வியாழன், பிப்ரவரி 14, 2019

"மோடி" என்ற இந்துத்துவ மோசடியில் ஏமாந்த இந்தியா - 2

"தான் வரித்துக் கொண்ட சித்தாந்தத்தின் மீது கண்மூடித்தனமான நம்பிக்கை, தனது அகநிலை வாழ்க்கையை குறுக்கிக் கொள்வது, தனது உணர்ச்சிகளைக் கண்டு தானே பயப்படுவது, வன்முறை மீதான காதல், அகங்காரத்தை முன் நிறுத்தி தன்னை நியாயப்படுத்திக்  கொள்வது" என மனோ தத்துவ நிபுணர்களும் சமூகவியல் ஆய்வாளர்களும் வரையறுத்துள்ள பாசிச மனப்பான்மைக்கான இயல்புகள் அனைத்தும் மோடியிடம் உள்ளதாக 2002 குஜராத் கலவரங்களுக்குப் பிறகு ஆஷிஷ் நந்தி என்ற சமூகவியலாளர் எழுதினார். பாசிஸ்ட் என்பதை ஒரு வசைச் சொல்லாகவோ, அரசியல் விமர்சனமாகவோ தான் பயன்படுத்துவதில்லை என்றும், ஒரு மனவியல் ஆய்வாளராக, ஒரு நோய் வரையறுப்பு என்ற வகையில் 10 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு சந்திப்பின் போது மோடியிடம் இந்த இயல்புகளை தான் கண்டறிந்ததாக குறிப்பிட்டார்.

"இந்தியாவுக்கு எதிரான ஒரு அண்டம் தழுவிய சதிச் செயல் செயல்படுவதாகவும், அதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு முஸ்லீமையும் தேசத் துரோகியாக, எதிர்கால பயங்கரவாதியாக சந்தேகிக்க வேண்டியதன் அவசியத்தையும் அமைதியான குரலில், அளந்தெடுத்த சொற்களில் அவர் விவரித்தது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது" என்று எழுதினார் ஆஷிஷ் நந்தி.

'மக்களை ஆள்வதற்கு கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட தூதர், தான்' என்பதை மோடி உறுதியாக நம்புகிறார். அவரது புதிய திட்டங்களுக்கான சிந்தனை எப்படி உருவாகிறது என்று கேட்ட போது, “இது கடவுள் தந்த வரம் என்று நினைக்கிறேன். ஒரு குறிப்பிட்ட சிந்தனை எப்படி உருவானது என்று எனக்கே ஆச்சரியமாக இருக்கும். கடவுள் இதை எல்லாம் எப்படி என்னை செய்ய வைக்கிறார் என்றோ, எனக்கு இந்த சிந்தனைகள் எங்கிருந்து வருகின்றன என்றோ எனக்கே தெரியாது" என்கிறார் மோடி.

குஜராத் சட்ட மன்ற தேர்தல் பிரச்சாரத்துக்காக சீனாவிலிருந்து லட்சக்கணக்கான மோடி முகமூடிகளை இறக்குமதி செய்து 'மோடியே வாக்காளர்கள், மோடியே குஜராத், மோடி மீதான விமர்சனம் குஜராத் மீதான விமர்சனம், குஜராத் வாக்காளர்கள் மீதான விமர்சனம்' என்ற பிம்பத்தை கட்டியமைத்தார் மோடி. 182 தொகுதிகளிலும் தானே நிற்பதாக கருதி வாக்களிக்குமாறு தனது முகமூடி தரித்த வாக்காள பெருமக்களுக்கு அருள் வாக்கு வழங்கினார் மோடி.

அகமதாபாத்திலிருந்து 112 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வாத்நகரில் பிறந்த மோடி 1967-ம் ஆண்டு தனது 17-வது வயதில் வீட்டை விட்டு வெளியேறினார். 1971-ல் அகமதாபாத்தில் அகமதாபாத்தில் ஆர்.எஸ்.எஸ் தலைமை அலுவலகத்தில் ஒரு ஆரம்ப நிலை ஊழியராக சேருவது வரை அடுத்த 4 ஆண்டுகள் பல இடங்களில் சுற்றித் திரிந்திருக்கிறார்.

குஜராத்தில் 1969-ம் ஆண்டு நடத்தப்பட்ட படுகொலைகள், நாசவேலை, பரவலான கொள்ளை அடங்கிய மதக் கலவரங்கள் ஒரு முக்கியமான வரலாற்றுக் கட்டத்தை குறிக்கின்றன. செப்டம்பர் 18-ம் தேதி நிகழ்ந்த வன்முறை சிறிய அளவில் ஆரம்பித்தது. ஆனால், அடுத்த நாள் மதியம் வன்முறை வெடித்த போது, முஸ்லீம்கள் திட்டமிட்டு குறி வைக்கப்பட்டனர். அகமதாபாத்தில் ஆரம்பித்த வன்முறை, வடோதரா, நாதியாத், கேடா, ஆனந்த், மேசானா, சபர்கந்தா மற்றும் பானஸ் கந்தா ஆகிய இடங்களுக்கு பரவியது. அகமதாபாத்தில் இரண்டு மாதங்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது. பெரும்பாலான முஸ்லீம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சம் புகுந்தனர். பலர் அகமதாபாதை விட்டு ரயில்களில் வெளியேறினர்.

இந்தக் கலவரங்களைக் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதிபதி ரெட்டி தனது அறிக்கையில் “கையில் முஸ்லீம் வீடுகளின் பட்டியலை வைத்திருந்த நபர்கள் கலவரக் கும்பல்களுக்கு தலைமை தாங்கி வழி நடத்தினார்கள்" என்று குறிப்பிடுகிறார். “இந்து கும்பல்கள்தான் வன்முறையை ஒரு தொழிலாக நடத்துவதை ஆரம்பித்து வைத்தார்கள்" என்றும் "முஸ்லீம்களின் வன்முறை எதிர்வினையாக நிகழ்ந்தது" என்றும் அந்த அறிக்கை முடிவு செய்தது.

ஆர்.எஸ்.எஸ், பாரதிய ஜன சங்கம் (பா.ஜ.க.வின் முன்னோடி), ஹிந்து மகாசபா மற்றும் இஸ்லாமிய அடிப்படை வாத அமைப்புகளைச் சேர்ந்தவர்களின் வெறுப்பு பிரச்சாரம் கலவரத்துக்கு உடனடி காரணமாக இருந்தது. 1968-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அகமதாபாத்தில் ஆர்.எஸ்.எஸ் ஒரு மாபெரும் பேரணியை நடத்தியிருந்தது. முன்னதாக 1967-69ல் ஆர்.எஸ்.எஸ் நடத்திய பசு வதை தடுப்பு இயக்கம், பாகிஸ்தான் எதிர்ப்பு முழக்கங்களோடு நடத்தப்பட்டது. இது தொடர்பாக ஹிந்து தர்ம ரட்ஷா சமிதி என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அகமதாபாதில் 1 லட்சத்துக்கும் அதிகமான ஜவுளித் துறை தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டிருந்த சூழலில் மக்கள் மத்தியில் நிலவிய நிச்சயமின்மையை ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ முழக்கங்கள் மூலமாகவும், நடவடிக்கைகளிலும் அணி திரட்டியது. இந்த கலவரங்களில் 660 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் முஸ்லீம்கள்.

அடுத்த 10 ஆண்டுகளில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் படிநிலைகளில் ஏறிய மோடிக்கு சங்க பரிவாரத்தின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி, விவசாயிகள் அமைப்பான பாரதிய கிசான் சங் மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத் ஆகியவற்றை குஜராத்தில் ஒருங்கிணைக்கும் பொறுப்பு 1981-ம் ஆண்டு வழங்கப்பட்டது. பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு அரசு வேலைகளிலும், கல்விக் கூடங்களிலும் இட ஒதுக்கீடு அளிப்பது என்ற அப்போதைய மாதவ் சிங் சோலங்கி தலைமையிலான காங்கிரசு அரசின் முடிவை எதிர்த்த ஆதிக்க சாதியினர் போராட்டத்தை சங்க பரிவாரங்கள் முன்னெடுத்தன. 1981-ல் இந்தப் போராட்டம் தலித்துகளுக்கு எதிரானதாக திருப்பி விடப்பட்டது.

1985-ல் இன்னும் தீவிரமாக நடந்த போராட்டம், இந்துக்களும், முஸ்லீம்களும் சரி விகிதத்தில் வாழ்ந்து வந்த அகமதாபாதின் தரியாபூர் பகுதியில் ஆரம்பித்து பரவலான மதக் கலவரமாக மாற்றப்பட்டது. அந்தப் பகுதியில் அகமதாபாதின் நொடித்துப்  போன ஜவுளி ஆலைகளிலிருந்து வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் வாழ்ந்து வந்தனர். இந்தக் கலவரங்களில் 208 முஸ்லீம் மக்கள்  கொல்லப்பட்டனர்.

குஜராத் மக்கள் தொகையில் சுமார் 20 சதவீதம் உள்ள பட்டேல் சாதியினர் இட ஒதுக்கீடு எதிர்ப்பு அரசியலை முன் வைத்து பா.ஜ.கவினால் அணி திரட்டப்பட்டனர். அடுத்த 10 ஆண்டுகளில் பார்ப்பன, பனியா சாதியினருடன் கூட, பட்டேல் சாதியினர் பா.ஜ.கவின் முக்கியமான வாக்கு வங்கியாக கட்டமைக்கப்பட்டனர்.

1987-ம் ஆண்டு நரேந்திர மோடி ஆர்.எஸ்.எஸ்சிலிருந்து பா.ஜ.கவிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஒரு ஆண்டுக்குள் அவர் கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். 1989-ம் ஆண்டு குஜராத்தின் சோம்நாத்திலிருந்து ஆரம்பித்த அத்வானியின் அயோத்தி ர(த்)த யாத்திரையின் குஜராத் பகுதியை ஒருங்கிணைத்து நடத்தும் பொறுப்பை அத்வானி மோடியிடம் கொடுத்திருந்தார். 600-க்கும் மேற்பட்ட கிராமங்களை கடந்து சென்ற அந்த யாத்திரையின் போது அத்வானி 50 கூட்டங்களில் உரையாற்றினார். இந்த யாத்திரை இந்து மத தீவிரவாதத்தையும், வன்முறையையும் உலகுக்கு அறிவித்தது. சில இடங்களில் பெண்கள் அத்வானிக்கு ரத்தத்தால் திலகமிட்டனர்.

அயோத்திக்கு போய்ச் சேருவதற்கு முன்பாகவே, பீகாரின் சமஷ்டிபூரில் அத்வானி கைது செய்யப்பட்டு யாத்திரை நிறுத்தப்பட்டவுடன் குஜராத்தில் கலவரம் வெடித்தது. 1990-ம் ஆண்டு அக்டோபர் மாத இறுதி வாரத்தை "முடிவு கட்டும் வாரம் (determination week)” என்று அறிவித்தார் மோடி. விஸ்வ ஹிந்து பரிஷத் நூற்றுக்கணக்கான கிராமங்களிலும் , நகரங்களிலும் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பிரச்சார கூட்டங்களை நடத்தியது. அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட வன்முறை வெறியாட்டத்தில் 219 முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர்.

இந்தக் கலவரங்களின் போது சிமன்பாய் பட்டேல் தலைமையிலான ஜனதா தள அரசில் பா.ஜ.க.வும் பங்கேற்றிருந்தது. அரசு அதிகாரத்தின் துணையோடு கலவரம் நடத்துவதற்கான வகுப்புகள் நடைமுறைக்கு வந்தன. எந்தக் கடை, எந்த வீடு இஸ்லாமியருடையது என்ற அரசு தரவுகள் அடங்கிய பட்டியலை வைத்துக் கொண்டு தாக்குதலில் ஈடுபட்டன கலவரக் கும்பல்கள். 1992-ல் பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து மூண்ட கலவரங்களில் 441 பேர் கொல்லப்பட்டனர்.

1995 தேர்தலில் பா.ஜ.க தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. குஜராத்தில் பா.ஜ.க.வின் மூத்த தலைவரும் பட்டேல் சாதியைச் சேர்ந்தவருமான கேஷூபாய் பட்டேல் முதலமைச்சர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். கட்சியின் வெற்றிக்கு தனது புதுமையான உத்திகளும், திட்டமிடலும்தான் காரணம் என்று கட்சித் தலைமையில் இருந்த நரேந்திர மோடி கருதினார். டெல்லி தலைமையின் குஜராத் பிரதிநிதியாக மோடி, மாநில அரசுக்கு வெளியிலிருந்து அதிகாரம் செலுத்த ஆரம்பித்தார்.

(தொடரும்)
ஆதாரங்கள்

1. மோடியை பாசிஸ்டாக வரையறுக்கும் கட்டுரை - 2002 Obituary of a culture - ASHIS NANDY

2. 2007 குஜராத் தேர்தலுக்குப் பிறகு ஆஷிஷ் நந்தி Gujarat: Blame The Middle Class By Ashis Nandy

3. வினோத் ஜோஸின் புரோபைல் The Emperor Uncrowned

4. ஷிவ் விஸ்வநாதன் ஆய்வு - துண்டு துண்டான, ஆனால் முக்கியமான கருத்துக்கள்
The remaking of Narendra Modi - SHIV VISVANATHAN

5. இடது சாரி அமைப்புகள் இணைய வேண்டி அழைப்பு
Narendra Modi And The Reality Of Fascism That Haunts Us All: A Call To All Comrades To Unite! By V. Arun Kumar

6. வைமர் குடியரசின் அரசியலமைப்பு சட்டமும் ஹிட்லரின் எழுச்சியும்
THE RISE OF FASCISM: ASSESSING THE CONSTITUTION OF THE WEIMAR REPUBLIC

கருத்துகள் இல்லை: