ஞாயிறு, பிப்ரவரி 17, 2019

மோடியை பத்திரிகையாளர்கள் எப்படி எதிர்கொள்ள முடியும்?

"மோடி" என்ற இந்துத்துவ மோசடியில் ஏமாந்த இந்தியா - 5 (இறுதி)

வினோத் ஜோஸின் நேரம் நல்லதாக இருந்தது. எல்லோருக்கும் மோடியின் அதிருப்தி வெறும் பாராமுகத்தோடு நின்று விடுவதில்லை. 2002 தேர்தலுக்கு முன்பு மோடிக்கு சிறு வயதில் திருமணம் நடந்தது என்றும் மனைவியுடன் மோடி சேர்ந்து வாழவில்லை என்பதையும் கேள்விப்பட்டு, அவரது மனைவியை தேடிப் பிடித்து பேச முடிவு செய்தார் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் அகமதாபாத் நிருபர் தர்சன் தேசாய். அதிகாலையில் யசோதாபென் சிமன்லால் என்ற அந்த பெண்மணியின் ஊரான பிராமன்வாடாவுக்கு போயிருக்கிறார். அங்கு கடும் முயற்சிக்குப் பிறகு அவர் வேலை செய்யும் பள்ளிக் கூடத்தை கண்டு பிடித்து யசோதா பென், அவரது சகோதரர், அவர் வேலை செய்யும் பள்ளியின் தலைமையாசிரியர் இவர்களிடம் பேச முயற்சித்திருக்கிறார். அவர்கள் மூவருமே பேச மறுத்து விட, உள்ளூர் பாஜக ஊழியர்கள் 'தர்சன் தேசாய் அழையா விருந்தாளி' என்றும் 'சீக்கிரம் இடத்தைக் காலி செய்து விடுவது நல்லது' என்றும் வார்த்தைகளாலும், உடல் மொழிகளாலும் உணர்த்தியிருக்கின்றனர்.

அலைந்து திரிந்து, களைப்பாக இரவு வீடு வந்து சேர்ந்த தர்சன் தேசாய் தனது வீட்டுக்கு வெளியே செருப்பை கழற்றிக் கொண்டிருக்கும் போது தொலைபேசி ஒலிக்கிறது. “முதலமைச்சர் உங்களிடம் பேச விரும்புகிறார்". சில நொடிகளுக்குப் பிறகு முதலமைச்சர் இணைப்பில் வருகிறார்.

“அப்புறம், என்னதான் வேணும் உனக்கு" என்கிறது அந்த இறுக்கமான குரல்.

“புரியலையே"

“உன்னோட பேப்பரில் என்னை எதிர்த்து நிறைய எழுதறீங்க. மோடி மீட்டர் (2001 மதப் படுகொலை கலவரங்களின் போது மோடியை விமர்சித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட ஒரு பத்தி தொடர்) என்று கூட தொடர்ந்து வெளியிட்டீங்க. ஆனா, இப்போ நீ வரம்பை மீறி போய்க்கிட்டு இருக்கே.”

கொஞ்சம் நெர்வசாக “அப்படி எதுவும் இல்லை, உங்களுக்கு என்ன வேணுமோ, அதை எங்க ஆசிரியரோட பேசிக்கோங்க"

“சரி, பத்திரமா இருந்துக்கோ".

என்று சொல்லி இணைப்பு துண்டிக்கப்பட்டது.

யசோதாபென் உடனான மோடியின் திருமணம் அவருக்கு 8 வயதாகும் போது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டது. 13 வயதில் திருமண விழா நடத்தப்பட்டது. 17-18 வயதில் இருவரும் சேர்ந்து வாழ்வதற்கான சடங்களை நடத்த இரு குடும்பத்தினரும் திட்டமிட்டிருந்த நன்னாளில் பெற்றோருடன் சண்டை போட்டுக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டார் மோடி.

சட்டப்படி திருமணமானவராக இருந்தாலும், அவரது மனைவியுடன் தொடர்புகள் இல்லாமல், திருமணமான உண்மையை ஆர்.எஸ்.எஸ்சில் தெரியாமலேயே வாழ்ந்திருக்கிறார் மோடி. ஆர்.எஸ்.எஸ் விதிகளின் படி ஒருவர் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவராகவோ, உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவராகவோ இருந்தால் ஒழிய திருமணமாகி விட்டால் முழு நேர பிரச்சாரக் ஆக பணி புரிய தகுதி இழந்து விடுவார். மோடி தன்னைத் தானே நிலை நிறுத்திக்கொண்டு தலைவராக உருவெடுக்கும் வரை இந்த உண்மையை அவர் தானாக யாரிடமும் சொல்லியிருக்கவில்லை.

அரசியலில் மற்றவர்களின் பலவீனங்கள்தான் தனது வளர்ச்சிக்கான உரம் என்பதை உணர்ந்தவர் மோடி. 1997-ல் இமாச்சல பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களின் பொறுப்பாளராக இருந்த போது முதல் ஸ்பெக்ட்ரம் (அலைக்கற்றை) ஊழல் புகழ் சுக்ராம் குற்றம் சாட்டப்பட்டு காங்கிரசிலிருந்து வெளியேறி தனிக் கட்சி ஆரம்பித்திருந்தார். அவருடன் பா.ஜ.கவை இணைத்து ஊழலையும் பா.ஜ.கவையும் ஒரு சேர வலுப்படுத்தியவர் மோடி. கட்சித்  தாவல்களுக்கு புகழ் பெற்ற ஹரியானாவில் முதலில் முன்னாள் காங்கிரஸ் பெருச்சாளியின் பன்ஸிலாலின் கட்சிக்கு ஆதரவு, அதைத் தொடர்ந்து அவரது காலை வாரி விட்டு கிரிமினல் கொலையாளியான ஓம் பிரகாஷ் சௌதாலாவின் ஹரியானா லோக்தள கட்சிக்கு ஆதரவு என்று கட்சியை வளர்த்தார் மோடி.

ஆனால், தன்னுடைய முகமூடிகளும், அடாவடிகளும், சதித் திட்டங்களும் எடுபடாத இடங்களிலும் மோடி சிக்கிக் கொண்டது உண்டு.

பத்திரிகையாளர் கரண் தாப்பர் நடத்தும் "ஹா(ர்)ட் டாக் (உறுதியான உரையாடல்)” என்ற நிகழ்ச்சியில் பங்கு கொள்ள மோடி 2007-ல் ஒத்துக் கொண்டார். குஜராத்தை தாண்டி தேசிய அரசியலில் தனது இருப்பு பரவ வேண்டும் என்ற நோக்கம் இருந்திருக்கலாம். காந்திநகரில் முதலமைச்சர் அலுவலகத்தில் நேர்முகத்துக்கான பதிவு நடந்தது. தாப்பர் டெல்லியிலிருந்து வந்திருந்தார்.

தாப்பர், மோடி ஒரு வளர்ச்சி நாயகன் என்று பலராலும் புகழப்படுவதையும், ராஜீவ் காந்தி வளர்ச்சி குழுமம் அவரை அங்கீகரித்திருந்ததையும் குறிப்பிட்டு விட்டு, இருந்தாலும், “பலர் உங்களை ஒரு படுகொலையாளி என்று முஸ்லீம்களுக்கு எதிராக முன்முடிவுடையவர் என்றும் முகத்துக்கு நேராகவே பழிக்கிறார்கள். உங்களுக்கு ஒரு இமேஜ் பிரச்சனை இருக்கிறதா, முதலமைச்சர் அவர்களே!” என்று ஆரம்பித்தார்.

மோடியின் முகம் இறுகி சிவந்தது. "எனக்கு இமேஜ் பிரச்சனை இல்லை, உங்களைப் போன்ற பத்திரிகையாளர்கள், ஒரு சிலருக்குத்தான் பிரச்சனை" என்றார்.

“அப்போ, இது ஒரு சில நபர்களின் சதி என்கிறீர்களா"

“நான்  அப்படி சொல்லவில்லை, நீங்கதான் சொல்கிறீர்கள்"

“நாங்கள  சொல்லவில்லை, உச்சநீதிமன்றமே சொல்லியிருக்கிறது. நீங்கள் குஜராத் எரிந்து கொண்டிருந்த போது பிடில் வாசித்த நீரோ என்று ஒரு உச்சநீதி மன்ற நீதிபதி சொல்லியிருக்கிறார்"

“அப்படி தீர்ப்பு ஏதாவது இருக்கிறதா என்று பாருங்கள்.”

“உண்மை இல்லைதான்,ஆனால் இது உச்சநீதிமன்ற நீதிபதியின் கருத்து. குஜராத்தின் நீதி பரிபாலன அமைப்பின் மீது தாம் நம்பிக்கை இழந்து விட்டதாக உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்தது. உங்கள் இமேஜ் பிரச்சனையை சரி செய்து கொள்ள நீங்கள் ஏன் 2002-ல் நடந்த கொலைகளுக்காக  வருத்தம் தெரிவிக்கக் கூடாது"

“நான் என்ன  சொல்லணுமோ அதை அப்பவே சொல்லிட்டேன். எல்லாம் இணையத்தில் கிடைக்கிறது. போய் பாருங்க. புதுசா எதுவும் சொல்றதுக்கில்லை".

“இன்னும் ஒரு தடவை சொன்னா என்ன குறைஞ்சுடும்".

“எனக்கு ரெஸ்ட் எடுக்கணும். கொஞ்சம் தண்ணி வேணும், இதை இத்தோட முடிச்சுக்கலாம்"
என்று தனது சட்டையில் பொருத்தியிருந்த மைக்கை கழற்றிக் கொண்டே எழுந்திருக்கிறார்.

“நட்புக்காக நீங்கதான் இங்க வந்தீங்க, அப்படியே இருப்போம், இப்போ போதும்" என்று எழுந்து நேர்முகம் நடக்கும் இடத்தை விட்டு வெளியேறுகிறார் மோடி.

இந்திய மக்கள் இது போன்று தர்க்க ரீதியான நேரடியான கேள்விகளை கேட்டு சட்டையை பிடித்து உலுக்கும்போதுதான் மோடியையும் அவரை வைத்து ஆட்சி செய்யும் இந்துத்துவ அரசியலையும் நாட்டை விட்டு துரத்தி அடிக்க முடியும்.

(முடிந்தது)

கருத்துகள் இல்லை: