரச்சனை அவர்களிடமிருந்து ஓய்வூதியத்துக்காக வசூலித்த பணத்தை காணவில்லை என்பது. 2004-லிருந்து பணம் வசூலித்திருக்கிறார்கள். அவற்றை பங்குச் சந்தையில் போட்டு அதில் லாபம் வந்தால் ஓய்வூதியம் கிடைக்கும் என்றார்கள். பணம் போட்ட கம்பெனி திவாலாகி போனால் அந்தப் பணம் போனதுதான். ஓய்வூதியம் கிடைக்கும் என்று உத்தரவாதம் கிடையாது. இப்போது அதையும் தாண்டி வாங்கிய பணத்தை எல்லாம் பங்குச் சந்தையில் போட்ட கணக்கு கூட இல்லை என்று தெரிந்திருக்கிறது.

இந்நிலையில்தான் அத்துக்கூலிக்கு அன்றாடம் உழைக்கும் தொழிலாளர்களின் பையிலிருந்து 50 ரூபாய், 100 ரூபாய் உருவி முதலாளிகளின் பங்குச் சந்தை சூதாட்டத்துக்கு பணம் சேர்க்கிறது மோடி அரசு. இந்தியாவின் சுமார் 10 கோடி தொழிலாளர்கள் ஆளுக்கு ரூ 100 செலுத்தினால் ஒரு ஆண்டுக்கு ரூ 1,000 கோடி வருகிறது. இதை எதிர்பார்த்து எச்சில் வடிய காத்திருக்கின்றன பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் முதலைகள்.

இப்படி ஏமாற்று, மோசடி, திருட்டு அறிவிப்புகள் அடங்கிய ஜூம்லா பட்ஜெட்தான் மோடி ஆட்சியின் கடைசி காட்சியாக அரங்கேறியிருக்கிறது.

இந்த பா.ஜ.க, காங்கிரஸ் கார்ப்பரேட் கால்நக்கி கும்பல்களை ஒதுக்கித் தள்ளி விட்டு உழைக்கும் வர்க்கம் தனது ஓய்வூதியத்தையும், தொழில் செய்வதற்கான வசதிகளையும், யார் மீது எவ்வளவு வரி விதிப்பது என்பதையும்  தாமே தீர்மானிக்கும் வகையில் ஒரு அரசை உருவாக்குவதுதான் இதற்கு தீர்வு.

கருத்துகள் இல்லை: